Thursday, August 30, 2012

ஐயோ என்று அலற மட்டும் தானே தமிழ்


essay
பெரியவர்களின் பொய்கள் என்று தலைப்பிட்ட அந்தக் குறுங்கவிதை, அசையவிடாமல் விழிகளை பிடித்திழுத்தது சில நிமிடங்கள் வரை. இளையநிலா ஜோன் சுந்தரின் யதார்த்தம் சொல்லும்வரிகள் எம் அயலிலுள்ள நிறையப் பெரியவர்களின் பெயர்களுடன் பொருந்துகையில் செம துல்லியமாக இருந்தமையினால் நீங்களும் ஒரு முறை படித்தேயாக வேண்டும் தவறாமல்!
செந்தூரி

"ஆளாளுக்கு மூன்று விழிகள் வைத்துக் கொண்டனராம்
பூச்சாண்டியும் கடவுளும்
கொக்குப் போகும் பருத்திப்பூக்கள், நகங்களில் விழுந்தால்
உடைகளாய் மலர்வதைப் போலொரு
சுவாரசியம், பெரியவர்களின் பொய்களில்
"சாமி கிட்ட இருக்கா உன் அம்மா'
என்பதை மட்டும் மறுக்கிறது குழந்தை
"அம்மாவுக்கு முன்னாடியே சாமி செத்துரிச்சா?
எனும் எதிர்க் கேள்வியுடன்!''

உன்னிப்பின் உச்சமாய் எம்மை நாமே திருத்தி எழுதிக்கொள்கின்றபோது, நடுத்தரம் கடந்துவிட்ட வயது, அனுபவம், ஆளுமை, அதிகாரம் போன்ற பெயரிலுள்ள யாவையுமே சுலபமாக எம்மை ஏய்த்துவிடும் வழக்கத்தை தொடர்வது கடிதினும் கடிது.

 ஆனால் சுதாகரிக்க மறக்கின்ற ஒவ்வொரு நிமிடத்துளிகளி லும், பின்னந்தலை தொடங்கி பிட்டமூடாக புறக்குதிக்கால் வரையிலும் "மூட்டாள்கள் நீங்கள் '' என்று கண் தேடா இடங்களில் முத்திரை குத்துவது சில பெரியோர்களின் பீடுடைத்த இயல்புகளில் ஒன்று!
ஈழத்தின்  இசைப் பாரம்பரியம் கொஞ் சம் "தனிமைகளுடன்' கூடிய தவத்துவ மானது.

 போரும், தொடர்பாடல் குறைவும் எம்மூரின் கலைஞர்களையும், கலைப் பண்புகளையும் தனித்துவமானதாகவும், விளம்பரக் குறைவுடன் கூடிய கேள்வி நிரம்பலுடையதாகவும் வைத்திருந்தது எனவும் ஊகிக்கலாம். ஆனால் அவர்கள் எல்லோருமே "ஆலையில்லா ஊரின் சர்க்கரைக்குபிரதியிடும் இலுப்பைப் பூக்கள்'' அல்ல என்பதும் உறுதி.

சர்வதேச தரம், புதுமை விருப்பம், புத்தாக்க நுணுக்கம், கடும்பிரயோக பயிற்சி என்பன மூலம் மேடையாற் றுகைகளும் இணைக்கலைகளும் சற்றும் "சோடை' போகாமல் சுற்று வேலிகளுக் குள் வீற்றிருந்தன என்பதை எடுத்த எடுப்பில் எவருமே வெட்டிப் பேசிவிட முடியாது.  ஆனால் இன்றைய வடபுலத் தமிழர்களினால் உட்படும் ரசிகர்கள் என்கின்ற அவதானிகளை எம் பெரியோர் கள்  அந்தக் கவிதைக் குழந்தையின் எத் தனத்தில் ஏமாற்றத் துணிந்தது எங்ஙனம் நியாயமாகும்?

இவ்வருடத்துத் தைப்பொங்கல் திருநாளின் அதிகாலை ஆறுமணி தொடக்கமான அரைமணிநேரத்துக்கு, இந்தியத் தொலைக்காட்சியும், உலகத்தமி ழர்களின் "ரிமோட்' விரல்களில் அதிகம் அடிபடும் அலைவரிசையுமான "சன் ரீவி' யில் நாதஸ்வர இசை பொழியும் அற்புதமான வாய்ப்பை அநாயாசமாக பெற்ற ஈழத்து இளம் மேதை ஒருவனின் அறச்சீற்றத்தை "அட!அதுக்கென்ன'' வென்று பூசிப் பொய் மெழுகியிருக்கின்றது எம் கலையுலகம்!

 துள்ளிசைப் பண்ணும், உச்ச தாளக் கூட்டமும், சாந்தத்தை மீறிய ஆரவாரமும் கொண்ட கேரளத்துச் செண்டை மேளமும், போர்முனையில் பயன்படும் பேரிகைக் குழல்களும், "போ' புறமென்று தள்ளியதை அருளொழுகும் விழிகளால் வேடிக்கை பார்த்தான் நல்லை நாயகனும் தன் வீதிகளில்!

"நாம சகஜம் ' கொண்ட எமக்கேயான கடல்கடந்த பெருமைகளை தன் விரல்களிலும், குரல்வளையிலும் சிறுகச் சிறுகச் சேமித்து இசைஞானம் பெற்ற மண்ணின் "பாலகனை' ஒதுங்கிநில் ஓரமாய் என்று சொல்ல எவ்வளவு துணிச்சல் எம் பண்பாட்டுப் பொரி வாய்களுக்கு?

"சிங்காரி மேளம்' என்கின்ற புறப் பெயரினால் சுட்டப்படுகின்ற அவ்வகை வாத்தியங்கள் தமிழிசைக் கேற்ற சாந்த இயல்புடையவை அல்ல என்பதும், திருமுறை போற்றுகின்ற சைவப் பாரம் பரியத்திற்கு நேரெதிர்ப் பண்புள்ள ஆரியப் பழமைக்குரியவை என்பதும் தெரியாதவர்களா எம் பெரியவர்கள்?

தென்னிந்தியாவில் தமிழக இந்துக் கோயில்களின் மூன்றாம் வெளி வீதிகளுக்கு கூட அனுமதிக்கப்படாதவர்களை ஆரத்தழுவி ஆராதித்ததில் என்னென்ன "உள்குத்துகள்' என்பது ஆறுபடையப் பனின் பன்னிரு விழிகளின் மூடிய இமைகளுக்கும் சமர்ப்பணம். சுற்றுப்பிர காரம் முழுவதும் சற்றுக் கவனித்தவர்கள் நிச்சயம் இனங்கண்டிருக்க முடியும், செண்டை மேள இசையினது ஆரோகணமும், கலைஞர்களினது அசைவும் உடல் மொழியும், கண்டியச் சிங்கள நடன மற்றும் இசைக்கலைஞர்களினது இசைவையும் அசைவையும் இறுக ஒட்டியிருந்தமையை!

சென்னை விமான நிலையம் வரை வந்த மனோ "ஈழத் தமிழச் சகோதரர்களே! மன்னித்துக் கொள்ளுங்கள்'' என்ற படி திரும்பியிருக்கின்றார். ஹரிகரனின் இசைநிகழ்வுக்கான மெகா விளம்பரங்கள், தவிர்க்க முடியாத காரணமென திருத்தி எழுதி நிறுத்தப்பட்டது. தமிழ்த் திரையுலகுடன் தொடர்புடைய எவரையும் இலங்கை அரசாணைக்குள்ளான நிகழ்வுகளுக்கு இலகுவில் அனுமதித்து விடாமல், கண்ணுக்குள் எண்ணையூற்றிய தமிழக உறவுகளையும் மீறி, "உன்னி' எப்படி ஓரமாய் பாய்ந்து திரும்பியது? "நல்லூரின் ஆன்மிகப் பெருவிழா' என்கிற ஒற்றைச்சொல், எதிர்ப்புக் குரல்களை அடக்கியிருக்கும், அனுமதித்திருக்கும் என்பதே எம் எண்ணம்! உண்மையும் அதுதான்!

ஆனால் நல்லூரானின் பெயர் சொல்லி நடத்தப்பட்ட இசைநிகழ்ச்சியின் தனித்த ஏற்பாட்டாளர்கள் "வடமாகாண சபையினர்' என்பதும், நல்லூர் திருவிழாவை காரணம் காட்டி அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தியக்கலை விழாவொன்றின் அங்கமே, இது எம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லையே."DIVINE ECSTASY''என்ற  தலைப்புடன் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த இந்த நிகழ்வுக்கான அழைப்பிதழ் முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே காணப்பட்டது.
 
திணைக்களத் தலைவர்கள் ஊடாக இதனை விநியோகிப்பதை கருத்தில் கொண்டு அச்சிடப்பட்டதே தவிர சாதா ரண இசை ரசிகர்கள் குறித்து கவனத்தில் எடுக்கப்படவில்லை.

"நிச்சயம் வருவார்கள்'' என்ற துணிச்சலுடன் அலர் மேல் வள்ளியையும், உன்னி கிருஷ்ணனையும், ரி.எம். கிருஷ்ணாவையும் அழகுறு புகைப்பட அழைப்பிதழில் அச்சிட்டவர்கள் வாய்ப்பாட்டுக் கச்சேரி நடைபெறுவதாக குறிப்பிட்டிருந்த இடம் நல்லூரின்  "சங்கிலியன் தோப்பு '

 ""புதிதாக ஏதாவது உருவாக்கி வைத்திருப்பார்களோ'' எனும் பிரமை பிடரியில் அறைய ஆர்வத்தோடு காத்திருந்தால், ஏற்பாடுகளின் போதே தெரிந்தது ""கிட்டுப்பூங்கா'' என்று அழைப்பதில் அவர்களுக்கு தொடரும் "தீட்டு'. அவ்விடத்தை "சங்கிலியன் தோப்பு ' என்று சிலாகிக்க வைத்திருக்கின்றது. எவனாவது எதிர்க் கேள்வி கேட்டாலும் கூட, "பாருங்கள் தமிழ் மன்னனான சங்கிலியனை மறுதலிக்கின்றார்கள்'' என்று முகாரியில் முடித்து நாவடக்கம் செய்யும் முன்னேற்பாட்டுடன் எம் தமிழ்த் தேசிய மூக்கில் குத்தியிருந்தார்கள்.

துப்புரவாக்குதல் என்கின்ற பெயரில் "இடித்துத் துடைத்தழிக்கப்பட்ட' கொவ்வைச் செவ்வாயும் குழந்தை மனமும் கொண்ட போராளியொருவனின் நினைவிடத்தையும், பூங்காவையும்  நீளமறந்து விட்டு நிலத்தில் அமர்ந்திருந்தோமா இல்லையா? கொஞ்சம் உண்மை சொல்லுங்கள் அன்பர்களே!

அன்றைக்கு உங்களை விழிமூடி வாய்திறக்க வைத்த "குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா! '' என்கின்ற வரிகள் அட்சர சுத்தப் பொய் இல்லையா?
யாழ்ப்பாணத்தின் சுவாசமாய், பல்லின உயிர்ப்பரம்பலோடிருந்த பழைய பூங்காவினை, இயற்கைச் சிதைவினுக்குள்ளாக்கி மனித நடமாட்டம் மிகுந்த "கொங்கிறீட்' கல்லறையாக வர்ணம் பூசி வைத்த ஏமரா மன்னனும், எடுப்பார் பாவை அமைச்சர்களும் , "உள்நோக்கம் எதுவுமே இல்லாத நல்லெண்ணத்துடனேயே, முத்திரைச் சந்தியில் இருந்த பூங்காவைத் துப்புரவுபடுத்தி கச்சேரி வைத்து எம் கலையார்வத்தை வளர்க்கப் பாடுபடுகின்றார்கள்'' என்பதை எத்துணை சுலபமாய் நம்பிவிட்டோம் நாம்.

பம்பாய் வெங்காயம் பாய்ந்திறங்கி உள்ளூர்க் காய்களை ஊசிப்போக வைத்தால், எதிர்க் கேள்வி கேட்கச் சம்மேளனம் இருக்கின்றது. ரம்புட்டானோ, மங்குஸ் தானோ வீதிகளில் நிறைந்து தேன் கதலியையும் ஊர் முந்திரிகையையும் விளை நிலத்திலேயே வெட்டிப்புதைக்க வைத்தால், மனுப்போட சங்கம் இருக்கின்றது. ஆனால் "பாலக்காடுகளின் படையெடுப்பி னால் இம்முறை மண்மூடிப் போன ஈழநல்லூரின் பண்டைத் தனித்துவத்தைப் பாதுகாக்க கலைக் குடும்பத்தின் எந்தச் சங்கமும் கதவைத் திறக்காத மர்மத்துக்குப் பதிலென்ன?

அளவுப் பிரமாணக் குறைவினால் ஐந்து மாதக் குதிரைக் குட்டியில் சங்கிலியனை ஏற்றி உட்கார வைத்து "செத்தும் மிருகவதை செய்யும் மாண்புறு மன்னனாய்' எம்முன்னோனை பழி சுமக்க வைத்த ஆர்வக் கோளாறுகளே நயினையின் கோபுர வாயிலில் கற்பனைக்கு மீறிய தொந்தி சுமக்கும் காவற் பெண்களின் தோற்றத்தால் திராவிடரெல்லோரும் அரக்கர்கள் என்று பூடகம் பேசும் கற்சிலைகள் இன்னும் பல கோயில்களில் இடம்பிடிக்கத் தொடங்கியிருப்பது, கண்ணிருக்குமிடத்தில் இரு புண்களை நீவிர் சூடியதால் வந்த வினைப் பயனே!

"இறக்குமதிச் சரக்கு'' எதுவுமே இல்லாமல் ஈழத்து இளைஞர்களின் தனி முனைப்புடன் உருவாகிக் கொண்டிருக்கும் எண்கோண நீர்த்தடாகத்தை நோக்கி இன்னமும் பத்திரிகை வெளிச்சங்கள் பாயாதிருப்பது துர்ப்பயன்!

"யுனெஸ்கோ' வெளியிட்டுள்ள பண்பாடு, கலாசாரம், மரபுரிமை போன்றவற்றுக்கான வரைவிலக்கணங்களில் உள்ள "தேசிய இனம் ஒன்றினது' என்கின்ற சொற்களை எடுத்தெறிந்து விடுங்கள் தயவுடன். அர்ச்சனைக்கு சமஸ்கிருதம், ஆடலுக்கு மராட்டியம், பாடலுக்கு கர் நாடகம், பின்னணிக்கு மலையாளம் , தொழிலுக்கு ஆங்கிலம், ஆட்சிக்கு சிங்களம், அவலத்தில் "ஐயோ' வென்று அலற மட்டும் தானே ""தமிழ்'' எமக்கு?
மிக்க நன்றிகள் கவிஞர் இளையநிலா  ""அம்மாவுக்கு முன்னாடியே சாமி செத்துரிச்சா? ''

என்று உற்றுக் கவனித்து கேள்வி  கேட்காத ஈழத்தமிழனின் ஊமைக் குளத்தில் நீங்கள் தூக்கிப் போட்ட ஒற்றைக் கல்லுக்கு! அறுதுயில் கலையாயோ ஆண்ட என்னினமே?
http://www.onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=3909235230299092

Monday, August 27, 2012

தோற்றுப் போனவனின் தொடர் தூக்கம்


essay
மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து பக்ஸில் பறந்து வந்தது அந்தக் கடிதம். தங்களால் தீர்மானிக்கப்பட்டுள்ள மாநாட்டின் பெயரில் ஈழம் என்கின்ற சொற்பதம் இடம்பெறுவது வருத்தமளிக்கின்றது. அதை நீக்கிய பின் மாநாட்டு ஏற்பாடுகளை முன்னெடுப்பதே உசிதமாகும்.


எனும் சாரப்பட ஆறேழு வரிகளுக்குக் குறைவான அம்மடல் "தமிழ் ஈழ ஆதரவாளர் இயக்கம்'' எனப்படும் டெசோவின் செயலாளருக்கு முகவரியிடப்பட்டிருந்தது. இந்தச் சலசலப்புகளின் பின் ஒரு வாரம் கழித்து இராணுவப் படைப்பிரிவொன்றின் வருடாந்த அணி வகுப்பு விழாவொன்றினையொட்டி உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி, ""ஈழத்துக்கான முன்னெடுப்புகள் இன்னும் உயிர்ப்போடு இருக்கின்றன.

 இது எம்மை ஓய்வெடுக்க விடும் செய்தியல்ல'' என்று உறைப்பாக உசுப்பேத்தினார். தன் வீரர்களை இந்தியாவோ, இலங்கையோ இரண்டு மத்திய அரசுகளையும் அவ்வப்போது அலறடிக்கும் இந்தச் சொல்லான "ஈழம்' உண்மையில் அர்த்தப்படுவது "இலங்கை'' என்பதையே!

முகமாலையின் தமிழ்ப் போராளிகளின் எல்லைக் காவலரண் ஒன்றின் முன்புறமாக அழகு படுத்தப்பட்டிருந்த, வெற்று ரவைக் கூடுகளினால் எழுதப்பட்டிருந்த "உ'' திடீரென ஒருநாள் காணமல் போனது எம்மில் சிலருக்கு நினைவிருக்கலாம். இந்த நிகழ்வுக்கு இன்றைக்கு அகவை பத்தினை அண்மிக்கின்றது. L.T.T என்று மட்டும் மீள் குறுவாக்கம் செய்யப்பட்டதன் காரணமாக "தமிழ் ஈழம் என்று பகுத்துப் பாவிப்பதனை விடுத்து, ""தமிழீழம்'' என இணைத்து கையாள்வதனை உறுதிப்படுத்தவே அந்த "ஈ' எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.

 இலங்கை என்பதன் ஆங்கிலச் சுருக்கெழுத்தாக SL என பரவலாகப் பாவிக்கின்ற போதிலும் ஸ்ரீலங்கா என எழுதப்படும் ஆங்கில எழுத்துக்களிடையே "வலிந்த' இடைவெளி எதுவும் விடப்படுவதில்லை என்பதை நினைவூட்டுவது இவ்விடத்தில் சாலப் பொருந்தும்.

ஆக மேற்கூறிய சண்டப்பிரசண்டர்களின் மூலம் வந்தடையக்கூடிய தெளிவு ஈழம் எனும் சொல் இலங்கை முழுவதையும் அர்த்தப்படுத்தும் என்பதனாலேயே ""தமிழர்களின் இலங்கைப் பகுதிகள்'', தமிழர்களின் ஈழமாக "தமிழீழமாக' சொற்சுருக்கத்திற்கும், எண்ண விரிவுக்கும் உட்படுத்தப்பட்டன என்பதேயாகும். எண்பதுகளின் நடுப்பகுதிகளில் தொடங்கப்பட்ட "டெசோ'' அமைப்பின் புத்துயிர்ப்பினை திருக்குவளை முத்துவேல் கருணாநிதி மீண்டும் கையிலெடுக்க ஏக காரணம் அவரது சுயநல அரசியல் சண்டித்தனம் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லைத்தான்.

 ஆனால் தன் அரசியல் எதிரியான ஜெயலலிதாவின் சுதந்திர தின உரையில் ஈழத்தமிழர்களின் வாழ்வாதார உரிமைகளைப் பற்றிப் பேச வைக்கும் அழுத்தத்தை மறைமுகமாக ஏற்படுத்திய சால்பு கருணாநிதியினுடையது.

"அடுத்த மாநாட்டை ஆர்ஜென்ரீனாவில் நிகழ்த்த திட்டமிட்டது'', ""மாநாட்டின் தீர்மானங்களை ஐ.நா பொதுச் செயலாளரிடம் நேரில் கையளிக்கத் துணிந்தது'' போன்ற மிரட்டல் முடிவுகள், சிங்களப் பேரினவாதத்தின் இரத்த அழுத்தத்தை இன்னுமின்னும் எகிறவே செய்துள்ளன. இந்திய இலங்கை தமிழின உணர்வுகளில் மெல்லிதாக இழையோடிருக்கும் கருத்துவேற்றுமைகளில் அவ்வளவாக "ஊறித்திளைக்காத'' சர்வதேசங்களின் பார்வையில், இதுவும் கூட இன்னுமொரு இன விடுதலைக்கான எழுச்சித் தீர்மானமாகவே நோக்கப்படும்.

 உண்மையில் மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் காங்கிரஸ் மீது ""பனிக்கண்டனம் கொட்டும் மாயை'', ""சரிந்து போன மாநில வாரியாக செல்வாக்குக்கான புனரமைப்பு '', கட்சி மீது கண்டபடி பாய்ந்துள்ள ஊழல், நில அபகரிப்பு புகார்களுக்கான திசை திருப்பல் என பல்நோக்கங்களை உள்ளே பொதிந்திருப்பதே "டெசோ' சுக்கல் சுக்கலாக கிழிந்து போன தனது இறுதிக்கட்ட அரசியல் முகமூடியினை கோர்த்து மறு சீரமைக்கும் தனிப்பட்ட முயற்சிகளை மற்றவர்களின் உழைப்பினால் சாதிக்க எண்ணும் முதிர் சாணக்கியனின் எதுகை மோனை மிதக்கும் பேச்சுக்களுக்கு இலகுவில் மயங்கிவிடாத கூட்டம்  தமிழகத்தில் கருக்கொள்ளத் தொடங்கியிருப்பதும் தெட்டத்தெளிவு.

 தமிழீழக் கோரிக்கையைத் தீர்மானமாகக் கொண்டுவருவதில் இருந்து டெசோ அமைப்பினர் பின் வாங்கிய போது, " வடகிழக்குத் தமிழர் தாயகப் பூமிகளை தமிழரின் தேசிய வாழிடமாகவும், ஈழத்தமிழர்களை தனித்தேசிய இனமாகவும்' எண்பிக்கும் தீர்மானங்களையாவது நிறைவேற்றுங்கள் என உறுதியான எதிர்ப்புக் குரல் எழுப்பியவர்களுள் கொளத்தூர் மணி, சீமான், விடுதலை  இராஜேந்திரன், தி.இராம கிருஷ்ணன் ஆகிய உண்மை உணர்வாளர்கள் முதன்மையானவர்கள்.

 தமது எதிர்ப்புக் குரல்களை கருணாநிதி அசட்டை செய்வதைக் கண்டு தனியான "தமிழீழ மாநாடு' ஒன்றினை நடத்தும் நோக்கில் திரண்ட கூட்டத்தில் "ஈழத்தில் இருந்து தமிழர் பிரதிநிதிகளாக எவர் "டெசோவுக்கு வந்தாலும் எதிர்ப்போம் ' என்று மிரட்டி வைத்தவர்களும் அவர்களே தான்.

இன்றைய தமிழ்த் தேசியத்தின் ஏகப்பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை சேர்ந்தவர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு வேகமாக நிராகரிக்கப்பட்டமைக்கு மேற்கூறிய தமிழக இன உணர்வாளர்களின் எதிர்ப்பினை சமாளிப்பதில் இருந்த சவால்கள் மட்டுமே காரணம் என்று நம்புவோமானால் எம்மைப் போல் முட்டாள்கள் வேறெவருமே இருக்கமுடியாது.

"தமிழீழம் கோரும் தீர்மானம்'' நிறைவேற்றப்படாது என்பது, அழைப்புக் கிடைக்கப் பெற்ற காலப்பகுதியில் தெரிந்திருக்குமேயானால் இந்த மாநாட்டிலும் ஈழத்தமிழர் பிரதிநிதிகள் எனும் பெயரிலான பொம்மைகளைப் புகைப்படங்களில் பார்க்கும் வாய்ப்பு யாவருக்கும் வாய்த்திருக்கலாம். டாக்டர் விக்கிரமபாகு கருணரட்ணவின் துணிச்சலின் மிகக் குறைந்த சதவீதமேனும் எம்மவர்களில் எவருக்கும் எழவில்லை என்பதற்கு டெசோவின் இந்த வருட மாநாடு முடிவடைந்த பின்னாலும் நீடிக்கும் அறிக்கை மௌனமே நேரிய சாட்சி!

"முந்தைய மாதம் கூட தமிழகத்துக்கு விஜயம் செய்தோமே? கருணாநிதியின் சுயநல அரசியல் மாநாடு என்பதால்தான் கலந்து கொள்ள மறுத்தோம் '' என்று நல்ல பெரிய இன செவ்வரத்தைப் பூ எடுத்து எம் காதுகளில் சொருகி விட எத்தனிப்பவர்களின் கால்களைக் கட்டிப் போட்ட இன்னொரு கயிறு "ராஜ பக்ஷே'க்களின் மீது அண்மை நாள்களாக வலுப்பெறத் தொடங்கியுள்ள குருட்டு விசுவாசமேயன்றி வேறில்லை.

தமிழகத்து மக்கள் ஈழத் தமிழர்கள் மீது கொண்டுள்ள இனப்பற்றினும் மீறிய பெரிய நம்பிக்கைகளை வெகு சுலபமாக போட்டுடைக்கும் அழுகுணித்தனம் எம்மவர்களால் இன்னுமின்னும் தொடர்கின்றது. நோய்வாய்ப்பட்டதனால் இற்றைக்கு இருபத்தைந்து வருடங்களுக்கு முன் தன்னிரு கண்களிலும் முற்றாக பார்வையிழந்த போதும், இன்றும் தமிழ் மாணவனாக தொடரும் தீவிர இன மொழிப் பற்றாளரான கோவை மாவட்டம் துடியலூர் வாசி தமிழறிஞர் "ஞானி' அவர்கள் செம்மொழித் தமிழ் மாநாட்டுக்கான ஏற்பாடுகள், இலங்கையின் இனவழிப்புத்துயர் இடம்பெற்ற சூட்டோடு இடம்பெறுவதைக் கண்டு மனம்வெதும்பி கருணாநிதிக்கு கைப்படக் கடிதம் எழுதிய பழுத்த தமிழுணர்வாளர். நடைப்பயிற்சி போகும் பொன்மாலைப் பொழுதொன்றில், "நாம் அவன் குடி! கூப்பிட்டால் போயே ஆக வேண்டும்.

ஆனால் ஈழத்திலிருந்து எவரும் வரமாட்டார்கள் என நம்புகிறேன். குறிப்பாக பேராசிரியர்.... அவர்கள் நிச்சயம் அழைப்பை நிராகரிப்பார்கள், உடல் நிலையை காரணம் காட்டியாவது!'' இன்றைக்கும் காதுகளில் மெல்ல மீளொலிக்கும் மேற்படி வார்த்தைகளை ""பாய்ஞ்சு விழுந்து'' பொய்யாக்கியது எம் அளவு கடந்த மொழிப்பற்று.

""அவர் வந்தார் குழுவோடு! வென்றார் திடலோடு! உண்டார் வெண்பொங்கலோடு'' என்று தனது டயரியின் அந்த ஜூன் மாதத்துப் பக்கங்களில் புளுகிவைத்திருக்கக் கூடும் கருணாநிதி.

முதல் மாநாட்டின் போது அழைப்பை ஏற்றுக்கொண்டமையிலும், நேற்றய மாநாட்டின் போது அழைப்பை நிராகரித்தமையிலும் எமது இயலுமைகளை மேவிய "இன எதிரியின் தலையீடுகளால் சூழப்பட்ட அசிங்க அரசியல்' மாற்றுக் காரணமாக மறைந்திருப்பது என்றாவதொரு நாள்  தமிழக உண்மை உணர்வாளர்களால் அறியப்படும் போது, எங்கே கொண்டு போய் வைக்க எம் முகங்களை? முடிந்துபோன தமிழனின் அவலங்களை காலகாலமாக தோண்டியெடுத்து தமது வாக்குப் பொக்கற்றுக்களை நிரப்பிவிட முடியும் என்ற மூடிய சிந்தனைக்குள் தேர்தல்களை சந்திக்கும் அசட்டுத் துணிச்சல், ""மக்கள் பிரதிநிதிகள்'' என்று தம்மைத்தாமே சொல்லிக்கொள்பவர்களின் "களஉழைப்பை' களவாடித் தின்று விட்டது தான் நிஜம். நாடாளுமன்ற உறுப்பினர்களான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கத்தவர்கள் மட்டும்தான் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்பதாகவும், உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களான எஞ்சியவர்கள் எல்லோரும், ""கடுமையான போட்டிப் பரீட்சைகள்"" மூலம் பதவிக்கு வந்தவர்கள் போலவும் வீம்புக்கு வாளாவிருப்பது, நிச்சயமாக இன்னுமொரு தெரிவில் "பழையன கழிந்து, புதியன புகவே' வழி செய்யும்.

"அடித்துக் கொலை செய்யப்பட்ட அரசியல் ஏதிலிகளின் சாவுக்கு எதிரான போராட்டங்கள்', "வாழ்வாதாரமான தமது சொந்த நிலங்களை மீட்க அந்தரிக்கும் வீதிப் போராட்டங்கள்', "சுயாதீனமான இயல்புவாழ்வுக்கு இடையூறு ஏற்படும் சந்தர்ப்பங்களை அறவழி எதிர்க்கும் நிகழ்வுகள்' உட்பட சாதாரணமாக பிரதேச மட்டத்தில் கூட மக்கள் கருத்தறியும் சிறு கூட்டங்களைக்கூட முன்னெடுக்கவோ, மக்களைத் திரட்டவோ, கருத்துக்களைக் கொண்டு சேர்க்கவோ, மாதமொரு முறையாவது கலந்து பேசவோ மறுக்கும் பிடிவாதக்காரர்களான மாகாண, மாநகர, பிரதேசசபை உறுப்பினர்களும் கூட மக்கள் பிரதிநிதிகள் என்ற வகுதிக்குள் வருபவர்கள் தானே?

"நேற்றய வெற்றி' எமதில்லை என்று தெரிந்த பின்னரும் உழைப்பில் குறைந்து, உறக்கம் நிறைந்தபடி தொடரும் எம் வரும் நாள்களின் வர்ணம் கருமை சூழ் இருள் தவிர வேறில்லை! ஆங்கில அரச ஊடகம் ஒன்றில் மேன்மைதங்கிய ஜனாதிபதியின் உரை முதன்மைச் செய்தியாக வார்க்கப்பட்டிருந்த வார்த்தைகள் எமக்கும் இறுகப் பொருந்துகின்றன. Eelam Proposals Still Alive We Are Not Suppose To Rest'
""ஈழத்துக்கான பரிந்துரைகள் இன்னும் உயிர்ப்புடன் ஓய்ந்தவர்களாக நாம் கருதப்படக்கூடாது'' ஆழ்ந்துறங்கும் தமிழன் ஒவ்வொரு வனையும் பார்த்துச் சொன்ன வார்த்தைகளாகவே படுகின்றன இவை.
http://www.onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=7611934927454907

Sunday, August 26, 2012

உயிரோடு மலர்வளையம் வைக்கும் மகிந்தவின் கொலைக் கலாச்சாரம்!

 - தாயகத்தில் இருந்து எழுவான்
1948 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சிங்களத்தின் ஆட்சியாளர்கள் தமிழர்களை பணயம் வைத்துத்தான் ஆட்சியமைத்தனர். காலப் போக்கில் தமிழர்களின் போராட்டங்களை பணயம் வைத்து ஆட்சியமைத்தனர். ஐக்கிய தேசிய கட்சியாக இருந்தாலும் சரி, சிறீலங்கா சுதந்திரக் கட்சியாக இருந்தாலும் சரி, தற்போதைய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியாளர்களும் சரி ஒரே ஒரு விடயத்தைத்தான் மையப்படுத்தினர்.
இலங்கைத்தீவிலுள்ள சிறுபான்மையினரை அடிமைப்படுத்த அரசாங்கம் எடுத்த பல்வேறு முயற்சிகளில் இன்று மதம், நிலம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி மகிந்த அரசாங்கம் ஆட்சி செய்கின்றனர். திசைதெரியாது கரையதிங்கிய சிங்கள இனம் இன்று, பூர்விக நிலங்களில் வாழ்கின்ற மக்களை விரட்டுவதில் சாதனை படைக்கின்றனர். இஸ்ரேல் நாட்டில் யூதர்கள் பாலஸ்தீன மக்களை விரட்டுகின்றார்கள், ஒரு பகுதியில் தான். ஆனால் இலங்கைத் தீவில்  செறிந்து வாழும் தமிழர்களை விரட்டுவதில் கரையதிங்கிய சிங்கள இனம் தனது செயற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளது.
பெரும்பான்மை ஆதிக்கம் கொண்ட சிங்கள ஆட்சியாளர்களின் ஆதிக்கப் போட்டியினால், சிறுபான்மை இனத்தின் தமிழ் இளைஞர்கள் தமது உரிமையைப் பெற முயற்சிகளை மேற்கொண்டனர். எனினும், சிறுபான்மை இனத்தின் போராட்ட வரலாறு தெரியாத வல்லரசுகள் விடுதலைப் போராட்டத்தினை நசுக்கிவிட்டார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த விடயம்.
விடுதலையை நோக்கிப் புறப்பட்ட அமைப்பைப் பார்த்தார்களே தவிர, அந்த அமைப்பின் நோக்கங்களைப் பற்றி ஆராய்வதற்கு தயாராக இருக்கவில்லை. அதன் விளைவுகளை இன்று உலக நாடுகள் சந்திக்கின்றன. தமிழர்கள் இடம்பெயர்ந்து வாழ்கின்ற நாடுகளில் உள்ள தமிழர்கள் இன்று பல்வேறு நெருக்குதல்களை கொடுப்பதை இன்று அந்ததந்த நாடுகள் உணர்கின்றன. போர்க்காலத்தில் வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் எவ்வாறு கொலைகள், கொள்ளைகள் இடம்பெற்றதோ அதைவிடவும், மிகவும் மோசமான சூழ்நிலைகள் உள்ளதைக் காணலாம்.
பட்டப்பகலில் வீதியால் செல்லும் பெண்களை மறித்து கழுத்தை நெருக்கி கொள்ளையடிக்கின்றனர், சில வேளைகளில் பெண்களை கொலையும் செய்கின்றனர். 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் நாட்டில் எப்பாகத்தில் ஒரு கொலை நடந்தாலும் அதற்கு எந்த விசாரணையும் இல்லை. உடனே விடுதலைப் புலிகளின் தலையில் பழியைப் போட்டுவிடுவார்கள். இதற்கு சிறீலங்காவின் ஊடக அமைச்சு ஒரு அறிக்கையும் வெளியிட்டுவிடுவார்கள்.

சிறீலங்கா அரசாங்கம் தெரிவிப்பது போன்று விடுதலைப் புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டால், நாட்டில் இடம்பெற்ற கொலைகளும் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இன்று கொலைகள், கொள்ளை, சிறுவர் துஸ்ப்பிரயோகம் என அனைத்தும் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளன. விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடுநிசியில் தனிய ஒரு பெண் வீதியால் சென்று தனது தேவையைப் பூர்த்தி செய்யக் கூடிய காலம் இருந்தது. இது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தவர்களுக்கு நன்கு தெரியும்.
இன்று யாழ், குடாநாட்டில் உள்ள மக்களை சூழ சிறீலங்காவின் முப்படையினரும் பாதுகாப்புக் கடமைகளுக்காக குவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. பயிரை வேலி மேய்வது போன்று, பாதுகாப்புக்கு குவிக்கப்பட்ட படையினராலேயே மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கென்றால் அதில் எவ்வித ஐயமுமில்லை.
முன்னர் பர்மா என அழைக்கப்பட்ட மியன்மாரில் படையாட்சி இடம்பெறுவதினால் அங்குள்ள ஒவ்வொரு வீடுகளின் முன்பாகவும் படையினர் இரகசியமாக பதுங்கியிருப்பார்கள். இரவு நேரத்தில் வெளியில் வரும் பொதுமக்கள் காணாமல் போவதுதான் வழக்கம். அவ்வாறான சூழ்நிலை யாழ் குடாநாட்டில் ஏற்பட்டிருப்பது என்பது தற்போதைய நிலையில் ஒரு பயங்கரமான தோற்றத்தைக் காட்ட அரசாங்கம் முற்படுகிறதா? என்ற கேள்வி அனைவரினதும் மனங்களில் தோன்றுகின்றது.
கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளை விற்றுப் பிழைப்பு நடத்திய வங்ரோத்து அரசியல் ஆட்சியாளர்களினால் இன்று புலிகளின் பேச்சை எடுக்க முடியாத நிலையில், இரவு வேளையில் மலர் வளையங்களை வைத்து தமது ஏகாதிபத்திய ஆட்சியை நடாத்த மகிந்த அரசு முற்படுகின்றது.
கன்னியமான தொழில்களில் ஈடுபடும் நீதியரசர்கள், மருத்துவர்கள், தொழிச்சங்க வாதிகள் என அனைவருக்கும் இன்று உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் மலர் வளையம் வைக்கப்படுகிறது. சிலரின் வீடுகளின் மீது கைக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்படுகிறது, இன்னும் சிலருக்கு கழிவு எண்ணை மற்றும் கல் வீச்சித் தாக்குதல் நடாத்தப்படுகிறது.
மன்னாரில் நீதிவானுக்குப் பாதுகாப்புயில்லை, கொழும்பு மற்றும் பதுளை மாவட்டங்களில் மருத்துவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. தொழிச்சாங்க வாதிகளுக்கு பாதுகாப்புயில்லை இவ்வாறான நிலையில் எவ்வாறு பாமர மக்களுக்கு பாதுகாப்பு இருக்கும்?
சிறீலங்காவின் ஆட்சி இன்று மாபியாக்களின் கைகளில் சிக்கிவிட்டது. கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிருந்த பகுதிகளை மீட்ட பின்னர் சிறீலங்காவின் அதிபர் மகிந்த தெரிவிக்கையில், இந்த நாட்டை மாபியாக்களின் கையில் விடமாட்டேன் என்றார். அந்த சொல் இன்று தனது குடும்பத்தினருக்கே பொருத்தமாக அமைந்துள்ளது.
சிறீலங்காவின் எந்த நிர்வாகத்துறையை எடுத்தாலும் கையூட்டல் தலைவிரித்தாடுகின்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் தொடக்கம் ஓய்வூதியம் வரை நடைபெறுகின்றது. தனது குடும்பத்தினரும், சொந்தக்காரர் மாத்திரம் தான் இந்த நாட்டில் அனைத்து துறைகளிலும் இருக்க வேண்டும் என்பதில் மகிந்த அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.
இவற்றுக்கெல்லாம் எந்த அரசியல் வாதியினாலும் சரி, எந்த நாட்டினாலும் சரி எதனையும் செய்து விட முடியாது. இனியாவது இனவேறுபாடுகள் இன்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பாட்டால் மாத்திரம் இந்த வெறிபிடித்த ஆட்சியாளர்களை துரத்த முடியுமே தவிர வேறு எந்த சக்தியினாலும் எதுவும் செய்ய முடியாது என்பதில் மகிந்த அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது.
மத்திய கிழக்கு நாடுகளில் அண்மைக்கால மாற்றங்களை அவதானித்தால் புரியும், அங்கு மக்களின் சக்தி மிகப் பெரும் சவாலாக அமைந்தது அந்நாட்டு ஆட்சியாளர்களுக்கு. ஐம்பது வருட ஆட்சி கொண்ட லிபியா அரசாங்கத்தையே மக்கள் புறட்டியெடுத்தார்கள் என்றால் மக்கள் சக்தியின் முன் எதுவும் பொடிப்பொடியாகிவிடும் என்பதற்கு அதுதான் உதாரணம்.
இன்று அதன் ஒரு பகுதியைக் காணக் கூடியதாக இருக்கிறது. சிறையில் அடித்துப் படுகொலை செய்யப்பட்ட இரண்டு தமிழ் அரசியல் கைதிகளின் உயிரிழப்பக்கு பின்னர் இன வேறுபாடின்றி சில முற்போக்குவாதிகளும் தமிழர்களின் நியாயமான போராட்டத்திற்கு பச்சைக்கொடி காட்டுவதை அவதானிக்கலாம்.
சிறீலங்காவில் பாமர மக்கள் தொடக்கம் கல்விமான்கள் வரைக்கம் தமது எதிர்ப்பினை மகிந்த அரசாங்கத்திற்கு தெரிவிக்கின்றனர். இதனை ஒவ்வொரு திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள், மற்றும் தனியார் துறைகளின் அதிகாரிகள் ஊடாக அவதானிக்கலாம். அனைத்துத் துறைகளையும் தனது ஆதிக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆதிக்க வெறியினால் அனைத்துத் துறைகளும் ஒழுங்கான வினைத்திறன்கள் பயன்படுத்தப்படாமையினால் படுநட்டத்தில் இயங்குகின்றன. ஒன்றிலிருந்து ஒன்றாக தொழிச்சங்க நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
மகிந்த அரசாங்கத்தின் அஸ்த்தமன் எதிர்வரும் மாதம் 8ம் நாளுடன் தெரிந்து கொள்ளலாம். அதாவது மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் குறிப்பாக கிழக்கு மாகாண சபையில் ஏற்படப் போகும் தோல்வி மகிந்த ஆட்சியின் முதற்கட்ட நகர்வாக அமையும் என்பதை அனைவரும் உணரலாம்.
நன்றி : ஈழமுரசு
http://www.pathivu.com/news/21799/57//d,article_full.aspx