Tuesday, July 7, 2009

அமெரிக்காவின் தாளத்துக்கு ஆடுமா இலங்கை அரசு?

இலங்கை தொடர்பான அமெரிக்க நிலைப் பாடு என்ன என்ற கேள்வி இப்போது கொழும்பு அரசியலில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் ஆதரவுப் பின்னணியில், புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற இலங்கை அரசாங்கத்தால் அமெரிக்காவைத் திருப்திப்படுத்தும் எந்தவொரு நகர்வையும் மேற்கொள்ள முடியாதிருக்கிறது.

இதன்காரணமாக, போருக்குப் பிந்திய அபிவிருத்தி விடயத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. விடுதலைப் புலிகள் விடயத்தை அமெரிக்காவும் கூட ஒரு தலைப்பட்சமாகவே பார்த்தது.புலிகள் அமைப்புக்குத் தடைவிதித்தது. புலிகள் இயக்கம் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்த பின்னரும், அதன் மீதான தடையை அமெரிக்கா நீடித்தது. இலங்கை அரசாங்கத்துக்கு இது திருப்தியாக அமைந்த போதும், அமெரிக்கா விடுத்திருக்கின்ற பயண எச்சரிக்கை பெரும் அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. புலிகள் இயக்கம் அழிந்து விட்டது என்று கூறி, புலிகள் இயக்கம் மீதான தடையை அமெரிக்கா நீக்கவில்லை. எந்தக் காரணத்தைக் காட்டி புலிகள் மீதான தடையை அமெரிக்கா நீடித்ததோ அதே காரணத்தைக் காட்டியே இலங்கைக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று தமது நாட்டுப் பிரஜைகளுக்குப் பயண எச்சரிக்கையையும் விடுத்திருக்கிறது. அமெரிக்காவின் நிலைப்பாட்டில் இருந்து பார்த்தால் அந்தநாடு இந்த விடயத்தில் இரட்டைப் போக்கைக் கடைப்பிடிக்கவில்லை என்பது வெளித் தோன்றும். ஆனால், இலங்கை அரசாங்கத்துக்கு இது அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. அதேநேரம் புலிகள் இயக்கம் முற்றாக அழிந்து விட்டது என்று கூறி அதன் மீதான தடையை நீக்குமாறு யோசனை தெரிவிக்கவும் இலங்கை துணியவில்லை. இலங்கை அரசாங்கத்திடம் இருந்து அமெரிக்கா இப்போது எதிர்பார்ப்பது தமிழர் இனச்சிக்கலுக்கான ஓர் அரசியல் தீர்வைத்தான். 13 ஆவது திருத்தத்தின்படியோ அல்லது வேறெந்த வழிகளினூடாகவோ இலங்கை அரசாங்கம் அரசியல் தீர்வொன்றை முன்வைக்க வேண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடு.

ஆனால், இலங்கை அரசு இந்த விடயத்தில் நழுவல் போக்கையே கடைப்பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. இது அமெரிக்காவுக்கு வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாகவே மீண்டும் பயண எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்திருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. இலங்கை அரசாங்கத்தை வழிக்குக் கொண்டு வரும் ஒரு முயற்சியாக இந்த அறிக்கை வெளியிடப்பட் டிருக்கலாம். கடந்த வாரம் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் "இலங்கைக்குப் பயணம் செய்யும் அமெரிக்க குடிமக்கள் மற்றும் இலங்கையில் வசிக்கும் அமெரிக்க குடிமக்களுக்கு அங்கு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளமை உட்பட, உறுதியற்ற நிலை அங்கு தொடர்வதையிட்டு எச்சரிக்கை விடுக்கின்றது. இதனால் இலங்கைக்கு பயணம் செய்வதில் உள்ள ஆபத்தை கவனமாகப் பரிசீலனை செய்யுமாறு அங்கு செல்ல விரும்பும் அமெரிக்கக் குடிமக்களை இராஜாங்கத் திணைக்களம் கேட்டுக் கொள்கின்றது.' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கையில் புலிகள் இயக்கம் மீள் எழுச்சி கொள்ளலாம் என்ற எச்சரிக்கை மட்டுமன்றி, கிழக்கில் ஆயுதக்குழுக்களின் செயற்பாடுகள், வீதித் தடைகள், போக்குவரத்துக் கட்டுப்பாடுகள், நடமாடும் சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருப்பது என்று இலங்கை அரசாங்கத்தின் செயற்பõடுகள் மீது அழுத்தம் கொடுக்கும் வாக்கியங்களும் இடம்பெற்றிருக் கின்றன.
அமெரிக்காவின் இந்த அறிக்கையினால் குழப்பமடைந்தது இலங்கை அரசாங்கம். காரணம், இந்த ஆண்டிலும் அடுத்த ஆண்டிலும் சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்த்து வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளும் திட்டத்தை வகுத்துக் கொண்டிருந்தது இலங்கை அரசாங்கம். இதில் மண் அள்ளிப்போடும் வகையில் தான் அமெரிக்காவின் அறிக்கை அமைந்திருந்தது. இதையடுத்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹன இலங்கை அரசின் ஆழ்ந்த வருத்தத்தத்தையும் அதிர்ச்சியை யும் வெளிப்படுத்தும் கருத்துகளை வெளியிட்டிருக்கிறார். "விடுதலைப் புலிகள் முழுமை யாகத் தோற்கடிக்கப்பட்டிருக் கின்றனர். இந்தக் கள நிலைவ ரத்தை புரிந்துகொள்ளாமல் அமெரிக்கா இந்தப் பயண எச்சரிக்கையை வெளியிட்டி ருக்கிறது.
"இவ்வாறான ஓர் அறிவுறுத்தலை அமெரிக்கா வெளியிட்டிருப்பது அதிருப்தியை ஏற்படுத்துகின்றது. கடந்த காலங்களில் தாக்குதல்களை நடத்திய பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகள் அமைப்பு படையினரால் முழுமையாக தோற்கடிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெறலாம் எனத் தெரிவித்திருப்பது கள நிலைமைகளைப் போதுமான அளவுக்குப் புரிந்துகொள்ளாத தன்மையைத் தான் வெளிப்படுத்துகின்றது எனவும் அவர் கூறியிருந்தார்.

போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, களமுனை நிலைவரங்களை செய்மதி மூலம் படம் பிடித்து அவ்வப்போது எச்சரிக்கைகளை வழங்கிக் கொண்டிருந்த அமெரிக்காவை களநிலையை அமெரிக்கா போதியளவில் புரிந்து கொள்ளவில்லை என்று கூறியிருக்கிறது இலங்கை அரசு. இதற்கிடையே, சர்வதேச நாயண நிதியத்திடம் இருந்து கிடைக்க வேண்டிய கடன் இதுவரையில் கிடைக்காத நிலைக்கும் ஒருவகையில் அமெரிக்காவே காரணமாக இருக்கிறது. நிதி உதவிகள் வழங்குவதில் சர்வதேச நாணய நிதியம் அரசியலைப் புகுத்தியுள்ளது. அதனால் தான் இலங்கைக்குக் கிடைக்க வேண்டிய 1.9 பில்லியன் டொலர் நிதியுதவி தாமதமடைந்து வருவதாக அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் விசனம் வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. "முன்னர் எப்போதும் சர்வதேச நாணய நிதியம் நிதியுதவி வழங்குவதற்கு அரசியல் காரணிகளை கருத்தில் கொண்டதில்லை. ஆனால் தற்போது அது முதல் தடவையாக அதனை மேற்கொண்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் கடனைப் பெறுவதற்கான உடன்பாடு கடந்த ஏப்ரல் மாதம் நிறைவு செய்யப்பட்டிருந்த போதும் இன்றுவரை அது கருத்தில் எடுக்கப்படவில்லை.' என்று அவர் கூறியிருந்தார். சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி வழங்கப்படுவதை இறுதியாக தீர்மானிக்கும் அதிகாரம் அமெரிக்காவிடமே உள்ளது. போர்நிறுத்தம், இடம்பெயர்ந்த மக்கள் மனிதாபிமானத்துடன் நடத்தப்படுவதுடன் அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என அமெரிக்கா தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது.

அத்துடன், போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பாகவும் அமெரிக்கா வலியுறுத்தியிருந்தது. ஆனால் இவை கருத்தில் எடுக்கப்படாத நிலையில் சர்வதேச நாயண நிதியத்தின் நிதியுதவிகளை அமெரிக்கவே தடுத்து வைத்திருப்பதான கருத்தும் நிலவுகிறது. இதற்கிடையே போர் முடிந்த பின்னரும் இலங்கை இராணுவத்திற்கு மேலும் 50 ஆயிரம் பேரை சேர்ப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முடிவு இந்த நிதியுதவிகளை மேலும் தாமதப்படுத்தும் என்ற எச்சரிக்கையும் வெளியாகியுள்ளது. போர்க்காலத்தில் இந்தியாவினதும் சீனாவினதும் தாளத்துக்கு ஆடிய இலங்கை அரசாங்கத்தால் இப்போது அவற்றின் செல்வாக்குக்கு உட்பட்டுச் செயற்பட முடியாததொரு நிலை உருவாகி வருகிறது. சீன, இந்திய பிராந்திய நலன்களுக்கு இடையில் புகுந்து விளையாடிய இலங்கை அரசாங்கம் அமெரிக்காவினது விருப்பங்களுக்கு முரணாகச் செயற்பட இனிமேல் முடியாது.

அப்படிச் செயற்பட முனைந்தால் சர்வதேச ரீதியான ஆதரவை இலங்கை அரசாங்கம் இழக்க நேரிடும். நிதியுதவிகள் பறி போகலாம். போர் நடைபெற்ற இறுதி நேரத்தில் அமெரிக்கா முன்வைத்த சில யோசனைகளை இலங்கை அரசாங்கம் கருத்தில் எடுக்கவில்லை. புலிகளைக் காப்பாற்றும் முயற்சியாகவே அதை இலங்கை அரசாங்கம் பார்த்தது. அந்த யோசனைகளை உதாசீனம் செய்ததையிட்டு அமெரிக்காவுக்கு உள்ளூர ஒரு வருத்தம் அல்லது கோபம் இருக்கக் கூடும். தொடர்ந்து இலங்கை அரசாங்கம் அமெரிக்க விரோத அல்லது உதாசீனப் போக்கைக் கடைப்பிடித்தால் இலங்கை அரசுக்கு பொருளாதாரச் சிக்கல் இன்னமும் அதிகரிக்கக் கூடும். இதிலிருந்து மீண்டெழுவதென்பது இலங்கைக்கு மிகவும் இலகுவானதொரு விடயமாகவும் இருக்காது. இப்போது இலங்கை அரசு, அமெரிக்காவைத் திருப்திப்படுத்துவதற்கு அவசியமாகத் தேவைப்படுவது ஓர் அரசியல் தீர்வுத் திட்டமாகவே இருக்கலாம்.
வீரகேசரி வாரவெளியீடு

0 Comments: