Sunday, June 28, 2009

இந்தியா - சீனா - சிறிலங்கா: "ஆழமான பார்வை"

இந்தியா – சீன மறைமுக போரின் மைதானமாக மாறியுள்ள இலங்கை தனது அத்தனை தேசிய சொத்துகளையும் இரண்டு நாடுகளிடமும் அடகு வைத்துவிட்டு, அதற்கு வட்டி கேட்பதுபோல தான் போட்டு வைத்த இராணுவ நிகழ்ச்சி நிரலுக்கு ஆயுதங்களை கேட்டு பெற்றுக்கொள்வதில் காட்டிய முனைப்பும் அதற்குப்பிறகு நடந்த சம்பவங்களும் சிங்களத்துக்கு சார்பாக நடைபெற்று முடிந்து இன்னமும் அதன் தூவானங்கள் ஆங்காங்கே விழுந்துகொண்டிருக்கின்றன.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் அப்படி என்னதான் குடுமிப்பிடி சண்டை என்று சற்று ஆழமாக நோக்கினால் அது பல படிநிலைகளில் அனல் பறக்க நடைபெற்றுவருதை காணலாம்.
கடற்படை ஆதிக்கம், அணு ஆயுத போட்டி, பிரபஞ்ச படை மேம்பாட்டு போட்டி, அயல் நாடுகளை அணைத்துக்கொள்வதில் போட்டி, அதற்கான எல்லை இழுபறி, பொருளாதார வளங்களை கையகப்படுத்துவதில் போட்டி போன்றவை இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில்; ~தொடர்ச்சியான பகல் - இரவு சண்டை காட்சிகளாக நடைபெற்று வருகின்றன.
இவற்றில் இலங்கையை மையமாக கொண்டு நடைபெறும் பாரிய படைத்துறை பிரச்சினை என்றால் அது கடலாதிக்கம் என்று கூறலாம்.
இலங்கையில் சீனாவின் அண்மைக்கால அதிரடி பிரசன்னங்களாக கடந்த வருடம் கைச்சாத்திடப்பட்ட 36.7 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுத தளவாட ஒப்பந்தம், நுரைச்சோலை அனல் மின்நிலை திட்ட உதவி, மன்னார் எண்ணெய் வள ஆராய்ச்சிக்கான அனுமதி, கொழும்பில் கலாச்சார மண்ட நிர்மாண உதவி, குடாநாட்டுக்கு மின் வழங்க காங்கேசன்துறைக்கு வழங்கிய நான்கு மின் பிறப்பாக்கிகள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.
ஆனால் இவை எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக காணப்படுவது அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி திட்டம். இது சீனா மேற்கொள்ளும் ஏனைய திட்டங்களின் நோக்கத்தை அப்பட்டமாக வெளிக்காட்டியுள்ள ஒன்றும் அதன் ஏக சிந்தனையில் சிதறிய நீண்டகால கனவும் கூட.
சீனா தனது தேவைக்கான பெரும்பகுதி எண்ணெய் வளத்தை இந்து சமூத்திர பிராந்தியத்தினூடாகவே பெற்றுக்கொள்கிறது. அதற்காக தனது கப்பல்களின் தரிப்பிடங்களாக ஆங்காங்கே சில நாடுகளின் துறைமுகங்களை தான் பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டு இப்பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் தனது உறவுகளை வலுப்படுத்திவருகிறது.
அந்தவகையில் பாகிஸ்தானுடனான தனது உறவை பலப்படுத்தி அந்நாட்டு துறைமுகத்தை பயன்படுத்துவதிலுள்ள சிக்கல்களை தவிர்த்துள்ள சீனா, அடுத்து இலங்கையை தனது வலைக்குள் விழுத்தியிருக்கிறது. அதற்காக மேற்கொண்டுள்ள அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக்கு சீனா சுமார் ஒரு பில்லியன் டொலர்களை அள்ளி வீசியிருக்கிறது.
தனது பிராந்தியத்தில் எவர் அடிபட்டாலும் பரவாயில்லை தனக்கு ஆயுதம் தரக்கூடிய எந்த நாட்டுடனும் சோடி சேர்வது என்ற நோக்கத்துடன் இருந்த இலங்கை, இப்படியெல்லாம் கூட்டு சேர்வது தனக்கு எவ்வளவு ஆபத்து என்று கொஞ்சமும் சிந்திக்கவில்லையே என்பது இந்தியாவின் காலாவதியான கவலை.
ஆனால், இலங்கை துறைமுகத்தினுள் சீனா ஊடுருவும் இந்த இரகசிய இராஜதந்திர போரால் இந்தியா ஏன் சீறுகிறது? அப்படி என்ன சீன இந்திய கடல் பிரச்சினை என்று பார்த்தால் எல்லாம் இந்த கடற்படை வலுவை முன்வைத்துத்தான்.
உலக வளர்ச்சியில் உயர்ந்த ஸ்தானத்துக்கு போய்விட்ட இந்த இரு நாடுகளினதும் கடற்படைகள், தத்தமது நிகழ்ச்சி நிரல்களின் பிரகாரம் தமது விரிவாக்கத்தை மேற்கொண்டு வருகின்ற போதும் சீனா எப்போதுமே அதிரடியாக – சத்தம் சந்தடியின்றி – தனது படைகளை பல பரிமாணங்களில் பட்டை தீட்டி கொள்வதில் இந்தியாவை விட பல படிகள் மேல் என்றே கூறலாம். இந்த பல பரிமாண வளர்ச்சி இந்தியாவுக்கு பாரிய சவால் என்பது உண்மை.
இந்த சவாலை உடனடியாக சமாளிக்க முடியாத இந்தியாவின் இயலாமையின் வெளிப்பாடும் -
அப்படிப்பட்ட சீனா அயல் நாடான இலங்கை மற்றும் இதர நாடுகளுக்குள் வந்து நின்று கொண்டு தம்மிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச படை வலுக்களையும் மோப்பமிடுகிறது என்ற இந்தியாவின் குடைச்சலும் -
சீனாவுக்கு இடம்கொடுத்த அயல்நாடுகளின் மீதும் இந்தியாவை சினம் கொள்ள வைத்துள்ளது.
படைவலு பரிசோதனை
இந்திய படைத்துறையை பொறுத்தவரை அதனிடம் உள்ள மிகத்திறமான படைக்கலம் என்றால் நிலத்திலிருந்து ஏவக்கூடிய அணு ஆயுதங்கள் உள்ளன.
~அக்னி, ~ப்ருதிவி என கடந்த காலங்களில் இந்தியா இவை தொடர்பான பரிசோதனைகளை மேற்கொண்டு அவற்றின் உருவாக்கத்தில் வெற்றி கண்டிருக்கிறது.
அதேபோல, வான் படையை பார்க்கப்போனால் ~மிராஜ் எனப்படும் - ஈழத் தமிழர்கள் தமது வாழ்நாளில் மறக்கமுடியாத - போர் விமானங்கள் இந்தியாவிடம் வளமான வான் கலங்களாக உள்ளன.
ஆனால், இந்தியாவின் கடற்படை வலு என்பது பேச்சுக்கு கடலில் ஓடித்திரியும் பெரிய பெரிய கப்பல்களாக காணப்படுகிறதே தவிர, அவை சீனாவின் அதிநவீன கடற்படை வலுவுக்கு முன்னால் கால்தூசு என்பதுதான் ஏற்றுக்கொண்டேயாக வேண்டிய உண்மை.
அதுவும், சீனா தற்போது அணு ஆயுத ஏவுகணைகளை ஏவக்கூடிய தளங்கள் கொண்ட மிகப்பெரிய கடற்படை தளம் ஒன்றை தெற்கு சீனக்கடலில் உள்ள ஹெய்னின் என்ற தீவில் நிர்மணித்து வருவது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
அணு ஆயுத ஏவுகணைகளை ஏவக்கூடிய சுமார் 20 கடற்கலங்கள் தரிக்கக்கூடிய இந்த தளம் ~ஜேம்ஸ் பொண்ட் படங்களில் வருவதுபோன்ற தோற்றப்பாடு கொண்டது என்று பிரித்தானிய நாளிதழ் ஒன்று அண்மையில் தெரிவித்திருக்கிறது.
இவ்வாறான அணு ஆயுத ஏவுகiணை வலுக்கொண்ட கடற்கலங்கள் கடலுக்கடியில் நிறுத்திவைக்கக்கூடியவை மட்டுமல்லாமல் அவை எங்கு நிற்கின்றன என்பதை கண்டுபிடிப்பதும் கடினம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
மூன்றாம் உலகப்போர் ஒன்று வெடித்தால், எங்கிருந்து வருகிறது என்று தெரியாமலே வந்து தாக்கி ஒரு கண்டத்தையே துவம்சம் பண்ணக்கூடிய அணு ஆயுத ஏவுகணை கப்பல்களை சீனா இரகசியமாக தயாரித்து வைத்திருக்கிறது என்கிறார்கள் போரியல் நோக்கர்கள்.
இந்த அணு ஆயுத கப்பல்கள் கடலுக்கடியில் பல்லாயிரக்கணக்கான கிலோ மீற்றர்கள் இரகசியமாக பயணம் செய்து எந்த நாட்டின் துறைமுகத்துக்கு அடியில் வந்து நின்றாலும் உடனடியாக அவற்றை கண்டுபிடிப்பது மிகக்கடினம்.
இதனால்தான், சீனா இன்று இலங்கை பக்கம் தலைகாட்டி துறைமுகங்களை விரிவாக்கம் செய்யப்போவதாக அறிவித்தவுடன் ~குய்யோ முறையோ என்று இந்தியா கூக்குரலிட ஆரம்பித்திருக்கிறது.
இலங்கை துறைமுகங்களில் கடலுக்கடியில் வந்து நிற்கக்கூடிய சீனாவின் அணு ஆயுத கப்பல்கள் இந்தியாவின் பாதுகாப்பு நிலைவரங்களை அறிந்துகொள்ளும் என்றும் -
அது தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும் இலங்கையிடம் சொல்லி அழுமளவுக்கு தற்போது இந்தியாவின் கதி அதோ கதியாகியிருக்கிறது.
சீனாவுடன் போட்டி போட்டு நீருக்கடியில் அணு ஆயுத போர் நடத்துமளவுக்கு இந்தியாவின் கடற்படை உள்ளதா என்று பார்த்தால், அந்த முயற்சியில் இந்தியா இப்போதுதான் அரிவரி நிலையிலிருக்கிறது.
1970-களில் ஆரம்பிக்கப்பட்ட அணு ஆயுத ஏவுகணை கடற்கலங்கள் தொடர்பான இந்தியாவின் முயற்சிகள் இன்னமும் அந்த நிலையிலிருந்து பெரிதாக நகரவில்லை.
சீனாவின் வளர்ச்சியை கண்டு மிரண்டெழுந்து இப்போதுதான் சுதாரித்துக்கொண்டுள்ள இந்தியா, அடுத்த ஆண்டு இந்த முயற்சியை மீண்டும் ஆரம்பிக்கப்போவதாக அறிவித்திருக்கிறது.
இந்திய கடற்படை வலு
இதன் ஆரம்ப கட்டமாக, தனது போர்க்கப்பல்களிலிருந்து ~கே-15 ஏவுகணையை ஏவி பரிசோதிக்கும் ~சாகரிக்கா என்ற பெயரிடப்பட்ட முயற்சியை இந்த ஆண்டு மேற்கொள்ளப்போவதாகவும், அதன்பின்னர் படிப்படியாக அணு ஆயுத ஏவுதிறன் குறித்த முயற்சிகளில் இறங்கப்போவதாகவும் குறிப்பிட்டிருக்கிறது.
இதற்காக, 650 மில்லியன் டொலர் செலவில் 12,000 தொன் எடையுள்ள ~அகுலா -2 என்ற அணு ஆயுத ஏவுகணை கப்பலை தனது உற்ற நண்பனான ரஷ்யாவிடமிருந்து வாங்க முன்னர் திட்டமிட்ட இந்தியா, தற்போது அதே இரகத்தில் புதிய வசதிகளுடன் கூடிய இன்னொரு கப்பலையும் வாங்க திட்டமிட்டிருக்கிறது.
தற்போது இந்தியாவிடம் உள்ள பாரிய கடற்கலங்களை கணக்கிலெடுத்தால் அமெரிக்காவிடமிருந்து வாங்கிய ~ஐ.என்.எஸ்.ஜலஷ்வா என்ற விமானம் தாங்கி கப்பல் சுமார் 36 வருடங்கள் பழமை வாய்ந்தது. இதை விட பெரிய விமானம் தாங்கி கப்பல் ~ஐ.என்.எஸ்.விராத். இவை இரண்டும்தான் குறிப்பிடக்கூடியவை
(தனது பழைய கப்பல்களை அமெரிக்கா இந்தியாவின் தலையில் கட்டிவிடுவதும் அதேபோல இந்தியா இலங்கையின் தலையில் கட்டிவிடுவதும் காலகாலமாக நடைபெற்றுவரும் ஒன்றுதான். தற்போது இலங்கையிடம் உள்ள ~எஸ்.எல்.என்.எஸ்.சயுர, ~சமுத்ரா, ~வரகா போன்றவை ஆளாளுக்கு மாறி மாறி பரிசளித்த பழைய சமான்கள்தான்)
இந்த பழைய தாரை தப்பட்டைகளை வைத்துக்கொண்டு சீனாவின் கடற்படையுடன் போட்டியிட முடியாது என்பதை புரிந்துகொண்ட இந்தியாவின் கடற்படை, தற்போது தன்னிடமுள்ள 23 பாரிய கடற்கலங்கள் கொண்ட படையை விரிவாக்கம் செய்ய பெருமெடுப்பில் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அடுத்த 15 வருடங்களில் இந்திய கடற்படையில் 40 புதிய போர்க்கப்பல்களை இணைத்துக்கொள்வதற்காக இந்திய அரசு 12 பில்லியன் டொலர் செலவிலான திட்டத்தை முடுக்கிவிட்டிருக்கிறது.
அத்துடன், எதிர்காலத்தில் எவ்வழியிலும் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை முறியடிப்பதற்காக, இந்து சமுத்திர பிராந்தியத்தில் நீருக்கடியில் நடைபெறக்கூடிய நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக, 14 முதல் 16 பில்லியன் டொலர் செலவில் 24 நீரடி கண்காணிப்பு கலங்களை வாங்க முடிவு செய்திருக்கிறது.
அதேவேளை, தற்போதைக்கு தன்னிடமுள்ள சாதாரண ஏவுகணைகளை அவ்வப்போது பரிசோதனை செய்து சீனாவிடமிருந்து ஏற்படக்கூடிய உடனடி அச்சுறுத்தலுக்கு பதில் சொல்லும் வகையிலான ஏற்பாடுகளையும் இந்தியா மேற்கொண்டு வருகிறது.
கப்பலில் இருந்தும் தரையிலிருந்து ஏவக்கூடிய இந்தியாவின் ~பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பான மேலதிக முன்னேற்றகர திட்டங்கள் தொடர்பான தனது முயற்சிகளிலும் முனைப்படைந்திருக்கிறது.
இதில் குறிப்பிடப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், அண்மையில் இந்தியா சோதனை செய்த ~அக்னி-3 என்ற தரையிலிருந்து ஏவும் ஏவுகணை 3,500 கிலோமீற்றர் பாய்ந்த சென்று தாக்குதல் நடத்தக்கூடியது. ஆனால், சீனாவிடமுள்ள ஏவுகணைகள் 11,000 கிலோமீற்றர்களுக்கும் அதிகமான தூரம் பறந்து சென்று தாக்குதல் நடத்தக்கூடியது.
சீனாவின் இந்த கன கடூரமான வளர்ச்சி மிக்க கடற்படை, இந்து சமுத்திரத்தின் ஆதிக்கத்தை அதன் கைகளில் கொண்டுவருவதற்கு தாராளமாக போதும். ஆனால், அந்த இலக்கை அடைவதற்காக – ஜனாதிபதி அப்துல் கலாம் கூறினார் என்பதற்காக - இன்னமும் கனவை மட்டும் கண்டுகொண்டிருக்கும் இந்தியா, காரியங்களில் இறங்குவதில் காட்டியுள்ள தாமதம் அதன் பின்னடைவுக்கே வழிவகுத்திருக்கிறது.
அணில் ஏறவிட்ட.....
ஆகவே, தனது கடற்படையின் வளர்ச்சிப்போக்கில் ஒரு திருப்பம் ஏற்படும்வரை, சீனாவின் ஆதிக்கப்பிடியை தனது இராஜதந்திரப் போரின் மூலம் முறியடித்து, தனக்கான இருப்பிடத்தை தொடர்ந்து தக்கவைப்பதற்கே இந்தியா அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வருகிறது.
இந்தவகையில், இலங்கை மீதான இந்தியாவின் கவலை முன்னர் குறிப்பிட்டதுபோல காலாவதியான ஒன்று. அன்று அன்னை இந்திராவுடன் முரண்டு பிடித்துக்கொண்டு அமெரிக்காவிடம் சென்று அது மறுக்க இஸ்ரேல் ஊடாகவும் இதர நாடுகள் ஊடகவும் ஆயுதங்களை உருவிக்கொண்ட ஜே.ஆரின் பாணியிலேயே, இன்று மகிந்த அரசு சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் ~தேனிலவு கொண்டாடுகிறது.
கைமீறிப்போன இந்த நிலைவரத்தை மீண்டும் கையகப்படுத்துவதற்கு இந்தியாவுக்கு கிடைத்த பெரும் சந்தர்ப்பம்தான் ஈழத்தமிழர் விவகாரம். அதில் தலையிட்டு தமிழருக்கு ஆதரவு தரக்கூடிய ஒரு நிலைமையை இந்தியா உருவாக்கி சிறிலங்காவை கொஞ்சமாவது தனது பிடிக்குள்ள வைத்திருக்ககூடிய சூழ்நிலை உருவானபோதும், புலிகளையும் அழிக்கவேண்டும் அதேவேளை சீனாவையும் எதிர்க்கவேண்டும் என்ற இரண்டும் கெட்டான் நிலையில் நின்று இந்தியா காண்பித்த அரைவேக்காட்டு இராஜதந்திர கொள்கை இன்று அதன் நிலையை அணிலை ஏறவிட்ட நாயின் நிலைக்கு கொண்டுவந்து தள்ளியிருக்கிறது.
முன்னமே கூறியதுபோல இது காலம் கடந்த கவலை. இனிமேல் கச்சதீவில் கடற்படைத்தளம் என்ன? தூத்துக்குடியில் தும்புத்தொழிற்சாலை கட்டப்போகிறோம் என்று சிறிலங்கா கூறினால் கூட இந்தியப் பிரதிநிதிகள் கொழும்புக்கு வந்து - எமக்குள்ள எந்த பிரச்சினையும் இல்லை என்பது போல - சிரித்துக்கொண்டே மகிந்தவுக்கு கைலாகு கொடுத்துவிட்டு செல்லவேண்டிய நிலைதான்.
நன்றி
ப.தெய்வீகன் -

Saturday, June 27, 2009

தமிழ்த் தேசியத்தை விழுங்க முயற்சிக்கும் சிங்கள தேசியம்

இராணுவ ரீதியாகத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை அடக்கிய சிங்கள அரசு, இப்போது வரலாற்று ரீதியாக அவர்களை அடிமைப்படுத்தி, தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேரே - வடக்கும் கிழக்கும் தமிழரின் மரபுவழித் தாயகம், தமிழர்கள் ஒரு தேசிய இனம், தமிழ் மக்களுக்கு தன்னாட்சி உரிமை உள்ளது ஆகிய விடயங்கள் தான்.
தமிழ் மக்களின் தாயகக் கோட்பாட்டைச் சிதைத்து, அவர்களின் தனித்துவமான தேசிய அடையாளங்களை அழிப்பதன் மூலம் தன்னாட்சி உரிமைக்கான எழுச்சியையும் கோரிக்கையையும் பலவீனப்படுத்துவது தான் சிங்களத்தின் நாசகாரத் திட்டம்.
தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகத் சிதைத்துள்ள நிலையில் - எதிர்காலத்தில் புலிகளின் எச்சங்களே நாட்டில் இருக்காத வகையில் - சிங்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அடுத்த கட்டமாக ‘ஈழம் என்ற வார்த்தையையே இல்லாமல் செய்வதற்கு சிங்கள அரசாங்கம் குறிவைத்தி;ருக்கிறது. ஈழம், தமிழ், முஸ்லிம் போன்ற வார்த்தைகளைக்கொண்ட கட்சிகளின் பெயர்களைத் தடைசெய்ய அரசாங்கம் முயற்சிப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன.
இது எதிர்காலத்தில் ~ஈழம் என்ற பெயரிலோ, அல்லது தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தனித்துவமான கட்சிகள் - அமைப்புக்கள் இயங்குவதை, தோன்றுவதை முழுமையாகத் தடைசெய்ய எடுக்கப்படும் நடவடிக்கையாகும்.
தேர்தல் திணைக்களத்தின் ஊடாக அரசியல் கட்சிகளின் பெயர்களை மாற்றியமைக்கக் கொடுக்கப்படுகின்ற நிர்ப்பந்தமானது - தமிழ்த் தேசியத்தை அழிப்பதற்கு சிங்களத்தின் மீது அரசாங்கம் கொண்டிருக்கின்ற கரிசனையையே பிரதிபலிக்கின்றது. இதைச் செய்து விட்டால் நாட்டில் ஒருமைப்பாடு வந்து விடும், பிரிவினை ஏற்படாது என்று கருதுகிறது இலங்கை அரசு.
இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால் தற்போது தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் எதுவுமே இப்போதைய பெயர்களில் இயங்க முடியாது.
இனம் ஒன்றைப் பிரதிநிதித்துவம் செய்யும் அல்லது பிரதேசம் ஒன்றின் பிரதிநிதித்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் அரசியல் கட்சிகள் செயற்படக்கூடாதென்று அரசாங்கம் சட்டம் ஒன்றைக் கொண்டுவருவதன் மூலம் எந்தவகையிலும் ஒருமைப்பாட்டை ஏற்படுத்திவிட முடியாது.
கட்டாயமாக – நிர்ப்பந்தத்தின் பேரில் செய்யப்படும் இத்தகைய எந்த நடவடிக்கையுமே சிறுபான்மை மக்களிடத்தில் இன்னும் அதிகமான வெறுப்பையும் பிரிந்து போகும் எண்ணத்தையுமே ஏற்படுத்தும்.
சிங்களம் மட்டும் ஆட்சிமொழி என்ற சட்டத்தைக் கொண்டுவந்தது எத்தகைய நிலையை ஏற்படுத்தியது என்பதை இலங்கை அரசு இன்னமும் புரிந்து கொள்ளவில்லைப் போலும். ஆனால், சிங்கள அரசின் நோக்கம் பிரிவினையைத் தடுப்பதோ ஒருமைப்பாட்டைப் பேணுவதோ அல்ல.
அதன் ஒரே நோக்கம் சிங்களத் தேசியத்துக்குள் அனைத்து இனங்களையும், அனைத்து மொழி பேசும் மக்களையும் உள்வாங்கிக் கொள்வது தான். பயங்கரவாதம் என்ற போர்வையில் தமிழர்களின் காப்பரணான விடுதலைப் புலிகளை வெற்றிகொண்ட பின்னர் நடத்திய விழாவில் பேசிய மகிந்த ராஜபக்ஸ - இனிமேல் நாட்டில் சிறுபான்மை இனங்கள் என்று எதுவுமில்லை என்று கூறியிருந்ததை மறந்து விடக்கூடாது.
அதாவது அனைத்து இனங்களையும் சிங்களத்துக்குள் உள்வாங்கி;க் கொள்வது தான் அவரது திட்டம். இது சாத்தியமானால் - தமிழ்த் தேசியமே இல்லாமல் போய், அனைவரும் சிங்களத் தேசியத்துக்குள் சிக்கிக் கொள்ள நேரிடும். இப்படியான நிலையில் இருந்து தனித்துவமான வகையில் தமிழ்த் தேசிய இனத்தால் போராட்டங்களை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்படும்.
இலங்கைத் தேசியம் அல்லது சிங்களத் தேசியத்துக்குள் அனைத்து மக்களையும் உள்வாங்கிக் கொண்டு தமிழ்த் தேசியத்தையும் முஸ்லிம் தேசியத்தையும் இல்லாது அழித்து விடுவதே அவர்களின் நோக்கம்.
இது வெறுமனே மகிந்தவின் கனவு மட்டுமல்ல. ஐ.தே.க.வின் எண்ணமும் கூட. போர் முடிந்த சில நாட்களின் பின்னர் ஐ.தே.க.வின் தரப்பில் இருந்து இது போன்றதொரு கருத்து முன்வைக்கப்பட்டிருந்ததை மறந்துவிட முடியாது. ஈழம் என்பது அரசியல் ரீதியாகத் தோற்கடிக்கப்படவில்லை. இன்னமும் ஈழம் என்ற பெயரில் அரசியல் கட்சிகள் இயங்குகின்றன. அனைத்;துத் தமிழ்க் கட்சிகளினது பெயர்களிலும் ஈழம் என்பது இருக்கிறது. எனவே, ஈழம் என்பதை அரசியல் ரீதியாகவும் தோற்கடிக்க வேண்டும் என்று கூறியிருந்தது ஐ.தே.க.
இது, இலங்கையின் இரு பெரும் சிங்களக் கட்சிகளினதும் பேரினவாதச் சிந்தனைகள் ஒன்றுபட்டிருப்பதை வெளிப்படுத்தும் விடயமாகும். தமிழ்த் தேசியத்தைச் சிதைத்து சிங்களத் தேசியத்துக்குள் தமிழ் மக்களின் வாழ்வை அடிமைப்படுத்துவதே சிங்களத்தின் திட்டம்.
புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா பிரிந்து சென்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை உருவாக்கினார். ஆனால், பின்னர் கருணாவைத் தனித்து இயங்க சிங்களத் தேசியம் விடவில்லை. வளைத்துப் போட்டு சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் உள்வாங்கிக் கொண்டது. பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பெயரை மாற்றும்படி மகிந்தவும் அவரது சகோதரர்களும் கருணாவும் பெரும் நெருக்கடிகளைக் கொடுத்தனர்.
ஆனால், அது சாத்தியமற்றதாகிப் போக, அந்தக் கட்சியையே இல்லாதொழிக்கும் வகையில் ஒவ்வொருவராக சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் கொண்டு வரும் இரகசிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நடவடிக்கைகளின் இறுதிக் கட்டத்தில் பிள்ளையானும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் உள்வாங்கப்படுவார். இது தான் சிங்களத் தேசியத்தின் சதி.
கிழக்கில் மோசடிகளின் மூலமும், கிழக்கைப் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிக்கொண்ட கட்சிகளின் முதுகில் சவாரி செய்தும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியைப் பிடித்தது. வெற்றிலையின் கீழ் பிராந்தியக் கட்சிகளைப் போட்டியிட வைத்து கிழக்கில் வெற்றி பெற்றது போன்று - வடக்கிலும் அழுத்தங்களைக் கொடுத்து தமிழ்க் கட்சிகளை அதேபோன்று போட்டியிட வைத்திருக்கிறார் மகிந்த ராஜபக்ஸ.
அரசாங்கத்தின் நிர்ப்பந்தங்களால், வடக்கில் ஈ.பி.டி.பி., சிறி ரெலோ, ஈரோஸ் போன்ற கட்சிகள் வெற்றிலைச் சின்னத்துக்குள் உள்வாங்கப்பட்டிருக்கின்றன. இந்தத் தேர்தலில் எப்படியாவது வெற்றிலையை வெற்றி பெறவைத்து தமிழ்த் தேசியம் சிதைக்கப்பட்டு விட்டது - சிங்களத் தேசியமே வடக்கிலும் கிழக்கிலும் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை சிங்கள மக்களுக்கும், வெளியுலகுக்கும் பிரகடனம் செய்வது தான் மகிந்தவின் திட்டம்.
வடக்கே பருத்தித்துறை தொடக்கம் தெற்கே தெய்வேந்திர முனை வரைக்கும் ஒரே கொடி - சிங்கக்கொடி தான் பறக்கிறது என்று கூறிப் பெருமைப்பட்ட சிங்களத்தின் அடுத்தகட்ட நடவடிக்கையே இது.
வடக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்து தெற்கே தங்காலை வரைக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தான் ஆட்சி செய்கிறது என்ற சிங்களத் தேசியத்தை உசுப்பிவிடும் முயற்சியில் இறங்கியிருக்கிறது மகிந்தவின் அரசு. சிங்களத் தேசியத்தின் இந்த இரகசியச் சதிக்கு தமிழ் அரசியல் சக்திகள், ஊடகங்கள் பலவும் பலியாகிக் கொண்டிருப்பது தான் வேதனையான விடயம்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகப் பலமமாக இருக்கும் வரைக்கும் அவர்களோடு இருந்து - அவர்களின் பின்னணியில் இயங்கிய இந்தச் சக்திகள் இப்போது சிங்களத் தேசியத்துக்கு வால் பிடிக்க முற்படுவது தான் வேடிக்கை.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அவசரகாலச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருந்திருக்கிறார். காரணம் கேட்டால், இடம்பெயர்ந்த வன்னி மக்களை குடியமர்த்த அரசின் உதவி தேவையாம். அதற்காகவே எதிர்க்கவில்லை என்று சப்பை நியாயம் சொல்கிறார்.
அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தித் தான் இலங்கை அரசு மூன்று இலட்சம் மக்களையும் ஆடு, மாடுகளைப் பட்டியில் அடைப்பது போன்று - முகாம்களுக்குள் அடைத்து வைத்திருக்கிறது என்பது அவருக்குத் தெரியாதா என்ன?
இதே அவசரகாலச் சட்டம் தான் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வுக்குத் தடையாக இருக்கிறதென்று புரியாதா என்ன?
ஆனாலும் இப்படியொரு நியாயத்தைச் சொல்லித் தப்பிக்க முனைகிறார் என்றால் தமிழ்த் தேசியம் தூங்கிக் கொண்டிருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறாரா அவர்?
அதைவிட மோசமானது - தந்தை செல்வாவும், பிரபாகரனும் தமிழ்த் தேசியத்துக்காகப் போராடி தோற்றுப் போனவர்களாம் - இனியும் தமிழ்த் தேசியம் பேசிப் பயனில்லை என்று கொச்சைப்படுத்துகிறார்.
அரசுக்குக் கால் பிடிப்பதும் வால் பிடிப்பதும் தான் தமிழ் மக்களைப் பாதுகாக்கும் என்று புதிய வழிகாட்ட முனையும் இவர்களெல்லாம் எப்படித் தலையெடுத்தார்கள் என்று ஒருமுறை திரும்பிப் பார்க்கட்டும்.
அதைவிட தமிழ்த் தேசியத்துக்காகப் போராடி மடிந்தவர்கள் எல்லாம் மடையர்கள் போன்று குறிப்பிடும் அவர் ஒரு முறை சிங்களத் தேசியத்துக்கு கால் பிடித்து விட்டவர்களால் என்னத்தைக் கிழிக்க முடிந்ததென்று ஒரு கணம் நினைத்துப் பார்க்கட்டும்.
சிங்களத்துக்குக் கால் பிடிப்பவர்களால் - ஒரே ஒரு நிமிடம் மட்டும், அகதி முகாம்களுக்குள் அடைபட்டுக் கிடக்கும் மக்களை வெளியே கொண்டுவந்துவிட முடியுமா?
அதையே செய்ய முடியாதவர்கள் - தமிழ்த் தேசியத்தைக் கொச்சைப்படுத்திக்கொண்டு – அரசுக்குப் பின்னால் நிற்கப் போகிறார்களாம். கூரையில் ஏறியே கோழி பிடிக்க முடியாதவர்கள் வானத்தில் ஏறி வைகுண்டம் போகப் போகிறார்களாம். இவர்களையெல்லாம் தமிழ்த் தேசியத்தின் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்ததற்காக யாரை நோக முடியும்?
சிங்களத் தேசியத்துக்குள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்வாங்கிக்கொண்டு தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கின்ற சதி இப்போது உச்சகட்டமாக நடந்து கொண்டிருக்கிறது.
வடக்கில் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கைகள் தெற்கில் வலுப்பெறுகின்றன. கலப்புக் கிராமங்களை உருவாக்க வேண்டும் என்று கேட்கிறார்கள் சிங்களத்தின் காவலர்கள்.
வடக்கில் மீள்குடியமர்வுக்கு முன்னதாக அங்கு சிங்கள மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்களை கண்டறியும் புதைபொருள் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிறார்கள். இவையெல்லாம் வடக்கும் கிழக்கும் தமிழ் மக்களின் மரபுவழித் தாயகம் அல்ல என்று காண்பிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளே.
முப்பதாண்டுப் போரின் பின்பாதிக் காலத்தில் தமிழ் மக்களின் பலம்மிக்க தலைமைச் சக்தியாக விளங்கும் விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததால் தமிழ்த் தேசியத்தை வரலாற்று ரீதியாக அழிக்கின்ற முயற்சிகள் எதுவும் கைகூடவில்லை.
இந்த இடைவெளியை நிரப்பி சிங்களத் தேசியமே இலங்கைத்தீவு முழுவதும் ஆதிக்கம் செலுத்தியது என்று உறுதி செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தக் கட்டத்தில் தமிழ்த் தேசியம் சற்று உறங்கிப் போனாலும் அதை விழுங்கி ஏப்பம் விட்டுக்கொண்டு போய்விடும் சிங்களம்.
இதனைத் தடுப்பதற்கு தமிழ் மக்கள் அனைவரும் ஒரே குரலாக ஒலிப்பது அவசியம். எம்மிடையே உள்ள வேறுபாடுகள் பலவீனங்களைக் களைந்து ஒரே குரலாக ஒலிப்பது தான் தமிழ்த் தேசியத்தை காப்பாற்ற தமிழீழத் தேசியத்துக்காகப் போராடிய, களமாடிய மாவீர்களின் கனவுக்கு கொடுக்கும் மரியாதையாக அமையும்.
நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ...?. நன்றி: ~நிலவரம்

Thursday, June 25, 2009

ஆபத்துக்குள்ளாகும் ஊடக சுதந்திரம்

நாட்டின் அரசமைப்பினால் எழுத்தில் உறுதிசெய் யப்பட்டிருக்கும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தில் பிரதானமானது ஊடக சுதந்திரம்.
இக்கட்டான நிலையில் நாடு சிக்கித் தவிக்கும் இன்றைய கட்டத்தில், நாட்டில் மிகவும் பாதிப்புக்குள்ளாகி யுள்ள முக்கிய பிரிவாக ஊடகத் துறையே உள்ளது.
உலகில் ஊடகங்களுக்கு மிகவும் ஆபத்து நிறைந்த நாடுகளின் வரிசையில் முன்னிலை இடம் இலங்கைக்கு கிடைத்திருக்கிறது.
ஊடக சுதந்திரத்தைப் பொறுத்தவரை தொண்ணூறு களின் ஆரம்பத்தில் காணப்பட்ட இருண்ட யுகமே இன்று நாட்டில் மீண்டும் ஏற்பட்டிருக்கின்றது என்பது வெளிப் படையானது.
கடந்த மூன்றரை ஆண்டுகால இந்த ஆட்சியில் ஊட கங்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட வன் முறைகள் மிகவும் மோசமானவை. இக்கொடூரங்களைப் புரிந்த குற்றவாளிகள் யாரும் சட்டத்தின் முன் நிறுத்தப் பட்டனர் எனத் தகவல் இல்லை. ஊடகங்களையும் ஊடக வியலாளர்களையும் தாக்கி வன்முறை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குபவர்களுக்கு சட்ட விலக்களிக்கும் சிறப்புரிமை வழங்கப்பட்டுள்ள நாடு இதுவோ என உலகம் இலங்கை யைப் பார்த்துப் பரிகசிக்கும் அளவுக்கு இங்கு ஊடக சுதந்திரம் கொடிகட்டிப் பறக்கின்றது(?).இந்த நிலையில், இப்போது ஊடக சுதந்திரத்துக்கு இறுதி ஆப்பு வைக்கும் எத்தனத்தை அரசு எடுத்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
ஊடக வெளியீட்டாளர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும், சிறை, அபராதம் போன்ற குற்றத் தண்டனைகளை விதிப்பதற்கு வழி செய்யும் பத்திரிகைப் பேரவைச் சட்டத்துக்கு (Press Council Law) மீள உயிர்கொடுத்து நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஷபக்ஷ தலைமையிலான அரசு எடுத்திருக்கும் தீர்மானமே, இலங்கையில் ஊடக சுதந்திரத்தின் சவப்பெட்டிக்கு அறையப்படும் இறுதி ஆணியாகக் கருதப் படுகின்றது.ஊடக சுதந்திரத்துக்கு நிரந்தர வேட்டு வைக்கும் விதத்தில் முன்னெடுக்கப்படும் இந்த முயற்சியை இலங்கைப் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம், இலங்கை பத்திரிகைகள் சமூகம், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், தமிழ் ஊடகங்களின் கட்டமைப்பு, முஸ்லிம் ஊடக அமைப்பு, ஊடக ஊழியர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, தெற்காசிய சுயாதீன ஊடக அமைப்பு (இலங்கைப் பிரிவு), சுதந்திர ஊடக இயக்கம் ஆகிய இலங்கையில் உள்ள ஊடக அமைப்புகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரே குரலில் எதிர்த்துக்குரல் எழுப்பி இருக்கின்றன.
ஊடகங்களின் குரல்வளையை முற்றாக நசுக்கி அடக்கும் முயற்சியின் ஆரம்பமே இந்தச்சட்டத்திற்கு மீள உயிர் கொடுக்கும் அரசின் தற்போதைய எத்தனம் என விசனத்தோடு அவை சுட்டிக்காட்டியிருக்கின்றன. மேற்படி அரசினால் மீள உயிர்கொடுக்கத் திட்டமிடப் படும் பத்திரிகைப் பேரவைச் சட்டத்தின் முன்னைய அனுபவம் மிக மோசமானது. ஊடக சுதந்திரத்தில் அது ஏற்படுத்திய பயங்கரப் பட்டறிவு மறக்கற்பாலானதல்ல. இந்தப் பின்னணியிலேயே 1994 ஒக்ரோபரில் இந்த சட்டத்தை செயலிழக்கச்செய்யும் விதத்திலான புதிய ஏற்பாடு ஒன்றைக் கொண்டு வருவதற்கு அப்போதைய அமைச்சரவை தீர்மானம் ஒன்றை எடுத்தது.
ஊடகவியலாளர்களையும், வெளியீட்டாளர்களையும் நெறிமுறைப்படுத்துவதற்கு சிறைத்தண்டனை விதிக்கும் சட்டங்களை விட, ஊடகவியலாளர்களையும் ஏனைய ஊடகத்தரப்புக்களையும் கொண்ட சுயகட்டமைப்பு முறையே சிறந்தது என அமைச்சரவை அச்சமயம் கருதியதால் அத்தகைய முறைமைக்கு வழி செய்யப்பட்டது. இதனடிப்படையில் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு (Press Complaints commission)) நிறுவப்பட்டு, அது வெற்றிகரமாக செயற்பட்டும் வருகிறது.
இதேசமயம், முன்னைய கொடூரமான போக்குடைய பத்திரிகைப் பேரவை சட்டத்தை செயலிழக்கச் செய்து மாற்று ஏற்பாட்டை முன்மொழியும் 1994 ஆம் ஆண்டின் அமைச்சரவைத் தீர்மானம் எடுக்கப்பட்டபோது அந்த அமைச்சரவையில் தற்போதைய அரசுத்தலைவர் ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷவும் மூத்த அமைச்சராக விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்குப்பின்னர், 2002 ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது, ஊடகவியலாளர்களுக்கு எதிரான அவமதிப்பு குற்றச்சாட்டுகளுக்காக அவர்களைக் கிரிமி னல் குற்றப்பொறுப்பாக்கும் சட்டமுறைமை அடியோடு நீக்கப்பட்டு ஊடக சுதந்திரத்துக்கு மெருகூட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஊடகத்துறையினராலும், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தில் ஈடுபாடு கொண்டுள்ள மனித உரிமை ஆர்வலர்களாலும் இந்த நடவடிக்கை விதந்துரைக்கப்பட்டு, வரவேற்கப்பட்டது.
இதற்கான சட்டத்திருத்தம் 2002 ஜுனில் நாடா ளுமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டபோது அது அப் போதைய அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் தரப்பினால் ஏகம னதாக வரவேற்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அச்சமயம் எதிர்க்கட்சித்தலைவராக விளங்கி இந்த முயற்சிக்கு முழு ஒத்துழைப்பும் ஆதரவும் கொடுத்தவர் இப்போதைய ஆட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தான்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்ற ஆதிக்கப் பதவியைக் கையில் எடுக்கும் வரை மனித உரிமைகளுக்காகவும் ஊடக சுதந்திரம் உட்பட்ட கருத்து வெளியிடும் சுதந்திரத்துக்காகவும் போராடிய "மனித உரிமைப்போராளி யாக" தன்னை உலகிற்கு இனங்காட்டிய இந்தத் தலைவரின், இப்போதைய நோக்கும் போக்கும் இப்போதுதான் மெல்லமெல்ல வெளிப்படுகின்றது போலும்....!
முன்னாள் மனித உரிமைப்போராளியின் ஆட்சி அதி காரத்தில் இப்படி மனித உரிமைகள் சவக்குழிக்குள் போவது வெளியாருக்கு ஆச்சரியத்தைத் தருவதாக இருந்தாலும் ஏனையோருக்கு எதிர்பார்க்கப்பட்ட விடயம் தான். கட்டுமட்டில்லாத அதிகாரம் கைக்கு வருவது இத்தகைய நிலையை நோக்கித்தான் யாரையும் நகர்த்தும் என்பது ஊகிக்கத்தக்கதே.
நன்றி
உதயன்

Tuesday, June 23, 2009

அதிகாரப் பகிர்வுத் திட்டம் "அவுட்"?

தெற்கிலிருந்து எழுந்துள்ள மூன்று குரல்கள் கருத்துக்கள் இன்று அவசரமாகவும், அவசியமாகவும் நோக்கப்பட வேண்டியவையாக உள்ளன.

ஒன்று ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ஸ அமர சிங்க கூறியது. "அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த முயன்றால் அது தமிழர்களை யும், முஸ்லிம்களையும், சிங்களவர்களையும் தனித் தனியே பிரித்து மீண்டும் அத்தரப்புகள் இடையே போராட்டம் ஒன்றுக்கேவித்திடும். அதனால் அந்தத் திட்டத்தை முழு மூச்சாக எதிர்ப்போம்." என்கிறார் அவர்.அடுத்தது தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் வண. தம்பர அமில தேரர் கூறிய கருத்து. "பிரிவினைக்கு இடமளிக்கும் அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசு முனையுமானால் முயலுமானால் எமது உயிரைப் பணயம் வைத்து, எந்தத் தியாகத்தையும் செய்து, அத்துரோகத்தனத்தை முறியடிக்கத் தயங்கமாட்டோம்"என அமில தேரர் கூறியிருக்கின்றார்.

மூன்றாவது கருத்து விடுதலைப் புலிகள் இயக் கத்தை அழிப்பதில் வெற்றிகண்ட "மாவீரர்"எனத் தென்னிலங்கையால் போற்றப்படும் இராணுவத் தள பதி ஜெனரல் சரத் பொன்சேகா கூறியது."வடக்கு மாகா ணத்திற்கு விசேட அரசியல் தீர்வு ஏதும் அவசிய மில்லை. படையினர் தியாகம் செய்து பெற்ற வெற்றியை அரசியல் தீர்வு என்ற பெயரில் காட்டிக் கொடுக்கக் கூடாது."என்று உபதேசம் செய்திருக்கின்றார் அவர்.

அவர் கூறிய இந்தக் கருத்து, அரசியல் தலைவர் களுக்கான ஆலோசனையா, உபதேசமா, வழிகாட்டலா அல்லது பணிப்புரையா என்பது தெரியவில்லை.ஆனால் அரசியல் தலைமைத்துவம் கையாள வேண்டிய விவகாரங்களை இராணுவத் தலைமை தனது கையில் எடுக்கும் இந்தப் போக்கு ஆரோக்கிய மானதல்ல என்பது மட்டும் உண்மை.இராணுவத் தளபதியின் இந்தக் கருத்து சில சமயங் களில் அரசுத் தலைமையின் கருத்தைப் பிரதிபலிப் பதாகவும் இருக்கலாம். சில சமயம் முரண்படுவதாக வும் இருக்கலாம்.

ஆனால் விடுதலைப் புலிகள் இயக் கம் என்ற எதிரியை அழிப்பதற்காகக் கட்டுமட்டில்லாத அளவுக்கு வலுப்படுத்தப்பட்டிருக்கும் இலங்கை யின் இராணுவக் கட்டமைப்பின் தலைமையிடமிருந்து தமிழ் மக்களுக்குத் தீர்வு ஒன்று அவசியமா, இல்லையா என்ற சர்ச்சை கிளப்பப்படுவது நல்ல சகுனம் அல்ல என்பதைச் சுட்டிக்காட்டுவது பொருத்தம்.

அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் கீழ் வடக்கு, கிழக்குத் தமிழர்களுக்கு அற்ப, சொற்ப அதிகாரங்கள் பெயரளவிலெனும் வெறும் சட்டக் கடதாசிகளிலேனும் பகிரப்பட்டுள்ளன என்பது உண்மைதான். அவை, தமிழர்களின் நீதி, நியாயமான எதிர்பார்ப்பாக அமையும் அபிலாஷைகளை நிறைவு செய்யாவிட்டாலும் கூட, அவற்றில் அதிகாரப் பகிர்வு குறித்து பிரஸ்தாபிக்கப்படுகின்றது என்பது மறுக்கப்படக் கூடியதல்ல.

அரசமைப்பின் இந்த 13 ஆவது திருத்தம் ஒன்றும் புதிதாகக் கொண்டுவரப்படும் ஒரு விடயமும் அல்ல. இருபத்தியொரு ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கை யின் உயர் சட்டம் என மதிக்கப்படும் அரசமைப்பில் உரிய சட்ட வழிகளில் சேர்த்துக்கொள்ளப்பட்ட திருத்தமேஅது.அந்த உயர் சட்டத்தில் இருப்பதை நடைமுறைப் படுத்தாமல் இருப்பதன் மூலம் அரசமைப்பையே கேலிக்கு உள்ளாக்கி, மிதித்து வந்துள்ளன இதுவரை ஆட்சிக்கட்டில் இருந்து வந்த அரசுகளும், அதிகார மையங்களும்.

நாட்டின் உயர் சட்டத்தில் இருப்பதை நடைமுறைப்படுத்த வேண்டியது அரசுகளின் முக்கிய கடமையும் பொறுப்புமாகும்.

அத்தகைய அரசமைப்பு ஏற்பாடுகளை அமுலில் உள்ள யாப்பின் பிரிவுகளை நடைமுறைப்படுத்தக் கூடாது என்கிறார் ஒரு கட்சித் தலைவர். உயிரைத் தியாகம் செய்தாவது அதை நடைமுறைப்படுத்துவ தைத் தடுப்போம் எனச் சூளுரைக்கிறார் ஒரு மதத் தலைவர்.அந்த யாப்பில் உள்ள அதிகாரப் பரவலாக்கலை, யாப்புக்கு அமைய நடைமுறைப்படுத்துவதைக் கூட இராணுவத் தளபதியின் கருத்து எதிர்க்கின்றது. இந்தவகையில் பார்த்தால் இராணுவத் தளபதியின் கருத்து அரசமைப்பு ஏற்பாடுகளுக்கு விரோதமானது என்றும் கூட அர்த்தப்படுத்தக்கூடியதாகும்.விடுதலைப் புலிகளை வெற்றிகொண்ட பின்னர், தெற்கில் அதன் அரசுத் தலைமையிடமிருந்து வடக் கின் அபிவிருத்தி பற்றியே அதிகம் பேச்சு வெளிப்படுகின்றது. அதிகா ரப் பரவலாக்கம், சிறுபான்மையினரின் அபிலாஷைகளை நிறைவுசெய்தல், தீர்வு யோசனைகள் போன்றவை குறித்தெல்லாம் அமுக்கி வாசிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் மறுபக்கத்தில் பௌத்த சிங்களத் தீவிர அமைப்புகள் மற்றும் இராணுவத் தலைமைகளி டமிருந்து அதிகாரப் பரவலாக்கம் என்ற விடயமேஅர்த்த மற்றது, அபத்தமானது என்ற சாரப்பட முன்வைக்கப் படும் தீவிரப் போக்குக் கருத்துகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் பேச்சு பகிரங்கமாக வெளிப்படு கின்றது.
இவை, விடுதலைப் புலிகளின் அழிவு பற்றிய அரசின் அறிவிப்போடு சிறுபான்மையினரான தமிழர் களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கும் திட்டமும் எண் ணமும் கூட செத்துப்போய்விட்டன என்ற கருத்தில் தென்னிலங்கை இருக்கின்றமையையே எடுத்துக்காட் டுகின்றன.
நன்றி
உதயன்

Sunday, June 21, 2009

நாடு கடந்த அரசாங்கம்

நாடு கடந்த அரசாங்கம் என்ற சொல் தற்போது இலங்கை அரசியலிலும் கேட்கத் தொடங்கியுள்ளது. விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்டு நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு பாதுகாக்கப்பட்டுவிட்டதாக இலங்கையரசு அறிவித்துள்ள நிலையிலேயே தற்போது இந்த "நாடு கடந்த அரசாங்கம்' என்ற சொல் அரசுக்கு புதிய தலையிடியைக் கொடுத்துள்ளது.

"நாடு கடந்த அரசாங்கம்' என்ற சொற்பதம் குறித்து அறிந்து வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்தளவாகவே காணப்படுகின்றது. "நாடு கடந்த அரசாங்கம்' என்றால் என்ன? அதன் செயற்பாடுகள் எவை? அந்த நாட்டுக்கான அங்கீகாரம் எப்படிக் கிடைக்கும், அந்த நாட்டின் தலைவர் யார்? என்பது போன்ற பல கேள்விகள் இன்று இலங்கை மக்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.

எனவே, நாடு கடந்த தமிழீழ அரசு தொடர்பாக ஆராவதை விடுத்து பொதுவாக "நாடு கடந்த அரசு' என்றால் என்னவென்பதை பார்ப்போம்.

இன்று உலகில் பல, நாடு கடந்த அரசாங்கங்கள் (Provisional Transnational Government) செயற்பட்டு வருகின்றன. இந்த நாடு கடந்த அரசின் முதல் வித்தாக பெலாரஷ்யன் தேசிய குடியரசு காணப்படுகின்றது.

நாடு கடந்த அரசாங்கம் என்பது அரசியலில் ஈடுபடும் அல்லது ஒரு குழுவினர் சொந்த நாட்டில் தவிர்க்க முடியாத காரணத்தால் வெளியேறி வெளிநாடு ஒன்றில் அதிகாரம் மிக்க தனி அரசொன்றை நிறுவுவதாகும். காலப்போக்கில் இந்த அரசாங்கமானது தனது சொந்த நாட்டிற்கு திரும்பிச் சென்று ஆட்சி அதிகாரங்களை மீளப்பெறும் என்ற நோக்கில் அமைக்கப்படுவதே இந்த நாடு கடந்த அரசாங்கமாகும்.

சட்டபூர்வமற்ற முறையில் இராணுவ பலத்தை பிரயோகிப்பது, சித்திரவதைக்காக மக்களைக் கடத்துவது, இன அழிப்பு செவது, பெண்கள் மீதான பாலியல் வன்முறை,சிறுவர்களை கடத்துவது போன்ற கொடூரங்களும் குறிப்பிட்ட இனத்தின் அரசியல் தலைவர்களை புறந்தள்ளல் போன்ற நிகழ்வுகளும் நாடு கடந்த அரசொன்றை நிறுவ சர்வதேச சட்ட மரபு நெறிகளில் இடம் வழங்குகின்றன.

இரண்டாம் உலகப் போரில் பல ஐரோப்பிய நாடுகளை ஜேர்மனிய சர்வாதிகாரி ஹிட்லரின் நாசிப்படைகள் கைப்பற்றியதனால் பல ஐரோப்பிய நாடுகள் பிரிட்டனில் இவ்வாறான நாடு கடந்த அரசாங் கத்தை நடத்தி வந்தனர். இதனால் அவர்களின் தேசியம் பாதுகாக்கப்பட்டது.

1920ஆம் ஆண்டில் பெலாரஷ்யன் என்ற அமைப்பு தனது நாடு பெலாரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட பின்னர் இன்றுவரை நாடுகடந்த அரசாங்கமாகவே இயங்கிவருகின்றது. இதேபோன்று திபெத்தை சீன அரசு ஆக்கிரமிப்பு செதபோது அந்நாட்டின் ஆன்மிகத் தலைவர் தலாலாமா இந்தியா சென்று இன்றுவரை திபெத்தின் அரசை ஒரு நாடு கடந்த அரசாக நடத்தி வருகின்றார்.

உலகில் இன்றுவரை 11இற்கும் மேற்பட்ட நாடு கடந்த அரசாங் கங்கள் செயற்பட்டு வருகின்றன.

அப்காஷியா சுயாட்சிக் குடியரசு (1993), பெலாரஷ்யன் தேசிய குடியரசு (1920), கபின்டா குடியரசு (1975), செச்சென் குடியரசு (2000), எதியோப்பியா அரச சபை (1993), ஈரான் ஏகாதிபத்திய அரசு (1979), லாவோ ஏகாதிபத்திய அரசு (1975), சகாராவி அரபு ஜனநாயகக் குடியரசு (1976), சேர்பியன் கரஜினா குடியரசு (2005), மலுகு செலாற்றன் குடியரசு (1950), மத்திய திபெத்திய நிர்வாகம் (1959) போன்றவை நாடுகடந்த அரசாங்கங்களாக செயற்படுகின்றன.

இந்த நாடு கடந்த அரசாங்கங்களை கட்டுப்படுத்தி வைத்திருக்கும் நாடுகளாக அப்காஷியா, பெலரெஸ், அங்கோலா, ரஷ்யா, எதியோப்பியா, ஈரான், லாவோ, மொறாக்கோ, குரோஷியா, இந்தோனேசியா, சீனா போன்ற நாடுகள் காணப்படுகின்றன.

இவ்வாறான நாடு கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளாக, சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து செயற்படுவது, தனக்கென ஒரு சட்ட வரைமுறைகளை வரையறுப்பது, தேசியத்தின் சட்டமுறைகளை பாதுகாப்பது, ஒரு தேசிய இராணுவத்தை பாதுகாப்பது அல்லது கட்டி எழுப்புவது, இராஜதந்திர ரீதியாக அல்லது அரசியல் ரீதியாக நாட்டின் தேசியத்தை ஒன்றுபடுத்தல், தேசிய அடையாள அட்டை வழங்குதல், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை உருவாக்குதல், தேர்தல் நடத்துதல் போன்றவை உள்ளன.

நாடு கடந்த அரசாங்கமொன்றை அமைக்க ஏதாவது ஒரு வெளிநாட்டின் அங்கீகாரம், அல்லது அனுமதி தேவை. அவ்வாறு கிடைக்குமிடத்து அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு பாதிப்போ இடையூறுகளோ ஏற்படாதவிடத்து நாடு கடந்த அரசாங்கமொன்றை அந்த நாட்டில் நிறுவ முடியும்.

இவ்வாறு வெளிநாடுகளில் அமைக்கப்படும் நாடு கடந்த அரசாங்கமொன்றினால் தமது அரசின் தூதுவர்களை நியமிக்க முடியும். வெளிநாட்டு அரசாங்கங்களுடன் ஒரு நாட்டு அரசாங்கம் என்ற தகுதியுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடமுடியும். ஒரு நாட்டுக்குரிய சகல அதிகாரங்கள், நடைமுறைகளும் இந்த நாடு கடந்த அரசாங்கங்களுக்கும் உண்டு.

பல்வேறு நாடுகளில் தஞ்சமடைந்துள்ள தமது சமுதாயத்தினை அரசியல், சமூக, பொருளாதார, கலாசார, பண்பாட்டு ரீதியில் பலப்படுத்தவும் தமது சொந்தமண்ணில் அரசுரிமையை பெறுவதற்கும் சர்வதேச சவால்களை அதே ரீதியில் அணுகுவதற்கும் இந்த நாடு கடந்த அரசாங்கம் வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றது.

இதேவேளை ஒரு நாடு கடந்த அரசாங்கமானது சிறப்பாக செயற்பட ஒரு நாட்டின் அனுமதி அல்லது அங்கீகாரம் தேவை. அனுமதி அல்லது அங்கீகாரம் தரும் நாடு சில வேளைகளில் அவற்றை விலக்கிக் கொள்ளும் பட்சத்தில் இந்த நாடு கடந்த அரசாங்கத்தின் அதிகாரம் இழக்கப்படக் கூடும்.

இவ்வாறானதொரு அரசாங்கத்தையே அமைக்கப் போவதாக தற்போது விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பானவரெனக் கூறப்படும் கே.பத்மநாதன் அறிவித்துள்ளதுடன் நாடுகடந்த அரசாங்கத்தை உருவாக்குவதற்கான செயற்குழு ஒன்றையும் விடுதலைப் புலிகளின் சட்ட ஆலோசகர்களில் ஒருவராகவிருந்த விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தலைமையில் அமைத்துள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

1976 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட வட்டுக்கோட்டை பிரகடனத்தினதும் 1977 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தமிழ் மக்களால் ஒரு மனதாக வாக்களித்து வரவேற்கப்பட்டதும் பின்னர் 1985 ஆம் ஆண்டில் திம்புப் பிரகடனத்தில் வெளிப்படுத்தப்பட்டதும் 2003 ஆம் ஆண்டில் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரப் பகிர்வின் தளமாக அமைந்துள்ளதுமாகிய தமிழர் ஓர் தேசிய இனம், வடக்கு, கிழக்கு தமிழரின் தாயக நிலம், ஈழத்தமிழரின் தன்னாட்சி உரிமை போன்ற அடிப்படைக் கோட்பாடுகளை, ஈழத்தமிழரின் அரசியல் அபிலாஷைகளின் ஆதார சுருதியாக ஏற்றுக்கொள்ளும் அனைத்துத் தமிழ்மக்களையும் ஓரணியில் ஒன்றிணைப்பதே இந்த "நாடு கடந்த அரசாங்கம்' என்ற அறிவிப்பின் நோக்கமாகவுள்ளது.

ஆனால் இலங்கை அரசாங்கமோ " இது ஒரு கற்பனை'யென்றும் இதனை கற்பனையில் வைத்தே தாம் அழித்துவிடுவோம் என்றும் கூறியுள்ளது. அத்துடன் சகலநாடுகளிலுமுள்ள தமது வெளிநாட்டுத் தூதுவர்களை இது தொடர்பில் அறிவுறுத்தியுள்ளதுடன் இத்திட்டத்தை முறியடிக்க சகலவித இராஜதந்திர நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.

நன்றி - தினக்குரல்

முதன்மை பெறவேண்டிய மற்றிரண்டும்.....

குடாநாட்டின் கடற்பிரதேசத்தில் தொழில் செய்வதற்கு காலத்துக்குக்காலம் விதிக்கப்பட்டு வந்த தடைகள் யாவும் நேற்றோடுநீக்கப்பட்டு விட்டன. குன்றிப்போயிருந்த குடாநாட்டு மீனவர் களின் ஜீவனோபாயம் மீண்டும் துளிர்ப்பதற்கும், இப்பிரதேசத்தின்கடல்வளம் அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உயிர்ப்பூட்டவும் அரசாங்கம் வகை செய்திருக்கிறது. இந்தப் பிரதேசத்தின்ஒட்டு மொத்தப் பொருளாதார வளர்ச்சிக்கு வலுச்சேர்க் கக்கூடிய ஓர் அத்தியாயம் திறக்கப்பட்டிருக்கிறது.
இதேபோன்று, தெற்கிலிருந்து அத்தியாவசிய மற்றும் பாவனைப் பொருள்களை ஏ9 பாதையூ டாகக் கொண்டுவரவும், குடாநாட்டின்உற்பத்தி களை இங்கிருந்து அங்கே எடுத்துச் செல்லவும் வாக னப் போக்குவரத்தும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று குடாநாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்திசெய்யவும், இப்பிரதேசத்தின் உட்கட்டுமானப்பணிகளைத் தூக்கிநிறுத்தவும் தான் துரிதமாகச் செயற்படப் போவதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. குடாநாட்டு மக்களுக்குமட்டுமன்றி வடமாகாணத் திலுள்ள ஐந்து மாவட்டங்களுக்குமான மீள்குடிய மர்வு மற்றும் அபிவிருத்திக்கென, விசேட செய லணிக்குழுவை நிறுவியுள்ளார் ஜனாதிபதி.
வடமாகாணத்தின் அபிவிருத்தியிலும், மக் களின் வாழ்க்கை நிலையிலும் முறையேவளர்ச் சியும் முன்னேற்றமும் தேவை. அவற்றைமுன்னு ரிமை கொடுத்து செயற்படுத்துவதற்கு அரசுமுன் வந்திருப்பது வரவேற்கத்தக்கது. தமிழ் மக்கள் மீது அரசுஇந்தளவுகரிசனையைக் காட்டுவது பாராட்டப்பட வேண்டியதே.
எனினும் அரசாங்கத்தின் இப்போதைய துரிதசெயற்பாடும் குடாநாட்டு மக்கள் மீதான அக்கறையும் வவுனியா முகாம்களில் உள்ள தமதுஇரத்த உறவுகளின் நிலையால் உண்டாகியுள்ள சோகத்தையும் மன விரக்தியையும் போக்கிவிடாது. அவர்களை முகாம்களிலிருந்து விடுவித்துச் சொந்த இடங்களில் விரைந்து வாழ வைப்பதிலும் இயல்பு நிலையை உருவாக்கு வதிலும் மனிதாபிமானத்துடன்கூடிய வேகம்தேவை.
குடாநாட்டில் வாழும் அவர்தம் இரத்தத்தின் இரத்தங்கள், குடும்ப உறவுகள் மனதுக்குள் அழுது கொண்டிருக்கும் சோகத்தைநீக்குவதற்கு வன் னிமக்கள்படும் இன்னல்களைப் போக்கி, அர்த்த முள்ள புதுவாழ்வு வழங்குவதற்கு அரசுஇதய சுத்தியு டனும்நேர்மையுடனும் உகந்த நடவடிக்கைகளை உடன் மேற்கொள்வதும் முதன்மை பெறவேண்டிய ஒன்றாகும்.
இன்னொரு புறத்தில் தமிழ் மக்கள் தங்களுக்குரிய சுதந்திரத்தை அனுபவிப்பதற்கான, தாமும் இந்நாட்டு மக்கள் என்று மனம் நிறைந்து சமபிரஜைகளாகவாழ்கி றோம் என்ற உணர்வை, திருப்தி நிலையை எட் டிக் கொள்வதற்கான நம்பிக்கை தரும் ஏற்பாடு களைக் காணோம். அதற்கு வழங்கப்படவேண்டிய முன்னுரிமையை முடக்கிவிட்டு, ஒதுக்கிவிட்டு அர சாங்கம் வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் என்றதுரித செயற்பாடுகளில் ஈடுபட்டிருப்பது தமிழ் மக் கள் மத்தியில் சஞ்சலத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.
வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கை நிலையை, பொருளாதார மீட்சியை துடிதுடிப்புடன் செய்வது போன்று, அரசியல் தீர்வுமுயற்சியிலும் தீவிர மாக, வேகமாகச் செயற்படுவதற்கான சமிக்ஞை எதனையும் காணோம் என்ற ஏக்கம் தமிழர் மனங் களைவாட்டுகிறது.
அந்தத் திசையில் அசமந்தமாக இருந்து கொண்டு, காலத்தைக் கடத்திக்கொண்டு, வடக்கு மக்களின் வாழ்வாதாரங்களைப்பெருக்கவும், உட் கட்டுமான வளர்ச்சிக்கு உயிரூட்டவும் செயற்படு வது நிரை ஒழுங்குமாறி, முதன்மைபெற வேண்டி யதைஒளித்துக்கொண்டு காலம் கடத்தும் உத் தியோ என்று தமிழ் மக்களை சந்தேகம் கொள்ள வைப்பது தவிர்க்க முடியாததே; இயல்பே.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய, அவர்களும் பூரண சுதந்திர முள்ள மனிதர்களாக வாழ்வதற்குவகை செய்யும் தீர்வு ஒன்றை முன்வைக்க ஏன் அரசுமனதார முனையக்கூடாது?
வரலாற்றுக் காலந்தொட்டு தங்கள் மண்ணில் வாழ்ந்துவரும் பூர்வீகத்தைக் கொண்டுள்ள தமிழ் மக்கள், தங்களைத் தாங்களேஆள்பவர்களாகவும் தாமும் இந்நாட்டுப் பிரஜைகள் என்று உணர் பவர்களாகவும் ஒன்றுபட்டு வாழ்வதற்கு வழிசெய்யக்கூடியஅரசியல் முறைமைகள் சுயநிர்ணயம் சார்ந்த முறைகளை தாராள மனதுடன் செயற் படுத்துவது குறித்துஅரசுசிந்திக்கக்கூடாதா?
நன்றி - உதயன்

Thursday, June 18, 2009

இனப்படுகொலை நிகழ்த்திய இந்தியா! - சர்வதேச அரசியற் பின்புலம்

மேற்குலக ஒழுங்கமைவானது ஒரு குறித்த தெளிவான வடிவத்திற்குள் உருவமைக்கப்பட்ட காலமான, 1949 இற்குப் பின்னர் இப்போது முதற் தடவையாக அதன் சர்வதேச வரிசைப்படுத்தலானது புதிய நிலைகளை நோக்கி நகரவாரம்பித்திருக்கிறது. இன்று மறுபடி உலகம் ஒழுங்கமைக்கப் படுகிறது.

பெரும் மூலதனத்தைச் சொந்தமாக வைத்திருக்கும் ஆதிக்க வர்க்கத்தின் தனிப்பட்ட நலன்களை மட்டுமே அடிப்டையாக முன்வைத்து இந்த ஒழுங்கமைப்பு அரசியல் உலகப் படத்தை மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறது.

மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி நகரும் பொருளாதார ஆதிக்கம், மேற்கு அதிகாரத்தால் தவிர்க்க முடியாத, புதிய பொருளாதாரச் சுற்றை ஆரம்பித்து வைத்திருக்கிறது. 1949 இல் உறுதியான பொருளாதாரச் சுற்று, 1970 களில் நெருக்கடிக்குள்ளான போது மறுபடி ஒழுங்கமைக்கப்பட்டது. பிரித்தானியப் பிரதமர் மாகிரட் தட்சர் மற்றும் அமரிக்க அதிபர் ரொனாட்ல் ரீகன் ஆகியோரது தலைமையில் உருவான இவ்வமைப்பு முறையானது புதிய தாராளவாதப் பொருளாதரக் கொள்கையை உருவாக்கியது.

இதன் வளர்ச்சிக் கட்டமான உலகமயமாதல் என்ற ஒழுங்கமைப்பு இன்று தவிர்க்க முடியாத அமைப்பியல் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது.

ஒவ்வொரு தடவையும் உலகம் புதிதாக ஒழுங்கமைக்கப்படும் போது, அதன் முதற் பகுதியானது, படுகொலைகளும், ஆக்கிரமிபுக்களும், அவலங்களும், அசிங்கங்களும் நிறைந்ததாகவே காணப்பட்டது.

ஆயிரக்கணக்கில் மனித் உயிர்களைக் கொன்று குவித்துவிட்டு நெஞ்சை நிமிர்த்தி அதை வெற்றியெனக் கொண்டாடும் இலங்கை அரசின் இன்றைய நிலையானதும் அதற்கு இந்திய அரசு பின்புலமாக அமைவதும் இந்தப் புதிய ஒழுங்கமைவை அடையாளப்படுத்துகிறது.

இந்தச் சர்வதேச மாற்றங்களுக்கு முதல் பலிதான் 50 ஆயிரம் அப்பாவிப் பொதுமக்கள். அதிகாரத்திற்கும் ஏகத்துவத்திற்கும் எதிரான எந்த எதிர்ப்பியக்கமும் இந்த சர்வதேச மாற்றத்தின் புதிய அணிசேர்க்கைகளை நிராகரித்து வெற்றிகொள்ள முடியாது.

அமரிக்க அணியின் தலைமையிலான ஏகாதிபத்தியம் என்பது இன்றைக்குப் பல துருவ பிராந்திய ஏகத்துவப் பரவல்களாக விரிவடைந்து கொண்டிருக்க, புதிய அரசியற் சூழலை நோக்கி உலகம் நகர்த்தப் பட்டுக்கொண்டிருக்கிறது.

ஆசியாவின் புதிய அதிகாரங்கள், ரஷ்யாவின் மறு உருவாக்கம், அமரிக்க அணியின் பொருளாதாரச் சரிவு, இலத்தீன் அமரிக்காவின் மேற்குல எதிர்ப்பியல், மத்திய கிழக்கின் புதிய அணி சேர்க்கை என்பவையெல்லாம் இப்புதிய உலக ஒழுங்கு விதியின் பிரதான அரசியற் பொருளாதாரக் கூறுகள்.

மேலெழுந்துள்ள சீனா, இந்தியா போன்ற நாடுகளின் சர்வதேச சக்திகளானது 20ம் நூற்றாண்டில் அமரிக்காவின் சக்திக்கும், 19ம் நூற்றாண்டின் ஒருங்கிணைந்த ஜேர்மனியின் சக்திகும் இணையானதாக உருவாகிக் கொண்டிருக்கிறது என்று கூறும் அமரிக்க தேசிய உளவுத் துறையின் அறிக்கையானது, இந்தப் புதிய சர்வதேச சக்திகள், கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக நிலவிவந்த புவிசார் அரசியலின் தன்மையை மாற்றத்திற்குள்ளாகிவிடும் என்கிறது.

அமரிக்க முன்னாள் இராஜங்கச் செயலாளர் ஹென்றி கிசிங்ஸர் கூறுவது போல்,அமரிக்க முன்னைப் போல சக்திவாய்ந்த அர்சாக இல்லாது போனாலும், புதிய ஒழுங்கமைப்பை உருவாக்குவதில் பிரதான பாத்திரம் வகிக்கும் என்கிறார்.
அமரிக்காவும் ஐரோப்பாவும் தனது அதிகார பலத்தின் ஒரு பகுதியை இழந்தாலும், இவ்வொழுங்கமைப்பில் தம்மை இணைத்துக் கொள்வதே தம்மைத் தக்க வைத்துக்கொள்வதற்கான ஒரே வழிமுறை என உணர்ந்து கொண்டுள்ளன.

28/03/2009 இல் பிரித்தானியாவில் நடந்தேறிய G20 மாநாட்டில் பல வெளிப்படையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டலும், அமரிக்க அதிபர் ஒபாமாவின் நோக்கம் என்பது சீனாவுடனான பேச்சுக்களுக்கும் உடன்படிக்கைகளுக்குமான மீளமைப்பே என்பதை பிரித்தானிய எகொனமிஸ்ட் சஞ்சிகை கூறுகிறது.

உலக நிதியொழுங்கு உலக மூலதனக் கட்டுப்பாடு என்பன பற்றியே அதிகம் கவனம் செலுத்தப்பட்ட இம் மாநாட்டில், இதுவரை உலகம் கண்டிராத புதிய அங்கீகாரங்களும், அணிசேர்க்கைகளும் வெளிப்படையாகத் தெரிந்தன.

உலகப் பொருளாதார ஒத்துழைப்பு, சர்வதேச நாணய நிதியத்தின் உதவி போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும் இவை அனைத்தினதும் சாராம்சமாக அமைந்திருந்தது, சீனாவினதும் இந்தியாவினதும் தலைமையில் உருவாகிக்கொண்டிருக்கும் ஆசியப் பொருளாதாரத்திடமிருந்து மேற்குலகம் எதிர்பார்க்கும் மூலதன ஒத்துழைப்பேயாகும்.

தெற்காசியாவின் ஒரு மூலையில் கொடிய ஆயுதங்களைக் கொண்டு அப்பாவி மக்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது மா‍ நாடு இரண்டு பிரதான முடிபுகளை வெளிப்படுத்திற்று.

1. ஆசியப் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் துருவ வல்லரசுகளான இந்தியா மற்றும் சீனா போன்றவற்றிற்கான மேற்குலகின் அங்கீகாரம்.
2. இந்த அங்கீகாரத்தின் அடிப்ப்டையில் இவற்றிடமிருந்து எதிர்பார்க்கப்படும் பொருளாதார ஒத்துழைப்பு.
புதிய ஆசியப் பொருளாதாரத்தின் உருவாக்கம்.
அமரிக்க தேசிய உளவுத்துறை ஆலோசனைக் குழுவிலிருந்து ஸ்ரிகிலிட்ஸ், அமேர்திய சென் போன்ற செல்வாக்கு மிக்க பல பொருளியலாளர்களின் கருத்துகளின் அடிப்படையில் 2020 இல் இந்த ஆசியப் பொருளாதாரம் திட்டவட்டமான அரசியல் பொருளாதார எல்லைகளுடன் உருவாகிவிடும் என எதிர்வு கூறப்படுகின்றது.

ஆக, சர்வதேச அரசியல் சூழ் நிலை என்பது,

1. அமரிக்க ஐரோப்பிய அணியின் பொருளாதாரச் சரிவு.

2. சீனா இந்தியா போன்ற துருவ வல்லரசுகளின் பொருளாதார வளர்ச்சி.

3. ஏனைய செல்வாக்குச் செலுத்தும் துருவ வல்லரசுகளாக வளர்ச்சியடையவல்ல ரஷ்யா பிரேசில் போன்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்ச்சியும்.

4. இவ்வல்லரசுகளிடையேயன அரசியல் பொருளாதார முரண்கள்.என்பவற்றை அடிப்படையாக முன்வைத்தே ஆராயப்பட வேண்டும்.

2020 இல் சீனாவின் தேசிய உற்பத்தி என்பது ஐரோப்பாவின் ஒவ்வொரு தனித்தனி அரசுகளின் தேசிய உற்பத்தியை விட அதிகமாகும் என்பதையும் இந்திய உற்பத்தி என்பது ஐரோப்பிய சராசரி உற்பத்தியிலும் அதிகமாகும் எனபதையும் தேசிய உளவுத்துறையின் ஆலோசனை மையம் எதிர்வுகூறுகிறது.

2020 இன் சீனாவினுடைய எதிர்பார்க்கப்படும் சனத்தொகையானது 1.4 பில்லியனாகவும் இந்தியாவினுடையது 1.3 பில்லியனாகவும் எதிர்வு கூறப்படும் நிலையில் இவ்விரு நாடுகளினதும் மக்களின் சராசரி வாழ்க்கைத் தரம் மேற்கத்திய வாழ்க்கைத் தரத்தின் உயர் நிலையை எட்டியிருக்காதாயினும், இது வல்லரசுகளாக நிர்ணயிக்கப்படுவதன் அளவு கோலாக அமையாது என்கிறது அமரிக்கப் பாதுகாப்புச் சபையின் அறிக்கை.

“புதிய வல்லரசுகளாக சீனாவும் இந்தியாவும் உருவாதல் என்பது தவிர்க்கமுடியாத மறுதலையான உறுதியெனினும், சர்வதேச அளவில் அமைந்திருக்கும் எனைய வல்லரசுகளுடன் போட்டி போட்டியாகவா, அல்லது ஒத்துழைப்புடனா தன்னைத் தொடர்புபடுத்திக் கொள்ளும் என்பது முற்றிலும் நிச்சயமற்றதாகவே உள்ளது” என்கிறது அமரிக்க தேசிய உளவுத்துறை ஆலோசனை மையம். இந்த நிச்சயமற்ற தன்மையிலிருந்து உருவான அமரிக்க-ஐரோப்பிய அரசியலென்பது மூன்று பிரதான காரணிகளை உள்ளடக்கியது.

1. சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவு.
2. ஆசிய தேசிய அரசுகளிற்கெதிரான எதிர்ப்பியக்கங்கள்.
3. துருவ வல்லரசுகளின் பிராந்திய அரசியல் முரண்பாடுகள்.

மேற்கின் ஆதிக்கமற்ற புதிய‌ உலகம்.
மத்திய ஆசியாவில் அமரிக்காவினதும் ஐரோப்பாவினதும் அரசியற் செல்வாக்கின் அடித்தளம் ஆட்டம் காண ஆரம்பித்திருக்கிறது என்பதை மறுப்பதற்கு இன்று எந்த அரசியல் ஆய்வாளரும் தயாராகவில்லை.

ஆசியாவின் வரலாறு நினைத்துப் பார்த்திராத மனிதப் படுகொலையை இந்தியாவும் இலங்கையும் கூடுச்சேர்ந்து வன்னி மண்ணில் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் போது மேற்கின் தலையீடு நன்கு திட்டமிட்டு நிராகரிக்கப்படுகின்றது.

ஐம்பதாயிரம் அப்பாவிப் பொதுமக்கள் எந்தச் சாட்சியுமின்றி ஒரு சில சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்குள் முடக்கப்பட்டு, புலிகளை அழிக்கிறோம் என்ற பெயரில் கொல்லப்பட்ட போதும் மூன்று இலட்சம் மக்கள் முகாம்களில் காரண‌மின்றித் தடுத்து வைக்கப்பட்டு மனித குலத்திற்கெதிரான வன்முறைகளைக் அவர்கள் மீது கட்டவிழ்த்து விட்ட போதுள்ள போதும் ஐரோப்பிய அமரிக்க சார் எந்த சக்திகளுமே அங்கு அனுமதிக்கப்படவில்லை.

அமரிக்க ஐரோப்பிய அரசுகள் சார் மனித உரிமை அமைப்புக்கள், சமூக உதவி அமைப்புக்கள், அதிகார அமைப்புக்கள், அரசின் பிரதினிதிகள் என்று அனைத்துத் தரப்பினருமே இப்பிரச்சனை பற்றி “மூச்சுவிடக் கூட” அனுமதிக்கப்படவில்லை.
கியூபா,சீனா,ஈரான்,இந்தியா,ரஷ்யா என்ற மேற்கின் அரசியற் செல்வாக்கிற்கெதிரான ஒரு புதிய அணி இலங்கையின் பக்கம் ஐரோப்பிய அமரிக்க நாடுகளைத் எட்டிக்கூடப் பார்க்கக்கூடாது என்று விரட்டியடித்திருக்கின்றன.

ரஷ்யாவினதும் சீனாவினதும் பொருளாதார இணைவு, இந்தியா, ஈரான் ஆகியவற்றை மேற்கின் அரசியல் ஆதிக்கத்திலிருந்து விடுதலை செய்வது மட்டுமன்றி திட்டவட்டமான புதிய இணைதலுக்கு வழிகோலுகின்றன.

சீனா,ரஷ்யா, இந்தியா,ஈரான் ஆகிய நாடுகளின் இணைவு என்பது மேற்கல்லாத புதிய பொருளாதார விசையைத் தோற்றுவித்திருக்கிறது என்கிறார் இந்திய பொருளியல் வல்லுனரான அஜய் சிங்.

“இந்தப் புதிய உலகம் முழுவதுமாக ஒருங்கு சேர இன்னும் பொருத்தப்படவில்லை. அரசுகள், தன்னார்வ அமைப்புக்களிலிருந்து தனிப்பட்ட வர்த்தக நிறுவனக்கள் வரையிலான அரசு சாரா சக்திகள் இன்னமும், இந்தப் புதிய உலகினுள் தம்மை உள்ளடக்கிக் கொள்வதற்கு இன்னமும் போராடிக்கொண்டே இருக்கின்றன” என்கிறது அமரிக தேசிய உளவுத்துறை ஆலோசனை நிறுவனம்.
ஆசியப் பொருளாதரத்துள் இழந்து போன மேற்கின் ஆதிக்கம்.
அமரிக்காவின் வயதாகிப் போன ஆதிக்கம் 2020 களிலும் செல்வாகுச் செலுத்தும் காரணியாக திகழுமாயினும் மேற்கிற்கும் சீனாவிற்கும் இடையிலான இடைவெளி தவிர்க்கமுடியாத பொருளாதாரக் காரணங்களால் குறைந்து கொண்டே செல்கிறது என்கிறார் பிரஞ்சு பொருளியல் ஆய்வாளர் தோமாஸ் பிக்கட்டி .

உற்பத்தித் துறையில் சீனா உலகின் மூன்றாவது இடத்தை வகிக்கும் உலக நாடாக இருப்பினும் இன்னும் சில வருடங்களில் உலகின் முதல் நிலைக்கு வந்துவிடும் என எதிர்வு கூறப்படுகிறது.

இதன் பிரதான உற்பத்திப் பகுதிகள் நான்கு வீதத்திலிருந்து பன்னிரண்டு வீதமாக கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்திருக்கிறது.

புதிய தலை முறைத் தொழில் நுட்பமான நானோ‍ பயோ வின் உருவாக்கத்தில் உலகில் இந்தியா முதலிடம் வகிகும் என எதிர்வு கூறப்படுகிறது.
நீர் மின் உற்பத்தியில் ஐரோப்பா சீனாவைத் தங்கியிருக்க வேண்டி நிலை உருவாகிவிட்டது.

ஐரோப்பிய அமரிக்க நாடுகளில் உற்பத்தி அருகிப் போய்விட்டது. வங்கிக் கடன் பொறிமுறையிலும், உற்பத்தித் திறனற்ற சந்தைப் பொருளாதாரத்திலும் தங்கியிருந்த மேற்கு நாடுகள், இப்பொருளாதாரப் பொறிமுறை நிரம்பல் நிலையை எட்டிய போது, சரிந்து விழ ஆரம்பித்து விட்டன. இன்று இவ்வலரசுகள் நடாத்திக் கொண்டிருப்பது தற்காலிக தற்காப்பு யுத்தங்களே தவிர வேறேதுமில்லை.

ஆசிய ஆபிரிக்க நாடுகளுடனான வியாபார மூலதனம் வங்கிகளை நிரப்பிக்கொண்டிருந்த போது அம்மூலதனத்தச் சுற்றிய இயக்கும் சக்திகளாக, வங்கிக் கடன், சொத்துச் சந்தை, சேவைத் துறை என்பன அமைய மக்களின் தொழில் சார் நடவடிக்கைகளும் இவற்றைச் சுற்றியே அமைந்திருந்தன.

ஆசியாவை நோக்கிய மூலதனத்தின் நகர்வின் பின்னர், ஐரோப்பாவினதும் அமரிக்காவினதும் பணமூலதன இருப்பு வற்றிப்போகவாரம்பித்தது. முதலீடுகள் கட்டுப்பாடின்றி ஆசியாவை நோக்கி நகர்ந்தது. இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள் மூதலீடுகளின் தளமாக அமைய மேற்கத்தைய பொருளாதாரம் நெருக்கடிக்குள்ளானது.

இந்த நெருக்கடிக்குத் தற்காலிகத் தீர்வாக, ஆசியாவை நோக்கி நகரும் நிறுவங்களைக் கவரும் நோக்கோடு ஐரோப்பிய அரசுகள் தமது நாடுகளைச் சார்ந்த நிறுவனங்களுக்கு வரிவிலக்கை வழங்கியதுடன் மட்டுமன்றி, அரச பணத்தை அவற்றில் முதலீடு செய்தன. வங்கிகளுக்கு மில்லியன் கணக்கில் முதலீடுகள் வழங்கப்பட்டன. புதிய ஒழுங்குமுறைகள் புகுத்தபடுகின்றன‌. சேவைத்துறைக்கு பண இருப்பு மேலும் பயன்படுத்தப்பபடுகின்றது.

இவையெல்லாம் பொருளாதாரச் சரிவிலிருந்து ஐரோப்பாவையும் அமரிக்காவையும் தற்காத்துக் கொள்வதற்கான தற்காலிக நடவடிக்கைகளே.

இந்தத் தற்காப்பு யுத்தத்தின் அடிப்படை என்பது, பலத்தை மறுபடி நிலைநாட்டிக்கொண்டு ஆசியப் பொருளாதாரத்துடன் சமரசத்திற்கு செல்வதே என்பதைப் பல பொருளியல் வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஏப்பிரல் 2009 வரையான நிதி வருடத்தில் பிரித்தானியாவில் சீனாவின் முதலீடுகள் 13 வீதத்தால் அதிகரித்துள்ளது.
2009 இல் அமரிக்க திறைசேரியில் சீனாவின் முதலீடு தொடர்பாக கருத்து வெளியிட்ட ஹில்லரி கிளிங்டன், இரு நாடுகளும் ஒன்றில் ஒன்று தங்கியிருக்கும் நிலை உருவாகிவிட்டதாகத் தெரிவித்தார்.

ஆக, மேற்கின் பொருளாதாரம் ஆசியப் பொருளாதாரத்தின் உதவியின்றி உயிர்வாழ முடியாத நிலை உருவாகிவிட்டத.

மேற்கின் அரசியல் அதிகார அமைப்பு தனது பொருளாதாரத் தேவைகளுக்கும் நலன்களுகும் ஏற்றவாறு எவ்வாறு பொது விதிமுறைகளையும் ஒழுங்கமைப்புகளையும் ஆசியப்பொருளாதாரத்துடன் ஏற்படுத்திக் கொள்வதென்ற நடைமுறைத் தந்திரோபாயங்களே இன்று வகுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

ஆசியப் பிராந்தியத்தின் இன்றைய அதிபதிகளான இந்தியாவும் சீனாவும் மேற்கின் இந்தப் பலவீனத்தின் அடிப்படையிலேயே தமது அரசியல் பொருளாதரத் தளத்தை விரிவுபடுத்திக் கொள்கின்றன.

ஆசியப்பிராந்தியத்தில், அது ஆப்கானிஸ்தான் ஆகவிருந்தாலும் இலங்கை அல்லது பாக்கிஸ்தான ஆகவிருந்தாலும் இந்தியாவினதும் சீனாவினதும் அரசியல் பொருளாதர பிராந்திய நலன்களுக்கு எதிரான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மேற்கு தயாராகவில்லை.

இலங்கையில் விடுத்லைப் புலிகளுக்கும் அரசிற்கும் இடையிலான இறுதி யுத்தம் ஆரம்பித்த காலப்பகுதியிலிருந்து விடுதலிப் புலிகளின் தலைவர்கள் முற்றாக அழிக்கப்படும் காலப்பகுதிவரை ஆயிரக்கணக்கான அப்பவிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள், யுத்தக் குற்றங்களை வெளிப்படையாகவே இலங்கை அரசு புரிந்திருக்கிறது, யுத்தத்தில் அப்பாவிக் குழந்தைகள் அழிக்கப்பட்டிருக்கிறார்கள், இரசாயன் ஆயுதங்களின் பாவனைக்கு ஆதாரங்கள் உள்ளன, இனப்படுகொலையின் வரையறைக்குள் படுகொலைகள் அடக்கப்பட அனைத்து சாத்தியங்களும் உள்ளன.

ஆனால் அமரிக்கா உட்பட அனைத்து ஐரோப்பிய நாடுகளும் இந்த அழிப்பின் நேரடி நெறியாளனாகத் தொழிற்பட்ட இந்தியாவையோ, இராணுவப் பின்புலமாக அமைந்த சீனாவையோ மேற்குலகம் பகைத்துக் கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தது.

இலங்கை என்ற குட்டித்தீவு பல ஐரோபிய இராஜ தந்திரிகளையும், அரசியற் தலைவர்களையும் அதன் எல்லைக்குள் அனுமதிக்கவே மறுத்திருக்கிறது.

இலங்கையில் நிறைவேற்றப்பட்ட அழிப்பும் அதன் தொடர்ச்சியும் இந்திய - சீனப் பொருளாதரங்களுக்கான எதிர்காலத் தளமாக இலங்கை தொழிற்படும் என எதிர்வுகூறப்பட்டாலும், இந்த யுத்தம் என்பது அமரிக்க ஐரோப்பிய ஏகபோகங்களுக்கெதிராக ஆசியப் பொருளாதாரம் நடாத்திய பலப் பரீட்சையே!
இப் பலப்பரீட்சை புதிய உலக ஒழுங்கமைப்பைப் படம் போட்டுக்காட்டுகிறது.

இங்கு முதிர்வடைந்த மேற்கின் ஏகாதிபத்தியம் தோற்றுப் போனது. புதிய இராட்சதப் பொருளாதார வல்லரசுகள் மக்களின் பிணங்களின் மீது வெற்றியை நிலை நாட்டிக்கொண்டுள்ளன.

சர்வதேசத்தின் பலபபரீட்சைக்கான விளையாட்டு மைதானம் தான் வன்னி! அங்கிருந்த ஆடுகருவிகள் தான் வன்னி மக்கள்!! புலிகளின் அரசியல் அம் மைதானத்திற்கான திறவுகோல்!!!
இந்திய - சீன உறவு
இந்திய - சீன உறவின் மிகவும் சிறந்த காலகட்டம் இது என்கிறார் இந்தியாவுக்கான சீனத் தூதுவர் ஸ்கான் யான். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் எந்த விதமான அடிப்படை முரண்பாடுகளும் இப்போது இல்லை என்று மேலும் குறிப்பிடும் அவர், முரண்பாடுகளைவிட பொதுமைப்பாடுகளே அதிகம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டுகிறார்.

பொதுவான பொருளாதாரத் தளமொன்றில் மேற்கின் ஆதிக்கத்திற்கெதிராகத் தன்னை நிலை நாட்டிக்கொள்ளும் சீனாவினதும் இந்தியாவினதும் பொதுவான எதிர்ப்பு சக்தி “தனது இழந்து போன பலத்தை நிலை நாட்டிக்கொள்ள முனையும்” மேற்குலகமேயாகும் என்பதை பல சர்வதேச ஆய்வாளர்கள் குறித்துக்காட்டுகின்றனர்.

அமரிக்க தேசிய பாதுகாப்பு செயலகம் முதல் தடவையாக இந்தியாவைச் சூழவர சீன அரசு தனது கடற் பாதுகாப்பு மையங்களாக துறைமுகங்களை நிறுவிக்கொண்டிருகிறது என்பதையும் அதன் ஒரு பகுதியாக இலங்கையிம் ‍ஹம்பாந்தோட்ட என்னுமிடத்தில் சின அரசு நிறுவிவரும் துறைமுகம் அமைந்துள்ளது என்றும் எதிர்வு கூறியது. ஆனால் இதன் எதிர் வினையாக இந்திய அரசு எந்த இரணுவ நகர்வுகளையும் மேற்கொள்ளவில்லை. மாறாக சீன அரசுடனான மேலதிக ஒத்துழைப்பு ஒப்பந்தங்களையே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.

2009 இன் ஆரம்ப நாட்களில் சினாவில் உற்பத்தியாகும் விளையாடுப் பொருட்கள வர்த்தக அமைப்பின் (WTO) ஈடற்றதாக இலாத காரணத்தால் தடைசெய்வதாக இந்தியா அறிவித்திருந்தது. இது பற்றிக் குறிப்பிட்ட பைனாசியல் டைம்ஸ் என்ற பிரித்தானிய இதழ், சீன இந்திய பொருளாதார முறுகல் நிலை என வர்ணித்திருந்தது.

இறுதியாக இந்தியாவும் சீனாவும் ஒரு முடிபுக்கு வந்தன. இவ்விரு நாடுகளதும் வர்த்தக அமைச்சர்கள் ஒவ்வொரு மாதமும் புது டெல்கியில் பொதுவான தளம் தொடர்பாக விவாதிப்பதென்றும் இரு நாடுகளும் ஒரு வேலைக் குழுவை அமைப்பது என்று அதற்கும் மேலாக ஐ அடைவதற்கு முன்பதாக தாமே தர நிர்ணயம் செய்வதாகவும் முடிபுக்கு வந்தன.

இந்தப் பிரச்சனை தொடர்பாகக் கருத்து வெளியிட்ட சீன உதவி வர்த்தக அமைச்சர், இரு நாடுகளும் நடைமுறைக்கூடாகப் பொதுத் தளத்தில் இயங்குகின்றன என்றார்.

16/06/2009 நடைபெற்ற BRIC அமைப்பின் பின்னதான சீனா, இந்தியா, ரஷ்யா, பிரேசில் ஆகியவற்றின் கூட்டறிக்கையில் WTO மறு சீரமைக்கப்பட வேண்டும் எனக் கோரியுள்ளன.

ஆக, மேற்கின் பலவீனம் இந்தியா,சீனா போன்ற நாடுகளை இறுக்கமாக ஒருங்கிணைத்துள்ளது. ஆசியப் பொருளாதாரம் மேற்கின் ஆதிக்கத்திற்கெதிராக உருவாக ஆரம்பித்து விட்டது.

இலங்கைப் பிரச்சனையில் மேற்கு தலையிட முனைந்த போதெல்லாம் சீனாவும் இலங்கையும் ஒருங்கு சேர்ந்தே மூர்க்கமாக எதிர்த்தன.
இலங்கை என்பது ஆசியப் பொருளாதாரத்தின் பரீட்சாத்தக் களமே. ராஜபக்ஷ குடும்பத்தின் இலங்கை அரசு இந்தியாவின் பொம்மை அரசு என்பது மேற்கு நாடுகளுக்குத் தெரியாத ஒன்றல்ல.

அழைப்பின்றியே பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குஷ்னேர் மற்றும் பிரித்தானியப் வெளிவிகாரச் செயலாளர் டேவிட் மிலிபான்ட் ஆகியோர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட போது அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் உக்கிரமாக நடை பெற்றுக்கொண்டிருந்தது.

ஐரோப்பாவின் இரண்டு முக்கிய வெளி விவகார அமைச்சர்கள் மூன்றாமுலக நாடொன்றுக்கு அழைப்பின்றி மேற்கொண்ட பயணம் எந்தப் பயனுமின்றி அவமானமுடையதாக முடிவடைந்தது. இன்நடவடிக்கை இலங்கை என்ற பலவீனமான நாடொன்றின் தனிப்பட்ட நடவடிக்கையாக ஒரு போதும் கருத முடியாது. இது போன்றே டெஸ் பிரவுணிலிருந்து பொப் ரே வரையிலான மேற்கு இராஜதந்திரிகளை அவமானப் படுத்தும் செயலானது இதற்கு முன்னர் எந்த ஆசிய நாட்டிலும் நடைபெற்றதாக வரலாறில்லை.

இலங்கை அரசின் அரசியற் இராணுவ பின்புலமாக அமைந்துள்ள இந்தியாவினதும் சீனாவினதும் மேற்குலகிக்கெதிரான அரசியலின் வெளிப்பாடே இலங்கையின் மேற்கெதிர்ப்பாகும்.

இந்தியாவும் சீனாவும் இன்னமும் இலங்கையில் நடத்திக் கொண்டிருக்கும் பரிசோதனையில் மேற்கின் எதிர்வினையை எதிர்பார்த்துக் கொண்டேயிருக்கின்றன. மேற்கின் பலவீனம் ஐ.நா சபை வரை அம்பலமாகி, ஆசிய வல்லரசுகளின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்தியுள்ளன.

ஆசியாவில் மேற்கின் பொருளாதார முன்நகர்வுகளுக்கெதிராக பொதுத் தளத்தில் இணையும் சீனாவும் இந்தியாவும் தேற்காசியப் பிராந்தியப் பாதுகாப்புத் தொடர்பாக தமக்குள் முரண்பாடுகளை வளர்த்துக் கொள்கின்றன.10/06/2009 இல் இந்திய இராணுவ விமானமொன்று சீன இந்திய எல்லைப்பகுதியில் விழுந்து நொருங்கியதில் 14 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இது சீனாவின் தாக்குதலா அல்லது தற்செயல் நிகழ்வா என பல்வேறு கருத்துக்கள் நிலவும் அதே வேளை, சீன எல்லையில் இந்தியத் துருப்புக்களின் தொகை 60 ஆயிரத்தால் அதிகரிக்கப்படும் என அருணாச்சலப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

ஆனால் எதிர்வரும் காலத்தில் மேற்கின் பொருளாதரப் பலவீனமும், அதனை மறு சீரமைக்க ஆசிய-ஆபிரிக்க நாடுகள் மீதான ஆதிக்கமும் இந்திய சீன உறவை மேலும் வலுப்படுத்தும் என்பதே அதிக சாத்தியமானது.
இந்தியாவின் சர்வதேச அரசியல் சதுரங்கம்.
ஆளும் வர்க்கத்தின் மீது மூலதனச் சொந்தக்காரர்களான அதிகார வர்க்கம் நேரடியாகச் செல்வாகுச் செலுத்தும் மிகச்சில தேசிய அரசுகளின் இந்தியாவும் ஒன்றாகும்.

ஆக, பல்தேசியப் பெரு முதலாளிகளின் நலன்களின் அடிப்படையிலேயே இந்தியாவின் அரசியல் நகர்வு எப்போதுமே அமைந்திருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தளவில் மேற்கின் பார்வைக்கு சீனாவுடன் அரசியல் பொருளாதார முரண்பாடுகள் ஆழமடைந்துள்ளதாகக் தோற்றமளிப்பது போல காட்டிக்கொண்டாலும், சீனாவுடனான வர்த்தக உறவுகளும், மேற்கிக்கெதிரா சீனாவுடனான இணைவும் வலுவடைந்தே செல்கிறது.

2008 வரை ஐ.நா பாதுகாப்புச் சபை உறுப்பு நாடாக இந்தியா இணைவதற்கான கோரிக்கையை அமரிக்காவினூடாக முன்வைத்த இந்தியா, இன்று சீனாயுடன்
இணைந்து கோரிக்கை விடுத்துள்ளது.

பிரிக் மாநாட்டில் சீனா, இந்தியா, ரஷ்யா,பிரேசில் ஆகிய நாடுகள் இணைந்த கூட்டறிக்கையில், ஐக்கிய நாடுகள் சபை மறுசீரமைக்கப்பட வேண்டுமென்றும் இந்தியாவும், பிரேசிலும் இணைந்த சர்வதேச விவகாரங்களைக் கையாள்வதற்கான அங்கத்துவம் அவசியமானது என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய சீன அரசுகள் அரங்கேற்றிய இலங்கை இனப்படுகொலை
ஆசியாவை நோக்கி நகர்ந்த மூலதனதை எல்லா வகையிலும் தனது கட்டுப்பாடுகுள் மறுபடி உட்படுத்துவதே அமரிக-ஐரோப்பிய அரசுகள் மறுபடி சுதாகரித்துக் கொள்வதற்கான ஒரே வழி. இது சமரசத்தினூடாக மட்டுமல்ல மேற்கின் வழமையான அழிவரசியலூடாகவும் நடைபெறும்.

G20 மாநாடு உட்பட அதன் பின்னதான மேற்கின் நகர்வுகள் இதனையே தெளிவு படுத்துகின்றன.

ஆசியப் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்துவதற்கான மேற்கின் முதலாவதும் முக்கியமானதுமான நடவடிக்கையாக, இந்திய சீன இணைவைத் தடுப்பதும் அதனூடாக இவ்விரு நாடுகளுடனும் தனித்தனி பொருளாதார ஆதிக்கத்தையும் சந்தைக் கட்டுப்பாட்டையும் ஏற்படுத்துவதுமாகும்..

இந்தியாவும் சீனாவும் வெளித்தோற்றத்திற்கு முரண்பட்ட நிலையைக் கொண்டதாகக் காட்டிக்கொண்டாலும் இந்தியாவுன் மிகப்பெரிய வியாபாரப் பங்காளியாக சீனாவே திகழ்கிறது. 2008ம் ஆண்டில் இருதரப்பு வர்த்தகங்களும் 34 வீதத்தால் அதிகரித்துள்ளது.

நாடுகளிடையேயான முரண்பாடுகளைக் கையாள விரும்பும் மேற்கு நாடுகள் இந்நாடுகளின் உள் முரண்பாடுகளையும் மறுபுறத்தில் கையாள முற்படுகின்றன. சமூக முரண்பாடு, தேசிய இன முரண்பாடுகள், அடையாள அரசியல் தொடர்பான மிகைப்படுத்தல்கள், மத முரண்பாடுகள் ஆகியவறைக் கையாள்வதனூடாகவும், மனித உரிமை அமைப்புக்கள் போன்ற ஏனைய தன்னார்வ அமைப்புக்களின் அழுத்த அரசியலைக் கையாள்வதனூடாகவும் தனது உள்ளீட்டை ஆசிய நாடுகளில் நடத்தும் மேற்கு நாடுகள் அவற்றின் அரசுகளைப் பலவீனமடையச் செய்யும் முயற்சிகளில் ஈடுபடுகின்றன.

தன்னார்வ அமைப்புக்கள், எதிர்ப்பியக்கங்களுகான நேரடிப் பண உதவி, மனித
உரிமை அமைப்புக்கள் போன்றவற்றினூடாகவே இவ்வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ள எத்தனிக்கும் மேற்கு நாடுகளுக்கு இலங்கையில் இந்தியா இணைந்து நடாத்திய இனப்படுகொலை தான் முதல் மறைமுக எச்சரிக்கை.

மிகவும் வெளிப்படையாகவே மனிதகுலத்தின் ஒருபகுதியை சாட்சியமின்றி கொன்று குவிக்க இலங்கை அரசிற்கு புதிய இந்திய சீன ஏகபோகங்கள் வழங்கிய ஆதரவினைக் கூட தனது அரசியலுகுச் சாதகமாக மேற்கு நாடுகள் கையாள முடியாத நிலைக்குப் பலவீனமாகிவிட்டன.

பல ஆய்வாளர்கள் கூறுவதுபோல பயங்கரவாதத்தை அழிப்பதில் தான் மேற்கின் நலன்கள் இந்திய இலங்கை அரசுகளோடு ஒன்றுபட்டிருப்பது உண்மையென்றால், இன்று தடுப்பு முகாம்களில் ஏற்பட்டிருக்கின்ற மனித அவலத்திற்கெதிராகக் கூட மேற்கின் தன்னார்வ அமைப்புக்கள் குரல் கொடுக்க முடியாத நிலைக்குள் முடக்க்ப்பட்டுள்ளன என்பதற்கான காரணம் அர்த்தமற்றதாகிவிடும்.

3 லட்சம் மனித உயிர்கள் பட்டினியாலும், தொற்று நோய்களாலும் பலிக்காக வளர்க்கப்பட்ட மிருகங்களைப் போல செத்துக்கொண்டிருக்கும் போது இந்திய முதலாளிகள் இலங்கையின் வளர்ச்சித் திட்டங்களில் முதலீடுகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

தென்னாசியாவில் சீனாவின் இராணுவ நிலைகள் தொடர்பாக அறிக்கைகளும் ஆய்வுகளும் சமர்ப்பிக்கும் அமரிக்க ஐரோப்பிய அரசுகள், இலங்கையில் மனித உரிமைப் பிரச்சனையை முன்வைத்துக் கூட தனது அரசியலையும் ஆதிக்கத்தையும் தெற்காசியாவில் நிலைனாட்ட முடியாத அளவிற்கு உலகின் புதிய படமாக்கல் அமைந்துள்ளது.

ஆசியப் பொருளாதாரம் நிகழ்த்திய முதல் மனிதப் படுகொலைதான் இது. இக்கொலைகள் ஒரு ஒத்திகை மட்டுமே. இந்த அரசியல் சமூகப் பகைப்புலத்தைப் புரிந்துகொள்ளத் தவறினால், தெற்காசியாவின் இன்னொரு மூலையில் இதே மனித அவலத்தை புதிய வல்லரசுகள் நிறைவேற்றும். சமூகத்தின் விழிம்பிலுள்ள மக்கள் வேண்டப்படாதவர்களாகக் கொன்று குவிக்கப்படலாம்.

இந்த அடிப்படையிலிருந்து புதிய எதிர்ப்பியக்கங்களையும் புதிய எதிர்பரசியலையும் நோக்கி முற்போக்கு சக்திகள் இணைந்து கொள்ள வேண்டும்.
[நன்றி - http://inioru.com/?p=3172]
snavalan@googlemail.com

காலாவதியாகி முடிவுக்கு வரும் மற்றொரு கண்துடைப்பு நாடகம்

அரசுக்குக் கெட்ட பெயர் வாங்கித் தருகின்ற அல்லது அரசுஉடனடியாக தீர்வு காண விரும்பாத ஒரு சர்ச்சைக்குரிய விடயம் எழும் என்றால் அதனை சமாளித்து, காலத்தை இழுத்தடிப்பதற்கு அரசுத் தலைமைக்கு ஒரு வழியுண்டு.
சம்பந்தப்பட்ட விடயம் குறித்து ஆராய்ந்து, விரிவாக விசாரித்து, உரிய சிபாரிசுகளை நீண்ட அறிக்கை வடிவத்தில் சமர்ப்பிப்பதற்கு ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஓய்வு பெற்ற நீதியரசர்களையோ, பிரமுகர்களையோ கொண்ட ஆணைக்குழு ஒன்றை அவ்விடயம் குறித்து விசாரிக்க நியமிப் பதுதான் அந்த ஒரே வழி.
ஆணைக்குழு அமைக்கப்படுவதற்கான அறிவிப்புடன் அந்த சர்ச்சைஅடங்கிப் போய்விடும். காலத்தை இழுத்து, நேரத்தை விழுங்கி, பெருமளவு நிதியைச் செலவிட்டு சில சமயங்களில் விசாரணை பூர்த்தியடையாமலேயே ஆணைக் குழு காலாவதியாகிச் செத்துவிடும். இல்லையேல் கண் துடைப்புக்காக இடைக்கால அறிக்கை, இறுதி அறிக்கை என்று பெரும் ஆரவாரத்துடன் அது சமர்ப்பிக்கும் மிக மொத்த மான கோவைகள், அவற்றை அரசுத் தலைவரிடம் கையளிப் பது தொடர்பான படங்கள் ஊடகங்களில் வெளியாவதுடன் அடங்கிப் போய்விடும். அதற்கு மேல் எதுவும் நடக்காமல் அந்த விடயம் கிணற்றில் போட்ட கல்லாக அமுங்கி விடும்.
இதுதான் பொதுவாக இந்த தேசத்தின் ஆணைக்குழுக்கள் பற்றிய பொதுவான பட்டறிவு.மோசமான மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் நிஸங்க உடலகம தலைமையிலான எட்டு ஆணையாளர்களைக் கொண்ட ஆணைக்குழுவின் கதியும் கடைசியில் இப்படித் தான் போய்முடிந்திருப்பது போலத் தெரிகின்றது.
மர்மமான முறையில் யாழ் வண.பிதா ஜிம் பிறவுண் காணாமற் போனமை, வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர், ரவிராஜ் எம்.பி., ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி., அரசசமாதானச் செயலகத்தின் பிரதி இயக்குநர் லோகநாதன் கேதீஸ்வரன் ஆகியோரின் படுகொலைகள், திருகோணமலை நகரில் ஐந்து தமிழ் மாணவர்கள் படுகொலை, மூதூரில் இருந்து கந்தளாய்க்குப் பயணித்துக் கொண்டிருந்த 14 கிராம வாசிகள் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டமை, செஞ்சோலையில் 51 பேர் கொல்லப்பட்டமை, ரதல்ல கிராமத்தின் பத்து முஸ்லிம் கிராமவாசிகள் கொலையுண்டமை, கெப்பிட் டிக்கொலாவையில் 68 பயணிகள் கிளைமோரில் கொல்லப் பட்டமை, தம்புள்ளவில் 98 படையினர் தற்கொலைத் தாக் குதலில் கொல்லப்பட்டமை, வெலிகந்தவில் தலையில்லா ஐந்து முண்டங்கள் கண்டு பிடிக்கப்பட்டமை போன்ற மோசமான மனித உரிமை மீறல் சம்பவங்கள் பதினாறு குறித்து விசாரிப்பதற்காக இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தது.

இந்தச் சம்பவங்கள் யாவும் 2006 ஆம் ஆண்டில் இடம்பெற் றவையாகும்.
நாட்டில் இடம் பெற்று வந்த மோசமான மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கடும் கண்டனக்குரல்கள் எழுந்தபோது அவற்றைச் சமாளிப் பதற்காக பெயருக்கு இந்த ஆணைக்குழு நியமனம் பற்றிய அறிவிப்பு அரசுத் தலைமையால் வெளியிடப்பட்டது. அப்போதே இது வெறும் கண்துடைப்பு நாடகம் என்று இப் பத்தியில் சுட்டிக்காட்டியிருந்தோம்.சுமார் இரண்டு வருடங்கள் இழுத்துப்பறித்து, காலத்தை விழுங்கிய பின், உருப்படியாக எதையும் சாதிக்காமலேயே இப்போது அந்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் முடிவுற்று, அது செத்துச்செல்லாக்காசாகி விட்டது. நாம் குறிப்பிட்ட மாதிரியே அது கண்துடைப்பு நாடகமாக இப்போது முடிவுக்கு வந்திருக்கின்றது.

இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்ட போதே அதன் விசா ரணைப் போக்குக் குறித்து உள்நாட்டிலும் சர்வதேசமட்டத் திலும் பல்வேறு சந்தேகங்களும் முன் ஆட்சேபனைகளும் தெரிவிக்கப்பட்டன.இதனையடுத்து, இந்த ஆணைக்குழுவின் விசாரணை களைக் கண்காணிப்பதற்காக அவை ஒழுங்காக நடைபெறு கின்றனவா என்பதை மதிப்பீடு செய்வதற்காக சர்வதேசபிரமுகர்களைக்கொண்ட கண்காணிப்புக் குழு ஒன்றை இந்தியாவின் ஓய்வு பெற்ற பிரதம நீதியரசர் பகவதி தலை மையில் இலங்கை அரசுத் தலைவர் நியமித்தார்.அந்தக் கண்காணிப்புக் குழுவும் இலங்கையில் வந்து தங்கியிருந்து இந்த ஆணைக்குழு விசாரணைகளின் போக்கை யும் நோக்கையும் ஆற அமர அவதானித்தது. விசாரணை களை ஆரம்பிப்பதில் காட்டப்பட்ட வேண்டுமென்ற போக்கிலான இழுத்தடிப்பு, விசாரணைகளில் அரசுசட்ட முகவர்களின் அளவுக்கு மீறிய பங்களிப்பு, அழுத்தம் போன்ற வற்றை எல்லாம் கவனத்தில் கொண்ட சர்வதேசபிரமுகர்களின் கண்காணிப்புக்குழுவும், இந்த விசாரணைகள் வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும் இவற்றைக் கண்காணிப்பதில் அர்த்தமில்லை என்றும் பகிரங்க அறிக்கை மூலம் தெளிவுபடுத்தி விட்டு நாட்டை விட்டு வெளியேறிவிட்டது.ஆக, பெரிய ஆரவாரத்துடன், பெருமளவு நிதியையும் காலத்தையும் விழுங்கியவாறு ஆரம்பிக்கப்பட்ட இந்த கண் துடைப்பு நாடகம் அந்த ஆணைக்குழுவின் சேவைக்காலம் திரும்பவும் நீடிக்கப்படாமல் காலாவதியாக விடப்பட்ட நிலையில் இப்போது தானாகவே முடிவுக்கு வந்துவிட்டது.இனி என்ன?
இதுவரை நடைபெற்ற "சமாளிப்பு"விசாரணை தொடர் பான அறிக்கைகளை அரசுத் தலைவரிடம் கையளிப்பது போன்ற மற்றொரு நாடக அங்கத்தை அரங்கேற்றி விட்டு இவ்விவகாரத்தை அப்படியே கிடப்பில் போடவேண்டியது தான்.
2006 இல் இடம்பெற்ற மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான கண்டனங்களையும், ஆட்சேபங்களையும், கடும் எதிர்ப்புக்களையும் மீறும் வகையில் அண்மைக் காலத்தில் மிகமிக மோசமாக அரங்கேறிய இனவழிப்புக் கொலைகள், மனித உரிமை மீறல் கொடூரங்கள் தொடர்பான ஆட்சேபனைகள் வந்து விட்டதால் பழையவற்றைக் கிடப்பில் போட்டு அப்படியே அமுங்கிப் போகவிடுவது சில சமயங் களில் நியாயமானதாகவும் கூட அர்த்தப்படுத்தப்பட்டு விட லாம். என்ன செய்வது, அப்படித்தான் உள்ளது நமது நாட்டு நிலைமை.....!

நன்றி
உதயன்

Monday, June 15, 2009

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் தர்மமே வெல்லும்

தமிழர் தேசம் சிங்கள தேசத்தால் வெற்றி கொள்ளப்பட்டுள்ளது. சிங்களதேசம் வெற்றிவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. படையதிகாரிகளுக்கும் படைவீரர்களுக்கும் பதவியுயர்வும் பரிசில்களும் வழங்கப்படுகின்றன. வன்னிப்பகுதியின் ஒவ்வொரு பிரதேசமும் கைப்பற்றப்படும் போது சிங்கக்கொடிகளைப் பறக்கவிட்டு தமிழர் பிரதேசங்களை கைப்பற்றுவதாக கூறியது. எனவே சிங்கள தேசம் வெளிப்படையாக தமிழர்களை வென்றதாக கூறி நடத்தும் வெற்றிவிழாக்களும் நிகழ்வுகளும், சிங்களம் கூறியது போல பயங்கரவாதத்திற்கு எதிரான போர் வெற்றி என்பதற்கு மாறாக தமிழீழம் என்ற ஒரு நாட்டின் பகுதிகளை கைப்பற்றி நிகழ்த்தப்பட்ட வெற்றிக்கூத்தாட்டங்களகவே கருதவேண்டியுள்ளது. இலங்கைத்தீவில் தமிழீழ தனியரசு இருந்ததை மீண்டுமெருமுறை உறுதிப்படுத்தி நிற்கின்றது.

இலங்கைத்தீவில், தமிழ்மக்கள் திறந்த வெளிச் சிறைச்சாலைகளிற்குள்ளும் வன்னியிலிருந்த மக்கள் சிறையகதிமுகாம்களுக்குள்ளும் அடைக்கப் பட்டுள்ளார்கள். மிகமோசமாக, கிட்லரின் முறையில் அம்மக்கள் நடத்தப்படுகின்றார்கள். இலங்கை தீபகற்பத்தில், தமிழனுக்கு எந்தவிடத்திலும் எவ்விதமான பாதுகாப்பும் இல்லாத அச்சமான சூழ்நிலையிலேயே வாழ்கின்றனர். அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்து நிற்கின்ற தமிழ் அரசியல்வாதிகளால் கூட அகதிமுகாமில் வாழும் மக்களின் துயரத்தை நீக்கமுடியாதநிலை அவர்களின் கையாலாகத்தனத்தை காட்டுகின்றது. இவ்வாறு பல இன்னல்களுக்குள் தமிழ்மக்கள் சிக்கத் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் பல ஊடகங்கள் தமிழ்மக்களின் இன்னல்களை வெளியுலகிற்கு முனைப்பாக கொண்டு சென்றுகொண்டிருந்தாலும் சில ஆய்வாளர்கள் விடுதலைப்புலிகளின் பின்னடைவை விமர்சிப்பது தற்காலத்திற்கு பொருத்தமானதாக இல்லை.

அது மட்டுமில்லாது 30 வருடங்களிற்கு மேலாக மிகுந்த சிரமங்களிற்கு மத்தியில் போராடி 25000 க்கும் மேற்பட்ட போராளிகளை அர்ப்பணித்து தமிழர்களுக்கான அடையாளத்தை, பாதுகாப்பை, போரிடும் ஆற்றலை, நம்பிக்கையை, சுதந்திர போராட்ட தந்திரோபாயங்களை மக்களின் மனங்களில் விதைத்து, தமிழ்மக்களின் மனங்களில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கும் தேசத்தலைவனையும் அவன் சார்ந்து வீரச்சாவடைந்த பல்லாயிரம் போராளிகளையும் பொறுப்பாளர்களையும் விமர்சிக்கும் சிலரின் சுடலை நியாயம் போன்ற கருத்துவாதங்கள் வேதனையையும் எரிச்சலையும் தருகின்றன.

சிங்களப்படையின் போர் வெற்றியென்பது தனியே சிங்களப்படைகளின் வெற்றியல்ல 20 மேற்பட்ட வல்லரசு நாடுகளின் ஆலோசனை, ஆயுத உதவி, போர் வீரர்கள் உதவி, தொழில்நுட்ப உதவி, செய்மதித் தகவல்கள் போன்று பல்வேறு வகையான உதவிகளையும் பெற்றே சிங்களப்படை போரிட்டது மாறாக தலைவர் தனியொருவராக தமிழ்மக்களின் உதவியுடன் போராளிப் படையை வழிநடத்தி போரிட்டார், எனவே இப்பிரதேச இழப்பு என்பது தமிழர் படை சிங்களப்படையிடம் தோற்றதாக கருதமுடியாது மாறாக பலநாடுகளால் வலுவூட்டப்பட்ட, குறிப்பாக படைவீரர்களின் உதவியைப் பெற்றே விடுதலைப் புலிகளின் பிரதேசத்தை கைப்பற்ற முடிந்ததே தவிர விடுதலைப்புலிகளை முற்றுமுழுதாக அழிக்கவுமில்லை அழிக்கவும் முடியாது. இது உலகறிந்ததே. தற்போது புலிகள் ஆயுதங்களை மௌனித்திருக்கின்றார்களே தவிர ஆயுதப்போராட்டத்தை கைவிடவில்லை.

14 வயதில் தனது போராட்டத்தை தொடங்கி பல இன்னல்களுக்கும் இடர்பாடுகளுக்கும் மத்தியில் போராட்டத்தை கொண்டு நடத்திய தலைவன், 3 தசாப்தகால போராட்டத்தில், உலக அரசியல், அதன் போக்கு அதாவது உலக அரசியல் என்பது உலகநாடுகளின் நலன் சார்ந்த அரசியலா? அல்லது நடுநிலையான அரசியலா? தமிழினத்தின் விடுதலைப்போராட்டத்தில் இந்த சர்வதேசம் எவ்வளவு தூரம் இதயசுத்தியோடு செயற்படும்? என்பதை புரியாமலா, உலகம் வியந்த பாரிய விடுதலைப்போராட்டத்தை நடத்தியிருப்பார் என்ற கருத்துவாதத்தை எவ்வாறு வைக்கமுடியும்? இந்த சர்வதேச அரசியல் எப்போதாவது தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படும்போது, அவர்கள் அரச பயங்கரவாதத்ததால் துன்புறுத்தப்படும்போது, தமிழ்மக்கள் தீர்வு தொடர்பான கரிசனையுடன் செயற்பட்டதா? 2000ம் ஆண்டு யாழ்குடாநாட்டை கைப்பற்றிக் கொண்டு விடுதலைப்புலிகள் இராணுவ நகர்வை செய்தபோது இந்தியா தலையிட்டு போரை நிறுத்தி சிங்கள இராணுவத்தை காப்பாற்றியது. பின்னர் 2002 வரை புலிகளின் கடுமையான போரை எதிர்கொள்ளமுடியாமல் சிங்களம் சிக்கித்தவித்த போது சர்வதேசம் தலையிட்டு விடுதலைப்புலிகளின் இராணுவச்சமநிலை எற்றுக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையை கொண்டு வந்து சிங்களத்தை காப்பாற்றியது. எனவே சர்வதேச சமூகம் என்பது உரிமைக்காக போராடும் இனங்களின் உரிமைகளை பெற்றுக் கொடுக்க முயற்சிக்கும். அதை நம்பி செயற்பட்டு ஒரு தீர்வை தமிழ் மக்களுக்கு வைக்கலாம் என்று யாராவது தலைவருக்கு ஆலோசனை சொல்லியிருக்கலாமா? அப்படியாயின் இடைக்கால தன்னாட்சி அதிகார சபையினடிப்படையிலான உரிமைகளை வழங்குவதற்கான ஏற்பாட்டை சர்வதேச சமூகம் சரியாக வழிநடத்தியதா? எந்த அரசியல் தீர்வுகளிலும் தொடர்புபடாத சுனாமி பொதுக்கட்டமைப்பு செயலிழக்கம் செய்யப்பட்டபோது, அதை தடுத்து நிறுத்தி ஒரு அனர்த்த நிவாரண உடன்படிக்கையை கூட செயற்படுத்தமுடியாத சர்வதேச வல்லரசுச் சக்திகளின், கேந்திர நலன்களை சார்ந்து மாறி வரும் உலக ஒழுங்கிற்கு ஏற்ப மாற்றங்களை செய்யவேண்டும் என்பது எந்த வகையில் பொருந்தும்? நடுநிலை, மனிதாபிமானம் என்பவற்றுக்கு அப்பால் பொருளாதார நலன் கொண்டு சிந்திக்கும் சர்வதேசம், தமிழ் மக்களின் அபிலாசைகளை உள்ளடக்கிய தீர்வுத்திட்டத்தை பெற்றுத்தரும் என்ற கருத்தை தலைவருக்கு எவ்வாறு கூறமுடியும்? அப்படி கூறுபவர் மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கு என்ன பதிலை தலைவருக்கு கூறுவார்? விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்னர் தற்போது தமிழ்மக்களிற்கு சர்வதேச சமூகம் எந்த வகையில் தீர்வை பெற்றுத்தரப்போகின்றது?.

உலகெங்குமுள்ள தமிழ்மக்கள் தொடர்ச்சியாக ஜனநாயக வழிமுறையில் தமிழின உரிமைகளுக்காகவும் படுகொலைகளுக்கு எதிராகவும் போராட்டங்களை நடாத்திகொண்டிருக்கின்ற போதும் சர்வதேச கண்காணிப்பாளர்களையோ ,மனிதாபிமான அமைப்புகளையோ, சர்வதேச தொண்டர் நிறுவனங்களையோ அனுப்பி அம்மக்களை பாதுகாக்க முடியாத சர்வதேச சமூகம், நடந்தேறிய மனித உரிமை மீறல்களை விசாரணை செய்ய கூட முடியாதிருக்கும் இந்த சர்வதேச சமூகம், வாக்குறுதிகளின் நம்பிக்கையோடு சரணடைய வந்த வடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளரைக் கூட காப்பாற்ற முடியாத இந்த சர்வதேச சமூகத்தை நம்பி செயற்பட்டிருக்கலாம் என்ற வாதம் எந்த நம்பிக்கையையும் தரவில்லையே! எனவே புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடு தொடர்பாக சரியான கருத்தை தெரிவிக்கவில்லை என்று சொல்வது தேசத்திற்காக ஒய்வின்றி போராடிய அந்த மாவீரனை கொச்சைப்படுத்துவது போன்று தோற்றமளிக்கவில்லையா?

சீன பெருந்தலைவர் சொன்னது போல துப்பாக்கி முனையிலிருந்தே அரசியல் பிறக்கின்றது. அகிம்சை போராட்டம் பயனற்று போனபோது, உருவாக்கம் பெற்ற விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்திற்கு பிற்பட்ட காலத்திலேயே தமிழ்மக்களின் உரிமைப்பிரச்சினை முழுஉலகிற்கு முழுஅளவில் கொண்டு செல்லப்பட்டு, அதனுடாக சர்வதேச அளவில் அரசியல் தளமும் தெளிவாக உருவாக்கப்பட்டது. அப்படி சரியாக உருவாக்கப்பட்டதால்தான் பெரும்பான்மை புலம் பெயர் தமிழ்மக்கள் எல்லோரும் ஒரே தலைவன், ஒரு கொடி, ஒரே இயக்கம் என்று இணைந்து செயற்படுகின்றார்கள். ஒரு உறுதியான அரசியல் தளத்தை போடவில்லை என்று கூறுவதில் சரியான அரசியல் தத்துவமாகத் தெரியவில்லை.

அதுமட்டுமில்லாது ஒரு நடைமுறை அரசைக் கட்டிவளர்த்ததினூடாக இராணுவ, அரசியல், நிர்வாக அடித்தளங்கள் மிகச்சீராகக் கட்டமைக்கப்பட்டு நடைபெற்றுவந்ததை தமிழ்மக்களும் உலகமும் அறியும். அதுமட்டுமன்றி, சுனாமியின் பின்னரான ஒழுங்குபடுத்தலினூடாக முழு நிர்வாக திறனையும உலகமே பாராட்டியதன் பின்னரும் தலைவர் இராணுவகட்டமைப்பை மட்டுமே கட்டிவளர்த்தார் என்று சொல்வது பொருத்தமில்லாத ஒன்று. உறுதியான அரசியல் சித்தாந்தம் இல்லாமல் முப்பது வருடமாக இராணுவ இயந்திரம் மட்டுமே கட்டி வளர்க்கப்பட்டது என்பது, ஒரு நோக்கமற்ற இராணுவத்தை கட்டமைத்தது என்ற கருதப்படுவது சாலச்சிறந்ததல்ல. ஏனெனில், அரசியல் விடுதலையை வென்றெடுக்க அகிம்சையை கையிலெடுத்து போராடி, தீர்வுக்கான வாய்ப்புக்கள் இல்லை என்ற அரசியல் யதார்த்த புரிதலின் அடித்தளத்திலேயே இராணுவ இயந்திரம் கட்டிவளர்க்கப்பட்டது என்பது வெளிப்படையான உண்மை. அத்துடன் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் தமிழீழமே தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்று கூறி தேர்தலில் நின்ற தமிழர் விடுதலைக்கூட்டணிக்கே மக்கள் வாக்களித்தார்கள் என்பது யாவரும் அறிந்தது.

அரசியல் ரீதியாக அது தோற்றுப் போன போது, அந்த அரசியல் அடித்தளத்தில் தமிழீழத்தை அடைய ஆயுதப்போரட்டமே சிறந்தவழி என இளைஞர்கள் துப்பாக்கிகளைத் தூக்கினர். தலைவர் மட்டுமே சரியான, கட்டுப்பாடான, நேர்மையான, எதற்கும் விலைபோகாத பேரியக்கத்தை கட்டி வழிநடத்தினார். எனவே சரியான அரசியல் அடித்தளத்திலேயே இராணுவ கட்டமைப்பு கட்டிவளர்க்கப்பட்டது. ஆனால் தற்போதைய ஆயுத வலிமைத் தளர்வு என்ற தோற்றப்பாடு ஏற்படுத்தப்பட்டவுடனேயே, சிங்களம் தமிழ்மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாத 13வது சீர்திருத்தத்தினடிப்படையில் முக்கிய சரத்துக்களை உள்ளடக்காத ஒரு அரைகுறை தீர்வை கொண்டுவர முனைவதிலும், இலங்கை இனப்பிரச்சனை விடயத்தில் தலையிடமுடியாது என்று பிராந்திய வல்லரசு தெரிவிப்பதிலும,; 2002ம் ஆண்டு இனப்பிரச்சனைக்கு தன்னாட்சி, தாயகம், சுயநிர்ணய அடிப்படையில் பேசலாம் என்ற சர்வதேச சமூகம், இலங்கை இனப்பிரச்சனை விடயத்தில் தலையிடமுடியாது என்ற தொனியில் பேசுகின்ற இந்த நிலைமாற்றத்திலும் பிரதான பங்கு வகிப்பது அரசியல்தளமல்ல இராணுவ தளமே என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள். இந்த புறநிலையை சரியாக ஊகித்தே தலைவர் செயற்பட்டார். தமிழ்மக்கள் இப்போதுள்ள புதியசூழலில் தெளிவாக புரிந்த கொள்ள வேண்டிய பல விடயங்கள் உள்ளன.

குறிப்பாக சகல அரசியல் புறச்சூழல்களையும் எதிர்கொண்டு அரசியல், ராசதந்திர, இராணுவ உத்திகளை வகுத்து சிறந்த தளபதிகளையும் பொறுப்பாளர்களையும் போராளிகளையும் உருவாக்கி, தமிழரின் நம்பிக்கையையும் வீரத்தையும் மெருகேற்றி, உலகத்தில் தமிழனின் போராட்ட நியாயத்தை அரசியல் ரீதியாக நகர்த்திய தலைவரை வஞ்சப்புகழ்ச்சி செய்து, தலைவரையும் போராட்டத்தையும் போராளிகளையும் கொச்சைப்படுத்துபவர்களை இனங்கண்டு செயற்படவேண்டும். சிறையகதிமுகாம்களில் துன்புறும் மக்களின் பாதுகாப்பு, சர்வதேச மனிதாபிமான உதவிகளும் நேரடியாக சென்றடைவதற்காக வழி வகைகளையும் காணாமல்போவோர், கைதுசெய்யப்படுவோர், ஏனைய வழிகளில் பாதிக்கப்படுவோர், அடிப்படைவசதிகள் இன்றி தவிக்கும் மக்கள் காப்பற்றப்படக்கூடிய வழிவகைகளை கண்டறிந்து அந்தந்த நாடுகளிலிருக்கும் புலம்பெயர்மக்கள் அங்கு பிரச்சாரங்களையும் சாத்வீக போராட்டங்களையும் முன்னெடுப்பது மிகவும் அத்தியாவசியமான பணியாகின்றது. முக்கியமாக ஆயுதங்கள் மௌனிக்கப்படலாம் ஆனால் தமிழ்மக்களுக்கான சரியான அரசியல் தீர்வு கிடைப்பது உறுதிப்படுத்தப்படும் வரை புலிகளின் இராணுவ பலம் பாதுகாக்கப்பட்டு இருப்பதே தமிழினத்திற்கு என்றும் பாதுகாப்பானது என்பதை யாரும் மறந்து செயற்படக்கூடாது.

ஆக்கம்: வாகுகன்

Sunday, June 14, 2009

கடவுள் அல்ல... பிரபாகரன் மனிதன்

அது நடந்துவிட்டது என்று நம்புவதற்கு நம்மில் பலருக்கு இன்னும் முடியாமல் இருக்கிறது என்று தொடங்குகிறது அந்தக் கட்டுரை. நான் சொல்வதெல்லாம் உண்மை என்று சத்தியம் செய்யாமல், கோத்தபாய ராஜபட்சே சொல்வதெல்லாம் உண்மை என்று சத்தியம் செய்கிறார், கட்டுரையாளர். பிரபாகரன் கொல்லப்படவில்லை, தன்னைத்தானே சுட்டுக்கொண்டார் என்று திட்டவட்டமாக அறிவிக்கிறார்.
கட்டுரையாளர் யார் என்று ஆராய்வது வேண்டாத வேலை. அவர் மிகச் சிறந்த விடுதலை உணர்வாளராகவும், மிகவும் ஆழமான தமிழ்த் தேசப் பற்றாளராகவும் கூட இருக்கக்கூடும். அவர் எவராயிருந்தாலும் நீடூழி வாழ்க! கட்டுரையில் உள்ள விஷம் அல்லது விஷயம் தொடர்பாக மட்டுமே நாம் பேசவேண்டியிருக்கிறது.



























இலங்கை அரசு காட்டிய அந்தப் படங்களில் இருந்த அந்த உடல் அவருடையது அல்ல என்றே எம்மில் சிலர் இப்போதும் நம்புகிறோம் என்ற வாக்கிய அமைப்பு, எழுதியவரின் சாமர்த்தியத்தைக் காட்டுகிறது. அந்த உடல் அவருடையதுதான் என்றே எம்மில் பலரும் நம்புகிறோம் என்று நேரடியாக எழுதாமல், எதிர்மறையாய் எழுதி சேம்சைடு கோல் போடுகிற வேலை இது.

ஊருக்கும் உலகுக்கும் இலங்கை அரசு காட்டிய அந்த உடல்தான், பிரபாகரன் சாகவில்லை என்பதற்கு சந்தேகத்துக்கு இடமில்லாத சான்றாக இன்றுவரை திகழ்கிறது. உண்மையிலேயே பிரபாகரன் கொல்லப்பட்டிருந்தால், அவரது உண்மையான உடலைக் காட்டி உலகெங்கிலுமுள்ள தமிழர் இதயங்களைச் சம்மட்டியால் அடித்து நொறுக்கிவிட்டுத்தான் கோத்தபாய-பாசில்-மகிந்த கும்பல் வேறுவேலை பார்த்திருக்கும். அதை விட்டுவிட்டு, பிரபாகரனைப் போன்ற இன்னொரு உருவத்தைக் காட்டவேண்டிய அவசியமென்ன?

54 வயது பிரபாகரனுக்கு பதில் ஒரு 35, 36 வயது பிரபாகரன் உருவம் காட்டப்பட்டதால்தான் உலகே சந்தேகப்பட்டது. பிரபாகரனா இது, 54 வயது பிரபாகரனா இது என்று கண்ணைக் கசக்கிக் கொண்டு டி.வி.யைப் பார்த்தது. கட்டுரையாளருக்கு இப்படியொரு சந்தேகம் எழவேயில்லையா? அல்லது, பிரபாகரன் மீது மற்றெல்லோரையும் காட்டிலும் 420 மடங்கு மரியாதை வைத்திருக்கும் அவர், இப்படியொரு நிலையில் அவரது உடலைப் பார்க்கவேமாட்டேன் என்று கண்ணை மூடிக்கொண்டாரா?

உண்மையிலேயே கொல்லப்பட்டிருந்தால் அந்த உருவத்தைத் தானே நீ காட்டியிருக்கவேண்டும், வயதுகுறைந்த ஓர் உருவத்தை ஏன் காட்டினாய் என்று கேட்டு கோத்தபாயவுக்கு குறைந்தபட்சம் ஒரு மெயிலாவது அனுப்பியிருக்கலாம் கட்டுரையாளர்.

















உயிரிழந்ததும் இளமை திரும்பிவிட பிரபாகரன் என்ன கடவுள் அவதாரமா? கடவுளுக்கு நிகராகவே அவரைக் கருதியதாக உருக்கத்துடன் குறிப்பிடும் கட்டுரையாளரின் உணர்வை மதித்தே இந்தக் கேள்வியைக் கேட்கிறேன்.... இவர் இப்படி உருகுவதால், அவர் அப்படி ஆகிவிடப் போகிறாரா? ஐயா, பிரபாகரன் ஒரு மனிதன், மாமனிதன். ரத்தமும் சதையுமாய் நம்மிடையே வாழும் 54 வயது மனிதன். தெளிவாக அறிவுக்குத் தெரிகின்ற ஒரு விஷயத்தைக் கூட மனதால் ஏற்றுக்கொள்ளமுடியாத விருப்புவெறுப்பியல் தாக்கத்தில் தவிக்காதீர்கள்.

ஆம்புலன்ஸில் தப்ப முயன்றபோது சுட்டதாக முதலில் அறிவிக்கப்பட்டது. 600 மீட்டர் பரப்புக்குள்ளிருந்து ஆம்புலன்ஸில் தப்பிக்க முயல்வதென்பது ஒரு கேலிக்கூத்து. இப்படியெல்லாம் காமெடி செய்ய முள்ளிவாய்க்காலில் என்ன கிரேஸி மோகன் நாடகமா நடந்துகொண்டிருந்தது என்ற கேள்வி எழுந்ததும், பிரபாகரனின் உருவம் என்று ஒரு உருவத்தைக் காட்டிப்பார்த்தார்கள். அது 54 வயது பிரபாகரனும் இல்லை, நெற்றிக்குமேல் தலையும் இல்லை. இந்த நாடகமும் தோல்வியடைந்தபின், யார்யாரையோ தேடிப்பிடித்து, மெய்யாலுமே செத்துட்டார் என்று கற்பூரம் ஏற்றிச் சத்தியம் செய்ய வைக்கிறார்கள்.














அடைத்து வைக்கப்பட்டுள்ள முள்கம்பிகளுக்கு உள்ளே வரிசையில் நின்று சோற்றுக்காக எம் இனம் தட்டேந்தும் நிலையில், வெளியே, வேலிக்கு ஓணான் சாட்சி என்பதைப் போல் கோத்தபாயவுக்காக சாட்சி சொல்லவும் கியூவில் நிற்கின்றன எம் சொந்தங்களில் சில. நாம் நம்ப மறுத்தாலும் அவர் இனி திரும்பிவரப் போவதில்லை என்று மூக்கைச் சீந்துகின்றன. இவர் நம்புவதிலும் நம்ப மறுப்பதிலுமா அந்த மனிதனின் உயிர் இருக்கிறது! அவர் ஒருபோதும் திரும்பிவரக்கூடாது என்ற தன்னுடைய ஆசையை அல்லது நம்பிக்கையை ஆண்மையோடு அறிவித்துத் தொலைக்க வேண்டியதுதானே!

போர்த் திறனுக்காக மட்டுமின்றி நிர்வாகத் திறனுக்காகவும் பாராட்டப்பட்டது பிரபாகரனின் உன்னதத் தலைமை. நெற்றிக்குமேல் தலையே இல்லாமல் காட்டப்பட்ட ஒரு உருவத்தில், தலைமயிருக்குக் கருப்புமை பூசப்பட்டிருந்ததாகப் புழுதி கிளப்பும் கட்டுரையாளர், அந்தத் தலைமைபற்றி ஒரு புகார்ப்பட்டியலையும் சமர்ப்பிக்கிறார். அதுகூட அவரது குற்றச்சாட்டுகள் இல்லையாம், பிரபாகரன் தன்னைத் தானே நொந்துகொள்கிறாராம். அப்படிப் போகிறது கதை.













கடைசிக்காலத்தில் என்னவிதமான சிந்தனைகள் அவரது மனதில் ஓடியிருக்கும் என்று தனக்குத்தானே கேள்வியெழுப்பிக்கொண்டு, தனது கடவுளின் கடைசிக்காலத்தைக் கடைவிரிக்கிறார் கட்டுரையாளர். அதில் கூறப்பட்டிருக்கும் சில குற்றச்சாட்டுகள், "தமிழினத்தைத் தவிர வேறெதைக் குறித்தும் கவலைப்படாத" ஆனந்த சங்கரி வகையறாக்களால் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டவைதான் என்றாலும், இரண்டில் மட்டும் கூடுதல் விஷமம் தொனிக்கிறது. ஒன்று, அன்டன் சொன்னதை பிரபா கேட்கவில்லை என்கிறது. இன்னொன்று, பிரபாவை தமிழ்ச்செல்வன் ஏமாற்றிவிட்டார் என்கிறது.

வல்லரசு சக்திகளின் கேந்திர நலன்கள் சார்ந்து இயங்கவேண்டும் என்று பாலா அண்ணை திரும்பத் திரும்பச் சொல்லிய ஆலோசனைகளை கிரகித்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது என்று (பிரபாகரன்) நினைத்திருப்பாரோ? என்று கூடுவிட்டு கூடு பாய்கிறார் கட்டுரையாளர்.

அன்டன் மீண்டும் மீண்டும் சொல்லியும் பிரபா கேட்கவில்லை என்று பழிசுமத்துவதுடன் நின்றுவிடுவதா? ஒரே கல்லில் இரண்டு கருத்தகொளும்பன் அடிக்கவேண்டாமா? அதனால்தான், இந்த நிலைக்கு வந்துவிட்டோமே என்று பிரபா நொந்துபோனதாக நூல் விடுகிறார். தலையில் பூசியிருந்ததாகச் சொன்ன கருப்புமையை அந்த மாவீரனின் முகத்திலும் பூசி திருப்தியடைகிறார்.

பாலாவும் பிரபாவும் ஒருவரையொருவர் முழுமையாகப் புரிந்து வைத்திருந்தவர்கள். காசி ஆனந்தன் சொன்னதைப் போல், பாலா பிரபாகரனுக்குத் தாயாகவும் இருந்தார், மகனாகவும் இருந்தார். அவர் சொன்னதை இவர் கேட்கவில்லை என்று, பாலா இல்லையென்ற தைரியத்தில் யாரும் பேசக்கூடாது. பாலா இல்லைதான். ஆனால், அடேல் இருக்கிறார்.













தமிழ்ச்செல்வன் மீதான குற்றச்சாட்டு, இறந்தும் வாழும் அந்த மாவீரனின் புகழுடம்பைப் பேனாக் கத்தியால் கிழிக்கும் முயற்சி. வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்ட தமிழ்ச்செல்வன், மாறிவரும் உலகின் போக்குபற்றி சரியான தகவல்களைத் தராமல் தன்னை தவறாக வழிநடத்திவிட்டதாக பிரபாகரன் நினைத்திருப்பாரோ என்கிறார் கட்டுரையாளர். பிரபாகரனை தமிழ்ச்செல்வன் ஏமாற்றியிருக்கிறார் என்பதுடன் நின்றுவிடாது, பிரபாகரன் ஏமாந்துவிட்டார் என்றும் அறிவுப்பூர்வமாக அறிவிப்பதுதான் எழுதியவரின் நோக்கம்.

போர்க்களத்தில் வேரூன்றி, சமாதான தளத்தில் காலூன்றியவர் எஸ்.பி. தமிழ்ச்செல்வன். அதனாலேயே அமைப்பு அவருக்கு முக்கியத்துவம் கொடுத்தது. இது கட்டுரையாளருக்குப் பிடிக்கவில்லை, தமிழ்ச்செல்வனை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்ததும் பிடிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

புலத்திலிருக்கும் தமிழர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் விதத்தில் எழுதுகிற, பேசுகிற, செயல்படுகிற நபர்களை தனது வெளிநாட்டுப் பயணங்களின்போது எஸ்.பி. நேரிலேயே கண்டித்திருப்பது பழைய செய்தி. கட்டுரையாளரின் இப்போதைய வார்த்தைகளைப் பார்க்கும்போது, இதேமாதிரி குழப்பம் ஏற்படுத்தும் விதத்தில் ஏற்கெனவே இவர் எழுதியிருப்பாரோ என்ற சந்தேகம் இயல்பாகவே எழுகிறது.

தனது தவறுகள் பற்றிய சிந்தனையே இல்லாமல், எல்லாவற்றையும் தான் சரியாகவே செய்திருப்பதாக இறக்கும் தருவாயில் பிரபாகரன் நம்பியிருப்பாரோ என்ற வார்த்தைகள் பிரபாகரன் மீது கட்டுரையாளர் வைத்துள்ள உண்மையான மதிப்பீடு என்ன என்பதை அம்பலப்படுத்துகிறது. இதை மறைக்கவே, மானாவாரியாக சகதிவாரிப் பூசிவிட்டு, எங்களாலும் முடியும் என்று அவர்தான் எங்களை நம்பவைத்தார் என்றெல்லாம் சந்தனம் பூசுகிறார்.















பிரபாகரனின் உன்னதத் தலைமையில் ராணுவ அளவிலும் நிர்வாக அளவிலும் மிகச் சிறந்த கட்டமைப்பைக் கொண்ட வலுவான அரசமைப்பாக தலைநிமிர்ந்த தமிழ் ஈழம், ஒன்று இரண்டல்ல.... நான்கைந்து வல்லரசுகளின் துணையோடுதான் வீழ்த்தப்பட்டிருக்கிறது. இதற்காக நாம் வருந்துகிறோம். கட்டுரையாளரோ 30 வருடமாக பிரபாகரன் கட்டிவளர்த்த தமிழ் சாம்ராச்சியம் அவர் கண்களுக்கு முன்பே துகள்களாக உடைந்து நொறுங்கி மண்ணோடு மண்ணாகிவிட்டது என்று ஈவிரக்கமில்லாமல் வருணிக்கிறார். லிப்ஸ்டிக் பூசப்பட்ட உதட்டிலிருந்து உதிரும் வார்த்தைகளுக்கும், அவரது அடிமனத்தில் அடர்ந்துகிடக்கும் அழுக்குக்கும் தொடர்பில்லாததை இந்த வார்த்தைகளிலிருந்து தெளிவாக அறியமுடிகிறது.

பிரபாகரன் திரும்ப வருவார் என்ற பொய்யான நம்பிக்கையை ஊட்டுவது அவரை நம்பி இந்தப் போராட்டத்தின் முதுகெழும்பாய் இருந்த மக்களுக்குச் செய்யும் இரண்டகம் என்று கோபத்தோடு புழுதிவாரித் தூற்றும் கட்டுரையாளரைக் கேட்கிறேன்.... அன்புள்ள ஐயாவே... பிரபாகரனைக் கடவுளாகவே மதிக்கும் ஐயாவே... இரண்டகம் செய்வது யார்?

பிரபாகரன் இறந்துவிட்டார் என்று ஜோடிக்கப்பார்க்கும் இலங்கையின் கூற்றை வழிமொழிவதும்இ இருக்கிறார் என்ற நம்பிக்கையை நிராகரிப்பதும் உங்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைப் பொறுத்தது. பிரபாகரனின் தலைமைத்துவம் பற்றியும், அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் கூட நீங்கள் விமர்சிக்கலாம். உங்களுக்கு அதற்கான தகுதி இருக்கிறதோ இல்லையோ, உரிமை இருக்கிறது. ஆனால், அவரது இழப்பைத் தாங்கும் மனோதிடம் எமக்கு இல்லை என்று அழுதுபுலம்பியபடியே அவர்மீது சேறு பூசக்கூடாது. அதைஇ அந்த மனிதனை உண்மையாகவே நேசிக்கும் நாங்கள் வேடிக்கை பார்க்கமுடியாது.

அந்த மாமனிதன் இறந்துவிட்டான் என்று ஒரு போலி உடலைக் காட்டித்தான் பிரச்சாரம் செய்தது இலங்கை. அதனால்தான், பிரபாகரன் இறக்கவில்லை என்று உறுதியாக நம்புகிறோம். அவன் திரும்பிவரும் திருநாளைக் கொண்டாடக் காத்திருக்கிறோம். உங்களுக்கோ, இலங்கை அரசு உண்மையைத் தவிர வேறெதையும் பேசாது என்ற நம்பிக்கை. அதனால், அந்த மாதலைவனுக்கு இறுதிவணக்க மரியாதையைச் செய்யவிடாமல் தடுப்பது நியாயப்படுத்த முடியாத தவறு என்கிறீர்கள். உயிரோடு இருக்கிற ஒரு மகத்தான மனிதனுக்கு இறுதி வணக்கம் செய்யச்சொல்லி வற்புறுத்துவது மட்டும், நியாயப்படுத்திவிடக் கூடிய தவறா?

தமிழ்க்கதிருக்காக,

காற்றுக்கென்ன வேலி திரைப்பட இயக்குநர்

- புகழேந்தி தங்கராஜ்

வரலாறு திரும்பாமலிருக்க வகை செய்யப்படுமா?

வன்னியில் முல்லைத்தீவில் இறுதிக்கட்டப் போர் நடைபெற்ற வேளை, மிகக் குறுகிய இடப்பரப்பில் லட்சக் கணக்கான பொதுமக்கள் கூடியிருந்த போது, போர் நடை பெற்றால் நிச்சயமாக ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்தொழிவர் என்ற நிலையிலும் அதனைத் தடுப்பதில் முனைப்பாகவும் மனிதாபிமானத்தோடும் தமக்குரிய பதவியைப் பயன்படுத்தாமல் இருந்தவர்களில் ஒருவர் பான் கீ மூன்.

அப்போது அவர் தமது பதவி நிலையைப் பயன்படுத்தி இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்திருந்தால், உண்மையான சரியான வழிமுறைகளை உகந்த விதமாகக் கண்டிப்புடன் செயற்பட்டிருந்தால், இறுதிச்சம ரில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்த சர்ச்சையே எழுந்திருக்காது.

இறந்தவர்களின் எண்ணிக்கையை ஐக்கிய நாடுகள் சபை பெருப்பித்துச் சொல்வதாக இலங்கை அரசும், அதனை வெளிப்படுத்த ஐ.நா. தயங்குவதாக சர்வதேசதரப்புகளும் நடத்தும் சர்ச்சைஎழுந்திருக்காது.

இறுதிப் போர் நடைபெற்றால் பொதுமக்களின் அழிவு நினைத்துப்பார்க்க முடியாதளவு இருக்கும் என்று களத்தில் பணிபுரிந்த தொண்டர் நிறுவன அதிகாரிகள் முன்னெச்சரிக்கை செய்த போதிலும், மனிதா பிமானப் போர் இடை நிறுத்தத்தைக்கூட இலங்கை அரசைக் கொண்டு, அதற்கு உரத்த குரலில் அழுத்தம் கொடுத்து ஆரம்பத்திலேயே அமுலாக்க வழிசெய்ய வக்கற்று இருந்த பான் கீ மூன் இப்போது சற்று விழித்திருப்பதாகத் தோன்றுகிறது.

மக்கள் அழிவு நடந்து முடிந்த பின்னர் இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை உரிய முறை யில் செயற்படுத் தவில்லை என்று தமது ஆதங்கத்தை ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சற்றுக் கடுமையான தொனியில் வெளிப்படுத்தி இருக்கிறார் அவர்.

இராணுவ நடவடிக்கைகள் முடிந்த கையோடு, அர சாங்கம் தனக்கு வழங்கிய வாக்குறுதிகளை செயற் படுத்துவதன் முக்கியத்துவத்தை இலங்கை அரசிடம் இப்போது மீண்டும் வலியுறுத்தி உள்ளார் ஐக்கிய நாடுகள் சபையின் செயலா ளர் நாயகம்.

கடந்த மாதம் 22, 23 ஆம் திகதிகளில் இலங்கைக்கு தாம் விஜயம் செய்த பின்னர் வெளியிடப்பட்ட கூட்ட றிக்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒப்புக் கொண்ட கடப்பாடு களை நிறைவேற்றத் தொடங்க வேண்டும் என்று ஐ.நாவின் செயலாளர் நாயகம் தெரி வித்திருக்கிறார்.

இலங்கை ஜனாதிபதி தமக்கு வழங்கிய உறுதி மொழிகளை கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதில் இன்னும் உரிய அளவில் அக்கறை காட்டவில்லை என்றும் மூன் கவலை தெரிவித்திருக்கிறார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அசமந்தப் போக்கு, அல்லது தாமதம் குறித்து அவருக்குக் கடிதம் ஒன்றை ஏற்கனவே அனுப்பி இருப்பதாகவும் மேலும் ஒரு கடிதத்தை வரை யப்போவதாகவும் ஐ.நா. செயலாளர் நாயகம் அறிவித் திருக்கிறார்.

மோதலுக்கு பிந்திய கட்டத்தில் இலங்கை இப்போது உள்ளது. ஆகையால் மீள்குடியேற்றம், மறுவாழ்வு, மீள் இணக்கப்பாடு, நிவாரணம் ஆகியவற்றைச் சீராகவும், சரியாகவும், நேர்மையாகவும் செய்யவேண்டிய உடனடித் தேவை அவசர தேவை உருவாகி உள்ளது. இவற்றை சர்வதேசசமூகத்தின் ஆதரவுடன், உதவியுடனேயேசெய்துமுடிக்க இயலும்.

ஆனால், இந்த விடயங்களில் தமிழ் மக்களின் நலன் சார்ந்த முக்கிய பணிகளில் அரசதரப்பினர் வழமைபோன்று மந்தகதியிலேயேசெயற்படுகின்றனர். தமிழர்கள் சம்பந்தமான விடயங்கள், விவகாரங்களில் எல்லாம் இலங்கை அரசுபேச்சுப்பல்லக்கு தம்பி கால் நடையில் என்ற நிலைதான்...!

இதனை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் மிகத் தாமதமாகவே கண்டு பிடித்திருக்கின்றார். அதனாலேயே அவர் இலங்கை ஜனாதிபதிக்கு இரண்டாவது கடிதம் ஒன்றை எழுதவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார் என நம்பலாம்.

"மீள் இணக்கப்பாட்டுச் செயற்பாடுகள் உடனடியாக ஆரம்பிக்கப்படவேண்டும். வரலாறு மீண்டும் நிகழா மல் இருக்கவேண்டுமானால் தமிழ்ச் சிறுபான்மையின ரோடும் ஏனைய மக்களோடும் இலங்கை அரசாங்கம் கைகோர்க்க வேண்டும்.

"மீண்டும் சொல்கிறேன் மீள் இணக்கம் தொடர்பாக முதல் காலடிகள் கட்டாயமாக இப்பொழுதே, உடனடி யாகவே எடுத்துவைக்கப்படவேண்டும்." என்று ஐ.நா. தலை மையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அழுத்திக் கூறியிருக்கிறார் பான் கீ மூன்.

அவரது இந்த இடித்துரைப்பு, அறிவுறுத்தல் இலங்கை அரசின் காதில் ஏறுமா? அதன் பிரகாரம் தமக்குள்ள பொறுப்புக்களை, கடமைகளை உரிய வீச்சுடன் செயற்படுத்துமா என்பன பொறுத்திருந்திருந்து பார்க்கப்பட வேண்டியவையே.

மோதல்களின் இறுதிக்கட்டத்தில் சர்வதேசசட்டங்கள் மீறப்பட்டிருக்கக் கூடிய தன்மைகள் குறித்து வெளிப் படையாகவும் பொறுப்பேற்கும் தன்மையோடும் விசாரணைகளை மேற்கொள்வது தொடர்பான வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு ஐ.நா.செயலாளர் நாயகம் தமது அடுத்த கடிதத்தில் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அதுவிடயத்தில் இலங்கை அரசுதனது நிலைப் பாட்டை மாற்றிக்கொள்ளுமா என்பது சந்தேகமே....!
நன்றி - உதயன்

இந்தியாவின் அரசியல் தீர்வும் பாதுகாப்பு ஒப்பந்தமும்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் புதுடில்லி வருகையால் இலங்கை அரசு பீதியடையத் தேவையில்லையென இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் கூறியுள்ளார். அத்தோடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்ன முடிவெடுத்தாலும் அதனை இந்தியா உறுதியுடன் ஆதரிக்குமென்று ஒப்புதலும் வழங்கியுள்ளார்.

இந்தியஇலங்கை பாதுகாப்பு ஒப்பந்தம் உருவாகும்வரை, சகல விட்டுக் கொடுப்புகளையும் சமரசங்களையும் இந்தியா மேற்கொள்ளுமென்பதை சிவ்சங்கர் மேனனின் கூற்றிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
தென்னிலங்கையில் சீனா முன்னெடுக்கும் நகர்வுகளை, இந்தப் பாதுகாப்பு ஒப்பந்தம் முறியடிக்க உதவுமென்பது இந்தியாவின் கணிப்பு.

இவை தவிர, வேறெந்த நகர்வுகளையும் இந்தியாவால் முன்னெடுக்க முடியாது.

அந்த ஒப்பந்தம் ஏற்படும் வரை இலங்கையும் தனது இராஜதந்திரச் செயற்பாடுகளை இந்தியாவினூடாக கையாள முயற்சிக்கும். அதேவேளை சர்வதேசம் முன்வைக்கும் யுத்தக் குற்றச் சாட்டுகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இந்தியாவின் பேருதவி இலங்கைக்குத் தேவை.

பரஸ்பர தேவைகளின் அடிப்படையில் அறிக்கைகளை விடுத்துக் கொண்டிருக்கும் இரண்டு நாடுகளும் தாயக மக்களின் தற்போதைய அவல நிலை குறித்து அக்கறையுடன் செயற்படுவதாகக் கருத முடியாது.

வன்னியிலுள்ள விவசாய நிலங்களை கையகப்படுத்தும் சில நகர்வுகளை, இந்தியா மேற்கொள்வதாக இந்தியப் பத்திரிகைகள் கூறுகின்றன.

அகதி முகாம்களுக்கு, 13 ஆவது திருத்தச் சட்டம் எவ்வாறு பொருந்துமென்பதை இந்தியாவின் சமூகவியல் அறிவியலாளர்களே கூற வேண்டும். அந்த முகாம்களில் வாழும் மக்களுக்குப் பஞ்சாயத்து அரசியல் தீர்வினைத் திணிக்க இவர்கள் முற்படலாம்.

விடுதலைப் புலிகளோடு அரசு நடத்திய ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளிலும் ரணில் விக்கிரம சிங்க கைச்சாத்திட்ட ஒப்பந்தத்திலும் வடக்கு கிழக்கு மக்களின் இயல்பு வாழ்வு நிலை நிறுத்தப்பட வேண்டிய முதன்மைச் செய்தியே முன்னிறுத்தப்பட்டது.

அதியுயர் பாதுகாப்பு வலயப் பகுதிகளில் மக்கள் மீளக் குடியமர்த்தப்பட வேண்டுமென்ற காலக்கெடு விதிக்கப்பட்ட செய்தி அரசால் புறந்தள்ளப்பட்டது.

புதுடில்லி சென்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இதனையே இன்றும் வலியுறுத்துகின்றனர். இயல்பு வாழ்க்கை நிலைநாட்டப்படாமல் அரசியல் தீர்வு சாத்தியமில்லையென்பதை இந்தியா உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை.
அரசியல் தீர்வினை ஜனாதிபதியின் கரங்களில் ஒப்படைத்துள்ள காந்தி தேசம், அவலப்படும் மக்களின் இயல்பு வாழ்வு குறித்த தீர்வினையும் அவரிடமே ஒப்படைத்துள்ளது.

விடுதலைப் புலிகள் இல்லாத சூழலில் அரசியல் தீர்வு குறித்து தலையிடுவோமென்று கூறிய இந்தியா இன்று தலைகீழான நிலைப்பாட்டினை எடுத்திருப்பது பற்றி கொழும்பு, தமிழ் நாடு, புதுடில்லி என்னும் அரசியல் கோட்டினை வரையும் அறிவாளிகள் விளக்க வேண்டும்.

பிராந்திய ஆதிக்க விரிவாக்க தலையீட்டிற்கான ஓர் ஆயுதமாகத் தமிழ் மக்கள் பிரச்சினை இந்தியாவால் பயன்படுத்தப்படுகிறது என்னும் சூத்திரத்தை புரிந்து கொண்டால் தற்போதைய பின்னடைவுகளை புரிந்து கொள்ளலாம்.

அதேவேளை, அரசியல் தீர்விற்கான குறைந்தபட்ச கோரிக்கைகளை நாம் முன்வைக்க வேண்டுமெனவும் அவ் வேண்டுதலை இந்தியாவினூடாக முன்வைப்பதைத் தவிர வேறு மார்க்கமில்லையெனவும் சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

மறுபடியும் இனப்பிரச்சினையை இந்திய எல்லைக்குள் முடக்கி, சர்வதேசத் தலையீட்டினைப் புறந்தள்ள மேற்கொள்ளும் நகர்வாகவே இந்தியச் சரணாகதி அரசியலை புரிந்து கொள்ளலாம்.

திம்பு பேச்சுவார்த்தை காலத்தில் இந்தியக் கைகளுக்குள் முடங்கிக் கிடந்த இலங்கைத் தமிழர் பிரச்சினை, தற்போது சர்வதேச விவகாரமாக மாறி விட்டது. ஆயினும், இலங்கை அரசியலில் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் ஒரு தீர்மானகரமான சக்தியாக மீண்டெழக் கூடாதென்பதில் இவ்விரு நாடுகளும் உறுதியாக இருப்பது போல் தெரிகிறது.

சீமெந்துத் தொழிற்சாலை, திருமலை எண்ணெய்க் குதங்கள், வன்னி நிலப்பரப்பு போன்றவற்றை தம்வசமாக்கி, பொருண்மிய ஆக்கிரமிப்பொன்றை நிகழ்த்த திட்டமிடும் இந்திய அரசு, தீர்வுத்திட்ட விவகாரங்களிலோ அல்லது தமிழ் மக்களின இயல்பு வாழ்வு குறித்தோ அதிக கரிசனை கொள்ளுமென்று கருத முடியாது. வன்னி நிலப்பரப்பில் பௌத்த சின்னங்களைத் தேடும் அகழ்வாராய்ச்சி முன்னெடுக்கப்பட வேண்டுமென பிக்குகள் முன்னணி விடுக்கும் செய்தியில் தாயகக் கோட்பாட்டினை மறுக்கும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டு கால யுத்தத்தில் வன்னி மண்ணில் புதைக்கப்பட்ட தமிழ் மக்கள் குறித்து இவர்கள் கவலை கொள்ளவில்லை.உயிரற்ற சடலங்கள் பாதுகாப்பு வலயத்திலும் உயிருள்ள நடைப் பிணங்கள் வவுனியா முகாம்களிலும் நிறைந்து காணப்படுகின்றன.

யுத்தக் குற்றங்களையும் இனப்படுகொலைகளையும் மூடிமறைக்க இந்தியா வழங்கும் ஆதரவு குறித்து புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழினம் விசனமடைந்திருப்பதை சிவ்சங்கர் மேனன் போன்றோர் புரிந்து கொள்ளவில்லை.
வாழ்வõதாரங்களைச் சிதைத்து, அடக்குமுறை வடிவங்கள் விரிவடைந்து செல்லுமாயின் போராட்டங்கள் முனைப்படைவதை தடுத்து நிறுத்த முடியாமல் போகும்.

பிராந்திய நலனுக்குள் ஒரு பூர்வீக தேசிய இனத்தின் விடுதலை உணர்வு நசுக்கப்படுமென்கிற தவறான வரலாற்றுப் பதிவினை இந்தியா நிறுவ முற்படுமாயின் இலங்கைத் தமிழினத்தின் பாதையும் வேறு திசை நோக்கி பயணிக்கும்.

புலம்பெயர் தமிழ் மக்களை பிரித்தாள இந்தியா மேற்கொள்ளும் ""அவர் இருக்கிறாரா, இல்லையா'' என்கிற இடைச் செருகல் விளையாட்டும் முறியடிக்கப்படும்.
சி.இதயச்சந்திரன்

Saturday, June 13, 2009

இந்தியா போன்ற சர்வதேச சதிகார சக்திகளின் அரசியல் சதுரங்க விளையாட்டுக் களமாக தமிழ்மக்களின் தாயக பூமி!

விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கான போர் என்ற பெயரில்- தமிழ் மக்களுக்கு எதிராகவே இலங்கை அரசாங்கம் யுத்தத்தை நடத்தியது. இந்தப் போர் தனியே இலங்கை அரசாங்கத்தால் மட்டும் நடத்தப்பட்ட ஒன்றல்ல.

உலகின் பல்வேறு பாகங்களையும் சேர்ந்த- இருபது நாடுகள் இணைந்து நடத்திய போர் இது. சர்வதேசம் போரை நிறுத்துமாறு தமக்கு அழுத்தம் கொடுத்தது- ஆனாலும் தனியே நின்று போரை வென்று காட்டினோம் என்று, கடந்த சில வாரங்களாக கூறி வந்த இலங்கை அரசு- இப்போது தான் சில உண்மைகளைப் போட்டுடைக்கத் தொடங்கியிருக்கிறது.

இருபது நாடுகளின் உதவி ஒத்துழைப்புடன் தான் இலங்கை அரசு போரில் வெற்றி பெற்றது என்ற உண்மை- கடந்த செவ்வாயன்று அவசரகாலச் சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தின் போது தான் வெளியே வந்தது.

அப்போது தான் முதல்முறையாக வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம, புலிகளுக்கு எதிரான போரில் வெற்றிபெற உதவிய இருபது நாடுகளுக்கும் தமது நன்றியைத் தெரிவித்திருந்தார்.

ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பையும்- அதற்கு நிழல் கொடுத்து நின்ற மக்கள் கூட்டத்தையும் அழித்து- அடக்குவதற்கு இருபது நாடுகள் கைகோர்த்தது போன்ற நிகழ்வு உலகில இதற்கு முன்னர் நிகழ்ந்திராத ஒன்று.

உலகில் எத்தனையோ போர்கள் நடந்திருக்கின்றன. இந்தப் போர்களில், ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகள் கூட்டணி சேர்ந்து போரை எதிர்கொண்டிருக்கின்றன.

ஆனால் அவையெல்லாம் ஏதாவதொரு நாட்டுக்கு எதிராகவே இடம்பெற்றிருக்கின்றன. இரண்டாம் உலகப்போரின் போது- ஜேர்மனிக்கு எதிராக, ஜப்பானுக்கு எதிராக நேச நாட்டுப் படைகள் கூட்டாகத் தாக்குதல் நடத்தின. அதுபோன்றே சோவியத் யூனியனுக்கு எதிராக ஜேர்மனியும் தனது நட்பு நாடுகளுடன் இணைந்து போரை நடத்தியது.

ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும், யூகோஸ்லாவியாவிலும்- அமெரிக்கா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் ஒன்றிணைந்து தான் யுத்தத்தை நடத்தின.

அரசியல் கட்சிகள் கூட்டணி சேர்ந்து தேர்தலைச் சந்திப்பதைப் போன்று- உலகப் போர்களின் வரலாற்றில் பல நாடுகள் கூட்டணி சேர்ந்து போரை நடத்திய சம்பவங்கள் நிறையவே நிகழ்ந்துள்ளன.

ஆனால் ஒரு விடுதலை அமைப்புக்கு எதிராக இருபது நாடுகள் இணைந்து நடத்திய யுத்தம் இது. இந்த வகையில் பார்க்கும்போது இதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. உண்மையில் புலிகளின் பலத்தை- அவர்களின் போர்த்திறனை இப்போது தான் அதிகமாக மதிப்பிடத் தோன்றுகிறது.

இருபது நாடுகள் இணைந்து நடத்திய போரை- ஒரு சிறிய மக்கள் கூட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விடுதலை அமைப்பு ஒன்று- மூன்று வருடங்களாக எதிர்கொண்டு போராடியது என்ற, வியப்பான உண்மை இப்போது தான் உலகில் பலருக்கும் தெரியவருகிறது.

இலங்கை அரசின் படைகளுக்கு முன்னால்- புலிகள் தோல்வியைத் தழுவவில்லை. உலகில் மிகப் பலம் வாய்ந்த நாடுகளின் இராணுவ வல்லமை, அவற்றின் சதித் திட்டங்களின் விளைவாகவே புலிகளின் இராணுவ வல்லமைக்குத் தோல்வி ஏற்பட்டிருக்கிறது.

புலிகளுக்கு எதிரான போரில் வெற்றியீட்ட இலங்கைக்கு உதவிய இந்த நாடுகளின் பட்டியலை வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம வெளியிடவில்லை. ஆனால் இந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா மிகவும் முக்கியமானதும் முதன்மையானதுமான நாடாக இருக்கிறது என்பது மட்டும் உண்மை.

இந்தியா கொடுத்த ஆயுதங்கள், புலனாய்வுத் தகவல்கள், இராஜதந்திர உதவிகள் என்பன இந்தப் போரில் இலங்கை அரசு வெற்றி பெறுவதற்கு முக்கியமான புறக்காரணிகளாக இருந்துள்ளன.

'இறுதிக் கட்ட யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட காலம் வரை வடக்கின் போர் நிலைமைகள் குறித்து இந்தியாவுக்கு அறிவித்துக்கொண்டேயிருந்தோம். இந்திய அதிகாரிகளுடன் இணைந்து இதற்கான கட்டமைப்பு ஒன்றையும் உருவாக்கியிருந்தோம்" என்ற மற்றொரு உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறார் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கோத்தாபய ராஜபக்ச.

பி.ரி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே அவர் இந்த விபரங்களை வெளியிட்டிருக்கிறார்.

'புலிகளுக்கு எதிராக நடத்திய இறுதி யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து புலிகள் தோற்கடிக்கப்பட்டது வரை, வடக்கின் நிலைமைகள் குறித்து இந்தியாவுக்கு விரிவாக விளக்கப்பட்டது.

இறுதி யுத்தத்தின் முதல் தினத்திலிருந்து முடிவு வரை இந்தியாவுக்கு சகல விபரங்களையும் அறிவித்தோம். சீனாவுடனோ பாகிஸ்தானுடனோ அல்லது வேறெந்த நாட்டுடனோ நாம் வைத்துள்ள உறவு காரணமாக- இந்தியாவுக்கு எந்தவித சந்தேகமும் ஏற்படாத வகையில் நடந்து கொண்டோம்.

வெளியுறவு அமைச்சின் தொடர்புகளுக்கு அப்பால்- மேலதிகமாக இந்திய அதிகாரிகளுடன் நாம் ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தியிருந்தோம்.

இந்தக் கட்டமைப்பில் இந்தியாவின் சார்பில் வெளியுறவு செயலாளர் சிவ்சங்கர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், பாதுகாப்பு செயலாளர் விஜய் சிங் ஆகியோர் இடமபெற்றிருந்தனர்.

இலங்கை அரசின் சார்பில் என்னுடன் லலித் வீரதுங்க, பசில் ராஜபக்ச ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். இரண்டு குழுக்களும் அடிக்கடி கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதுடன் சந்திப்புக்களையும் நடத்தி வந்தோம்.

சகல விவகாரங்கள் குறித்தும் அவ்வப்போது இலங்கைக் குழு இந்தியாவுக்குச் சென்று இந்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தது.

தமிழகம் கொடுத்த கொடுத்துக் கொண்டிருந்த அழுத்தங்களைப் புரிந்து கொண்டு, நாம் மேற்கொண்ட சில செயற்பாடுகள் இந்தியாவுக்கு உதவியாக இருந்தன. புலிகளுடனான போரின் போது இந்தியாவுடன் நட்புறவை வலுப்படுத்தி மிக நெருக்கமாக செயற்பட்டோம்.

வேறு எத்தகைய அழுத்தங்கள் ஏற்பட்டாலும்- இந்த உறவு முறையால் அந்த அழுத்தங்களை சமாளித்து விடலாம் என்பதைத் தெரிந்திருந்தோம். இந்தியாவின் எண்ணமும் புலிகளை தோற்கடிக்க வேண்டுமென்பதாகவே இருந்தது.

யுத்தத்தின் போது விமானத் தாக்குதலை நிறுத்த இலங்கை எடுத்த முடிவுக்கும் இந்தியாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. விமானத் தாக்குதல் நிறுத்தப்பட்டமை, பாதுகாப்பு வலயம் உருவாக்கப்பட்டமை ஆகிய அனைத்து முடிவுகளும் ஜனாதிபதி மற்றும் படைத் தளபதிகளுடன் கலந்தாலோசித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளே தவிர, இந்தியாவுடன் தொடர்புடைய விவகாரங்கள் அல்ல.

இந்தியா இந்த நடவடிக்கைகளை வரவேற்றது. எனவே இந்தியாவும் உதவியாக இருந்தது." என்று இந்தப் போரில் இந்தியாவின் பங்களிப்பு பற்றிய உண்மைகள் பலவற்றை வெளியிட்டிருக்கிறார்.

இந்தியாவின் துணையுடன் இலங்கை நடத்திய போர் இது என்பதும்- இதற்கென்றே தனியான கட்டமைப்பு ஒன்றை இலங்கை- இந்திய அரசுகள் ஏற்படுத்தி வைத்திருந்தன என்பதும் பலராலும் அதிர்ச்சியோடு பார்க்கப்படும் விடயங்களாவே இருக்கின்றன.

இந்தப் போருக்கு இந்தியா எந்த வழியிலும் உதவவில்லை என்று, மத்திய அரசினது தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை சொல்லி வந்து பொய்களின் முகத்திரை இப்போது கிழிந்து போயிருக்கிறது.

அவ்வப்போது தமிழகத்தில் இருந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்ட போதெல்லாம்- போரை நிறுத்தப் போகிறார் பிரணாப் முகர்ஜி என்றும், எம்.கே.நாராயணனும் சிவ்சங்கர் மேனனும் தாக்குதலை நிறுத்த வலியுறுத்துவார்கள் என்றும் செய்திகள் வெளியிடப்பட்டதும் இந்தக் கூட்டுச்சதியின் ஒரு அங்கமே.

அவர்கள் கொழும்பு போனதெல்லாமே புலிகளை அழிப்பதற்கான வியூகங்களை வகுப்பதற்கே என்ற உண்மை இப்போது வெளிப்பட்டிருக்கிறது.

இலங்கையும் இந்தியாவும் இணைந்து இரகசியமாக அரங்கேற்றிய இந்தச் சதி நாடகத்தின் உண்மைகளைப் புரிந்து கொள்ளாமல்- ஈழத் தமிழர்கள் இந்தியா உதவும் என்று நம்பி நம்பியே மோசம் போயினர். இப்படி ஏமாந்து போனவர்கள் ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல. தமிழக மக்களும் தலைவர்களும் கூட.

போரை நிறுத்துமாறு இந்தியா அழுத்தம் கொடுத்தது- கொடுக்கிறது. இலங்கை அரசு போரை நிறுத்தி விட்டது என்று தமிழகத் தலைவர்களுக்கும் மக்களுக்கும் மத்திய அரசு திரும்பத் திரும்ப பொய்யையே கூறிக்கொண்டிருந்தது.
ஆனால் என்ன நடந்திருக்கிறது?

பிரணாப் முகர்ஜியோ, எம்.கே.நாராயணனோ, சிவ்சங்கர் மேனனோ போரை நிறுத்த வலியுறுத்தவும் இல்லை- அதற்கு அழுத்தம் கொடுக்கவும் இல்லை. அப்படிச் சொல்லிக்கொண்டு இவர்கள் கொழும்பு போய் வந்தெல்லாம் வெறும் நாடகமே.

இவர்கள் இலங்கை அரசாங்கத்தோடு இணைந்து தமிழகத்;தை ஏமாற்றியிருக்கிறார்கள். விமானத் தாக்குதல் நிறுத்தப்பட்டது, பாதுகாப்பு வலயம் உருவாக்கப்பட்டது என்று எதிலுமே இந்தியாவின் தலையீடு இருக்கவில்லையாம். எல்லாமே இலங்கை அரசாங்கத்தினது முடிவுகள் தான் என்று கூறியிருக்கிறார் கோத்தாபய ராஜபக்ச.

அப்படியானால், இந்திய மத்திய அரசு தமிழக மக்களுக்கு இந்தப் போர் பற்றிக் கூறிய அனைத்துமே பொய் என்பது நிரூபணமாகியிருக்கிறது. இலங்கை அரசு தனது நாட்டு தமிழ் மக்களையே கொன்று குவித்தது.

இந்தியாவோ தனது நாட்டு தமிழ் மக்களையே நம்ப வைத்துக் கழுத்தறுத்து- நம்பிக்கைத் துரோகம் செய்திருக்கிறது. அதேவேளை இலங்கையில் நடக்கும் போரில் தாம் எந்த வழியிலும் உதவவில்லை என்றும், ஆயுதங்களை வழங்கவில்லை என்றும் இந்திய அரசு தெரிவித்து வந்ததெல்லாம் வெறும் நாடகமே என்பது இப்போது நிரூபணமாகியிருக்கிறது.

காலிமுகத் திடலில் போர் வெற்றியைக் கொண்டாடும் வகையில் இலங்கை அரசு நடத்திய பிரமாண்டமான இராணுவ அணிவகுப்பில்- இந்தியா கொடுத்த ஆயுத தளபாடங்கள் அணிவகுத்துச் சென்றதை எப்படித் தான் மறைக்க முடியும்?

இந்தியா கொடுத்திருந்த ~இந்திரா| ரேடார், 40 மி.மீ எல்-70 ரக விமான எதிர்ப்புப் பீரங்கிகளை விமானப்படையும், ~சயுர|, ~சாகர| போன்ற போர்க் கப்பல்களை இலங்கைக் கடற்படையும் காட்சிப்படுத்தியதைப் பொய்யென்று உரைக்க முடியுமா?

இலங்கைக்கு எந்தவொரு இராணுவ உதவிகளையும் இந்தியா செய்;யவே இல்லை என்றால்- இவையெல்லாம் இந்த அணிவகுப்புக்கு வந்தது எப்படி?

ஒரு உண்மை மட்டும் இப்போது வெளிச்சத்துக்கு வந்திருகிறது. ஈழத் தமிழர்களின் ஆயுதப்போராட்டம் தோல்வியடைந்ததற்கு பலரும் புலிகள் தான் காரணம் என்று கூறுகின்றனர்.

எப்போதும் தோல்வியடைந்தவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது தான் வழக்கம். ஆனால் சர்வதேச சக்திகளின் கைககளில் சிக்கித்தான் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் சீரழிந்து போயிருக்கிறது.

இந்தியா போன்ற சர்வதேச சதிகார சக்திகளின் அரசியல் சதுரங்க விளையாட்டுக் களமாக தமிழ்மக்களின் தாயகபூமி மாற்றப்பட்டிருக்கிறது. இப்போதும் கூட இந்தியா இலங்கை அரசுடன் கொஞ்சிக்குலாவவே விரும்புகிறது.

அதிகாரப்பகிர்வு பற்றி இலங்கைக்கு எந்த அழுத்தமும் கொடுக்காதாம். அது அந்த நாட்டின் உள்விவகாரமாம்.

இப்படிச் சொல்லியிருப்பவர் வேறு யாருமல்ல. இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் தான். ஆக, ஈழத்தமிழரை இந்தியா ஒரபோதும் கைவிட்டு விடாது. அவர்களைப் பாதுகாக்க- கௌரவமாக வாழ நடவடிக்கை என்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அண்மையில் சொன்னதெல்லாம் வெறும் பொய்- பித்தலாட்டம் என்றே முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது.
சுவிசிலிருந்து தொல்காப்பியன்
நன்றி:
"நிலவரம்"