Sunday, November 23, 2008

இலங்கை இனப்படுகொலையை இந்தியத் தலைமை ஆதரிக்கிறது?

* ராஜிவ்-ஜெயவர்தன உடன்படிக்கையை ரத்துச் செய்ய முடியுமென்றால் கச்சதீவு உடன்படிக்கையை ஏன் ரத்துச் செய்ய முடியாது?
** தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி செயலாளர் செயப்பிரகாசம் தினக்குரலுக்குப் பேட்டி

"ஈழத்தமிழின அழிவுக்கு எதிராக, இந்தியத் தலைநகர் நோக்கிய பிரமாண்ட பேரணிகள், உண்ணாவிரதங்கள், கண்டனக் கூட்டங்கள் மற்றும் கதவடைப்புகள், மறியல்கள் என்று பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடத்தி ஒட்டுமொத்த தமிழக மக்கள் குரல் எழுப்பிவருவதுடன் உலகின் எட்டுக்கோடி தமிழர்களும் பொங்கி எழுந்து ஆங்காங்கே எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த இன எழுச்சி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. ஆனாலும், உலகமயமாதல் கொள்கைக்கு உண்மையான விசுவாசியாக இருக்கிற ஒருவருக்கு அந்தப் பாதையிலேயே இந்தியாவையும் நகர்த்திவிட வேண்டும் என்று உறுதி எடுத்திருப்பவருக்கு இனப்போராட்டம் எதுவும் தெரியாது. இனப்படுகொலையை இவர்கள் ஆதரிக்கவே செய்வார்கள்!" என்று தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி செயலாளர் பா.செயப்பிரகாசம் ?தினக்குரலு?க்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கண்டித்துள்ளார். தமிழ் மண்ணையும் தமிழையும் உயிர் மூச்சாகக் கொண்டு எழுத்திலும் பேச்சிலும் வீராவேசமாக செயல்பட்டுவரும் பா.செயப்பிரகாசம் (சூரியதீபன்), இலக்கிய கர்த்தாக்களில் தனித்துவமான இடத்தைப் பெற்றவர். கதை, கவிதை, கட்டுரை என்று சமூகநீதி வெளிப்படும் இவரது பல படைப்புகள் தமிழ்நாட்டின் ஏராளமான சஞ்சிகைகள், தினசரிகள்,இணைய இதழ்களில் வெளிவந்தன - வருகின்றன.

சில பல்கலைக்கழகங்களில் இவரது தொகுதி பாடமாக உள்ளது. இவரது படைப்புகளில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்ற மாணவர்களும் உண்டு. தமிழீழப் பயணம் பற்றிய இவரது ?ஈழக் கதவுகள்? நூல், அந்த மண்ணின் காயத்தையும் கண்ணீரையும் வெளிக்கொணரும் அனுபவ இலக்கியமாகத் திகழ்கிறது.

மாணவப் பருவத்திலேயே இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் கலந்துகொண்டு கைதாகி பல நாட்கள் சிறைவாசம் அனுபவித்த இவர் இன்று; ஈழத் தமிழின படுகொலையைக் கண்டித்து போராட்டங்கள் தமிழகத்தில் எங்கு நடந்தாலும் ஆர்வத்தோடு பங்கேற்று உண்மைகளை வெளிப்படுத்தி ஈழத்தமிழரின் உரிமைக்காக தோள்கொடுத்து வாதாடி வருகிறார்.

தனது தமிழீழ பயணத்தின்போது மாவீரர்கள் துயிலுமிடங்களில் கால் பதித்ததை உணர்வு பூர்வமாகக் கூறி பெருமைப்படுகிறார்.

இவருடன் ஒரு நேர்காணல். கேள்வி :- "தமிழகத்திலுள்ள கட்சிகள் குறுகிய அரசியல் கண்ணோட்டத்துடன் மத்திய அரசைக் குறைகூறி வருகின்றன. இவர்களால் எதுவுமே செய்ய முடியாது" என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ?தேசிய முரசு? எனும் காங்கிரஸ் மாதமிருமுறை இதழை கடந்தவாரம் வெளியிட்டுவைத்து கூறியிருக்கிறாரே? பதில் :- ஈழத் தமிழர்கள் மீது மிகப்பெரிய இனப்படுகொலை நடந்து வருகிறது.

இதற்கு இந்தியா ஆயுத உதவி, இராணுவப் பயிற்சி, நிதி உதவி அளித்துவருகிறது. இன்னும் இதை தெளிவாகச் சொன்னால் இலங்கை அரசைவிட இந்தியாதான் இந்த யுத்தத்தை முன்நின்று நடத்துகிறது என்று கூறலாம். ஆயுதங்கள் கொடுக்காதே, போரை நிறுத்து என்று தமிழகத்திலுள்ள கட்சிகள் கண்டித்தால் அது குறுகிய அரசியல் நோக்கமா? போரில், தானும் ஒரு கூட்டாளியாக இருப்பதால், போரை நிறுத்து என்று சொல்ல முடியவில்லை. ராஜபக்ஷ, மன்மோகன்சிங்கை சந்தித்தபோதே போரை நிறுத்த உறுதியாகத் தெரிவித்து தமிழர்கள் படுகொலையைத் தடுத்திருக்க வேண்டும்.

ஓர் இன அழிப்பு பற்றிய சிந்தனையே இல்லாமல் காங்கிரஸ்காரர்கள் பேசுகின்றார்கள். அதனால்தான் தமிழகத்தில் காங்கிரஸார் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறார்கள். தி.மு.க., அ.தி.மு.க., என்று யாராவது ஒருவர் தோள்மீது தொத்திக்கொண்டுதான் தமிழகத்தில் இவர்கள் அரசியலில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கேள்வி :- "ஈழத் தமிழர் பிரச்சினையை குறிப்பாக போர் நிறுத்தத்தை ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பாதுகாப்புக் குழு கவனத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். தமிழக முதல்வர் இதில் உடனடி கவனம் செலுத்த வேண்டும்" என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை பற்றி...? பதில் :- டாக்டர் ராமதாஸ் இக்கோரிக்கையை விடுத்தபோது, முதல்வர் கோயம்புத்தூரில் தி.மு.க.மாநாட்டில் இருந்தார். இதுபற்றி செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது, சென்னை திரும்பியதும் இது பற்றி பரிசீலிக்கலாம் என்றும் மத்திய அரசு மூலமாக நடவடிக்கை எடுக்கலாம் என்ற பாவனையில் முதல்வர் பதிலளித்திருந்தார்.

இவ்விடயத்தில் கடந்த கால சம்பவங்களை நினைவுபடுத்த வேண்டும். இலங்கை ஒரு நாடு. அந்த நாட்டின் பூர்வீக இனம் தமிழினம். தமிழினம் என்ற அடையாளமே இல்லாமல் செய்வதற்கான போரை பௌத்த - சிங்கள அரசு செய்து கொண்டிருக்கிறது. போரின் உச்சக் கட்டமாக மூன்று லட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் இருக்க இடமின்றி, உணவின்றி,மருத்துவ வசதிகளின்றி காடுகளில் காலத்தை ஓட்டுகின்றார்கள். இந்தக் கொடூரமான நிகழ்வை ஐ.நா. பாதுகாப்புக் குழுவுக்கு கொண்டுபோவது வரவேற்கத்தக்கது. அதற்காக மத்திய அரசின் தயவை நாடவேண்டிய அவசியமே இல்லை! 1983இல் கறுப்பு ஜூலை என்று சொல்லப்படுகின்ற காலத்தில் மோசமான சம்பவங்கள் இலங்கையில் நடந்தபோது அந்த அத்துமீறல்களைக் கண்டித்து தமிழகத்தில் ஒரு கோடி கையெழுத்துக்களைச் சேகரித்து 7-8-1983இல் ஐ.நா.செயலாளருக்கு நேரடியாக அனுப்பியவர் கருணாநிதி. அன்று அவர் எதிர்க்கட்சித் தலைவர். இலங்கை சுதந்திரம் பெற்ற 1948இலிருந்து தமிழர் உரிமைகள் பறிப்பு, தமிழர் மீதான இனவெறித் தாக்குதல்கள், படுகொலைகள் என்பவற்றை எல்லாம் தொகுத்து பட்டியலிட்டு அனுப்பியிருந்தார். அந்த நேரம், இலங்கைத் தமிழர் பாதுகாப்புக் குழுவின் தலைவராகவும் கருணாநிதி இருந்தார். இப்போதும் காலதாமதமின்றி ஐ.நா.வுக்கு அதன் கவனத்துக்கு அவர் கொண்டுவர துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகின்றோம். இன்று கலைஞர் முதல்வராக இருக்கின்றார். முறையான வழியாகத்தான் (மத்திய அரசு மூலமாக) இதனைச் செய்ய வேண்டும் என்று அவர் கூறலாம். மத்திய அரசுக்கு மகஜர் அனுப்பி, ஐ.நா. மன்றத்தில் எழுப்ப வேண்டும். அதுதான் முறை என்று கூட விளக்கம் சொல்லலாம். தமிழக முதல்வர் என்ற முறையில் அவர் இந்தப் பிரச்சினையைப் பார்க்கிறாரா? அல்லது ஒரு தமிழன் என்ற வகையில் அணுகுகின்றாரா? தமிழன் என்ற அடிப்படையில் எந்த மத்திய அரசையும் அவர் கேட்கவேண்டியதில்லை! அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்து செயல்பட்ட கலைஞர், இன்று பன்மடங்கு வேகத்தில் உடனடியாக களத்தில் இறங்கலாம். கேள்வி :- திருமதி இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து இந்திய பாராளுமன்றத்தில் பேசுகையில் (1983), "இலங்கையில் நடப்பது உள்நாட்டுச் சண்டை அல்ல. இனப்போராட்டம்" என்று உண்மை கூறினார். அவர் வழிவந்த காங்கிரஸ் பிரதமர் மன்மோகன் சிங், சாதாரணமாக போரை நிறுத்து என்று கூட கூறாததன் காரணம் என்ன? பதில் :- அப்போதைய பிரதமர் திருமதி இந்திரா காந்திக்கு வல்லரசுக் கனவு இல்லை. அவருடைய தந்தை நேரு பிரதமராக இருந்தபோது கூட, இந்தியா ஒரு வல்லரசாக வேண்டும் என்ற கொள்கை இல்லை. இந்தியா ஒரு நடுநிலைமை நாடு என்ற கம்பீரத்தை நிலை நிறுத்துவதிலேயே நேரு குறியாக இருந்தார்.

நடுநிலையாக நின்று பார்ப்பவர்களுக்கு மட்டும்தான்,அது ஒரு இனப்போராட்டம் - அந்த இனத்தின் விடுதலைப் போராட்டமாகத் தெரியும்! (16 ஆம் பக்கம் பார்க்க) கேள்வி :- இலங்கை அரசுக்கு எதிரான போராட்டங்கள் தமிழகம் எங்கும் தீவிரப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தமிழக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒதுங்கி இருப்பது போல் தெரிகிறதே? பதில் :- தமிழக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமல்ல, அகில இந்திய தலைமையும் இந்த நோக்கில்தான் செயல்படுகிறது. "மக்கள் என்பது தேசிய இனமே" என்கிறது மார்க்ஸிஸம். அந்த வழியில் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமை, தேசியஇன விடுதலை என்று லெனின் வகுத்த கோட்பாட்டை நடைமுறையில் இவர்கள் நிராகரிக்கிறார்கள்.

இன்னொரு பார்வையில், இந்த நிராகரிப்பு ஏகாதிபத்தியத்தின் கொள்கையாகவும் இருக்கிறது. ஏகாதிபத்திய விரிவாக்கத்திற்காக தேசிய இனங்களின் வளங்களைச் சுரண்டுவது, சுரண்டல் நிமித்தமாக அந்த மக்களின் மொழி, பண்பாடு அடையாளங்களை அழிப்பது, முடிந்தால் அந்த தேசிய இனத்தையே முற்றாக துடைத்தெறிவது என்பதுவே ஏகாதிபத்தியங்களின் கொள்கை. தனக்கு சாதகமாக அமையுமென்றால், கொஸோவோ போன்ற நாடுகளின் விடுதலையை ஆதரிப்பது தனக்கு எதிர்ப்பு வருமென்றால் அந்த விடுதலையையே எதிர்ப்பது என்பதையே ஏகாதிபத்தியங்கள் நடைமுறைப்படுத்துகின்றன. இலங்கைப் பேரினவாத அரசுக்கு அமெரிக்கா நேரடியாகவே பாதுகாப்பு அளிக்கிறது. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடும் செயல்களும் இவ்வகையில் ஏகாதிபத்திய சார்பாக இருக்கிறது என்றே சொல்லலாம்.

கேள்வி :- வடக்கு-கிழக்கு மாகாணங்களை இணைத்து தமிழ் மாநிலமாக அறிவிக்க வேண்டும். இலங்கை கூட்டாட்சி அமைப்பில் அது ஒரு தனி ஆட்சியாக இயங்கவேண்டும் என்று ஜெயவர்த்தனா - ராஜீவ் காந்தி ஒப்பந்தம் கைச்சாத்தானது. கிழக்கு மாகாணத்தைப் பிரித்து ஒரு முதலமைச்சரின் கீழ் நிர்வாகத்தை கொண்டு வந்திருப்பது அந்த ஒப்பந்தத்தையே மீறுவதாக இல்லையா? பதில் :- இரு நாடுகளால் கைச்சாத்திடுவது சர்வதேச ஒப்பந்தமாகும். சிறிமாவோ -இந்திராகாந்தி காலத்தில், கச்சதீவு ஒப்பந்தம் கையெழுத்தானது. கச்சதீவு ஒப்பந்தத்தை ரத்துச் செய்ய வேண்டும் என்று தமிழகம் குரல் எழுப்பும்போது, "அது சர்வதேச ஒப்பந்தம். அதனை தனியாக ஒரு நாடு முறிக்க முடியாது" என்று இலங்கை அமைச்சர்கள் போர்க்குரல் தொடுக்கிறார்கள். ஜெயவர்த்தனா-ராஜீவ்காந்தி ஒப்பந்தமும் சர்வதேச ஒப்பந்தம்தான்.

அதில் கையெழுத்திட்ட இன்னுமொரு நாட்டைப்பற்றி கவலை கொள்ளாமல் தன்னிச்சசையாக கிழக்கு மாகாணத்தை மட்டும் தனிமைப்படுத்தி ஆட்சி நிறுவியது தர்மமா? இவர்கள் மனித உரிமைகளை மட்டுமல்ல, சர்வதேச விதிமுறைகளையும் மீறியிருக்கிறார்கள். இந்த அத்துமீறல் பற்றி இந்தியாவும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஜனநாயகப் பாரம்பரியத்துக்கே பெரிய இழுக்கு! கேள்வி :- ஈழப்பிரச்சினையில் தமிழக இலக்கியவாதிகளின் எதிர்வினை எப்படி இருக்கிறது? பதில்:-இப்பிரச்சினையில் தற்போது தமிழக மக்களிடம் மனிதநேய அலை எழுந்துவருகிறது. மக்களின் பொங்கும் உணர்வுகள் ஒரு முட்டுச் சந்தில் போய் நின்று விடாமல் அந்த உணர்வுகளை மேலெடுத்துச் செல்லும் வகையில் தமிழகப் படைப்பாளிகளின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றது.

தமிழகம் தழுவிய எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஓவியர்கள், திரைப்படத்துறையினர் பலரும் பங்கேற்ற ஒருநாள் தொடர் முழக்கப் போராட்டத்தை தமிழ்ப்படைப்பாளிகள் முன்னணி சார்பில் நடத்தினோம். ஓவியர் புகழேந்தி, கவிஞர்கள் அப்துல் ரகுமான்,இன்குலாய், மு.மேத்தா, பொன். செல்வகணபதி, தமிழச்சி, எழுத்தாளர்கள் பா.செயப்பிரகாசம், இராசேந்திரசோழன், மே.து.இராசுகுமார், பூங்காற்று தனசேகர், நடிகர் சத்தியராஜ், இயக்குநர் சீமான், எழுத்தாளரும் நாடகாசிரியருமான ந.முத்துசாமி எனப்பெருந்திரளானவர்கள் பங்குபற்றினர்.

தமிழ் மக்களுடைய பணத்தில் மினு மினுப்பும், பளபளப்பும், வருவாயும் பெற்று செழித்திருக்கிற தமிழ்த் திரையுலகம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்று இக்கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிப்பதுபோல் இராமேஸ்வரத்தில் கலைத்துறையினர் ஆவேசப் போராட்டம் நடத்தி உணர்வுகளைக் கொட்டினர். இதனைத் தொடர்ந்து தமிழ்த் திரை உலகின் பல்வேறு துறையினரும் தங்களது உள்ளுணர்வுகளை வெளிக்காட்டும் வகையில் போராட்டங்களை நடத்தினர் -ந டத்திவருகின்றனர். ஈழத் தமிழ் மக்களுக்காக தமிழகத்திலுள்ள 221 ஓவியர்கள், கடந்த பதினான்காம் திகதிமுதல் ஒருவாரம் வரை ஓவியப் படையல் செய்கின்றனர்.

ஓவியங்களை விற்பனை செய்தவகையில் கிடைக்கப்பெறும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பணத்தை ஈழமக்களுக்கு அனுப்பவுள்ளனர். ஓர் இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்துக்குத் துணையாக தமிழகப் படைப்பாளிகள் தமது பணியை - பங்களிப்பை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். தமிழகத்தின் முன்னணி சஞ்சிகைகளில் இந்த மாற்றத்தை இன்று தாராளமாககக் காணக்கூடியதாக இருக்கிறது.


நன்றி - தினக்குரல்

Sunday, September 14, 2008

இறுதி யுத்தமும் இந்தியாவும்

கடந்த 09.09.2008 அதிகாலையில் விடுதலைப்புலிகள் வவுனியா இராணுவ கூட்டுத் தலைமையகத்தின் மீது மேற்கொண்ட இருபடைத்தாக்குதல் (தரைப்படை, விமானப்படை) இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நான் இங்கு இந்திய அதிர்ச்சி என்று அழுத்திச் சொல்லுவதற்கு காரணமுண்டு. வழமையாக விடுதலைப்புலிகளின் அதிர்ச்சித் தாக்குதல்களால் கொழும்பு மட்டுமே அதிர்ச்சியடைவதுண்டு.

ஆனால் இம்முறை வழமைக்கு மாறாக கொழும்பின் அதிர்ச்சிக்கு அப்பால் இந்தியாவையும் மேற்படி தாக்குதல் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்தியாவின் அதிர்ச்சிக்கு காரணம், இத்தாக்குதலில் இந்திய பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனையின் கீழ் இயங்கிவரும் பாரத் நிறுவனத்தைச் சேர்ந்த இரு பொறியியலாளர்களும் காயப்பட்டுள்ளதுதான்.

இந்தியா, சிறிலங்கா அரசிற்கு இலகுரக விமானங்களை கண்காணிக்கும் ராடர்களை வழங்கியிருப்பது இரகசியமான ஒன்றல்ல ஆனால் அதனை பராமரிப்பதற்கும், புலிகளின் விமான நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கும் தனது இராணுவ வல்லுநர்களை பயன்படுத்தி வருவது தற்போது அம்பலமாகியுள்ளது.

இவ்வாறான இராணுவ ஒத்துழைப்பானது வெறுமனே சிறிலங்கா இராணுவத்திற்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவது என்பதற்கு அப்பால் புலிகளின் நகர்வுகளை கண்காணித்து அழிக்கும் இரகசிய நடவடிக்கைகளிலும் இந்தியா திரைமறைவில் இயங்கிவருகிறது என்பது இப்போது வெளிப்பட்டுள்ளது.

ஆரம்பத்திலேயே இந்திய புலனாய்வுத் துறை விடுதலைப்புலிகளிடம் விமானங்கள் இருப்பது பற்றி எச்சரித்திருந்தது. ஆனால் புலிகள் விமானத் தாக்குதல்களை மேற்கொள்ளும் வரை சிறிலங்கா அரசு அதைப் பெரிதாக கருத்தில் எடுக்காதது போன்றே காட்டிக்கொண்டது. பட்டம் கூட அங்கு பிறக்கவில்லை என்றே கூறிக்கொண்டிருந்தது.

கடந்த ஆண்டின் ஆரம்பப் பகுதியில் தமது முதல் விமானத் தாக்குதலை மேற்கொண்ட புலிகள், இது வரை ஏழு தடவைகள் வெற்றிகரமாக தாக்குதல்களை மேற்கொண்டு பாதுகாப்பாக தரையிறக்கியுள்ளனர். இந்தியா 2005இல் இலகுரக விமானங்களை கண்காணிப்பதற்கான ராடர்களை சிறிலங்கா அரசிற்கு வளங்கியிருந்தது. புலிகள் கட்டுநாயக்கா விமானநிலையத்தை தாக்கியதைத் தொடர்ந்து, விமானத் தாக்குதல்களை கவனிப்பதற்கான கூடுதல் ஆலோசனைகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்கத் தொடங்கியது.

அதன் பின்னரும் விடுதலைப்புலிகள் வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டு பாதுகாப்பாக திரும்பியுள்ளனர். இந்த நிலையில்தான் தற்போதைய இராணுவ தலைமையகத்தின் மீதான தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. முன்னைய தாக்குதலுக்கும் இதற்கும் உள்ள வேறுபாடு தற்போதைய தாக்குதல் இலக்கே ராடர் நிலையமாக இருந்ததுதான்.

அநுராதபுர அதிர்ச்சித் தாக்குதல்களுக்கு பின்னர் விடுதலைப்புலிகள் மேற்கொண்டிருக்கும் பாரிய தாக்குதல் சம்பவம் இதுவாகும். எதிர்வரும் மாதங்களில் புலிகள் தமது இதுவரைகால நகர்வுகளில் மாற்றங்களை காட்டலாம். இது சிறிலங்கா இராணுவமும் அறியாத ஒன்றல்ல ஆனால் அவ்வாறான மாற்றங்கள் எவ்வாறு அமையப்போகின்றது என்பதில்தான்; தற்போது கொழும்பு பதற்றமடைந்துள்ளது. புலிகளின் குகைக்குள் அகப்பட்டது போன்றதொரு போர்ப் பொறிக்குள்ளே இராணுவம் அகப்பட்டிருக்கிறது.

இந்த பொறியை சிங்களத்தின் படைக்கட்டமைப்பை சிதைக்கும் அழிவுப் பொறியாக மாற்றும் வகையில் புலிகள் தமது தந்திரோபாயத்தை வகுக்கக் கூடும். ஆனால் சிங்களத்திற்குள்ள பிரச்சனை புலிகள் முப்படைத் தாக்குதல்களை பிரயோகிப்பார்கள் என்பதுதான்.

அவ்வாறு புலிகள் முப்படைத் தாக்குதல்களை பயன்படுத்தினால் இராணுவம் பாரிய இழப்புகளை சந்திக்க வேண்டிவரும். இதனைக் கருத்தில் கொண்டுதான் புலிகளின் விமானத் தாக்குதல்களை மட்டுப்படுத்தும் வகையில் சிறிலங்காவிற்கு இந்தியா உதவிவருகிறது.

இந்தியா, மகிந்த நிர்வாகத்தினரால் புலிகளுக்கு எதிராக புதுப்பிக்கப்பட்ட யுத்தத்திற்கு ஆதரவளித்துவருவது வெள்ளிடைமலையாகியுள்ள நிலையில், இந்தியா தற்போதைய யுத்தத்தை தனக்கான ஒரு இறுதிச் சந்தர்ப்பமாக கருதுகிறதா? என்ற கேள்வி எழுகிறது.

சிறிலங்கா அரசைப் பொறுத்தவரையில், அது புலிகளுக்கு எதிரான தமது யுத்தத்தை ஒரு இறுதி யுத்தமாகவே கருதுகிறது. இதில் புலிகளை தோற்கடித்து பூண்டோடு அழித்தொழித்துவிட முடியுமென்று மகிந்த தலைமையிலான சிங்கள ஆளும் வர்க்கம் கருதுகிறது. இந்தியாவின் வெளித்தெரியும், வெளித்தெரியாத அனைத்து நிகழ்ச்சி நிரல்களினதும் அடிப்படை, விடுதலைப்புலிகளை பலவீனப்படுத்த வேண்டும் குறிப்பாக பிரபாகரன் தலைமையை இல்லாதொழிக்க வேண்டுமென்பதுதான்.

இந்தியாவின் கடந்தகால அணுகுமுறைகளின் போது இது தெளிவாக நிரூபணமான உண்மையும் கூட. அப்படியொரு நிகழ்ச்சிநிரலுடன்தான் தற்போது இந்தியா சிறிலங்கா அரசிற்கு முண்டு கொடுத்து வருகிறதா என்ற கேள்வி பலரிடம் எழலாம்.

தற்போதைய நிலைமைகளில் இந்த கேள்வி நியாயமான ஒன்றும் கூட. ஆரம்பத்தில் இந்தியா இலங்கையில் ஒரு இராணுவவலுச் சமநிலை நிலவுவதை ஆதரிப்பது போன்றே காட்டிக்கொண்டது. அதே வேளை தனது அண்டைய நாடுகளில் ஒரு முரண் தணிப்பு நிலைமை நிலவுவது தனது பிராந்திய நலனுக்கு உகந்தது என்ற அடிப்படையில் தனது ஆதரவு நிலைமையை வெளிப்படுத்தி வந்தது.

இவ்வாறானதொரு நிலையில் இந்தியா தன்னை காட்டிக் கொண்ட போதும், மகிந்த நிர்வாகம் இந்தியாவின் மேற்படி எதிர்பார்ப்புகளை சீர்குலைக்கும் வகையில் யுத்தவாத அரசியலை மீள் ஒழுங்கமைப்பற்கு கொண்டுவந்தபோது , இந்தியா அதனை கட்டுப்படுத்த முயலவில்லை. மாறாக இது இலங்கையின் உள்நாட்டு விவகாரம் என்ற தோரணையில் வெறும் அவதானிப்பாளராகவே தன்னைக் காட்டிக் கொள்ள முற்பட்டது. ஆனால் அதே இந்தியா விடுதலைப்புலிகளின் முன்னோக்கிய நகர்வுகளின் போதெல்லாம் அது குறித்து சிங்களத்தை எச்சரிக்கும் ஆலோசனைகளை வழங்கும் பாத்திரத்தை ஆற்றத் தயங்கவில்லை.

இந்த பின்புலத்தில்தான் விடுதலைப்புலிகளின் விமானப்படை கட்டமைப்பை சீர் குலைக்கும் முயற்சியில் இந்தியா தீவிரம் காட்டிவருகிறது. ஏலவே புலிகளின் கடல்வழி விநியோகங்களை கட்டுப்படுத்தும் சிங்களத்தின் முயற்சிகளுக்கு போதுமான ஒத்துழைப்புகளை வழங்கியது. தற்போது விமானப்படையை இலக்கு வைத்து சிங்களத்தை வழிநடத்த இந்தியா முற்படுகிறது.

புலிகளின் கடற்படை மற்றும் விமானப்படை வளர்ச்சியை அழித்தொழிக்க வேண்டுமென்ற இரகசிய நிகழ்சி நிரலொன்றை இந்தியா நீண்டகாலமாகவே கைக்கொண்டிருக்கிறது என்பதையும் இந்த இடத்தில் குறித்துக் கொள்வோம்.

கடந்த 2006இல் மகிந்த நிர்வாகத்தால் யுத்தம் புதுப்பிக்கப்பட்டபோது அது ஒரு உள்நாட்டு விவகாரம் என்றவாறான கருத்துக்களை வெளிப்படுத்திக் கொண்டிருந்த இந்தியா, கிழக்கின் இராணுவ வலுவில் ஏற்பட்ட மாற்றங்கள், வடபகுதியில் சிங்களத்தின் சில தூர வெற்றிகள் எல்லாவற்றையும் கொண்டு இதனை தனக்கான ஒரு சந்தர்ப்பமாக கைக்கொள்ள முற்படுவது போல் தெரிகிறது. இந்தியாவிற்கு ஏலவே புலிகள் விடயத்தில் தவறான கணிப்புக்களை மேற்கொண்டு தோல்வியடைந்த அனுபவம் உண்டு. தற்போது இந்தியா என்னவகையான மதிப்பீட்டினைக் கொண்டிருக்கிறது என்பது நமக்கு தெரியாவிட்டாலும், களநிலைமைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள இந்தியா முற்படுகிறது என்பது மட்டும் தெளிவாகவே தெரிகிறது. ஆனால் இதில் இந்தியாவிற்கு ஒரு சிக்கலுமுண்டு.

விரைவில் ஒரு தேர்தலை சந்திக்க வேண்டிய நிலையிலுள்ள மன்மோகன் அரசு தமது ஆதரவுத்தளங்களில் ஒன்றான தமிழகத்தை இது விடயத்தில் சமநிலைப்படுத்த வேண்டிய பொறுப்பை தாண்டிச் செல்லமுடியாதுள்ளது.

எனவே ஒரு விதமான சமநிலைப்படுத்தும் தந்திரோபாயத்தையே இந்தியா இலங்கை விடயத்தில் கைக்கொண்டு வந்தது. எனினும் தற்போதைய சம்பவம் இந்தியாவின் சமநிலைப்படுத்தும் தந்திரோபாயத்தில் சில நெருக்கடிகளை ஏற்படுத்தக் கூடும். தொடர்ந்து தமிழகம் எவ்வாறு இது விடயத்தில் எதிர்வினையாற்றப் போகிறது என்று பார்ப்போம்.

நன்றி -
தாரகா
தினக்குரல்

Friday, September 12, 2008

உண்மையில் புதுடில்லி தூங்குகின்றதா? அல்லது பாசாங்கு பண்ணுகின்றதா?

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறுகின்றமை போல வவுனியாவில் பாதுகாப்புப் படையினரின் தலைமையகம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல், இலங்கை விவகாரத்தில் புதுடில்லித் தரப்பின் இரட்டை வேடத்தை குட்டை ஒரேயடியாக அம்பலப்படுத்திவிட்டது.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் இலங்கை அரசுப் படைகளுக்கு இந்தியா வெறும் ஆயுதத் தளபாட மற்றும் தகவல் வசதிகளை மட்டும் வழங்கி உதவவில்லை, நேரடியாக ஆளணி உதவிகளையும் வழங்குகின்றது என்ற விடயத்தை அத்தாக்குதலில் இந்திய விமானப்படையின் சார்ஜன்ட் தரத் தொழில்நுட்பவியலாளர்கள் இருவர் காயமடைந்தமை நிரூபித்துவிட்டது.
ஏற்கனவே, ஆழ்கடலில் விடுதலைப் புலிகளின் கப்பல் நகர்வுகள் பற்றிய தகவல்களை மிகத் துல்லியமாக இலங்கைக்கு வழங்கி, புலிகளின் கப்பல்களைத் தாக்கி அழிப்பதற்கு இலங்கைக் கடற்படைக்குப் பெரிதும் உதவி வந்த இந்தியா, வான் பரப்பிலும் புலிகளின் விமானப் பறப்புகள் பற்றிய தகவல்களை இலங்கைத் தரப்புக்குக் கனகச்சிதமாக வழங்கி உதவுவதில் அளப்பரிய பங்குபணி ஆற்றி வருகின்றது என்பது இப்போது தெளிவாகியிருக்கின்றது.
இத்தகைய பணியில் இந்தியாவின் சுமார் 250 தொழில்நுட்பவியலாளர்கள் இலங்கைப் பாதுகாப்புத் தரப்புடன் சேர்ந்து இயங்குகின்றார்கள் என்று சில செய்தி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டாலும் கூட, இந்த எண்ணிக்கை நூறுக்கும் சற்றுக் குறைவு என்கின்றன வேறு தகவல்கள்.
இந்தியா வழங்கிய ராடர்களைப் பராமரிப்பதற்கு அவ்வப்போது ஒருசில தொழில்நுட்பவியலாளர்கள் இந்தியாவிலிருந்து வந்து போவதுடன் இந்தியாவின் பங்குபற்றுதல் இதில் முடிந்து விடுகிறது, அதற்கு அப்பால் எதுவும் இல்லை என்று இந்தியத் தரப்பில் சில சமாதானங்கள் இப்போது கூறப்பட்டாலும், இவ்விடயத்தில் இந்தியாவின் ஆழமான பங்களிப்பை வெறும் "ராடர் பராமரிப்புடன்' அடங்கி விட்டதாகக் கருதிவிட முடியாது என்பதுதான் உள்வீட்டுக் கணிப்பாகும்.
சரி. இப்படி நேரடியாக இங்கு விடயங்களில் ஈடுபடும் இந்தியர்களின் எண்ணிக்கை எப்படியாயினும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் இத்தகைய தந்திரோபாய உதவிகளைக் கொழும்புக்கு வழங்குவதில் புதுடில்லிக்கு என்ன நியாயம் காரணம் உண்டு என்பதே ஈழத் தமிழர்கள் தரப்பில் எழுப்பப்படும் ஒரே கேள்வியாகும்.
"இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் இராணுவத் தீர்வு சாத்தியமேயல்ல, பேச்சு மூலமான அமைதித் தீர்வு காண்பதே ஒரே வழி. அதைச் செய்யுங்கள்!' என்று கொழும்பைப் பார்த்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிலிருந்து கொழும்புக்கான இந்தியத் தூதுவர் வரை, இந்தியத் தரப்பின் ஒவ்வொரு அதிகார பீடமும் திரும்பத் திரும்பக் கூறி வருகின்றன.
அந்தக் கருத்து உண்மையானது. யதார்த்தமானது. அதில் தவறு இல்லை.
ஆனாலும் இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை செவிமடுக்காமல்
அல்லது உதாசீனப்படுத்தி, புறந்தள்ளி, நிராகரித்து விட்டு
தன்பாட்டில், தமிழர் தாயகம் மீது கொடூர யுத்தத்தைத் திணித்து, போர் வெறி சந்நதம் கொண்டு, அட்டகாசம் பண்ணுகின்றது கொழும்பு.
கடலில் புலிகளின் கப்பல்களின் நகர்வுகள் பற்றிய உளவுத் தகவல்களில் இருந்து வான் புலிகளின் பறப்புகள் பற்றிய முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வரையான சகல விடயங்களையும் நேரடியாகத் தனது ஆளணிகளை வைத்து இலங்கைப் படைகளுக்கு வழங்கும் அளவுக்கு இந்த யுத்தத்தில் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருக்கும் இந்தியாவுக்கு, அதன் அரசியல் தலைமை கூறுவதுபோல இந்த யுத்த நடவடிக்கைத் திட்டத்தைக் கைவிட்டு, தீர்வுக்கு சாத்தியமான ஒரே வழியான பேச்சு முயற்சிக்கு இலங்கை அரசுத் தலைமையைத் திருப்ப முடியாமல் இருக்கின்றது என்ற நிலைமை நம்பமுடியாததாக உள்ளது.
ஒன்றில் இவ்வளவு உதவிகளையும் கொழும்புக்குச் செய்தும் கூட, அதனடிப்படையில் கூட, கொழும்பை நல்வழிப்படுத்த முடியாத அளவுக்கு, இந்தப் பிராந்திய வல்லாதிக்க சக்தியான இந்தியாவின் இராஜதந்திரம் தோற்றுப்போய்விட்டது.
அல்லது வெளியில் அமைதித் தீர்வே ஒரேவழி என்ற வாய்ப்பேச்சை, ஒரு "பம்மாத்து' நடிப்பாக புதுடில்லி வெளிப்படுத்திக்கொண்டு, மறுபுறத்தில் கொழும்போடு சேர்ந்து புலிகளை அழித்தொழிக்கும் ஓர் இரகசியத் திட்டச் செயற்பாட்டை இலங்கையுடன் சேர்ந்து புதுடில்லி முண்டுகொடுத்து முன்னெடுப்பதாக இருக்கவேண்டும்.
இந்த இரண்டில் ஒன்று அரங்கேறுவதாகவே ஈழத் தமிழர்கள் தரப்புக் கருத வேண்டிய நிலைமை உள்ளது.
இராணுவ ரீதியில் இந்தளவுக்கு கொழும்பு அரசுக்கு உதவி செய்து, அதில் நேரடியாகச் சம்பந்தப்படும் புதுடில்லி, இலங்கை இனப்பிரச்சினைக்கு அமைதிப்பேச்சு மூலமான தீர்வே ஒரே மார்க்கம் என்று வெளிப்படையாகக் கூறிக்கொண்டு, அந்தச் செயன்முறைப் பாதைக்குக் கொழும்பைத் திருப்ப முடியாமல் கையாலாகாத்தனத்தோடு இருப்பதுபோல் காட்டிக் கொள்வதை நோக்கும்போது அப்படித்தான் சந்தேகம் தோன்றுகின்றது.
இலங்கை விடயத்தில் புதுடில்லி தூங்குகின்றதா? அல்லது தூங்குவது போலப் பாசாங்கு பண்ணுகின்றதா? புரியவில்லை.

thanks´- Uthayan

Thursday, September 11, 2008

செப்டெம்பர் 11 அனர்த்தத்தின் ஏழாம் ஆண்டு நினைவு தினம்

இன்று செப்டெம்பர் 11 ஆம் திகதி. "11/ 09' என்று உலகெங்கும் குறிப்பிடப்படும் முக்கிய அனர்த்த நாள்.
உலகப் பெரும் வல்லரசான அமெரிக்காவின் இதயம் என்று கருதப்படும் நியூயோர்க்கின் நடு மையத்தில் உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இரட்டைமாடிக் கோபுரங்கள் அச்சமயம் கடத்தப்பட்டிருந்த இரு விமானங்களால் மோதித் தகர்க்கப்பட்டதில் மூவாயிரத்துக்கும் அதிகமான அப்பாவிகளின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. அத்தினத்தின் ஏழாம் ஆண்டுப் பூர்த்தியில் நாம் இன்று நிற்கின்றோம்.
சர்வதேச சமாதானத்தை நிலைநாட்டும் தனியுரிமை தனக்கே உரியது என்று கருதி அதனைத் தன்பாட்டில் சுவீகரித்து, "சர்வதேச பொலிஸ்காரனாக'த் தன்னை உலகின் முன் நிறுத்திக்கொண்ட அமெரிக்காவின் சுகந்திர முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு மையமான "பென்டகன்' மீதும் கடத்தல் விமானத்தினால் தாக்குதல் நடத்திப் பேரழிவை ஏற்படுத்திய நாளின் நினைவுதினமும் இன்றுதான்.
இந்த அனர்த்தங்கள் நிகழ்ந்த பின்னர் இந்த ஏழு ஆண்டுகளில் பல விடயங்கள் கட்டவிழ்ந்துவிட்டன.
இந்தத் தாக்குதல்களை அடுத்து "பயங்கரவாதத்துக்கு எதிரான சர்வதேச போர்' என்ற பெயரில் "பிரபஞ்ச யுத்தப் பிரகடனம்' ஒன்றையும் செய்து, உலக நாடுகளின் மீது தனது வல்லாதிக்கத்தைத் திணித்து, பெரும் களேபரங்களை ஏற்படுத்திய அமெரிக்காவின் புஷ் நிர்வாகம், தனது ஏழாண்டு அதிகாரத் திமிர்ப்போக்கின் விளைவாக உலகெங்கும் போர் அனர்த்தங்களை உருவாக்கி, தீர்வு ஏதும் காணாமல் அதிகாரத்தை விட்டு வெளியேறப் போகின்றது.
"பயங்கரவாதம்' நிலைகொண்ட பகுதிகள் என்று தான் குறிவைத்த தேசங்களுக்கு எல்லாம் "லேபிள்' ஒட்டி, அவற்றின் மீது பாய்ச்சல் நடத்திய அமெரிக்கா, அந்த நாடுகளில் தனது துருப்புக்களைத் தொடர்ந்து நிலை கொள்ளவும் வைக்கமுடியாமல், வாபஸ் பெறவும் முடியாமல் இரண்டும் கெட்டான் நிலையில் இன்று அந்தரிக்கின்றமை வெளிப்படையானது.
உலக நாடுகள் பலவற்றின் மீதும் தமது ஆக்கிரமிப்புப் போரைத் தொடுத்துப் பெரும் அட்டகாசம் புரிந்த புஷ் நிர்வாகம், வரலாற்றில் பெருமளவில் மக்களால் வெறுக்கப்பட்ட தோல்விகண்ட அமெரிக்க ஜனாதிபதியின் ஆட்சி என்ற அவப் பெயரோடு வெளியேறுகின்றது.
செப்டெம்பர் 11 தாக்குதல்களை அடுத்து, சந்நதம் கொண்டு ஆடிய இந்த ஆட்சி, "பயங்கரவாதத்துக்கு எதிரான சர்வதேசப் போர்' என்ற தனது திட்டத்தின் கீழ் கடைசியாக என்னத்தைச் சாதித்துவிட்டுப் போகிறது? பெரும் சர்வதேசக் குழப்பங்களை ஏற்படுத்தியமையைத் தவிர.
செப்டெம்பர் 11 தாக்குதல்களை நடத்திய "அல்குவைதா' தீவிரவாதிகளின் தொட்டில் என்று தெரிவித்து, ஆப்கான் மீது பெரும் யுத்தத்தைத் தொடுத்த அமெரிக்கா இன்று அந்த நாட்டில் அமைதியை ஏற்படுத்தியதா? இரத்தக்களரியையும் கொடூர யுத்தத்தையும் பேரழிவு நாசங்களையும் தொடர்ந்து ஏற்படுத்தும் ஒரு சூழலை அங்கு உருவாக்கியமையைத் தவிர, வேறெதையும் அமெரிக்க நிர்வாகத்தால் அங்கு சாதித்துக்காட்ட முடியவில்லை.
அதன்பின்னர், மனித குலத்துக்கு எதிரான பேரழிவு ஆயுதங்களை ஈராக்கின் சதாமின் நிர்வாகம் தயார் செய்து வைத்திருப்பதான அபாண்டக் குற்றச்சாட்டு ஒன்றைத் தன்பாட்டில் சிருஷ்டித்து, சுமத்தியபடி ஐ.நா.வின் அனுமதியைக் கூடக் கோராமல் சர்வதேசக் கருத்தை உதாசீனம் செய்தபடி தன்னோடு அணி சேர்ந்த நாடுகளையும் கூட்டுச் சேர்த்துக்கொண்டு, ஈராக் மீது ஆக்கிரமிப்பை மேற்கொண்டது புஷ் ஆட்சி.
இன்று அங்கும் அதே களேபர கலவர நிலைதான். சட்டம் ஒழுங்கு குழம்பிவிட்டது. தினசரி சாவு, சண்டை, தாக்குதல், மனிதப் பேரழிவு, பெரு நாசம் இப்படி கோரத் தாண்டவத்தில் ஈராக்கும் சிக்கித் திண்டாடுகிறது.
பயங்கரவாதத்தை அடக்கப் போவதாகக் கூறி கிளர்ந்தெழுந்த புஷ்ஷின் ஆட்சி, "சும்மா கிடந்த இங்கை ஊதிக் கெடுத்த ஆண்டி போல' சர்வதேச ரீதியில் அமெரிக்க எதிர்ப்பு சக்திகளை ஊதிப் பெருப்பித்து, தூண்டிவிட்டு, அதனை விஸ்வரூபம் எடுக்கவைத்த பின்னர் அதனைக் கட்டுப்படுத்த எதுவும் செய்யமுடியாமல் கைவிட்டு, வெறும் கையோடு ஆட்சியை விட்டு வெளியேறுகின்றது.
சர்வதேச ரீதியில் புஷ்ஷின் ஆட்சி புரிந்த பெரும் தவறு என்ற குற்றத்திலிருந்து அமெரிக்காவை மீட்கும் பொறுப்பு, புஷ்ஷின் இடத்திற்குப் புதிதாக வரப்போகும் ஒபாமாவின் அல்லது கெய்னின் மீது வீழ்ந்திருக்கிறது.
ஒடுக்கப்பட்ட இனங்களின், அடக்குமுறைக்கு எதிரான கிளர்ச்சியையும், எழுச்சியையும் சரியாக அடையாளம் காணாமல், வெறுமனே எடுத்த எடுப்பில் அதற்கு "பயங்கரவாத' சாயம் பூசி, தனது வல்லாதிக்கத்தால் அதனை மேலும் அடக்க முற்பட்ட அமெரிக்க ஏகாதிபத்தியம், அதனால் இன்று உலகின் முன்னால் தலைகுனிந்து நிற்கின்றது.
செப்டெம்பர் 11 தாக்குதலின் பின்னர், உலக நிலைமையை தவறாகக் கையாண்டதன் விளைவாக அமெரிக்காவும், அமெரிக்க சமூகமும் இன்று "சர்வதேச குழப்பங்களுக்கு வித்திட்ட தரப்புகள்' என்ற அவப்பெயரைச் சுமந்து பெயர் கெட்டு நிற்கின்றன.
சர்வதேச ரீதியில் இடம்பெறும் அடக்குமுறைகள் குறித்தும், அடக்கப்பட்ட மக்களின் மனக் கிளர்ச்சி மற்றும் எழுச்சி குறித்தும் அமெரிக்க ஆட்சி அதிகாரம் தனது வல்லாதிக்கச் சிந்தனையிலிருந்து வெளியே வந்து தாராளப் போக்கோடு சிந்திக்காதவரை அந்த ஏகாதிபத்தியம் திருந்துவதற்கு இடமில்லை.

thanks:- Uthayan

Wednesday, September 10, 2008

மனித நேயப் பணிகளுக்கும் ஆப்பு வைக்கும் அராஜகம்!

"பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த மாதிரி' வன்னி மக்களைத் துவைத்தெடுக்கத் தயாராகிவிட்டது போலும் மஹிந்த அரசு.
வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வசிக்கும மக்களை அங்கிருந்து உடன் வெளியேறி விடவேண்டும் என்று அறிவித்ததன் மூலம் அண்மையில் அவர்களுக்கு "அச்சுறுத்தல் வைத்தியம்' செய்ய முயன்றது அரசுத் தரப்பு.
அந்த எத்தனம் அதிகம் எடுபடவில்லை. அந்த மக்கள் தங்களது தாயக மண்ணை விட்டு வெளியேற முன்வரவில்லை. அரசு எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை விட்டு வெளியேறவில்லை.
இதனால் ஆட்சிப்பீடம் ஆத்திரமடைந்திருக்கின்றது போலும். அதனால்தான் "அச்சுறுத்தல் வைத்தியம்' சரிவராத நிலையில் அடுத்து "அதிர்ச்சி வைத்தியம்' என்ற காயை அது கையில் எடுத்திருக்கின்றது.
வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து சகல உள்நாட்டு, வெளிநாட்டுத் தொண்டர் அமைப்புகளையும், அவற்றின் பிரதிநிதிகளையும் உடன் வெளியேறி விடுமாறு அரசு விடுத்திருக்கும் அறிவிப்பே இந்த "அதிர்ச்சி வைத்திய' முயற்சிதான்.
தமிழரின் வன்னித் தாயகம் மீது கொழும்பு அரசு தொடுத்திருக்கும் கொடூரப் போர் காரணமாக அங்கு மிகப் பாரிய மனிதப் பேரவலம் நிகழ்ந்திருக்கின்றது. சுமார் இரண்டு லட்சம் மக்கள் தத்தமது வீடு வாசல்கள், நிலபுலன்கள், சொத்துகள், உடைமைகள், கால்நடைகள் போன்றவற்றை இழந்து கையில் அகப்பட்ட பொருட்களோடு ஏதிலிகளாக அலையும் துர்ப்பாக்கியம் நேர்ந்திருக்கிறது. மழைக்கும், வெயிலுக்கும் ஒதுங்க இடமின்றி, காடுகளிலும், மர நிழல்களிலும், தற்காலிகக் கொட்டகைகளிலும் படுத்துறங்கும் பேரவலம் அவர்களுக்கு நேர்ந்திருக்கின்றது.
தொடர்ந்து இலங்கை அரசு மூர்க்கமாக முன்னெடுத்து வரும் படை நடவடிக்கைகள் காரணமாக மேலும் புதிதாக ஏதிலிகள் பட்டியலில் ஆயிரக்கணக்கானோர் தினசரி சேர்ந்துவரும் நிலையிலேயே
அதனால் நேர்ந்துள்ள மனிதப் பேரவல நிலையை ஓரளவேனும் சமாளித்து, அந்த அகதிகளின் அவசர அவசிய தேவைகளை விரைந்து கவனிக்கும் மனிதநேயப் பணியாளர்களின் சேவைக்கும் நிரந்தர வேட்டு வைத்திருக்கின்றது கொழும்பு அதிகார வர்க்கம்.
வன்னியில் அல்லலுறும் மக்களுக்கு சர்வதேச மற்றும் உள்ளூர் அரச சார்பற்ற தொண்டுப் பணியாளர்களின் உதவி உச்சமாகத் தேவைப்படும் சமயத்திலேயே அச் சேவையை முற்றாகத் தடைசெய்யும் கொடூர செயற்பாட்டை முன்னெடுத்திருக்கின்றது கொழும்பு.
யுத்தத்தின் இடையில் சிக்கும் மக்களுக்கு உரிய மனிதாபிமான உதவிகள் கிட்டுவதை உறுதிப்படுத்துவது யுத்தத்தில் சம்பந்தப்பட்ட தரப்புகளின் பொறுப்பாகும். அந்த மனிதாபிமான உதவிகள் அந்த மக்களுக்குக் கிடைக்க விடாமல் தடுப்பது அடிப்படை மனித உரிமைகளையும் சர்வதேச யுத்த விதிகளையும் மீறும் செயற்பாடாகும்.
அதுவும், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் ஒன்பதாவது அமர்வு நேற்றுமுன்தினம் ஆரம்பமாகியிருக்கும் சமயத்தில், இவ்வாறு யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான முக்கிய மனிதாபிமானப் பணியைத் தடுத்து நிறுத்தும் அத்துமீறலை அப்பட்டமாகவும் வெளிப்படையாகவும் கொழும்பு நிர்வாகம் முன்னெடுத்திருக்கின்றமை அதிர்ச்சி தருவதாகும்.
ஒருவகையில் பார்த்தால் இந்த "செருக்குப் போக்கு' ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் செயற்பாட்டிற்கே சவால்விடும் நடவடிக்கை என்பதும் கவனிக்கத்தக்கது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களை முற்றாகக் கைப்பற்றும் போர்வெறித் தீவிரத்தில் இருக்கும் கொழும்பு, அந்த இலக்கை அடைவதற்காகத் தனது படை நடவடிக்கைகளை மூர்க்கத்தனமாக ஆரம்பித்திருக்கின்றது. ஷெல், பீரங்கி, மோட்டார் தாக்குதல்களும், விமானக்குண்டு வீச்சுகளும் கண்மூடித்தனமாக நடக்கின்றன. குடிமனைகள் இலக்கு வைக்கப்படுகின்றன. அரசுப் படைகளின் யுத்த சந்நதம் இன்னும் தீவிரமடையும்போது இந்தக் கண்மூடித்தனமான தாக்குதல்கள் கேட்டுக் கேள்வியற்ற அளவில் பரந்து விசாலமாக மூர்க்கத்தனமாக முன்னெடுக்கப்படலாம் என்ற பீதி தமிழர்கள் தரப்பில் உண்டு.
இந்தப் பின்புலத்திலேயே
அப்பிரதேசங்களில் இருக்கும் உள்ளூர், வெளிநாட்டுத் தொண்டர் அமைப்புகளையும் அவர்களது பிரதிநிதிகளையும் அத்தரப்பினருக்கு உரிய பாதுகாப்பைத் தங்களால் உறுதிப்படுத்த முடியாது என்று கையை விரித்து, அதன் காரணமாக அத்தரப்புகளை அப்பிரதேசங்களிலிருந்து வெளியேறுமாறு அரசுத் தரப்பு உத்தரவிட்டிருக்கின்றது.
சர்வதேசத்துடன் நம்பகரமான தொடர்பாடல்கள் மற்றும் தகவல் பரிமாற்றங்களைக் கொண்ட தொண்டர் நிறுவனங்களை வன்னிப் பிரதேசத்திலிருந்து வெளியேற்றுவது, யுத்தத்தின் பெயரால் அப்பிரதேசம் மீது கட்டவிழப்போகும் கண்மூடித்தனமான இலக்கற்ற பேரழிவு நாசத் தாக்குதல்கள் பற்றிய விவரங்கள் வெளிப்பட இடமளிக்காமல் மூடிமறைக்கும் முஸ்தீபாகவும் இருக்கலாம் என்ற அச்சம் தமிழர்களுக்கு உண்டு.
வன்னியில் உள்ள அப்பாவி மக்களின் நலனிலும் பாதுகாப்பிலும் கூடத் தனக்குத் தார்மீகப் பொறுப்பும், கடமையும் உண்டு என சர்வதேசம் கருதுமானால், அதை நிறைவு செய்வதற்கான முக்கிய மான தருணம் இப்போது அதற்கு வந்துவிட்டது என்பதே நிலைமை.
தற்சமயம் வன்னியைப் பேரழிவுக்குள்ளாக்கி, ரணகளமாக்கத் திட்டமிட்டு செயற்படும் கொழும்பை, அந்தக் கொடூரத்தை தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்க விடாமல் தடுப்பதன்மூலம் தனது கடமையை சரிவர ஆற்ற சர்வதேசம் முன்வரவேண்டும்.

thanks:-Uthayan

Monday, September 8, 2008

புதைகுழியாகும் பூநகரிப் பாதை

வன்னி மக்களின் உள்ளக இடப்பெயர்விற்கு மத்தியில் இராணுவத்தின் பெருமெடுப்பிலான படை நகர்வுகளும் தொடர்கின்றன.

கிளிநொச்சி, முல்லைத்தீவில் மேற்கொள்ளப்படும் படை நடவடிக்கைககள் பூர்வீக வாழ்விடங்களிலிருந்து இலட்சக்கணக்கான தமிழ் மக்களை இடம்பெயர வைத்துள்ளன.
துண்டுப் பிரசுரங்களுக்கூடாக வவுனியாவை நோக்கி நகருமாறு அம்மக்களுக்கு அன்பான வேண்டுகோளும் விடுக்கப்படுகிறது. ஆயினும் அரசாங்கத்தின் பிரசுரப் பொறிக்குள் அகப்படாமல், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் நோக்கியே மக்கள் நகர்கின்றனர்.
எறிகணைகளால் அடித்துப் பணிய வைக்கும் தாக்குதல்களால் மக்கள் சோர்வடையவில்லை.
பொருளாதாரத் தடை என்கிற பேரினவாத மேலாண்மை அழுத்தங்களும் இடம்பெயர்ந்த மக்களிடம் நுண்ணிய அசைவைக் கூட ஏற்படுத்த முடியாமல் போயுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை காலை 8.10 மணியளவில் கிளிநொச்சி நகரிற்கு தென் மேற்குத் திசையிலுள்ள யூனியன் குளம் மற்றும் ஒட்டுப்புலம் நோக்கி அரச படைகளால் எறிகணைகள் ஏவப்பட்டன. இடம்பெயர்ந்த மக்கள் தற்காலிமாகத் தங்கியிருந்த இடைத்தங்கல் குடியிருப்புகளுக்கு அண்மையில் இவ்வெறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன.
இதேவேளை 30.08.2008 ஆம் திகதி சனிக்கிழமையன்று கிளிநொச்சியிலிருந்து 7கி.மீ தூரத்திலுள்ள புது முறிப்பு கிராமம் மீதும் இராணுவத்தினரால் நீண்ட தூர எறிகணைகள் ஏவப்பட்டன. இந்த ஆட்டிலெறி எறிகணைத் தாக்குதலில் ஒரு மாதக் குழந்தை மற்றும் இரண்டு வயது குழந்தை உட்பட ஐவர் மிகப் பரிதாபகரமாக கொல்லப்பட்டனர்.
உடல் சிதறி உயிரிழந்த இம் மழலைகளின் உயிரற்ற வெற்று உடல்களை ஐ.நா சபையின் சிறுவர் பாதுகாப்பு பிரிவினர் தமிழ் நெற் இணையத்தளத்தில் பார்வையிட்டிருப்பார்கள்.
தமிழ் மக்களின் மனங்களை வெல்ல வேண்டுமெனச் சிங்கள தேசத்திற்கு அரசியல் பாடம் நடாத்திய இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனும் பார்த்திருப்பார்.
வன்னியில் ஜனநாயகத்தை நிலை நாட்டத் துடித்துக் கொண்டிருக்கும் பேரினவாதத்திற்கு ஆலோசனை வழங்கும் துணைப்படைத் தலைவர்களும் சொந்த மக்கள் சாதல் கண்டு சிந்தை இரங்காமல் நாணிக் கோணியிருப்பர்.படை நகர்வுகள் எவ்வாறு இருந்தாலும், தமிழ் மக்கள் மரங்களின் கீழ் ஏதிலியாக வாழ்ந்தாலும், உலக மகா ஜனநாயகத்தை காப்பாற்ற, தேர்தலை நடத்துங்களென்பதே அமெரிக்க, இந்திய வேண்டுதல்.

வடக்கை முழுமையாக கைப்பற்றுவதற்கு ஒரு வருடம் தேவையெனக் கூறியவாறு, யாழ் குடாவில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடாத்தப்போவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
யுத்தமும், தேர்தலும் சமாந்தரமாகப் பயணிக்கும் உத்தியை தற்போது பிரயோகிக்கும் இன்றைய அரசாங்கம் வல்லரசுகளின் மீது மனித உரிமை சங்கங்கள் செலுத்தும் அழுத்தங்களை திசை திருப்புமென எடை போடுகிறது.
தேர்தல் திருவிழாக்கள் தொடர்ச்சியாக நடைபெற்றால் இலங்கையில் ஜனநாயக விழுமியங்கள் இன்னமும் அழியவில்லையென்று உலகம் நம்புமென சிங்கள தேசம் சிந்திக்கின்றது. கடன் பெறுவதற்கு பயன்படும் தேர்தல்கள், மக்களின் அவலங்களை மூடி மறைக்கவும் உபயோகிக்கப்படுகிறதென கூறிக்கொள்ளலாம்.விடுதலைப் போராட்டமும் இன அழிப்பு நிலையும், இருபெரும் முரண் அடையாளங்களாக இலங்கையில் இனங்காணப்படுகின்றன.
இவை தவிர குடாநாட்டிற்குரிய இராணுவ விநியோகப் பாதையை, அது தரை வழிப்பாதையாக இருந்தாலென்ன அல்லது கடல்வழிப்பாதையாக இருந்தாலென்ன தடையரண்கள் அற்ற நிலையை பேணிப்பாதுகாக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு உண்டு.
ஏற்கனவே திருமலை கடற்படைத் தளம் மீதான வான் புலிகளின் தாக்குதல் கடல் பாதையை கேள்விக்குறியாக்கியுள்ளது.மிஞ்சியுள்ள ஒற்றைப் பாதையாக பூநகரி சங்குப்பிட்டியை தெரிவு செய்வது தவிர்க்க முடியாத போர் உத்தியாக அரசாங்கத்துக்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளது.
ஆகவே, வடக்கு மக்களை விடுவிப்பதற்காக என்றுகூறி, இலட்சக் கணக்கான தமிழ் மக்கள் இடம்பெயர வைக்கப்பட்டுள்ளனர்.இடப்பெயர்விற்குள்ளான தமிழ் மக்களின் அடிப்படை சுகாதார வசதிகளற்ற இந்த அவல நிலை, அதனை உருவாக்கியோர் சர்வதேச போர் குற்றம் சுமத்தப்படும் ஏது நிலையினை உருவாக்கும்.

அதேவேளை விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவரின் சவப்பெட்டிக்கு இறுதி ஆணி அடிக்கச் சுத்தியலை தூக்கப்போவதாக சொன்னவர்களும் 12 கி.மீ தூரத்தில் நிற்பதாக அக்கராயன் கனவில் மிதந்தவர்களும், நாச்சிக்குடா இழப்புக்களை மூடி மறைக்க முடியாமல் திணறுகின்றனர்.

விடுதலைப் புலிகள் வெளியிட்ட அறிக்கையில் கடந்த திங்களன்று நிகழ்ந்த நாச்சிக்குடா முறியடிப்புச் சமரில் 45 இராணுவத்தினர் கொல்லப்பட்டு 51 பேர் படுகாயமடைந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.
அடுத்த செவ்வாயன்று நடைபெற்ற பாரிய சமரில் 30 இராணுவத்தினர் கொல்லப்பட்டு 50 பேர் காயமுற்றதாக தெரிவிக்கப்பட்டது.அக்கராயனிற்கும் வன்னேரிக்குளத்திற்கும் இடைப்பட்ட பகுதியிலேயே இத்தாக்குதல் நடைபெற்றது.

உருக்குலையாத இராணுவத்தின் 19 சடலங்கள் புதன்கிழமையன்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக (ஐ.சி.சி.ஆர்.சி.) ஓமந்தைக்கு அனுப்பப்பட்டன. வியாழனன்று மேலும் 11 சடலங்கள் ஐ.சி.ஆர்.சியிடம் கையளிக்கப்பட்டன.

அரச படைகள் மேற்கொண்ட இப்பூநகரி நோக்கிய நகர்வில் பல்குழல் எறிகணைகள், எம்.ஐ.24 ரக யுத்த உலங்கு வானூர்திகள், ஆட்டிலெறிகள், மிகையொலி குண்டு வீச்சு விமானங்கள் யாவும் பங்கு கொண்டது குறிப்பிடத்தக்கது. புலிகளின் தற்காப்பு நிலையானது முறியடிப்பு பரிமாணத்தை எட்டி ஊடறுக்கும் நிலைக்குரிய காலத்தையும் களத்தையும் நோக்கி அசைகிறது.
மாற்றீட்டுப் பாதையென்பது புதை குழிகள் நிறைந்த மரணப்பாதையென்பதை பூநகரி நகர்வில் தெரிய வரலாம்.

இதேவேளை, கிழக்கிலும் அதிர்வுகள் ஆரம்பமாகியுள்ளன. அம்பாறை, அம்பாந்தோட்டை மாவட்ட எல்லைப் புறத்திலமைந்த உகந்தைக்கு அருகாமையிலுள்ள சன்னாசி மலையடியில், விடுதலைப் புலிகள் மேற்கொண்ட வழிமறிப்புத் தாக்குதலில் 4 அதிரடிப்படையினர் கொல்லப்பட்டு இருவர் காயமுற்றுள்ளனர்.

அங்கு கிளைமோர் தாக்குதல்கள் தினச் செய்தி ஆகிவிட்டன. வடக்கோடும் கிழக்கு வெளிக்கும் காலமும் இணைந்து வருவது போல் தெரிகிறது.
[நன்றி- சி.இதயச்சந்திரன் வீரகேசரி]

Friday, September 5, 2008

மேற்கு வன்னியில் இன்னொரு 'முகமாலை"

வன்னிப் பெருநிலப்பரப்பின் ஊடாக குடாநாட்டுக்கு தரைவழிப்பாதையை திறப்பதற்கு சிறிலங்கா படைகள் மேற்கொண்ட பெருமெடுப்பிலான 'ஜெயசிக்குறு" நடவடிக்கை மண்கவ்விய நிலையில் தற்போது வன்னிப்பிரதேசத்தின் மேற்கு கரையோரமாக ஏ-32 பாதை வழியாக - பூநகரி ஊடாக - குடாநாட்டுக்கு பாதை திறக்கும் ஒரு இமாலய முயற்சியில் சிறிலங்கா படைகள் மூழ்கிப்போயுள்ளன.

தமது இந்த முயற்சிக்கு எவ்வளவு விலையையும் கொடுக்க துணிந்துள்ள மகிந்த அரசுக்கு களநிலைமை ஒத்துழைக்கிறதா என்பதில்தான் தற்போது பாரிய சிக்கல்கள் எழுந்துள்ளன.

கிழக்கை மீட்டுவிட்டதாக கூக்குரலிட்டவாறு வடக்கில் 'ஜனநாயகத்தை" நாட்ட புறப்பட்ட அரசு படைகள் எத்தனையோ நடவடிக்கைகளை வன்னியில் மேற்கொண்ட போதும் அவற்றின் நிகழ்ச்சி நிரல்களை தீர்மானிப்பவர்கள் ஆரம்பம் முதலே விடுதலைப் புலிகளாகவே இருந்து வந்துள்ளார்கள்.

புலிகளை முடிப்பதற்கு நாள் குறித்தார்கள். பிரபாகரனை பிடிப்பதற்கு நாள் குறித்தார்கள். வன்னியை வளைத்துப்போடுவதற்கு நாள் குறித்தார்கள்.

ஆனால், இவை எல்லாமே எந்தக்கட்டத்தில் தற்போது உள்ளது என்று கடந்த முதலாம் திகதி நடைபெற்ற தாக்குதலின் பின்னர் அரசை கேட்டால் அதற்கான விடையும் புலிகளிடம்தான் உள்ளது.

வன்னிப் பெருநிலப்பரப்பை முற்றுமுழுதாக வல்வளைத்து வித்தியாசமான முற்றுகைக்குள் கொண்டுவரும் நோக்குடன் மன்னார் பகுதியூடாக பாரிய படை நடவடிக்கைகளை மேற்கொண்ட அரச படைகள், வன்னியின் மேற்குப் பிரதேசத்தை இரண்டு துண்டுகளாக தமக்குள் பங்கு போட்டுக்கொண்டன.

இதன்படி, அரச படைகளின் 57 ஆவது டிவிசன் அணிகள் வன்னியின் மேற்குப் பகுதியின் நடுப்பிரதேசங்களில் தாக்குதல் நடத்த, 58 ஆவது டிவிசன் படையணி வன்னியின் மேற்கு கடற்கரையோரமாக பூநகரி நோக்கிய ஏ-32 நெடும்பாதையில் முன்னேறிச்சென்றது.



இந்த இரண்டு அணிகளில் 58 ஆவது டிவிசன் அணி அடம்பனில் ஆரம்பித்து கரையோரப்பகுதியாக விடத்தல்தீவு, இலுப்பைக்கடவை, வெள்ளாங்குளம் வரை சென்று முழங்காவில் வரை சென்றது.

அதேவேளை, 57 ஆவது டிவிசன் அணிகள் மேற்கு பிரதேசத்தின் வயிற்றுப்பகுதியில் மடு, பாலம்பிட்டி, மூன்றுமுறிப்பு, பெரியமடு, நட்டாங்கண்டல், கல்விளான், துணுக்காய் சென்று மல்லாவி வரை சென்று அதன் ஒரு அணி அக்கராயனிலும் போய்நின்று கொண்டது.

இந்நிலையில், கைப்பற்றிய பிரதேசங்களை தக்கவைப்பதற்கு சிறிலங்காவின் தென்பகுதியிலிருந்த சகல படைகளையும் துடைத்து எடுத்துக்கொண்டு வந்து வன்னியின் மேற்கு பகுதியில் தூவிவிட்டுள்ள அரச படைகள், கடந்த முதலாம் திகதி பூநகரியை கைப்பற்றுவதற்காக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாச்சிக்குடாவை பிடிப்பதற்கு இருபெரும் திட்டங்களுடன் ஆயத்தமாகின.

அதாவது, முழங்காவில் வரை சென்ற 57 ஆவது டிவிசனுக்கும் துணுக்காய் பகுதியை வல்வளைப்பதற்காக முன்னரே அக்கராயன் வரை சென்ற 58 ஆவது டிவிசன் படையணிக்கும் கடந்த சில வாரங்களாக வவுனியா சென்ற இராணுவ தளபதி சரத் பொன்சேகா அளித்த விசேட திட்டம் இது.

அதாவது, 57, 58 ஆகிய டிவிசன் அணிகள் தாக்கவேண்டிய புலிகளின் முன்னணி காவலரண்கள் மேற்கில் கடற்கரையிலிருந்து நாச்சிக்குடா, முழங்காவில், நாகபடுவான், வன்னேரி, அக்கராயன் என்று ஏ-9 வீதியை நோக்கி கிழக்கு நோக்கி நீண்டிருந்தது.

புலிகளின் இந்த அரணை எப்படியாவது உடைப்பதன் மூலம் நாச்சிக்குடாவை கைப்பற்றுவது அல்லது நாச்சிக்குடாவை தக்கவைத்திருக்கும் புலிகளின் தொடர் அணியை இரண்டாக பிரிப்பது, அதனைத் தொடர்ந்து பூநகரியை தாக்கி பிடிப்பது என்பதுதான் இராணுவத்தின் திட்டம்.

இதுவரை இதற்காக நான்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் எதுவும் பலனளிக்காத நிலையில், தற்போது தெளிவான - விரிவான - திட்டமிடலுடன் தாக்குதல் வியூகம் வகுக்கப்பட்டது.

இதற்காக 58 ஆவது டிவிசனின் உயர்வலு கொண்ட கொமாண்டோ படையணிகளான சிறப்பு தாக்குதல் அணி - 1, சிறப்பு தாக்குதல் அணி - 2 ஆகியவை தாக்குதலுக்கு தயார்படுத்தப்பட்டன.



கடற்கரையிலிருந்து நாகபடுவான் வரையிலான பத்து கிலோமீற்றர் தூரம் கொண்ட புலிகளின் முன்னரங்கை எந்த இடத்திலாவது உடைத்து உட்புகுந்து கொள்ளும் இந்த அணிகள் அங்குள்ள புலிகளின் அணிகளை எப்படியாவது முற்றுகைக்குள் கொண்டுவந்து தாக்குவது என்றும் -

அந்தவேளையில், ஏனைய படையணிகள் முன்னேறி நாச்சிக்குடாவை கைப்பற்றுவது என்பதும்தான் படையினரின் முதற்கட்ட திட்டமாக இருந்தது.

இதற்காக முழங்காவில் மாதா கோவில் முன்பாக உள்ள படையினரின் காவலரண்களிலிருந்து தாக்குதலை ஆரம்பிப்பது என்று வகுக்கப்பட்ட திட்டத்தின்படி நடவடிக்கை ஆரம்பமானது.

மதியம் தாண்டி பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமானது சமர். வான் வழியாக அரச படைகளின் கிபிர் மற்றும் எம்.ஐ.- 24 ஆகியவை தாக்குதல் ஆதரவை வழங்க, விசேட பயிற்சி பெற்ற கொமாண்டோ தாக்குதல் அணிகள் புலிகளின் முன்னரங் நிலைகள் மீது சரமாரியான தாக்குதல்களை தொடங்கின.

அப்போதுதான் புலிகளின் எதிர்ச்சமர் ஆரம்பித்தது. ஐந்தாவது தடவையும் புலிகள் தம்முடன் சரிக்கு சரி நின்று மோத மாட்டார்கள் என்றும் தாம் கைப்பற்றிய ஏனைய பிரதேசங்களில் போல இந்த காவலரணையும் புலிகள் பின்வாங்கி சென்றுவிடுவார்கள் என்ற மன உறுதியுடனும் அரச படைகள் கடும்சமர் புரிந்தன.

இரவில் தாக்குதலை ஆரம்பித்தால் வான்படையின் உதவி நேர்த்தியாக கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் குறைவு என்பதால் பகலில் இந்த வலிந்த தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது.

மணிக்கணக்கில் நடைபெற்ற சண்டையில் புலிகளின் காவலரண்கள் இந்தா விழுந்து விடும் இந்தா விழுந்து விடும் என்ற நம்பிக்கை படையினருக்கு தொடர்ந்து இருந்து வந்தது. தாம் முன்னர் கைப்பற்றிய பிரதேச வெற்றிகள் அவர்களுக்கு இந்த நம்பிக்கையை கொடுத்திருந்தன. ஆனால், நேரம் செல்ல செல்ல அரச படையினரின் சடலங்கள்தான் கொத்துக் கொத்தாக விழ ஆரம்பித்தன.

புலிகளின் சரமாரியான எதிர்த்தாக்குதல் படையினரை நிலைகுலைய வைத்தது. ஒரு கட்டத்துக்கு மேல் தமது திட்டத்தை கைவிடத்தீர்மானித்த படையினர் தமது சகாக்களின் உடலங்கள் புலிகளின் கைகளில் வீழ்ந்துவிடக்கூடாது என்று முடிவெடுத்தனர்.

58 ஆவது டிவிசன் படையணி தளபதி பிரிகேடியர் சவீந்திர டி சில்வாவின் நெறிப்படுத்தலுக்கமைய களமுனை தளபதிகள் தமது படையினரின் உடலங்கள் எக்காரணம் கொண்டும் புலிகளின் கைகளில் சிக்கவிடக்கூடாது என்று உத்தரவிட்டனர்.

அன்று இரவு முழுவதும் படையினரின் உடலங்களை எப்படியாவது தமது பகுதிக்குள் எடுத்துவிடவேண்டும் என்ற நோக்கில் படையினர் கடுமையாக போராடினர். இயலுமான வரையில் தாக்குதல்களை மேற்கொண்டுவிட்டு, அதிகாலை 2 மணியளவில் பெரும் இழப்புக்களுடன் தாக்குதலை நிறுத்திக்கொண்டனர் படையினர்.
தாக்குதல் தொடர்பாக பேசவல்ல ஒருவர் தெரிவிக்கையில் - 'உடலங்களை தூர இருந்து முட்கம்பிகளை போட்டு இழுத்தாவது தமது பகுதிக்குள் எடுத்துவிடவேண்டும் என்று ஓர்மத்துடன் அரச படைகளின் கடைசி மணி நேர சண்டை நடைபெற்றது" - என்றார்.

புலிகள் மேற்கொண்ட முறிடிப்புத்தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டனர். 50-க்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்தனர். படையினரின் ஏழு உடலங்களும் பெருந்தொகையான ஆயுதங்களும் புலிகளால் கைப்பற்றப்பட்டன.

இந்த தாக்குதல் படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்து, முன்னரே ஆயத்தமாக வைக்கப்பட்டிருந்த அடுத்த திட்டத்தை செயற்படுத்த இராணுவ தலைமைப்பீடத்திலிருந்து உடனடியாக கட்டளை பறந்தது.

எனவே, அக்கராயன் பிரதேசத்தில் நிலை கொண்டிருந்த 58 ஆவது டிவிசன் படையணி புலிகளின் அடுத்த தொடர் முன்னணி காவலரணை தாக்கி உள் நுழைவதற்கு ஆயத்தமானது.



முன்னாள் இராணுவ தளபதி ஜானக பெரேராவின் விசுவாசியான இந்த டிவிசன் தளபதி ஜகத் டயசுக்கும் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கும் இடையில் ஒருவித முறுகல்நிலை இருந்துவருகின்றபோதும், துணுக்காய், மல்லாவி என படைத்தரப்பால் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக கருதப்படும் பிரதேசங்களை கைப்பற்றியதால், இவர் தலைமையிலான படையணி மீது படைத் தலைமைக்கு எப்போதும் எதையும் சாதிக்கும் என்ற நம்பிக்கை அண்மைக்காலமாக நிறையவே இருந்தது.

இந்த படையணியின் முக்கிய கொமாண்டோ அணிகள் அடுத்த தாக்குதலுக்கு தயாராகின. வன்னேரிக்கும் அக்கராயனுக்கும் இடையிலான சுமார் நான்கு மைல்கள் நீளமான புலிகளின் முன்னணி அரணை உடைத்து புலிகளை முற்றுகைக்குள் கொண்டு வரும் திட்டத்துடன், அதிகாலை 5 மணிக்கு சமர் ஆரம்பமானது.

இந்த தாக்குதலில் எப்படியாவது வெற்றியடைவது என்ற திட்டத்துடன் படையினரின் அணிகள் கடும் சமரை ஆரம்பித்தன. ஆர்.பி.ஜி., லோ உட்பட கனரக ஆயுதங்கள் சகிதம் முன்னேறிய படையினரின் இந்த தாக்குதலில் ஒரு விடயத்தை முக்கியமாக குறிப்பிடவேண்டும்.

அதாவது, யுத்த களத்தில் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளாக இவ்வளவு காலமும் பயன்படுத்தப்பட்டு வந்த 'லோவுக்கு" மேலதிகமாக இந்த சமரில் முதல் முறையாக 'பக்தார் ஷிக்ஹான்" எனப்படும் பாகிஸ்தான் தயாரிப்பிலான புதிய ரக டாங்கி எதிர்ப்பு ஏவுகணை இந்த சமரில் அரச படைகளினால் முதன்முறையாக வலிந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டது.

எதிரி மீதான தாக்குதலுக்கு இலக்கை வகுத்து அதனை தாக்குபவரின் திறன் மூலம் செயற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட டாங்கி எதிர்ப்பு ஏவுகணையையே இதுவரை காலமும் அரச படைகள் பயன்படுத்தி வந்தன. ~லோ" எனப்படும் இலகுரக டாங்கி எதிர்ப்பு ஏவுகணை உட்பட மூன்றாவது தலைமுறை ஆயுதங்கள் சகலதும் இந்த பட்டியலில் அடங்கும்.

ஆனால், இந்த ஆண்டின் முற்பகுதியில் பாகிஸ்தானிடமிருந்து கொள்வனவு செய்த 'பக்தார் ஷிக்ஹான்" எனப்படும் இந்த புதிய ரக டாங்கி எதிர்ப்பு ஏவுகணைக்கு இலக்கிற்கான கட்டளைகளை இலத்திரனியல் முறை மூலம் வழங்கிவிட்டு இயக்கினால் அது தவறாமல் எதிரியின் இலக்கை தாக்கி துவம்சம் செய்யக்கூடியது. இதற்கு தாக்குபவரின் திறன் அவசியமற்றது.

இந்த ஏவுகணை பாரிய பதுங்குகுழிகள் மற்றும் வலிமையான காவலரண்கள் ஆகியவற்றை இலக்கு பிசகாது அழித்து ஒழிக்கக்கூடியது. தோளில் வைத்தும் தாக்கக்கூடிய வசதிகொண்ட இந்த ஏவுகணை, உலங்குவானூர்தியில் பொருத்தி தாக்குவதற்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணையை கடந்த ஏப்ரல் மாதம் சிறிலங்கா படை மன்னார் பகுதியில் முதன்முறையாக பரிசோதித்திருந்தது. ஆனால், கடந்த இரண்டாம் திகதி வன்னேரியில் இடம்பெற்ற தாக்குதலில்தான் முதன்முறையாக தமது வலிந்த தாக்குதலுக்கு பயன்படுத்தியிருந்தது

இதனுடன் இன்னொரு உயர்வலுக்கொண்ட டாங்கி எதிர்ப்பு ஏவுகணையான சீனத்தயாரிப்பு 'ஹொங் ஜியான்" எனப்படும் சுடுகலன் மற்றும் கனரக ஆயுதங்களுடன் அரச படைகள் முன்னேறின.

நாச்சிக்குடாவில் தமது தாக்குதலில் முறியடிக்கப்பட்டதால் புலிகளின் விசேட அணிகள் அங்குதான் நிலை கொண்டிருப்பதாக கருதிய படையினர், வன்னேரி - அக்கராயனில் உள்ள புலிகளின் முன்னரணை இலகுவில் உடைத்துவிடலாம் என்று எண்ணியது.

ஆனால், நேரம் செல்ல செல்ல விடயம் விளங்கிவிட்டது. நாச்சிக்குடாவிலும் பார்க்க பாரிய இழப்புக்கள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகளே அதிகம் தெரிய ஆரம்பித்தது. புலிகளின் எதிர்த்தாக்குதலில் முன்சென்ற படைகள் மண்கவ்வ தொடங்கின. அடுத்தடுத்து அனுப்பிய அணிகளால், புலிகளின் இலக்கு தவறாத ஏறிகணை தாக்குதலில் எதிர்த்து நின்று சமராட முடியவில்லை.

திடீர் திடீர் என ஒவ்வொரு பகுதிகளினால் எதிர்த்தாக்குதல்களை ஆரம்பித்து, வலிந்த தாக்குதல் மேற்கொண்ட படையினரையே வலையில் விழுத்த ஆரம்பித்த புலிகளின் தொடர் தாக்குதல்களால் படைத்தலைமை நடவடிக்கையை நிறுத்த தீர்மானித்தது.

புலிகளின் பகுதிகளுக்குள் சென்று பலியான படையினரின் உடலங்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. ஆனால், நாச்சிக்குடாவில் படையினரின் உடலங்களை கைப்பற்றப்போய் மேலதிக படையினரை இழந்ததால், இந்த தாக்குதலில் உடலங்கள் புலிகளிடம் போனாலும் பரவாயில்லை, இழப்புக்களை குறைத்துக்கொண்டு மீண்டும் தளம் திரும்பலாம் என்ற முடிவுடன், மாலை ஆறு மணியளவில் படை நடவடிக்கை நிறுத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் பலியான சுமார் 30 படையினரில் 22 பேரின் உடலங்களை புலிகள் மீட்டனர். அத்துடன் பெருந்தொகையான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. முன்சென்ற படையினர் எப்படியாவது புலிகளின் தாக்குதலுக்கு தாக்குப்பிடித்து அவர்களது அரணை உடைப்பது என்ற முடிவுடன் போனதால் அவர்கள் கனரக ஆயுதங்களுடன் முன்னேறியிருந்தனர்.

தாக்குதலில் இவர்கள் கொல்லப்பட கொண்டு சென்ற பெருந்தொகையான ஆயுதங்கள் புலிகளால் கைப்பற்றப்பட்டன.

பெரும் இழப்புக்களுடன் படையினரின் இரண்டு திட்டங்களும் கைவிடப்பட்டுள்ளபோதும், இதனை படையினரின் நிரந்தர ஓய்வுநிலையாக கருதிவிடமுடியாது.

ஏ-9 பாதையை தொடாமல் வன்னியில் தொடர்ந்து ஒரு படை நடவடிக்கையை செய்து அதில் வெற்றிகாண வேண்டுமானால், அதற்கு படையினரிடம் உள்ள ஒரே இலக்கு பூநகரி மட்டும்தான். அதனை கைப்பற்றி குடாநாட்டுக்கான புலிகளின் அச்சுறுத்தலை முற்றாக இல்லாமல் செய்துவிடுவதே படையினரின் தற்போதைய பாரிய திட்டமாக உள்ளது. அந்த முயற்சியிலிருந்து அரச படைகள் இலகுவில் பின்வாங்கிவிடப்போவதில்லை.

ஆனையிறவை நோக்கிய இலக்குடன் எத்தனை நடவடிக்கையை மேற்கொண்டு முகமாலையில் பெரும் இழப்புக்களை சந்தித்தாலும் அந்த முயற்சியை மேற்கொள்வதில் படையினர் இன்னமும் எவ்வளவு உறுதியாக உள்ளனரோ அது போன்ற ஒரு ஓர்மநிலை தற்போது வன்னியின் மேற்கில் தோன்றியுள்ளது. இதற்கு புலிகளின் தளம்பாத கள உத்திகள் தக்க பாடம் சொல்லிக்கொண்டிருக்கின்றன.

வலிந்த தாக்குதல் என்பது எதேச்;சையாக எங்கும் ஆரம்பிக்க கூடிய ஒன்று. அதற்கு படை பலமும் ஆயுதபலமும் இருந்தால் போதும். ஆனால், தற்காப்பு தாக்குதலின் வெற்றி எனப்படுவது, சமச்சீரற்ற படைநகர்த்தல், கள உத்திகள் மற்றும் நேர்த்தியான தாக்குதல் எதிர்வுகூறல்கள் ஆகியனவற்றின் அடிப்படையிலானது.

இந்த வகையில் புலிகளின் படைக்குவிப்பும் அவர்களது எதிர்ப்பு வலுவும் எங்கு குவியப்படுத்தப்பட்டிருக்கி��
�து என்ற விடயத்தில் படையினர் தற்போது திக்குமுக்காடிப்போயுள்ளது என்பதே உண்மை.

பாலமோட்டையில் ஒரு வலிந்த தாக்குதல் மேற்ககொண்டால் அங்கு புலிகளின் கடும் எதிர்ப்பு காணப்படுகிறது. நாச்சிக்குடாவில் ஒரு வலிந்த தாக்குதல் ஆரம்பித்தால் அங்கும் புலிகளின் கடும் எதிர்ப்பு காணப்படுகிறது. வன்னேரியில் ஒரு வலிந்த தாக்குதலை ஆரம்பித்தால் அங்கும் புலிகளின் கடும் எதிர்ப்பு காணப்படுகிறது. முகமாலையில் ஒரு வலிந்த தாக்குதலை ஆரம்பித்தால் அங்கும் அதே நிலை.

படைத்தளபதியின் கூற்றுப்படி ஆயிரக்கணக்கில் புலிகள் கொன்றொழிக்கப்பட்டால் இந்த பரந்துபட்ட எதிர்த்தாக்குதல்களுக்கான புலிகள் எங்கிருந்து புதிதாக வருகிறார்கள் என்பது அடுத்த ஊடகவியலாளர் மாநாட்டில் கேலிய ரம்புக்வலவிடம் கேட்கப்பட வேண்டிய கேள்வி.

இது இவ்வாறு இருக்க, வன்னேரி - அக்கராயனில் படையினர் பயன்படுத்திய புதிய டாங்கி எதிர்ப்பு ஏவுகணை பற்றி களத்திலிருந்து பேசவல்ல ஒருவரிடம் கேட்டபோது -

'புலிகளிடம் உள்ள டாங்கி எதிர்ப்பு ஏவுகணையில் புதிதாக ஒன்று சேர்ந்திருக்கிறது. அவ்வளவுதான்" - என்றார்.

'அப்படியானால், கடந்த இரண்டாம் திகதி சமரில் பாகிஸ்தான் தயாரிப்பான பக்தார் ஷிக்ஹான் எனப்படும் டாங்கி எதிர்ப்பு ஏவுகணையும் கைப்பற்றப்பட்டளதா" - என்று கேட்க அதற்கிடையில் அழைப்பு அறுந்துவிட்டது

நன்றி - தமிழ்நாதம்

Friday, August 29, 2008

வான்புலிகளின் தாக்குதல் எழுப்பும் கேள்விகள்!

சிறிலங்கா கடற்படையின் கிழக்குப் பிராந்திய கடற்படைத் தலைமையகம் மீது வான்புலிகள் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடத்தியுள்ள தாக்குதலானது களநிலைமை குறித்த மறு மதிப்பீடு ஒன்றிற்குச் செல்ல வேண்டியதானதொரு நிர்ப்பந்தத்தைச் சிறிலங்காப் படைத்தரப்பிற்கு மட்டுமல்ல வேறு உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளுக்கும் நிச்சயம் ஏற்படுத்தியிருக்கும் என்றே உறுதியாக நம்பலாம்.

கடற்படையின் கிழக்குத் தலைமையகம் மீது வான்புலிகள் நடத்திய தாக்குதலில் சிறிலங்கா கடற்படைக்கு ஏற்பட்டுள்ள உயிர் இழப்புக்கள் மற்றும் உடமை இழப்புக்கள் என்பனவற்றின் அளவு, தொகை என்பன இங்கு முக்கியமானதொரு விடயம் அல்ல.

சிறிலங்காப் படைத்தரப்பின் அதி முக்கியத்துவம் வாய்ந்த கேந்திர நிலையம் ஒன்றின் மீது இலக்குத் தவறாது வான்புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளமையும், விடுதலைப் புலிகளின் வான் கலங்கள் தாக்குதலை நடத்திவிட்டு வெற்றிகரமாகத் தளம் திரும்பியுள்ளமை என்பதுமே இங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

சிறிலங்கா அரசும், அதன் ஆயுதப் படைத்தரப்பும் அண்மைக்காலமாக மேற்கொண்டு வரும் பிரச்சாரத்தின் பிரகாரம் விடுதலைப் புலிகள் இயக்கமானது மிக விரைவில்- குறிப்பாக இவ்வாண்டின் இறுதிக்குள் தோற்கடிக்கப்பட்டுவிடும் என்பதே.

அதிலும் குறிப்பாக இராணுவம் கிளிநொச்சி நகரை நெருங்கிவிட்டது. இன்னமும் ஓர் கடுமையான மோதலின் பின்னர் கிளிநொச்சி நகர் கைப்பற்றப்படுவதோடு, விடுதலைப் புலிகளும் தோற்கடிக்கப்பட்டு விடுவார்கள் என்பது முக்கியமானதாகும்.

ஆனால், சிங்கள ஊடகங்களோ அதற்கும் சற்று மேலானதாக, மல்லாவி, துணுக்காய், நாச்சிக்குடா ஆகிய மூன்று இடங்களும் கைப்பற்றப்படுமானால் விடுதலைப் புலிகளை வெற்றிகொண்டதாகி விடும் எனக் கூறுகின்றன.

ஏனெனில், அங்குதான் - விடுதலைப் புலிகளின் மூன்று முக்கிய தளங்கள் இருப்பதாகவும், அங்கேயே தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் தங்கியிருப்பதாகவும் அவை பிரச்சாரம் செய்கின்றன. ஆகையினால், இத்தளங்கள் கைப்பற்றப்பட்டால் புலிகள் ஒழிக்கப்பட்டு விடுவார்கள் என அவை கூறுகின்றன.

இத்தகையதொரு நிலையில் வான்புலிகள் கடற்படையின் கிழக்குத் தலைமையகம் மீது தாக்குதலை நடத்தி விட்டுத் திரும்பி வந்தமை இரு பிரதான கேள்விகளை எழுப்புபவையாகவுள்ளன.

01. சிறிலங்காப் படைத்தரப்பு கூறிக்கொள்வது போன்று விடுதலைப் புலிகள் தாக்குதலை நடத்தும் சக்தியை இழந்துவிட்டார்களா?

02. சிறிலங்காவின் பாதுகாப்பு ஏற்பாடுகளினால் வான்புலிகளைத் தடுத்து நிறுத்திவிட முடியுமா? என்பவை இவையாகும்.

வான்புலிகள் தற்பொழுது நடத்திய தாக்குதலில் தமக்குப் பாரிய சேதங்கள் ஏற்படவில்லை என்றும், இதுபோன்ற தாக்குதல்கள் தமது இராணுவ நடவடிக்கைகளைப் பாதிக்கமாட்டாது எனச் சிறிலங்கா அரச தரப்பும், படைத் தலைமையும் விளக்கம் அளிக்கவும், பிரச்சாரம் செய்யவும் முற்படலாம்.

ஆனால், இத்தாக்குதல்களை அடுத்து எழுப்பப்படும் கேள்விகள் சிலவற்றைச் சிறிலங்காப் படைத்தரப்பு புறந்தள்ளி விடுதல் என்பது இலகுவான விடயம் அல்ல. இதில் முதலாவதாக தனது வான்படைகளை விடுதலைப் புலிகள் இன்னும் செயல்திறன் மிக்கதாக வைத்துக்கொண்டுள்ளனர் என்பதை அது ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

ஏனெனில், விடுதலைப் புலிகள் இன்னமும் தனது வான்படை மூலம் தாக்குதலை மேற்கொள்ளும் சக்தி கொண்டவர்களாகவுள்ளனர் என்பதை நிரூபணம் செய்துள்ளனர். இதன் காரணமாக விடுதலைப் புலிகளின் இராணுவ ரீதியிலான செயல்திறன் முடக்கப்பட்டுவிட்டது என்ற பிரச்சாரம் இனி ஏற்றுக் கொள்ளப் படத்தக்கதொன்றாக இருக்கப்போவதில்லை.

அத்தோடு, விடுதலைப் புலிகள் தமது வான் படையை வன்னிப் பிரதேசத்தில் வைத்துப் பராமரிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளனர் என்பது பராமரிப்புக் குறித்த விடயத்தைச் சுட்டிக்காட்டுவதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.

அதாவது, ஏனைய படையணிகள் போன்றில்லாது வான்படையை பராமரிப்பது என்பது கடினமானதொரு விடயமாகும். அதாவது, விமான ஓடுபாதையில் இருந்து விமானங்கள் வரை பாதுகாப்புடன் பராமரிக்க வேண்டியவையாகவுள்ளன.

இத்தகைய நிலையில் வான்புலிகள் சிறிலங்காவின் கேந்திர நிலை ஒன்றின் மீது தாக்குதலை நடத்திவிட்டு வெற்றிகரமாகத் தளம் திரும்பியுள்ளமையானது வான்புலிகள் முழு மூச்சில் செயற்படும் ஆற்றலைக் கொண்டுள்ளனர் என்பதை வெளிப்படுத்தும் ஒன்றாகவே கொள்ளத்தக்கதாகும்.

அதிலும் குறிப்பாக வான்புலிகள் சிறிலங்காக் கடற்படையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதி மீது தாக்குதல் நடத்தியமையானது வான்புலிகள் தமது இருப்பை வெளிப்படுத்துவதற்கான நடவடிக்கையாக மட்டும் கொள்ளத்தக்கதொன்றல்ல. சிறிலங்காவின் பாதுகாப்பிற்கு அவர்கள் விடுத்துள்ள சவாலாகவே கொள்ளத்தக்கதாகும்.

வான்புலிகள் 2007 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கட்டுநாயக்கா வான்படைத் தளத்தின் மீது தாக்குதலை நடத்தியபோது இத்தாக்குதலானது எதிர்பாராத வேளையில் வான்புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதல் எனச் சிறிலங்காப் படைத்தரப்பினாலும், அரச தரப்பினாலும் கூறப்பட்டது. அத்தோடு, சிறிலங்காப் படைத்தரப்பு வான் எதிர்ப்பு நடவடிக்கைக்குத் தயாராக இருக்கவில்லை என்றும் கூறப்பட்டது.

இதனை அடுத்து வான் பாதுகாப்பு செயற்பாடுகள் தீவிரமாக்கப்பட்டன. நவீன ராடர் கருவிகள் தென்னிலங்கை உட்பட கேந்திர நிலையங்களில் பொருத்தப்பட்டன. இவற்றில் சிலவற்றைச் சில நாடுகள் அன்பளிப்பாகவும் வழங்கின. அத்தோடு வான் பாதுகாப்பிற்கென நவீன பீரங்கிகளும், ஏவுகணைகள் பொருத்தப்பட்ட விமானங்களும், உலங்குவானூர்திகளும் கொள்வனவு செய்யப்பட்டதோடு, அவை எவ்வேளையிலும் தயார் நிலையிலும் வைக்கப்பட்டன. வெளிநாட்டுப் பயிற்சியாளர்களும் வரவழைக்கப்பட்டிருந்தனர். இவற்றிற்கும் மேலாக ராடர் தொகுதியுடன் இணைக்கப்பட்ட தானியங்கிப் பீரங்கிகளும் கொள்வனவு செய்யப்பட்டன.

ஆனால், இரண்டாவது முறையும் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு வான்புலிகளின் தாக்குதலுக்குள்ளானபோது இப்பாதுகாப்பு ஏற்பாடுகளினால் வான்புலிகளுக்கு இடையூறு ஏற்படவில்லை. இலக்கைத் தாக்கிவிட்டு வான்புலிகள் தளம் திரும்பியிருந்தனர்.

ஆனால் சிறிலங்காப் படைத்தரப்பில் பயன்படுத்தப்பட்டிருந்த ஆயுத தளவாடங்கள் மீது குறை கூறப்பட்டன. குறிப்பாக இந்தியா அன்பளிப்பாக வழங்கிய 'இந்திய ராடர்கள்" திறம்பட செயலாற்றவில்லை எனக் குறை கூறப்பட்டது. அதன் பின்னர் தாக்குதல் வேளையில் ராடர் இயங்கிக்கொண்டிருக்கவில்லை எனக் கூறப்பட்டது.

இதன் பின்னர் வான் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் தீவிரமாகின. நவீன விமானங்கள் விமானப்படையில் இணைக்கவும் பட்டன. இந்த வகையில் வான்படையும், வான் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்ட நிலையில், விடுதலைப் புலிகளின் வான்படையைச் செயலிழக்கச் செய்யும் வகையில் தொடர்ச்சியான வான் தாக்குதல்களை படைத்தரப்பு வான் புலிகளின் நிலைகள் மற்றும் வான்புலிகளின் விமான ஓடுபாதை என்பவற்றின் மீது சிறிலங்கா வான்படை விமானங்கள் மேற்கொண்டன.

சிறிலங்கா வான்படை விடுதலைப் புலிகளின் வான்படையின் ஓடுபாதை மீதான தாக்குதல் எனக் கூறி நடத்திய தாக்குதலை மதிப்பிட்டால் - அப்பகுதியானது பெரும் குன்றும், குழியும் நிறைந்த பகுதியாக இன்று இருத்தல் முடியும்.

இத்தகைய நிலையில் சிறிலங்கா அரச தரப்பும் சரி, வான்படைத் தரப்பும் சரி விடுதலைப் புலிகளின் வான்கலம் எதுவும் இனிமேல் வானில் பறக்க முடியாது எனவும் பறக்க முற்படும் அடுத்த கணமே அவை சுட்டுவீழ்த்தப்படும் எனச் சவால் விடுத்தும் இருந்தன - பல மாதங்கள் வான்புலிகள் தாக்குதல் நடத்தாது இருந்தமை சிறிலங்கா அரச தரப்பிற்கு வாய்ப்பாகவும் இருந்தது.

இத்தகையதொரு நிலையில்தான் வான்புலிகள் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருமலைத் துறைமுகப் பகுதியில் வெற்றிகரமான தாக்குதல் ஒன்றை நடத்திவிட்டுத் தளம் திரும்பியுள்ளனர்.

இத்தாக்குதல் குறித்து சிறிலங்கா அரசும், படைத்தலைமையும் எதனைக் கூறிக்கொண்டாலும், இத்தாக்குதலை அவர்கள் புறம் தள்ளிவிட முடியாது. இதனை ஏ.எப்.பி. செய்திச் சேவையின் மதிப்பீடு வெளிப்படுத்தியது.

'கடந்த 16 மாதகால இடைவெளியில் சிறிலங்காப் படையினர் மீது வான்புலிகள் நடத்திய முதன்மைத் தாக்குதல் திருமலைத் துறைமுகத்தின் மீது நடத்தப்பட்டுள்ளது" எனத் ஏ.எப்.பி. செய்திச் சேவை தனது மதிப்பீட்டினை வெளிப்படுத்தியிருந்தது.

அடிப்படையில், வான்புலிகளின் இத்தாக்குதலானது, சிறிலங்காவின் வான் பாதுகாப்புச் செயற்பாடுகள் குறித்து மறு பரிசீலனை செய்யவேண்டியதான கட்டாயம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, வான்புலிகளின் பறப்பை சிறிலங்கா வான்படையாலோ, சிறிலங்கா வான் பாதுகாப்பு செயற்பாடுகளினாலோ கட்டுப்படுத்த முடியாது என்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு, விடுதலைப் புலிகளின் வான் படையைச் செயலிழக்கச் செய்வதற்காக இதுவரை சிறிலங்கா மேற்கொண்ட வான் தாக்குதல்கள் எவையும் வான்புலிகளை முடக்கி விடுபவையாகவோ அவர்களின் செயற்பாட்டை ஒழித்து விட்டனவையாகவோ அமையவில்லை என்பதாகும்.

இதேவேளை, வான்புலிகள் தாக்குதலுக்கு நீண்டகால இடைவெளியை எடுத்துக்கொண்டமையானது வான்புலிகளின் செயல்திறன் பாதிக்கப்பட்டதினால் அல்ல, தேவைக்கான காத்திருத்தல் என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், இது தனியாக வான்புலிகளுக்கு மட்டும் தான் பொருத்தப்பாடானதொன்றல்ல. விடுதலைப் புலிகளைப் பொறுத்து - அதாவது, அதன் பல்வேறு வகை படைக் கட்டுமானங்களைப் பொறுத்தும் பொருத்தப்பாடான தொன்றாகவே கொள்ளத்தக்கதாகும்.

எடுத்துக்காட்டாகக் கடற்புலிகளின் நடவடிக்கைகள் இன்று மட்டுப்படுத்தப்பட்டுள்ள வேளையில் அது சிறிலங்காக் கடற்படையின் மேலாண்மையால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகக் கொள்ளப்படுதல் சரியானதொரு மதிப்பீடாக இருக்கமாட்டாது. ஏனெனில், கடற்புலிகளின் செயற்பாட்டைச் செயலிழக்கச் செய்யும் வகையில் சிறிலங்காக் கடற்படை சாதனைகள் எதையும் செய்துவிடவில்லை.

மாறாகக் கடற்புலிகளின் சில தாக்குதல் குறித்து இன்னமும் குழப்பமடைந்த நிலையிலேயே சிறிலங்காக் கடற்படை உள்ளது. ஆகையினால், சிறிலங்காப் படைத்தரப்பின் பிரச்சாரத்தின் அடிப்படையிலோ அன்றி களமுனையில் வெளிப்படையாகத் தெரியும் சில விடயங்களின் அடிப்படையிலோ யுத்தம் குறித்து தீர்மானம் எடுப்பவர்கள் தவறாக மதிப்பீடு ஒன்றிற்குச் செல்பவர்களாகவே இருப்பர்.

நன்றி: - ஜெயராஜ் - வெள்ளிநாதம் (29.08.08)

Wednesday, August 20, 2008

சிங்களப் பேரினவாதிகளுக்கு ஆளும் வர்க்கம் தொடர்ந்து வளைந்து கொடுப்பது தேசத் துரோகம்

கடந்த 10 ஆம் திகதி வெளிவந்த ""சன்டே லீடர்' ஆங்கில வார இதழுக்கு நிர்மாணத்துறை மற்றும் பொறியியல் சேவைகள் அமைச்சர் ராஜித சேனாரத்ன வழங்கிய விலாவாரியான செவ்வியில் ""பயங்கரவாதம் தோற்றம் பெறுவதற்கு சிங்கள தீவிரவாதிகளே காரணம்' எனும் விடயத்தினை பிரதானமாகக் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக அவரால் முன்வைக்கப்பட்டிருந்த முக்கியமான இரண்டொரு அபிப்பிராயங்களை மேற்கோள்காட்டுவது அவசியமாகிறது. அதில் முதலாவது அம்சம் வருமாறு; "" நாம் 25 வருட காலமாக நடைபெற்று வந்த போராட்டத்தைப் பற்றிப் பேசுகின்றோம். இதனை நாம் இராணுவ அணுகுமுறையினூடாக வென்று விடக்கூடும். பயங்கரவாதத்தினை நாம் தோற்கடிக்கக்கூடும். ஆனால், பயங்கரவாதமானது நோயின் அறிகுறி மட்டுமே. அடிப்படைக் காரணம் எதோ அதற்கே பரிகாரம் காணப்பட வேண்டும். தமிழ் மக்களை மீண்டும் மீண்டும் அடக்கியொடுக்கி வந்தமையே அந்த அடிப்படைக் காரணமாகும். அவர்கள் திரும்பத்திரும்ப நட்டாற்றில் விடப்பட்டுள்ளனர். 1956 முதல் அவர்கள் சிங்கள தலைமைகள் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். பிரச்சினையை பிசாசுபோல் வளரச் செய்தவர்கள் சிங்கள தீவிரவாதிகளே... உண்மையில் சிங்கள தீவிரவாதிகளின் கைவரிசை காரணமாகவே இன்று நாம் பயங்கரவாதத்திற்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.' இங்கே பயங்கரவாதம் என சேனாரத்ன குறிப்பிடுவது தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரச் செயற்பாடுகள் என்பது தெளிவாகிறது. ""சிங்கள தீவிரவாதிகளின் கைவரிசை காரணமாகவே இன்று நாம் பயங்கரவாதத்திற்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளது' என அவர் குறிப்பிட்டுள்ளாரே ஒழிய, ""சிறுபான்மையினரின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கென அதிகாரப்பகிர்வு செய்வதற்கு மேற்கொண்ட முயற்சிகளையும் முறியடித்து நாடு யுத்தத்தில் சிக்குண்டிருப்பதற்குப் பாத்திரவாளிகளாயுள்ள சிங்கள தீவிரவாதிகள்' எவ்வாறு கையாளப்பட வேண்டுமென்பதை அவர் குறிப்பிடத் தவறிவிட்டார்.

சேனாரத்ன தெரிவித்த கருத்துகளின் இரண்டாவது அம்சத்தைப் பார்ப்போம். சமஷ்டி எனும் சொற்பதம் அதிகப்பெரும்பான்மையான சிங்கள மக்களால் தவறாகப் புரிந்துவைக்கப்பட்டுள்ளது. பிரச்சினை இதுதான். அதாவது சமஷ்டி முறைமையானது இரு சமூகங்களுக்கும் இடையில் ஒரு நியாயம் நீதியான அரசியல் நிலைப்பாடாக அமையக்கூடியது என முதன்முதலாக தமிழ் அரசியல்வாதிகளாலேயே முன்வைக்கப்பட்டது. அன்று முதல் சமஷ்டி என்பது பிரிவினைக்கு ஒப்பானது என்ற எண்ணம் சிங்கள மக்களின் மனதில் ஆழப்பதிந்திருக்கின்றது. சமஷ்டிவாதிகள் நீண்டகாலத்தின் பின் தனிநாடு அல்லது தமிழீழம் கோரினர். எனவே, சமஷ்டி முறைமையானது ஏற்றுக்கொள்ளப்பட்டால் தமிழ் அரசியல் கட்சிகள் என்றாவது தனிநாட்டுக்காகப் போர்க்கொடி உயர்த்தக்கூடும் என்ற உட்பயம் இருக்கவே செய்கிறது. ஆனால், சமஷ்டி என்பது ஐரோப்பிய நாடுகளிலோ அண்டை நாடான இந்தியாவிலோ விரும்பத்தகாத ஒன்றல்ல. அவை இலங்கையின் அனுபவத்தைச் சந்திக்காத படியால் கூடுதலான விட்டுக்கொடுப்பு மனப்பாங்குடன் அதனை அதிகாரப்பகிர்வு என்ற கருத்தியலாகக் கையாள்வதற்குரிய பக்குவத்தினைக் கொண்டிருக்கின்றன.'

சிங்கள தீவிரவாதிகள் செய்துள்ள நாட்டுத்துரோகம்

இங்கே கவனிக்கப்படவேண்டியது யாதெனில், அதிகப்பெரும்பான்மையான சிங்கள மக்கள் சமஷ்டி என்பதை முற்றிலும் தவறாகப் புரிந்துவைத்துள்ளனர் என்றாலும் கூட சிங்கள தீவிரவாதிகள் சிங்கள பொதுமக்கள் மத்தியில் மேற்கொண்டுவந்த விசமத்தனமான பிரசாரமே அதற்குக் காரணமாகும். 10 விழுக்காட்டுக்கும் குறைவான எண்ணிக்கையிலான சிங்கள தீவிரவாதிகளுக்கு இலங்கையில் எல்லா அரசாங்கங்களும் வளைந்து கொடுத்து வந்துள்ளன. நிச்சயமாக அதன் காரணமாகவே நாட்டின் சமாதானம், சுபீட்சம் மற்றும் ஒட்டுமொத்தமான முன்னேற்றத்திற்கு பலத்த குந்தகம் ஏற்பட்டுவந்துள்ளதை முதலாளித்துவ பிற்போக்குவாத ஆட்சியாளர் கிஞ்சித்தும் பொருட்படுத்துவது கிடையாது. இதுவே நாட்டுக்குச் செய்யப்பட்ட பெரிய துரோகமாகும்.

பிரிவினையைத் தவிர்க்கும் நோக்கிலேயே செல்வநாயகம் சமஷ்டி முறைமையை முன்வைத்தார்

சமஷ்டி முறைமையானது தமிழ் அரசியல்வாதிகளாலேயே முதன்முதலாக முன்வைக்கப்பட்டது என்பது தவறாகும். முதன்முதலாக 1926 இல் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்காவாலும் பின்பு 1947 இல் கண்டியில் சிங்களத் தலைவர்களாலுமே அது முன்வைக்கப்பட்டது. 1949 இல் தமிழரசுக் கட்சி ஸ்தாபிக்கப்பட்ட பின்னரே தமிழர் சார்பில் அக்கட்சியின் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தால் சமஷ்டி முறைமை கோரப்பட்டது. என்றாவது ஒருநாள் நாடு பிரிந்து போவதைத்தவிர்க்கும் நோக்கிலேயே அக்கோரிக்கையை பிரேரிக்கத்தலைப்பட்டதாக செல்வநாயகம் அன்று சூளுரைத்திருந்தார். ஆனால் சிங்கள தீவிரவாதிகள் சமஷ்டி முறைமையை இடையறாது அழுங்குப்பிடியாக எதிர்த்தமையால் அரசாங்கங்களும் தத்தம் ஆட்சியை தக்கவைப்பதற்காக அரசியல் உறுதியின்றி அவர்கட்குத் தலை வணங்கிச் செயற்பட்டு வந்தமையால், 1976 இல் தமிழ் தலைமைகள் தனிநாட்டுக்காகப் போராட வேண்டுமென்ற தீர்மானத்தை எடுக்க வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டன. அதுவும் வெறுமனே சாத்வீகப் போராட்டத்தின் மூலம் எட்டக்கூடியதல்ல என்ற நிலையில் அன்றைய ஜே.ஆர்.ஜயவர்த்தன அரசாங்கம் 1977 இல் பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில் மற்றும் 1981 இல் யாழ்.நூல் நிலையம் அரச தரப்பினரால் எரியூட்டி சாம்பலாக்கப்பட்டதும் மற்றும் இன்னோரன்ன சூழ்நிலையில்தான் தமிழ் இளைஞர் ஆயுதம் ஏந்தும் நிலைக்குத்தள்ளப்பட்டனர். இந்த வரலாற்றுப் பின்புலத்தினை வெகுஇலகுவாக மறந்துவிட்டது மட்டுமல்லாமல், சின்னாபின்னப்பட்டிருக்கும் நாட்டை ஒருங்கிணைக்கும் வகையிலான ஆக்கபூர்வமான அரசியல் தீர்வைக் காண்பதற்கு வக்கற்ற நிலையிலேயே ஆட்சியாளர் பயங்கரவாதத்தை துடைத்தெறியப்போவதாக பறைசாற்றி வருகின்றனர்.

மரணித்துவிட்ட 13 ஆவது திருத்தம் பற்றி பேசி அர்த்தமில்லை

இந்த நிலையிலேயே அமைச்சர் சேனாரத்ன தான் அமைச்சர் நாற்காலியில் வீற்றிருந்தாலும் கூட ஜாதிக ஹெல உறுமய (ஜே.எச்.யூ.) மற்றும் தேசபக்த தேசிய முன்னணி (கNM) போன்ற அமைப்புகள் தன்மீது தொடுத்துவரும் கடுமையான தாக்குதல்களையும் பொருட்படுத்தாமல் 13 ஆவது திருத்தம் முழுமையாக அமுல்செய்யப்பட வேண்டுமென தான் உருகி உழைப்பதாகக் கூறியுள்ளார்! அவ்வாறாக அவர்கள் பெற்றுக்கொள்ளும் அனுபவத்தின் ஊடாக மனமாற்றமடைந்து சமஷ்டி முறைமையை எதிர்ப்பதைக் கைவிட்டுவிடுவார்கள் என சேனாரத்ன கூறியிருப்பது வேடிக்கையாயுள்ளது. 13 ஆவது திருத்தமானது வடக்கு, கிழக்குக்கென சமச்சீரற்ற அதிகாரப்பகிர்வு அடங்கலானதோ தமிழ் மக்களின் உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் காத்திரமான சுயாட்சி அதிகாரம் கொண்டதாகவோ இல்லை. அதுமட்டுமல்லாமல் வடக்கு, கிழக்கை சிங்கள தீவிரவாதிகளின் விருப்பத்திற்கேற்ப நீதித்துறையை நாடித் துண்டாடிய பின் முற்றாக மரணித்துவிட்டதாகிய 13 ஆவது திருத்தம் பற்றி பேசுவதில் அர்த்தமில்லை என்பதை சேனாரத்ன போன்றோர் புரிந்துகொள்ளட்டும்.

நாராயணன் கோத்தபாயா கருத்துக்கள்

சென்ற வாரம் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் சிங்கப்பூர் ""ஸ்றெயிற்ஸ் ரைம்ஸ்' இதழுக்கு வழங்கியிருந்த செவ்வியில் ""தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான சமரில் இலங்கை (அரசாங்கம்) வெற்றியீட்டினாலும் கூட, தமிழ் மக்கள் அரசாங்கம்பக்கம் இல்லாத படியால் யுத்தத்தில் வெற்றியடைய முடியாது. தமிழர் கொண்டுள்ள கடுமையான விரக்தியையும் வெறுப்புணர்வையும் சகல இலங்கையர்களும் கருத்தில் எடுக்கவில்லை. தமிழருக்கு கூடுதலான அதிகாரங்களை பகிர்ந்தளித்து அவர்கள் இலங்கை அரசின் ஒரு பகுதியினர் என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும்' எனக் கூறிவைத்தார். நாராயணன் தெரிவித்த மேற்குறித்த கருத்துகள் தொடர்பாக இந்திய தேசிய செய்திச்சேவை (ஐஅNகு) மையம் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவிடம் வினவிய போது, ""நாராயணன் கூறியதில் எதிர்மறையானது ஒன்றுமில்லை. ஜனாதிபதி என்றும் கூறி வந்ததையே நாராயணன் தனது வார்த்தைகளில் வெளிப்படுத்தியுள்ளார். அதாவது, ""பயங்கரவாதம் தோற்கடிக்கப்படவேண்டும். பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்' என தனது கருத்தை கூறியுள்ளார். கோத்தாபய மேலும் கூறியதாவது; ""கடந்த 25 30 வருடங்களாக தமிழ் சமூகத்திற்கு கொழும்பு அரசாங்கங்களால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் காப்பாற்றப்படவில்லை' என்பதாகும்.

உண்மையில் கடந்த 6 தசாப்தங்களாக தமிழருக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டன என்பதை எவரும் மறந்துவிட முடியாது. 1957 இல் பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம் மற்றும் 1965 இல் டட்லி செல்வநாயகம் ஒப்பந்தம் குறிப்பிட்ட சிங்கள தலைவர்களால் ஒருதலைப்பட்சமாக கிழித்தெறியப்பட்டவை இரு உதாரணங்கள் மட்டுமே. அத்தோடு, நின்றுவிடாது தமிழ் தலைமைகள் மேற்கொண்டு வந்த சாத்வீகப் போராட்டங்களும் 1960கள் முதல் அரச படைபலம் கொண்டு பட்டவர்த்தனமாக நசுக்கப்பட்டு தமிழரை அழித்தொழிக்கும் கட்டம் வந்துவிட்ட நிலையிலேயே தமிழ் இளைஞர் ஆயுதம் ஏந்தி போராடத் தலைப்பட்டதோடு, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் தன்னைப் பலப்படுத்திக்கொண்டது. எனவே, இலங்கை அரசுதான், அந்த இயக்கம் 1980களில் தோற்றம் பெறுவதற்கு வழிசமைத்தது எனும் யதார்த்தத்தினை ஆட்சியாளர் எவராயினும் நிதானமாக புரிந்துகொள்வது அவசியமாகும்.

கோத்தாபய தனது மேற்குறித்த செவ்வியில் மேலும் ஒரு முக்கியமான கருத்தினை கூறிவைத்துள்ளார். அதாவது ""இறுதியில் நாம் எல்லோரும் இலங்கையர்கள் என்று சிந்திக்க பழகிக்கொள்ள வேண்டும் என்று. நாம் முதலில் இலங்கையர், அதன் பின்னரே தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள், பறங்கியர் என்று சிந்திப்பதற்கு தலைப்படுகின்றோமோ அன்றுதான் எமது வெற்றி நாள்' என்பதாகும்.

இது உண்மைதான். ஆனால், குறிப்பாக பிரித்தானிய ஆட்சியிலிருந்து இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் முதல் படிப்படியாக சிங்கள பௌத்த மேலாதிக்கம் தலைதூக்கி வந்தபடியால் முரண்பாடுகளும் கசப்புணர்வுகளும் மேற்கிளம்பி தமிழ் மக்கள் அந்நியப்படுத்தப்பட்டு தமிழ்த் தேசியவாதம் வலுப்பெற்றெழுந்தது. மறுபுறத்தில் இலங்கையின் பல்லினத் தன்மையை மனதிற்கொண்டு வேற்றுமையில் ஒற்றுமை காணவேண்டும் என சிந்தித்து மதச்சார்பின்மைக் கொள்கை முன்னெடுக்கப்பட்டிருந்தால் நாட்டில் சமாதானமும் சுபீட்சமும் என்றோ காணப்பட்டிருக்கும் எனலாம்.

யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் கண்ட கனவு

இதனை எழுதும்போது 1920/ 1930 களில் பிரபல கல்விமான் ஹன்டி பேரின்பநாயகத்தின் வழிகாட்டலில் செயற்பட்டு வந்த யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் (ஒஙுஇ) அமைப்பின் வரலாறு ஞாபகத்திற்கு வருகிறது. அவ் அமைப்பானது சிங்கள, தமிழ் ஒற்றுமைக்காகவும் பொதுவான இலங்கை தேசிய அடையாளத்திற்குமாக விடாப்பிடியாக சலிக்காது உழைத்து வந்தது. பல வருடாந்த அமர்வுகளை நடத்திவந்தது. வருடாந்த அமர்வுகளின்போது உரையாற்றுவதற்கு தென்னிலங்கையின் எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் வருடாவருடம் அழைக்கப்பட்டனர். இளைஞர் காங்கிரஸ் முன்னெடுத்து வந்த சீரிய பணிகளை பண்டாரநாயக்க தவிர மற்றைய தலைவர்கள் குறிப்பாக அன்றைய இடதுசாரித் தலைவர்கள் வெகுவாகப் பாராட்டினர். மற்றும் தென்னிலங்கையில் இருந்து அழைக்கப்பட்ட கல்விமான்களுள் அன்று ஆனந்தா கல்லூரியின் அதிபராய் இருந்தவராகிய பி.டீ.எஸ்.குலரத்தின மிகத் தலைசிறந்து விளங்கியவர். உண்மையில் இரு வருடங்களுக்கான அமர்வுகளில் தலைமை தாங்கும் கௌரவம் குலரத்தினவுக்கு வழங்கப்பட்டது.

1956 இல் நாட்டின் ஒற்றுமைக்கு உலை வைக்கப்பட்டது

துரதிஷ்ர்டவசமாக குறிப்பாக 1956 இல் பண்டாரநாயக்க அரசாங்கத்தால் ""தனிச் சிங்களம்' சட்டம் இயற்றப்பட்டு நாட்டின் ஒற்றுமைக்கு உலைவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இனவாதம் தலைவிரித்தாடிய நிலையில் ஹன்டி பேரின்பநாயகம் பெரிதும் மனமுடைந்துபோனார். அதாவது இரு தசாப்தங்களாக நாட்டின் ஒற்றுமைக்காக அயராது உழைத்து வந்தவர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு நிறைந்த செயற்பாடுகள் விழலுக்கு இறைத்த நீர்போல் ஆகிவிட்டதே என்ற ஆழ்ந்த கவலை யாழ். இளைஞர் காங்கிரஸ் முன்னோடிகள் மத்தியில் ஏற்பட்டது. இலங்கைக்கு சுதந்திரம் வேண்டுமென ""பூர்ண சுவராஜ்' எனக் கோஷமிட்டு இளைஞர் காங்கிரஸ்தான் முதன்முதலில் போர்க்கொடி உயர்த்தியது. இதனை ஜனாதிபதி ராஜபக்ஷ 60 ஆவது சுதந்திர தினத்தில் ஆற்றிய தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறான முன்னுதாரணமான விடயங்களை சம்பிரதாயமாகக் கூறுவதைக் காட்டிலும் சிங்கள மக்கள் மத்தியில் அயராது பிரசாரப்படுத்த வேண்டுமல்லவா?

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும் தக்கவைத்துக்கொள்வதற்கும் ஐக்கியதேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான கழுத்தறுப்புப் ப&

நன்றி :- வ.திருநாவுக்கரசு
தினக்குரல்

Sunday, August 17, 2008

பின்வாங்கி முன்னேறும் தந்திரோபாயம்

'ஓரடி பின்னே ஈரடி முன்னே" என்று சீனப் புரட்சித் தலைவர் மாவோ சொன்னார்.

சுனாமி அலை போல் பின்னுக்குச் சென்று முன்னேறி வந்து தாக்குதல் தொடுக்கும் இராணுவத் தந்திரோபாயத்தை அவர் இப்படிப் புலப்படுத்தினார்.

எதிரியின் எதிர்பார்ப்புக்கு இணங்க நாம் எமது உத்திகளை அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. எமது வசதிதான் எமக்கு முக்கியம். எதற்காகப் பின்னோக்கி வரவேண்டும் என்பதற்கு முக்கிய காரணங்கள் உண்டு.

சண்டைக்குப் பொருத்தமில்லாத களச் சூழலிலிருந்து தந்திரோபாயமாக விலகிவிட வேண்டும். எதிரியை உள்வரவிட்டுத் தாக்குதல் நடத்துவதால் கிடைக்கும் அனுகூலம் பற்றிக் கணிப்பிட வேண்டும்.

தனது அணிக்கு வரவிருந்த இழப்பைத் தவிர்த்து அணியின் கட்டுக்கோப்பைப் பாதுகாக்க வேண்டும். அத்தோடு தட்பவெப்ப மாற்றங்களையும் கருத்தில் எடுக்க வேண்டும். படைய விஞ்ஞானத்தில் பின்வாங்கல் றிற்ரிறீற் (Retreat) (Retreat) எனப்படுகிறது.

முன்னேறித் தாக்குவது எந்தளவிற்கு முக்கியமோ அந்தளவிற்குப் பின்வாங்குதலும் முக்கியமானது. றிற்ரிறீற் நன்கு திட்டமிட்டு ஒழுங்கமைவாக நடத்தப்படுகிறது. சிதறி ஓடுவது றிற்ரிறீற் ஆகமாட்டாது. அதையொரு இராணுவத் தந்திரோபாயமாகவும் கணிப்பிட இயலாது.

பெருவிலை கொடுத்துப் பெற்ற வெற்றியால் பயன் இல்லை. அப்படியான வெற்றி கண்ணை விற்றுச்சித்திரம் வாங்குவதற்கு நிகரானது. சிறந்த வீரர்களை இழந்து பெற்ற வெற்றியைப் பைறிக் விக்ரறி (Pyrric Victory) என்பார்கள்.

உண்மையில் அப்படியானதொரு வெற்றி வெற்றியல்ல. எப்பிறுஸ் (Epirus) நாட்டின் மன்னன் பைறுஸ் (Pyrrus கி.மு.319 -கி.மு.272) ரோமாபுரிக்கு எதிராகச் சிசிலியிலும் இத்தாலியிலும் தொடர்ச்சியாகப் போராடினான்.

அஸ்கூலம்(Asculum) என்ற போரில் அவன் பெருவெற்றி ஈட்டினான். ஆனால் இந்தப் போரில் தனது தலைசிறந்த முன்னணி வீரர்களை இழந்துவிட்டான். மரணித்த வீரர்களை எண்ணி அவன், 'இந்த மாதிரி இன்னுமொரு வெற்றிபெற்றால் நாம் தொலைந்தோம்" என்றான். ஒரு பைறிக் விக்ரறியிலும் பார்க்கப் பின்வாங்குவது உத்தமம்.

ஒரு படைத் தலைவனின் முக்கிய கடமை எதிரிக்கு அதியுச்ச உயிர் இழப்பை ஏற்படுத்துவதோடு தனது படையணியின் உயிரிழப்பை மட்டுப்படுத்தி அதன் கட்டுக்கோப்பை குலையாமல் வைத்திருப்பதாகும்.

எண்ணிக்கையில் குறைந்த இனங்கள் நடத்தும் விடுதலைப் போரில் உயிரிழப்பை இயன்றளவு குறைக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இங்கு மனித அலைப் போர்முறை (Human Wave Warfare) சரிவராது. குறைந்த எண்ணிக்கையிலான வீரர்களை வைத்துக்கொண்டு போரியல் தந்திரோபாயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய தேவை எமக்கு இருக்கிறது.

தரை அமைவின் முக்கியத்துவத்தை இவ்விடத்தில் குறைத்து மதிப்பிட முடியாது. எதிரியின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தின் தரை அமைவு தனது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தின் தரை அமைவு ஆகிய இரண்டும் சம அளவு முக்கியத்துவம் வாய்ந்தவை.

தரை அமைவு என்றால் மேடு, பள்ளம், வெட்டைவெளி, அடர்ந்த காடு, பாலை நிலம் என்பன உள்ளடங்கும். தீர்மானிக்கும் வலு தரை அமைவுக்கு உண்டு.

(Terrain is Decisive) என்பது படைத் துறைக் கோட்பாடு. தரை அமைவு பொருத்தமில்லாது விட்டால் பின்வாங்கு அல்லது விலகிவிடு என்பது பொதுவிதி. இதை அசட்டை செய்தால் பெரும் விலைகொடுக்க நேரிடும்.

பின்வாங்கிச் செல்லும் போது எதிரியால் மறக்க முடியாத மின்னல் அடியைக்கொடுத்துச் செல்வதைப் பார்த்தியன் சொட் (Parthian Shot) என்று சொல்வார்கள்.

கஸ்பியன் கடலுக்குத் தென் கிழக்கில் இருந்த பார்த்தியா (Parthia) என்ற பழைய நாட்டின் வில் அம்பு ஏந்திய குதிரைப் படைவீரர்கள் ஒரு விசேட தந்திரோபாயத்தைக் கடைப்பிடித்தார்கள். இதைத் தான் பார்த்தியன் சொட் என்கிறார்கள்.

களத்தை விட்டுவெளியேறும் போது குதிரை முதுகில் இருந்த படியே உடலைத் திருப்பி இரு கைகளாலும் அம்பை வில்லில் பொருத்தி எதிரி மீது எய்வார்கள். குதிரை வீரனின் முழங்காலால் செலுத்தப்பட்டு குதிரை ஓடிக்கொண்டிருக்கும். களத்தைவிட்டு வெளியேறுவது போல் பாசாங்குசெய்தபடி எதிரி மீது அம்புகளைப் பொழிவார்கள்.

உண்மையிலேயே களத்தில் இருந்து பின்வாங்கும் போதும் அப்படிச் செய்வார்கள். இரண்டும் பார்த்தியன் சொட் என்று அழைக்கப்படுகின்றன. இந்தச் சொற்றொடர் இன்றும் பாவனையில் இருக்கிறது.

நவீன ஐரோப்பிய வரலாற்றில் பின்வாங்கல் தந்திரோபாயத்தை மிகத் திறமையாகக் கையாண்டவர் என்று ரஷ்யத் தளபதி மிக்கெயில் குட்டு சோவ் (Mikhail Kutuzov 1745 - 1813) குறிப்பிடப்படுகிறார்.

ஐரோப்பாக் கண்டம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் தனது திட்டத்திற்கும் பரந்த நிலப்பரப்பைக் கொண்ட ரஷ்யா பெரும் தடங்கலாக இருக்கும் என்று நெப்போலியன் பொனாப்பாட் தீர்மானித்தார். ரஷ்யாவைக் கைப்பற்றுவதற்காக 600,000 வீரர்கள் அடங்கிய பெரும் படையை 1812 இல் அவர் வழிநடத்திச் சென்றார்.

ரஷ்யத் தளபதி குட்டுசோவ் அப்போது 67 வயதினராக இருந்தார். 29 வயதில் துருக்கியப் படைகளோடு மோதியபோது ஒரு கண்ணை இழந்துவிட்டார். அவரை ரஷ்யப் படைத்தளபதி நிலைக்கு உயர்த்திய ஜெனரல் அலெக்சாந்தர் சுவரோவ் (Alexander Suvor0v) குட்டுசோவை தந்திரத்தில் நரி என்று வர்ணித்தார்.

1812 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ரஷ்யா மீதான தாக்குதலை நெப்போலியன் தொடங்கினார். தான் கைப்பற்றிய பல நாடுகளில் இருந்து திரட்டப்பட்ட அந்தப் பெரும்படையை முகாமைத்துவம் செய்வது பெரும்பாடாக இருந்தது.

உணவு வழங்கல், மருத்துவ வசதி என்பன சிறிது காலத்தின் பின் தட்டுப்பாடு நிலையை அடையத் தொடங்கின. பெரும் எண்ணிக்கையில் குதிரைகள் கொண்டுவரப்பட்டதால் குதிரைகளுக்கான உணவும் பெருமளவில் குறைந்துவிட்டது.

குட்டுசோவ் ஒரு வித்தியாசமான போர்முறையைத் தொடக்கினார். தாக்குவதும் பின்வாங்குவதுமாக அவர் நெப்போலியன் படைகளை வெகுதூரம் நாட்டிற்குள் கொண்டுவந்து விட்டார். ஒரு இறுதி வெற்றியைப் பெற நெப்போலியன் ஆவலாக இருந்தார். அது கிடைக்கவில்லை. குட்டுசோவின் கீழ் நிலைத் தளபதிகளுக்குத் தங்கள் தலைவனின் நடைமுறை பெரும் புதிராக இருந்தது.

ஆனால் மிகக் குறைந்த அழிவுகளோடு ரஷ்யப் படைகள் பின்வாங்கிச் கொண்டிருந்தன. தந்திரோபாயமாகத் தப்பிச் செல்லும் எதிரிப் படையைத் துரத்திச் செல்லும் நிலையில் பிரெஞ்சுப் படைகள் இருந்தன. இது வெறும் கால விரயத்தை ஏற்படுத்தியது..

நெப்போலியனின் இந்தப் படையெடுப்புப் பற்றிய ஆய்வுகளும் வரலாற்று ஆவணங்களும் குட்டுசோவ் நடைமுறைபடுத்திய போர் முறையை வானளாவப் புகழ்கின்றன.

வேறு விதமான போர்முறை படுதோல்வியில் முடிந்திருக்கலாம் என்றும் அவை கூறுகின்றன. குட்டுசோவின் கட்டளைக்கு அமைவாக பின்வாங்கு முன் இயற்கை வளங்களையும், குடியிருப்புக்களையும் ரஷ்யர்கள் தீயிட்டு அழித்தார்கள். இதனால் நெப்போலியனின் படைகளுக்குக் கிடைத்ததை உண்ணவும் சூறையாடவும் வசதி ஏற்படவில்லை.

ரஷ்யப் படைகள் பின்வாங்கியபோது ரஷ்ய மக்களும் கிராமம் கிராமமாக படைகளுக்குப் பின்னால் இடம்பெயர்ந்தனர். பெரும் மனித அவலம் ஏற்பட்டது. ஆனால் அந்தக் காலத்தில் அதுபற்றிக் கவலைப்பட அரசோ அமைப்போ தயாராக இல்லை.

பொறொடினோ (Borodino) என்ற தூங்கு மூஞ்சிக் கிராமத்தில் நெப்போலியனின் படைகளோடு நேருக்கு நேராக மோதுவதற்கு குட்டுசோவ் செப்டம்பர் 1812 இல் தயாரானார்.

1805 ஆம் ஆண்டில் அவுஸ்திரிய ரஷ்யக் கூட்டுப்படைகளை நெப்போலியன் ஒஸ்ரலிற்ஸ் (Austerlitz) களத்தில் புறமுதுகு காட்டச் செய்தார். ஒஸ்ரலிற்ஸ் இப்போதைய செக் குடியரசில் இருக்கிறது. ஒஸ்ரலிற்ஸ் போரில் ரஷ்யப்படைகளின் தளபதியாகக் குட்டுசோவ் இருந்தார்.

'மீண்டும் ஒஸ்ரலிற்ஸ் சூரியன் உதயமாகிவிட்டது" என்று நெப்போலியன் பொறொடினோப் போர் தொடங்குமுன் சொன்னார். 'என்னுடைய போர்களில் எல்லாவற்றிலும் மிகக் கொடியது" என்று பொறொடினோப் போர் முடிந்தபின் நெப்போலியன் சொல்லுமளவுக்கு நிலைமை மாறிவிட்டது.

இருபகுதிக்கும் பேரிழப்பு ஏற்பட்டது. ஆனால் ரஷ்யப் படைகள் முற்றாக அழியாமல் தலைநகர் மொஸ்கோவுக்குத் தப்பிச்சென்றன. துரத்திச்சென்ற நெப்போலியனின் படைகள் மொஸ்கோவைக் கைப்பற்றின.

கிறெம்லின் (Kremlin) எனப்படும் அரச பீடக் கட்டடத் தொகுதிக்குள் நெப்போலியன் நுழைந்தார். இறுதிச் சண்டை மொஸ்கோவில் நடக்கும் என்று இருபகுதியினரும் நினைத்தார்கள். ஆனால் குட்டுசோவ் என்ற நரி பின்வாங்குதல் தொடரும் என்று கட்டளை பிறப்பித்தார். அத்தோடு தலைநகர் மொஸ்கோவைத் தீயிட்டுப் பொசுக்கும்படி கட்டளையிட்டார். இந்த எதிர்பாராத விளைவு பிரெஞ்சுப் படைகளுக்குப் பேரிடியாக வீழ்ந்தது. நெப்போலியன் தங்கியிருந்த விடுதியில் தீ பற்றிக்கொண்டது. அவர் உயிர்தப்பியது அதிர்ஷ்டமாகக் கருதப்பட்டது. அந்த நேரம் பார்த்துக் கடும்காற்று வீசியது.

கொழுந்துவிட்டு எரியும் மொஸ்கோவில் தங்குவது பிரெஞ்சுப் படைகளுக்கு மிகவும் கடினமாக இருந்தது. துருப்புக்கள் களைத்து விட்டன, குதிரைகள் வலுவிழந்துவிட்டன, ரஷ்ய எல்லையைக் கடந்து 120 மைல் வந்தாயிற்று, தொடர்புப் பாதைகள் சிதைந்துவிட்டன, வெடிபொருட்களும் தீர்ந்துவிட்டன.

ரஷ்யப் பனி கொட்டும் அச்சம் தோன்றியது. பீற்றர்ஸ்பேர்க்கில் தங்கியிருந்த சார் அலெக்சாந்தருடன் ஒரு அமைதி உடன்படிக்கையைச் செய்ய நெப்போலியன் ஆவலாக இருந்தார். அது நிறைவேறவில்லை. நிலைமை படுமோசமாக மாறியது.

ஒக்ரோபர் 19 ஆம் நாள் பிரெஞ்சுப் படைகள் வெளியேறத் தொடங்கின. பின்வாங்கும் பிரெஞ்சுப் படைகளைத் துரத்தும் நடவடிக்கையை ரஷ்யப் படைகள் தொடங்கின.

பயங்கரமான ரஷ்யக் குளிர் பரவியபோது உணவுத் தட்டுப்பாடும் ஏற்பட்டது. தமது குதிரைகளை பிரெஞ்சுப் படைகள் உணவாக்கினர். அதன் பின் இறந்த படையினரின் தசையை வெட்டி நெருப்பில் வாட்டி உண்டனர். இதைப் பிரெஞ்சுப் படையெடுப்பு பற்றிய நூல்கள் உறுதிப்படுத்துகின்றன.

நெப்போலியனின் படுதோல்வி உறுதியாகி விட்டது. இனித் தங்கினால் ஆபத்து என்று உணர்ந்த அவர் பனிச்சறுக்கு வாகனத்தில் ஏறிக்கொண்டு (Ice Sled) தலைநகர் பாரிஸ் வந்து சேர்ந்தார்.

பின்வாங்குதல் வரலாற்றில் மிகப் பெரிய கண்ணீர்க் கதையாக இந்தப் படையெடுப்பு முடிந்தது. 600,000 பேர் கொண்ட பெரும் படையில் 100,000 இற்கும் குறைவானோர் உயிர் தப்பிக் கரைசேர்ந்தனர்.

2000 ஆம் ஆண்டுக்குப் பின்பு பின்லாந்தில் நகர விரிவாக்கத்திற்காக ஒரு பாரிய குழி தோண்டப்பட்டபோது 1812 ஆம் ஆண்டு ரஷ்யப் படையெடுப்பில் பங்கு பற்றிய பிரெஞ்சுப் படையினரின் எச்சங்கள் மீட்கப்பட்டன. பின்லாந்து ரஷ்யாவின் அயல் நாடு.

வரலாறு மீண்டும் வரும் என்கிறார்கள். புதிய வடிவத்தில் அது வருவதால் அடையாளம் காண்பது கடினம். வந்து சென்ற பின்பு அடையாளம் காண்பது சுலபம்.

நெப்போலியன் விட்ட பெருந்தவறை 130 வருடங்களுக்கு பின்பு ஜேர்மன் சர்வாதிகாரி ஆடொல்ப் கிட்லரும் விட்டார். ரஷ்யத் தாக்குதலுக்கு கிட்லர் நான்கு மில்லியன் துருப்புக்களைப் பயன்படுத்தினார்;.

மனித வரலாற்றில் இந்தப் பெரிய எண்ணிக்கையில் ஒரு பெரும் படையாவது தாக்குதலில் ஈடுபடுத்தப்படவில்லை. 3,350 போர் தாங்கிகள், 7000 ஆட்லறிகள், 2000 போர் விமானங்கள் இணைக்கப்பட்டன. இழுவைப் பணிக்காக 600,000 குதிரைகளும் கொண்டு செல்லப்பட்டன.

ஜுன் 1941 இல் ஆரம்பிக்கப்பட்ட ஒப்பரேசன் பார்பரோசா Barbarossa) என்று பெயரிடப்பட்ட இந்தப் படையெடுப்பு சனவரி 1943 இல் தோல்வியுடன் முடிவுற்றது. குட்டுசோவைப் பின்பற்றிய மார்சல் சுக்கோவ் (Zhukov) பின்வாங்கும் தந்திரோபாயத்தை நடைமுறைப்படுத்தி ரஷ்ய வெற்றியை உறுதிப்படுத்தினார்.

நன்றி: -அன்பரசு-வெள்ளிநாதம் (15.08.08)

Friday, August 15, 2008

அகலக்கால் பதிக்கும் மகிந்தவின் படைகள் செலுத்தப்போகும் விலை என்ன?

'ஒவ்வொரு குடிமகனும் ஒரு தீரமிக்க போராளியாக வேண்டும். ஒவ்வொரு கிராமமும் அல்லது தெரு வட்டாரமும் ஓர் அரணாக மாற வேண்டும். ஒவ்வொரு கூட்டுறவுப் பண்ணையும் தொழில் நிறுவனமும் மக்கள் போரின் வழங்கல் விநியோக அடித்தளமாக வேண்டும். இவ்வாறு நாம் எமது தேசம் முழுவதையும் ஒரு பெரும் போர்க்களமாக மாற்றி எந்த ஆக்கிரமிப்பாளனையும் துடைத்தெறிய முடியும்" - வியட்நாமின் தந்தை ஹோ சி மின்

சிறிலங்கா அரசும் அதன் படைத்தளபதிகளும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரிலே முன்னேற்றங்களைக் கண்டு வருவதாக பாரியளவிற்கு பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றபோதிலும் சிறிலங்காப் படையினர் தமிழர் தாயகப் பிரதேசத்திலே அகலக்கால் பதித்ததற்கான விலைகளை செலுத்தத் தொடங்கிவிட்டார்கள் என்பதே படைத்துறை ஆய்வாளர்கள் பலரதும் தற்போதைய கணிப்பாக இருக்கின்றது.

அண்மைக்காலங்களாக சிறிலங்காப் படையினர் மன்னார், வவுனியா மற்றும் மணலாறு பகுதிகளிலும் யாழ். குடாநாட்டின் முன்னரங்கப் பகுதியிலும் மேற்கொண்ட அனைத்து முன்னேற்ற முயற்சிகளையும் விடுதலைப் புலிகள் வெற்றிகரமாக முறியடித்ததோடு படையினரின் சடலங்களையும், ஆயுத தளவாடங்களையும் கைப்பற்றியுள்ளமையானது, சிறிலங்காப் படையினருக்கு இனிவரும் காலங்களில் சமர்க்களமானது இலகுவாக இருக்கப் போவதில்லை என்பதையே சுட்டிக்காட்டுகின்றன.

கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில மற்றும் சிங்கள வார இதழ்களின் பத்தி எழுத்தாளர்களும் விடுதலைப் புலிகள் தம்மிடம் இருக்கின்ற நன்கு பயிற்சிபெற்ற களப் பட்டறிவுகள் கொண்ட படையணிகளை தற்போது களமுனைகளிலே இறக்கியுள்ளதால் இனிவரும் காலங்களில் சிறிலங்காப் படையினர் பலத்த எதிர்ப்புக்களையும், இழப்புக்களையும் எதிர்கொள்ளப்போகின்றார்கள் என்று தமது படைத்துறை ஆய்வுக்கட்டுரைகளிலே தெரிவித்துள்ளார்கள்.

கடந்த வாரம் அநுராதபுரத்திலே பொதுமக்கள் கூட்டத்தில் உரையாற்றிய சிறிலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்ச படையில் இருந்து ஓடியவர்கள், விடுப்பில் சென்றோர் மற்றும் மருத்துவ சிகிச்சைக்காகச் சென்றோர் போன்றவர்கள் உடனடியாகக் களமுனையில் நிற்கின்ற படையினரின் கைகளைப் பலப்படுத்துவதற்காக மீள இணைந்துகொள்ளவேண்டும் என்று வெளிப்படையாகவே கேட்டிருக்கின்றார்.

கிட்டத்தட்ட 60,000 வரையிலான சிறிலங்காப் படையினர் படைகளைவிட்டு ஓடியிருப்பதாக தென்னிலங்கையில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த சிறிலங்காவின் படைத் துறைப் பேச்சாளர் உதய நாணயக்கார, 'கடந்த இரண்டு ஆண்டுகளில் படையை விட்டு ஓடியவர்களில் குறைந்தது 12,000 பேர்களையாவது மீள இணைப்பதற்காகவே இந்த இறுதிச் சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது" என்று தெரிவித்தார்.
அநுராதபுரம், பொலனறுவை, கண்டி மற்றும் குருநாகல் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே படைகளைவிட்டு அதிகம் ஓடுவதாகத் தெரிவித்த நாணயக்கார இவ்வாறு மீளப் படைகளில் இணைவதற்கு மறுப்போர் இராணுவ நீதிமன்றில் நிறுத்தப்படுவார்கள் என்று எச்சரித்தார்.

இவை எல்லாமே, சிறிலங்கா அரச தரப்பினரும் சிங்களப் படைத்தளபதிகளும் விடுதலைப் புலிகள் தந்திரோபாய ரீதியாக மேற்கொண்ட பின்னகர்வுகளைத் தாம் போரில் வெற்றிபெறுகின்றோம் என்று தவறாகப் புரிந்து கொண்டதாலேயே ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

கடந்த காலங்களிலும் விடுதலைப் புலிகள் தமது தந்திரோபாய, மூலோபாயச் செயற்பாடுகளுக்கு அமைவாக யாழ். குடாநாட்டில் இருந்து வெளியேறிய போதும் ஜெயசிக்குறு நடவடிக்கையின்போதும் சிங்களப் பேரின மேலாண்மைவாதிகளும் சிங்கள புத்திஜீவிகளும் விடுதலைப் புலிகள் போரிலே தோல்வியடைந்துகொண்டிருக்கின��
�றார்கள் என்றும் அவர்கள் முற்றுமுழுதாக அழியப்போகும் காலம் விரைவில் வந்துவிடும் என்றும் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

ஆனால் விடுதலைப் புலிகளோ ஒவ்வொரு தடவையும் அனைவரினதும் கணிப்புகளுக்கு மாறாகப் புதிய பலத்துடனும் வீச்சுடனும் நெருக்கடிகளில் இருந்து மீண்டு பாரிய பாய்ச்சல்களை படைத்துறை ரீதியாவும் போராட்ட ரீதியாகவும் ஏற்படுத்தினார்கள். ஆனால் சிங்கள தேசமோ அல்லது அதன் தலைவர்களோ இந்த வரலாற்றுப் பாடத்தினை மறந்துவிட்டார்கள் அல்லது கற்பதற்கு மறுக்கின்றார்கள்.

இதேபோன்ற ஒரு நெருக்கடி சீன விடுதலைப் போராட்டத்தினை மேற்கொண்ட மாவோ சேதுங்கின் படைகளுக்கு ஏற்பட்டபோது, அவர்கள் அதனை எவ்வாறு இந்தத் தடைக்கற்களை வெற்றிக்கான படிக்கற்களாக மாற்றினார்கள் என்பதை ~சீன வானில் சிவப்பு நட்சத்திரம்| என்ற புத்தகத்திலே எட்கர் ஸ்னோ பின்வருமாறு பதிவுசெய்து வைத்திருக்கின்றார்.

'1933 ஆம் ஆண்டு ஒக்டோபரிலே நான்கிங் அரசானது சியாங் கை சேக் அவர்களின் தலைமையில் சீனப் பொதுவுடமைவாதிகளுக்கு எதிரான தனது ஐந்தாவது போருக்காக அணிகளைத் திரட்டியது. இந்தப்போரிலே ஓராண்டு கடுமையான சமர்களைப் புரிந்த பின்னர் பொதுவுடமைவாதிகள் பின்வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

கிட்டத்தட்ட அனைத்துத் தரப்பினரும் அதுதான் முடிவு என்றும் பொதுவுடமைவாதிகளின் இந்த நீண்ட பயணம் சீனச் செஞ்சேனையின் இறுதி ஊர்வலம் என்றும் கூட நினைத்தனர். அவர்களது நினைப்பு எவ்வளவு தவறானது என்ற உண்மையை இரண்டே ஆண்டுகளில் செஞ்சேனை நிரூபித்தது.

இந்த இரண்டு ஆண்டிற்குள் செஞ்சேனையானது வரலாற்றில் தனக்கு ஈடு இணையற்றதாக ஒருவரும் இல்லை என்பதுபோல, பின்னடைவுகளில் இருந்து மீண்டெழுந்து தனது போரியல் வரலாற்றில் உச்சக்கட்டத்தை எட்டியது. பொதுவுடமை அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒழித்துக்கட்டிவிட்டதாகக் கூறிக்கொண்ட, தனது சுய தம்பட்டத்தை முழுமையாகவும் உண்மையாகவும் நம்பிய கொமிண்டாங்கின் தலைமைத் தளபதியின் உயிர் இறுதியில் பொதுவுடமைவாதிகளின் கையிலே ஊசலாடிக் கொண் டிருந்ததுதான் இதன் நகைமுரண் ஆகும்."

'போரின் ஆரம்பத்திலே பொதுவுடமைவாதிகள் முழுமையாக அழிக்கப்படுவார்கள் என்றே நான்கிங் ஆட்சியாளர்கள் நம்பினார்கள். எதிரி கூண்டில் அடைக்கப்பட்டிருக்கின்றான். அவனால் தப்பித்துப்போக முடியாது. நாளாந்தம் குண்டுவீச்சு, வானத்தில் இருந்து விமானத் தாக்குதல்கள், இயந்திரத் துப்பாக்கிகளின் மூலம் சூடு ஆகியவற்றின் மூலமும், செஞ்சேனை முற்றாக அழிக்கப்படும் என்று பரப்புரை செய்யப்பட்டது. அத்துடன் கொமிண் டாங் திரும்பக் கைப்பற்றிய மாவட்டங்களில் நடத்திய ~சுத்திகரிப்பு| நடவடிக்கைகளின் மூலமும் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப் பட்டனர். இந்த ஒரு முற்றுகையின்போது மட்டுமே சூ என்- லாயின் கூற்றுப்படி செஞ்சேனையிலேயே 60,000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல பிரதேசங்கள் முழுவதும் மக்களே இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டன."

இவ்வாறு ஐந்தாவது போரானது பொதுவுடமைவாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போது, இந்த நடவடிக்கையானது முற்றுப் பெறாமல் நீடித்து இழுபட்டுக்கொண்டே செல்லத்தொடங்கியது. அத்துடன் செஞ்சேனையின் உயிரோட்டமான படைகளை அழிக்க அது தவறியது. பொதுவுடமைவாதிகள் ஒரு மாநாட்டினைக்கூட்டி அதிலே பொதுவுடமைவாதிகள் கியாங்கியிலிருந்து பின்வாங்கி செஞ்சேனையின் முக்கியமான பலத்தை ஒரு புதிய தளத்திற்கு மாற்றுவது என்று முடிவெடுக்கப்பட்டது. இதன்படி 1934 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16 ஆம் நாள் இந்த நீண்ட பயணம் தொடங்கப்பட்டது.

செஞ்சேனையின் முக்கிய வலிமையாகத் திகழ்ந்த படைகள் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான பொதுவுடமை விவசாயிகளும் இந்தப் பயணத்திலே இணைந்து கொண்டார்கள். அவர்களிடையே முதியோர்கள், இளைஞர்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பொதுவுடமைவாதிகள், பொதுவுடமை தத்துவத்தை ஏற்காதோர் என அனைவரும் காணப்பட்டனர். அவர்கள் வெளியேறிய இடங்களிலே ஆயுதக் கிடங்குகள் முழுமையாகத் துடைத்தெறியப்பட்டன. தொழிற்சாலைக் கருவிகள், பொருட்கள் எனத் தனித்தனியாகக் கழற்றப்பட்டு இயந்திரங்கள் கோவேறு கழுதைகள் மீதும், கழுதைகள் மீதும் ஏற்றப்பட்டன. மதிப்புடைய, கையில் எடுத்துச் செல்லப்படக் கூடிய பொருட்கள் அனைத்துமே இந்த வியப்பளிக்கின்ற நடைபயணத்தில் எடுத்துச்செல்லப்பட்டன.

இந்தப் பயணத்தின்போது செஞ்சேனையானது தம்மை மீள ஒழுங்கமைப்பதிலும் படையினர் தமது பாதைகளில் குறுக்கிட்டாலோ அல்லது படையினர் மீது தாக்குதலை மேற்கொண்டு பாதைகளை ஏற்படுத்த வேண்டிய தேவையேற்பட்டலோ அதனை மிக விரைவாகவும் சுறுசுறுப்பாகவும் மேற்கொண்டனர்.

டாடு ஆற்றைக் கடக்கும்போது செஞ்சேனையானது தாமதங்களைச் செய்தாலோ அல்லது கவனயீனமாக இருந்தாலோ முழுப்படையும் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும். அவ்வாறு ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்திலேயே டாடு ஆறு அமைந்திருந்தது. இதே பள்ளத்தாக்குகளில்தான் இளவரசர் சிடா காய் தலைமையிலான ஒரு இலட்சம் போர் வீரர்கள் 19 ஆம் நூற்றாண்டிலே புகழ்பெற்ற ட்செங் குவோ பான் தலைமையின் கீழ் இருந்த மஞ்சு படையினரால் நாற்புறமும் சுற்றிவளைக்கப்பட்டு முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட்டனர். இந்த வரலாறு பற்றி செஞ்சேனை வீரர்கள் நன்கு அறிந்திருந்தார்கள்.

அதாவது, இளவரசர் சிடா காய் அவர்களின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தது விலை மதிப்பற்ற அவரது கால தாமதம்தான். டாடுவின் கரையை வந்தடைந்த இளவரசர், சி அரச வாரிசாக உதித்த தனது மகனின் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் மூன்று நாட்கள் படை நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளாது தாமதித்தார். அவர் தனது படைகளுக்கு வழங்கிய மூன்று நாட்கள் ஓய்வு என்பது அவருக்கு எதிராகத் தாக்குதலை ஒரு முனைப்படுத்த அவரது எதிரிகளுக்கு வாய்ப்புக்களை வழங்கியது. அதுவே அவரினதும் அவரது படைவீரர்களினதும் முழுமையான அழிவிற்கு இட்டுச்சென்றது.

எனவே சீனச் செஞ்சேனையினர் தமது நடவடிக்கைகளிலே எதுவித தளர்வுகளையோ தாமதங்களையோ ஏற்படுத்தாமல் விரைவாகவும் சுறுசுறுப்பாகவும் தமது மூலோபாய தந்திரோபாய ரீதியிலான திட்டங்களுக்கு அமைவாக, செயற்பட்டதன் காரணமாகத் தமது படைகளை மீளக் கட்டமைத்துக்கொண்டு மக்கள் படைக்கட்டுமானங்களின் உதவியுடன் பாரிய ஒரு படையணியாக எழுச்சிபெற்று முழு சீனத் தேசத்தையுமே கடுங்கோன்மை அரசிடம் இருந்து மீட்டெடுத்தார்கள்.

இந்த வரலாற்று உதாரணங்கள் சொல்லுகின்ற செய்திகள் இதுதான். எந்தப் பெரிய படைபலத்துடன் ஆக்கிரமிப்பாளர்கள் போரிலே ஈடுபட்டு மக்களின் மீது சொல்லொணாத் துன்பங்களையும் அழிவுகளையும் ஏற்படுத்தினாலும், அடக்குமுறைக்கு உட்பட்ட மக்கள் அனை வரும் ஒன்றுபட்ட சக்தியாக ஒரு தலைவனின் அணியிலே ஆக்கிரமிப்பாளர்களை எதிர்ப்பதற்கு தயாராகும்போது ஆக்கிரமிப்பாளர்கள் அனைவருமே இறுதியில் பாரிய அழிவு களையும் தோல்விகளையும் சந்திப்பார்கள். வியட்நாம், ஆப்கானிஸ்தான், சீனா, எரித்திரியா போன்ற நாடுகளில் இடம்பெற்ற விடுதலைப் போராட்டங்கள் இதனையே வரலாறாகப் பதிந்து வைத்திருக்கின்றன.


நன்றி: -எரிமலை-
வெள்ளிநாதம் (15.08.08)

அதிரும் அம்பாறையின் உண்மை நிலவரம் என்ன?

கிழக்கு மாகாணம் விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டதாக மகிந்த ராஜபக்ச அரசு மேற்கொண்டு வரும் பிரசாரத்தின் பின்னணியில் எத்தகைய உள்நோக்கங்கள் உள்ளன என்பது சிங்கள அரசு காலகாலமாக மேற்கொண்டு வந்த பிரசார தந்திரத்தை அறிந்த யாவருக்கும் நன்கு புரியும்.

விடுதலைப் புலிகளுடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பிரசார பொருளாக முன்வைத்து ரணில் விக்கிரமசிங்கவின் கடந்த அரசு, சர்வதேச சமூகத்திடம் நிதிஉதவிகளை கறந்து தென்னிலங்கையை அபிவிருத்தி செய்ய என்ன வகையான வியூகங்களை வகுத்ததோ அதனையே இன்று மகிந்த அரசு கிழக்கு விடுதலை என்ற மாற்று உபாயத்தினூடாக அணுகி வருகிறது.

மகிந்த படைகளால் விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், வடக்கிற்குத்தான் போர் அரங்கு என்ற இடம்பெயர்க்கப்பட்ட ஒரு போரியல் பார்வையின் பின்னணியில் மறைக்கப்பட்டிருக்கின்றன என்பதுதான் உண்மை.

கிழக்கில் புலிகளை முற்றாக அழித்தொழித்து விட்டு தற்போது வடக்கில் பெரும் படை நடவடிக்கையை மேற்கொண்டு அங்கு புலிகளை அடியோடு ஒழிப்பதாக மகிந்த அரசு குவியப்படுத்தியிருக்கும் ஒருவித மாயத்தோற்றம், சிறிலங்காவின் படைத்துறை தொடர்பாக ஆய்வு செய்பவர்களையும் வடக்கின்பால் ஈர்த்து வைத்திருக்கிறது.

ஆனால், கிழக்கில் புலிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் சிறிலங்கா படைகளுக்கு நாள்தோறும் எவ்வகையான இழப்புக்களை ஏற்படுத்தி வருகின்றன என்பதை விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல்துறை அண்மையில் விடுத்த அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

மகிந்தவின் கிழக்கு விடுதலை என்ற கோசத்திற்கு பிறகு அம்பாறையில் மாத்திரம் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர், இராணுவத்தினர், ஊர்காவல் படையினர், துணை இராணுவக்குழுவினர் என 165 பேர் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர். 208 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த அறிக்கை விடுக்கப்பட்ட நாள்வரை பார்க்கப்போனால், கிழக்கு முற்றுமுழுதாக தம்மால் கைப்பற்றப்பட்டு விட்டதாக சிறிலங்கா அரசு அறிவித்தநாள் முதல் - கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் - இற்றைவரை கடந்த ஒருவருட காலப்பகுதியில் சிறிலங்கா அரசு 165 பேரை இழந்திருக்கிறது.

அதாவது, மாதம் ஒன்றுக்கு சராசரியாக - அண்ணளவாக - 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 17 பேர் காயமடைந்துள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு ஒருவர் கொலை, ஒருவர் காயம் என்ற ரீதியில் தாக்குதலை சந்தித்துவரும் ஒரு படை, தான் கைப்பற்றியிருக்கும் நிலப்பகுதியை எதிரியிடமிருந்து மீட்டுவிட்டதாக கூறுவதில் எவ்வளவு தூரம் உண்மை உள்ளது என்பதை சிறிலங்கவில் உள்ள எந்த இராணுவ ஆய்வாளர்களும் தமது பத்திரிகைகளில் எழுதி இராணுவத்தின் தாக்குதலுக்கு முகம்கொடுக்க தயாராக இல்லை என்பதே யதார்த்தம்.

இதன் பின்னணியில், அம்பாறையில் முற்றுமுழுதான பொறுப்பை எடுத்துள்ள சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் எவ்வாறு புலிகளின் தாக்குதல்களை சந்தித்து வருகின்றனர் என்ற களநிலை நோக்குவது இங்கு அவசியமாகிறது.

அம்பாறையில் விடுதலைப் புலிகளின் முக்கிய இருப்பிடமாக கருதப்படுவது கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியாகும். இந்த விடயம் படையினருக்கும் நன்கு தெரியும். ஆனால், அங்குள்ள புலிகளை தேடியழிக்கும் நோக்குடன் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில்தான் பெரும்பாலான படையினர் கொல்லப்பட்டுள்ளார்கள்.

இவற்றைவிட, அங்குள்ள புலிகள் காட்டை சுற்றி அமைக்கப்பட்டுள்ள உன்னிப்பான பாதுகாப்பு அரண்களை ஊடறுத்து வந்து அம்பாறையின் முக்கிய பகுதிகளில் நிலைகொண்டுள்ள படையினர் மீதும் பல துணிகரத்தாக்குதல்களை மேற்கொண்டு படைத்தரப்புக்கு பாரிய இழப்புக்களை ஏற்படுத்தியுள்ளனர்.

கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியின் உள்ளிருந்து வெளியேயோ வெளியிலிருந்து உள்ளேயோ புலிகளின் ஊடுருவல் இடம்பெறக்கூடாது என்பதற்காக அந்த வனப்பகுதியை சுற்றி சமார் 20 க்கும் மேற்பட்ட பாரிய காவலரண்களை படையினர் அமைத்துள்ளனர்.

அந்த வனப்பகுதியை சுற்றி வடக்கிலிருந்து தெற்காக சாகாமம், காஞ்சிரங்குடா, கஞ்சிகுடிச்சாறு, கோட்டையாறு, சங்கம்சந்தி, தங்கவேலாயுதபுரம், உடும்பன்குளம், கோமாரி, ஊரணி, நொட்டை ஆகிய பகுதிகளிலிலும் -

வனப்பகுதியின் மறுபகுதியில் தெற்கிலிருந்து வடக்காக வக்குமுட்டியாவ, கோயில்கண்ட, பன்னரகம ஆகிய பகுதிகளிலும் -

வனப்பகுதியின் கிழக்கிலிருந்து மேற்காக நொட்டை, செங்காமம், லகுவனை, காணுவ, உலானுவ ஆகிய பகுதிகளிலும் -

வனத்தின் மறுபகுதியில் மேற்கிலிருந்து கிழக்காக மாந்தோட்டம், வம்மியடி, வேட்டேரி, முகமாலகட ஆகிய பகுதிகளிலும் - பாரிய படை முகாம்கள் அமைக்கபட்டுள்ளன.

இவற்றில், வக்குமுட்டடியாவ, கோயில்கண்ட, பன்னரகம, மாந்தோட்டம், ஊரணி, நொட்டை ஆகிய படை முகாம்களில் இராணுவத்தினரும் ஏனைய படை முகாம்களிலும் சிறப்பு அதிரடிப்படையினரும் நிலைகொண்டுள்ளனர்.

இவற்றைவிட கண்ணகிபுரம், திருக்கோவில், அக்கரைப்பற்று, கேரைதீவு உட்பட அம்பாறையின் ஏனைய பகுதிகளில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட முக்கிய முகாம்களிலும் ஏனைய சிறு முகாம்களிலும் நிலைகொண்டுள்ள அதிரடிப்படையினர் அந்தந்த பகுதிகளில் புலிகளை தேடியழிக்கும் நடவடிக்கைகளை தினமும் மேற்கொண்டு வருகின்றனர்.

இவற்றுக்கு எல்லாம் தலைமையகமாக அம்பாறை கொண்டயீட்டுவானில் அதிரடிப்படை தலைமைப்பீடம் அமைந்துள்ளது.

களத்தில் நடவடிக்கைகளை நெறிப்படுத்தும் பிரதான தளமாக அதிரடிப்படையினரின் கஞ்சிகுடிச்சாறு படைமுகாம் செயற்பட்டு வருகிறது.

இவற்றில் மாந்தோட்டம் இராணுவ முகாமில் உள்ள படையினரின் ஆட்லறித்தளத்திலிருந்தும் கோட்டையாறு உட்பட சில முக்கிய அதிரடிப்படை முகாம்களிலிருந்தும் கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியை நோக்கி அடிக்கடி ஆட்லறித்தாக்குதல் மற்றும் மோட்டார் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதுண்டு.

அம்பாறை பூராகவும் பரந்துள்ள ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட இந்த அரச படையினர் கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியில் உள்ள புலிகளை தேடியழிக்கும் நோக்குடன் இதுவரை சுமார் நூறுக்கும் மேற்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு விட்டனர். ஒவ்வொரு நடவடிக்கைக்கும் குறைந்தது 600 முதல் சுமார் 2,000 வரையான படையினர் பயன்படுத்தப்படுகின்றனர்.

காட்டுப்பகுதிகளுக்குள் ஊடுருவி அங்கு புலிகளின் நிலைகளை அழித்து அங்குள்ள புலிகளை ஒழிக்கும் நோக்குடன் கடந்த தடவைகளில் மேற்கொள்ளப்பட்ட படையினரின் பாரிய நடவடிக்கைகள் எவையும் இதுவரை எந்த வெற்றியையும் அவர்களுக்கு பெற்றுக்கொடுக்கவில்லை.

மாறாக, இவ்வாறு ஊடுருவும் படையினர் புலிகளின் பொறிவெடிகள், மிதிவெடிகள் ஆகியவற்றினால் பாரிய இழப்புக்களையே சந்தித்துள்ளனர்.

இக்காட்டுப்பகுதிக்குள் ஊடுருவும் மற்றும் ரோந்து வரும் படையினரின் வருகைக்கு ஏற்றவாறு புலிகள் மேற்கொள்ளும் கச்சிதமான பொறிவெடி தாக்குதல்கள் படையினருக்கு உயிழப்புக்களைவிட களமுனைக்கு மீளதிரும்ப முடியாத படுகாயங்களை ஏற்படுத்தி அவயவங்களை காவு கொண்டுள்ளன.

இவ்வாறு அம்பாறை காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்து புலிகள் மேற்கொள்ளும் தாக்குதல்களில் ஊடகங்களில் பேசப்பட்ட சம்பவங்களாக மகிந்தவின் பாதுகாப்பு அணியிலுள்ள உலங்குவானூர்தி மீதான தாக்குதலும் படையினரின் யால முகாம் தாக்குதலையும் குறிப்பிடலாம்.

ஆனால், இவற்றை விட பல்வேறு வகைகளில் அம்பாறையின் பல்வேறு இடங்களில் புலிகள் மேற்கொண்டுள்ள தாக்குதல்கள் படையினருக்கு புலிகளின் கெரில்லா போர்முறை தொடர்பான தேர்ச்சியை உணர்த்தியிருக்கிறது.

இவற்றில் முக்கியமான சம்பவங்களாக -

அம்பாறை மாவட்டத்தில் வீரச்சாவடைந்த முதலாவது பெண் மாவீரர் நிலாமதியின் முதலாம் மாத நினைவாக கடந்த ஜனவரி மாதம் நான்காம் திகதி பொத்துவில் - மொனராகல வீதியில் மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் சிறிலங்கா விசேட அதிரடிப்படையின் பொத்துவில் பிரதேச உதவி கட்டளைத் தளபதி சிசிரகுமார உட்பட மூவர் கொல்லப்பட்டமை -

அம்பாறையில் தமிழ்மக்கள் கடத்தப்பட்டு படுகொலை மற்றும் சித்திரவதை ஆகியவற்றுக்கு பிரதான சூத்திரதாரியாக காணப்பட்ட சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை உயரதிகாரி கராட்டி என்பவரது அணியை வழிமறித்து விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் அவர் உட்பட 12 பேர் கொல்லப்பட்டமை ஆகியவற்றையும் குறிப்பிடலாம்.

அம்பாறை பகுதிகளில் பல்வேறு இடங்களில் படையினருக்கு எதிராக துணிகரத் தாக்குதல்களை மேற்கொண்ட லெப். கேணல் பவமாறனின் துணிச்சல் அங்குள்ள படையினருக்கு உண்மையிலேயே கலக்கத்தை ஏற்படுத்தியது என்று கூறலாம்.

அவர் உட்பட லெப். கேணல் அயோனி, லெப். கேணல். மிதுலன் ஆகியோர் கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் 15 ஆம் திகதி தவறுதலாக வெடிவிபத்தில் வீரச்சாவை தழுவிக்கொண்டனர்.

இவர்களது ஒரு மாத நினைவு தின தாக்குதலாகவே யால முகாம் மீது புலிகளின் அணிகள் ஊடுருவி தாக்குதல் ஒன்றை அதே ஆண்டு ஒக்டோபர் 15 ஆம் திகதி மேற்கொண்டிருந்தனர்.

தவமாறன் தலைமையில் புலிகளின் இரண்டு மூன்று பேர் கொண்ட அணி அம்பாறையின் பல்வேறு பகுதிகளிலும் அதிரடிப்படையினருக்கு எதிராக மேற்கொண்ட தாக்குதல்கள் படையினருக்கு பெரும் இழப்புக்களை ஏற்படுத்தியிருந்தன.

வக்குமுட்டியாவ அதிரடிப்படை முகாமிலிருந்து வரும் ரோந்து அணிகள் மற்றும் காட்டுக்குள் ஊடுருவும் அணிகள் ஆகியவற்றின் மீது பவமாறனின் தலைமையிலான அணி தொடுத்த தாக்குதல்கள் அதிகம் என்று கூறலாம்.

பவமாறன் உயிரிழப்பதற்கு முதல் நாளும் கஞ்சிகுடிச்சாறு பகுதியில் ரோந்து சென்ற படையினரை பின்தொடர்ந்து சென்ற பவமாறனின் ஐந்து பேர் கொண்ட அணி சரமாரியான தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிவந்தது.

அதேநாள் - காஞ்சிரங்குடா - கோட்டயாறு வீதியில் பவமாறன் மூன்று பேருடன் சென்று கண்ணிவெடித்தாக்குதல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரும் வக்குமுட்டியாவ படைமுகாமுக்கு அண்மையாக உள்ள வீதியில் 18 கிலோகிராம் எடையுள்ள கிளைமோர் ஒன்றை பொருத்திவிட்டு அருகிலிருந்த சிங்கள குடியேற்றத்திட்டத்திலிருந்��
� வாழைத்தோட்டத்திற்குள் பதுங்கியிருந்து படையினர் ரோந்துவந்த போது நடத்திய தாக்குதலில் எட்டுப் படையினர் அந்த இடத்திலேயே பலியானார்கள்.

இவ்வாறாக படையினர் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கும்போதெல்லாம் - 'இறந்த படையினரின் ஆத்மா சாந்தியடையும் முகமாக" - மாந்தோட்டம் மற்றும் இதர பகுதிகளிலிருந்து கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியை நோக்கி படையினர் ஆட்லறி மற்றும் மோட்டார் தாக்குதல்களை மேற்கொள்வது வழக்கம்.

இதேவேளை, படையினருக்கு எதிராக அரச கட்டுப்பாட்டு பகுதியில் தாக்குதல் நடத்த சென்ற விடுதலைப் புலிகளின் போராளிகள் சிலர் காட்டிக்கொடுக்கப்பட்டு உயிரிழந்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

அம்பாறை அட்டாளைச்சேனை பகுதியில் உள்ள முல்லைத்தீவு என்ற இடத்தில் பணிநிர்த்தம் சென்றுகொண்டிருந்த மேஜர் புரட்சிமாறன், லெப். தனோஜன் ஆகியோரை பிற சமூக கடை உரிமையாளர் ஒருவர் தகவல் கொடுத்ததால் அதிரடிப்படையினர் சுற்றிவளைக்க அவர்கள் இருவரும் நஞ்சுண்டு வீரச்சாவடைந்தனர்.

அண்மையில் அம்பாறையில் படுகொலை செய்யப்பட்ட நிமால் லுகோ என்ற படைப்பொறுப்பதிகாரியை படுகொலை செய்யும் நோக்குடன் அரச கட்டுப்பாட்டுபகுதிக்கு கிளைமோருடன் சென்ற மூன்று போராளிகள் காட்டிக்கொடுக்கப்பட்டதால் வீரச்சாவடைந்தார்கள்.

இவ்வாறு, அம்பாறை களம் என்பது செய்தி வெளிவராத மர்மமான மயானமாக அதிரடிப்படையினருக்கு இருந்து வருகிறது என்பதுதான் உண்மை.

வடக்கில் போர் நடத்தும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா - 'தமது நடவடிக்கையின் நோக்கம் இடங்களை பிடிப்பதல்ல. புலிகளை அழிப்பதே" - என்று கூறியுள்ளார்.

ஆனால், அம்மாதிரியாக நடவடிக்கையை விடுதலைப் புலிகளே கிழக்கில் மேற்கொண்டு வருகிறார்கள் என்பதுதான் யதார்த்தம்.

அண்மையில், அம்பாறையில் மேற்கொள்ளப்பட்ட நிமால் லுகே என்ற படைப்பொறுப்பதிகாரி என்பவரின் மீதான புலிகளின் மின்னல் வேக அதிரடி தாக்குதலையும் அரச தரப்பு மூடிமறைத்துள்ளது.

ஆனால், நிமால் லுகே என்ற பெயரின் கீழ் அம்பாறை வைத்தியசாலையில் உடலம் கையேற்கப்பட்டிருக்கின்றமை மற்றும் உடலத்தை சம்பவ இடத்திலிருந்து எடுத்துச் செல்வதற்கு முக்கிய படை அதிகாரிகள் வந்தமை மற்றும் உயிரிழந்தவர் இரண்டு சிவப்பு நட்சத்திர சின்னம் அணிந்திருந்தமை ஆகியவற்றின் மூலம் உயிரிழந்தவர் முக்கிய அதிகாரியே என்ற விடயம் உறுதியாகியிருக்கிறது.

இவ்வாறு, கிழக்கில் இன்னமும் சந்தித்துவரும் இழப்புக்களை மறைக்கும் நோக்குடன் தமது வடபகுதி இராணுவ நடவடிக்கை தொடர்பான செய்திகளை மிகைப்படுத்தும் இராணுவம், தென்னிலங்கை மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் கிழக்கில் அரச கொடி பறப்பதாக பொய்யான பரப்புரையை மேற்கொண்டு வருகிறது.

1992 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிறிலங்கா அரசு தலைவராக டி.பி.விஜயதுங்க பதவி வகித்த காலப்பகுதியிலும் கிழக்கு விடுதலைப் புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு அங்கு தேர்தல் நடத்தி பெரிய பெரிய அரசியல் நாடகங்கள் எல்லாம் அரங்கேற்றப்பட்டன. சர்வதேச சமூகத்துக்கு பல சங்கதிகள் கூறப்பட்டன. ஆனால், அதன் பின்னர் என்ன நடந்தது என்பது சகலருக்கும் தெரியும்.

சிறிலங்காவை பொறுத்தவரை தமிழ் மக்கள் விடயத்தில் நடைபெறும் அரசியல், இராணுவ சம்பவங்கள் எல்லாமே தென்னிலங்கை மக்களுக்கு தாம் இந்த நாட்டின் மகாபிரபுக்கள் என்பதாக காட்டிக்கொள்வதற்காக அவ்வப்போது ஆட்சிபீடம் ஏறுபவர்களால் நடத்தப்படும் போலி நாடகங்கள். அதன் ஒரு காட்சிதான் இன்று மகிந்த தரித்திருக்கும் கிழக்கு விடுதலை என்ற பாத்திரம். அதன் தொடர்ச்சியாக வடக்கில் ஒரு மாயத்தோற்றம்.

இவற்றின் முடிவுகளை அன்று முதல் இன்று வரை தமிழ்மக்களின் உரிமைகளுக்காக போராடிவரும் விடுதலைப்புலிகளே தீர்மானிக்கிறார்கள். இந்த களநிலைமையே என்றைக்கும் தொடரும்.

நன்றி:-

-ப.தெய்வீகன்-

Thursday, August 14, 2008

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் ஆரூடம் கூறும் நாராயணர்கள்

"அறப் படித்த பல்லி கூழ்ப் பானைக்குள் வீழ்ந்ததாம்!' என் றொரு பேச்சுமொழி நம் மத்தியில் உண்டு. கூரை விட்டத்திலிருந்தபடி பலருக்கும் எதிர்காலம் குறித்துச் சாத்திரம் சொல்லிக்கொண்டிருக்கும் பல்லி, தனது எதிர்காலம் குறித்து சிந்திக்காமல் இருந்துவிட்டு, விட்டத்திலிருந்து தவறு தலாகக் கூழ்ப் பானைக்குள் விழுந்து இறந்துபோனதாம் என்ற பேச்சு வழக்குக் கதைபோல இவ்வாறு கிண்டலாகக் கூறப்படுகின்றது.

இதுபோலவே இலங்கை விவகாரத்தில் இலங்கை அரசுக்குப் புரியாத விடயம் என்று குறிப்பிட்டு ஓர் ஆலோச னையை போதனையை வெளிப்படுத்தும் இந்தியத் தேசி யப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், தாம் கூறும் அதே கருத்துத் தமக்கும் புரியாதமை போல நடந்து கொள் வதுதான் விநோதமாக இருக்கின்றது.

மற்றவர்களுக்கு ஆரூடம் கூறும் பல்லி, தனக்கு ஆரூ டம் பார்க்க முடியாமல் இயலாமல் கூழ்ப்பானைக்குள் விழுந்து இறந்தமைபோல இருக்கின்றது ஈழத் தமிழர் பிரச் சினை தொடர்பாக இலங்கை அரசுக்கு ஆலோசனை கூறும் இந்தியா, அந்த ஆலோசனையின் தாற்பரியத்தைத் தானே புரிந்து கொள்ளாமல் செயற்படுவது.

இலங்கை இனப்பிரச்சினையோடு நீண்டகாலம் சம்பந்தப்பட்டவர் எம்.கே.நாராயணன்.
விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் ஒன்றுக்கு முழுத் தயாரான அரசியல் சூழ்நிலையை ஈழத் தமிழினம் எட்டு வதற்கு முன்னரே, தமிழ் இளைஞர்களை இந்தியாவுக்குத் வருவித்து, மறைமுகமாக அவர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்து, அவர்களைக் கொண்டு ஒருபுறம் கொழும்பு அர சுக்கு எதிராக வன்முறைச் செயற்பாடுகளுக்குத் தூண்டி விட்டுக் கொழும்பைக் குழப்பிக் கொண்டு, மறுபுறம் தமிழ் இளைஞர்களைப் பல்வேறு இயக்கங்களாகத் துண்டுபட வைத்து, அவற்றுக்குள் முரண்பாடுகளை ஏற்படுத்தி, அவற்றில் ஒன்று கூட விஞ்சிய போராட்ட கட்டமைப்பாக மேலெழும்ப விடாமல் குழப்புகின்ற செயற்பாட்டுத் திட் டத்தையே 1980 களின் நடுப்பகுதியில் புதுடில்லி கைக்கொண்டது. அச்சமயம் இந்தத் திருகுதாளப் பணிக்குப் பொறுப்பான உளவு அமைப்பின் தலைவராகச் செயற் பட்டவர் இந்த நாராயணன்தான்.

இப்படி இலங்கை இனப்பிரச்சினை ஆயுதப் போராட்ட வடிவத்தை நோக்கித் திரும்பிய காலகட்டம் முதல் இவ்விடயத்துடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் சம்பந்தப்பட்ட அவர், இந்தப் போராட்டத்தின் போக்குக் குறித்தும், தாற் பரியம் குறித்தும் கருத்தும் ஆரூடமும் கூற முற்றிலும் பொருத்தமானவரே. ஆனால் தாம் கூறும் தாற்பரியத்தின் உண்மையின் யதார்த்தத்தைத் தாமே புரியாதவராக அவர் செயற்படுவதுதான் குளறுபடித்தனமாகும்.

""புலிகளுக்கு எதிரான மோதல்களில் இலங்கை அரச படைகள் வெற்றி பெறலாம். எனினும், ஈழத் தமிழர்கள் அர சுப் பக்கம் இல்லாததால் அரசினால் யுத்தத்தில் வெல்ல முடி யாது'' என்று கூறியிருக்கின்றார் இந்தியத் தேசியப் பாது காப்பு ஆலோசகர் நாராயணன்.
அவரின் அந்தப் பேட்டியின் வாசகங்கள் இரண்டு விட யங்களில் தீர்க்கமான முடிவான கருத்து நிலைப்பாட்டில் அவர் இருக்கின்றமையை வெளிப்படுத்துகின்றன.

ஒன்று இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக நியா யமான அரசியல் தீர்வு ஒன்றைத் தரும் எண்ணப்பாடோ, பற்று றுதியோ, திடசங்கற்பமோ சிங்கள அரசுத் தலைமைக்கு இல்லை என்பதில் தமிழர்கள் தெளிவாக இருக்கின்றார்கள். அதனால் அவர்கள் இலங்கை அரசுப் பக்கத்தில் இல்லை.

மற்றது ஈழத் தமிழர்கள் இலங்கை அரசுப் பக்கத்தில் இல்லாத காரணத்தினால் அரச துருப்புகள் மோதல்களில் வெற்றி பெற்றாலும் யுத்தத்தில் வெற்றி பெறமுடியாது.

இலங்கை நிலைவரத்தை மதிப்பாய்வு செய்து, இந்த இரண்டு கருத்து நிலைப்பாட்டையும் தெரிவிக்கும் தகுதி யும் தரமும் உடையவர் நாராயணன் என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.
ஆனால்
தமக்கு நீதியான அதிகாரப் பகிர்வு ஒன்றை இலங்கை அரசுத் தலைமை தரமாட்டாது என்ற கருத்து நிலையில் ஈழத் தமிழர்கள் உள்ளனர் என்ற யதார்த்தத்தை அப்பட்ட மாக வெளிப்படுத்திப் போட்டுடைக்கும் அவர், தமிழர் களுக்கு நீதியான அரசியல் தீர்வு ஒன்றை மஹிந் தரின் தற்போதைய அரசுத் தலைமை வழங்கும் அல்லது வழங்காது என்ற நம்பிக்கை தமது புதுடில்லி அரசுக்கு உள் ளதா அல்லது இல்லையா என்பதை மட்டும் பகிரங்கமாக வெளிப்படுத்தவேயில்லை என்பது கவனிக்கத்தக்கது.
ஈழத் தமிழர்களை ஆயுத ரீதியில் பலாத்காரம் மூலம் அடக்கி, ஒடுக்கி, அடிமைப்படுத்தும் பேரினவாத ஆக் கிர மிப்பும் மேலாதிக்கச் சிந்தனைத் திட்டமும் மட்டுமே தற் போதைய சிங்கள அரசுத் தலைமையிடம் உள்ளது என்றும்
நீதி, நியாயமான அரசியல் தீர்வு ஒன்றைத் தமிழர்களுக்கு வழங்கும் சிந்தனைப் போக்கே கொழும்பு அரசுக்குக் கிஞ் சித்தும் கிடையாது என்றும்
ஈழத் தமிழினத்தின் பிரதிநிதிகள், நாராயணன் உட்பட்ட இந்திய அரசுத் தலைமையிடம் தொடர்ந்து வற்புறுத்த லாகச் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

கொழும்பின் அத்தகைய ஆக்கிரமிப்பு, அராஜக அத்துமீறல் போக்குக் குறித்து ஈழத் தமிழர்கள் தொடர்ந்து முறைப்பாடு செய்யும்போது, அதை செவிமடுத்துக் கொண்டு, உருப்படி யான பதில் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் வாளாவிருந்து விட்டு, இப்போது ஈழத் தமிழினம் சுட்டிக்காட்டிய உண்மை களைத் தாமும் (நாராயணனும்) ஒருதரம் மந்திரம் போல திருப்பி உரக்கக் கூறுவதில் அர்த்தமில்லை.

ஈழத் தமிழினத்துக்கு நியாயம் செய்ய முடியாத விரும் பாத தலைமையே கொழும்பு அரசு என்பதை உணர்ந்த பின்னரும், அந்த விடயத்தில் கொழும்பைச் சரியான வழி யில் வழிப்படுத்தும் தார்மீக ரீதியான பொறுப்பிலும், கடமையிலும், அதிகாரத்திலும் இருக்கும் ஒருவர், இப்படி வெளியாளாக நின்று வெறும் "ஆரூடம்' கூறுவதும் அபத்தமே. அதையும் விட இவ்விடயத்தில் இலங்கையைச் சரியாகச் செயற்பட வைக்கும் வழிக்கு நெட்டித்தள்ள நடவடிக்கை எடுப்பதே இந்தியாவின் நியாயமான செயற்பாடாக இருக்க முடியும். புதுடில்லி நாராயணர்களுக்கு இது புரியுமா?

நன்றி உதயன்