Friday, August 29, 2008

வான்புலிகளின் தாக்குதல் எழுப்பும் கேள்விகள்!

சிறிலங்கா கடற்படையின் கிழக்குப் பிராந்திய கடற்படைத் தலைமையகம் மீது வான்புலிகள் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடத்தியுள்ள தாக்குதலானது களநிலைமை குறித்த மறு மதிப்பீடு ஒன்றிற்குச் செல்ல வேண்டியதானதொரு நிர்ப்பந்தத்தைச் சிறிலங்காப் படைத்தரப்பிற்கு மட்டுமல்ல வேறு உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளுக்கும் நிச்சயம் ஏற்படுத்தியிருக்கும் என்றே உறுதியாக நம்பலாம்.

கடற்படையின் கிழக்குத் தலைமையகம் மீது வான்புலிகள் நடத்திய தாக்குதலில் சிறிலங்கா கடற்படைக்கு ஏற்பட்டுள்ள உயிர் இழப்புக்கள் மற்றும் உடமை இழப்புக்கள் என்பனவற்றின் அளவு, தொகை என்பன இங்கு முக்கியமானதொரு விடயம் அல்ல.

சிறிலங்காப் படைத்தரப்பின் அதி முக்கியத்துவம் வாய்ந்த கேந்திர நிலையம் ஒன்றின் மீது இலக்குத் தவறாது வான்புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளமையும், விடுதலைப் புலிகளின் வான் கலங்கள் தாக்குதலை நடத்திவிட்டு வெற்றிகரமாகத் தளம் திரும்பியுள்ளமை என்பதுமே இங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

சிறிலங்கா அரசும், அதன் ஆயுதப் படைத்தரப்பும் அண்மைக்காலமாக மேற்கொண்டு வரும் பிரச்சாரத்தின் பிரகாரம் விடுதலைப் புலிகள் இயக்கமானது மிக விரைவில்- குறிப்பாக இவ்வாண்டின் இறுதிக்குள் தோற்கடிக்கப்பட்டுவிடும் என்பதே.

அதிலும் குறிப்பாக இராணுவம் கிளிநொச்சி நகரை நெருங்கிவிட்டது. இன்னமும் ஓர் கடுமையான மோதலின் பின்னர் கிளிநொச்சி நகர் கைப்பற்றப்படுவதோடு, விடுதலைப் புலிகளும் தோற்கடிக்கப்பட்டு விடுவார்கள் என்பது முக்கியமானதாகும்.

ஆனால், சிங்கள ஊடகங்களோ அதற்கும் சற்று மேலானதாக, மல்லாவி, துணுக்காய், நாச்சிக்குடா ஆகிய மூன்று இடங்களும் கைப்பற்றப்படுமானால் விடுதலைப் புலிகளை வெற்றிகொண்டதாகி விடும் எனக் கூறுகின்றன.

ஏனெனில், அங்குதான் - விடுதலைப் புலிகளின் மூன்று முக்கிய தளங்கள் இருப்பதாகவும், அங்கேயே தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் தங்கியிருப்பதாகவும் அவை பிரச்சாரம் செய்கின்றன. ஆகையினால், இத்தளங்கள் கைப்பற்றப்பட்டால் புலிகள் ஒழிக்கப்பட்டு விடுவார்கள் என அவை கூறுகின்றன.

இத்தகையதொரு நிலையில் வான்புலிகள் கடற்படையின் கிழக்குத் தலைமையகம் மீது தாக்குதலை நடத்தி விட்டுத் திரும்பி வந்தமை இரு பிரதான கேள்விகளை எழுப்புபவையாகவுள்ளன.

01. சிறிலங்காப் படைத்தரப்பு கூறிக்கொள்வது போன்று விடுதலைப் புலிகள் தாக்குதலை நடத்தும் சக்தியை இழந்துவிட்டார்களா?

02. சிறிலங்காவின் பாதுகாப்பு ஏற்பாடுகளினால் வான்புலிகளைத் தடுத்து நிறுத்திவிட முடியுமா? என்பவை இவையாகும்.

வான்புலிகள் தற்பொழுது நடத்திய தாக்குதலில் தமக்குப் பாரிய சேதங்கள் ஏற்படவில்லை என்றும், இதுபோன்ற தாக்குதல்கள் தமது இராணுவ நடவடிக்கைகளைப் பாதிக்கமாட்டாது எனச் சிறிலங்கா அரச தரப்பும், படைத் தலைமையும் விளக்கம் அளிக்கவும், பிரச்சாரம் செய்யவும் முற்படலாம்.

ஆனால், இத்தாக்குதல்களை அடுத்து எழுப்பப்படும் கேள்விகள் சிலவற்றைச் சிறிலங்காப் படைத்தரப்பு புறந்தள்ளி விடுதல் என்பது இலகுவான விடயம் அல்ல. இதில் முதலாவதாக தனது வான்படைகளை விடுதலைப் புலிகள் இன்னும் செயல்திறன் மிக்கதாக வைத்துக்கொண்டுள்ளனர் என்பதை அது ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

ஏனெனில், விடுதலைப் புலிகள் இன்னமும் தனது வான்படை மூலம் தாக்குதலை மேற்கொள்ளும் சக்தி கொண்டவர்களாகவுள்ளனர் என்பதை நிரூபணம் செய்துள்ளனர். இதன் காரணமாக விடுதலைப் புலிகளின் இராணுவ ரீதியிலான செயல்திறன் முடக்கப்பட்டுவிட்டது என்ற பிரச்சாரம் இனி ஏற்றுக் கொள்ளப் படத்தக்கதொன்றாக இருக்கப்போவதில்லை.

அத்தோடு, விடுதலைப் புலிகள் தமது வான் படையை வன்னிப் பிரதேசத்தில் வைத்துப் பராமரிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளனர் என்பது பராமரிப்புக் குறித்த விடயத்தைச் சுட்டிக்காட்டுவதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.

அதாவது, ஏனைய படையணிகள் போன்றில்லாது வான்படையை பராமரிப்பது என்பது கடினமானதொரு விடயமாகும். அதாவது, விமான ஓடுபாதையில் இருந்து விமானங்கள் வரை பாதுகாப்புடன் பராமரிக்க வேண்டியவையாகவுள்ளன.

இத்தகைய நிலையில் வான்புலிகள் சிறிலங்காவின் கேந்திர நிலை ஒன்றின் மீது தாக்குதலை நடத்திவிட்டு வெற்றிகரமாகத் தளம் திரும்பியுள்ளமையானது வான்புலிகள் முழு மூச்சில் செயற்படும் ஆற்றலைக் கொண்டுள்ளனர் என்பதை வெளிப்படுத்தும் ஒன்றாகவே கொள்ளத்தக்கதாகும்.

அதிலும் குறிப்பாக வான்புலிகள் சிறிலங்காக் கடற்படையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதி மீது தாக்குதல் நடத்தியமையானது வான்புலிகள் தமது இருப்பை வெளிப்படுத்துவதற்கான நடவடிக்கையாக மட்டும் கொள்ளத்தக்கதொன்றல்ல. சிறிலங்காவின் பாதுகாப்பிற்கு அவர்கள் விடுத்துள்ள சவாலாகவே கொள்ளத்தக்கதாகும்.

வான்புலிகள் 2007 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கட்டுநாயக்கா வான்படைத் தளத்தின் மீது தாக்குதலை நடத்தியபோது இத்தாக்குதலானது எதிர்பாராத வேளையில் வான்புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதல் எனச் சிறிலங்காப் படைத்தரப்பினாலும், அரச தரப்பினாலும் கூறப்பட்டது. அத்தோடு, சிறிலங்காப் படைத்தரப்பு வான் எதிர்ப்பு நடவடிக்கைக்குத் தயாராக இருக்கவில்லை என்றும் கூறப்பட்டது.

இதனை அடுத்து வான் பாதுகாப்பு செயற்பாடுகள் தீவிரமாக்கப்பட்டன. நவீன ராடர் கருவிகள் தென்னிலங்கை உட்பட கேந்திர நிலையங்களில் பொருத்தப்பட்டன. இவற்றில் சிலவற்றைச் சில நாடுகள் அன்பளிப்பாகவும் வழங்கின. அத்தோடு வான் பாதுகாப்பிற்கென நவீன பீரங்கிகளும், ஏவுகணைகள் பொருத்தப்பட்ட விமானங்களும், உலங்குவானூர்திகளும் கொள்வனவு செய்யப்பட்டதோடு, அவை எவ்வேளையிலும் தயார் நிலையிலும் வைக்கப்பட்டன. வெளிநாட்டுப் பயிற்சியாளர்களும் வரவழைக்கப்பட்டிருந்தனர். இவற்றிற்கும் மேலாக ராடர் தொகுதியுடன் இணைக்கப்பட்ட தானியங்கிப் பீரங்கிகளும் கொள்வனவு செய்யப்பட்டன.

ஆனால், இரண்டாவது முறையும் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு வான்புலிகளின் தாக்குதலுக்குள்ளானபோது இப்பாதுகாப்பு ஏற்பாடுகளினால் வான்புலிகளுக்கு இடையூறு ஏற்படவில்லை. இலக்கைத் தாக்கிவிட்டு வான்புலிகள் தளம் திரும்பியிருந்தனர்.

ஆனால் சிறிலங்காப் படைத்தரப்பில் பயன்படுத்தப்பட்டிருந்த ஆயுத தளவாடங்கள் மீது குறை கூறப்பட்டன. குறிப்பாக இந்தியா அன்பளிப்பாக வழங்கிய 'இந்திய ராடர்கள்" திறம்பட செயலாற்றவில்லை எனக் குறை கூறப்பட்டது. அதன் பின்னர் தாக்குதல் வேளையில் ராடர் இயங்கிக்கொண்டிருக்கவில்லை எனக் கூறப்பட்டது.

இதன் பின்னர் வான் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் தீவிரமாகின. நவீன விமானங்கள் விமானப்படையில் இணைக்கவும் பட்டன. இந்த வகையில் வான்படையும், வான் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்ட நிலையில், விடுதலைப் புலிகளின் வான்படையைச் செயலிழக்கச் செய்யும் வகையில் தொடர்ச்சியான வான் தாக்குதல்களை படைத்தரப்பு வான் புலிகளின் நிலைகள் மற்றும் வான்புலிகளின் விமான ஓடுபாதை என்பவற்றின் மீது சிறிலங்கா வான்படை விமானங்கள் மேற்கொண்டன.

சிறிலங்கா வான்படை விடுதலைப் புலிகளின் வான்படையின் ஓடுபாதை மீதான தாக்குதல் எனக் கூறி நடத்திய தாக்குதலை மதிப்பிட்டால் - அப்பகுதியானது பெரும் குன்றும், குழியும் நிறைந்த பகுதியாக இன்று இருத்தல் முடியும்.

இத்தகைய நிலையில் சிறிலங்கா அரச தரப்பும் சரி, வான்படைத் தரப்பும் சரி விடுதலைப் புலிகளின் வான்கலம் எதுவும் இனிமேல் வானில் பறக்க முடியாது எனவும் பறக்க முற்படும் அடுத்த கணமே அவை சுட்டுவீழ்த்தப்படும் எனச் சவால் விடுத்தும் இருந்தன - பல மாதங்கள் வான்புலிகள் தாக்குதல் நடத்தாது இருந்தமை சிறிலங்கா அரச தரப்பிற்கு வாய்ப்பாகவும் இருந்தது.

இத்தகையதொரு நிலையில்தான் வான்புலிகள் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருமலைத் துறைமுகப் பகுதியில் வெற்றிகரமான தாக்குதல் ஒன்றை நடத்திவிட்டுத் தளம் திரும்பியுள்ளனர்.

இத்தாக்குதல் குறித்து சிறிலங்கா அரசும், படைத்தலைமையும் எதனைக் கூறிக்கொண்டாலும், இத்தாக்குதலை அவர்கள் புறம் தள்ளிவிட முடியாது. இதனை ஏ.எப்.பி. செய்திச் சேவையின் மதிப்பீடு வெளிப்படுத்தியது.

'கடந்த 16 மாதகால இடைவெளியில் சிறிலங்காப் படையினர் மீது வான்புலிகள் நடத்திய முதன்மைத் தாக்குதல் திருமலைத் துறைமுகத்தின் மீது நடத்தப்பட்டுள்ளது" எனத் ஏ.எப்.பி. செய்திச் சேவை தனது மதிப்பீட்டினை வெளிப்படுத்தியிருந்தது.

அடிப்படையில், வான்புலிகளின் இத்தாக்குதலானது, சிறிலங்காவின் வான் பாதுகாப்புச் செயற்பாடுகள் குறித்து மறு பரிசீலனை செய்யவேண்டியதான கட்டாயம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, வான்புலிகளின் பறப்பை சிறிலங்கா வான்படையாலோ, சிறிலங்கா வான் பாதுகாப்பு செயற்பாடுகளினாலோ கட்டுப்படுத்த முடியாது என்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு, விடுதலைப் புலிகளின் வான் படையைச் செயலிழக்கச் செய்வதற்காக இதுவரை சிறிலங்கா மேற்கொண்ட வான் தாக்குதல்கள் எவையும் வான்புலிகளை முடக்கி விடுபவையாகவோ அவர்களின் செயற்பாட்டை ஒழித்து விட்டனவையாகவோ அமையவில்லை என்பதாகும்.

இதேவேளை, வான்புலிகள் தாக்குதலுக்கு நீண்டகால இடைவெளியை எடுத்துக்கொண்டமையானது வான்புலிகளின் செயல்திறன் பாதிக்கப்பட்டதினால் அல்ல, தேவைக்கான காத்திருத்தல் என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், இது தனியாக வான்புலிகளுக்கு மட்டும் தான் பொருத்தப்பாடானதொன்றல்ல. விடுதலைப் புலிகளைப் பொறுத்து - அதாவது, அதன் பல்வேறு வகை படைக் கட்டுமானங்களைப் பொறுத்தும் பொருத்தப்பாடான தொன்றாகவே கொள்ளத்தக்கதாகும்.

எடுத்துக்காட்டாகக் கடற்புலிகளின் நடவடிக்கைகள் இன்று மட்டுப்படுத்தப்பட்டுள்ள வேளையில் அது சிறிலங்காக் கடற்படையின் மேலாண்மையால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகக் கொள்ளப்படுதல் சரியானதொரு மதிப்பீடாக இருக்கமாட்டாது. ஏனெனில், கடற்புலிகளின் செயற்பாட்டைச் செயலிழக்கச் செய்யும் வகையில் சிறிலங்காக் கடற்படை சாதனைகள் எதையும் செய்துவிடவில்லை.

மாறாகக் கடற்புலிகளின் சில தாக்குதல் குறித்து இன்னமும் குழப்பமடைந்த நிலையிலேயே சிறிலங்காக் கடற்படை உள்ளது. ஆகையினால், சிறிலங்காப் படைத்தரப்பின் பிரச்சாரத்தின் அடிப்படையிலோ அன்றி களமுனையில் வெளிப்படையாகத் தெரியும் சில விடயங்களின் அடிப்படையிலோ யுத்தம் குறித்து தீர்மானம் எடுப்பவர்கள் தவறாக மதிப்பீடு ஒன்றிற்குச் செல்பவர்களாகவே இருப்பர்.

நன்றி: - ஜெயராஜ் - வெள்ளிநாதம் (29.08.08)

0 Comments: