Sunday, March 30, 2008

பிள்ளையான் குழு விவகாரத்தால் ஜே.வி.பிக்குள் உட்கட்சிக் குரோதம்

கிழக்கில் தனது துணைப்படையான பிள்ளையான் குழுவை வைத்துக்கொண்டு அரசு மேற்கொள்கின்ற அரசியல், இராணுவக் காய் நகர்த்தல்கள் தென்னிலங்கை அரசியலிலும் பலத்த சூட்டைக் கிளப்பியிருக்கின்றன.

பிள்ளையான் குழுவின் செயற்பாடுகளும் அதற்கு அரசுத் தரப்புக் கொடுக்கும் ஊக்கமும் ஆதரவும் ஜே.வி.பி. கட்சிக்குள்ளேயே சர்ச்சைகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்தி விட்டன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
பிள்ளையான் குழு விவகாரம் தொடர்பாக ஜே.வி.பி. கட்சியின் மூத்த தலைவர்களே தமக்குள் மோதிக்கொள்ளும் நிலை உருவாகியிருக்கின்றது.

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் அதையொட்டி, கடந்த இருபதாம் திகதி ஜே.வி.பி. தலைவர் சோமவன்ஸ அமரசிங்க கொழும்பில் கருத்து ஒன்றை வெளியிட்டார்.
கிழக்கில் தேர்தல் நீதியாகவும், நியாயமாகவும் நடக்க வேண்டுமானால் பிள்ளையான் குழுவினரின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும். அவர்களுக்குத் தேவையானால் பொலிஸ், இராணுவப் பாதுகாப்பு வழங்கலாம் என்று ஜே.வி.பி. தலைவர் அறிவித்தார். இதுவே இவ்விவகாரத்தை ஒட்டி ஜே. வி. பியின் பொதுவான நிலைப்பாடாக இருக்கும் என்று அப்போது கருதப்பட்டது.

2006 பெப்ரவரியில் விடுதலைப் புலிகளுடன் தான் நடத்திய "ஜெனிவா 1' பேச்சுகளின்போது கருணா குழு (தற்போதைய பிள்ளையான் குழு) உட்பட சகல சட்டவிரோதக்குழுக்கள் மற்றும் ஒட்டுப்படைகளின் ஆயுதங்களைக் களைவதற்கு இலங்கை அரசு இணங்கியபோது அதனை ஜே.வி.பி. கடுமையாக எதிர்த்து விமர்சித்திருந்தது.

அந்தக் கட்சிதான் இப்போது அதே பிள்ளையான் குழுவின் ஆயுதங்களைக் களைய வற்புறுத்துகின்றது என அண்மைக்காலத்தில் சில தரப்புகளினால் விமர்சிக்கப்பட்டது. ஆனால் ஜே.வி.பிக்குள் இது தொடர்பாக இருவேறு முரண்பாடான கருத்துகள் இருக்கின்றமை, கட்சித் தலைவர் சோமவன்ஸ அமரசிங்கவின் கருத்து வெளியாகி ஆறு நாட்களுக்குள் அம்பலமாயிற்று.

"தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின்' செய்தியாளர் மாநாடு ஒன்றில் கலந்து கொண்ட ஜே.வி.பியின் பிரசாரச் செயலாளரும் அதன் நாடாளுமன்றக் குழுத்தலைவருமான விமல் வீரவன்ஸ, பிள்ளையான் குழுவின் ஆயுதங்களைக் களைய வேண்டும் என்ற கோரிக்கையைக் கடுமையாகச் சாடினார். அப்படிப் பிள்ளையான் குழுவின் ஆயுதங்களைக் களையக்கோருவோரை "பைத்தியக் காரர்கள்' என்று சுட்டுவது போல அத்தகையோரின் மண்டையைச் சோதிக்கவேண்டும் என்றும் விமல் வீரவன்ஸ பகிரங்கமாகப் பிரஸ்தாபித்திருந்தார்.

ஆனால், ஜே.வி.பியின் முக்கிய பிரமுகரான விமல் வீரவன்ஸவின் கருத்துக்கு கட்சியின் மூத்த வட்டாரங்களில் இருந்து காரசாரமாகப் பதிலடி வந்திருக்கின்றது.
லால் காந்த, அனுர குமார திஸநாயக்கா போன்றோர் தமது கட்சித் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க கூறியபடி, பிள்ளையான் குழுவின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்பதே கட்சியின் ஒருமித்த நிலைப்பாடு என வற்புறுத்தியிருக்கின்றனர்.
மாத்தளை, இரத்தோட்டையில் கடந்த வாரம் ஜே.வி.பி. ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய கே.டி. லால் காந்த
""தங்களுடைய சொந்த எண்ணம் என்ற ஒன்று கருதி, கட்சியின் பெரும்பான்மையினரின் தீர்மானத்தை மதிக்க விரும்பாத நபர்களையே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது அரசியல் இலாபங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ள இப்போது விரும்புகின்றார். ஜனாதிபதி ராஜபக்ஷ தமது அரசியல் நிகழ்ச்சித்திட்டத்தை நகர்த்துவதற்கு இத்தகைய பலவீனமான அரசியல்வாதிகளைத் தேடுகிறார். அவரது அரசியல் இத்தகையோரை வட்டமிடுவதில்தான் அமைந்துள்ளது.

""ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜே.வி.பியைப் பொறுத்தவரை அதை ஒரு முழுமையான கட்சியாக அங்கீகரித்து அதனுடன் அரசியலில் ஈடுபட வேண்டுமே தவிர, ஜே.வி.பியில் தனக்குப் பிடித்தமான தனியாட்களை வைத்து அவர்கள் மூலம் அல்ல. அதை விடுத்து தனியாட்கள் மூலம் ஜே.வி.பியைக் கையாள அவர் முயற்சிப்பாராயின் ஜே.வி.பியின் ஆதரவையுமே அவர் இழக்க வேண்டியவராவார்'' என எச்சரித்திருக்கிறார் லால் காந்த.
இதேபோன்ற கருத்தை அவர் சிங்களப் பத்திரிகையான "லங்காதீப'வுக்கும் ஓர் அறிக்கை மூலம் தெரிவித்திருக்கின்றார் எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
பிள்ளையான் குழு விவகாரம், ஜே.வி.பியின் மூத்த தலைவர்கள் மத்தியில் வழமைக்கு மாறாக பகிரங்க அரங்குகளில் அவர்கள் மோதும் நெருக்கடி நிலைக்குச் சென்று விட்டதையே இக்கருத்துகள் காட்டுகின்றன.

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் சூடு பிடித்து, அதன் விளைவாக கிழக்கில் சூடுகள் விழும்போது, பிள்ளையான் குழுவின் ஆயுதங்களைக் களைவதா, இல்லையா என்ற விவகாரம் ஜே.வி.பிக்குள் இன்னும் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கலாம்.
நன்றி :- உதயன்

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலும் முஸ்லிம்களின் உரிமைகுரலும்

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் முஸ்லிம் கட்சிகள் யாவும் ஒரு அணியாக நின்று ஒரு பொதுச் சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்று முஸ்லிம் பொதுமக்களும், அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கோரிக்கைகளை விடுத்ததோடு, அரசியற் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்கள். எனி னும் முஸ்லிம் அரசியற் கட்சிகளும் அவற்றின் தலைமைகளும் ஒரு பொது அணியாக தேர்தலை சந்திப்பதற்கு தயாரற்றவர்களாகவே இருக்கின்றார்கள்.

கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் அரசியற் தலைமைகளில் 99 வீதமானவர்கள் முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம். எச். எம். அஸ்ரப்பின் பாசறையில் அரசியல்பாடம் கற்றவர்களாகவே உள்ளார்கள். தற்போது பிரிந்து நின்று ஒவ்வொரு அணியினரும் தனித்தனிக் கட்சிகளை வைத்துக் கொண்டு அரசியல் சித்து விளையாட்டில் ஈடுபட்டுள்ளார்கள்.

இவர்களிடையேயுள்ள இந்தப் பிரிவினை கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் முஸ்லிம்களின் உண்மைப் பிரதிநிதித்துவத்தின் எண்ணிக்கையில் வீழ்ச்சியை கொண்டு வருமென்ற அச்சத்தின் காரணமாகவே பிரிவினைகளை மறந்து, சமூக நலனில் அக்கறை கொண்டு, ஒரு பொது அமைப்பு அல்லது கூட்டமைப்பு யோசனை முன்வைக்கப்பட்டது. அந்த யோச னையை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சியும் எடுக்கப்பட்டது. இதனிடையே கடந்த 26.03.2008 இல் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் சமூகம் ஒலுவில் வளாகத்தில் பெருந்திரளாகத் திரண்டு முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒரு குடையின் கீழ் செயற்பட்டு, கிழக்கு மாகாண சபைத் தேர்தலை சந்திக்க வேண்டுமென்றும் கோரி ஒரு கவனயீர்ப்புப் போராட்டத்தினை சுமார் 2 மணித்தியாலங்கள் மேற்கொண்டார்கள். தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முஸ்லிம் தேசப் பிரகடனத்தின் பின்னர் மிகக் கூடியளவு மாணவ, மாணவிகள் பங்குபற்றியதோர் போராட்டமாக இதனைக் குறிப்பிட முடியும்.

""முஸ்லிம் மக்களை ஏமாற்றும் அரசியலைக் கைவிடுங்கள்'', ""முஸ்லிம்களுக்கு குரல் கொடுக்கும் சமூகவாதிகளை தேர்தலுக்கு நிறுத்துங்கள்'' போன்ற பல்வேறு சுலோகங்களை மாணவர்கள் ஏந்தியிருந்ததோடு, அவற்றை சத்தம் போட்டுக் கோஷித்துக் கொண்டுமிருந்தார்கள். அவர்களின் சுலோகங்கள் யாவும் முஸ்லிம் அரசியற் தலைமைகள் மீது நம்பிக்கையிழந்து இருப்பதனையே காட்டியது. அரசியற் தலைமைகளில் நம்பிக்கையிழந்ததோடு மட்டுமன்றி, அதற்கு மாற்றீடாக முஸ்லிம்களுக்கு குரல் கொடுக்கும் சமூகவாதிகளை தேர்தலில் நிறுத்த வேண்டுமென்றும் கோரியுள்ளார்கள்.

முஸ்லிம் மக்களின் இன்றைய அரசியற் தலைமைகள் பெரும்பாலும் அரசியலுக்கு வருவதற்கு முன்னர் சமூகத்தின் தேவைப்பாட்டினை உணர்ந்து குரல் கொடுத்தவர்களாகவோ அல்லது அதற்காக சிந்தித்தவர்களாகவோ இருந்ததில்லை என்ற குற்றச்சாட்டும் பலமாக உள்ளது. அரசியலுக்கு வந்ததன் பின்னர்தான் சமூகத்தின் குறைகளைப் பற்றியும், பேரினவாத சக்திகளின் சூழ்ச்சிகளைப் பற்றியும் உணர்வு மிக்க பேச்சுக்கள் மூலமாக கூறினார்கள். அவர்களின் அப்பேச்சுக்கள் தேர்தலை வெல்லுவதற்கு உதவியதே தவிர, சமூகத்தின் உண்மையான குரலாக அவர்கள் செயற்படவில்லை என்றே விமர்சிக்கப்படுகிறது.

தேர்தல் முடிந்ததும் முஸ்லிம்களின் பிரச்சினைகள் அதிகரித்துக் கொண்டே வந்துள்ளன. முஸ்லிம் பிரச்சினைகள் தேர்தல் காலத்தில் மட்டும் தூசு தட்டப்படும் நிலையே தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இத்தொடர்ச்சி மே 10 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலிலும் இடம்பெறுகின்றது. இதனை நன்கு உணர்ந்தவர்களாகவே தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் சமூகம், சமூகத்திற்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்ற சமூகவாதிகளை அரசியல்வாதிகளாக்கி பார்க்க வேண்டுமென்று சிந்தித்துள்ளார்கள். அரசியலுக்காக சமூகத்தைப் பற்றி பேசுபவர்களை விட, சமூகத்திற்காக அரசியலைப் பற்றி பேசுகின்றவர்கள் சமூகவாதிகள். இவர்களினால் நிச்சயமாக சமூகம், அரசியல்வாதிகளை விடவும் கூடுதலான நன்மைகளை அடையும் எனலாம். அரசியல்வாதிகளுக்கு பிடிக்காதவர்கள் சமூகவாதிகள். சமூகவாதிகள் யதார்த்தத்தைப் பற்றியே சிந்திப்பார்கள். யதார்த்தத்தைப் பற்றி சிந்திப்பதற்கு முஸ்லிம் அரசியல் தலைமைகள் தயக்கம் காட்டுவதனால்தான் முஸ்லிம் அரசியலில் அவர்களின் விகிதாசாரத்தை விடவும் கூடுதலான அரசியற்கட்சிகளும் பிளவுகளும் காணப்படுகின்றன.

முஸ்லிம் அரசியற் தலைமைகள் ஒற்றுமைப்படுவதற்கு தடையாக இருப்பது அவர்களிடம் காணப்படும் வரட்டுக் கௌரவமாகும். மேடைகளில் ஒற்றுமைக்காக மற்றக் கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பதில் காட்டும் தாராளத்தன்மை, ஒற்றுமைக்காக கலந்துரையாடும் போது காட்டுவதில்லை. ஒற்றுமைக்கு தடையாக இருப்பது, யார்? யாரின் பின்னால் செல்லுவது? என்பதாகும். நானுமொரு தலைவன், நான் அவர் பின்னால் சென்றால் என்னைத் தலைவர் என்று அழைக்கமாட்டார்கள். எனது கட்சி அழிந்து விடும். கட்சி அழியுமாயின் தமது முகவரியும் மறைந்து போய்விடுமென்ற சிந்தனைகள்தான் ஒற்றுமைக்கு தடையாகவுள்ள பிரதானமான காரணிகளாகும். முஸ்லிம் அரசியற் தலைமைகள் தமது கட்சியின் இருப்பினை விடவும், தமது தலைமைப் பதவி என்பதனை விடவும் சமூகத்தின் இருப்பினை பற்றி சிந்திக்க வேண்டும். சமூகத்தின் இருப்பினை உறுதி செய்து கொள்ள முடியாத அரசியற் கட்சிகள் சமூகத்திற்காக எதனை சாதிக்கப் போகின்றன? சமூகம் சீரழிந்த நிலையில் கட்சிகளினால் நிலைத்திருக்க முடியுமா? ஆதலால் முஸ்லிம் தலைமைகள் சமூகத்தின் இருப்பை உறுதி செய்யும் போது கட்சிகள் அழிந்து விடாது. சமூகத்திற்காக உண்மையான சேவை செய்தோரை சமூகம் ஒரு போதும் மறந்து விட மாட்டாது. டி. பி. ஜாயா, அறிஞர் சித்திலெவ்வை, சேர் ராசீக் பரீட், பதியுத்தீன் மஃமூத், எம். எச். எம். அஸ்ரப் போன்ற தலைவர்களை நல்ல உதாரணமாகக் கூற முடியும்.

கிழக்கு மாகாண சபையானது ஒரு அவசரத் தேர்தலை எதிர்கொண்டுள்ளது. இத்தேர்தல் மூலமாக அரசாங்கம் கிழக்கில் ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட மக்களின் நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச சமூகத்திற்கு காட்டுவதோடு பிரதிநிதிகளால் சிங்கள மக்களின் அமோக ஆதரவை திரட்டிக் கொள்வதற்கும் முயன்று கொண்டிருக்கின்றது. இந்த முயற்சியினூடாக ஒரு திடீர் பொதுத் தேர்தலை சந்திப்பதற்கான சாத்தியங்களை ஏற்படுத்திக் கொள்ளவும் அரசாங்கம் எண்ணுகின்றது. ஆனால் தமிழர்களையும் முஸ்லிம்களையும் பொறுத்தவரை இந்த அவசரத் தேர்தலை விரும்பவில்லை என்றே கூறுதல் வேண்டும். இருந்தபோதிலும் தமிழ் பேசும் சமூகங்கள் இந்தத் தேர்தலில் போட்டியிட்டேயாக வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டுள்ளது. இத்தேர்தலில் யார் பங்குபற்றா விட்டாலும் அரசாங்கக் கட்சிகள் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தவே செய்யும். கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையினராக தமிழ் பேசும் சமூகங்கள் இருக்கின்ற நிலையில், சுமார் 25 சதவீதமாகவுள்ள சிங்களவர்களின் ஆதிக்கத்தின்கீழ் கிழக்கு மாகாணத்தைக் கொண்டு வருதல் வேண்டுமென்று மிக நீண்ட காலமாகவே முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

கிழக்கு மாகாண சபையின் அதிகாரம் தமிழ்பேசும் சக்திகளிடம் இருந்து விலகிச் செல்லுமாயின் அவர்களின் நீண்டகால முயற்சியானது இலகுவாக நிறைவேறி விடும். இந்த விடயத்தில் தமிழ் பேசும் சமூகங்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். கிழக்கு மாகாண சபையின் அதிகாரம் பெரும்பான்மையினராகவுள்ள தமிழர்களைச் சென்றடைய வேண்டும். அல்லது முஸ்லிம்களைச் சென்றடைய வேண்டும். மொழியால் ஒன்றுபட்டு நிற்பவர்கள் என்ற அடிப்படையில் செயற்படுதல் வேண்டும். மட்டுமன்றி தமிழ், முஸ்லிம் சமூகங்களிடையே நல்ல புரிந்துணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.

முஸ்லிம் அரசியற் தலைமைகள் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டுமென்று வலியுறுத்தப்படுவதற்கு காரணம் கிழக்கில் தமிழ்பேசும் சக்திகளின் அதிகாரம் கையைவிட்டு விலகி மற்றத்தரப்பிற்கு சென்றுவிடக்கூடாது என்பதற்காகவே. ஏனெனில், முஸ்லிம்களின் காணிகள் மற்றும் கலாசார விழுமியங்கள் இன்று என்றுமில்லாத அளவிற்கு நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் கிழக்கின் அதிகாரத்தினை தமிழ்பேசும் தரப்புகள் கோட்டைவிடுமாயின் முஸ்லிம்கள் பெரும் இழப்புக்களை சந்திக்க நேரிடலாம்.

கிழக்கின் அதிகாரத்தை தமிழர்கள் கைப்பற்றும்போது முஸ்லிம்களின் அபிலாஷைகளுக்கு எதிராக அந்த அதிகாரம் பயன்படுத்தக் கூடாது. அதேபோன்று முஸ்லிம்கள் அதிகாரத்தினைக் கைப்பற்றும் போது அதனை தமிழர்களின் அபிலாஷைகளுக்கு எதிராகப் பயன்படுத்தக் கூடாது. இவ்விரு தரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் எதிராக செயற்படும் போது பேரினவாத சக்திகள் அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அதிகாரத்தினை கைப்பற்றுவதற்கு அல்லது அதிகாரத் தரப்பினை ஆட்டிப் படைப்பவர்களாக மாறி விடுவார்கள். மேலும் தமிழ் பேசும் சமூகம் எவர் அதிகாரத்தினைப் பெற்றாலும் கிழக்கிலுள்ள சிங்கள மக்களின் மனங்களையும் வென்றிட வேண்டும். அப்போதுதான் பேரினவாதத்தின் சூழ்ச்சிகளை அறிந்து கொள்வதோடு, தமிழ் பேசும் சமூகங்களின் நியாயங்களுக்கு துணையாகவும் கிழக்கிலுள்ள சிங்கள மக்கள் நிற்பார்கள். கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை தமிழ், முஸ்லிம், உறவுகள் மட்டுமன்றி சிங்களவர்களின் உறவுகளும் பேணப்பட வேண்டும். ஏனெனில் இலங்கையின் இனத்துவ அரசியலில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது கிழக்கு மாகாணமாகும். இங்கு மூவின மக்கள் வாழ்ந்த போதிலும் இனங்களிடையேயான சந்தேகங்கள் இன்னும் முற்றாகத் தீரவில்லை. இதனைத் தீர்க்க வைக்கும் கருவியாக கிழக்கு மாகாண சபையின் அரசியல் அதிகாரம் செயற்பட வேண்டும்.

முஸ்லிம் கட்சிகள் தங்களிடையுள்ள வேற்றுமைக்கிடையே ஒற்றுமை காணத் தவறியுள்ளதால் இனி ஒரு போதும் இவர்கள் ஒற்றுமைப்படப் போவதில்லை என்றதாகி விட்டது. இருந்தபோதிலும் கிழக்கில் தமது பிரதிநிதிகளை உறுதி செய்யும் துரும்புச் சீட்டு முஸ்லிம் வாக்காளர்களின் கைகளில் தங்கியுள்ளன. அதனை அவர்கள் மிகச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். முஸ்லிம் கட்சிகள் தமக்கு விரும்பியவர்களை வேட்பாளர்களாக நிறுத்தாது, மக்கள் விரும்பக் கூடிய, சமூகத்திற்காகக் குரல் கொடுக்கக் கூடியவர்களை வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும்.

இதனையே தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் சமூகம் கோரியுள்ளது. இதனை சாதாரணமாக கருதி விடாது இதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். முஸ்லிம் வாக்காளர்கள் தமக்கு உறவினர், நண்பர், தெரிந்தவர் என்று எண்ணி வாக்களிக்காது சமூகத்தின் மீது அக்கறையுடையவர் யார்? என்று சரியாக கணித்து வாக்களிக்க வேண்டும். அப்போது தான் சமூகத்தின் உரிமைக் குரல் வெளிப்படும்.

நன்றி :- வீரகேசரி

இந்தியாவின் போக்குக் குறித்து ஈழத் தமிழர்களின் மனக்குறை

""எப்போதெல்லாம் ஈழ மக்கள் மீது கொடூரமான போர் திணிக் கப்படுகின்றதோ அப்போதெல்லாம் இந்திய அரசு கொடுக்கின்ற ஆயுதங்களை வைத்துத்தான் தமிழ் மக்களைக் கொல்கின்றது அரசு.''

இப்படி ஒரு குற்றச்சாட்டை இந்தியத் தரப்பு மீது சுமத் தியிருக்கின்றார் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் பா.நடேசன்.

""இலங்கை இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வு மூலம் அமைதித் தீர்வு காணும் எண்ணம் இலங்கை அரசுக்குக் கிஞ்சித் தும் கிடையாது. படை நடவடிக்கை மூலம் விடுதலைப் புலி களை அழிக்கும் இராணுவ வழித் தீர்வில் மட்டுமே கொழும்பு அரசு முனைப்பாக ஈடுபட்டுள்ளது'' என்று புதுடில்லி அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனே பகிரங்கமாக ஒப்புக் கொள்ளும் அதேசமயத்திலேயே இலங்கைக்கான இந்திய இராணுவ உதவியும் தொடர்கின்றது.

பேரழிவு ஏற்படுத்தாத ஆயுதங்கள் என்ற பெயரில் இராணு வத் தளபாடங்களை இலங்கைக்கு இந்தியா வழங்குகின்றது; "ராடர்' போன்ற இராணுவச் செயற்பாடுகளுக்குத் தேவைப்படும் வான்வழிப் பாதுகாப்புக் கருவிகளை இந்தியா கொடுத்து உதவு கின்றது; இலங்கையுடன் கூட்டுக் கடல்ரோந்திலும் கண்காணிப் பிலும் ஈடுபடுகின்றது. இலங்கைப் படையினருக்கு இந்தியா வில் விசேட பயிற்சி வசதிகள் வழங்கப்படுகின்றன.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கையில் தமிழர் தரப் புக்கு எதிரான கொடூர யுத்தத்தைக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் இலங்கை இராணுவத்தைப் போற்றித் துதிப்பது போல அதன் இராணுவத் தளபதியை வரவேற்று விசேட கௌரவமளிக் கின்றது இந்தியா. அவருக்கு அணி நடை மரியாதைகள், குதூகல வரவேற்பு என்று தூள் கிளப்புகிறது புதுடில்லி.
அவரது வருகையை ஒட்டி இந்தியாவில் தகவல் வெளியிட்ட இந்தியப் படைகளின் மூத்த அதிகாரி ஒருவர் ""புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இலங்கை இராணுவத்தின் கைகள் நலிவடை வதை இந்தியா விரும்பவில்லை'' என்பதைப் பகிரங்கப்ப டுத்தியதன் மூலம் இவ்விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாட் டைப் பட்டவர்த்தனமாகப் போட்டுடைத்திருக்கின்றார்.

இவ்வாறு யுத்த வெறித் தீவிரத்தோடு இராணுவ வழித் தீர் வில் முனைப்புக் கொண்டு நிற்கும் கொழும்புக்கு "வீடு எரிக்கும் ராஜாவுக்குக் கொள்ளிக்கட்டை தூக்கிக் கொடுக்கும் மந்திரி போல' இந்தியா செயற்படுகின்ற பின்னணியில், நடேசனின் குற் றச்சாட்டு மிக அர்த்தமுள்ளதாகவே படுகின்றது.

இந்தச் சமயத்தில் ஈழத் தமிழர் தரப்பில் ஒரு முக்கிய விடயத்தை இந்திய ஆளும் தரப்புக்கு இங்கு நினைவூட்டி சுட்டிக் காட்டுவது பொருத்தமானதாகும்.

ஈழத் தமிழர்களின் நாடாளுமன்றப் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்கள் இந்திய உயர்மட்டத் தலை வர்களை 2006 டிசெம்பர் 22 ஆம் திகதி புதுடில்லியில் சந்தித்தி ருந்தனர். தமிழர்கள் தரப்பில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றோரும் இந்திய அரச உயர் பீடத்தின் சார்பில் பிரதமர் மன்மோன்சிங், வெளியு றவுச் செய லாளர் சிவ்சங்கர் மேனன், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் போன்றோரும் இச்சந்திப்பில் பங்குபற்றினர்.
இந்தச் சந்திப்புக்குச் சற்றுக்காலம் முன்னர்தான் பொது நல அமைப்பு நாடுகளின் கம்பாலா மாநாட்டுக்குச் சென்றிருந்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இலங்கை இனப்பிரச்சினை குறித்து அங்கு விரிவாக உரையாடியிருந்தனர்.

அந்தச் சந்திப்பின் பெறுபேறுகளும் ஈழத் தமிழர்களின் தலைவர்கள் பிரதமர் மன்மோகன் சந்திப்பின்போது ஆராயப் பட்டன.

தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பிரிப் பதற்குக் கொழும்பு அரசு கங்கணம் கட்டி நிற்பதை இந்தச் சந்திப்பின்போது முறைப்பாடாகத் தமிழர் தலைவர்கள் முன் வைத்தனர்.
"இது குறித்துக் கொழும்புடன் பேசியிருக்கின்றோம். வடக்கு கிழக்கு பிரிக்கப்படமாட்டாது என எமக்கு உறுதி தந்திருக்கின் றார்கள். வடக்கு கிழக்கு ஒன்றணைந்திருப்ப தன் முக்கியத்து வத்தைக் கொழும்புக்கு விளக்கி, அதனை அவர்கள் ஏற்கச் செய்திருக்கின்றோம்.' என்ற சாரப்பட இந்தியத் தலைவர்கள் குறிப்பிட்டனர். அதற்கு ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகள் தெளி வாகப் பதில் தந்தனர்.

"கொழும்பின் உறுதி மொழிகளில் எமக்கு நம்பிக்கையில்லை. அதுதான் எமது அனுபவப் பாடம்; பட்டறிவு. வழமையான தனது பாணி யில் தன்னுடைய இந்த வாக்குறுதியையும் கொழும்பு தவறவிட்டு காற்றில் பறக்கவிட்டு ஏமாற்றி, வடக்குக் கிழக்கைப் பிரிக்க முயன் றால் என்ன செய்வீர்கள்?' என்று தமிழ்த் தலைவர்கள் கேட்டார்கள்.
"எங்களுக்கு எல்லா வழிமுறைகளும் திறந்தே வாயப்பாகவே உள்ளன.'(All the options are open for us!) என்று இந்திய ஆளும் வர்க்கம் அப்போது உறுதியாகப் பதில் சொன்னது.
ஆனால் இப்போது என்ன நடக்கின்றது? வடக்கு கிழக் கைத் தனித்தனியாகப் பிரித்து, அதை உறுதிப்படுத்துவதற் காகக் கிழக்கிற்கு தனியாக மாகாண சபைத் தேர்தலை அவசர அவசரமாக நடத்தி முடிக்கத் துடிக்கிறது இலங்கை. அதற்கான நடவடிக்கைகளை விழுந்தடித்து வேகமாக எடுக்கின்றது.

ஆனால், "எமக்கு எல்லா வழிகளும் திறந்தே இருக்கின்றன!' என்று அப்போது தமிழ்த்தலைவர்களிடமே நேரில் மார்தட்டிய இந்தியத் தலைமை, கொழும்பு அரசின் தற்போதைய காய்நகர்த் தலை எப்படிச் சமாளிப்பது என்பது தெரியாமல் முழுசிக் கொண்டு அந்தரிக்கின்றது.

கொடுத்த வாக்குறுதியையும் கோட்டை விட்டுவிட்டு எதையும் செய்ய முடியாது கையைப் பிசைகிறது புதுடில்லி.

இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான விடயத்தில் பாதிக் கப்பட்ட சிறுபான்மையினரான தமிழர்கள் பெரும்பான்மையின ரான சிங்களவரால் பலமுறை வாக்குறுதி கொடுக்கப்பட்டு ஏமாற்றப்பட்டுள்ளனர்.இந்த ஏமாற்றுதல் புராணத்தை இப்போது கொழும்பிடமிருந்து புதுடில்லியும் கற்றுக்கொண்டு இறக்குமதி செய்திருக்கிறது போலும்.
ஏற்கனவே, இலங்கை இந்திய ஒப்பந்தத்துக்கு முதல்நாள் இரவு புலிகளின் தலைவர் பிரபாகரனை அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி சந்தித்து நீண்ட நேரம் பேசியபோது, எழுதப்படாத கனவான் ஒப்பந்தம் ஒன்றுக்கு உடன்பட்டு பல வாக்குறுதிகளை வழங்கினார் இந்தியப் பிரதமர். ஆனால் பின்னர்அவை காற்றில் பறக்க விடப்பட்டன. இதன் பெறுபேறாகவே திலீபனின் உண் ணாவிரதமும், மரணமும், இந்தியப் படைகள் புலிகள் யுத்த மும் நேர்ந்தன என்பது சரித்திரம்.

அதுபோலவே, வடக்குகிழக்கு இணைப்பை உறுதிப்படுத்த எல்லாவிதமான வழிகளும் தங்களுக்குத் திறந்திருக்கின்றன என்று ஈழத் தமிழர்களுக்கு உறுதியளித்த இந்தியத் தலைவர், இப்போது வடக்குகிழக்குப் பிரிப்பு உறுதிப்படும்போது வாக்குறுதியை மறந்து வாளாவிருக்கின்றது.

இந்தப் பின்புலத்தில் புலிகளின் அரசியல் பொறுப்பாளர், சுமத்தும் குற்றச்சாட்டும் புதுடில்லி குறித்து ஆழமான சந்தேகங் களையே தமிழருக்கு எழுப்புகின்றன.


நன்றி :- உதயன்

Saturday, March 29, 2008

இந்தியாவின் கரிசனையில் பொதிந்துள்ள அர்த்தங்கள்

"இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அதிகாரப் பகிர்வுத்திட்டம் பற்றிய சிந்தனையே இலங்கை அரசுக்குக் கிடையாது. அது விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரேயொரு இராணுவ நோக்கத்துடன் மாத்திரமே செயற்படுகின்றது.''
இவ்வாறு விசனத்துடன் கருத்துக்கூறியிருக்கின்றார் இந்திய மத்திய அரசின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன்.

அவர் அலங்கரிக்கும் பதவி வெறும் ஆலோசகர் கதிரை அல்ல. அது, இந்திய மத்திய அரசின் அமைச்சரவை அந்தஸ்து உள்ள ஓர் அமைச்சருக்குரிய இராஜதந்திர பதவி நிலையாகும். இந்தியாவின் போர் அல்லது சமாதானம் மற்றும் அவை போன்ற பாதுகாப்பு விடயங்களில் ஆட்சித் தலைவரான பிரதமரின் சார்பில் முடிவெடுக்கும் தகுதியும் அதிகாரமும் இப்பதவியில் இருக்கும் பிரமுகருக்கு உண்டு. அந்த வகையில் இந்தியப் பாதுகாப்பு அமைச்சரை விட இவ்விடயங்களில் முக்கியமானவராகின்றார் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்.
அத்தகைய ஒருவரே இப்போது ஈழத் தமிழரின் நலனுக்காக நீலிக் கண்ணீர் முதலைக் கண்ணீர் வடிப்பவர் போல கருத்து வெளியிட்டிருக்கின்றார்.

இலங்கை விவகாரத்தை ஒட்டி புதுடில்லி அதிகார வர்க்கத்தின் முக்கிய குரல் ஒன்று வெளியிட்டிருக்கும் இத்தகைய கருத்துக்கள் ஈழத் தமிழர்களுக்கு எவ்வளவு தூரம் சாதகமானவையாக பயனுள்ளவையாக இருக்கும் என்று கருதமுடியும்?

இலங்கைச் சிக்கலை இனப்பிரச்சினையை எப்போதுமே அந்தக் களத்தில் அதனை எதிர்கொள்ளுபவர்களின் சூழ்நிலையில் இருந்து நோக்குவது புதுடில்லியின் பண்பியல்பல்ல. தன்னுடைய அரசியல், புவியியல், கேந்திர நலன்களின் அடிப்படையிலே அவற்றை நோக்குவதையே தன்னுடைய புத்தி சாதுரியமான நடவடிக்கையாக பலமான செயற்பாடாகக் கருதிக் காரியமாற்றுவது புதுடில்லியின் போக்காகும்.

தனித்துவமாகவும், தூரநோக்கோடும், உலகில் பாதிப்புற்ற மக்களின் இரட்சகராகத் தன்னைக் கருதும் தாராளத்தோடும் விடயங்களை அணுகி வந்த அன்னை இந்திரா காந்திக்குப் பின்னர், ஆட்சிக்கு வந்த இந்திய அரசியல் தலைவர்கள் எல்லோருமே ஒரு புறம் தமது கருத்தியல்புச் சிந்தனையே காரியமாக ஆற்றப் பட வேண்டும் என்று திட்டவட்டமாக வழிப்படுத்தும் ஆளு மையோ, அதிகாரமோ, செல்வாக்கோ, உறுதியோ இல்லாதவர்களாக இருந்து வருகின்றார்கள். அந்தக் காரணத்தால் மறுபுறத்தில் இலங்கைப் பிரச்சினை போன்ற சர்வதேச அரசியல் சிக்கல் விவகாரங்களில் அதிகாரவர்க்கத்தின் மகுடிக்கு ஏற்ப ஆடவேண் டியவர்களாகவும் ஆடுபவர்களாகவும் இருந்து வந்திருக்கின்றார்கள்.

இவ்வாறு புதுடில்லி அரசியல் தலைமைகளை ஆட்டுவிக்கும் அதிகாரவர்க்கப் பிரகிருதிகளுள் ஒருவராகக் கருதப்படவேண்டிய நாராயணனின் உள்ளத்திலிருந்துதான் கொழும்பு அரசைக் குறைகூறும் வார்த்தைகள் இப்படி வந்திருக்கின்றன.

ஏற்கனவே இந்தியாவின் உளவுத்துறையான றோ மற்றும் மத்திய புலனாய்வுத்துறையான ஐ.பி. போன்றவற்றின் தலைவராக இருந்து பல குசும்புத்தனங்களைப் பண்ணிய நாராயணனுக்கு இலங்கை விவகாரம் பாலர் விளையாடும் மைதானம் போன்றது.
இப்போது ஏதோ ஓர் அந்தரங்கத் திட்டத்தோடு காய்களை நகர்த்துவதற்காக இப்படிக் கொழும்பைக் கரித்துக் கொட்டுபவர் போல பாவனை பண்ணுகின்றார் அவர் என்றே கருதவேண்டியுள்ளது.

மோசமான மனித உரிமை மீறல் போக்குக்காகவும், தீவிர யுத்த வெறி முனைப்புக்காகவும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட மேற்குலகின் கடும் கண்டனத்துக்கும் எதிர்ப்புக்கும் கொழும்பு இலக்காகியிருக்கின்றது.

இச்சமயத்தில் மேற்குலகோடு ஒத்துப்போகின்றமைபோலக் கருத்து வெளியிடாமல் விட்டால், பிராந்தியத்தின் வல்லாதிக்க நாடான இந்தியாவையே ஒதுக்கித் தள்ளிவிட்டுத் தம்பாட்டில் காரியம் பண்ணும் வேலைக்கு மேற்குலகமும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளும் போய்விடும்.

அதேசமயம், கொழும்பின் யுத்த வெறித் தீவிரத்துக்கு எதிராகத் தமிழகத்திலும் உணர்வலைகள் கொதித்து எழும்பி வருகின்றன.

இவற்றையெல்லாம் சமாளித்து, தானும் நீதி, நியாயத்தோடு செயற்படுகின்றது என்று காட்டவேண்டிய இக்கட்டு புதுடில்லிக்கு உண்டு. அதற்காகத்தான் கொழும்பை வைகின்றவர்போல ஒரு முகமூடியணிந்து நாடகமாடுகின்றார் நாராயணன்.
இலங்கை விவகாரத்தில் உண்மையாகவே இதய சுத்தியுடன் நேர்மை, நாணயத்தோடு செயற்பட இந்தியாவும், நாராயணன் உட்பட்ட அதிகார வர்க்கமும், அந்தத் தரப்பினால் ஆட்டுவிக்கப்படுகின்ற அரசியல் தலைமைகளும் விரும்புமானால் முதலில் அவை இவ்விடயத்தில் தமது உண்மையான நண்பன் யார், சதித்திட்ட உள்நோக்கோடு காரியமாற்றும் எதிரி யார் என்பதை ஒரு தடவை எண்ணிப்பார்க்கவேண்டும்.

அந்த அளவுகோலைக்கொண்டு எதிர்காலக் காரியங்களைக் கட்டவிழ்க்க புதுடில்லி முனையுமானால், இந்தப் பிராந்தியத்தில் நீதி, நியாயமான அமைதித் தீர்வுக்குச் சாத்தியம் ஏற்படும் என நம்பலாம்.

நன்றி :- உதயன்

Friday, March 28, 2008

இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியாவின் "வகிபாகம்"

இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்திய மத்திய அரசு இருதலை கொள்ளி எறும்பாக செயற்படுகிறது. இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்திய நடுவன் அரசின் நிலைப்பாடு தான் என்ன? ஈழத்தமிழர் பிரச்சினையில் விடுதலைப்புலிகள் தொடர்பில் அது எத்தகைய நகர்வுகளை மேற்கொள்கிறது?

ஈழத்தமிழர்களின் இனரீதியான விடுதலையை அது அங்கீகரிக்கிறதா? பிராந்திய வல்லரசு என்ற ரீதியில் கொழும்பு அரசுக்கு அது கற்பிக்க விரும்புவது என்ன? விடுதலைப்புலிகள் தவிர்ந்த ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளை அது எந்த கோணத்தில் பார்க்கிறது? இவ்வாறான கேள்விகளுடன் ஈழத்தமிழர்களின் இன விடுதலை என்ற வட்டத்துக்குள் இந்திய அரசின் பங்களிப்பை ஆராய்வோம். ஆரம்பத்தில் ஈழத்தமிழர்களுக்கு விடுதலை உணர்வை ஊட்டி வளர்த்த பெருமை இந்தியாவையே சாரும்.

ஈழத்தில் முளைவிட்ட அத்தனை போராளிக் குழுக்களுக்கும் இந்தியாவே ஆதரவு வழங்கி வந்துள்ளது. இந்தியாவின் ஒத்தாசையோடு இலங்கை அரசுக்கு எதிராக போராட்டத்தை ஆரம்பித்திருந்த தமிழ் போராளி அமைப்புகள் பிற்பட்ட காலங்களில் தங்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளால் ஒன்றை ஒன்று வெட்டிகொண்டன.

இவற்றுள் விடுதலைப்புலிகள் இயக்க அமைப்பு வடகிழக்கில் இயங்கிய ஏனைய இயக்கங்களை தடைசெய்து தனியாக செயற்பட ஆரம்பித்தது.ஏனைய போராட்ட அமைபுகள் தமிழர் தாயக பகுதிகளில் இருந்து விடுதலை புலிகளால் விரட்டப்பட்டன. . இவை எல்லாம் 1987ஐ யொட்டி இடம்பெற்ற நிகழ்வுகள் ,முன்பு மறைமுகமாக தமிழர்களுக்கு ஆதரவு கொடுத்தவந்த இந்தியா பின்பு இலங்கை விவகாரத்தில் நேரடியாக தலையிட ஆரம்பித்தது.

இதன்போது ஒரு கட்டத்தில் விடுதலைப்புலிகளின் பகையையும் அது சம்பாதித்ததுகொண்டது.இரு தரப்பு உறவுகளில் ஏற்பட்ட சிக்கல் நிலமையை கடுமையாக்கியது.

இத்தகைய மாற்றங்களோடுதான் இலங்கை தமிழர்களின் இனப்பிரச்சினை தீர்விற்க்கான பங்களிப்பில் இந்தியாவின் பயணம் தொடர்கிறது.

வடகிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகப்பகுதி என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இலங்கை-இந்தியா ஒப்பந்தம் அமைந்து .ஒப்பந்த்தின் படி வடகிழக்கு இணைப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

பிற்பட்ட காலங்களில் மாறி மாறி ஆட்சி ஏறிய தென்னிலங்கை அரசுகள் வடகிழக்கு இணைப்பை சரியான முறையில் நடைமுறைப்படுத்த தவறிவிட்டன.

தற்போதைய ஆட்சியில் பிரிக்கப்பட்டும் விட்டது.இந்நிலையில் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான போர் உக்கிர நிலையில் இருகிறது.

பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் திகதி அறிவிக்கப்ப்ட்டுவிட்டது.

அடுத்து என்ன நடக்கபோகிறது? இந்தியாவை பொருத்தவரையில் அது தன்னுடைய பிராந்திய நலனுக்கும் தேசத்தின் இறைமையாண்மைக்கும் குந்தகம் விளைவிக்காத வகையில் இலங்கை தமிழர்களின் இனப்பிரச்சினையை கையாண்டு வருகிறது.

விடுதலைப்புலிகளின் தனி அரசு கொள்கையை அது ஏற்றுகொள்ளவில்லை.மாறாக தமிழர்களின் தாயகப்பகுதியான வட கிழக்குக்கு அதி உச்ச அதிகாரப்பகிர்வு என்ற கோட்பாட்டை வலியுறுத்தி வருகிறது,

ஆனால் தென் இலங்கை அரசுகள் இதற்கும் செவிசாய்ப்பதாக இல்லை.

விடுதலைப் புலிகளை அழிப்பதையே குறியாக கொண்டு அது செயாலாற்றி வருகிறது.

இதேவேளை இந்தியா தமிழ் மக்களின் விடுதலைக்காக பாடுப்பட்ட அனைவரையும் இனப்பிரச்சினைகான தீர்வு விடயத்தில் சேர்த்துக்கொள்ளவே விரும்புகிறது.ஆனால் விடுதலைப்புலிகள் ஏனைய தமிழ் தரப்புகளை எற்றொக்கொள்ளவில்லை.

இவ்வாறான காரணங்கள், மற்றும் இந்திய பிரதமர் ராஜீவ் கொலை போன்றவற்றால் விசனமடைந்துள்ள இந்திய மத்திய அரசு விடுதலைப்புலிகள் தொடர்பில் தொடர்ந்தும் கடும் போக்கை கடைப்பிடித்துவருகிறது.

தமிழ்நாட்டிலிருந்து இலங்கை தமிழருக்கு ஆதரவு கிடைக்கின்ற போதும் இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றங்களும் தென்படவில்லை. அவ்வப்போது தமிழ் மக்களுக்கு ஆதரவாக அறிக்கைகள் மட்டும் தான் விடப்படுகின்றன.

மறுபுறத்தில் இலங்கை அரசுக்கு இராணுவ உதவிகளை வழங்குகிறது.இன்னொரு புறத்தில் இலங்கை ஏனைய நாடுகளிடமிருந்து ஆயுத இறக்கிமதி செய்வதை அது விரும்பவில்லை என்று கூறுகிறது.

இப்படியே அதனுடைய குத்துக்கரணம் தொடர்கிறது.இதேவேளை இலங்கை விவகாரத்தில் மேற்குலகின் அதிகபட்ச தலையீட்டையும் நிராகரிக்கிறது.

இந்தியாவின் இந்த குழப்ப நிலையால் இலங்கை தமிழர்கள் வேதனைப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.இந்தியாவின் இத்தகைய மயக்கமான போக்கு தெற்காசிய பிராந்தியத்தில் பாரிய சிக்கல்களை எதிர்காலத்தில் தோற்றுவிக்கப் போகிறது

இப்போக்கு ஈழத்தமிழர்கள் அவர்களது உரிமைகளை தென் இலங்கை அரசிடம் இருந்து பெறுவதில் சிக்கல்களை தோற்றுவிக்கவும் போகிறது.

எனவே இவ்விடயத்தில் இந்தியா தெளிவான கொள்கையோடு செயற்படவேண்டும். இந்தியாவின் கொள்கை அற்ற போக்கு தவறான பாதையில் தொடர்ந்து செல்லவே வழிசமைக்கும்,

வடகிழக்குப் பிரிப்பும் இத்தகைய குழப்பங்களுக்கு மத்தியில் அரங்கேறியுள்ளது. இவ்விடயத்தில் இந்தியா நிதானமாக இருந்திருந்தால் வடகிழக்கு பிரிப்பை தடுத்து நிறுத்தி இருக்காலாம்.

தற்போதைய இந்திய மத்திய அரசின் போக்கு கவலைக்கிடமாக உள்ளது.இந்தியா புலிகளை தொடர்ந்து பகையாளிகளாவே மறைமுகமாக நோக்குகிறது.

இது தான் இந்தியாவின் திரிசங்கு நிலைக்கு காரணம் இவ்வாறான போக்கு மேலும் தொடர்ந்தால் எதிர்காலத்தில் இலங்கையில் நிலமை இன்னும் மோசமாகலாம்.

இந்தியாவின் தயவு இலங்கை தமிழர்களுக்கு நிச்ச்சயம் தேவை. இந்தியா நினைத்தால் இலங்கையில் இடம்பெறும் போரை உடனடியாக கட்டுக்கொள் கொண்டுவர முடியும். எனவே இந்தியா இருதலை கொள்ளி எறும்பாக செயற்படாமல் நேர்வழியில் செயற்படவேண்டும்.

ஆக்கம் வீரகேசரி இணையம்

Thursday, March 27, 2008

இன்னொரு பேச்சை தீர்மானிக்கப் போவது வடபோர் முனையா?

இலங்கையின் வட பகுதியில் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தினரிற்கும் இடையில் இப்போது கடும் சண்டை இடம்பெற்று வருகிறது. இரு தசாப்தகால யுத்தம் இப்போது வடபோர் முனையில் மையம் கொண்டுள்ளது.இது மீண்டும் கிழக்குக்கு நகருமா? வட போர்முனை இரு தரப்புக்கும் நீறுபூத்த நெருப்பாகவே உள்ளது.

கடந்த 2007 ஆரம்பத்தில் வடப்பகுதியில் வன்னியை மீட்கும் நோக்கோடு அரசப்படைகளால் ஆரம்பிக்கப்பட்ட படைநடவடிக்கைகள் இன்னமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறன. வன்னியை மீட்கும் குறிக்கொளோடு மேற்கொள்ளப்பட்டு வரும் படை மேற்கொள்ளல்கள் , வட பகுதியின் பல முனைகள் ஊடாக இடம்பெற்றுவருகின்றன.

யாழ்பாணத்தில் கிளாலி,முகமாலை ,நாகர் கோவில்ஆகிய பகுதிகளிலும் வவுனியா,மன்னார், மணலாறு ஆகிய பகுதிகளிலும் களமுனைகள் திறக்கப்பட்டுள்ளன.

பல மாதங்களாக இரு தரப்பும் இப்பகுதிகளில் மோதி வருகின்றனர்.இராணுவத்தை பொருத்தவரையில் அது விடுதலைப்புலிகளை கள முனைகளுக்குள் வலிந்திழுத்து தாக்குவதாக கூறுகிறது.

விடுதலைப்புலிகளோ மாறாக தாங்கள் தற்காப்பு நகர்வுகளை மாத்திரமே முன்னெடுப்பதாக கூறுகின்றனர். இரு தரப்பும் கனரக ஆயுதங்களை போர் முனைகளில் பயன்படுத்துகின்றனர்.

இரு தரப்பினரதும் யுத்த யுக்திகள் மாறுபட்டதாகவே உள்ளன. இதேவேளை வன்னியில் உள்ள விதலைப்புலிகளின் இலக்குகளை மிகவும் துல்லியமாக தாங்கள் குறிவைத்து வருவதாக இலங்கை விமானப்படை மார்தட்டி வருகிறது, இதில் உண்மை இருக்காலாம். களமுனைகளில் விடுதலைப்புலிகளும் அவ்வபோது தங்களது கனமான சமரினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஆனால் இதுவரையில் இருதரப்பினரும் வட போர்முனையில் வெற்றிக் கனிகளை பறிக்கவில்லை என்பது தான் உண்மை.வட போர் முனைப்பற்றிய கள தகவல்களை இராணுவ தரப்பு எப்போதுமே முந்திக்கொண்டு தங்களுக்கு சாதகமாகவே கூறிவருகிறது. விடுதலைப்புலிகளை பொருத்தவரையில் பல சந்தர்ப்பங்களில் மௌனிகளாக இருந்துள்ளனர்.

சில சந்தர்ப்பங்களில் தாங்கள் பெறுகின்ற வெற்றிகளை உடனடியாகவே அம்பலப்படுத்தியும் விடுகின்றனர்.

விடுதலைப்புலிகளை பொருத்தவரையில் அவர்கள் சந்தர்ப்பம் கிடைக்கும் வரை பதுங்கி இருப்பதையே கைங்கரியமாக கொண்டுள்ளனர். கண்டப்படி தாக்குவது என்பது அவர்களை பொருத்தவரையில் சாத்தியமற்றது. இலங்கை இராணுவத்துக்கு இருக்கின்ற சர்வதேச நாடுகளின் பக்க பலம் விடுதலைப்புலிகளுக்கு இல்லை.எனவே இலங்கை இராணுவம் நவீன ஆயுதங்களுக்குள் மிதக்கிறது என்று கூட சொல்லலாம்.

எது எப்படி இருப்பினும் வடபோர் முனை இரு தரப்புக்கும் இறுக்கமாக இருப்பது போலவே தெரிகிறது.

எனவே வெற்றி ,வெற்றி என்று கூறிக்கொண்டு காலம் இழத்தடிக்கப்படுமா?இப்படி தொடர்ந்தால் வடபோர் முனையில் தொடர்ந்து கொண்டிருக்கும் போர் பாரிய மனித பேரவலங்களுக்கு வழிசமைக்க போகிறது என்பது நிதர்சனமான உண்மையாக உள்ளது.

காலவரையறையின்றி தொடரப்போகும் போரால் என்ன பலன் கிடைக்க போகிறது. எனவே இன்னொரு பேச்சை தீர்மானிக்கபோவது வட போர் முனை என்பது உறுதியாக தெரிகிறது.

வட போர் முனை ஏற்படுத்தும் வெற்றி அல்லது தோல்வி கண்டிப்பாக மற்றொரு பேச்சுவார்த்தியை தீர்மானிக்கும் என்பது ஐயமில்லை. காலவரையறையின்றி தொடரும் போர் ஒருபோதும் யுத்தத்தின் மீது நம்பிக்கையை தோற்றுவிக்காது .இதை தெரிந்து கொண்டுதான் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இனப்பிரசினை தீர்ப்பதற்கு யுத்தம் தீர்வாகாது என்ற கருத்தை முன்னிலைப்படுத்தி வருகின்றனர். இதை யாரும் கேட்டப்படில்லை.இலங்கை இராணுவத்தினரின் ஆட்புல தொகை வடகிழக்கை பூரண கட்டுப்பாட்டில் வைத்திருபத்தற்கு போதாததாகவே இருக்கின்றது. எனவே களமுனைமாற்றங்களால் நிரந்தரமான வெற்றியை இலங்கை இராணுவத்தால் ஈட்டமுடியாது என்பதும் உறுதியாக உள்ளது.களங்கள் நாளந்தம் மாறி கொண்ட போகும் வெற்றி என்பதும் அப்படிதான்?

எனவே இதிலிருந்து இன்னொரு பேச்சுவார்த்தைக்கு அடித்தளம் இடப்போவது வடபோர் முனையே என்பது தெட்ட தெளிவாகிறது. இரு தரப்புக்கும் வட போர் முனை கொடுக்கப்போகும் வெற்றி அல்லது தோல்வி பேச்சு மேசையில் அவர்களை இருத்த போகிறது . அதன் அடிப்படையில் தான் உறுதியான தீர்வினை வலியுறுத்த முடியும்.சம்பந்தப்பட்ட தரப்புக்கள் கவனத்தில் கொள்ளவும்.

ஆக்கம் வீரகேசரி இணையம்

Wednesday, March 26, 2008

தமிழர் தரப்பின் நியாயத்தை எடுத்துரைக்கும் இடதுசாரிகள்

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் சமாதான முறையில் பேச்சு மூலம் தீர்வு காணும் எண்ணம் கொழும்பு அரசுக்கு அறவே கிடையாது என்ற உண்மை சர்வதேச ரீதியிலும் இப்போது அம்பலமாகி, சம்பந்தப்பட்ட தரப்புகளினால் நன்கு உணரப்படும் விவகாரமாகியிருக்கிறது.

போர்வெறித் தீவிரம் மூலம் தமிழர்களை மேலும்மேலும் அடக்கி, ஒடுக்கி ஆள்வதன் வாயிலாக நீதி, நியாயம் கோரும் அவர்களின் சுதந்திர உணர்வைச் சிதைப்பதே கொழும்பின் ஒரே எண்ணம் என்பதும் அப்பட்டமாகி வருகின்றது.

உலகில் உள்ள இடதுசாரி அமைப்புகள் பலவும் சேர்ந்து இம்மாத முற்பகுதியில் அம்ஸ்ரடம் நகரில் நடத்திய சர்வதேச மாநாட்டிலும் இலங்கை அரசின் இந்த நிலைப்பாடு குறித்து தீவிர கவனமும் சிரத்தையும் எடுக்கப்பட்டிருக்கிறது என வெளியாகும் தகவல்கள், இலங்கைத் தீவில் பௌத்த சிங்கள மேலாண்மைப் போக்குடைய ஆதிக்க வெறியர்களின் திமிர்த்தனப் போக்குக் குறித்து உலகம் புரிந்து கொள்ளத் தொடங்கி விட்டது என்பதையே காட்டுகின்றன.
சுமார் முப்பது நாடுகளைச் சேர்ந்த சர்வதேச இடதுசாரி அமைப்புகளின் பிரதிநிதிகள் இலங்கையின் போக்குத் தொடர்பாக அம்ஸ்ரடம் மாநாட்டில் எடுத்த முக்கிய மூன்று தீர்மானங்கள் ஊன்றிக் கவனிக்கத்தக்கவை.

* யுத்தத் தீவிரப் போக்கை நிறுத்தி, அமைதி வழியில் தீர்வுகாண கொழும்பு இணங்கும் வரை இலங்கைக்கு எந்த உதவிகளையும் வழங்கவே கூடாது என அடுத்த வாரம் கூடும் இலங்கைக்கு உதவி வழங்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை வற்புறுத்திக் கோரவேண்டும்.
* யுத்தத் தீவிரத்தை இலங்கை கைவிடும்வரை உலக நாடுகள் இலங்கைக்குக் கடன் உதவிகளைக் கூட வழங்கக் கூடாது என உதவும் நாடுகளைக் கோரவேண்டும்.
* இலங்கையில் யுத்தத்தை நிறுத்தும்படி கோரி இடதுசாரி அமைப்புகள் சர்வதேச, தேசிய ரீதியில் போராட்டங்களை நடத்த வேண்டும். தத்தமது நாடுகளிலும் இத்தகைய ஆர்ப்பாட்டங்கள், பொதுக் கூட்டங்களை மேற்கொள்ளவேண்டும்.
இவ்வாறு அந்த சர்வதேச மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், இலங்கை விவகாரத்தில் கொழும்பின் கொடூரப்போக்கு உலகளாவிய ரீதியில் அம்பலமாகி வருவதை எடுத்துக் காட்டியிருக்கின்றன.

இன மத, மொழி வேறுபாடின்றி அரசியல் பக்கச்சார்பை முக்கியப்படுத்தாமல் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக மனவுறுதியோடு குரல் எழுப்பி வரும் இடதுசாரிகள் தென்னிலங்கையில் இன்னும் இன்றும் உள்ளனர் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் சில மூத்த அரசியல் பிரமுகர்களும் ஓரிரு அரசியல் கட்டமைப்புகளுமாக சில தரப்புகள் இங்கு இருக்கவே செய்கின்றன.

அவற்றில் முன்னிலை வகிக்கும் இடதுசாரி முன்னணியே, மேற்படி சர்வதேச மாநாட்டில் ஈழத் தமிழர்களின் அவலத்தை அம்பலப்படுத்தி, உண்மையை உலகுக்கு உணரவைக்கும் உறைப்பாக உரைக்கும் உன்னதப் பணியை முன்னெடுத்திருக்கின்றது.
ஈழத் தமிழர்களின் நியாயமான அபிலாஷையாக விளங்கும் தமிழர் தேசியம், தமிழர் தாயகம், அவர்களின் சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படைக் கோட்பாடுகளை அங்கீகரித்து அவற்றின் அடிப்படையில் ஒரு தீர்வைக் காண்பதற்கு உலகம் முழுவதும் உள்ள இடதுசாரி மற்றும் முற்போக்கு அமைப்புகள், தொழிற்சங்கங்கள், புத்திஜீவிகள், முற்போக்கு ஊடங்கங்கள் ஆகிய தரப்புகள் ஆதரவு வழங்கவேண்டும் என இடதுசாரி முன்னணி கோரியிருக்கின்றமையும் முக்கிய விடயமாகும்.

ஈழத் தமிழ் மக்கள் தங்கள் தாயக பூமியில் வரலாற்று ரீதியாக அவர்கள் வாழ்ந்து வந்த பாரம்பரிய மண்ணில் அந்நிய சக்திகளின் ஆதிக்கம், தலையீடு இன்றி சுதந்திரமாக, கௌரவமாக வாழவிரும்புகின்றார்கள். இந்த இலங்கைத் தீவைத் தாயகமாகக் கொண்ட பிற தேசிய இனங்களோடு சமத்துவமாகவும், சம உறவோடும் வாழும் அதேசமயம், தமது பண்பாட்டைப் பேணி, தமது பொருளாதாரத்தை மேம்படுத்தி, தமது இன அடையாளத்தையும், தனித்துவத்தையும் பாதுகாத்து, தமது தாயக மண்ணில் தம்மை தாமே ஆளும் சுயாட்சி உரிமையோடு சீவிக்க விரும்புகிறார்கள்.
வேறு இனத்தவர்களை அடக்குவதையோ அல்லது பிற இனத்தவர்களால் அடக்கி ஆளப்படுவதையோ அவர்கள் விரும்பவில்லை.

இந்த உண்மையை சர்வதேச சமூகத்துக்கு உணர்த்துவதன் மூலம் தமிழர்கள் தரப்பில் உள்ள நியாயத்தை எடுத்துரைப்பது ஒரு முக்கிய பணியாகும்.

அக்கடமையை நடுநிலை நோக்கோடு முன்னெடுக்கும் இடதுசாரித் தரப்புகள், இவ்விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினரான தமிழர்களால் மதித்துப் பாராட்டப்படுவார்கள்
நன்றி:- உதயன்

Tuesday, March 25, 2008

வாய்ச்சவடால் அறிக்கைகளால் சர்வதேசத்தை ஏமாற்ற முடியாது

மனித உரிமை மீறல்கள் மற்றும் அவை தொடர்பான விடயங்களில் இலங்கை அரசு மீது சர்வதேச சமூகமும் பன்னாட்டு நிறுவனங்களும் சுமத்திவரும் குற்றச்சாட்டுப் பத்திரங்கள் பெருகிக் குவிந்துகொண்டு போக, அவற்றைச் சமாளிப்பதற்கு இலங்கை அரசுத் தரப்பினால் வெள்ளம்போல பாயவிடப்பட்ட ஏமாற்று அறிவித்தல்களும், அத்தியாயங்கள், அத்தியாயங்களாக வெளியிடப்பட்ட ஊடக அறிக்கைகளும், உச்ச ஸ்தாயியில் முன்னெடுக்கப்பட்ட பிரசார செயற்பாடுகளும் கடைசியில் பயனின்றித் தோற்றுப் போய்விட்டன என்று ஆங்கில வார இதழ் ஒன்று தனது வாராந்த அரசியல் விமர்சனத்தில் அப்பட்டமாகச் சுட்டிக்காட்டியிருக்கின்றது.

ஒட்டுமொத்தத்தில் விடயங்களைத் திசை திருப்புவதற்கு அரசுப் பக்கத்தில் எடுக்கப்பட்ட முயற்சிகள் "பிள்ளையார் பிடிக்கக் குரங்கான கதையாக' போய் முடிந்திருக்கின்றது என்பதை அப்பத்திரிகை நாசூக்காகவும் அதேசமயம் வெளிப்படையாகவும் அம்பலப்படுத்தியிருக்கின்றது.
சம்பந்தப்பட்ட சர்வதேச தரப்புகளுக்கு எதிராக அரசுப் பக்கத்தில் முன்னெடுக்கப்பட்ட பதிலடி நடவடிக்கைகள் இலங்கை அரசின் "நற்பெயரை' காப்பாற்றத் தவறிவிட்டன. தன்னுடைய மனித உரிமை பேணும் சீத்துவத்தைப் பாதுகாப்பதற்காக அரசுத் தரப்பில் முன்வைக்கப்பட்ட புள்ளி விவரங்களும், வாதங்களும் முழுத் தவறானவை என்பது அம்பலமாகியிருப்பது அரசுப் பக்கத்துக்கு விழுந்த பேரடி பேரிடி என அந்தப் பத்திரிகை வெளிப்படுத்தியிருக்கின்றது.
மனித உரிமைகளைப் பேணும் விடயத்தில் இலங்கை அரசின் மிக மோசமான போக்கை அம்பலப்படுத்தும் வகையில் அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் அறிக்கை வெளியானதால் குழம்பிப்போன கொழும்பு, அதைச் சமாளிப்பதாக நினைத்துக்கொண்டு குளறுபடியான போக்கில் செயற்பட்டுத் தன் தலையில் தானே மண்ணை வாரி இறைத்துக் கொண்டிருப்பதை அந்த வார இதழ் விலாவாரியாகப் புட்டுவைத்திருக்கின்றது.

முதலில் கொழும்புக்கான அமெரிக்கத் தூதுவரை அழைத்து இலங்கை வெளிவிவகார அமைச்சர் தமது ஆட்சேபனையை நேரில் தெரிவித்தார். ஆனால் அமெரிக்கா கிறங்கவில்லை. தனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டவை எல்லாம் நீதி, நேர்மையானவை, அவற்றைத்தான் மீளவும் உறுதிப்படுத்துகிறது எனப் பதிலடி தந்தது அமெரிக்கா.
அத்துடன் அடங்கிப்போக விரும்பாத இலங்கை, அமெரிக்காவின் அந்த அறிக்கைக்கு மேலும் தக்கபதில் அளிப்பதாக நினைத்துக்கொண்டு பிழையான அஸ்திரத்தைக் கையில் எடுத்து, இப்போது தனக்குத்தானே வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறது.

""மிகவும் மதிக்கப்படுகின்ற சர்வதேச மனித நேய அமைப்பான செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு, வடக்கு, கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் தவிர்ந்த ஏனைய பகுதிகளுக்கு எல்லாம் சென்றுவர வசதிகொண்ட அமைப்பு. அது, அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் 2007 ஆம் ஆண்டின் இரண்டாம், மூன்றாம் காலாண்டுப் பகுதிகளில் காணாமற் போதலும், விளக்கமளிக்கப்படாத கொலைகளும் வீழ்ச்சி அடைந்திருப்பதை உறுதி செய்திருக்கின்றது. செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவின் புள்ளி விவரக்கணக்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அறிக்கைக்கு மாறாக இத்தகைய சம்பவங்கள் குறைந்து செல்வதை யாழ். மாவட்டத்திலும் இத்தகைய சம்பவங்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்திருப்பதை உறுதிப்படுத்துகின்றது. இலங்கை அரசுக்கும் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவுக்கும் இடையிலான இந்த இரகசியப் பரிவர்த்தனை அறிக்கைப் பரிமாற்றங்களை அமெரிக்கா தனது கொழும்புத் தூதரகம் ஊடாகப் பார்த்தறியும் வசதியைப் பெற்றிருந்தும்கூட அதைக் கவனத்தில் எடுக்காமல், அமெரிக்கா புறக்கணித்தமையும், இவ்வாறு சீரடைந்துவரும் கள நிலைவரத்தை உதாசீனம் செய்து, விடுதலைப் புலிகளின் பிரசார இயந்திரத்துக்குத் தீனி போடும் மோசடி வட்டாரங்களில் அமெரிக்கா தங்கிச் செயற்படுகின்றமையும் ஆழ்ந்த கவலைக்குரியவை.'' என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு பொரிந்து தள்ளியது.

இலங்கையின் இந்த அறிவிப்பு செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவின் சீற்றத்துக்கு வழி செய்து விட்டது. "மனித நேயப் பணியில் ஈடுபடும் மதிப்பார்ந்த அமைப்பு' என்று இலங்கைத் தரப்பினாலேயே அதன் அறிக்கையில் போற்றப்பட்ட செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு, இலங்கையின் இந்த அறிவிப்பைக் கடுமையாகச் சாடி கொழும்பின் முகத்திரையைக் கிழித்து உண்மையை அம்பலப்படுத்தியிருக்கின்றது.

பகிரங்க விவாதத்தில் ஈடுபட்டு தரப்புகளோடு அதிருப்திகளை நீடிக்க விரும்பாத ஓர் அமைப்பாக இருந்தபோதிலும் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு இவ்விடயத்தில் உறுதியான ஒரு நிலைப்பாடு எடுத்து, நிலைமையைத் தெளிவுபடுத்தி, இலங்கைத் தரப்பின் முகத்தில் கரி பூசிவிட்டது.

* செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவின் இரகசிய அறிக்கையைத் தவறான வகையில் வழிப்படுத்தும் விதத்தில் இலங்கை பகிரங்கப்படுத்தியமையைக் கடுமையாக ஆட்சேபிக்கிறோம்.
* இலங்கை அரசுத் தரப்புடன் மட்டும் பரிமாறப்படும் இரகசிய அறிக்கையை பிற தரப்புடனும் இலங்கை பகிர்ந்து கொள்வதும், அதைப் பகிரங்கப் படுத்துவதும் விசனத்துக்குரியவை.
* சட்டவிரோதக் கொலைகளும், காணாமற்போகச் செய்தலும் இலங்கையில் இடம்பெறும் கோரமான மனித உரிமை மீறல் பாணிகளில் அடங்கும். அவை கட்டாயம் நிறுத்தப்பட வேண்டும்.
* செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு தனது இரகசிய அறிக்கைகள் மூலமும் நேரடி உரையாடல்கள் மூலமும் இவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவரப் பாடுபடும். இக்காரணத்தால் இலங்கையில் இடம்பெற்றுள்ள பல எண்ணிக்கையிலான காணாமற்போதல் விடயம் குறித்துப் பகிரங்க விவாதத்தில் இறங்க செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு விரும்பவில்லை.

இப்படித் தெரிவித்து செஞ்சிலுவைச் சர்வதேசக்குழு கொழும்பிலும், ஜெனிவாவிலும் வெளியிட்ட அறிக்கைகளையடுத்து கப்சிப்பென்று அடங்கிப்போயிருக்கிறது அரசுத் தரப்பு.
சர்வதேச மட்டத்தில் போட்டுக்கொடுத்து பொல்லைக் கொடுத்து வாங்கிக்கட்டியிருக்கிறது இலங்கை.

களத்தில் மனித உரிமைகளைப் பேணுவதில் பற்றுறுதியும் திடசங்கற்பமும் கொள்ளாமல், தனது படைகள் மற்றும் ஒட்டுக்குழுக்களைக் கொண்டு கொடூர அராஜக செயல்கள் தலைவிரித்தாடத் தாராளமாக அனுமதித்து, அதற்கு இசைவு தந்துவிட்டு, வெறும் அறிக்கைகள், அறிவிப்புகள், வாய்ச்சவடால்கள் மூலம் சர்வதேசத்தைச் சமாளிக்கலாம் எனக் கொழும்பு முட்டாள் தனமாக எண்ணுமானால், அதற்கு இந்த அனுபவம் தகுந்த பாடமாக அமையும்.

நன்றி உதயன்

Monday, March 24, 2008

மீண்டும் இந்தியா

முன்னர் சிறுவர்களுக்காக வெளிவந்த ~அம்புலி மாமா| இதழில் மீண்டும் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறுவதாக ஒரு கதை வந்த ஞாபகம் இருக்கிறது.

எனது சிறுவயதில் அதனை படித்திருக்கிறேன். அந்த காலத்தில் பெரும்பாலும் அம்புலிமாமாவை படிக்காத சிறுவர்களை காண்பது கடினம். அந்தளவிற்கு ~அம்புலிமாமா| சிறுவர்கள் மத்தியில் பிரபல்யம் பெற்றிருந்தது.

விக்கிரமாதித்தியன் என்ற மன்னனிடம் கதைகளை கேட்டுவரும் வேதாளம், அந்த கதைகளில் சற்றும் திருப்தி கொள்ளாமல் மீண்டும், மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொள்வதும், அதனை கீழிறக்குவதற்கு சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தியன் மீண்டும், மீண்டும் கதைகள் சொல்வதுமாக நீளும் அந்த வேதாளக் கதை.

தற்போது மீண்டும் இந்தியா இலங்கை அரசியலில் அதிகளவில் தலையீடு செய்ய முயல்வதாக வெளிவந்த செய்திகளை படித்த போது சிறுவயதில் படித்த அந்த வேதாளத்தின் கதைதான் எனது ஞாபகத்திற்கு வந்தது.

ஒரு வகையில் இந்தியாவின் இலங்கை அரசியல் மீதான தலையீடு என்பது, குறிப்பாக தமிழர் விடுதலை அரசியல் மீதான குறுக்கீடு என்பது, அந்த வேதாளத்தின் கதை போன்றதுதான். தமிழர் தேசம் தனது தரப்பு நியாயங்களை தொடர்து சொல்லி வருவதும் ஆனால் இந்தியாவோ, மீண்டும் மீண்டும் சிங்களத்தின் முதுகில் ஏறிக்கொள்வதுமாக தொடர்கிறது இந்தியாவிற்கும் நமக்கும் இடையிலான பிரச்சினைகளின் கதை.

2006 இன் இறுதிப் பகுதியிலிருந்து யுத்த நிலைமைகள் தீவிரமடைந்தன. சிங்களத்திற்கும் தமிழர் தேசத்திற்குமான புரிந்துணர்வு ஒப்பந்தம் அமுலில் இருக்கும் போதே சிறிலங்கா அரசு பிரகடனப்படுத்தப்படாத யுத்தம் ஒன்றை விடுதலைப் புலிகள் மீது தொடுத்தது.

இறுதியில் இவ்வருட ஆரம்பத்தில் உத்தியோக பூர்வமாகவே போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகிக் கொண்டதன் மூலம், சிறிலங்கா அரசு தனது போர் பிரகடனத்தை பகிரங்கப்படுத்தியது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் அது நோர்வேயின் அனுசரணையுடனான புரிந்துணர்வு ஒப்பந்த காலத்தை, ஒரு அவதானிப்பாளர் நிலையிலேயே அணுகியது. ஆனாலும் இந்தியாவின் கடந்த கால அரசியல் அணுகுமுறைகளை கருத்தில் கொண்டு பார்ப்போமானால், நோர்வேயின் மத்தியஸ்த காலத்திலும் இந்தியா தனக்கே உரித்தான ஒரு பாதாள அரசியல் அணுகுமுறையையும் கைக்கொண்டிருக்கும் என்ற முடிவுக்கு நாம் வரமுடியும்.

விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசிற்கும் இடையிலான முறுகல் நிலை தீவிரமடையத் தொடங்கியதும் இந்தியா படிப்படியாக தனது பாதாள நிலையை தவிர்த்து வெளிப்படையாகவே களமிறங்கத் தொடங்கியது.

தற்போது சிறிலங்கா இராணுவத்திற்கான பயிற்சி, புலனாய்வுத் தகவல் பரிமாற்றம், பொருளாதார ரீதியில் மிக மோசமான வீழ்ச்சியை நோக்கி சரிந்து கொண்டிருக்கும் அரசிற்கு முண்டு கொடுத்தல் மற்றும் வர்த்தக முதலீடு என பல வழிகளிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ள முயன்று வருகிறது இந்தியா.

தற்போது இந்தியா இலங்கை அரசியலில் அதிக ஈடுபாட்டைக் காட்டுவதற்கு வெளித் தெரியக்கூடிய இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

ஒன்று தனது பிராந்திய நலன்களுக்கு சவால் விடும் வகையில் அந்நிய சக்திகள் இலங்கை அரசியலில் தலையீடு செய்வதை தடுத்தல், மற்றையது குறிப்பாக சமீப காலமாக சீனா அதிகளவில் சிறிலங்கா அரசுடன் நெருங்கி வருவதை தடுத்தல்.

வெளித் தெரியக்கூடிய வகையில் இந்த இரண்டு காரணங்கள்தான் நமக்கு புலப்படுகின்றன. முதலாவது காரணத்தின் அடிப்படையில் நிகழ்ந்ததுதான் இந்திய-இலங்கை ஒப்பந்தம் என்பதை நம்மில் பலரும் மறந்திருக்க மாட்டார்கள்.

இந்த இடத்தில் நாம் எழுப்ப வேண்டிய கேள்வி, அந்நிய சக்திகளின் தலையீடுகளை தடுக்கும் நோக்கில்தான் தற்போது இந்தியா அதிகளவில் இலங்கை அரசியில் தலையீடு செய்ய முயல்கின்றது எனின், நோர்வேயின் மத்தியஸ்த காலத்தில் ஏன் இந்தியா தன்னை பார்வையாளராக சுருக்கிக் கொண்டது?

உண்மையில் நோர்வேயின் மத்தியஸ்த முயற்சிக்கு பின்னர்தான் இலங்கை அரசியலில் அமெரிக்க, ஜரோப்பிய தலையீடுகள்; முன்னர் எப்போதுமில்லாதளவிற்கு அதிகரித்தன. அதற்கு முன்னர் இலங்கையின் அரசியல் குறிப்பாக தமிழர்களின் பிரச்சனைகள் புலம்பெயர்ந்த தமிழ் மக்களால்தான் அதிகம் ஜரோப்பிய மயப்படுத்தப்பட்டது. ஆனால் நோர்வேயின் மத்தியஸ்த முயற்சிக்கு பின்னர்தான் ஈழத் தமிழர்களின் பிரச்சனைகள் அமெரிக்க, ஜரோப்பிய அரசியல் மயப்பட்ட பிரச்சனையாக மாறியது. தவிர நோர்வேக்கு பின்னரான இக்காலகட்டம் தமிழர் விடுதலை அரசியலின் இராஜதந்திர பரிணாமத்திற்கான காலமாகவும் மாறியது.

எனவே அந்நிய சக்திகளின் தலையீட்டை தடுப்பதுதான் இந்தியாவின் நோக்கமாயின் அது நிச்;சயமாக நோர்வே பிரசன்னத்தின் போதே நிகழ்ந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு ஒன்றும் நிகழவில்லை. மாறாக பேச்சுவார்த்தைக்கான கதவுகள் மூடப்பட்ட பின்னர்தான் இந்தியா தனது கைவரிசைகளை காட்ட முற்படுகின்றது.

இங்கு நாம் ஒரு தெட்டத் தெளிவான உண்மையை தரிசிக்க முடியும். இலங்கை அரசியலில் தனக்கு சாதகமான சூழல் வரும் வரைக்கும் இந்தியா மிகவும் அமைதியாக காத்திருந்திருக்கிறது என்பதுதான் அந்த உண்மை.

தமிழர் தேசத்தின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதில் வேறு எவரைக் காட்டிலும் தடையாக இருக்கப்போவது தானே என்பதை இந்தியா ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நிரூபித்து வந்திருக்கிறது.

மிகவும் சமீபத்தில் கூட அதனை இந்தியா நிரூபித்திருந்தது. 2000 இல் பலாலி இராணுவத் தளத்தை நோக்கி புலிகள் முன்னேறியது போது இந்தியா தனது படைபலத்தை காட்டி அச்சுறுத்தியது. பாகிஸ்தான் அரசு இராணுவத் தளபாடங்களை வழங்குவதற்கு அனுசரணையாக இருந்தது.

நோர்வேயின் மத்தியஸ்த காலத்தில் ஜே.வி.பியின் அரசியல் நிகழ்சி நிரலின் பின்பலமாக தொழிற்பட்டது. இந்தியாவின் அரசியல் தலையீட்டை சுருக்கமாக சொல்வதானால், தமிழ்த் தேசிய இறைமையை அரசியல் அர்த்தத்தில் இல்லாதொழிப்பதுதான் இந்தியாவின் அனைத்து நிகழ்ச்சி நிரல்களினதும் உள்ளடக்கமாக இருக்கின்றது. ஆனால் இதில் இந்தியா தொடர்ந்தும் அவமானகரமான தோல்விகளையே சந்தித்து வருகின்றது.

இந்த இடத்தில் அது சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தியனாகவும் தொழிற்பட்டு வருகிறது. இதிலுள்ள சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால் ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்தியா வேதாளமாகவும், விக்கிரமாதித்தியனாகவும் தொழிற்படுவதுதான்

நான் மேலே குறிப்பிட்ட இந்திய தலையீட்டிற்கான காரணங்கள் பொதுவாக இந்திய நலனை பாதுகாத்தல் என்ற அர்த்ததிலேயே முதன்மை பெறுகின்றது. ஆனால் இதிலுள்ள முரண்நகை அரசியல் என்னவென்றால் எப்போதுமே இந்தியா தனது பிராந்திய நலன்களை பாதுகாத்துக் கொள்வதற்கான பலிக்கடாக்களாக கையாள்வது ஈழத் தமிழர்களைத்தான்.

எனவே மீண்டும் நாம் ஒரு கேள்விக்கு செல்லலாம், இந்தியா தனது பிராந்திய நலன்களை பாதுகாத்துக் கொள்வதற்கு ஏன் சிங்களத்தை பலிக்கடாவாக கருதவில்லை? அது ஏன் மீண்டும், மீண்டும் தமிழ்த் தேசிய இறைமையின் மீதே மேலாதிக்கம் செலுத்த முற்படுகின்றது? இதில் இந்திய கொள்கை வகுப்புப் பிரிவினருக்கு இருக்கும் பிரத்தியேக ஈடுபாடு என்ன?

சமீபத்தில் இந்திய தலையீடு குறித்து இந்தியாவினை எச்சரிக்கும் தொனியில் எழுதியிருந்த முன்னாள் ‘றோ’ அதிகாரியும் உத்திகள் தொடர்பான கற்கைகள் அமைப்பின் (னுசைநஉவழச ழக வுழிiஉயட ளுவரனநைள) இயக்குநருமான இராமன் தற்போதைய இந்திய தலையீட்டிற்கான இரண்டு காரணங்களை குறிப்பிட்டிருக்கிறார். ஒன்று, ராஜீவ் கொலையாளிகளுக்கு தண்டனை அளிக்க வேண்டுமென இந்தியா கருதுகிறது. மற்றையது, பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைளில் இந்தியா தொடர்ந்தும் ஆற்றலுடன்தான் இருக்கிறது என்பதை நிரூபிப்பது. உண்மையில் இராமன் குறிப்பிடும் இந்த இரண்டுமே மிகவும் மேலோட்டமானது என்பதுடன் இந்திய தலையீட்டில் மறைந்து கிடக்கும் காரணங்களை திட்டமிட்டு மறைக்கும் நோக்கம் கொண்டதாகவும் தெரிகிறது.

ஆரம்பத்தில் இந்தியாவின் இலங்கை அரசியல் மீதான மேலாதிக்கம் என்பது, சிங்கள ஆட்சியாளர்களை எப்போதுமே தனது கட்டுபாட்டுக்குள் வைத்துக் கொள்வதும், சிங்கள ஆட்சியாளர்கள் தனது எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் செல்லும் போது அதனை கட்டுப்படுத்துவதற்கான வலுவான ஆதரவுத் தளமொன்றை இலங்கையில் வைத்திருப்பதும் என்ற இரண்டு நோக்கங்களைக் கொண்டதாக இருந்தன.

இந்த பின்புலத்தில்தான் ஈழப் போராளிக் குழுக்களுக்கு பயிற்சியளித்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முயன்றது. விடுதலைப் புலிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து இயக்கங்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதில் இந்தியா வெற்றியும் பெற்றது. 1987 இல் இந்திய-இலங்கை ஒப்பந்தம் என்ற பேரில் சட்ட ரீதியாகவே இலங்கை அரசியலில் நேரடியாகத் தலையிடும் அதிகாரத்தைப் பெற்றது. இறுதியில் மிகவும் அவமானகரமான தோல்வி அனுபவங்களுடன் இந்தியா வெளியேறியது.

அன்று விடுதலைப் புலிகள் குறித்து மிகவும் சாதாரணமான மதிப்பீட்டைக் கொண்டிருந்த இந்திய உளவுப்பிரிவான ‘றோ’ தனது தோல்வி அனுபவங்களில் புலிகள் தொடர்பான தமது மதிப்பீடையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. விடுதலைப் புலிகள் ஒருபோதும் பலம்பொருந்திய இந்தியப் படைகளுடன் மோத முற்படமாட்டார்களென்றும் அவர்களை சாதாரணமாக அச்சுறுத்தி அடிபணிய வைத்துவிடலாம் என்றுமே இந்திய கொள்கை வகுப்பினர் கருதியிருந்தனர்.

இந்த அடிப்படையில்தான் தீட்சித் 'எனது சுங்கான் பற்றி முடிவதற்குள் உங்களை இருந்த இடம்தெரியாமல் ஆக்கிவிடுவோம்" என புலிகளின் தலைவர் பிரபாகரனை எச்சரித்தார்.

ஆனால் புலிகளோ இந்தியப் படையுடன் மோதியது மட்டுமல்லாமல், இந்தியாவின் இராணுவ நகர்வுகளின் வரலாற்றிலேயே ஒரு கெரில்லா அணியிடம் படுமோசமான தோல்வியைச் சந்தித்த அனுபவத்தையும் இந்தியப் படைகளுக்கு வழங்கினர். இந்திய ஆய்வாளர்களின் கருத்துப்படி 1962 சீன - இந்திய எல்லலைப்புற யுத்தத்திற்கு பின்னர் இந்தியா அடைந்த படுமோசமான வரலாற்றுத் தோல்வி இலங்கையில் புலிகளிடம் தோல்வியடைந்ததுதான் என குறிப்பிடுகின்றனர். எனவே இந்த இடத்தில் மீண்டும் ஒரு கோள்வி தவிர்க்க முடியாததாக இருக்கின்றது.

தொடர்ந்தும் இந்தியா தனது பிராந்திய மேலாதிக்க அரசியலின் பலிக்கடாக்களாக, ஈழத் தமிழர்களை கையாளமுற்படும் கொள்கை முன்னெடுப்பின் பின்னணியில், அதன் கடந்த கால அவமானகரமான தோல்வி அனுபவம் செல்வாக்கு செலுத்தி வருகின்றதா? அதுவே இந்தியா தொடர்ந்தும் திரைமறைவிலும், பகிரங்கமாகவும் விடுதலைப் புலிகள் பலப்படுவதையும், தமிழர்கள் தமது உச்ச இலக்கை அடைவதையும் எப்பாடுபட்டேனும் தடுத்துவிட கங்கணங்கட்டிக் கொண்டிருப்பதன் பின்னணியா?

நான் இப்படி ஒரு கேள்வியை எழுப்புவதற்கு காரணங்கள் உண்டு. புலிகளுக்கும் சிறிலங்கா அரசிற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையாக இருந்தது இராணுவ வலுச்சமநிலையாகும்.

ஒருவரை ஒருவர் வெல்ல முடியாதவாறான இராணுவ வலுவைக் கொண்டிருக்கின்றனர் என்பதே இராணுவ வலுச்சமநிலையின் அடிப்படையாகும். உண்மையில் ஒப்பந்த காலத்தில் இந்தியா இலங்கையில் அமைதி நிலவ வேண்டுமென்பதில் தான் அக்கறையுடன் இருப்பது போன்று பாசாங்கு காட்டினாலும், இராணுவ வலுச்சமநிலை அடிப்படையிலான பேச்சுவார்த்தையை விரும்பியிருக்க வாய்பில்லை. ஏனெனில் இராணுவ வலுச்சமநிலை வாதமானது விடுதலை இராணுவத்திற்கு சர்வதேச ரீதியான அங்கீகாரத்தை மறைமுகமாக வழங்கி விடுகின்றது.

இதனை நிச்சயமாக இந்தியா விரும்பியிருக்காது. அதேவேளை சிறிலங்கா படைத்தரப்பு கணிப்பாளர்கள் போலல்லாது இந்தியப் புலனாய்வுதுறையினர் புலிகள் குறித்தும், குறிப்பாக அதன் தலைவர் பிரபாகரன் குறித்தும் துல்லியமான சில கணிப்புக்களை கொண்டிருப்பர்.

புலிகள் இதனை ஒரு தந்திரோபாயமாக கைக்கொள்வர் என்ற பயம் இந்தியாவிற்கு நிச்சயமாக இருந்திருக்கும். எனவே இவற்றை கூட்டிக் கழித்து பார்த்தால், இலங்கை அரசியலில் மீண்டும் மோதல் சூழல் வலுவடைய வேண்டுமென்பதில் இந்தியா மிகுந்த ஈடுபாட்டைக் கொண்டிருந்தது என்ற முடிவுக்கே நாம் வரமுடியும்.

இவ்வாறு நான் குறிப்பிடுவதற்கு பிறிதொரு முக்கியமான காரணமும் உண்டு. இந்தியா தன்னைச் சுற்றி இருக்கும் நாடுகளில் சுமூகமான நிலைமை இருக்க வேண்டும் என்பதையே தனது பிராந்திய நலனுக்கு சாதகமான விடயமாக குறிப்பிடுவதுண்டு. அதேவேளை இந்தியா அந்த காரணத்தினையே தன்னை சுற்றி இருக்கும் நாடுகளில் தலையீடுவதற்கான வாய்பாகவும் பயன்படுத்திக் கொள்கின்றது.

இலங்கையில் ஒரு முரண் அற்ற சூழல் நிலவ வேண்டும் என்பதே தனது அக்கறையென இந்தியா அடிக்கடி கூறிவந்தாலும் அது தனது மேலாதிக்க கண்காணிப்பின் கீழே நிகழ வேண்டுமென்றே இந்தியா கருதுகிறது. ஆனால் நோர்வேயின் மத்தியஸ்த காலத்தில் பெருமளவிற்கு இந்தியா தலையீடுவதற்கு வாய்பற்ற சூழலே காணப்பட்டது, ஏற்கனவே கையை சுட்டுக்கொண்ட அனுபவத்தைக் கொண்ட இந்தியாவால் அதிகம் அந்தச் சூழலில் தலையீடு செய்ய முடியவி;ல்லை.

இன்று மீண்டும் இலங்கை அரசியல் யுத்தத்திற்கு மாறியிருக்கும் சூழலில் முரண் தணிப்பு என்ற பேரில் மீண்டும் தனது வலுவான தலையீடுகளை செய்வதற்கு இந்தியாவிற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த வாய்பிற்காகவே இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்த காலத்தில் மிகவும் சாதுவாக நடந்து கொண்டது.

இன்று இந்தியாவின் வலுவான தலையீடுகளின் பின்புலமாக இருப்பது இந்தியா சமீப கால நிலைமைகள் தொடர்பாக அச்சப்படுவதுதான்.

தற்போதைய சூழலில் இந்தியா இரண்டு விடயங்கள் குறித்து அச்சப்படுகின்றது. ஓன்று, சிறிலங்கா அரசு தொடர்பாக சர்வதேச சமூகத்தின் மத்தியில் தோன்றியிருக்கும் பாதமான அபிப்பிராயங்கள். மற்றையது கள நிலைமைகள் தொடர்பாக இந்தியா கொண்டிருக்கும் இராணுவ நிலைப்பட்ட சுய மதிப்பீடுகள். சர்வதேச அளவில் புதிய தேசங்களின் உதயம் தொடர்பான விவாதங்கள் அதிகரித்து வருகின்றன. கொசோவோ சுதந்திர அரசு அங்கீகாரத்தின் பின்னர் தனியரசு குறித்த விவாதங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்தச் சூழலில் சிறிலங்கா அரசு நாளுக்கு நாள் சர்வதேச அளவில் மதிப்பிழந்து வருகின்றது. இந்த இரண்டு விடயமும் ஒரு நேர்கோட்டில் சந்தித்து விடுமோ என இந்தியா பயப்படுகின்றது. அதேவேளை கிழக்கில் கருணா விடயத்தைத் தொடர்ந்து சிறிலங்கா இராணுவம் பெற்ற வெற்றிகளை இந்தியா கருத்தில் கொண்டாலும் கள நிலைமைகள் தொடர்பில் சிறிலங்கா படைத்தரப்புகளின் மத்திபீடுகளை பெருமளவு இந்தியா கருத்தில் கொள்ளவில்லை.

கள நிலைமைகள் தொடர்ந்தும் விடுதலைப் புலிகளுக்கு சார்பாக இருப்பதாகவே இந்தியா அச்சப்படுகின்றது. ஏனெனில் சிறிலங்கா படைத்தரப்பு கொள்கையாளர்கள் போன்று உணர்ச்சிவசப்பட்ட ஆய்வுகளை இந்திய படைத்துறை ஆய்வாளர்கள் கொண்டிருக்கவில்லை.

ஓப்பந்த காலம் விடுதலைப் புலிகளின் போராற்றலை பெருமளவு பாதிக்கும் என்ற ஆய்வுகள் சில சர்வதேச அனுபவங்களின் வழியாக எதிர்பார்க்கபட்டிருந்தாலும��
�, கிழக்கிலிருந்து புலிகள் பின்வாங்கியதை தவிர படைக் கட்டமைப்புக்களிலோ அல்லது புலனாய்வு தந்திரோபாயங்களிலோ புலிகள் சிறிதளவு தளர்வுகளைக்கூட காட்டவில்லை என்பதை இந்தியா மிகவும் சரியாகவே மத்திப்பிட்டிருக்கும். ஏனென்றால் புரிந்துணர்வு ஒப்பந்தம் சிக்கலுக்குள்ளாகிய பின்னர்தான் புலிகளின் விமானப்படை களத்தில் இறங்கியது. வெற்றிகரமாக கொழும்பிலேயே தாக்குதல்களை மேற்கொண்டது.

இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அனுராதபுர விமானப்படைத்தளம் மீதான தாக்குதல் சமீபத்தில்தான் நடந்து முடிந்தது. இவையெல்லாம் புலிகளின் இராணுவ திட்டமிடல் ஆற்றலையும், புலனாய்வு பரிவர்த்தனை ஆற்றலையும் துலாம்பரமாக்கியது.

இவ்வாறான பின்னணியில்தான் இந்தியாவின் தலையீடடினை நாம் நோக்க வேண்டியிருக்கிறது. விடுதலைப் புலிகளின் தற்போதைய தாக்குதல் உத்திகள் எதிரியை களைப்படையச் செய்தல் என்ற அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது.

பலமான படையணிகளையோ பாரியளவிலான போர் முன்னெடுப்புக்களையோ விடுதலைப் புலிகள் களத்தில் பிரயோக்கிக்காத சூழலில் புலிகளின் தாக்குதல் திறனை வெறுமனே வெற்றி கீதங்களால் சிறிலங்கா அரசு மறைத்து வருவதையிட்டு இந்தியா மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் இருக்கிறது.

புலிகள் பாரியளவிலான நகர்வுகளை முன்னெடுத்ததால் களநிலைமைகள் முற்றாகவே புலிகளுக்கு சாதகமாக மாறிவிடும் என இந்தியா கருதுகிறது. எனவே இந்த சந்தர்ப்பத்தில் கிழக்கில் ஏற்ப்பட்டிருக்கும் புலிகளுக்கு பாதகமான சூழல் மற்றும் அதிகம் புலிகள் வடக்கில் கவனம் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் என்பவற்றை இடைவெளியாக பயன்படுத்திக் கொண்டு கிழக்கில் தனக்கு சார்பான சூழலை நீண்டகால நோக்கில் கையாள இந்தியா தீவிரமாக முனைந்து வருவதன் வெளிப்பாடுதான் இந்தியாவின் தற்போதைய அதிகரித்த தலையீடுகளின் அரசியல்.

இந்தியாவின் கடந்த கால அனுபவம் இந்தியாவால் நேரடியாக விடுதலைப் புலிகளை எதிர்கொள்ள முடியாதளவிற்கு சில மட்டுப்பாடுகளை கொண்டிருக்கிறது.

விடுதலைப் புலிகளின் அரசியலை நன்கு அறிந்து வைத்திருக்கும் இந்தியா, ஒரு கட்டத்திற்கு மேல் தான் தலையீடுவது விடுதலைப் புலிகளை மீண்டும் நேரடியாக சந்திக்க வேண்டிய சூழலை ஏற்படுத்திவிடும்; என்பதிலும் கவனம் கொண்டிருக்கிறது. அது மீண்டும் தனது சர்வதேச செல்வாக்கிற்கு இழுக்காகி விடும் என இந்தியா கருதுகிறது.

ஆகவே வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நீண்டகால நோக்கில் தனது நலன்களை அடைந்து கொள்வதற்கான தந்திரோபாயங்களிலேயே இந்தியா கவனம் கொள்கின்றது. எனவே மீண்டும், மீண்டும் நாம் இந்தியாவை எதிர்கொள்ள வேண்டிய சந்தர்ப்பங்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கும் என்பதிலேயே நாம் கவனம் கொள்ள வேண்டும்.

இந்தியா தொடர்பான கதை பழைய கதைதான், ஆனால் புதிய காட்சிகள் இணையும் போது அது மீண்டும் புதிய கதை போன்ற தோற்றத்தை பெறுகின்றது. இப்பொழுது மீண்டும் சில புதிய காட்சிகளுடன் இணைந்திருக்கும் இந்தியா புதிய கதையாக நம்முன் வலம் வருகிறது.

இன்றைய சூழலில் இது குறித்த விரிவான உரையாடல்கள் நமக்கு அவசியம். இது குறித்த உரையாடல்களை நூண்டுவதில் இக்கட்டுரை பயன்பட வேண்டுமென்பதே எனது எதிர்பார்ப்பாகும்.

நன்றி: -தாரகா- தினக்குரல் வார ஏடு (23.03.08)

Sunday, March 23, 2008

தமிழர்களின் தன்மானத்திற்கு அறைகூவல் இனியும் தயக்கம் ஏன்?

தமிழகத்தின் மய்யத்தில் இருக்கும் தமிழர்களின் பாரம்பரியம் மிக்க சிதம்பரம் நடராசர் கோயிலில் மாபெரும் போராட்டத்திற்கு பின் ஒரு வழியாக தேவாரம் பாடப்பட்டது.

உண்மை.. சிற்றம்பல மேடையில் தேவாரம் முழங்கியது. ஆனால் இது உண்மையிலேயே தமிழ் வழிபாட்டு ரிமைக்குக் கிடைத்த வெற்றியா?

சிதம்பரம் நடராசர் கோவில் பல நூற்றாண்டு பழமையானது. பன்னெடுங் காலமாக சைவர்களுக்கு (சிவனை வழிபடுபவர்கள்) இதுதான் முக்கிய வழிபாட்டு தலமாக இருக்கிறது.

வரலாற்று ரீதியாகவும் சிதம்பரம் கோயில் முக்கியத்துவம் வாய்ந்தே இருந்தது. சோழ மன்னர்களின் முடி சூட்டு விழா சிதம்பரம் கோயிலிலேயே நடந்ததாக வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன. பிற்காலச் சோழ மன்னர்களான முதலாம் ஆதித்தனும் அவனைப் பின் தொடர்ந்து முதலாம் பராந்தகனும் சிதம்பரம் கோயிலுக்குப் பொன் கூரை வேய்ந்தனர் என்றும் வரலாறு கூறுகிறது.

சோழ மன்னர்கள் மட்டுமல்லாது பாண்டிய மன்னர்களும், நாயக்க மன்னர்களுமே சிதம்பரம் கோவிலுக்கு முக்கயத்துவம் அளித்து பல மானியங்களையும் புனரமைப்புப் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.

சிவபக்தர்களில் முதன்மை யானவர்களாக கருதப்படும் நாயன்மார்களில் முக்கியமானவர்களான திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர் ஆகிய நால்வருமே சிதம்பரத்தைப் பற்றி பாடியுள்ளனர்.

இன்று வரை எங்கு சிவ பூசை நடந்தாலும் பூசை தொடங்குவதற்கும் முன்னும் முடித்தப் பிறகும் திருச்சிற்றம்பலம் என்று சொல்லியே நடத்துவது வழக்கமாக உள்ளது. அந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்த தலம் அது.

அதிலும் குறிப்பாக ஈழத் தமிழர்கள் தங்கள் வாழ்வில் ஒரு முறையேனும் சிதம்பரம் கோயிலைத் தரிசிப்பதை முக்கியமாக கருதுகின்றனர்.

இந்த அளவிற்கு சிதம்பரம் கோயிலுக்கு முக்கியத்துவம் அளித்த இன்று வரை தொடர்ந்து அளிக்கக் கூடிய சிவ பக்தர்கள் யாரும் வட நாட்டினரோ அல்லது வேற்று மொழியினரோ அல்ல. அனைவருமே சுத்தமான தமிழர்கள். வட நாட்டில் சிவனை வழிபடுபவர்கள் முக்கியமாகக் கருதுவது வடக்கில் காசியையும் தெற்கில் இராமேசுவரத்தையும் மட்டுமே.

ஆனால், இவ்வாறு தமிழர்கள் போற்றி துதிக்கும் நடராசனின் காதில் தமிழ் விழுந்தால் அது அந்த நடராசனைத் தீட்டுப் படுத்திவிடும் என்று ஒரு கும்பல் கூச்சலிடுகிறது. அதை பல நூற்றாண்டுகளாக சாதித்தும் வருகிறது.

ஏறத்தாழ ஏழாம் நூற்றாண்டு காலத்தில் சிதம்பரத்தில் குடியமர்ந்த தீட்சிதர்கள், இன்று சிதம்பரம் கோவிலே சட்டப்படி தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று உரிமை கொண்டாடுகின்றனர். அதில் தாங்கள் வைத்ததே சட்டம் எனவும், வேறு எந்த சட்டமும் அங்கு செல்லுபடியாகாது எனவும் துணிச்சலாகக் கூறுகின்றனர்.

சிதம்பரம் கோயில் ஒரு பொதுக் கோயில் என்பதும் அதன் மீது தீட்சிதர்களுக்கு எந்த சட்டப்படியான அதிகாரமும் கிடையாது என்றும், இக்கோயில் தீட்சிதர்களின் சொந்த சொத்து என்பதற்குத் துளியளவு கூட ஆதாரம் கிடையாது என்றும் 1888-இலும், 1951-இலும் நீதிமன்றத் தீர்ப்புகள் வெளிவந்துள்ளன. அதிலும் 1888-இல் சர். டி. முத்துசாமி அய்யர் என்ற பார்ப்பனரும், 1951-இல் சத்தியநாராயண ராவ், ராஜ கோபாலன் என்ற இரண்டு பார்ப்பன நீதிபதிகளை கொண்ட டிவிசன் பெஞ்சுமே இத்தீர்ப்புகளை வழங்கியுள்ளன.

1922-இல் இந்து அறநிலையப் பாதுகாப்புத்துறை நீதிக்கட்சி அரசால் ஏற்படுத்தப்பட்டு அது 1925-இல் செயலாக்கத்திற்கு வந்த உடனேயே தீட்சிதர்கள் இந்த சட்டம் சிதம்பரம் கோயிலுக்குச் செல்லாது என வாதிடத் தொடங்கிவிட்டனர். ஆனால் அவர்கள் வாதம் தவறு என்று நீதிமன்றம் தெளிவுற உரைத்த பின்னும், 60 ஆண்டுகளுக்கு பின்னரும் இன்னமும் சிதம்பரம் கோயில் இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையின் கீழ் கொண்டுவரப்படவில்லை.

முழுமையாக தீட்சிதர்களின் நிருவாகத்தின் கீழ் இருக்கும் சிதம்பரம் கோயிலில் அம்பாள் கழுத்திலிருந்த தாலி உட்பட கோயிலுக்குச் சொந்தமான நகைகள் மட்டுமல்ல சோழ மன்னர்கள் வேய்ந்த பொன் கூரையின் பகுதிகளே காணாமல் போய்விட்டதாக இதே தீட்சிதர்கள் பல முறை அறிவித்திருக்கின்றனர்.

நிலைமை இப்படியே தொடர்ந்தால், ஒரு நாள் கோயில் நகைகள் அனைத்தும் காணாமல் போவதும், பொன் கூரை தகரக் கூரையாக மாறுவதற்கும் பெரும் வாய்ப்பிருக்கிறது.

இது மட்டுமல்ல. பல்வேறு மன்னர்களால் பல்வேறு காலக்கட்டங்களில் கோயிலுக்கு மானியமாக அளிக்கப்பட்ட நிலங்களைக்.. கொஞ்சம் நஞ்சமல்ல.. ஏறத்தாழ ஆயிரம் ஏக்கர் நிலங்களை முழுவதுமாக தீட்சிதர்களே அனுபவித்து வருகின்றனர்.

தமிழகத்தின் மய்யத்தில் இருந்து கொண்டு, சுற்றிலும் தமிழர்களுக்கு நடுவே வாழ்ந்து கொண்டு, தமிழர்கள் இடும் தட்சிணைக் காசில் வயிறு வளர்த்துக் கொண்டு, தமிழர்களின் கோயிலையும் நிலங்களையும் ஆக்கிரமிக்கவும், தமிழைத் தீட்டு மொழி என்று சொல்லவும், தமிழர்களைக் கோயிலுக்குள் விட மாட்டோம் என்று சொல்லவுமான துணிவு எங்கிருந்த வந்தது இவர்களுக்கு?

தீட்சிதர்களின் கணக்குப்படியே வைத்துக் கொண்டாலும், சிதம்பரத்தில் இன்று அவர்கள் முன்னூறு குடும்பங்களாக வாழ்கின்றனர். இந்த முன்னூறு குடும்பங்களுக்காக, அவர்களின் மிரட்டலுக்கும் பார்ப்பனத் திமிருக்கும் அடி பணிந்து, ஒட்டு மொத்தத் தமிழினமும் தமிழ் மன்னர்களால் தமிழ் மக்களை கொண்டு கட்டப்பட்ட, தங்களுக்கு உரிமையான, தாங்கள் போற்றி வழிபடக் கூடிய கோயிலை, அக்கோயிலில் தங்கள் தாய் மொழியில் வழிபடும் உரிமையை விட்டுக் கொடுக்க வேண்டுமா?

இதை விட அவமானம் தமிழர்களுக்கு நேர முடியாது.

பல்லவ மன்னர்கள் காலத்தில் கோயில்களில் வட மொழி நுழைந்த காலம் தொட்டு இன்று வரை ஏறத்தாழ 13 நூற்றாண்டுகளாக தமிழர்கள் நடுவே, தமிழ் நீச மொழி என்றும் வட மொழியே உயர்ந்த மொழி என்றும் கைப்பிடி அளவு கூட இல்லாத பார்ப்பனர்கள் தொடர்ந்து துணிவாகச் சொல்லி வருகிறார்கள், நாம் இன்று வரை அரசாணை மேல் அரசாணையாகப் போட்டு கையை பிசைந்து கொண்டு நிற்கிறோம்

கோயிலகளில் வடமொழியில் மட்டுமல்லாது தமிழிலும் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று அரசாணைப் போட்டால், "தமிழிலிலும் அர்ச்சனை செய்யப்படும்" என்று எழுதி வைத்து அவமானப் படுத்துகிறான். அதற்கு ஒரு போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.

"தமிழில் மட்டுமே அர்ச்சனை செய்ய வேண்டும்" என்று அரசாணை போட நமக்கு இன்னமும் துணிச்சல் வரவில்லை. தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்பது அப்படி என்ன பஞ்சமா பாதகமா? உண்மையில் அதுதானே இயற்கையாக இருக்க இயலும்? வடமொழி வழிபாடு என்பது இடையில் வந்ததுதானே?

ஆங்கிலேயர் பெயர் சூட்டிய மதராஸ் சென்னையாக மாற்றம் கொள்வது போலத்தானே இடையில் வந்த வடமொழி வழிபாட்டை நீக்கிவிட்டு தமிழ் வழிபாட்டை உறுதியாக்குவது?

இதை நடைமுறைப்படுத்த நமக்கு எதனால் அச்சம்? யாரைக் கண்டு பயம்? நிச்சயம் வாக்குக்காக இருக்க இயலாது. ஏனெனில் பார்ப்பனர்கள் மொத்தமே 3 விழுக்காட்டினர்தான். அப்படியானால், பன்னெடுங்காலமாக நமக்குள் ஊறிப் போன சூத்திர அடிமை மனோபாவம்தான் இன்றளவிலும் பார்ப்பனர்களை எதிர்க்கத் தடையாக இருக்கிறதா?

சிற்றம்பல மேடையில் தேவாரம் பாட அனுமதி அளித்து அரசே ஒரு ஆணையிடுகிறது. அந்த ஆணையை செயல்படுத்த சென்றவர்களையும், அரசாணையை மதிக்காமல் அதனை செயல்படுத்த விடாமல் தடுத்தவர்களையும் ஒன்றாக பாவித்து இரு தரப்பினரையும் அதே அரசு கைது செய்கிறது.

இந்த செய்கையால் துணிவுப் பெறப் போவது யார்? யாரை திருப்திப்படுத்த இந்த நடவடிக்கை?

தமிழ் வழிபாடு, தமிழ் வழிக் கல்வி, நீதிமன்றத்தில் தமிழ், தமிழ்த் தேசிய சிக்கல்களான காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, ஈழம் என எல்லாவற்றிலும் தமிழர்களின் நலனுக்கு, தமிழ் மொழிக்கு எதிர் நிலை எடுத்து தமிழர்களிடமே அது குறித்து வெளிப்படையாகப் பேசி தொடர்ந்தும் தமிழ்நாட்டில் இவர்களால் வாழ முடிகிறது என்றால் எந்த அளவிற்கு நாம் தன்மானம் அற்றவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது புலப்படும்.

"உங்களை சூத்திரர்களாகவே விட்டுச் செல்கிறேனே" என்று பெரியார் தனது இறுதி காலத்தில் மனம் நொந்து கூறினார். அவர் இறந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகும் நாம் இன்னமும் சூத்திரர்களாக, அடிமை மனோபாவத்தோடே வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்பது மிகுந்த அவமானத்திற்குரியது. சூத்திர இழிவை நீக்குவதற்கான சட்டங்கள் இயற்றப்பட்ட போதிலும்,, அரசாங்கம் மட்டுமல்லாது மக்களும்.. அதனைச் செயல்படுத்துவதில் விழிப்புணர்வோடு வேகம் காட்டாவிடில், செயல்படுத்த தடையாய் இருப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக அணி திரளாவிடில், எத்தனை நூற்றாண்டுகளானாலும் நாமும் நம் தலைமுறையினரும் சூத்திரர்களாக நீச மொழியைப் பேசிக் கொண்டு வாழ்ந்து மடிய வேண்டியதுதான்.

நன்றி:- பூங்குழலி

Saturday, March 22, 2008

மீண்டும் ஒரு வரலாற்றுத் தவறா? இந்தியாவிற்குப் புலிகளின் கேள்வி

ஈழத்தமிழர்கள் மீதான சிங்கள அரசின் இன அழிப்பு செயலுக்குத் தலைமையேற்று நிற்கும் சிறிலங்காவின் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவை வரவேற்று உயர் அரச கெளரவத்தை வழங்கிய இந்திய அரசின் செயல் ஈழத் தமிழர்களை வேதனைக் குள்ளாக்கியுள்ளது.

போர் நிறுத்த உடன் படிக்கையிலிருந்து சிங்கள அரசு ஒரு தலைப்பட்சமாக வெளியேறி தமிழர் தாயகத்தில் போரை விரிவாக்கியுள்ள இக்கால சூழலில், தமிழின அழிப்பிற்கு தலைமையேற்று வழிநடத்தும் சிங்களத்தின் இராணுவத் தளபதிக்கு இத்தகைய அரசு கெளரவத்தை வழங்கியுள்ள இந்திய அரசின் செயலை புலிகள் இயக்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

சிறிலங்கா அரசின் இராணுவ வழித்தீர்வுக்கு ஒருபுறமும் கட்டுக்கடங்காத மனித உரிமை மீறல்களுக்கு மறுபுறமுமாக. உலகளாவிய ரீதியில் சிங்கள அரசு கண்டனங்களுக்கும் எச்சரிக்கைகளுக்கும் அதிகளவில் உள்ளாகி வருகின்றது. ஆயினும் இக்கண்டனங்களையும் எச்சரிக்கைகளையும் புறம் தள்ளி விட்டு அதிகளவிலான ஆட் கடத்தல்கள். படுகொலைகள், இன ரீதியான கைதுகள் என்பனவற்றை சிங்களப் படைகள் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றன. இந்த உண்மையை மூடி மறைப்பதில் அக்கறை காட்டும் சிங்கள அரசு தொடரும் போருக்கான பழியைத் தமிழரின் சுதந்திர இயக்கமான புலிகள் இயக்கத்தின் மீது சுமத்தி தனது இன அழிப்புப் போருக்கு உலகின் உதவியைக் கோரி நிற்கின்றது.

சிங்கள அரசின் இந்த கபட நோக்கத்தைப் பல ஐரோப்பிய நாடுகள் புரிந்துகொண்டு தமிழின அழிப்பற்குத் துணைபோகக்கூடிய உதவிகளை நிறுத்தியுள்ளன.

இந்த உண்மை இந்திய அரசிற்கும் நன்கு தெரியும். ஆயினும் தமிழர் பிரச்சினைக்கு அமைதி வழியில் அரசியல் தீர்வே காணவேண்டும் எனக் கூறிக்கொண்டு அதற்கு மாறாக இராணுவ ரீதியாக சிறிலங்கா அரசிற்கு நம்பிக்கையூட்டும் இந்திய அரசின் செயற்பாடுகள் தமிழின அழிப்பிற்கே வழிகோலும்.

இந்திய அரசின் இந்த வரலாற்றுத் தவறானது ஈழத்தமிழர்களைத் தொடர்ந்தும் இன்னல்களுக்குள்ளாக்கி, ஒரு பாரிய இன அழிவு அபாயத்துக்குள் அவர்களைத் தள்ளி விடும் என்பதை இந்திய அரசிற்கு சுட்டிக் காட்ட புலிகள் இயக்கம் விரும்புகின்றது. இந்திய அரசு புரியும் இந்த தமிழின விரோதச் செயலை தமிழ்நாட்டு மக்கள் புரிந்துகொண்டு அதற்கு தமது கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் என ஈழத்தமிழ் மக்கள் சார்பில் புலிகள் இயக்கம் அன்பாகக் கேட்டுக் கொள்கின்றது.

நாம் போர் நிறுத்த உடன் பாட்டிலிருந்து விலகவுமில்லை. போரைத் தொடங்கவும் இல்லை. எமது மக்க ளுக்கு எதிராக சிறிலங்கா அரசு தொடுத்துள்ள இன அழிப்புப் போருக்கு எதிராக தற்காப்புப் போரையே நடத்தி வருகின்றோம்.

நாம் இன்னமும் நார்வேயின் தலைமையிலான அமைதி வழி முயற்சி களிலிருந்து விலகவில்லை. நார்வே அரசின் தலைமையில் முன்னெடுக்கப்படும் சமாதான முயற்சிகளில் பங்கேற்க புலிகள் இயக்கம் தயாராகவே இருக்கின்றது.

இந்த நிலையில் அரசியலில் இராணுவ பொருளாதார ரீதியாக தொய்ந்து போயுள்ள சிறிலங்கா அரசிற்கு முட்டு கொடுக்கும் இந்திய அரசின் செயலானது ஈழத்தமிழ் மக்களை கோபத்துக்குள்ளாக்கி யுள்ளது.

புலிகளுடனான போரில் சிங்கள படைகள் இராணுவ ரீதியில் தொய்ந்து போவதை இந்தியா விரும்பவில்லை. என்ற இந்தியப் படையதிகாரிகளின் கூற்று சிங்களத்தின் போர் இயந்திரத்திற்கு முட்டு கொடுக்க முயலும் இந்திய அரசின் செயற்பாட்டையே வெளிப்படுத்துகின்றது.

இந்திய அரசின் இத்தகைய செயற் பாடுகளால் புத்தூக்கம் பெற்றுள்ள சிங்களப்படைகள் மேற்கொள்ளப் போகும் தமிழின அழிப்பிற்கு இந்திய அரசே பொறுப்பேற்க வேண்டும்.

இவ்வாறு விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி - தென்செய்தி

Friday, March 21, 2008

தேர்தல்: இன்னுமோர் போரியல் உத்தியா?

உள்ளுராட்சி சபைத் தேர்தல் என்று அரசாங்கத்தால் வருணிக்கப்பட்ட சம்பவம் கடந்த பத்தாம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்து முடிந்திருக்கிறது.

தேர்தலில் தொடர்புபட்ட எல்லோருக்கும் நன்றி தெரிவித்திருக்கும் மகிந்தர் தரப்பு, இனிமேல் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பிள்ளையான் குழு கலந்துகொள்ளலாம், தடையில்லை என்று பச்சைக்கொடியும் காட்டியிருக்கிறது.

மகிந்தரைப் பொறுத்தளவில், ஒரு போலித் தேர்தலைத் தயார்படுத்தல் மற்றும் நடத்துதல் ஆகிய கட்டங்களில் அவர் வென்றுவிட்டார் என்றே கொள்ளவேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் தான் விரும்பும் நிருவாகம் ஒன்றை சனநாயகச் சாயத்தோடு கதிரையேற்றவேண்டும். அதற்கு முன்னோடியாக தனது விருப்புக்கேற்ப வாக்குகள் விழக்கூடியதான முன்னோடித் தேர்தல் ஒன்றை மட்டக்களப்பில் நடத்தியிருக்கிறார் அவர்.

அதற்கான ஆயத்தங்களை அவர் நீண்ட நாட்களுக்க முன்னரே தொடங்கிவிட்டார். அடாவடித் தேர்தல் ஒன்றைச் சுடுகாட்டு அமைதியோடு நடத்துவதற்கான ஆலோசகராக அருமைத் தம்பி பசில் ராஜபக்ச முழுமூச்சோடு செயற்பட்;டிருக்கிறார்.

தேர்தல் ஒன்றில் கவர்ச்சியாக அமையக்கூடிய தனிநபர்களைத் தனித்தனியாக அணுகி, தம்மோடு இணையும்படி சிலரையும், விலகி நிற்கும்படி சிலரையும் அச்சுறுத்தியது பிள்ளையான் குழு. கடந்த பாதீட்டு வாக்களிப்பின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் உறவினர்கள் பணயமாக வைக்கப்பட்டதைக் குறிப்பிட்டு அதைவிட மோசமான நிலைமைகள் ஏற்படலாம் என்ற வெருட்டல்களும் தாராளமாகப் புழங்கின.

'முன்னர் ஒட்டுக்குழுவால் பிடித்துச் செல்லப்பட்ட உங்கள் பிள்ளைகளை உயிருடன் பார்க்கவேண்டுமானால் படகுச் சின்னத்திற்கு வாக்களியுங்கள்," என்ற பரப்புரையும் செய்யப்பட்டது.

'வேறு சின்னத்திற்கு வாக்களிப்பதை அறிந்தால் நடப்பதே வேறு," என்று ஒட்டுக்குழு அறிவித்தால், முன்பு கடத்தப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழக உறுப்பினர்களுக்கு 'நடந்ததை" அறிந்து வைத்துள்ள வாக்காளர் பெருமக்கள், தேர்தல் தினத்தன்று முரண்டுபிடிக்க மாட்டார்கள் என்ற பசிலின் கணிப்பும் ஓரளவு சரியாகவே இருந்தது.

தேர்தலுக்கான அடாவடிகள் அனைத்தும் பல வாரங்களுக்கு முன்னரே செய்து முடிக்கப்பட்டிருந்தன.

மொத்தம் 285 சாவடிகளில் 90 ஐ மட்டும், அதுவும் 15 நடமாடும் குழுக்களை அனுப்பி அவதானித்துவிட்டு, தேர்தலன்று ஒப்பீட்டளவில் வன்முறைகள் நிகழவில்லை என்று ஒப்புக்குச் சப்புக்கொட்டியது பவ்ரல். அதற்கு முன்னர் நடந்த வன்முறைகளும் பின்னர் நடக்கும் என்று சொல்லப்படுபவையும் வாக்களிப்பைப் பாதித்திருக்காதா என்ற கேள்விக்கு அவர்களால் பதில் சொல்ல முடியுமா என்று கேட்கிறார் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன்.

இந்தத் தேர்தலில் தமிழ் மக்களை அதிகமாக வாக்களிக்கச் செய்யும் நோக்கோடு, ஆரையம்பதி போன்ற இரு சமூகமும் ஒட்டிவாழும் இடங்களில் தமிழ்- முஸ்லிம் மக்களுக்கு இடையோயான போட்டி உணர்வு சில வாரங்களுக்கு முன்னதாகவே கொம்பு தீட்டப்பட்டது. இத்தனை காலம் பட்டுத் தேறிய பின்னரும், இரு தரப்பிலும் சிலர் சிங்களப் பேரினவாத வலையில் விழுந்திருப்பது வருந்தத்தக்க உண்மை.

மறுபுறம், தேர்தல் நடந்த விதமும் அதைச் செய்தியாக்கிய விதமும் கூட அலாதியாகத் தெரிந்தது.

பாலாமுனை போன்ற மக்கள் சற்று அதிகமாகக் காணப்பட்ட வாக்குச் சாவடிகளையே அரச ஊடகங்கள் அடிக்கடி காட்டின. மட்டக்களப்புப் பட்டணம் வெறிச்சோடிக் கிடந்ததை வேறு சில ஊடகங்கள் காட்டின.

இந்நிலையில், மாலை ஆறு மணியளவில் நகரம் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் மின்சாரம் தடைப்பட்டு, பின்னர், இரவு ஒன்பது மணிக்கே மீண்டும் விளக்குகள் உயிர்பெற்றன. அதற்கு இடைப்பட்ட நேரத்திலேயே பெரும்பாலான 'வாக்களிப்புக்கள்" நிகழ்ந்ததை, பெயர் வெளியில் வராது என்று தாயின் மீது ஆணைபெற்றபின், சில தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

இது இவ்வாறிருக்க, அந்தத் தேர்தல் வெற்றியை மூலதனமாக்கி போரை முன்னெடுப்பதற்கான வேலைத்திட்டங்களை மகிந்த அரசு ஏலவே ஆரம்பித்து விட்டதாகத் தெரிகிறது. அனைத்துக் கட்சி மாநாட்டுக்குப் பிள்ளையான் உடனடியாக அழைக்கப்பட்டதிலும், இந்தத் தேர்தலின் பெறுபேறுகள் புலிகளைப் பயீனப்படுத்திவிட்டன என்று அனர்த்த நிவாரண அமைச்சர் மகிந்த சமரசிங்க சுடச்சுட வெளியிட்ட அறிக்கையிலும் இருந்து அவர்களின் நோக்கம் என்னவாக இருந்தது என்பதை ஊகிக்கமுடிகிறது.

கிழக்கின் பிரச்சினை தீர்க்கப்பட்டு விட்டது, இதேபோல வடக்கிலும் பிரச்சினை தீர்க்கப்படும் என்ற தோற்றத்தை தெற்கிலும் மேற்குலகிலும் ஏற்படுத்திவிடக் கங்கணங்கட்டுகிறார் மகிந்தர்.

கடந்த பெப்ரவரி நடுப்பகுதியில் இணைத்தலைமைத் தூதுவர்களைச் சந்தித்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகாவும், தாங்கள் முன்பு கணித்திருந்ததுபோல களமுனை இலக்குகளை எய்தமுடியவில்லை என்றும், புலிகளின் எதிர்ப்பு அதிகமாக இருப்பதாகவும், அண்மையில் புலிகளுக்கு வந்ததாகக் கருதப்படும் ஆயுதங்களும் ஒரு காரணம் என்றும், கணித்திருந்ததை விட மேலதிகமாக ஒரு வருடம் அல்லது ஒன்றரை வருடமளவில் அவகாசம் தேவைப்படும் என்றும் அசடு வழிந்துள்ளார்கள்.

ஆயுத வருகைக்கு அயல் நாடுகளின் அசட்டையும் காரணம் என்று சரத் கடுப்படிக்க, மேலும் கால நீடிப்புக்கு வாய்ப்புக்கள் இருக்குமா என்று ஜெர்மனியத் தூதுவர் மாறிக் கடித்தார் என்பது கொசுறு தகவல். அதேநேரம், இலங்கையின் மனித உரிமை நிலைமை தொடர்பான பன்னாட்டுச் சமூகத்தின் அதிருப்தியையும் இணைத்தலைமையினர் அச்சந்தர்ப்பத்தில் எடுத்துரைத்துள்ளார்கள்.

இந்த அதிருப்திகளைக் கொஞ்சக்காலம் தணித்து வைக்கும் தீர்த்தச் செம்பாக, தமிழர் தாயகத்தின் ஒரு பகுதியில் சனநாயக்ததை நிறுவிய சம்பவமாக, மட்டக்களப்பு உள்ளுராட்சித் தேர்தல் அமையாலாம் என்ற மகிந்தரின் சிந்தனைக்கு மறுநாளே இடி விழுந்தது.

நாடுகளில் நிலவும் மனித உரிமைகள் மற்றும் நல்லாட்சி பற்றிய தனது ஆண்டறிக்கைத் தொடரின், 2007 ஆம் ஆண்டுக்கான சிறிலங்கா மீதான அறிக்கையில் 'கொழும்பின் சிங்கள மேலாதிக்க" வன்முறை ஆட்சியில் ஒட்டுப்படையான பிள்ளையான் குழு தனது படைக்குச் சிறுவர்களையும் பெரியவர்களையும் வலிந்து சேர்ப்பதற்காக 'மிரட்டல், கப்பம், வன்புணர்வு, கொலை என்பவற்றைச் செய்துவருகிறது" என்றும் பிய்த்து உதறியிருக்கிறது அமெரிக்கா.

அமெரிக்காவின் அரசதுறைச் செலயகத்தால் மார்ச் 11 இல் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையிலே துட்டத்தனத்தின் திருவுருவாகக் காட்டப்பட்டிருக்கும் பிள்ளையான் குழுவுடனான தனது 'சனநாயகக் கூட்டணியை" எந்த முகத்தை வைத்துக்கொண்டு நியாயப்படுத்தப் போகிறார் மகிந்தர் என்பது அவருக்கே வெளிச்சம்.

ஆயினும், உலகமே அவதானித்துக்கொண்டிருந்த பாதீட்டு வாக்களிப்பில் அவர் புரிந்த அசிங்கமான அசைவுகளைப் பார்க்கும்போது, மனிதர் மானம் மரியாதைக்குக் கட்டுப்பட்டவராகத் தெரியவில்லை என்பதே பொதுவான கணிப்பாக இருக்கிறது.

இந்தத் தேர்தல்களை நடத்துவதன் மூலம், கிழக்கில் அபிவிருத்தி ஒதுக்கீடுகளைச் செய்வதற்கு ஏற்ற சூழல் வந்துவிட்டது என்று காட்டி, நிதி பெறுவதும், சிறுபான்மையினருக்குப் பாதகமான நில ஆக்கிரமிப்பபைச் செய்வதும் அவரின் இன்னுமோர் குறியாக இருக்கிறது.

கொழும்பையும் திஸ்ஸமாகராமையையும் குண்டுவெடிப்புக்கள் இன்றிப் பார்த்துக்கொள்ள முடியாத அவர் மட்டக்களப்பை எப்படி அபிவிருத்திக்கு ஏற்றதென்று நிறுவுவார், அந்த நிறுவலை எவ்வெந்த நாடுகள் ஏற்கும் எனப்பட்ட விடயங்கள் களயதார்த்த நிலைமையில் அன்றி இராசதந்திர உறவுகளின் அடிப்படையிலேயே அமையும் என்பதை வாசகர்களுக்கு விளக்க வேண்டியதில்லை.

கிழக்கில் தான் அமைக்கவிருக்கும் ஒட்டுக்குழு நிருவாகம், தமிழரின் தாயகக் கோட்பாட்டை நலிவுறுத்தும் என்பதே மகிந்தரின் அடுத்த கனவு. வெற்றியின் சூடு இறங்கிவிடுமுன் மே மாதத்தில் மாகாணசபைத் தேர்தலை வைத்து முடித்துவிடவேண்டும் என்பது அவரின் வேணவா.

எவ்வெந்த வாக்குச் சாவடிகளில் எத்தனை எத்தனை கள்ள வாக்குகள் அளிக்கப்பட வேண்டும் என்பதை அங்கே அராஜகம் செய்துவரும் ஒட்டுப்படைக்கு பசில் ராஜபக்ச அறிவுறுத்தல் கொடுத்துள்ள நிலையில் அங்கு ஒரு சனநாயகத் தேர்தல் நடக்கும் என்று யாராவது எதிர்பார்த்தால், அவர்கள் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய அரசியல் அப்பாவிகளாகவே இருக்கமுடியும்.

இருந்தாலும், குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் நோக்குடன் ஐ.தே.கவும் ஜே.வி.பியும் கூட வரிந்து கட்டிக்கொண்டு களமிறங்குகின்றன. தேர்தல் முடிவடைந்த பின், அது முறையாக நடத்தப்படவில்லை என்ற வழமையான ஓலத்தை அவர்களிடம் இருந்து நிச்சயம் எதிர்பார்க்கலாம். அப்படியானால், ஏன் தான் போட்டியிடுகிறார்கள் என்றால், அதுதான் தென்னிலங்கை அரசியல்.

அதேவேளை, கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்திருக்கிறது. தமிழர் தாயகத்தைத் துண்டாடும் இந்த நிருவாக அலகைத் தாங்கள் அங்கீகரிக்கவில்லை என்பதே த.தே.கூ.வின் நிலைப்பாடாக உள்ளது.

தமிழ்நெற் இணையத்தளத்திற்கான செவ்வியொன்றில், 'ஒற்றை அலகாக இணைந்த வடகிழக்கே எமது கோட்பாட்டு மூலைக்கல்" என்று வலியுறுத்தியிருக்கும் மட்டக்களப்பு மாவட்ட த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர் சே.ஜெயானந்தமூர்த்தி, சிறிலங்கா அரசாங்கம் 2007 சனவரியில் வடகீழ் மாகாணத்தைப் பிரித்ததைத் த.தே.கூ. காட்டமாக எதிர்ப்பதாகவும், அந்நிலைப்பாட்டின் அடிப்படையில் தனிக் கிழக்கிற்கான மாகாண சபையில் போட்டியிடுவது, தமிழர்களின் நியாயபூர்வ உரிமையை விட்டுக்கொடுப்பதாக அமைந்துவிடும் என்றும் சொல்லியிருக்கிறார்.

யுத்தத்தைப் போலவே தேர்தல்களையும் கொடூரமாக நடத்தும் மகிந்தர், தமிழருக்கு எதிரான போரிற்கான தனது ஒட்டுமொத்த மூலோபாயத்தின் ஒரு அங்கமாகவும் அத்தேர்தல்களைப் பயன்படுத்த விளைகிறார்.

மாகாணசபைத் தேர்தல் வாக்களிப்பை வைத்து, வடகீழ் மாகாணத்தின் பிரிப்பை நிறுவ முற்படுவதும் அவரின் கள்ள நோக்கங்களில் ஒன்று.

தமிழர் தாயகக் கோட்பாட்டை வலுவிழக்கச் செய்வதும், வட போரரங்கினை உக்கிரப்படுத்துவதற்கான நியாயங்களையும் ஆதரவையும் நிறுவுவதும், தமிழருக்கு எதிரான ஒட்டுமொத்த யுத்தத்தில் கொழும்பு வெற்றி பெறுவதாகக் காட்டுவதுமே கிழக்குத் தேர்தல்களின் ஊடான அவரின் முக்கிய உண்நோக்கங்கள்.

மறுவளத்தில், அந்த மூலோபாயத்தில் உள்ளடங்கி நிற்கவேண்டிய இரு முக்கிய கூறுகளான களமுனையும், இராசதந்திர வெளியும் அவருக்குச் சாதகமற்ற சமிக்ஞைகளைக் காட்டத் தொடங்கிவிட்டன. மூன்றாவது கூறான தென்னிலங்கையிலும் அதன் எதிரொலி சன்னமாகக் கேட்கத்தொடங்கி விட்டது.

நன்றி: -சேனாதி-
வெள்ளிநாதம் (21.03.08

Wednesday, March 19, 2008

அரசுத் தலைமை தன்போக்கை திருத்திக்கொள்ள இறுதி வாய்ப்பு

இலங்கை நிலைவரம் குறித்து நேரில் ஆராய இங்கு வந்திருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டக்குழு பல்வேறு தரப்புகளையும் சந்தித்து விரிவாக உரையாடியிருக்கின்றது.
தனது விஜயத்தின் முடிவில் அக்குழு ஊடகவியலாளர்களையும் சந்தித்திருக்கின்றது. எனினும், இந்த ஊடகவியலாளர் மாநாட்டை நடத்துவதை ஒட்டி இலங்கை அதற்கு விதித்திருந்த கெடுபிடி ஒழுங்கு விதிகளை அனுசரித்து, அதற்கு அமைவாக அங்கு கருத்துத் தெரிவித்துச் சென்றிருக்கின்றது அக்குழு.

மேலோட்டமாகப் பார்த்தால் இந்தச் செய்தியாளர் மாநாடும் அதில் வெளியிடப்பட்ட கருத்துகளும் அவ்வளவு பரபரப்பை ஏற்படுத்தாமல் அடங்கிப்போய்விட்டன போல் படும். ஆனால் அந்தச் செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் வரிகளுக்கு இடையில் பொதிந்துகிடக்கும் அர்த்தங்களையும், அச் செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட இராஜதந்திர சொல்லாடல்களையும் ஊன்றி நோக்கினால் பல்வேறு விடயங்கள் அவற்றுள் ஊறிக்கிடப்பது புரியவரும்.

* இலங்கைக்கு உதவும் நாடுகளின் இணைத்தலைமைகளும், இலங்கை இனப்பிரச்சினைக்கான அமைதி முயற்சிகளின் அனுசரணைத் தரப்பான நோர்வேயும், விடுதலைப் புலிகளின் தலைமையகம் செயற்படும் கிளிநொச்சிப் பகுதிக்குச் சென்றுவர அரசு தடைவிதிக்கக் கூடாது. அதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
* இலங்கையில் மோசமாக இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து கவலைப்படுகிறோம்.
* மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோரைத் தயவு தாட்சண்யம் காட்டாது நடவடிக்கை எடுத்து நீதிமன்றின் முன் நிறுத்தவேண்டும் என்ற மனித உரிமைகளுக்கான ஐ.நா. ஆணையாளரின் கூற்றையும், சர்வதேசப் பிரமுகர்களைக்கொண்ட கண்காணிப்புக்குழுவின் வலியுறுத்தலையும் இலங்கை அரசு தீவிரமாகக் கவனத்தில் எடுத்து அதன்படி செயற்பட வேண்டும்.
* இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவ வழித் தீர்வை விடுத்து, அமைதி வழித் தீர்வில் அரசு நாட்டம் காட்டவேண்டும். இராணுவ வழித் தீர்வு சாத்தியமற்றது என்பதை இலங்கை அரசும் அரசின் பாதுகாப்புத் தரப்பும் உணர வேண்டும்.
* இலங்கையில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் பற்றிய விசாரணைகளைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சர்வதேசப் பிரமுகர்கள் குழு தனது பொறுப்பிலிருந்து வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டமைக்காக வருத்தமும் கவலையும் அடைகிறோம்.
இத்தகைய கருத்துக்களை நாசூக்காக வெளியிட்டிருக்கின்றது ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டக்குழு.

இக்கருத்துக்களை ஒட்டிய விடயங்களைச் சீர்தூக்கிப் பார்த்தால் இவை அனைத்துமே தற்போதைய அரசுத் தலைமையின் யுத்த தீவிரப் போக்கால் எழுந்த பெறுபேறுகள் என்பதும்
அப்பெறுபேறுகள் குறித்த கவலையையே ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்டக்குழு வெளியிட்டுச் சென்றிருக்கின்றது என்பதும் தோற்றும்.

இந்த உயர்மட்டக்குழு ஐரோப்பிய ஒன்றியத்துக்குத் தனது இலங்கை விஜயத்தின் அவதானிப்புகள் குறித்து விளக்கமான அறிக்கை ஒன்றை வழங்கும் என்றும்
எதிர்காலத்தில் இலங்கைக்கு விசேட ஊக்குவிப்பு நன்மைகள் உட்பட்ட ஏற்றுமதி மற்றும் சலுகைகளை ஐரோப்பிய நாடுகள் வழங்குவதா என்பது பற்றிய தீர்மானத்தை இந்த அறிக்கையின் அடிப்படையிலேயே ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தீர்மானிக்கும் என்றும் அறியவருகின்றது.

ஆனால் இப்போது வந்துள்ள இந்த உயர்மட்டக் குழு கொழும்பில் பல்வேறு தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடிய சமயம் பரிமாறிக் கொண்ட கருத்துக்களையும், ஊடகவியலாளர்கள் மாநாட்டில் அக்குழு வெளியிட்ட தகவல்களின் தெளிவையும் நோக்கும்போது, இலங்கையின் தற்போதைய அரசின் நிர்வாகப் போக்கு மற்றும் மேற்படி விசேட ஊக்குவிப்பு வசதிகளைப் பெறுவதற்கான இலங்கையின் தகைமை ஆகியவை குறித்து இக்குழுவுக்கு நிறைவு திருப்தி ஏற்படவேயில்லை என்பதை அறியமுடிகின்றது.
எது, எப்படியென்றாலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மேற்கு நாடுகளின் இலங்கைக்கான தற்போதைய விசேட ஊக்குவிப்புத் திட்டம் வரும் ஒக்டோபர் மாதம் முடிவடையும்போதுதான், அதை மீளத் தொடர்ந்தும் பெறுவதற்காக இலங்கை விண்ணப்பிக்கமுடியும். அப்போதுதான் இவ்விடயம் குறித்துப் பரிசீலித்து இறுதி முடிவை ஐரோப்பிய ஒன்றியம் எடுக்கும்.

அதற்குள், மனித உரிமையைப் பேணுவதை மேம்படுத்தி, மேற்படி ஊக்குவிப்பைத் தொடர்ந்தும் பெறுவதற்குரிய அனுமதியைப் புதுப்பிப்பதற்கான தகுதியை தகைமையை இலங்கை பெற்றுக்கொள்ள முடியும்.

அப்படித் தன்னைத் திருத்திக் கொள்வதற்கு இலங்கைக்கு இன்னும் ஐந்து, ஆறு மாத கால அவகாசம் உள்ளது.
ஆனால் அப்படித் தன்னைத் திருத்திக் கொள்வதற்கான அரசியல் திடசங்கற்பம் மனோரீதியான பற்றுறுதி இலங்கைத் தலைமையிடம் உண்டா? அதுவே கேள்விக்குரிய விடயமாகும்.
இந்தக் கடைசிச் சமயத்திலாவது இலங்கை அரசுத் தலைமை தன்னைத் திருத்திக்கொண்டு, மனித மாண்புகளை மதித்துப் பேணும் உயர்வழியில் நடக்குமாயின் ஐரோப்பிய ஒன்றிய ஊக்குவிப்புத் திட்டத்தின் அனுமதி தொடர்ந்தும் இலங்கைக்குக் கிடைக்க வாய்ப்புண்டு. இல்லையேல் கதை கந்தல்தான்

நன்றி :- உதயன்

இந்தியா - தமிழீழம் - சிறிலங்கா

'அரசியல், இராணுவ, பொருளாதார ரீதியாகத் தொய்ந்து போயுள்;ள சிறிலங்கா அரசிற்கு முண்டுகொடுக்கும் இந்திய அரசின் செயலானது, ஈழத் தமிழ் மக்களைக் கோபத்துக்கு உள்ளாக்கியுள்ளது" - என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் 10-02-2008 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்; தெரிவிக்கப்பட்டுள்ளது.



தமிழீழ மக்களுக்கு எதிராக, சிறிலங்கா அரசுக்குத் துணையாக, இந்தியா மேற்கொள்கின்ற தவறுகளைச் சுட்டிக்காட்டியுள்;ள இந்த அறிக்கையில் 'இந்திய அரசின் இத்தகைய செயற்பாடுகளால் புத்தூக்கம் பெற்றுள்ள சி;ங்களப் படைகள் மேற்கொள்ளப் போகும் தமிழின அழி;ப்பிற்கு, இந்திய அரசே பொறுப்பேற்க வேண்டும்" என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் இத்தகைய செயற்பாடுகளை, 'வரலாற்றுத் தவறு" என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் வெளியிட்டுள்;ள இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இந்தச் சந்தர்;ப்பத்தில் இந்தியா, தமிழீழம், சிறிலங்கா குறித்த சில வரலாற்றுத் தகவல்களை முன்வைத்துச் சில கருத்துக்களைத் தர்க்;கிப்பதானது பொருத்தமானதாக இருக்கும் என்று நம்புகின்றோம். நாம் கடந்த பல ஆண்டு காலமாக இந்தக் கருத்துக்களை வலியுறுத்தி வந்துள்;ள போதிலும், தற்போதைய காலகட்டத்தில் இவை குறித்து மீண்டும் சிந்திக்க வேண்டிய தேவையும் உள்ளது.

ஒரு நாட்டினது ஆட்சி, அரசியல் கட்சிகளிடையே கை மாறுகின்றபோது, பொதுவாக அந்த நாட்டின் வெளிவிவகாரக் கொள்கைகளில் பெரிதான மாற்றங்கள் ஏற்படுவதில்லை என்பதே உண்மையாகும்! குறிப்பாக, அந்த நாடு ஒரு வல்லரசாக இருக்கும் பட்சத்தில், அந்த வல்லரசு நாட்டின், வெளிவிவகாரக் கொள்கைகளில் மாற்றம் ஏற்படுவது மிக அரிதான செயலாகவே இருக்கும். எனினும், அண்டை நாடான இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கைகளை நாம் அரசியல் ரீதியாக மட்டுமல்லாது கேந்திர, பொருளாதாரவியல் போன்றவற்றின் அடிப்படையிலும் கவனித்துச் சிந்திக்க வேண்டும். அந்த வகையில் சில முக்கிய கருத்துக்களைத் தரக்;கிக்க விழைகின்றோம்.

காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களின் அன்புக்குரிய மாமியார் திருமதி இந்திரா காந்தி அவர்கள் தன்னுடைய ஆட்சிக்காலத்தில், தனது அரசின் ஊடாகத் தமிழ்ப் பேராளி இயக்கங்களுக்கு ஆதரவையும், இராணுவப் பயிற்சிகளையும், உதவிகளையும் வழங்கி வந்தார் என்பது வெளிப்படையான ஓர் இரகசியமாகும். அத்துடன் அன்றைய சிறிலங்கா அரசு தமிழீழ மக்கள் மீது மேற்கொண்ட அரச பயங்கரவாத இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக, இந்திரா காந்தி அறிக்கைகளை வெளியிட்டு வந்ததோடு, சிறிலங்கா அரசு மீது, அரசியல் அழுத்தங்களையும் பிரயோகித்து வந்தார். இந்தியாவின் அன்றைய பிரதமரான இந்திரா காந்தியின் இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாகத் தமிழீழ மக்கள் அவர்மீது மிகுந்த நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் கொண்டிருந்தார்கள்.

அப்படியென்றால், ஈழத் தமிழ் மக்கள் பிரச்சனையில், அன்று இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில், இந்தியா கொண்டிருந்த வெளிவிவகாரக் கொள்கைக்கும், பின்;னாளில் இந்தியா கொண்டிருக்கின்ற வெளிவிவகாரக் கொள்கைக்கும் வித்தியாசம் உள்ளதே என்ற கேள்வி எழுவது இயல்பானதாகும். ஆனால், கூர்ந்து சிந்தித்துப் பார்த்தால், இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையின் அடிப்படை நோக்கத்தில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என்ற உண்மை புலனாகும்.!

அன்றைய வேளையில், ஜே.ஆர், ஜெயவர்த்தனாவின் சிங்கள அரசு, தனது இந்திய எதிர்ப்புப் போக்கை வெளிப்படையாகக் கொண்டிருந்ததோடு மட்டும் அல்லாது பாக்கிஸ்தான், சீனா, அமெரிக்கா போன்ற இந்திய நலன்களுக்கு எதிரான நாடுகளுடன் நெருங்கிய நட்புறவையும் கொண்டிருந்தது.

பிராந்திய வல்லரசான இந்திரா காந்தியின் அரசோ, அன்று, ஓர் உலக வல்லரசாகத் திகழ்ந்த சோவியத் யூனியனுடன் மிகுந்த நட்புறவைக் கொண்டிருந்தது. தனது நலன்களுக்கு எதிரான நாடுகளுடன் சிறிலங்கா அரசு நட்புறவைக் கொண்டிருந்த காரணத்தால், அந்த நாடுகளின் தலையீடும், செல்வாக்கும் இலங்கைத் தீவில் அதிகரித்து வருவதானது, தன்னுடைய பிராந்திய நலனுக்கு அச்சுறுத்தலாகவே அமையும் என்று அன்றைய இந்திய அரசு கருதியது. அந்த வேளையில் இலங்கை விவகாரத்தில், தன்னுடைய மூக்கை நுழைப்பதற்கு, இந்தியாவிற்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதமாக, ஈழத்தமிழர் பிரச்சனை விளங்கியது. அதனை முழுமையாகப் பயன்படுத்தும் முயற்சியில் இந்திரா காந்தி இறங்கித் தமது பிராந்திய மேலாண்மையை நிலைநிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.

'ஈழத் தமிழர் போராட்டமானது, ஜே.ஆர், ஜெயவர்தனாவின் அரசிற்கு ஒரு தீராத தலையிடியாக உருவாகுவதன் மூலம், ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் அரசு, இந்தியாவின் உதவியை நாடி வரவேண்டும்" என்றே இந்திரா காந்தி விரும்பினார். அதுவே உண்மையுமாகும். தவிரவும், திருமதி இந்திரா காந்தி அவர்கள் கொலை செய்யப்பட்ட சில மாதங்களின் பின்பு, அவருடைய அரசியல் வாழ்க்கை குறித்து ஒரு நூல் வெளி வந்தது. அதனை எழுதியவர் இந்திரா காந்தியின் பிரத்தியேகச் செயலாளர் ஆவார். அவர் சிறிலங்கா அரசையும், தமிழர் பிரச்சனைளையும், தமிழப் போராளிகள் இயக்கங்களைப் பற்றியும் இந்திரா காந்தி கொண்டிருந்த சிந்தனைகளை விபரித்து எழுதியிருந்தார். நாம் மேற்கூறியிருந்த விடயங்களை, அவர் தனது நூலில் உறுதி செய்து எழுதியுள்;ளார்.

இங்கே இன்னுமொரு மிக முக்கியமான விடயம் ஒன்றை நாம் சுட்டிக்காட்ட விழைகின்றோம். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் குறித்து, இந்திரா காந்தி அவர்கள் கொண்டிருந்த கணிப்பையும் இவரது பிரத்தியேகச் செயலாளர் தன்னுடைய நூலில் அன்றே குறிப்பிட்டுள்ளார். 'ஏனைய தமிழ்ப் போராளிக் குழுக்களையும் விட, தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்க உறுப்பினர்கள் தனித்துவமாகவும், கொள்கைப் பிடிப்பு உடையவர்களாகவும், கட்டுக்கோப்பாகவும் உள்ளார்கள். எதிர்காலத்தில், இந்தியாவின் அழுத்தத்திற்கு, விடுதலைப் புலிகள் பணிய மாட்டார்கள். ஏனென்றால் விடுதலைப் புலிகள் இயக்;கம், தன்னுடைய இலட்சியத்தில் உறுதி கொண்ட ஓர் இயக்கமாக வளர்ந்து வருகின்றது. அவர்களின் வளர்ச்சியை நாம் தடுக்;க வேண்டும். (றுந றடைட hயஎந வழ உரவ வாநஅ வழ ளணைந)" - என்று மறைந்த பாரதப் பிரதமர் இந்திரா காந்தி, விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பற்;றிக் கொண்டிருந்த எண்ணங்களை அவரது பிரத்தியேகச் செயலாளர் தனது நூலில் தெரிவித்துள்ளார்.

இங்கே இன்னுமொரு விடயத்தையும் நாம் சுட்டிக்காட்ட விழைகின்றோம். இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கைகளை - குறிப்பாக இலங்கைத்தீவு சம்பந்தப்பட்ட கொள்கைகளை - ஒரு குறிப்பிட்ட அதிகாரக் குழுவினர்தான் தொடர்ந்தும் நிர்ணயித்து வருகின்றார்கள். இந்திய உளவுப் பிரிவான சுயுறுவின், ளுழுருவுர் டீடுழுஊமு என்று அறியப்படும் பகுதியினர், இலங்கைக்கான வெளிவிவகாரக் கொள்கைகளைத் தீர்மானிப்பவர்களில் தொடர்ந்தும் செல்வாக்;காக இயங்கி வருகின்றார்கள். இவர்களுடைய முழுமையான செயற்பாடுகளை விபரிப்பதற்கு இது தளம் இல்லையென்றாலும், தம்முடைய வர்க்;க நலன் கருதி, தமிழீழ மக்களின் நலனுக்கு எதிரான செயற்பாடுகளைத்தான் இவர்கள் தொடர்ந்தும் செய்து வருகின்றார்கள் என்பதனை இங்கு பதிவு செய்து கொள்கின்றோம்.

ஆனால், தமிழீழ மக்களின் பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகள், இந்தியாவின் நலனுக்கு ஆதரவாகவே இருந்து வந்துள்ளார்கள். இந்தியாவுடனான உளப்பூர்வமான, ஆத்மார்த்தமான நட்புறவை நாடி, தன்னுடைய உள்ளக்கிடக்கையை, விருப்பத்தை, வேண்டுகோளை, தமிழீழத் தேசியத் தலைமை தொடர்ந்தும் தெரிவித்தே வந்துள்ளது. இயக்கத்தின் மீது இந்தியாவின் அரசியல்- இராணுவ அழுத்தங்கள், செயற்பாடுகள் இருந்தபோதிலும் சரி, இந்த அரசியல் - இராணுவ அழுத்தங்களை எதிர்கொண்டு வெற்றி கொண்ட வேளைகளிலும் சரி, சி;ங்களப் பேரினவாத அரசுகள் மேற்கொண்ட போர்களில் இயக்கம் வெற்றி கொண்ட வேளைகளிலும் சரி, அரசியல் வெற்றிகளை அடைந்திட்ட வேளைகளிலும் சரி, தமிழீழத் தேசியத் தலைமை, தன்னுடைய உள்ளக் கிடக்கையை, இந்திய தேசத்த்pன் மீதான தன்னுடைய நட்புணர்வை வெளிப்படையாகவே காட்டி வந்துள்ளது. வரலாற்றிலிருந்து சில சம்பவங்களைச் சுட்டிக் காட்டுவது இவ்வேளையில் பொருத்தமானதாகும்.

தமிழ் மக்களின் ஒப்புதலைப் பெறாது, அவர்கள் மீது இலங்கை- இந்திய ஒப்பந்தம் திணிக்கப்பட்ட காலகட்டத்தில், அதாவது சுமார் 21 ஆண்டுகளுக்கு முன்பு, 1987 ஆம் ஆண்டு, சுதுமலையில் தமிழீழத் தேசியத் தலைவர் ஆற்;றிய உரையின் போதும், இந்தியாவுடனான நட்புறவை வலியுறுத்திப் பேசியிருந்தார். 'இந்திய-இலங்கை ஒப்;பந்தமானது, தமிழ் மக்களுக்கு உரிமை எதையும் பெற்றுத் தாரது" என்பதையும், 'இந்த ஒப்பந்தத்தைத் தாம் ஏற்கவில்லை" என்பதையும், 'இந்தியாவின் கேந்திரச் செல்வாக்கானது, தமிழ் மக்களின் சுயநிர்ணயப் போராட்டத்தோடு உரசுகின்றது" என்பதையும் விளக்கிய தேசியத் தலைவர், இன்னுமொரு விடயத்தையும் அன்று வலியுறுத்தியிருந்தார். 'நாம் இந்தியாவை நேசிக்கின்றோம். இந்திய மக்களை நேசிக்கின்றோம். நாம் இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்லர்" என்று தமது நிலைப்பாட்டைத் தேசியத் தலைவர் அன்றே தெளிவாகக் கூறியிருந்தார்.

தமிழீழத் தேசியத் தலைவரின் அந்தக் கூற்று, நேர்மையானதாகவும், தெளிவாகவும் இருந்தது. அப்போதைய இந்திய அரசின் தெளிவற்ற சிந்தனையில் உருhவக்கப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை விமர்சித்த தலைவர், அதே வேளையில், இந்திய தேசத்தின் மீதான தம்முடைய நட்புறவையும் தெளிவுபடுத்தியிருந்தார். 'இந்தியாவின் இறைiயாண்மைக்கும், இந்திய நாட்டிற்கும், அதன் மக்களுக்கும், விடுதலைப் புலிகள் அடிப்படையில் எதிரானவர்கள் அல்லர்!"- என்ற திடமான, தெளிவான சிந்தனையை அன்றே தலைவர் வெளிப்படுத்தியிருந்தார்.

அன்றைய இராஜதந்திரிகளினதும், இந்திய உளவுப் பிரிவினரதும், அன்றைய அரசியல்வாதிகளினதும், தவறான கணிப்புக்களாலும், செயல்களாலும், பின்னாளில் இந்திய இராணுவத்திற்கும் புலிகளுக்குமிடையே போர் மூண்டு கசப்புணர்வுகள் தோன்றினாலும், இந்தியாவின் இறையாண்மைக்கும், இந்திய நாட்டுக்கும், இந்திய மக்களுக்கும், அடிப்படையில் விடுதலைப் புலிகள் எதிரானவர்கள் அல்லர் என்ற எண்ணத்தில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.

பின்னர் 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச ஊடகவியலாளர் மகாநாட்டின் போதும், இந்தியவுடனான நட்புறவு குறித்து தேசியத் தலைவர்; மீண்டும் வலியுறுத்தியிருந்தார். 1987 ஆம் ஆண்டு, விடுதலைப் புலிகளுக்கு இருந்த இராணுவப் பலமும், அரசியல் பலமும் வேறாக இருந்தன. ஆனால் 2002 ஆம் ஆண்டு சமாதான சூழ்நிலை ஏற்பட்ட வேளையில், புலிகளுக்கு இருந்த இராணுவப் பலமும், அரசியல் பலமும் வேறாக, விசுபரூபம் எடுத்து இருந்தன. ஆனால், அந்த இரண்டு வித்தியாசமான காலப் பகுதிகளிலும், தமிழீழத் தேசியத் தலைவர், இந்தியாவின் நட்புறவு குறித்து ஒரே கருத்தைத்தான் கொண்டிருந்தார்.

பின்னர் சிறிலங்கா அரசுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகிய போதும், இந்தியாவின் அனுசரணையைத் தமிழீழ விடுதலைப் புலிகள் நாடி நின்றதை நாம் அனைவரும் அறிவோம். சமாதானப் பேச்சுவார்த்தைகளை, விடுதலைப் புலிகளின் சார்பில் முன்னின்று நடாத்திய, 'தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்கள், அவ்வேளையில் இந்தியாவின் அனுசரணையைப் பல வழிகளில் நாடியது நாடறிந்த செய்தியாகும். துரதிர்ஷ்டவசமாக, இந்திய அரசு அன்றும் விடுதலைப் புலிகளின் நேசக்கரத்தைப் புறம் தள்ளியது.

எனினும் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்தும், இந்தியா மீதான தமது நட்புறவை வெளிப்படுத்தியே வந்துள்ளார்கள். 2003 ஆம் ஆண்டும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான திரு வே.பாலகுமாரன் அவர்கள் தேசியத் தலைவரின் இந்தக் கருத்துக்களை அடிக்கோடிடும் வகையில் உரையாற்றியிருந்தார். 'இந்தியாவின் பிராந்திய அரசியலில், எந்தவிதமான குழப்பத்தையும் கொண்டுவர நாங்கள் தயாராக இல்லை. எனவே இந்தியா, புலிகளை இராஜதந்திர ரீதியாக அணுக வேண்டும். நாங்கள் என்றைக்கும் இந்தியாவின் போக்குக்கு எதிராகச் செயற்பட விரும்பியதில்லை. எம்மோடு இந்தியா நேர்மையாக உறவு வைக்;க முன்வந்தால், நாங்களும் இணக்கமாகச் செயற்;படத் தயாராக இருக்கின்றோம். அவர்களாகவே உருவாக்கிக் கொண்டால் அன்றி, எம்மோடு மோதுவதற்கு இந்தியாவிற்கு எந்தக் காரணமும் கிடையாது..." என்று திரு வே. பாலகுமாரன் அவர்கள் தெளிவாகத் தெரிவித்திருந்தார்.

'தேசத்தின் குரல்" திரு அன்ரன் பாலசிங்கம் அவர்களும், மீண்டும் பல தடவைகள் இந்தியாவுடனான நட்புறவை வெளிப்படுத்தியிருந்ததோடு, இந்திய வெளியுறவில் மாற்றம் வரவேண்டும் என்றும் தெரிவித்து வந்திருக்கின்றார். அத்தோடு பிரிகேடியர் திரு சு.ப.தமிழ்ச்செல்வன், சமர் நூலாக்கப் பொறுப்பாளர் யோ.செ.யோகி ஆகியோரும் இத்தகைய நட்புக் கருத்துக்களை மீண்டும் மீண்டும் தெரிவித்தே வந்துள்ளார்கள்.

இந்திய அமைதி காக்கும் படையினருடனான போர் குறித்து, நாம் விருப்பு - வெறுப்பின்றிச் சிந்தித்துப் பார்த்தால், அதில் ஓர் அடிப்படை நியாயம் தமிழர் பக்கம் இருப்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். சுருக்கமாகக் கூறினால், ஈழத் தமிழர்கள் குறித்த ஆனால் ஈழத் தமிழர்களின் பிரச்சனையைத் தீர்;க்க முடியாத ஒப்பந்தம் ஒன்றை, ஈழத் தமிழர்கள் மீது திணிக்க முயன்றபோது, தனது உரிமையையும் சுதந்திரத்தையும் காப்பாற்ற ஈழத் தமிழினம் போராடியது. இதனையே மறுவளமாகச் சிந்தித்துப் பார்ப்போம். இதே போல், வேறு ஒரு வல்லரசு, இந்தியா குறித்த ஆனால் இந்திய மக்கள் சம்பந்தப்படாத, இந்தியாவின் பிரச்சனையைத் தீர்க்க முடியாத ஒப்பந்தம் ஒன்றை இந்தியா மீது திணிக்க முனைந்திருந்தால் இந்தியா என்ன செய்திருக்கும்? இந்தியாவும், ஈழத் தமிழினம் போன்றே தன்னுடைய உரிமையையும், சுதந்திரத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காகப் போராடியிருக்கும். இதில் இருக்கின்ற அடிப்படை நியாயம் ஒன்றுதான்! இதனைப் புரிந்து கொள்வதும் கடினமான ஒன்று அல்ல!

இந்தியாவிற்கும், இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கும் ஆதரவாக இருப்பது தமிழீழ மக்களும், தமிழீழ விடுதலைப் புலிகளும்தான் என்கின்ற எமது கருத்தை நாம் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றோம்.

இன்று தமிழீழத்திற்கு உரித்தான கடற்பரப்பின் பல பகுதிகள், தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதனால்தான், இன்று இந்தியாவின் கடற் பிராந்திய நலன், உண்மையான பாதுகாப்பு நிலையில் உள்ளது. மாறாக, இந்தக் கடற்பிராந்தியப் பகுதிகள், சிறிலங்கா அரசின் கட்டு;ப்பாட்டுக்குள் இருக்குமேயானால், இந்தப் பகுதிகளுக்குள் இந்திய விரோத சக்திகள் குடிபுகுந்திருக்கும். இந்தப் பகுதிகளையெல்லாம் இந்தியாவிற்கு எதிரான நாடுகளிடம், சிறிலங்கா அரசு குத்தகைக்கும் விட்டிருக்;கும்.

இங்கே சந்தேகத்திற்கு இடமான விடயமொன்றைச் சுட்டிக்காட்ட விழைகின்றோம். கடந்த ஆண்டு, காலித் துறைமுகம் தாக்குதலுக்கு உள்;ளானது. அத் தாக்குதல் குறித்த முழுமையான செய்திகள் வெளிவராதவாறு, சிறிலங்கா அரசு மறைத்து விட்டது. ஆனால் எமக்குக் கிடைக்கப்பெற்ற சில தகவல்கள் புதிய கரிசனைகளை ஏற்படுத்தியிருந்தன.

'காலித்துறைமுகத்தில் இருந்த ஆயுதக் களஞ்சியம், சிறிலங்காவிற்குச் சொந்தமான ஆயுதக் களஞ்சியம் அல்ல" என்றும், 'அது வேறு ஒரு நாட்டிற்குச் சொந்தமானது" என்றும், சில தகவல்கள் கசிந்து வந்திருந்தன. 'சீனாவின் அமைப்புக்களில் ஒன்றான ~நொரிங்கோவிற்குச்| சொந்தமான ஆயுதக் களஞ்சியம்தான் தாக்கப்பட்டது" என்றும், 'காலியில் சீனாவின் ஆயுதக் களஞ்சியம் வைக்கப்படுவதற்காக, சிறிலங்காவோடு இணக்கப்பாடு ஒன்றை சீனா முன்னர் கொண்டிருந்ததாகவும்" செய்திகள் உலாவின. இந்தியாவின் பிராந்திய நலனுக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையக் கூடிய இந்த விடயம் உண்மைதானா?

இந்தியா இவ்விடயங்களை உணராதது போல் இருந்தாலும், இந்தியாவிற்கான சார்பு நிலையில்தான் விடுதலைப் புலிகளும் தமிழீழ மக்களும் இருக்கக்கூடிவர்கள் என்ற யதார்த்த நிலையை அமெரிக்கா உணர்ந்து வைத்துள்ளது. திருகோணமலை போன்ற கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதி, சிங்களவர்கள் கையில் இருந்தால், அது தனக்குச் சாதகமானது என்றும், தேவைப்பட்டால், திருகோணமலையை, இந்தியாவிற்கு எதிராகவும் பயன்படுத்தலாம் என்றும், அமெரி;க்கா எண்;ணிச் செயல்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில்தான் கிழக்கு மாகாணத்தில் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் அடித்துத் துரத்தப்படுவதையும், அங்கே சிங்களப் பௌத்தக் கோவில்கள் கட்டப்படுவதையும். அமெரிக்கா வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கின்றது.

இவ்வளவற்றையும் நன்கு தெரிந்து வைத்துக் கொண்டிருக்கின்ற இந்தியாவோ, பூனை கண்ணை மூடிக்கொண்டு, உலகம் இருண்டு விட்டது என்பது போல், மௌனமாக இருந்து வருகின்றது.

இந்தியாவின் பூகோள நலன் ஈழத் தமிழர்களோடு இணைந்த ஒன்றாகும். பண்டைக் காலத்திலிருந்தே, வரலாற்று ரீதியாக, பண்பாட்டு ரீதியாக, அரசியல் பொருளாதார ரீதியாக, ஈழத் தமிழினத்திற்கும், இந்தியாவிற்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளதை வரலாறு கூறும். அடிப்படையில் சிங்கள தேச மக்கள் இந்தியாவின் நலனுக்கு எதிரான எண்ணங்களைக் கொண்டிருக்கையில், தமிழீழ மக்கள் இந்திய தேசத்தின் நலனில் அக்கறை கொண்டவர்களாக இருந்து வந்துள்ளார்கள். தவிரவும், சிறிலங்கா அரசுகளின் இந்திய விரோத மனப்பான்மை என்பதானது, ஒரு வெளிப்படையான விடயமுமாகும். வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் பல விடயங்களைச் சுட்டிக்காட்ட முடியும். இந்திய-சீன யுத்தத்தின் போதும், இந்திய-பாகிஸ்தான் யுத்தத்தின் போதும், சிறிலங்கா அரசுகள் இந்தியாவின் நலனுக்கு எதிரான கோட்பாடையும், செயற்பாடுகளையும் கொண்டிருந்தன.

இந்திய - சீனா யுத்தத்தின் போது, இலங்கைத் தமிழ் மக்கள், இந்திய அரசுக்கு அனுப்புவதற்காக நிதி சேகரிப்பை நடாத்தி, அவ்வாறு சேகரித்த நிதியை, இலங்கைக்கான இந்தியத் தூதுவரிடம் கையளித்தார்கள். ஆனால் அந்த நிதியை, இந்தியாவிற்கு அனுப்ப விடாமல் சிறிலங்கா அரசு தடை செய்து விட்டது. ஒருகால கட்டத்தில் இந்தியத் திரைப்படங்கள், சஞ்சிகைகள், போன்றவற்றின் இறக்குமதியையும் சிறிலங்கா அரசு மட்டுப்படுத்தியிருந்ததையும��
� நாம் அறிவோம். சிறிலங்காவின் பொருளாதார நலன் குறித்த அக்கறையையும் விட, தமிழ்-இந்திய வெறுப்பு மனப்பான்மைதான் சிங்கள அரசுகளிடம் மேலோங்கி இருந்தது. இலங்கை சுதந்திரம் அடைந்த உடனேயே, இந்திய வம்சாவழித் தமிழர்களை, இந்தியாவிற்கு அனுப்பி விடுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வரலாற்றின் அவமானகரமான அடையாளங்களாகும்!

சிங்கள மக்கள், சிங்கள அரசுகள், சிங்களத் தலைவர்கள் என்று சகல மட்டங்களிலும், இந்த வெறுப்;புணர்ச்சி மேலோங்கி நிற்கின்றது. முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் ஆட்சிக்காலத்தில் (1985) நடைபெற்;ற கிரிக்கெட் போட்டியொன்றில் சிறிலங்கவின் கிரிக்கெட் குழு, இந்தியாவின் கிரிக்கெட் குழுவினை வென்றதைக் கொண்டாடும் விதமாக, ஒரு நாளை, பொது விடுமுறை தினமாகவே, ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனா அறிவித்ததை ஓர் உரிய உதாரணமாக நாம் இங்கே சுட்டிக் காட்டலாம்.

'ஜே.ஆர் ஜெயவர்த்தனா வெறுப்பது இந்தியாவை மட்டுமல்ல, இந்திராவையும் கூடத்தான்!" - என்று மறைந்த இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் (தனிப்பட்ட உரையாடலின்போது) தெரிவித்தமையும் இங்கு நினைவு கூரத்தக்கதாகும்.

சிறிலங்கா அரசும், இந்திய அரசும் கைச்சாத்திட்ட அந்த ஒன்றுக்கும் உதவாத ஒப்பந்தத்தையே இன்று சிறிலங்கா அரசு தூக்கி எறிந்து விட்டது. இந்த ஒப்பந்தத்தில் உள்ள குறைகள் பற்றியும், நிறைவற்ற தன்மை பற்றியும், இவற்றைக் கூட சிறிலங்கா நிறைவேற்ற மாட்டாது என்பதையும், விடுதலைப் புலிகள் நன்கு உணர்ந்திருந்தார்கள். ஆனால் இந்;தியா, சிறிலங்கா அரசை நம்பியது. நம்பிய இந்திய அரசுக்கு நாமம் போட்டு விட்டது சிறிலங்கா அரசு.

தங்களுடைய கடந்த காலச் செயற்பாடுகள் மூலம் சிறிலங்கா இந்தியாவிற்குச் சில செய்திகளைச் சொல்லியுள்ளது. இந்தியா இவை குறித்து இனியாவது தீவிரமாகச் சிந்திக்க வேண்டும்.

இந்தியாவிற்கு, சிறிலங்கா சொல்லும் செய்திகள்:-

- எமது நடவடிக்கைகள், தமிழர்களுக்கு எதிரானது என்பதற்கு அப்பால், இந்தியாவிற்கு எதிரான, இந்தியாவின் இராஜதந்திரத்திற்கு எதிரான எமது நிலைப்பாட்டின் நடவடிக்கைகளேயாகும்.

- நீங்கள் (இந்தியா) நல்ல நோக்கம் என்று நினைத்துக் கொண்டு வருகின்றவற்றை, நாங்கள் ஏதாவது ஒரு வகையில் முறியடித்தே தீருவோம்.

- உங்களுடைய பிராந்திய நலனக்கு எதிராக நாம் செயல்படுவோம்.

- இந்தியா ஊடாகத் தமிழர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்றால், இந்தியாவிற்கு எதிராகச் சிறிலங்கா இயல்பாகவே திரும்பும் என்பதுதான் அடிப்படையான விடயமாகும்.

இவ்வாறான செய்திகளை சிறிலங்கா அரசு, இந்தியாவிற்குக் கொடுத்துக் கொண்டிருக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகள், பல்வேறு சமயங்களிலும், தொடர்ந்தும் என்ன விதமான செய்திகளை இந்தியாவிற்குத்; தெரிவித்து வருகின்றார்கள் என்பதைப் பார்ப்போம்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தியாவிற்குச் சொல்லும் செய்திகளும், நிலைப்பாடுகளும்:-

- இந்தியாவின் பிராந்திய மேலாண்மைக்குப் பங்கம் விளைவிக்க, விடுதலைப் புலிகள் விரும்பவில்லை.

- இந்தியாவின் இறையாண்மைக்கும், இந்திய நாட்டிற்கும், இந்திய மக்களுக்கும் விடுதலைப் புலிகள் எதிரானவர்கள் அல்லர்.

- இந்தியாவின் தேசிய நலன்களுக்கு, விடுதலைப் புலிகள் தடையாக இருக்கப் போவதில்லை.

- இந்தியாவின் புவியியல், கேந்திர நலன்களுக்கு எதிராக, விடுதலைப் புலிகள் செயற்படுபவர்கள் அல்லர்.

- இந்தியாவின் பொருளாதார நலன்களுக்குப் பங்கம் ஏற்படுத்த விடுதலைப் புலிகள் விரும்பவில்லை.

மாறாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் விரும்புவதும், நாடி நிற்பதுவும்தான் என்ன?

- விடுதலைப் புலிகள் இந்தியாவை நேசிக்கின்றார்கள். இந்திய மக்களை நேசிக்கின்றார்கள். இந்தியாவுடன் உண்மையான நல்லுறவைப் பேணவே, விடுதலைப் புலிகள் விரும்புகின்றார்கள்.

- இந்தியாவை ஒரு நட்புச் சக்தியாகவே, ஒரு நேச சக்தியாகவே விடுதலைப் புலிகள் கருதுகின்றார்கள்.

- இந்தியாவுடன் நட்புறவுடன் இணங்கிச் செயற்பட விடுதலைப் புலிகள் மனப்பூர்வமாக விரும்புகின்றார்கள்.

- தமிழ் மக்களின் உணர்வுகளையும், எதிர்பார்ப்புகளையும், வேட்கைகளையும் இந்தியா புரிந்து கொண்டு எமக்கு நீதியான ஆதரவைத் தர வேண்டும்.

இப்போதைய வரலாற்று முக்கியத்தவம் வாய்ந்த காலகட்டத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் ஒரு செய்தியை இந்தியாவிற்கு சொல்லியிருக்கின்றார்கள். 'ஈழத் தமிழர்களுக்கு எதிரான, இந்திய நலன்களுக்கு எதிரான, சிங்களச் சிறிலங்கா அரசின் தமிழின அழிப்புக்குத் துணை போகின்ற வரலாற்றுத் தவறை இந்தியா செய்யக் கூடாது" என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இப்போது தெரிவித்துள்ளார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளினதும், தமிழீழ மக்களினதும், இந்த நேர்மையான உணர்வுகளை அறிந்து கொண்டு அவர்களது நியாயமான வேண்டுகோள்களை இந்தியா ஏற்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டது. அதற்குரிய செயற்பாடுகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும். இன்று இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகள் யாவும் (சிறிலங்கா உட்பட) இந்தியாவிற்கு எதிராகவே, இந்தியாவின் நலன்களுக்கு எதிராகவே செயற்பட்டு வருவதை இந்தியா அறியும்! எதிர்காலத் தமிழீழத் தனியரசு ஒன்றுதான் இந்தியாவின் மிக நெருங்கிய நேசநாடாக விளங்க முடியும் என்பதுவும் இந்தியா அறியாதது அல்ல!

சிந்திக்க வேண்டும் இந்தியா! நீதியின்பால், நியாயத்தின்பால் செயற்படவும் வேண்டும்!

இந்த ஆய்வு அவுஸ்திரேலியா மெல்பேர்ன் ~தமிழ்க்குரல்| வானொலியில் (17.03.08) ஒலிபரப்பாகிய ஆய்வின் எழுத்து வடிவமாகும்.


-தமிழ் நாதம்

Monday, March 17, 2008

சிங்களப்படைகளின் பாரிய புதை குழியாக வன்னி பெருநிலப்பரப்பு - அதன் படுதோல்வி வெகுதொலைவில் இல்லை

1995 இல், யாழ் குடாநாட்டிலிருந்து ஒரு தந்திரோபாயப் படைவிலகலைப் புலிகள் இயக்கம் செய்திருந்தது. அதன் பின்னர், வன்னிப் பெருநிலப்பரப்பில் விடுதலைப் போராட்டம் மையம் கொண்டு பன்னிரெண்டு வருடங்கள் பூர்த்தியாகி விட்டன.
இந்தப் பன்னிரெண்டு வருடங்களில் நாலரை வருடங்கள் சமாதான காலமாகக் கழிந்திருந்தன. மிகுதி 8 வருடங்களும் போர்க்காலமாகக் கழிந்து கொண்டிருக்கின்றன.இந்த 8 வருடப் போர்க்காலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்த வகையில் போரியல் முக்கியத்துவம் வாய்ந்த காலப் பகுதியாகும். இக்காலத்தில்தான் புலிகளின் மரபுவழிப் போர் ஆற்றல் உலகிற்குத் தெரியவந்த சமர்கள் நிகழ்ந்த காலமாகும்.இந்தவகையில், வன்னிப் பெருநிலப் பரப்பும் வரலாற்றில் மிகமுக்கிய இடத்தைப் பெற்றுவிட்ட போர்க்களமாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது. புலிகளை ஒடுக்கி, அழிக்க வாய்ப்பான நிலப்பகுதி என்று சிங்களத் தளபதிகள் கருதியிருந்த வன்னிநிலம்;

சிங்களப்படையின் புதைகுழியாக மாறிவரும் நிலையைக் கண்டு சிங்களதேசம் குழப்பத்தில் உள்ளது. வன்னியில் போராட்டம் மையம் கொண்ட நிலையில் நடந்துவரும் இந்த 8 வருடப் போரில் சுமார் பன்னிரண்டாயிரம் (12000) சிங்களப் படையினர் வன்னிநிலத்தில் மட்டும் கொல்லப்பட்டுள்ளனர். 1996 இருந்து 2002 வரை பின்னர் 2006 ஒக்டோபரிலிருந்து இன்று வரையான (2008 பெப்ரவரி) இந்த 8 வருடப்போரில் சில முக்கியமான சமர்கள் வன்னியில் நடந்திருந்தன.
அதில் முதலாவது பாரிய சண்டையாக முல்லைத்தீவு கூட்டுத்தளம்மீது புலிகள் நடாத்திய ஓயாத அலைகள் ஐ வலிந்த தாக்குதல் அமைந்திருந்தது.

படைத்தள அழிப்பு மற்றும் கடல்வழி தரையிறங்கிய படையினரைச் சிதைத்த அந்தச் சண்டைகளில் சுமார் 800 படையினர் அழிக்கப் பட்டிருந்தனர்.

முல்லைத் தளத்தைப் புலிகள் கைப்பற்றியதைத் தொடர்ந்து கிளிநொச்சியை ஆக்கிரமிக்க சிங்களப்படை முயன்றது. ~சத்ஜெய| என்ற பெயரிலான அந்த நகர்வுக்கு எதிராகப் புலிகள் எதிர்ச்சமர் தொடுத்தனர். இந்தச் சண்டைகளில் 650 படையினர் வரை கொல்லப் பட்டிருந்தனர்.


கிளிநொச்சி நகரைப் படையினர் ஆக்கிரமித்து நிலைகொண்டிருந்தபோது ஆனையிறவு - பரந்தன் நிலைகள் மீது புலிகள் ஒரு அதிரடித் தாக்குதலைத் தொடுத்தனர். அதில் 250 படையினர் கொல்லப்பட்டிருந்தனர்.

கிளிநொச்சி நகரை மீட்டெடுத்த ஓயாத அலைகள் ஐஐ வலிந்த தாக்குதலில் சிக்கிச் செத்த படையினரின் எண்ணிக்கை சுமார் 1150 ஆகும்.


அதே சமயம், வவுனியா - யாழ்சாலை வழியே நகர்ந்து நிலம் விழுங்கி வன்னியைத் துண்டாட ஆசைகொண்டு படைநகர்த்திய சிங்களப் படைத்தலைமை பலத்த அடிவாங்கியது.
இதுவரை காலமும் நடந்த சமர்களில், அதிகளவு படையினர் கொல்லப்பட்ட, தனித்த சமராக ஜெயசிக்குறு அமைந்துள்ளது.
ஜெயசிக்குறுவுக்கு எதிராக புலிகள் தொடுத்த நீண்ட எதிர்சமரில் கொல்லப்பட்ட படையினரின் எண்ணிக்கை ஐயாயிரத்திற்கும் மேல்.

வன்னிக்குள் புகுந்து அகலாக்கால் பரப்பிய சிங்களப்படைக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் முகமாக ஓயாத அலைகள் ஐஐஐ நடவடிக்கையை தலைவர் அவர்கள் தொடக்கி வைத்தார்.

ஜெயசிக்குறு விழுங்கிய நிலத்தை ஓயாத அலைகள் ஐஐஐ மீட்டெடுத்தது. கதிகலங்கிப் படையினர் ஓட்டம் பிடித்ததால் ஏறக்குறைய 500 படையினரை மட்டுமே புலிவீரர்களால் அழிக்க முடிந்தது. இந்த ஓட்டத்துடன் படையை விட்டோடிய சிங்களச் சிப்பாய்களின் எண்ணிக்கை பல்லாயிரமாகும்.

புதிய இராணுவ பரிமாணத்துடன் நடந்த குடாரப்பு தரையிறக்கத்துடன் ஆரம்பித்து - ஆனையிறவு படைத் தளத்தை அகற்றி முடித்த ஓயாத அலைகள் ஐஐஐ இன் முடிவில் புலிகள் இயக்கத்தின் போரியல் ஆற்றல் உலக இராணுவ ஆய்வாளர்களால் வியந்து போற்றப்படும் அளவுக்கு அமைந்திருந்தது.

வட போர்முனையில் புதிய முன்னரங்கு உருவாகி யிருந்தது. கிளாலி - முகமாலை - நாகர்கோவில் என்ற அந்த முன் அரங்கைப் பிளந்து கொண்டு, இழந்த ஆனையிறவைக் கைப்பற்ற சிங்களப் படை முயன்றது.
பாரிய அளவில் வெடிப் பொருட்களைப் பயன்படுத்தி ஷதீச்சுவாலை| என்று பெயரிட்டு சிங்களம் நடாத்திய அந்த நெருப்பு வீச்சைப் புலிவீரர்கள் தாக்குப்பிடித்துத் தடுத்து நிறுத்தினர். மறிப்புச்சமரில் புலிகள் காட்டிய உறுதியும் அதில் கடைப் பிடித்த போர்த்தந்திரங்களும் சிங்களப் படைக்கு மரணத்தையே பரிசளித்தன.மூன்று நாhட்கள் தொடந்து நடந்த தீச்சுவாலைக்கு எதிரான சமரில் 750 படையினர் கொல்லப்பட்டிருந்தனர்.இந்த வரலாற்றுத் தோல்வியுடன் சிங்களப்படை போர்நிறுத்த உடன்பாட்டிற்கு வந்தது. அதன்பின் 4 1/2 வருடங்கள் சமாதானமாகக் கழிந்தன.
2006 ஒக்டோபரில் மீண்டும் போர் வெடித்தது. அன்றிலிருந்து இன்றுவரை வன்னிப் பெருநிலப்பரப்பில் மரவுபழிப்போர் நடைபெற்று வருகின்றது. இந்த 16 மாதப் போரில் வன்னியில் மட்டும் சுமார் 2000 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். வட போர் முனை, மன்னார் களமுனை, வவுனியா- மணலாறு களமுனைகளில் படையினருக்குப் பாரிய இழப்புகள் ஏற்பட்டன.

இந்தவகையில் கடந்த 8 வருடப் போரில் 12000 சிங்களப் படையினரைக் கொன்ற களமாக வன்னிக்களம் காணப்படுகின்றது. இந்தப் புதைகுழி இன்னும் அதிகரிக்கும். சிங்களப் படைகளின் பாரிய புதைகுழியாக வன்னிப் பெருநிலப்பரப்பு மாறி - அதன் படுதோல்வியை வன்னிநிலம் நிர்ணயிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.

நன்றி :-
ஆக்கம்: நிலவரம் பத்திரிகைக்காக எல்லாளன்
ஸ்விஸ்முரசம்