Saturday, May 31, 2008

'இந்தியத் தடை நீடிப்பில் நமது படிப்பினைகள்"

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை மே 15 ஆம் நாளன்று இந்தியப் பேரரசு மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்திருக்கிறது.

இந்தியப் பேரரசு தனது வழமையான பொய்யான கருத்துப் பார்வையிலிருந்தே, அதாவது தமிழ்நாட்டிலும் இந்தியப் பேரரசின் கீழ் இருக்கும் இதர தேசிய இனங்களிடத்திலும் விடுதலைப் புலிகள் இயக்கம் தாக்கத்தை ஏற்படுத்துவதைத் தடுக்கவே இத்தடை என்று கூறியிருக்கிறது.

தடைகள்தான் தாக்கத்தை ஏற்படுத்துமே தவிர- தடை நீக்கங்கள் தாக்கத்தை ஏற்படுத்தாது என்பது இந்திய ஆளும் வர்க்கம் குடிகொண்டிருக்கும் புதுடில்லியின் தெற்கு மாடம் எனப்படுகிற ~சௌத் புளொக்|கிற்கு இத்தனை ஆண்டுகாலம் ஆகியும் தெரியவில்லை போலும்!

இந்தியாவை இதற்காக நாம் கரித்துக் கொண்டிருப்பதற்கு அப்பால் நமக்கான உரத்த சிந்தனைகளை இத்தடை ஏற்படுத்தியதாக உள்வாங்க வேண்டிய தேவையும் இருக்கிறது.

உலக நாடுகளிலெல்லாம் புலம்பெயர் தமிழர்கள் அந்தந்த நாடுகளுக்கு அமைய தங்களது பரப்புரைகளை தடைகள் இருக்கின்ற நிலையிலும் மேற்கொண்டு வருகிறோம்.

அதன் விளைவாகவே சிறிலங்கா அரசாங்கமானது ஐக்கிய நாடுகள் அவையத்தின் மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்புரிமையை பறிகொடுத்து விட்டு நிற்கிறது.

ஆனால், இந்தியாவைப் பொறுத்த வரை தமிழ்நாட்டுத் தமிழர்கள் இருக்கிறார்கள் என்ற காரணத்தினாலோ என்னவோ புலம்பெயர் உறவுகளின் தொடர்பாடல்கள் காத்திரமானதாக இல்லாதும் இருக்கிறது.

உலக நாடுகளில் எல்லாம் சிறிலங்கா தூதரகங்கள்- தமிழர்களைக் கண்டு அச்சப்படும் நிலையில், இந்தியாவில் இன்னமும் தமிழ்நாட்டில் சிறிலங்கா தூதரகம் திமிர்த்தனத்தோடே செயற்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள ஈழ விடுதலை ஆதரவுச் சக்திகளின் நிலைதான் என்ன?

சமூக விடுதலை இயக்கங்களாக தங்களை அர்ப்பணித்துக்கொண்டு ஈழத் துயரிலும் பங்கேற்பாளர்களாகவே அவை இருக்கின்றன.

அரசியல் கட்சிகளோ அரசியல் தகமைகளுக்கு ஏற்ப நின்று கொண்டு ஈழத்துயரில் பங்கேற்பவர்களாக இருக்கின்றனர். அவர்களின் செயற்பாட்டுத் தளம் என்பது அங்கு நிலவும் சமூக- அரசியல் நிகழ்வுகள் அல்லது சூழல்களைப் பொறுத்ததாக அமைகின்றது.

ஈழத் தமிழர்களுக்கு பெருந்துயர் நேர்கையில் பெருங்குரலில் ஆதரவுக்கரம் நீட்டாமலும் அவர்கள் இல்லை.

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் வீரச்சாவைத் தழுவியதைத் தொடர்ந்து 'இந்திய அரசே! சிறிலங்காவுக்கு ஆயுத உதவி வழங்காதே!" என்ற கோரிக்கை பெரியார் திராவிடர் கழகத்தால் மக்கள் இயக்கமாக முன்னெடுக்கப்பட்டு புதுடில்லி வரை அது விரிவடைந்து சென்றது.

புதுடில்லியில் எதிரொலித்த அந்த அதிர்வலைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

அதற்கு தமிழ்நாட்டு உணர்வாளர்கள் மட்டுமே பொறுப்பானவர்கள் என்று புலம்பெயர் உறவுகள் கைகட்டி நின்றுவிட முடியாது.

தமிழ்நாட்டு உணர்வாளர்களில் பெரும்பாலானோர் குக்கிராமங்களில் வாழ்கின்றவர்களாக - நாளொன்றுக்கு 100 ரூபாய் அளவில் குறைந்த ஊதியம் பெறுகிறவர்களாக வாழ்கின்ற நிலையிலும் ஈழத் தமிழர்கள் தங்களது தொப்புள்க்கொடி உறவுகள் என்கிற சதையாட்டத்தால் நமக்காக கொடி பிடித்து சிறையேகின்றனர்- தொடர் வண்டியேறுகின்றனர்.

இந்தப் பணியையே தொடர்ந்தும் அவர்களால் செய்து கொண்டிருக்க முடியாது.

அதே நேரத்தில் அவர்கள் அரசியல் களத்தில் - அதாவது நடைமுறைக் களத்தில் நிச்சயமாக அரசாங்கத்தை அதிர வைக்கின்ற காத்திரமான பங்களிப்பாளர்களாக உருவெடுப்பதை நாம் நிராகரிக்கவே முடியாது.

இத்தகைய மன உறுதி கொண்ட தோழர்கள், இத்தகைய சமூக இயக்க- அரசியல் கட்சிகளின் தலைவர்கள் என்கிற சக்திகளுக்கு அப்பால் புத்திஜீவிகளை நாம் எந்த வகையில் கைக்கொண்டிருக்கிறோம் என்பதே இப்போது நம் முன் உள்ள பிரதான விடயம்.

இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களே பரப்புரை செய்பவர்களாக இன்றளவும் இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் அரசியல் கட்சித் தலைவர்களை மட்டுமே சந்திப்பவர்களாகவே அவர்கள் இருக்கின்றனர். இந்திய அரசியல் சூழல் - தாங்கள் சந்திக்கின்ற நபர்கள் - தாங்கள் பங்கேற்கின்ற கூட்டம் ஆகியவை பற்றிய எதுவித புரிதலும் அற்றவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் பிழையாக இதனை நாம் கருதவும் வேண்டியதில்லை.

புதுடில்லியில் நிகழ்வு ஒன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பங்கேற்றார்.

தமிழீழம் குறித்து பேசுவதைக் கேட்க புதுடில்லியில் தமிழ்நாடு தவிர்த்த தங்களது தேசிய இனங்களின் விடுதலை குறித்த அக்கறையுடைய - ஆதரவு கொண்டோர் பங்கேற்ற அந்தக்கூட்டத்தில்,

'தமிழீழம் விடுதலை பெற்றால் இந்தியாவுக்குத்தான் நாங்கள் விசுவாசமாக இருப்போம்" என்று பேசினார்.

அங்கிருந்த அசாம் மற்றும் நாகா மாணவர்கள், 'எங்கள் தேசிய இனங்களை ஒடுக்குகிற இந்தியாவுக்குத்தான் நீங்கள் விசுவாமாக இருப்பீர்கள் எனில் எங்களின் ஆதரவு உங்களுக்கு எப்படிக் கிடைக்கும்?" என்று மடக்க, நமது கூட்டமைப்பு உறுப்பினரோ வெலவெலத்துப் போயிருக்கிறார். உடன் பங்கேற்ற தமிழ்நாட்டு புத்திஜீவி காப்பாற்றியிருக்கிறார்.

எல்லா நாடுகளிலும் தன் முனைப்பு அரசியல் உண்டு. தமிழ்நாடும் அதற்கு விதிவிலக்கல்ல. நமது ஆதரவுத்தளங்களும் அதற்கு விலக்கானவை அல்ல.

தமிழ்நாட்டில் எந்த எந்த இயக்கங்கள்- எப்படியான நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கின்றன?

தமிழ்நாட்டில் நமக்காக தீவிரமாகச் செயற்படும் இயக்கங்களின் நிர்வாகிகள் யாவர்? அவர்களுக்கும் பிற இயக்கங்களுக்கும் இடையே உள்ள உறவுத்தன்மை என்ன?

அவர்களிடையே கருத்து வேற்றுமை அல்லது தன்முனைப்பு அல்லது ஏதோ ஒன்று இடைவெளி இருந்தாலும் அதனைத் தாண்டியதாக அவர்களை எப்படி நாம் ஒருங்கிணைப்பது என்று சிந்திப்பது அவசியமானது.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவரோ, ஒரு இயக்கத்தின் ஊரறிந்த தலைவர் ஒருவரைச் சந்தித்த போது மற்றொரு தலைவரின் பெயரைச் சொல்லி, நான் உங்களைப் பற்றி அந்தத் தலைவரிடம் சொல்லுகிறேன்.... உங்களையெல்லாம் பயன்படுத்திக்கொள்ள நான் வலியுறுத்துகிறேன் என்று கூறியிருக்கிறார்.

இதனைக் கேட்டு அவர் அழுவதா? சிரிப்பதா? எனச் சிந்திப்பாரா? எரிச்சலடைவாரா?

இங்குள்ள ஊடகங்கள் தொடர்பிலும் எதுவித புரிதலுமின்றி தொடர்பாடல்களை கூட்டமைப்பு உறுப்பினர்கள் மனம் போக போக்கில் கையாளுகின்ற பொறுப்பற்ற தன்மையை நாம் கண்கூடாகக் கண்டு தலையால் அடித்துக்கொள்ள வேண்டிய அவலத்தில் இருக்கின்றோம்.

என்னதான் வழி?

புத்திஜீவிகளைத் தெரிவு செய்வோம்.

ஓய்வு பெற்றவர்கள் - புலமை பெற்றவர்கள் - ஈழத் துயர் அறிந்தோர் - மக்கள் மத்தியில் பணிபுரிந்தோர் என ஒரு கலவையான ஒரு பரப்புரை அணி உருவாக்கப்படவே இல்லை என்றுதான் கூற முடியும்.

அதற்கான பொறுப்பு தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குத்தான் உண்டு என்பதில்லை.

நிச்சயமாக புலம்பெயர் தமிழர்களுக்கே உண்டு.

தமிழ்நாட்டுத் தமிழர்களுடனான தொடர்பாடல்களை - தமிழ்நாட்டுப் புத்திஜீவிகளுடனான தொடர்பாடல்களை புலம்பெயர் தமிழ் உறவுகள் ஏற்படுத்த எதுவித தடையும் இல்லை. அவர்களை ஒருங்கிணைத்துச் செயற்பட தமிழ்நாட்டில் வல்லமை கொண்ட ஈழ ஆதரவுத் தலைவர்கள் இல்லாமலும் இல்லை.

அவர்கள் தங்களது சக்திகளுக்கு ஏற்ப இயங்கினாலும் புலம்பெயர் தமிழர்களினது நெருக்குவாரங்கள் - இடைவிடாத அழுத்தங்கள் - என்பவனற்றினூடே இயக்குகிறவர்களாகவும் நாம் இயங்கியாக வேண்டும்.

நாம் சொல்லித்தான் அவர்கள் செய்வார்களா? இல்லைதானே என்று எதிர்க் கேள்வியிட்டுக் கொள்ள வேண்டியதுமில்லை நாம். அதனைத்தான் முன் பத்திகளில் குறிப்பிட்டுள்ளோம். அங்குள்ள சமூக- அரசியல் சூழல்கள் அவர்களின் செயற்பாடுகளை அவர்களின் இயக்கங்கள் - கட்சிகளின் நோக்கங்கள் அவர்களின் செயற்பாடுகளைத் தீர்மானிக்கின்றன.

அதே நேரத்தில் பெருந்துயர் நமக்கு நேர்கையில் நமக்காக அழவும், குரல் கொடுக்கவும் அவர்கள் தவறுவதில்லை.

அவர்களின் நாளாந்த இயக்க- அரசியல் செயற்பாடுகளுடன் நமக்காக புத்திஜீவிகளை ஒருங்கிணைத்து செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வது என்பது நிச்சயமாக உண்மையான ஈழத் தமிழ் ஆதரவுத் தலைவர்களுக்கு ஒரு இடையூறாக அமைந்து விடாது என்றே நம்புவோம்.

அத்தகைய புத்திஜீவிகள் இயங்க வேண்டிய தளங்களை ஏற்படுத்துவதிலும் நாமே பங்கேற்பாளர்களாகவே இருக்கிறோம். அப்படியான ஒரு செயற்பாடு மேற்கொள்ளப்பட்டு ஒரு பரப்புரையை புதுடில்லியில் மேற்கொண்டிருந்தால் இப்படியான விடயங்களில் மாற்றங்களைக் கொண்டு வர முடியும்.

எப்படி என்கிறீர்களா?

இந்திய உள்துறை அமைச்சகத்தின் 2007-2008 ஆம் ஆண்டு உள்நாட்டு பாதுகாப்பு குறித்த அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

அதில் ஜம்மு காசுமீரம் - நாகலாந்து - அசாம் - நக்சல் என பல்வேறு பிரச்சினைகள் அதன் தாக்கங்கள் குறித்தெல்லாம் விவாதிக்கப்பட்டும் இருக்கிறது.

ஊடகங்கள்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் ஊடுருவல் - அவர்களுக்காக கடத்தல்கள் என்று செய்தி வெளியிடுகின்றன.

ஆனால், இந்திய உள்துறை அமைச்சகத்தின் உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பிலான அறிக்கையில் ஒரு இடத்தில் மட்டுமே தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயர் வருகிறது. அது தடை செய்யப்பட்ட இயக்கங்களின் பட்டியலிலே இருக்கிறது.

ஆளும் வர்க்கம் எனப்படுகிற தெற்கு மாட அதிகார வர்க்கத்தின் சிந்தனைப் போக்கை நாம் விமர்சிக்கும் அதே நேரத்தில் பாரிய அரசியல் அழுத்தங்களை ஏற்படுத்தினால் விரும்பியோ விரும்பாமலோ அவர்கள் சில விடயங்களை செய்தாக வேண்டிய நிலையும் வரலாம்தானே. அத்தகைய அரசியல் அழுத்தங்களை நாம் உருவாக்கினோமா?

இந்த புத்திஜீவிகள் குழுவினரை அத்தகைய அரசியல் அழுத்தங்களுக்கு பயன்படுத்தலாம்தானே?

அதேபோல்,

ஈழத் தமிழர் துயரை உடனுக்குடன் தமிழ்நாட்டுத் தமிழர்கள் அறிந்து கொள்ளவோ
அல்லது உண்மை நிலைகளை அவர்கள் அறிந்து கொள்ளவோ எதுவித வாய்ப்புகளும் இல்லை. தாயக ஏடுகள் எதுவும் தமிழ்நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவதும் இல்லை. புலம்பெயர் ஏடுகள் எதுவும் தமிழ்நாட்டுக்குள் வருவதும் இல்லை. அப்படியான ஏடுகள் புலம்பெயர் நாடுகளில் ஏராளமாக வெளிவந்த போதிலும் எந்த ஏடும் வருவதில்லை.

தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தின் ஏடுகள் தான் சட்டப்பூர்வமாக உள்ளே அனுமதிக்கப்படக்கூடாது என்று வைத்துக் கொண்டாலும் தமிழ்நாட்டு ஊடகங்களைப் போல்தானே இதர புலம்பெயர் நாட்டு ஊடகங்களும் போராளிகள் தொடர்பான செய்திகளை வெளியிடுகின்றன. ஆகக்குறைந்த பட்சம் அந்த ஏடுகள் சமூக இயக்கங்களின் பிரதிநிதிகளுக்கு சென்றால்தான் பல்வேறு களநிலைமைகளை அவர்கள் உணர்ந்து அதனை இதர தோழர்களுக்கும் பரப்புரைக்காக பகிர்ந்தளிக்க முடியும்.

தமிழ்நாட்டு ஊடகங்கள்- இந்திய ஊடக முகாமையாளர்கள் கொடுக்கின்ற செய்திகளைத்தான் பிரதி செய்கின்றன. ஒன்றிரண்டு ஊடகங்களே ஈழத் தமிழ் இணைய ஊடகங்களிலிருந்து உருவி எடுக்கின்றன.

ஆக ஊடக வகையில் அதாவது உண்மை நிலைமைகளை தமிழ்நாட்டின் குக்கிராமத்தில் உள்ள தமிழர்களுக்கும் சென்று சேர்க்கின்ற சூழலையும் உருவாக்க வேண்டியது நமது கடமையே.

நன்றி: நிலவரம் (30.05.08)

Friday, May 30, 2008

'வரலாறு வழங்கப் போகும் தீர்ப்பை யாரால்தான் தடுக்க முடியும்?"

வரலாற்றின் தவறுகளை மறப்போர் அதன் தவறுகளை மீளவும் செய்ய சபிக்கப்பட்வர்களாவர் - இது ஜேர்மனிய சிந்தனையாளர் ஜோhஜ் சத்நயணாவின் வார்த்தை. சமீப காலமாக சிங்களத்தின் இறுமாப்பு நிறைந்த வார்த்தைகளை கேட்க நேரும் போதெல்லாம், நான் இந்த வரிகளை நினைத்துக்கொள்வதுண்டு.

உலக மேலாதிக்க அரசியல் வரலாற்றில் இந்த வரிகள் யாருக்கெல்லாம் பொருந்திப் போகும் என்ற ஆராய்ச்சியில் நான் ஈடுபட விரும்பவில்லை. ஆனால் ஒடுக்குமுறைகளின் ஏகபோகவாதிகளாக எப்போதுமே இருக்க முடியும் என நம்புவோருக்கெல்லாம் இந்த வரிகள் பொருந்தும்.

சிங்களத்தின் நவீன அரசியல் வரலாறு என்பதே தமிழர்களை அடக்கி ஆண்டதன் வரலாறுதான். ஓவ்வொரு கால கட்டத்திலும் தெற்கின் ஆட்சியைக் கைப்பற்றும் சிங்கள ஆளும் வர்க்கம் அந்த ஒடுக்குமுறை வரலாற்றைத் தொடர்வதில் அப்பழுக்கற்ற முறையில் ஒற்றுமையைப் பேணி வந்திருக்கின்றது.

இன்று அந்த வரலாற்றுக் கடமையை நிறைவேற்றும் பொறுப்பை மகிந்த தலைமையிலான சிங்கள ஆளும் வர்க்கம் பொறுப்பேற்றிருக்கிறது.

'அடுத்த வருடம் யுத்தம் இருக்கப் போவதில்லை. நாங்கள் விடுதலைப் புலிகளின் தலைவரை இல்லாமலாக்கி விடுதலைப் புலிகளை பூண்டோடு அழித்து விடுவோம். இப்பொழுது அங்கு சிறு தொகையான புலிகள் மட்டும்தான் எஞ்சியிருக்கின்றனர். அவர்களையும் விரைவில் அழித்து விடுவோம்". சமீப காலமாக இப்படியான வசனங்களை அடிக்கடி கேட்க முடிகின்றது.

இப்படியான வீரவசனங்களைக் கேட்கும் போதெல்லாம் எனக்கு இந்தியத் தூதுவராக இருந்த ஜே.என்.தீட்சித் 87 களில் கூறிய வார்த்தைகள்தான் நினைவுக்கு வந்து போகும். இந்திய - சிறிலங்கா ஒப்பந்தத்தை ஏற்கும் படி பல்வேறு வகையான பசப்பு வார்த்தைகளைப் பயன்படுத்திய தீட்சித் இறுதியில், 'எனது சுங்கான் பற்றி முடிவதற்குள் உங்களை இருந்த இடம் தெரியாமல் ஆக்கி விடுவோம்" என ஆவேசமாகக் கூறினார்.

அன்று தீட்சித்தின் ஆவேசமான இந்த வார்த்தைகளை அமைதியாகச் செவிமடுத்த திரு. பிரபாகரன் அவர்கள் 'சரி பார்ப்போம்" என்றார். இப்பொழுதும் அவரது நிலைப்பாடு அப்படித்தான் இருக்கின்றது. எவ்வேளையிலும் தடுமாறாமல் புலிகள் வரலாற்றிலிருந்து கற்றுக்கொண்டு தமது பயணத்தைத் தொடர்கின்றனர்.

இந்த இடத்தில் நாம் கடந்து வந்த அரசியல் வரலாற்றின் ஒரு சிறு பகுதியை நினைத்துக் கொள்வோம்.

தமிழர் தேசத்தின் ஒடுக்குமுறைக்கு எதிரான அரசியல் வளர்ச்சியானது கோரிக்கை அரசியலில் இருந்து விடுபட்டு, எதிர்ப்பு அரசியலாகப் பரிணமித்த காலத்திலிருந்து இன்று வரையான சிங்களத்தின் பௌத்த தேசியவாத கொள்கை என்பது தமிழர்களின் போராட்டத்தை அழித்தொழிப்பதை நோக்கமாகக் கொண்டதே. இது தவிர வேறு எந்த நோக்கமும் அதற்குக் கிடையாது. அந்த நோக்கத்திற்கு இசைவாகவே இன்று வரை சிங்களம் செயலாற்றி வருகின்றது.

70-களின் பிற்பகுதியிலிருந்து, தமிழர் தேசிய விடுதலை என்பது, ஒரு ஆயுத வழி புரட்சிகர அரசியல் வழிமுறையினூடாகவே சாத்தியப்படக்கூடியது என்ற வாதம் தமிழ் மக்கள் மத்தியில் வலுவடைந்தது.

இதன் தொடர்ச்சியாகத்தான் பல ஆயுத வழி அரசியல் இயக்கங்களும் தோன்றின. அவ்வாறு தோன்றிய இயக்கங்கள் தமக்குள் கோட்பாடு மற்றும் அரசியல் நிலைப்பாடுகளில் சில வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும் அடிப்படையில் சிங்கள மேலாதிக்கத்திலிருந்து தமிழ் மக்களை விடுவித்தல், தமிழ் மக்கள் சுய கௌரவத்துடனும், தன்னாட்சி அதிகாரத்துடனும் வாழ்தல் போன்றவற்றில் உடன்பாடுகளைக் கொண்டிருந்தன.

இத்தகைய பின்புலத்தில்தான் அவ்வாறான இயக்கங்களினால் ஒன்றிணைந்து திம்புப் பேச்சுவார்த்தையில் பங்குகொள்ள முடிந்தது. அந்தப் பேச்சுவார்த்தையின் தோல்வியையே இந்தியா தனது நேரடி தலையீட்டிற்கான ஒப்பந்தமாக வளர்த்தெடுத்தது.

இந்தக் காலத்தில் இந்தியா தனது மேலாதிக்க நலனின் கீழ் தமிழர் பிரச்சினையை அணுகியது. இதன் ஆபத்தை விளங்கிக்கொண்ட விடுதலைப் புலிகள் ஆரம்பம் தொட்டே இந்தியாவுடன் ஒரு வகையான பனிப்போரில் ஈடுபட்டனர். அதுவே காலப்போக்கில் இந்தியாவிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான நேரடி மோதலாகப் பரிணமித்தது.

இந்த இடத்தில் குறித்துக்கொள்ள வேண்டியது என்னவென்றால் நரித்தனமான அரசியலில் கைதேர்ந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் மனதில் ஒரு தெளிவான நிகழ்சி நிரல் இருந்திருக்க வேண்டும்;. ஜே.ஆரைப் பொறுத்த வரையில் ஆரம்பத்தில் தமிழர் விடுதலைப் போராட்டத்தை மிக இலகுவில் அழித்தொழித்துவிட முடியுமென்றே அவர் கருதியிருந்தார்.

இதனால்தான் 1979 இல் பயங்கரவாத தடைச்சட்டத்தை நிறைவேற்றியதுடன் ஆறு மாத காலத்தில் தமிழரின் அயுதப் போராட்டத்தை அடக்கி தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு இராணுவத் தளபதிகளுக்கு கட்டளை பிறப்பித்திருந்தார். இதனை ஒரு சிங்கள ஆய்வாளரே 'தீவிர சுய மகிழ்ச்சி எதிர்பார்ப்பு" என்று வர்ணித்திருந்தார். ஆனால் இலங்கை உள்விவகாரங்களில் இந்தியா தலையிட்டதைத் தொடர்ந்து ஜே.ஆரின் மூளை வேறு ஒரு விடயத்தைச் சிந்தித்திருக்க வேண்டும்.

அதாவது இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஒன்றிணைந்த தமிழர் போராட்ட சக்தியை சிதறடித்தல் மற்றும் இந்தியாவுடன் தமிழர்களுக்கு இருக்கும் உறவை வலுவிழக்கச் செய்தல்.

நான் இவ்வாறு கூறுவதற்கெல்லாம் எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை. ஆனால், பிற்காலங்களில் நடைபெற்ற சம்பவங்களையும் அரசியல் போக்குகளையும் அடியொற்றிச் சிந்திக்கும் போது இவ்வாறானதொரு மதிப்பீட்டிற்கான நியாயப்பாடு உண்டு.

இந்தியா - சிறிலங்கா ஒப்பந்தத்தின் போது இந்தியாவிற்கு ஒரு நலன் இருந்தது. அதேபோன்றே ஜே.ஆருக்கும் ஒரு நலன் இருந்தது. இலங்கையின் தமிழ் ஆயுத இயக்கங்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் இலங்கையின் அரசியல் எதிர்காலத்தைத் தனது மேலாதிக்கத்தினுள் கொண்டு வருவதே இந்தியாவின் நலனாக இருந்தது.

ஜே.ஆர். ஜெயவர்த்தனவைப் பொறுத்த வரையில் நான் மேலே குறிப்பிட்ட இரண்டு விடயங்களும் ஜே.ஆரின் நலன்களாக இருந்தன. ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் நரித்தனமான அரசியல் தந்திரோபாயத்திற்கு இந்தியா பலியானது. இறுதியில் இந்தியாவின் முயற்சிகள் அனைத்தும் விடுதலைப் புலிகளுடன் மோதுவது என்ற இந்தியப் படைத்துறை முடிவால் படுதோல்வியடைந்தன.

ஜே.ஆர். எதிர்பார்த்தது போன்றே தமிழர் விடுதலை இயக்கங்கள் இந்தியா என்னும் மாயமானுக்குப் பின்னால் அணிதிரண்டன. விடுதலைப் புலிகள் ஒரு அணியாகவும், இந்தியாவிற்கு பின்னால் நின்ற இயக்கங்கள் ஒரு அணியாகவும் மாறியதில் தமிழர் போராட்ட வலு சிதறியது. அத்துடன் அதுவரை இந்தியா குறித்த கற்பனைகளில் இருந்த ஈழத் தமிழ் மக்கள் இந்தியாவை எதிர்க்கத் தொடங்கினர்.

இந்தக் காலத்தில் ஜே.ஆரால் போடப்பட்ட சிங்கள அடித்தளத்தில்தான் இன்றுவரை சிங்களம் இயங்கி வருகின்றது. இராணுவ ரீதியான ஒரு வழிமுறையினுடாக தமிழர் போராட்டத்தை அழித்தொழிக்கும் அதேவேளை தமிழர் சமூகத்தில் எதிர்ப் போராட்ட அணிகளை உருவாக்கி உள்ளக ரீதியாகவும் தமிழர் போராட்டத்தை அழித்தொழித்தல் என்னும் இருமுனை யுத்த தந்திரோபாயம்தான் ஜே.ஆரின் பால பாடமாகும்.

ஜே.ஆரின் தந்திரோபாயத்திற்கு நமது தலைமுறை பலியாகியிருக்கின்றது என்பதை நாம் மனந்திறந்து ஏற்கத்தான் வேண்டும். இன்றுவரை விடுதலைப் புலிகளுக்குச் சவாலாக இருப்பது சிங்களத்தின் இராணுவம் அல்ல, தமிழ் சமூகத்திற்குள்ளே இருந்து தொழிற்படும் அவ்வறான தமிழ்த் தேசிய எதிர் அரசியல் அமைப்புக்கள்தான்.

1987 இன் பின்னர் சிங்களத்தின் அரசியல் கொள்கை என்பது பலமடைந்து வரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழித்தொழிப்பதாகத்தான் இருந்தது. அதற்கான எவரது உதவியையும் பெறுவது, அதற்காக அவர்களுடன் எவ்வாறான உடன்பாடுகளையும் செய்வது என்ற நிலைப்பாட்டிற்கு சிங்களம் சென்றது. சிங்களத்தின் இன்றைய வெளிநாட்டுக்கொள்கை என்பதே விடுதலைப் புலிகளை மையப்படுத்தியதுதான்.

ஒரு நாட்டின் வெளிநாட்டுக் கொள்கை முற்றிலும் ஒரு விடுதலை இயக்கத்தை அடிப்படையாகக்கொண்டு இருப்பது சிறிலங்காவில் மட்டுமாகத்தான் இருக்கும் என நான் நினைக்கிறேன்.

இத்தகைய பின்புலத்தில்தான் ஜே.ஆர். நினைத்து முடியாமல் போனதை, பிரேமதாசா நினைத்து முடியாமல் போனதை, சந்திரிகாவும் அவரது மாமனாரும் கற்பனை செய்து முடியாமல் போனதை இப்பொழுது மகிந்தவும் அவரது சகோதரர்களும் இணைந்து கற்பனை செய்கின்றனர்.

கிழக்கில் கருணா விடயத்தால் ஏற்பட்ட சில தடைகளால் புலிகள் கிழக்கிலிருந்து போரியல் சார்ந்து பின்நகர வேண்டிய தேவை ஏற்பட்டது. வெளித் தோற்றப்பாட்டில் இது ஒரு பின்னடைவுதான்.

இதனை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொண்ட மகிந்த தலைமையிலான சிங்களம் அதே போன்று வடக்கையும் இராணுவ ரீதியாக வெற்றி கொள்ள முடியுமென்ற நப்பாசையில் தனது படைகளை நகர்த்தி வருகின்றது. இப்பொழுது தடுமாறுகிறது.

எப்போதுமே சொந்த மூளையில் இயங்காத சிங்களத்தின் படைத்துறை, எப்போதுமே சொந்த மூளையை மட்டுமே நம்பும் போரியல் திறன் கொண்ட புலிகளை எதிர்கொள்வதில்
தடுமாறுகின்றன.

சிங்களம் இன்று இறுமாப்புடன் நோக்கும் அதன் கிழக்கு வெற்றிகளையும் அதிக காலத்திற்கு அது தக்க வைக்கப் போவதி;ல்லை. சிங்களம், புலிகளை அழித்தொழித்து விடுவதாக அங்கலாய்க்கும் போதெல்லாம் புலிகளோ, திரு. பிரபாகரன் அவர்கள் அன்று தீட்சித்திடம் சொன்ன வார்த்தைகளுடன் தமது பயணத்தை எந்தவிதமான தடுமாற்றமும் இல்லாமல் தொடர்கின்றனர்.

வரலாற்றில் இருந்து எதனையுமே கற்றுக்கொள்ளாத சிங்களத்திற்கு (மகிந்த அணியினருக்கு) வரலாறு வழங்கப் போகும் தீர்ப்பை யாரால்தான் தடுக்க முடியும்?.
-தாரகா-
நன்றி: நிலவரம் (30.05.08)

Wednesday, May 28, 2008

'மஹிந்த சிந்தனை' ஆட்சியில் தகிக்கின்றது இலங்கைத் தீவு

"குதிரை ஓடிய பின்னர் லாயத்தை மூடிய கதையாக' இருக்கிறது ஜே.வி.பி. இப்போது மேற்கொள்ளும் பிரசாரமும் சூளுரையும்.

தற்போது ஆட்சியிலிருக்கும் அரசை வீழ்த்தி விரைவில் நாட்டுக்குப் பொருத்தமான மக்களின் விருப்பை நிறைவேற்றக்கூடிய அரசை ஆட்சியில் அமர்த்துவோம் என்றும் அது பிரதிக்ஞை செய்திருக்கின்றது.

கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற அதன் ஐந்தாவது தேசிய மாநாட்டிலேயே அக்கட்சியின் பொதுச் செயலாளரான ரில்வின் சில்வா இவ்வாறு சபதம் செய்திருக்கின்றார்.
நல்லது. இன்று தான் சூளுரைக்கும் விவகாரத்தைத் தன்னால் செய்யக்கூடியதாக இருந்தபோது, "மஹிந்த சிந்தனை'யைத் தூக்கிப்பிடித்து, அந்த வாய்ப்பைக் கோட்டை விட்ட ஜே.வி.பி., இப்போது "கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்வது போல' தத்துவம் பிளக்கின்றது.

கடந்த வருட இறுதியில், இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பின்போது, இந்த அரசை வசமாக வீழ்த்தி, பொதுத் தேர்தல் ஒன்றுக்குச் செல்லும் முழு வாய்ப்புகளும் இருந்தன.

ஆனால் ஆளும் தரப்பின் சில "தரகு' முகவர்களுக்கு விலைபோன ஜே.வி.பியின் மூத்த தலைவர்கள், இந்த அரசைப் பதவி இழக்கச் செய்யும் வகையில் அந்த நாடாளுமன்ற வாக்கெடுப்பின்போது செயற்படுவதற்கு எதிர்க்கட்சிகள் தீட்டியிருந்த திட்டத்துக்குக் காலை வாரிவிட்டன. அதன் மூலம் இந்த அரசை வீட்டுக்கு அனுப்புவதற்குக் கிடைத்த பெரு வாய்ப்பை சிதறடித்து நாசமாக்கினர் அந்த ஜே.வி.பி. தலைவர்கள்.

ஒன்று திரண்டிருந்த எதிர்க்கட்சிகளோடு ஜே.வி.பி. அன்று ஐக்கியப்பட்டுச் செயற்பட முன்வந்திருந்தால், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் செருக்குக்கு நல்ல பதிலடியை அப்போதே கொடுத்திருக்கலாம்.

ஆனால் அச்சமயத்தில் சோரம்போன ஜே.வி.பி. தலைவர்களினால் எதிர்க்கட்சிகளின் அந்த முயற்சியும் சோர்ந்து போயிற்று.

இப்போது மீண்டும் அரசுக்கு எதிராக ஜே.வி.பி. தலைமை வரிந்துகட்டி நிற்கின்றது.
ஆனால் தற்போது ஜே.வி.பி. இண்டாக உடைந்துவிட்டது என்பதுதான் யதார்த்தபூர்வ உண்மையாகும். நாடாளுமன்றத்தில் ஜே.வி.பியைச் சேர்ந்த 38 எம்.பிக்களில் பதினொரு பேர் பிரதான ஜே.வி.பி. அணியில் இன்று இல்லை.

இந்த அரசை வீட்டுக்கு அனுப்ப இப்போது ஜே.வி.பி. தீர்மானித்தாலும் அதற்காக ஏனைய எதிர்க்கட்சிகளுடன் இந்தச் சமயத்திலாவது கூட்டுச் சேர்ந்தாலும் கூட தற்போதைய அரசை நாடாளுமன்றில் தோற்கடிப்பதற்கான பலம் எதிரணிக்குக் கிட்டுவது துர்லபமே.
அத்தகைய முயற்சி ஒன்றின்போது, தற்சமயம் ஜே.வி.பியை விட்டு விலகித் தனி அணி உருவாக்கியிருக்கும் விமல் வீரவன்ஸ குழுவினர் அரசுத் தரப்புக்கு முதுகு கொடுத்து முண்டு கொடுத்து அரசைக் காப்பாற்றி விடுவார்கள் என்பது திண்ணம்.

ஜே.வி.பியின் உதவி, ஒத்துழைப்பால் ஜனாதிபதி அதிகாரத்தைப் பிடித்த மஹிந்த ராஜபக்ஷ தமது அந்தப் பதவி நிலைச் செல்வாக்கைப் பயன்படுத்தி பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. உட்பட சகல கட்சிகளையும் வரிசையாக உடைத்தார். பதவி ஆசைக்கு அடிமைப்பட்ட அரசியல்வாதிகளைப் பகடைக்காய்களாக்கி ஒவ்வொரு கட்சியாக உடைத்துப் பிளந்த மஹிந்தரின் கைகளில் ஜே.வி.பியாலும் தப்பமுடியவில்லை. அதையும் பிளந்து, தாம் பதவிக் கதிரைக்கு ஏற உதவிய ஜே.வி.பி. ஏணியையும் பிளந்தார் மஹிந்தர். அதன் பின்னர்தான் இப்போது சூடு, சுறணை வந்திருக்கிறது ஜே.வி.பிக்கு. அதனால்தான் இப்போது அரசைக் கவிழ்ப்பது பற்றியும் இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவது குறித்தும் சீறுகின்றது அக்கட்சி.

அத்தோடு அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா இன்றைய அரசியல் சூழல் தொடர்பாக கட்சியின் தேசிய மாநாட்டில் தெரிவித்த ஒரு கருத்தும் இங்கு கவனிக்கத்தக்கது.
கிழக்கில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் இனக்கலவரத்தை மஹிந்த ராஜபக்ஷவின் அரசே தூண்டிவிட்டிருக்கின்றது என்று அவர் அங்கு குற்றம் சாட்டியிருக்கின்றார்.
அதேநேரம், கொழும்பிலும் தென்னிலங்கையின் பிற இடங்களிலும் அப்பாவிகளைக் கொன்றொழிக்கும் கொடூரக் குண்டு வெடிப்புகளை மேற்கொள்வதன் மூலம் தெற்கில் மீண்டும் ஓர் இனக்கலவரத்துக்குப் புலிகள் தூபமிடுகின்றனர் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியிருக்கின்றார்.

இத்தகவல்களும், பரஸ்பரக் குற்றச்சாட்டுகளும், இலங்கையில் கள நிலைமை முற்றி மிக மோசமடைந்து வருவதையே எடுத்துக்காட்டுகின்றன.
நிலைமையை உடன் சீர் செய்யக்கூடிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் முழு இலங்கைத் தீவுக்குமே விபரீதம் நேர்வதைத் தடுக்க முடியாது என்பது திண்ணம்.
வடக்கு, கிழக்கில் தமிழர் தாயகத்தில் என்றுமில்லாத போர்த் தீவிரத்தில் தரப்புகள்.
கிழக்கில் தமிழர் முஸ்லிம் உறவில் மிக நெருக்கடியான, மோசமான நிலைமை.
தெற்கில் எந்நேரமும், எங்கும் குண்டுகள் வெடிக்கலாம் என்று அச்சம். இனக்கலவரம் பரவும் ஆபத்தும் கூட.

இப்படி "மஹிந்த சிந்தனை' ஆட்சியின் சூட்டில் தகித்துக்கொண்டிருக்கின்றது தேசம்.


நன்றி :-உதயன்

கொசோவா சுதந்திரப் பிரகடனம் காலனித்துவத்தின் வேறு ஒரு வடிவமா?

கடந்த மாதம் நடுப்பகுதியில் ஆஸ்திரிய வியன்னா பல்கலைக்கழகத்தில் 'கொசோவாவின் எதிர்காலம்" என்னும் தலைப்பில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. எனது பல்கலைக்கழக ஆய்வு ஒன்றிற்காகாகச் அங்கு சென்றிருந்த நான் எனது பணிகளைப் புறந்தள்ளி விட்டு இக்கருத்தரங்கில் கலந்து கொள்ளும் ஆவலைத்தூண்டியது மேற்படி தலைப்பு.

அத்தோடு இக்கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காகவே ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்திலிருந்து கோபமும் சீற்றமுமாய் வந்திருந்த கொசோவாவைத் தாயகமாகக் கொண்ட எனது தோழி ஒருத்தியும் எனது ஆவலை மேலும் தூண்டிவிட்டாள்.

கொசோவா சுதந்திரப்பிரகடனம் செய்ததிலிருந்து 'கொசோவா" ஈழப்பரப்பில் ஒரு மந்திரச்சொல்லாகவே மாறிவிட்டது. சிலர் ஈழத்து ஊடகப்பரப்பில் அதற்கு ஒரு நட்சத்திர அந்தஸ்தை உருவாக்கியிருந்ததன் விளைவு அது.

எமது ஊடகங்கள் தொடர்ந்து கட்டமைத்த இந்த மாயத்தன்மையினூடாக ஒரு 'புரிதலை" பெற்றுக்கொண்ட சாதாரண ஈழத்துப் பிரஜை ஒருவர் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசப்பட்ட விடயங்கள், சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளை பார்க்க நேரிட்டால், பின்பு அனேகமாக நாம் அவரை ஒரு மனநல விடுதியில்தான் சந்திக்க நேரிடும். இதில் யாருக்கும் சந்தேகம் தேவையில்லை. ஏனெனில் 'கொசோவா" பற்றிய அவரது புரிதலை இக்கருத்தரங்கு கலைத்துப் போட்டிருக்கும்.

இன்று விடுதலை அடைந்திருக்கும் ('விடுதலையடைய வைக்கப்பட்டிருக்கும்" என்ற சொற்பிரயோகம்தான் சரியாக இருக்கும்) கொசோவாவின் எதிர்காலத்தை ஒரு சூனிய வெளியில் வைத்து பார்த்தது மட்டுமல்ல, இத்தகைய சுதந்தரம் அந்த இனத்திற்கு தேவைதானா? போன்ற கேள்விகளையும் பல சந்தேகங்களையும் ஒரு சேர முன்வைத்தது மேற்படி கருத்தரங்கு.

'சட்டி சுடுகிறது என்று துள்ளி அடுப்பில் விழுந்த" கதையாகவே கொசோவாவின் இன்றைய விடுதலையை கொசோவாவின் உண்மையான சுதந்திரத்தில் அக்கறையுள்ள மனிதநேயத்தில் விருப்புக்கொண்டுள்ள அறிவுஜீவிகளும், புத்திஜீவிகளும் பார்க்கிறார்கள்.

எமது ஊடகங்களில் கொசோவா பரபரப்பான பேசுபொருளாக மாறியபோதே 'கொசோவா பற்றிய எமது ஊடகங்களின் புரிதல் சரியானதுதானா?" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதுவதாகவிருக்கிறேன் என்று சக ஊடகத்துறை நண்பர் ஒருவரிடம் கூறியபோது, 'சோர்ந்து போயிருக்கும் மக்களுக்கு தெம்பளிக்கும் விடயமாக அது இருக்கிறது, அதை ஏன் கலைத்துப்போடுகிறீர்கள்" என்று கேட்டார்.

அவரது கூற்று எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஒரு போராடும் இனத்திற்கு நம்பகத்தன்மை என்பது மிக முக்கியமான விடயம். அது அரசியல் சார்ந்த விழிப்புணர்வில் இருந்து பிறக்கிறது. மக்களுக்கு சரியான அரசியல் விழிப்புணர்வை கொடுக்காமல் பொய்கள், புனைவுகளின் ஊடாக போலியான நம்பிக்கைகளை ஊட்டுவது மோசமான பின்னடைவுகளுக்கு வழி வகுக்கும். கடந்த சமாதான காலத்தில் அது ஒரு வரலாறாகவே பதிவாகியிருக்கிறது.

கொசோவாவின் விடுதலை என்பது போராடும் இனம் என்ற அடிப்படையில் எமக்கு முன்தோன்றியுள்ள ஒரு நம்பிக்கைப்புள்ளி. உலக வரைபடத்தில் புதிதாக ஒரு தேசம் உருவாகியிருக்கிறது. அவ்வளவுதான்... ஆனால், எமது ஊடகங்கள் அதை ஒரு பெரிய வட்டமாக வரைந்துவிட்டன.

சொசோவாவிற்கும் தமிழீழத்திற்கும் இடையில் நிலவியல், அமைப்பு, தன்மை, தளம், கேந்திர முக்கியத்துவம் சார்ந்து மட்டுமல்ல அவற்றின் போராட்டம் சார்ந்தே நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. அவற்றை இங்கு பட்டியலிட முடியாது. அது பேசவந்த கருத்தின் தொனியையே மாற்றக்கூடியது. சாதாரண உலக அரசியல் அறிவுள்ள ஒருவரால் மிக இலகுவாகப் புரியக்கூடியவிடயங்கள் அவை.

'அரசியல் என்பது இரத்தம் சிந்தாத யுத்தம், யுத்தம் என்பது இரத்தம் சிந்தும் அரசியல்" என்பது இன்றைய உலக ஒழுங்கின் நவீன இராஜதந்திர சொல்லாடல்களில் ஒன்று. இது குறித்த புரிதலின் பலவீனமாகத்தான் கொசோவாவையும் தமிழீழத்தையும் ஒப்பிட்டு எமது ஊடகங்கள் 'உளறியதை" புரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது. அடுத்தது தமிழீழம் தான் என்று சிலர் அறைகூவல் விடுத்தார்கள். சிலர் ஜோதிடக்காரர்களாக மாறி தமிழீழம் அங்கீகரிக்கப்படும் கால எல்லையைக்கூட தீர்மானித்தார்கள். வேறு சிலரோ கொசோவா -தமிழீழ ஒப்பீட்டு அட்டவணையைத் தயாரித்து எமது அங்கீகாரம் குறித்து அப்பாவித்தனமாக அறிக்கை விட்டார்கள். ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் தமிழீழம் என்று ஒரு நாடு உருவாகப்போவது நிச்சயம். அதை எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது. ஆனால் அது மேற்கண்ட 'உளறல்களின்" அடிப்படையில் ஒருபோதும் இருக்கப்போவதில்லை.

கடந்த சமாதான காலத்தில் அதற்கான விதை ஆழமாகவே ஊன்றப்பட்டு விட்டது. தோற்றுப்போன புரிந்துணர்வு உடன்படிக்கையையும், தற்போதைய கள நிலவரங்களையும் முன்வைத்து 'தமிழீழம் சாத்தியமில்லை" என்று உளறுபவர்களுக்கு நாம் பதில் சொல்ல வேண்டியதில்லை. இவற்றிற்கும் அப்பாற்பட்ட சாத்தியங்களை தமிழீழத் தலைமை நீண்ட காலங்களுக்கு முன்பே உருவாக்கிவிட்டது. ஆனால் 'கொசோவா" போன்ற அபத்தங்களினூடான சாத்தியங்களை விலத்தி தனித்துவமான முறையில் அது வரையப்பட்டுள்ளது.

உலக ஒழுங்கை சரியாக உள்வாங்காததன் விளைவே மேற்கண்ட கொசோவா - தமிழீழ ஒப்பீட்டு குழப்பம். நாம் கடந்து வந்த பல பாதைகளும் முறிந்து போன கடந்த புரிந்துணர்வு உடன்படிக்கையும் எமக்கு அழுத்தமாகச் சொல்லும் செய்தி - ஒற்றை வரியில் சொல்வதென்றால் எமது விடுதலையை நாம்தான் வென்றெடுக்க வேண்டும். அதாவது எமது பலத்தில்தான் எமது விடுதலை தங்கியுள்ளது. எனவே நாம் பலமானவர்களாக மாறி வலுச்சமநிலையை எம்பக்கம் திருப்புவதனூடாகத்தான் எமது விடுதலையின் அடுத்த கட்டத்தை அடைய முடியும். இந்த அரசியல் புரிதலை ஒவ்வொரு ஈழத்தமிழனுக்கும் புரிய வைக்க வேண்டியது எமது ஊடகங்களின் தலையாய கடமை. இது அவசியமானது மட்டுமல்ல தற்போதைய அரசியற், கள நிலவரங்களின் அடிப்படையில் அவசரமானதும் கூட.

நாம் எல்லாம் எமது முரண்பாடுகளைக் களைந்து தேசியத் தலைமையின் கீழ் ஓரணியாகத் திரண்டு போராடிப் பெற வேண்டிய விடுதலை என்ற உண்மையை மேற்குறிப்பிட்ட அபத்தமான ஒப்பீடுகள் கலைத்தும் போடும் அபாயத்தை எமது ஊடகங்கள் மறந்துபோனது வேதனைக்குரியது.

போராட்டத்தின் பலம், பலவீனம் தொடர்பாக உண்மைச்செய்திகளை சூழலுக்கு ஏற்றவாறு சற்றே முன்பின்னாக மாற்றிக் கூறலாம். அது தவறில்லை. ஆனால் திரிக்கக்கூடாது. ஒரு போராடும் இனக்குழுமத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகங்கள் இராணுவ - படைத்துறை செய்திகளை திரித்து வெளியிடுவதையே உச்ச பின்னடைவாகப் பார்க்கப்படும் சூழலில் ஒரு அரசியல் நிகழ்வை திரிப்பது எத்தகைய அபத்தம்?

இன்று நாம் செய்யும் யுத்தம் என்பது எமது அரசியல் உரிமைக்கானது. எனவே மக்களை அரசியல் விழிப்புணர்வுள்ளவாகளாக வைத்திருக்க வேண்டியது ஊடகங்களின் கடமை. நாம் யுத்தத்தில் பின்னடைவுகளைச் சந்திந்துக்கொண்டிருக்கிறோம் என்பதற்காக மக்களின் அரசியல் விழிப்புணர்வை சிதைக்கக்கூடாது. மழுங்கடிக்கக்கூடாது. அதை இன்னும் கூர்மையுடன் வைத்திருக்க வேண்டும்.

உண்மையில் கொசோவா ஒரு இறைமையுள்ள தேசம், அதற்கு சுயநிர்ணய உரிமை உண்டு, சேர்பியர்களால் அவர்கள் அடக்கப்படுகிறார்கள் -ஒடுக்கப்படுகிறார்கள் என்ற அக்கறையில் கொசோவாவிற்கு இந்த 'நீதி" வழங்கப்படவில்லை. மேற்குலக வல்லரசுகளுக்கிடையில் நடந்த சதுரங்க ஆட்டத்தில் ஒரு சாரார் பிறிதொரு சாராருக்கு வைத்த 'செக்"தான் கொசோவா சுதந்திரப்பிரகடனம்.

தமது பிராந்திய நலன், பிராந்திய மேலாண்மை தொடர்பான ஒரு வளைகோட்டுத் தத்துவத்தைக் காவித்திரியும் வல்லரசுகள், அதனூடாக வரையும் ஒற்றை அறத்தின் மிகச் சரியான சமீபத்திய உதாரணம்தான் கொசோவாவின் 'சுதந்திரப்பிரகடனம்".

1997 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கவாட் பல்கலைக்கழக பேராசிரியர்கள் குழு ஒன்று விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசிற்குமிடையில் 'பிணக்குத் தீhக்கும்" முயற்சி ஒன்றில் ஈடுபட்டது. ஆனால் ஜெயசிக்குறு வெற்றி மமதையில் அந்த முயற்சியை சிங்கள அரசு புறந்தள்ளியது பல பேருக்குத் தெரியாத வரலாறு. இதன் பின்னணியில் ஒரு ஆலோகராக இருந்த ஒரு பேராசிரியரை கடந்த வருடம் டிசம்பரில் அம்ஸ்ரடாம் பல்கலைக்கழகத்தில் வைத்து சந்திக்கும் வாய்ப்பு ஒன்று கிடைத்தது.

அவரின் கூற்றுப்படி புரிந்துணர்வு உடன்படிக்கை அமுலில் இருந்த காலப்பகுதியில் இலங்கைத்தீவில் அனைத்து வல்லரசுகளும் தனித்தனியாக ஒரு இரகசியமான (சில வெளிப்படையாகவே) ஆய்வில் ஈடுபட்டதாகவும் தெற்காசியப் பிராந்தியத்தில் தமது பிராந்திய நலன், செல்வாக்கு, மேலாண்மை குறித்து ஒரு சதுரங்க ஆட்டத்தில் இறங்கியதாகவும் குறிப்பிட்டார்.

இந்தியாவினதும் சீனாவினதும் மறைமுகமான தலையீடுகள் மேற்குலகத்தின் காய்நகர்த்தலுக்கு பெரும் இடைஞ்சலாக இருந்ததாகவும் குறிப்பிட்டார். உண்மையில் இலங்கைத்தீவை தமக்கான இராஜதந்திர களமாக மாற்றுவதற்கு பலரும் போட்ட போட்டியில் ஒருவருக்குமே வெற்றி கிடைக்கவில்லை என்பதுதான் நிஜம் என்று குறிப்பி;ட அந்த பேராசிரியர் அதை தனது தொலைநோக்குப் பார்வையினூடாக வெற்றிகரமாக முறியடித்தவர் நமது தேசியத்தலைவர் பிரபாகரன் என்றும் குறிப்பிட்டார். அந்த சீற்றத்தின் விளைவாகவே புலிகள் பல நாடுகளிலும் தடை செய்யப்பட்டதும் சில முட்டுக்கட்டைகள் புலிகளுக்கு எதிராக போடப்பட்டதும் என்பது அவரது வாதம்.

ஆச்சர்யப்படத்தக்க வகையில் உலக வல்லரசுகளுக்கு சிங்களமும் இடம் கொடுக்கவில்லை என்பதையும் அவர் குறிப்பிட்டார். (சிங்களத்தின் தீர்க்கதரிசனமற்ற - தூரநோக்கில்லாத முட்டாள்தனமான முடிவு அது என்பதும் அவரது மேலதிக வாதமாக இருந்தது. ஏனெனில் புலிகளை வெற்றிகொள்ளலாம் என்ற மமதையில் தனது சர்வதேச நட்பை இழந்துள்ளதாகவும் அதன் விளைவாகவே தற்போதைய மனித உரிமை விவகாரங்களில் சில நெருக்கடிகளை அது சந்தித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்) விளைவு புரிந்துணர்வு உடன்படிக்கை முறிவு. இரண்டு தரப்பும் தம்மை கைவிட்ட நிலையில் தற்போது வெற்றி கொள்பவனின் பக்கம் சாயலாம் என்ற நிலையில் கள நிலவரங்களை உலகம் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதுதான் இலங்கைத்தீவு தொடர்பான உலகின் தற்போதைய பார்வை மட்டுமல்ல யதார்த்த நிலையும்கூட. சர்வதேச வல்லரசுகள் கொசோவாவில் பிரயோகித்த வளைகோட்டுத் தத்தவத்திற்கும் ஒற்றை அறத்திற்கும் அப்பால் விலகியே நிற்கிறது 'தமிழீழம்".

எனவே என்றைக்கும் எம்மை அங்கீகரிக்க அவை ஓடிவரப்போவதில்லை. ஆனால் எமது பலத்தை நாம் நிருபித்து ஆக்கிரமிப்பாளர்களை விரட்டியடிக்கும் பட்சத்தில் அவை எம்மை அஙகீகரிக்க வேண்டிய ஒரு புறநிலை ஒன்று தோன்றியிருக்கிறது. எமது விடுதலைப் போராட்டம் சார்ந்து இது ஒரு முக்கியமான அம்சம். ஊடகங்கள் அதைப் புரிந்து கொண்டு மக்களை அதனூடாக ஒட்டுமொத்த விடுதலையை நோக்கி அவர்களை நகர்த்தி செல்ல வேண்டும்.

கொசோவாவிற்கு பிறகு தற்போது சில அதிமேதாவிகள் நேபாளத்தில் நடந்து முடிந்த தேர்தலை முன்னிறுத்தி மாவோயிஸ்ட்கள் மாதிரி புலிகளும் ஜனநாயகப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்று உளறத் தொடங்கியிருக்கிறார்கள். ஒரு சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தையும் மன்னராட்சிக்கு எதிராக ஒட்டுமொத்த ஆட்சி மாற்றத்திற்கான போராட்டத்தையும் ஒருசேர குழப்பி ஆய்வு என்ற பெயரில் சில இந்திய, சிங்கள ஊடகங்கள் கதை விடத்தொடங்கிவிட்டன. நாம் விழிப்படைய வேண்டும். உடனடியாகவே இந்த அபத்தக்கூத்தை மறுதலித்து 'புதினம்" இணையத்தளம் ஒரு செய்தி ஆய்வை வெளியிட்டிருந்தது. பாராட்டப்பட வேண்டிய முயற்சி அது. ஊடக விழிப்புணர்வுக்கு நல்லதொரு உதாரணம் அது.

சமாதான காலத்தில் எமது தலைமையும் காங்கேசன்துறையை ஒருத்தருக்கும், திருகோணமலையை ஒருத்தருக்கும், புல்மோட்டையிலுள்ள இல்மனைட் மணலை அள்ளுவதற்கு ஒருத்தருக்கும், மன்னாரில் கடல் வளத்தை அகழ்வதற்கு வேறு ஒருத்தருக்கும் குத்தகை ஒப்பந்தம் எழுதியிருந்தால் ஒருவேளை கொசோவாவிற்கு முன்பாக நாம் அங்கீகரிக்கப்பட்டிருக்கலாம். கொசோவா சேர்பியாவிடம் நீட்டியிருந்த பிச்சைப் பாத்திரத்தை தற்போது உலக வல்லரசுகளை நோக்கி நீட்டிப்பிடித்துக்கொண்டிருக்கிறது. அப்படி நாமும் நீட்டிப்பிடித்துக்கொண்டிருந்திருக்கலாம்.

கொசோவாவின் 'சுதந்திரப்பிரகடனத்தின்" பின்னுள்ள யதார்த்தமும் உண்மையும் இதுதான். கருத்தரங்கின் இறுதியில் கொசோவாவைச் சேர்ந்த ஒரு ஆய்வு மாணவி வாசித்த ஆய்வுக்கட்டுரையின் இறுதிவரிகள் இப்போதும் மனதின் ஆழத்தில் அறைந்தபடியேயுள்ளது.

'சுதந்திரம் என்பது ஒரு அடிமைத்தளையிலிருந்து விடுபட்டு வேறு ஒரு அடிமைத்தளைக்குள் இடம் மாறுவதில்லை, அடிமைத்தளைகளிலிருந்து முற்றாக விடுபடல். வல்லரசுகளே சுதந்திரம் என்ற பெயரில் இன்று எமக்கு நீங்கள் வழங்கியிருக்கும் நீதி காலம் காலமாக நீங்கள் காப்பாற்றி வரும் காலனித்துவத்துவ சிந்தனைகளின் வேறு ஒரு வடிவமா? எம்மை நாமே ஆள்வதற்கு விட்டு நீங்கள் வெளியேறுங்கள்."

நாம் ஐரோப்பிய காலனித்துவத்தின் பிடியிலிருந்து நழுவித்தான் சிங்களத்தின் பிடிக்குள் சிக்கினோம். ஏன் மீண்டும் இந்த இடமாற்றம்? அந்த மாணவி குறிப்பிட்டது, போல் சுதந்திரம் என்பது ஒரு அடிமைத்தளையிலிருந்து விடுபட்டு வேறு ஒரு அடிமைத்தளைக்குள் இடம்மாறுவதில்லை, அடிமைத்தளைகளிலிருந்து முற்றாக விடுபடல். நாம் முற்றாக விடுபடுவோம்.

தனது தொலைநோக்குப் பார்வையினூடாக உலக வல்லரசுகளுக்கே 'செக்" வைத்து, எத்தகைய இடர்வரினும் தலைசாயாது உறுதியுடன் போராட்டத்தை நடத்திவரும் அற்புதமான தலைமை எமக்கு வாய்த்திருக்கிறது. எமது முரண்பாடுகளைக் களைந்து அந்தத் தலைமையின் கீழ் நாம் அணி திரளவேண்டியது காலத்தின் கட்டாயம். அந்த திரட்சியே எந்த எதிர்பார்ப்புகளுமின்றி எம்மை அங்கீகரிக்கும் நிலைக்கு சர்வதேசத்தைத் தள்ளும்.

-பரணி கிருஸ்ணரஜனி-
நன்றி: சுடரொளி

அப்பாவிகளை இலக்கு வைப்பது கண்டிக்கப்பட வேண்டியதே!

""பொதுமக்களை இலக்கு வைக்காதீர்கள். அப்பாவிகளை இலக்கு வைக்கக் கூடாது என்பதைப் பயங்கரவாதிகளுக்கு ஊடகங்களும் எடுத்துச் சொல்லவேண்டும்.''
இவ்வாறு பத்திரிகைகளின் ஆசிரியர்களை அழைத்து அவர்களுக்கு உபதேசம் செய்திருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

ஊடகவியலாளர்கள் குறிப்பாக ஊடகப் பொறுப்பாளர்கள் முன்னெடுக்கவேண்டிய முக்கிய பணி ஒன்றை நினைவூட்டியிருக்கின்றார் இலங்கைத் தேசத்தின் ஜனாதிபதி.
சரி. இந்தப் பணியை முன்னெடுப்பதற்குப் பொறுப்பான ஊடகங்கள் இவ்வேலையை எப்படிச் செய்யப்போகின்றன என்பதே கேள்வி. அப்பணியைச் செய்வதற்கு ஊடகப் பொறுப்பாளர்களுக்கு சில வரைவிலக்கணங்கள் தெரிந்திருப்பது புரிந்திருப்பது அவசியமானது; கட்டாயமானது.

அப்பாவிப் பொதுமக்கள் எனப்படுவோர் யார்? ஆக, வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு வெளியில் வசிக்கும் சிவிலியன்கள் மட்டும்தான் அப்பாவிப் பொதுமக்களா? அல்லது வன்னியில் வசிக்கும் சிவிலியன்களும் அப்பாவிப் பொதுமக்களா? அல்லது வன்னியில் பெரும்பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அங்கு வாழ்பவர்கள் எல்லோருமே "பயங்கரவாதிகளாகவே' அடையாளப்படுத்தப்பட வேண்டுமா? இவை முக்கியமான கேள்விகள்.

இவை தவிரவும் ஊடகவியலாளர் தரப்பிடம் குறிப்பாகத் தமிழ் ஊடகவியலாளர்களிடம் மற்றொரு நியாயமான கேள்வியும் உண்டு.
எது பயங்கரவாதம்? என்பதே அது.

அரசும் ஜனாதிபதியும் கூறுவது போல வியாக்கியானப்படுத்துகின்றமை போல "பயங்கரவாதிகளான' விடுதலைப் புலிகள் மேற்கொள்கின்ற வன்முறைகள் மட்டும்தாம் பயங்கரவாதமா? அல்லது தமிழர் தரப்புக் கூறுவது � பால சட்டத்தின் ஆட்சி என்ற பெயரில் தமிழர் தேசம் மீது அரச படைகளினால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளமை எனச் சுட்டிக்காட்டப்படும் "அரச பயங்கரவாதமும்' இதற்குள் அடங்குமா?

இந்தக் கேள்விகள் குறித்துத் தமக்குள் சரியான விடைகளைக் கண்டு பிடித்துத் தெளிவான நிலைப்பாடு ஒன்றை எடுக்க முடியாத பின்னணியில் போலும், ஜனாதிபதி கோரும் "அப்பாவிகள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்புக் காட்டும் பிரசாரத்தை' முன்னெடுக்க முடியாமல் ஊடகவியலாளர்கள் தடுமாறுகின்றனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டினாலும் , காட்டாவிட்டாலும் நேற்றுமுன்தினம் தெஹிவளை அருகே ரயிலில் வெடிக்கவைக்கப்பட்ட குண்டுத் தாக்குதல் போன்ற அப்பாவிப் பொதுமக்களுக்கு எதிரான கொடூரத் தாக்குதல்கள் வன்மையாகக் கண்டிக்கப்பட்டேயாக வேண்டும். அதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை.

பத்து அப்பாவிகளைப் பலிகொண்ட அத்தாக்குதலையும் அதற்குப் பின்புலத்தில் இருந்தவர்களையும் வன்மையாகக் கண்டிக்கும்போது, அதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் முறிகண்டியில் சிறுவர், பெண்கள் உட்படப் பதினாறு அப்பாவிகளின் உயிர்களைக் காவுகொள்ளும் கோழைத்தனமான கிளைமோர்க் குண்டுத் தாக்குதலையும், அதன் சூத்திரதாரிகளையும் கூட அதே அழுத்தத்தோடும், உறுதியோடும் கண்டிக்க ஊடகத் தரப்புகள் முன்வரவேண்டும்.

அதுமட்டுமல்ல. இத்தகைய கொடூரங்கள் தொடர்பான விடயத்தில், இலங்கையில் உள்ள அனைத்து மக்களினதும் சட்டபூர்வமான அரசு எனக் கூறிக்கொள்ளும் இந்த ஆட்சி எப்படி நடந்து கொள்கிறது என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டுவது அவசியமானதாகின்றது.
அரசு குறிப்பிடுவது போல தெற்கில் இடம்பெறுகின்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் அப்பாவி சிவிலியன்கள் கொல்லப்படும்போது, அல்லது காயமடைகின்றபோது அக் கொடூரத் தாக்குதலில் ஏற்பட்ட காயத்தின் இரத்தம் உறைவதற்கு முன்னரே அரசுத் தரப்பின் அமைச்சுப் பட்டாளங்கள் அங்குபோய் நின்று பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு வழங்க முண்டியடிக்கின்றன. ஆனால் வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றவை போன்ற கொடூரங்கள் நடக்கும்போது அதில் பாதிக்கப்படும் அப்பாவிப் பொதுமக்கள் குறித்து அரசு அலட்டிக் கொள்வதேயில்லை. ஏன் அவ்வாறு கொல்லப்பட்ட அப்பாவிகள் தமிழர்கள் என்பதால் அவர்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் கொல்லப்பட்டவர்கள் என்பதால் அவர்கள் அனைவரும் "பயங்கரவாதிகள்' ஆகியிருக்கின்றனரா? எனவே அங்கு இத்தகைய தாக்குதல்களில் உயிரிழக்கும் அல்லது காயமடையும் அனைவரும் "பயங்கரவாதிகள்' என்பதால் அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவது அரசின் பொறுப்பல்ல என்பது அரசின் கருத்தா?

எனவே, அப்பாவிகள் மீதான தாக்குதலை நிறுத்தும்படி பயங்கரவாதிகளை வற்புறுத்துங்கள் என்று கோரும் ஜனாதிபதியும் அவரது அரசும் "யார் பயங்கரவாதிகள்?', "எது பயங்கரவாதம்?' என்பதையும் ஒரு தடவை தெளிவுபடுத்தினால் நல்லது.
உலகைத் திருத்துவது நாட்டைத் திருத்துவது சமூகத்தைத் திருத்துவது இவையெல்லாம் முதலில் வீட்டைத் திருத்துவதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.

அப்பாவிகளை இலக்கு வைப்பதைத் தவிருங்கள் என்ற நீதியான பிரசாரத்தை முன்னெடுப்பதற்கான எத்தனத்துக்கும் கூட இது பொருந்தும் என்பதை சம்பந்தப்பட்டோர் மறந்துவிடக்கூடாது.

thanks- uthayan

Tuesday, May 27, 2008

ஏட்டுச் சுரைக்காயாகும் சட்டக் கட்டமைப்புகள்

ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது. இது நமக்கு நன்கு தெரிந்ததுதான்.
இலங்கையில் இப்போது பெரும் சர்ச்சைக்குரியதாகி இருக்கும் மனித உரிமைகள் விவகாரத்திலும் இதுவே உண்மை நிலைமை என்பதைத் தெளிவாகவும் தீர்க்கமாகவும் இலங்கை அரசுக்கு உணர்த்தியிருக்கின்றது அமெரிக்கா.

ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்கள் தொடர்பான அமெரிக்காவின் பிரதி உதவிச் செயலாளர் எரிக்கா பார்க்ஸ் ரகில்ஸ் இலங்கை அரசுக்கு இதனைத் தெளிவு படுத்தியிருக்கின்றார்.

மூன்று நாள் விஜயமாக இலங்கை வந்திருந்த எரிக்கா அம்மையார் இங்கு, அரசுத் தரப்பின் உயர் தலைவர்களையும் அதிகாரிகளையும் சந்தித்துப் பேசியபின்னர் வெளியிட்ட அறிக்கை ஒன்றிலேயே மேற்படி விவரத்தைச் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

""இலங்கையில் மனித உரிமைகளைப் பேணுவதற்குத் தேவையான கட்டமைப்புகள் இருக்கலாம். ஆனால் அவை நடைமுறையில் செயல்திறன் உள்ளவையாகப் பணியாற்றுகின்றனவா என்பதே கேள்வி. இத்தகைய சட்டக் கட்டமைப்புகள்உள்ளன என இலங்கை கூறுவது உண்மையானாலும் நடைமுறையில் கடத்தல்கள், காணாமற்போகச் செய்தல் போன்ற மோசமான மனித உரிமை மீறல்கள் தொடராமல் தடுத்து நிறுத்த அரசு விரைந்து ஏதேனும் செய்தாக வேண்டும். உண்மையில் மனித உரிமைகள் மீறப்படாமல் பேணப்படுவதற்காக வெறும் சட்டங்கள் எழுத்தில் இருந்து பயனில்லை. செயல்ரீதியில் அவ்வாறு மீறப்படாமல் இருப்பதை உறுதி செய்வதே முக்கியம்.''

""ஆகவே மனித உரிமைகள் பாதுகாக்கப்படல் என்பது சட்டத்தில் எழுத்தில் இருப்பதைவிட செயலில் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதே அவசியமானது. அதை இலங்கை அரசு கவனத்தில் கொள்ளவேண்டும். ஆட்கடத்தல்கள், காணாமற் போகச்செய்தல் போன்றவற்றைத் தடுத்து நிறுத்த அரசு காத்திரமாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.'' என்றும் அவர் வலியுறுத்தியிருக்கின்றார்.

இலங்கையில் மனித உரிமைகள் மோசமாக மீறப்படும் நிலைமை உருவாகியிருப்பது தொடர்பான உண்மையான அடிப்படையான விவகாரத்தை அமெரிக்கா அடையாளம் கண்டு சுட்டிக்காட்டுகின்றது என்பதையே எரிக்கா அம்மையாரின் கருத்து பிரதிபலிக்கின்றது.
மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்தித் தடுக்கவும், மனித உரிமைகளைப் பேணி நிலைநிறுத்தவும் தேவையான அடிப்படைச் சட்டங்கள், ஒழுங்கு விதிகள் இந்த நாட்டில் உள்ளன.

ஆனால், அவற்றை முழு அளவில் நடைமுறைப்படுத்தி, செயற்படுத்துவதற்கான திடசங்கற்பமோ, விருப்பமோ, அதற்கான ஈடுபாடோ, உடன்பாடோ அந்தச் சட்ட அமுலாக்கத்தை வலியுறுத்தி நிலைநிறுத்தவேண்டிய பொறுப்புடைய அரசுத் தலைமையிடம் இல்லவே இல்லை.

அது மாத்திரமல்ல. அந்தச் சட்டக் கட்டமைப்பு ஒழுங்குகளைநடைமுறைப்படுத்தும் ஈடுபாடு இல்லை என்பதை விட, அந்தச் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி, மனித உரிமைகளுடன் விளையாடித் தனது கைவரிசையைக் காட்டும் சட்ட முரண் போக்கிலேயே ஆட்சித் தலைமை ஊறிக் கிடக்கின்றது. அதன் விளைவாகவே ஆட்கடத்தல்கள், காணாமற் போகச் செய்தல்கள் போன்ற மோசமான மனித உரிமை மீறல்கள், வகை தொகையின்றி எல்லை மீறி "அரச பயங்கரவாதமாக' இங்கு தொடர்ந்தும் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.
எங்கேனும் ஒரு தற்கொலைக் குண்டுத் தாக்குதலைப் புலிகள் நடத்தினால், அந்தத் தற்கொலைக் குண்டுதாரியின் பாவனையில் இருந்த கைத் தொலைபேசியின் சேதமடைந்த "சிம்'அட்டையின் ஒரு சிறிய துண்டுப் பகுதியை மட்டும் வைத்துக்கொண்டு, அத்தாக்குதலாளியின் பூர்வீகத்திலிருந்து நதிமூலம், ரிஷிமூலம் எனத் தாக்குதலுக்குத் திட்டமிட்டவர் வரை அனைத்தையும் துப்பறிந்து, புலனாய்வு செய்து, உளவு பார்த்துக் கண்டுபிடித்துவிடும் இலங்கைப் பாதுகாப்புத் தரப்புக்கு தலைநகர் கொழும்பில் சந்திக்குச் சந்தி இருக்கும் சோதனைத் தடைகள், திடீர் வழிமறிப்பு சோதனை நிலையங்கள் என்பவற்றையெல்லாம் தாண்டி வெற்றிகரமாக வெள்ளைவானில் மேற்கொள்ளப்படும் ஆட்கடத்தல்களையோ, அவற்றை ஒட்டி இடம்பெறும் கப்ப அறவீடுகளுக்கான தொலைபேசி இலக்கங்கள் குறித்த விவரங்கள் வழங்கப்பட்டும் அவற்றின் சூத்திரதாரிகளையோ கண்டுபிடிக்கவே முடிவதில்லை.

நிமலராஜன், நடேசன், சுகிர்தராஜன் போன்ற ஊடகவியலாளர்கள்களின் படுகொலைச் சூத்திரதாரிகளையோ
"உதயன்' அலுவலகத்துக்குள் புகுந்து வெறியாட்டம் நடத்தியோரையோ
அல்லது "சுடர் ஒளி' அலுவலகம் மீது கிரனேட் தாக்குதல்களை நடத்தியோரையோ
ஊடகவியலாளர்கள் குருபரன், கீத் நொயர் போன்றோரைக் கடத்தியோரையோ
அல்லது "ரூபவாஹினி' ஊழியர்களை அச்சுறுத்தி அவ்வப்போது தாக்கி வருபவர்களின் பின்னணியில் இயங்கும் சூத்திரதாரிகளையோ
இந்தப் பாதுகாப்புத் தரப்பினரால் கண்டுபிடிக்கவோ அடையாளம் காணவோ முடிவதில்லை.
இத்தகைய புலனாய்வு பாதுகாப்பு கட்டமைப்புகள் மனித உரிமைகளைப் பேணும் விவகாரத்தில் வெறும் ஏட்டுச் சுரைக்காய்தான். அவை நடைமுறைக்கு உதவா.

நன்றி :- உதயன்

Tuesday, May 20, 2008

மண் மீட்புப் போர் போல மொழி மீட்புப் போரும்!

"மண் மீட்புப் போர் போன்று, மொழி மீட்கும் போரும் அவசியமானது. இதில் தமிழ் மக்கள் முழு மூச்சுடன் ஈடுபடுவது கட்டாயமானது.'' இப்படிக் கூறியிருக்கின்றார் தமிழீழக் கல்விப் பொறுப்பாளர் வெ. இளங்குமரன்.

மண் மீட்புப் போர் எவ்வாறு ஓர் இனத்தின் அரசியல், வாழ்நிலை விவகாரங்கள் சார்ந்ததோ, அந்தளவு முக்கியமானது மொழி மீட்புப் போரும் கூட. இதுதான் ஈழத் தமிழர்களின் இன்றைய நிலையாகும்.

பேரினவாதத்தின் ஆதிக்கத்தில் ஈழத் தமிழரின் தாயக மண் பறிபோய்க்கொண்டிருப்பது போல், தொன்மை மிக்க தமிழினத்தின் சிறப்பும் அந்நிய மொழிக்கலப்பு ஆதிக்கத்துக்குட்பட்டு தனித்துவத்தைப் பறிகொடுக்கும் போக்கால் கெட்டழிந்து கொண்டிருக்கின்றது.
தாயக மண் மீட்புக்காக ஒரு போராட்டம் நடத்துவதுபோல தாய்மொழி தமிழைப் பேணித் தக்கவைப்பதற்காகவும் ஒரு போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயநிலை தமிழினம் மீது இன்று சுமத்தப்பட்டிருப்பதையே இளங்குமரன் சுட்டிக்காட்டுகின்றார்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து வளமான வாய்த்த மொழியாகத் தமிழ் விளங்கி வருகின்றது. சங்க இலக்கியங்களின் சொற் களஞ்சியங்கள் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. வியப்புத் தரும் சிறப்புடன் காலங்கடந்து உயர்ந்து நின்ற நிற்கின்ற மொழி நம்முடையது.
தொன்மையான பல மொழிகள் வழக்கிழந்து, அழிந்துபோன நிலையில் இரண்டு மொழிகள் மட்டுமே பல்லாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் தம் மக்கள் மத்தியில் சாகாவரம்பெற்று வாழ்ந்து கொண்டிருக்கின்றன என இளங்குமரன் சுட்டிக்காட்டுகின்றார்.
ஒன்று சீனம். மற்றையது தமிழ்.

இன்று உலக மக்கள் தொகையில் கால் பங்கினர் சீனர்கள். அவர்களில் 95 வீதத்திற்கும் அதிகமானோர் ஒரே மொழியான சீனத்தைப் பேசி, ஒரு தேசியத்துள் கட்டுண்டு கிடப்பவர்கள். இதனால் மேலைத்தேய ஆதிக்கம் ஊடுருவ முடியாத ஒரு காப்பரணுக்குள் தம் மொழி பேணி, தம் தேசியம் பேணி, தம் தாயகம் பேணி, தமது தனித்துவம் பேணிப் பாதுகாப்புடன் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

தொடராக ஆட்சி அதிகாரத்திலிருக்கும் தமது தேசியப் பண்பியல்பை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆட்சி முறையின் கீழ், சீன மொழியின் தனித்துவமும், சிறப்பும் பாதுகாக்கப்பட்டு, பேணப்பட்டுவந்துள்ளன.

ஆனால் தமிழ் மொழியின் நிலைமை அதுவல்ல. இலங்கையிலும் சரி, இந்தியாவிலும் சரி, சிங்கப்பூர் போன்ற தமிழர்கள் வாழும் இன்னோரன்ன பிற தேசங்களிலும் சரி, ஆட்சி மொழி அந்தஸ்து சட்ட ஏற்பாடுகள் மூலம் தமிழருக்கு வழங்கப்பட்டிருந்தாலும் அங்கெல்லாம் தமிழர்களின் அடிமை வாழ்வு தொடர்கின்றது. இன்றும் இன்னும் சுதந்திர, சுயாதீன, சுரண்டலற்ற வாழ்க்கைமுறை மாறவேயில்லை; மாற்றப்படவேயில்லை.
செயலளவில் அதிகார வகையில் ஆட்சி மொழி உரிமை இத்தேசங்களில் தமிழுக்குக் கிடைக்காவிட்டாலும் கூட, சீன மொழிக்கு நிகராகவும், பூகோளப் பந்தில் தமிழ் மொழி சிறப்புற்று, சீர்பெற்று, தொடர்ந்து தலைநிமிர்ந்து நிற்கின்றது என்றால் அதற்குக் காரணம் அம்மொழியின் தனிச்சிறப்பும், வளமையான இனிமையும்தான் என்று சுட்டிக்காட்டுகின்றார் இளங்குமரன்.

பல மொழிக்கலப்பினாலும், ஆதிக்க ஊடுருவல்களினாலும் தமிழ் மொழி தனது தனித்துவத்தை இழக்கும் ஆபத்து உள்ள இச்சூழ்நிலையில் அதன் சிறப்பைப் பேணிப் பாதுகாக்கின்ற ஒரு வரலாற்றுக் கடமை இந்தச் சந்ததியின் மீது சுமத்தப்பட்டிருக்கின்றது. இந்த வரலாற்றுக் கடமையைப் புரிவதற்குத் தயாராகுமாறு தமிழர்களுக்கு அறைகூவல் விடுத்திருக்கின்றார் இளங்குமரன்.

தமிழ் இனத்தின் கௌரவ வாழ்வை மீட்பதற்காக மண் மீட்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுவது போல தமிழ் மொழியைப் பாதுகாப்பதற்கான உயிர்ப்புள்ள போராட்டம் ஒன்று தீவிரத்துடன் முன்னெடுக்கப்பட வேண்டிய காலகட்டம் இது என்று அவர் குறிப்பிடுகின்றார்.

நமது மொழி காக்கப்பட வேண்டும். நமது கலை, பண்பாடு, கலாசாரம், வாழியல் விழுமியங்கள், மரபு ரீதியான மகிமைகள் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும்.
அதற்கான விழிப்புணர்வு தமிழ் மக்களிடையே கிளர்ந்தெழ வேண்டும்.

தமிழ் மொழியைப் பேணும் போராட்டத்தை வழிப்படுத்துவதிலும், அதற்காகத் தமிழ் மக்களைக் கிளர்ந்தெழச் செய்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் வெகுஜன ஊடகங்களின் குறிப்பாகத் தமிழ் ஊடகங்களின் பங்கு முக்கியமானது. தமிழ் ஊடகங்கள் தமது பங்களிப்பை சுயபரிசோதனை செய்து அளவீடு செய்துகொள்வதும் கூட இன்றைய தேவையாகவுள்ளது.
தமிழை மேலும் வளப்படுத்தி, செழுமைப்படுத்தி, உலக வாழ்வியல் பெறுமானங்களுக்கு ஏற்றதாக அதனை நேர்சீரமைக்கும் உயரிய சேவை ஒருபுறமாகவும்
பிறமொழிக் கலப்பாலும், பொறுப்பற்ற பாவனையாலும் தமிழ்மொழி கெட்டழிவதைத் தடுப்பது மறுபுறமாகவும்
இருமுனைப் பணியாக இது முன்னெடுக்கப்பட வேண்டும்.
அந்த வகையில் இதுவும் ஒரு மீட்புப் போரே.

நன்றி :- உதயன்

Sunday, May 18, 2008

கடற்படையின் செயற்பாட்டை சீர்குலைக்கும் கடற்புலிகள்

நாட்டில் துறைமுகங்களினதும் கடற்படைத் தளங்களினதும் பாதுகாப்பு வெகுவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடற்படைக்கப்பல்கள் மீதான கடற்கரும்புலிகளின் இரு தாக்குதல்களையடுத்தே கடற்படையினர் தங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். எனினும் இந்தப் பாதுகாப்பையும் மீறி கடற் புலிகள் பாரிய தாக்குதல்களை நடத்தி விடலாமென்ற அச்சமும் அவர்களுக்குள்ளது.

கடந்த வருடம் புலிகளின் பல ஆயுதக் கப்பல்களை ஆழ்கடலில் வைத்து அழித்து மூழ்கடித்ததாக கடற்படையினர் தெரிவித்திருந்தனர். இதில் உண்மையில்லாமலில்லை. கடற்படையினரின் இந்தத் தாக்குதல்கள் விடுதலைப் புலிகளுக்கு பெரும் சவாலாயிருந்த நிலையில் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் தொடர்ந்தும் வந்து கொண்டேயிருக்கிறன்றன.

புலிகளின் அனைத்து ஆயுதக் கப்பல்களும் அழிக்கப்பட்டுவிட்டதால் அவர்களுக்கு இனி ஆயுதங்கள் கிடைக்கமாட்டாதென கடற்படையினர் கூறினர். கடந்த வருடம் செப்ரெம்பர் மாதம் ஊடகவியலாளர்களைச் சந்தித்த கடற் படைத் தளபதி வைஷ் அட்மிரல் வசந்த கரணகொட, புலிகளின் ஆயுதக் கப்பல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டதுடன் புலிகளுக்கான ஆயுத விநியோகமும் தடுக்கப்பட்டுவிட்டது. அவர்களிடமிருக்கும் ஆட்லறி ஷெல்களும் மோட்டார் குண்டுகளும் மூன்று மாதங்ககளுக்கே போதுமானது. அதன் பின் அவர்களால் எதுவுமே செய்ய முடியாதென அடித்துக் கூறியிருந்தார்.

எனினும் வடபகுதிக் களமுனையில் தற்போது படையினருக்கேற்படும் இழப்புகளில் 70 வீதமானவை புலிகள் மேற்கொள்ளும் ஷெல் தாக்குதலாலும் மோட்டார் தாக்குதலினாலுமே ஏற்படுவதாக படைத்தரப்பு கூறுகிறது. கடற்படைத் தளபதியின் எதிர்பார்ப்புக்கு மாறாக புலிகள் ஆயுதங்களைத் தொடர்ந்தும் குறைவின்றிப் பெற்று வருவதையே இது காண்பிப்பதுடன் கடந்த சில மாதங்களில் அவர்களது ஆயுதக் கப்பல்கள் பல தடவைகள் வந்து சென்றுள்ளதாகவும் தெரியவருகிறது. இது கடற்படையினருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள அதேநேரம், களமுனையில் படையினரின் இழப்புக்களையும் அதிகரிக்கச் செய்கிறது.

இதனால்தான் புலிகளின் கடல் வழி விநியோகத்தை எப்படியாவது தடுத்து நிறுத்தி விட வேண்டுமென படையினர் முனைப்புக்காட்டி வருகின்றனர். இதையடுத்தே மன்னாரில் கரையோரப் பகுதிகளைக் கைப்பற்றி தமிழகத்திலிருந்து கிடைக்கும் விநியோகங்களை தடுக்கவும் முல்லைத் தீவு கரையோரத்தை கைப்பற்றி, சர்வதேச கடற்பரப்பூடான ஆயுத விநியோகத்தை தடுக்கவும் படைத்தரப்பு தீவிர முனைப்பு காட்டுகிறது.

புலிகளின் கடல்வழி விநியோகத்தை தடுக்க படையினர் முனையும் அதேநேரம், கடற்படையினரின் பலத்தை முடக்க புலிகளும் தாக்குதல்களைத் தொடுத்து வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் கடற்படையினரின் அதிகவேக டோரா பீரங்கிப் படகொன்று தாக்கி அழிக்கப்பட்ட அதேநேரம், கடந்த 10 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்தில் அதி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் கடற்படையினரின் விநியோகக் கப்பலொன்று தாக்கி அழிக்கப்பட்டுள்ளது.

வழமையான தாக்குதல்களைப் போலன்றி, நடைபெற்ற இவ்விரு தாக்குதல்களும் கடற்படையினருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் கடற்படையினரின் அதிவேக டோரா பீரங்கிப் படகுகளுடன் நேரடி மோதலில் ஈடுபட்டு அந்தக் கடும் மோதலின் நடுவே கடற்கரும்புலிகளின் தற்கொலைத் தாக்குதல் படகுகள் நுழைந்து கடற்படைப் படகுகளை தாக்கியழிக்கும் நடைமுறைக்கு மாறாக, கடற்புலிகள் தந்திரமான தாக்குதல்கள் மூலம் கடற்படையினருக்கு பலத்த இழப்புக்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளனர். இது கடற்புலிகளின் இழப்புகளை வெகுவாகக் குறைத்துள்ள அதேநேரம், இந்தத் தாக்குதல்கள் எவ்வாறு நடைபெற்றன என்பதைக் கண்டறிய முடியாது படையினர் தடுமாறியும் வருகின்றனர்.

நாயாறு கடற்பரப்பில் மிகவேகமாக நகர்ந்து கொண்டிருந்த அதிவேக டோரா பீரங்கிப் படகு அழிக்கப்பட்டது. திருகோணமலைத் துறைமுகத்தினுள் அதி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் தரித்து நின்ற கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. முதல் தாக்குதல், அதிவேகமாக நகரும் இலக்கு மீதும் அடுத்த தாக்குதல், நகராத இலக்கு மீதும் மேற்கொள்ளப்பட்டது. எனினும் இவ்விரு தாக்குதல்களும் எப்படி நடைபெற்றதென்பதை கடற்படையினரால் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் அப்படி நடந்திருக்கலாம் அல்லது இப்படி நடந்திருக்கலாமென வெறும் ஊகங்களை மட்டுமே அவர்களால் தெரிவிக்க முடிகிறது.

இவ்விரு தாக்குதல்களும், கடற்பரப்பின் மேலாக வந்து மேற்கொள்ளப்பட்டவையல்ல. கடலடித் தாக்குதல்களென்பதால் அவை குறித்து கடற்படையினரால் சரியான தகவல்களை வெளியிட முடியாதுள்ளது. எனினும், கடற்கண்ணி வெடிகள் மூலம் அல்லது மனித வெடி குண்டுகள் மூலம் இந்தக் கப்பல்கள் தாக்குதல்களுக்கிலக்காகியிருக்கலாமென கடற்படையினர் கருதுகின்றனர்.

நாயாறிலும் திருமலைத் துறைமுகத்தினுள்ளும் நடைபெற்ற இரு தாக்குதல்களும் கடற்படையினருக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இரு தாக்குதல்களின் போதும் கப்பல்கள் அழிக்கப்பட்ட பின்னரே தாக்குதலொன்று நடைபெற்றதை படையினரால் அறிய முடிந்துள்ளது. நாயாறில் ஆழ்கடல் பகுதியில் அதிவேக டோரா படகுகள் பல ரோந்தில் ஈடுபட்டிருந்த போதும் எந்தவொரு படகினதும் ராடர் திரையிலும் சிக்காது மிகத் துல்லியமாக நீருக்கடியில் மிகவேகமாக நகர்ந்து சென்றவர்கள், அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த டோரா பீரங்கிப் படகைத் தாக்கி அழித்துள்ளனர்.

அதேநேரம், திருமலைத் துறைமுகத்தினுள் கடற்படைத் தளத்தில் பலத்த கண்காணிப்புக்கு மத்தியிலும் பத்திற்கும் மேற்பட்ட டோராப் படகுகள் தீவிர ரோந்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையிலும் கடற்படையினரின் நீரடிப் பாதுகாப்பு பொறி முறையையும் (under water defence systems) தாண்டி கடற்புலிகளின் நீரடி நீச்சல் பிரிவு கரும்புலிகள் இத்தாக்குதலை நடத்தியதன் மூலம் இத்துறைமுகத்தினதும் கடற்படைத் தளத்தினதும் பாதுகாப்பு மட்டுமல்லாது, நாட்டின் அனைத்து துறைமுகங்களினதும் பாதுகாப்பை புலிகள் கேள்விக்குறியாக்கியுள்ளதுடன் இந்த வெற்றிகரமான தாக்குதல்கள் மூலம் இனி அவர்கள் தங்கள் தாக்குதல்களை விஸ்தரிக்கக் கூடுமென்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

நாயாறில் நடுக்கடலில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்த மர்மத்தை கடற்படையினராலேயே இது வரை அறிய முடியாதுள்ளது. ஆனால் திருமலைத் துறைமுகத்தினுள் கடற்புலிகள் எவ்வாறு தாக்குதல் நடத்தினார்களென கடற்படையினர் பல்வேறு ஊகங்களை தெரிவிக்கின்றனர். எனினும் அது சரியானது தான் என்பதை இதுவரை உறுதிப்படுத்த முடியவில்லை.

சுழியோடிகள் உடலில் வெடிகுண்டுகளை பொருத்திக் கொண்டு எதிரியின் கண்களில் படாதவாறு நீருக்கடியால் சென்று இலக்குகளைத் தாக்கி அழிப்பது -

நீரடி நீச்சல் மூலம் கப்பல்களின் அடிப்புறத்தை தொட்டு கப்பலின் அடியில் வெடிகுண்டைப் பொருத்தி பின் அதனை வெடிக்கச் செய்து கப்பலை அழிப்பது -

திருமலைத் துறைமுகத்தினுள் இடம்பெற்ற தாக்குதல் மூலம் அழிக்கப்பட்ட `எம்.வி.இன்வின்சிபிள்' கப்பல், தாக்குதலுக்கிலக்காகி 13 நிமிட நேரத்தில் கடலின் அடியில் மூழ்கிவிட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்ற போதும், தாக்குதலுக்கிலக்காகி சுமார் இரு மணி நேரத்தின் பின்னரே இக்கப்பல் மூழ்கியதாக கடற்படைதரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதைவிட கடல் கண்ணிவெடிகளை கப்பலின் அடிப்புறத்தில் படரவிட்டு நேரக்கணிப்பு கருவி மூலம் அல்லது சத்தத்தை எழுப்புவதன் மூலம் அல்லது அமுக்கத்தை பிரயோகித்து அல்லது அப்பகுதியில் மேற்கொள்ளப்படும் நடமாட்டம் மூலம் கண்ணிவெடிகளை வெடிக்கச் செய்து கப்பலை அழிக்கலாம். இவ்வாறானதொரு தாக்குதலை மேற்கொள்ளும் போது, கண்ணிவெடியை கடலினடியில் விதைத்த சுழியோடி அவ்விடத்திலிருந்து அகன்று விடவும் முடியும்.

திருகோணமலைத் துறைமுகக் கடலும் துறைமுகத்திற்கு வெளிப்புறக் கடலும் ஆழமானவையென்பதால் இவ்வாறான தாக்குதல்கள் இங்கு நடைபெற வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இத்தாக்குதலின் பின்னர் அப்பகுதியில் சுழியோடித் தேடுதல் நடத்திய கடற்படையினர், சிதைந்த உடற்பாகமொன்றை மீட்டதாக கடற்படையினர் கூறியிருந்தனர். எனினும், கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு கடற்கரும்புலிகளே இத்தாக்குதலை நடத்தியதாக விடுதலைப் புலிகள் கூறியிருந்தாலும் இத்தாக்குதலில் ஏதாவது உயிரிழப்புகள் ஏற்பட்டதா எனப் புலிகள் கூறாததால் இந்தத் தாக்குதல் எப்படி நடைபெற்றதென்ற ஊகங்கள் மேலும் அதிகரிக்கின்றன.

இதேநேரம், கப்பலின் மீது மனித வெடி குண்டுத் தாக்குதலை நடத்தி அதனை அழிக்க முடியும். புலிகளைப் பொறுத்த வரை தரையிலும் கடலிலும் மிகக் கடினமான இலக்குகளைத் தாக்க மனித வெடிகுண்டுகளை (Human Torpedoes) பயன்படுத்துவதும் இங்கு குறிப்பிட்டத்தக்கது. நாயாறில் அதிவேக டோரா பீரங்கிப் படகை புலிகள் இதுபோன்ற தொரு தாக்குதல் மூலமே அழித்ததாகக் கருதப்படுகிறது.

இவற்றையெல்லாம் பார்க்கும் போது திருமலைத் துறைமுகத்தில் கடற்படையினரின் நீரடிப் பாதுகாப்பு பொறிமுறையை ஊடறுத்துச் சென்ற கடற் கரும்புலிகள் கப்பலின் அடியில் வெடிகுண்டைப் பொருத்தி அதனை வெடிக்க வைத்து அழித்துள்ளதாக கடற்படையினர் கருதுகின்றனர்.

எனினும் தாக்குதல் நடைபெற்ற ேவளையில் அந்தக் கடற்பரப்பில் பத்துக்கும் மேற்பட்ட ரோந்துப் படகுகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தன. அவை மிகவும் சக்திவாய்ந்த ஒளிவெள்ளத்தை பாய்ச்சி அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தும் அவர்களுக்கு எதுவித சந்தேகத்தையும் ஏற்படுத்தாது கடற்புலிகளின் நீரடி நீச்சல் பிரிவு இத்தாக்குதலை நடத்தியுள்ளது.

துறைமுகப் பாதுகாப்பில் ஈடுபடும் ரோந்துப் படகுகளில் எப்போதுமே, நீருக்கடியில் சந்தேகத்திற்கிடமான நகர்வுகள் ஏதாவது இடம் பெறுகின்றனவா என்பதைக் கண்டறியக் கூடிய `சோனர்' கருவிகள் (sonar) பொருத்தப்பட்டிருக்கும். இவை எதிரொலி மூலம் நீருக்கடியிலான எந்தவொரு நடமாட்டத்தையும் இலகுவாக கண்டு பிடித்து விடக் கூடியவை. சுழியோடிகளைக் கண்டறியும் பொறிமுறையானது (Diver Detection Sonar System - DDS) நீருக்கடியிலான தாக்குதல்களை முறியடிக்க மிக நன்கு உதவக் கூடியவை. அந்தக் கருவிகள் இந்த ரோந்துப் படகுகளில் பொருத்தப்பட்டிருந்தால் இந்தத் தாக்குதலைத் தடுத்திருக்க முடியுமெனவும் படை வட்டாரங்கள் கூறுகின்றன.

இதை விட, கடற்புலிகளின் நீரடி நீச்சல் பிரிவினர் (சுழியோடிகள்) மேற்கொள்ளும் தாக்குதலை, கடற்படைப் படகுகளின் இடைவிடாத கண்காணிப்பும் நீருக்கடியில் கடற்படைச் சுழியோடிகள் அடிக்கடி எழுந்தமானமாக மேற்கொள்ளும் திடீர் சோதனைகள் மூலமும் முறியடிக்க முடியுமென படைத்தரப்பு கூறுகின்றது.

அத்துடன் கடற்படைச் சுழியோடிகள் கப்பல்களின் அடிப்புறப் பகுதிகளில் குறிப்பிட்ட நேர இடைவெளியில் தேடுதல்களை நடத்துவதன் மூலம் கப்பலின் அடிப்புறப் பகுதியில் வெடி குண்டுகள் ஏதாவது பொருத்தப்பட்டிருக்கின்றதா என்பதைக் கண்டறிய முடியும். இதன் மூலம் கப்பல் பயன்படுத்தக் கூடிய நிலையிலுள்ளதா என்பதை உறுதிப்படுத்த முடியும். இதேபோல் கப்பலின் மேல் புறத் தட்டிலிருந்தும் மேற்கொள்ளப்படும் சோதனைகள் மூலம் கடலுக்கடியில் சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகளைக் கண்டறிய முடியுமென ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

துறைமுகங்களைப் பொறுத்தவரை அவற்றின் நீரடிப் பாதுகாப்புக்கென வகுக்கப்பட்ட விஷேட திட்டங்களில், துறைமுகத்திற்குள் நீருக்கடியால் சுழியோடிகள் நுழைவதைத் தடுக்க கம்பிவேலிகள் பொருத்தப்படும். கண்ணாடி நாரிழையிலான `நெற்' களை கடலுக்கடியில் பொருத்துவதன் மூலம் சுழியோடிகள் நீருக்கடியால் நுழைவதைத் தடுக்க முடியும். கடலுக்கடியில் கொங்கிறீற்களில் பொருத்தப்பட்ட துருப்பிடிக்காத இந்த கண்ணாடி நாரிழை நெற்கள் கடலுக்கு மேலே சுமார் 2 மீற்றர் வரை நீட்டிக் கொண்டிருக்கும். `நெற்' பொருத்தப்பட்ட பகுதிகளில் கப்பல்களின் நடமாட்டம் இருக்காது. `நெற்' பொருத்தப்படாத பகுதிகளினூடாகவே கப்பல்கள் துறைமுகத்திற்குள் வந்து செல்லும்.

திருகோணமலைத் துறைமுகத்திலும் வடக்குப்பக்கமாகவே இந்தப் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டிருந்தது. தென்புறப் பக்கத்தில் இந்தப் பாதுகாப்பு வேலி இருக்கவில்லை. இதுபோன்று அங்கு பல பாதுகாப்புக்குறைபாடுகள் இருந்துள்ளன. இதனைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் நன்கு அவதானித்து அதற்கேற்பவே திட்டமிட்டு கடற்புலிகளின் நீரடி நீச்சல் பிரிவு துறைமுகத்தினுள் புகுந்து தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டபோது மட்டுமல்லாது, கடற்புலிகள் துறைமுகத்தின் பாதுகாப்பு குறித்து நீண்ட புலனாய்வுத் தகவல்களை சேகரித்த போது கூட கடற்படையினரிடம் அவர்கள் அகப்படாதது அவர்களது சிறப்பு புலனாய்வுப் பிரிவையும் சிறப்பான பயிற்சியையும் காண்பிப்பதாக கருதப்படுகிறது. எனினும், கடற்புலிகள் தாக்கிய கப்பல் தொடர்பாக சற்று குழப்பமுள்ளது. கடற்படையினரின் தாக்குதல் கப்பல்கள் பல அவ்வேளையில் அங்கு நின்றுள்ளன. புலிகளின் தாக்குதலுக்கிலக்கான `எம்.வி.இன்வின்சிபிள்' கப்பலுக்கு 500 மீற்றர் தூரத்தில் தாக்குதல் கப்பலான `எஸ்.எல்.என். சக்தி' நின்றுள்ளது. `இன்வின்சிபிள்' துறைமுகத்தின் அஷ்ரப் இறங்குதுறைக்கு வடக்கேயும் `எஸ்.எல்.என்.சக்தி' இறங்குதுறைக்கு தெற்கேயும் 500 மீற்றர் இடைவெளியில் நின்றுள்ளன.

`சக்தி' யை தாக்க வந்த புலிகள் தவறுதலாக `இன்.வின்.சிபிள்' ளைத் தாக்கி விட்டார்களோ என்றும் கருதப்படுகிறது. அதேநேரம், தாக்குதலுக்கிலக்கான `இன்வின்சிபிள்' கப்பலிலிருந்து கிழக்குப் பக்கமாக ஒரு கி.மீற்றர் தூரத்தில் கடற்படைத் தளத்தினுன் இறங்கு துறையில் கடற்படையினரின் தாக்குதல் கப்பல்களான எஸ்.எல்.என்.சயுர, எஸ்.எல்.என்.சமுத்திரா, எஸ்.எல்.என்.சுரநிமல ஆகியனவும் தரித்து நின்றுள்ளன.

கடற்புலிகளின் இந்தத் தாக்குதலானது கடற்படையினரை பலத்த அதிர்ச்சியடையச் செய்துள்ளது. ஆழ்கடலிலும், துறைமுகத்தினுள்ளும் நுழைந்து கடற்படைக்கப்பல்களை தாக்கியழிக்கும் வல்லமையை புலிகள் பெற்றுள்ளமையானது வடபகுதிக் கடற்பரப்பில் கடற் புலிகளின் கையை ஓங்கச் செய்து விடலாமென்ற அச்சம் படைத்தரப்புக்கு ஏற்பட்டுள்ளது. விமானப் படைத் தளங்களினுள் புகுந்து ஒரேநேரத்தில் பல விமானங்களை கரும்புலிகள் அழித்தது போல் கடற்படைத் தளங்களினுள்ளும் புகுந்து கரும்புலிகள் ஒரேநேரத்தில் பல தாக்குதல் கப்பல்களை அழித்து விடலாமென்ற அச்சமும் எழுந்துள்ளது.

புலிகளின் ஆயுத விநியோகத்தை தடுப்பதற்காக அவர்களது ஆயுதக் கப்பல்களை கடற்படையினர் அழிக்க முனைகையில், தங்கள் ஆயுத விநியோகத்தை தடுத்து நிறுத்த முயலும் கடற்படைக் கப்பல்களில் புலிகள் கைவைக்கத் தொடங்கி விடுவார்களோ என்ற அச்சம் கடற்படையினருக்கு ஏற்பட்டுள்ளது. புலிகளின் விநியோகங்களை தடுக்க படையினர் முற்படுகையில் அதனை முறியடிக்கும் நடவடிக்கையில் புலிகள் இறங்கியுள்ளனர்.

புலிகளின் இவ்வாறான தாக்குதல்களானது படையினருக்கான ஆயுத விநியோகத்திற்கும் கடல் வழியூடான படையினரின் போக்குவரத்திற்கும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. யாழ்.குடாநாட்டுக்கான விநியோகம் தற்போது பிரதானமாக கடல்வழியூடாகவே மேற்கொள்ளப்படுகிறது. குடாநாட்டிலுள்ள படையினரும் ஆயிரக்கணக்கில் ஒரே நேரத்தில் கப்பல்கள் மூலமே திருமலைக்கான பயணத்தை மேற்கொள்வதால் குடாநாட்டிற்கான விநியோகத்திற்கும் புதிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

நாயாறு தாக்குதலும் திருகோணமலைத் துறைமுகத் தாக்குதலும் வழமையானதொரு தாக்குதலாகக் கருதப்பட முடியாது. கடற்புலிகள் தங்கள் தாக்குதல்களை விஸ்தரிப்பார்களேயானால் அது படைத்தரப்புக்கு மட்டுமல்ல, பொருளாதாரத்திற்குமே பேரச்சுறுத்தலாகி விடும். இதனால் கடற்புலிகளால் எழுந்துள்ள புதிய அச்சுறுத்தலைத் தடுக்கும் தீவிர நடவடிக்கைகளில் கடற்படையினர் இறங்கியுள்ளனர்.

நன்றி :- தினக்குரல்

Wednesday, May 14, 2008

விடுவிக்கப்பட்ட பிரதேசமாக கிழக்கைக் கருத முடியுமா?

கிழக்கிலங்கையைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிப்பது "ஜனநாயக மீட்பு' என்று கொழும்பு ஆரவார மாக அறிவித்தபோது அதை வரவேற்ற மேற்குலகு, இப் போது ஜனநாயகத்தின் அடிப்படை அங்கமான தேர்தலும், வாக்களிப்பும், ஜனநாயகத்தின் பெயரால் படுகொலை செய்யப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கின்றது.
நிர்வாக ரீதியாகப் பிளவுபடுத்தப்பட்டு, துண்டாடப் பட்ட வடக்கு, கிழக்குக்கு பதின்மூன்றாவது அரசமைப் புத் திருத்தத்தின் கீழ் அதிகாரத்தைப் பகிர்ந்தளித்தல் என்ற புருடா நாடகத்தை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் யோசனைத் திட்டமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வைக்கச் செய்தபோது, அத்திட்டத்தின் பின் னணியில் பின்னப்பட்டிருந்த கபட வலையைப் புரிந்து கொள்ளாமல், "அதிகாரப் பகிர்வுக்கான முதல் காலடி' என்று அந்த முயற்சிக்குப் புகழாரம் சூட்டியது இந்தியா. இப்போது அந்தத் தொடர் நடவடிக்கைத் திட்டத்தின் ஓர் அங்கமாகக் கிழக்கு மாகாணத் தேர்தல் ஜனநாயகப் படு கொலையாக அரங்கேறியமையைப் பார்த்து இந்தியா விக்கித்து, வாயடைத்து நிற்கின்றது கருத்துஎதுவும் வெளியிடாமல் அமைதி காத்து.

ஈழத் தமிழர்களின் நியாயமான உரிமைகளுக்கான போராட்டத்தை எப்போதுமே கொச்சைப்படுத்தி, குறை கூறி, அதற்கு ஆப்பு வைக்கும் தனது காலாதிகாலப் போக் கைக் கைக்கொள்கின்ற "த ஹிண்டு' போன்ற இந்திய அதி கார வர்க்க அடிவருடிகள் மட்டுமே, ஜனநாயகத்தை அடித் துப் பறிக்கும் பகற்கொள்ளை கிழக்கிலங்கையில் அரங் கேறியமையைக் கண்டுங்காணாமல் இருப்பது போல கவனிக்காமல் புறமொதுக்கிவிட்டு, அந்தத் தேர்தல் முடிவுகளை வரவேற்று சப்புக்கட்டுக் கட்டியி ருக்கின்றனர்.

ஜனநாயகக் கோட்பாடுகளும் அடிப்படைப் பண்பி யல்புகளும் கடந்த பத்தாம் திகதி கிழக்கு மாகாணத் தேர்தல் வாக்களிப்பின்போது பகல் கொள்ளையாகச் சூறையாடப்பட்டமை தொடர்பாக அமெரிக்க அரசு தனது கவலையையும் சிரத்தையையும் இலங்கை அர சுக்கு இராஜதந்திர ரீதியில் கடிதம் மூலம் தெரிவிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நீதியாகவும், நியாய மாகவும் நடத்தப்படவேயில்லை எனப் பல பொது அமைப் புகள், நிறுவனங்கள், சுயாதீனக் கண்காணிப்புக் குழுக்கள் தெரிவித்திருக்கின்றமையைக் கணக்கில் எடுத் திருக்கும் அமெரிக்கா, பொதுமக்கள் தங்களின் பிரதிநிதி களையும், நிர்வாகத்தையும் சுயாதீனமாகத் தெரிவுசெய் வதற்கு அனுமதிக்கப்படாதமை பல புதிய பிரச்சினைக ளையும் நெருக்கடிகளையும் உருவாக்கும் ஆபத்தை ஏற்ப டுத்தியுள்ளது என்பதை இப்போதாவது உணரத் தலைப்பட்டிருக்கின்றது என்பது வரவேற்கத்தக்க அம்சமே.

ஈழத் தமிழர்கள் தங்களின் சுதந்திர உரிமைகளுக்கும், கௌரவ வாழ்வுக்குமாக நடத்தும் போராட்டத்தை "பயங்கரவாதமாக' அடையாளம் கண்டு, அப்போராட் டத்தை முன்னெடுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை "பயங்கரவாத அமைப்பாக' பட்டியலிட்ட மேற்குலகம், இப்போதுதான் தமிழர்களின் உரிமைக்கான எழுச்சியை அடக்கி, ஒடுக்குவதற்காகத் தென்னிலங்கை முன்னெடுக்கும் "அரச பயங்கரவாதத்தின்' ஆழ, அக லங்களையும், அதன் கொடூரத்தையும், தாற்பரியத்தை யும் புரிந்துகொள்ளத் தலைப்பட்டிருக்கின்றது.

அதேபோல, புலிகளின் பிடியிலிருந்து கிழக்கு மாகா ணத்தை அரசுத் தரப்பு விடுவித்தபோது அதனை வர வேற்ற அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள், அந்த விடு விப்பின் பின்னர் அங்கு "ஜனநாயகம்', "சட்டத்தின் ஆட்சி' , "நியாயச் செயற்பாடுகள்' என்பன குழிதோண்டிப் புதைக்கப்பட்டு, ஆட்சித் தரப்பின் பயங்கரவாதம் கட்டவிழும் போதுதான் கிழக்கு மாகாணம் "சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்த' தாற்பரியத்தைப் புரிந்து கொள்ளும் கட்டத்துக்கு வந்திருக்கின்றன.

அதேவேளை
உலக நாடுகளும், கண்காணிப்புக் குழுக்களும் அக லக் கண்விழித்துப் பார்த்திருக்கவே "ஜனநாயகப் படு கொலையை' கிழக்குத் தேர்தலில் வெகு "ஸிம்பிளாக' ஆட் சித்தரப்பு அரங்கேற்றியமையை உள்வாங்கி நோக்கும் சர்வதேச சமூகத்துக்கு, அதே ஆட்சிப் பீடம் சர்வதேசப் பார்வை விழாத யுத்த முனையில் குறிப்பாக இராணுவ நடவடிக்கைகளின் கோரப் பிடிக்குள் சிக்கியிருக்கும் தமிழர் தாயகத்தில் எவ்வளவு "நியாயமாக' செயற்படும் என்பதை உணர்ந்துகொள்வது அவ்வளவு ஒன்றும் கஷ் டமான காரியமாக இருக்காது.
அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகப் பிரதேசங்களிலும் மற்றும் தென்னிலங் கையிலும் ஆள்கடத்தல்கள், பலவந்தமாகக் கடத்திக் காணாமற்போகச் செய்தல், சட்ட விரோதப் படுகொலை கள், அச்சுறுத்திக் கப்பம் அறவிடல் என்று மோசமான அராஜகங்களும், மனித உரிமை மீறல்களும் தமிழர்க ளுக்கு எதிராகப் பெருமளவில் தொடர்கின்றன.

அரசு, புலிகளின் பிடியிலிருந்து விடுவித்ததாகக் கூறிக் கொள்ளும் கிழக்கிலும் இந்நிலைமை மோசமாகத் தொடர் கின்றது. போதாக்குறைக்கு ஜனநாயகத் தேர்தலின் போதும் அங்கு அட்டூழியம் அரங்கேறியிருப்பது அம்பலமாகியுள்ளது.

இந்நிலையில் சட்டத்தின் ஆட்சியும், ஜனநாயகத்தின் மாண்பும் அங்கு குழிதோண்டிப் புதைக்கப்பட்டிருக்கையில் கிழக்கை உண்மையில் "விடுவிக்கப்பட்ட பிரதேசமாக' கருத முடியுமா கூறமுடியுமா என்பது குறித்து அமெரிக்காவுக்கு சந் தேகம் எழுந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

காலம் கடந்தாவது உண்மை நிலைவரத்தைப் புரிந்துகொள்ளும் நிலைக்கு அமெரிக்கா வந்திருப்பது ஓரளவு நல்ல சகுனமே.

நன்றி :- உதயன்

Sunday, May 11, 2008

கிழக்கில் ஜனநாயகப் படுகொலை

ஈழத் தமிழர் தாயகத்தின் தென்புறத்தில் கிழக்கிலங்கையில் "வெற்றிகரமாக' ஒரு தேர்தலைத் தான் நடத்தி முடித்திருப்பதாகக் காட்டியிருக்கின்றது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசு.
தமிழர்களின் பாரம்பரிய பூமியான வடக்கு கிழக்கில் அவர்களின் தாயக மண் மீதான பிறப்புரிமைக் கோரிக்கையைச் சிதைத்து அழிக்கும் எண்ணத்துடன், வடக்கையும், கிழக்கையும் நிர்வாக ரீதியாகத் துண்டித்துப் பிளக்கும் தனது கபடத் திட்டத்தில் வெற்றி கண்டு விட்டதாகக் கருதும் தென்னிலங்கை, அந்த வெற்றியை நிலைநிறுத்தும் கற்பனையோடு இப்போது ஒரு மோசடித் தேர்தலையும் அங்கு நடத்தி முடித்திருக்கின்றது.

தமிழர் தாயகத்தைப் பிளந்து துண்டாடி மாகாண நிர்வாகம் என்ற பெயரில் கிழக்கில் கொழும்பு அரசினால் உருவாக்கப்படும் இந்தப் பொம்மைக் கட்டமைப்புக்குப் பொறுப்பாளராக, அரசுத் தரப்பின் ஏவலாளராக, யார் நியமிக்கப்படப் போகின்றார்கள் என்பதில் தமிழர்களுக்கு அக்கறை இல்லை.

கிழக்கு மாகாண ஆட்சியும் சரி, வடக்கு மாகாண செயலணி நிர்வாகமும் சரி, தமது விடுதலையின் வேணவாவில் ஊறித் திளைத்திருக்கும் தமிழர்களைப் பொறுத்தவரை,"இராவணன் ஆண்டாலென்ன, இராமன் ஆண்டாலென்ன, கூட வந்த குரங்கு ஆண்டாலென்ன?' என்ற சிந்தனைப் போக்கில் அளவீடு செய்யப்படுபவைதான்.
என்றாலும், இந்தக் கிழக்குத் தேர்தலும் அதை மஹிந்த அரசு நடத்திய விதமும், அதையொட்டி ஜனநாயகத்தின் பெயரால் அரங்கேறிய அசிங்கங்களும் இலங்கை தொடர்பாக சர்வதேச சமூகம் சரியான ஒரு படத்தை வரைந்து கொள்ள உதவியிருக்கும் என்பது நிச்சயம்.
பிரகடனப்படுத்தப்பட்ட வாக்குப் பெறுபேறுகள் பற்றிய எண்ணிக்கை அல்லது தேர்தல் முடிவு பற்றிய அறிவிப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசுக்குத் தனியாக தலைப்பாகை கிரீடம் சூட்டுவதாக அமையலாம்.

ஆனால் அந்தத் தலைப்பாகையில் கிரீடத்தில் ஊழல், மோசடி, ஆள் மாறாட்டம், குளறுபடி, வன்முறை, அச்சறுத்தல், கள்ளவாக்கு என்று வரிசை வரிசையாக நெய்யப்பட்டிருக்கும் ஜரிகைகள் அப்பட்டமாக வெளியில் தோற்றுகின்றன. அரசுத் தரப்பின் அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்தி, ஆவணப்படுத்தி, அரங்கேற்றுவதிலும், பறைசாற்றுவதிலும் இந்தத் தேர்தல் ஒரு சாதனை படைத்திருக்கின்றது என்றால் அது மிகையாகாது.

இந்தக் கண்கட்டு வித்தைத் தேர்தல் நாடகத்தின் முடிவின்படி, பிள்ளையான் அணி என்ற ஆயுதக் குழுவைக் கைகோத்து, அரவணைத்து போட்டியிட்ட ஆளும் தரப்புக்கு இரண்டு போனஸ் ஆசனங்களுடன் சேர்ந்து கிழக்கு மாகாணசபையில் இருபது இடங்கள். ஐக்கிய தேசியக் கட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட்டுக்குப் பதினைந்து இடங்கள். திருகோணமலை மாவட்டத்தில் ஜே.வி.பிக்கு ஓரிடமும், மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்புக்கு ஓரிடமும் கிடைத்திருக்கின்றன.

இலங்கைத் தேர்தல் வரலாற்றில் மிகப் பெரிய மோசடி வாக்களிப்பு என இதனை வர்ணித்துள்ள இலங்கையின் பிரதான எதிர்க்கட்சிகள் எல்லாம், இதனைப் பெரும் ஜனநாயகப் படுகொலைச் செயற்பாடு என்றும் விமர்சித்துள்ளன.

ஆயுதக் குழு ஒன்றை அரவணைத்து, அதனுடன் அரசே கூட்டுச் சேர்ந்து, அராஜகங்களையும், சட்ட அத்துமீறல்களையும் கட்டவிழ்த்துவிட்டு, உச்ச மோசடியோடு இந்த ஜனநாயகப் படுகொலையைப் புரிந்திருக்கின்றது என்று எதிர்க்கட்சிகள் அனைத்தும் கூட்டுச் சேர்ந்து குரல் எழுப்பியிருக்கின்றன.

ஆயுதக் குழுக்களை இலங்கை அரசு தனது துணைப்படையாக வைத்துக்கொண்டு, "புலிகளை ஒழிக்கும் செயற்பாடு' என்ற பெயரில் புரிந்துவரும் கொடூரங்களும், அரச பயங்கரவாதமும் இப்போது வெளிப்படையானவை. அவற்றைக் கண்டு உலகமே அதிர்ந்து போய் நிற்கின்றது.
அதே அரச பயங்கரவாதம் இப்போது கிழக்கு மாகாணத் தேர்தலிலும் அரசின் "ஜனநாயக வெற்றிக்கான' தேர்தல் நடவடிக்கைகளிலும் மிகத் தாராளமாகக் கட்டவிழ்ந்திருக்கின்றது.

பெரிய எடுப்பில் ஆள் மாறாட்டங்களும், கள்ள வாக்குத் திணித்தலும், அச்சுறுத்தி வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுத்தலும், வாக்குகளை அள்ளிக் கொட்டலும் வரையறை தாண்டி மிக மோசமாக இடம்பெற்றிருக்கின்றன என்பதை நேற்று முன்தினம் வாக்களிப்பு முடிவதற்கு முன்னரே பிரதான எதிர்க்கட்சிகளான ஐ.தே.கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜே.வி.பி. போன்றவை வெளிப்படுத்தி விட்டன.

"பயங்கரவாதத்துக்கு எதிரான போர்' என்ற பொய்த் தந்திரோபாய சுலோகத்தைப் பயன்படுத்திக் கொண்டு, சர்வதேச சமூகத்தின் காதில் பூச்சுற்றியபடி தமிழர்களைக் கொன்றொழிக்கும் அரச பயங்கரவாதத்தை வெற்றிகரமாகத் தொடரும் கொழும்பு அரசு, அதேபோல, இப்போது இந்த ஜனநாயக மோசடித் தேர்தலையும் ஜனநாயகத்துக்குக் கிடைத்த பெரு வெற்றியாகப் பிரசாரப்படுத்தி, முன்நிறுத்த முயலும் என்பது திண்ணம்.

ஈழத் தமிழர்களை அழித்தொழிக்கும் கொழும்பின் அரச பயங்கரவாதத்தைக் கண்டும், காணாமலும் இருந்து,மௌனம் சாதித்து, அத்தவறுக்கு இடமளித்து, பெரும் குற்றமிழைக்கும் சர்வதேச சமூகம், இலங்கை அரசின் இந்த ஜனநாயகப் படுகொலையின் பிறப்பாக்கமாக உயிர்ப்பித்த இத் தேர்தல் முடிவு தொடர்பான அரசின் வெற்றிப் பிரகடனத்தையும் மௌனத்தோடு ஏற்று அங்கீகரிக்கும் என்பது உறுதி.


நன்றி - உதயன்

மன்னார் கரையோரத்தை கைப்பற்ற படையினர் திட்டம்

வடக்கே மன்னாரை மையப்படுத்தியே போர் தொடர்கிறது. வவுனியா, மணலாறு, யாழ். குடாவில் படை நடவடிக்கைகளுக்கு பலத்த பின்னடைவுகள் ஏற்பட்ட நிலையில் மன்னார் களமுனையில் மட்டுமே சில வெற்றிகள் கிடைத்தன. எனினும் மடுவைக் கைப்பற்றிய பின்னரும் அந்த வெற்றியைக் கொண்டாட முடியாத நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

மடுத் தேவாலயத்திற்கு படையினர் சென்ற போது அங்கு மாதா சொரூபம் இருக்கவில்லை. அடம்பன் பகுதிக்கு படையினர் சென்றபோது அங்கு எதிர்ப்பே இருக்கவில்லை. இது படையினரின் இலக்குகள் குறித்த கேள்விகளை எழுப்பும் அதேநேரம் மன்னார் களமுனையில் அடுத்து என்ன நடக்கப் போகிறதென்ற கேள்விகளையும் எழுப்புகிறது.

மடுத் தேவாலயத்தை நோக்கி கடந்த வருட முற்பகுதியில் படையினர் புறப்பட்ட போது அதற்கொரு அரசியல் நோக்கமிருந்தது. அடம்பன் பகுதியை நோக்கி கடந்த வருட பிற்பகுதியில் படையினர் புறப்பட்ட போது அதற்கொரு இராணுவ நோக்கமிருந்தது. ஆனால் இவ்விரு பகுதிகளுக்கும் இன்று படையினர் சென்றுவிட்ட பின்னரும் அடுத்த இலக்குகள் என்னவெனத் தெரியாது படையினர் குழப்பமடைந்துள்ளனர்.

மடுத் தேவாலயத்தைச் சுற்றி படையினர் குவிக்கப்பட்டுள்ள போதும் அங்கு மாதாவின் சொரூபத்தை கொண்டு வர மதகுருமார் தயாரில்லை. அவர்கள் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க படையினர் தயாரில்லையென்பதால் அந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்படாத வரை மாதாவின் சொரூபத்தை அங்கு கொண்டுவர குருமார்களும் தயாரில்லை. இது, மடுவைக் கைப்பற்றியதன் நோக்கத்தையே தலை கீழாக்கிவிட்டதால் அங்கு அடுத்து என்ன செய்வதெனத் தெரியாது படையினர் தடுமாறுகின்றனர்.

இந்த நிலையில் தான் மன்னாருக்குள் படையினர் சுழல்கின்றனர். `ஏ9' வீதியூடாக கிளிநொச்சி நோக்கிச் செல்வதா அல்லது `ஏ32' (மன்னார் - பூநகரி வீதி) வீதியூடாக யாழ்.குடாவுக்குச் செல்வதா எனத் தடுமாறிய படையினர், தற்போது மன்னாரில்பரந்த வெளிகளுக்குள் சிக்குண்டுள்ளனர். புலிகளும் அவர்களை அலைக்கழித்து வருகின்றனர்.

மடுவைக் கைப்பற்றும் நோக்கில் 57 ஆவது படையணி புறப்பட்டது. அடம்பனை கைப்பற்ற 58 ஆவது படையணி புறப்பட்டது. 57 ஆவது படையணி மடுவுடன் நின்றுவிட 58 ஆவது படையணி அடம்பனுக்கு வந்து அடுத்த இலக்கு குறித்து ஆலோசிக்கும் நிலையிலுள்ளது. ஏனெனில் உயிலங்குளம் - அடம்பன் - பாப்பாமோட்டையென ஒரே நேர்கோட்டில் தொடர்ந்து வடக்கே முன்னேறுவதா அல்லது அடம்பனிலிருந்து வலது பக்கமாக கிழக்கே ஆண்டான்குளத்தை நோக்கிச் செல்வதா என்பது குறித்து படையினர் சிந்திக்கின்றனர்.

மன்னாரின் கரையோரமாக மன்னார், பூநகரி வீதியிலேயே பாப்பாமோட்டை உள்ளது. மன்னார், பூநகரி வீதியூடாக வடக்கே நகர்ந்து புலிகள் வசமுள்ள மன்னாரின் கரையோரப் பகுதிகளை முற்று முழுதாகக் கைப்பற்றி தமிழகத்திற்கும் புலிகளுக்குமிடையிலான கடல் வழி விநியோகத்தை தடுத்து நிறுத்துவதே இந்தப் படை நடவடிக்கையின் பிரதான நோக்கமாகும். மன்னார், வவுனியா வீதியிலுள்ள உயிலங்குளத்திலிருந்து நகர்ந்த படையினர் உயிலங்குளம், பாப்பமோட்டை வீதியில் நடுவில் அடம்பனைச் சென்றடைந்துள்ளனர். இங்கிருந்து இதேவீதியில் மேலும் முன்னேறிச் சென்றால் பாப்பாமோட்டையை அடைந்து மன்னார்- பூநகரி வீதியில் மேலுமொரு முன்னேற்றத்தை அடைந்து விடலாம். ஆனால் அடம்பனிலிருந்து நேரே வடக்காக பாப்பாமோட்டையை நோக்கி படையினர் முன்னேற முயல்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

உயிலங்குளத்திற்கும் அடம்பன் சந்திக்குமிடையிலான தூரம் சுமார் நாலரை மைல்களாகும். இந்தத் தூரத்தை கடக்க படையினர் கடந்த வருடம் அக்டோபர் மாதம் பாரிய படை நகர்வை ஆரம்பித்தனர். எனினும் சுமார் ஆறு மாதங்களின் பின்பே உயிலங்குளத்திலிருந்து நேர் வடக்கே அடம்பன் சந்தியை வந்தடைந்துள்ளனர். இங்கிருந்து மேலும் வடக்கே நேராக சுமார் நாலரை மைல் தூரம் சென்றால் பாப்பாமோட்டையை அடைந்துவிடலாம்.

ஆனால் அடம்பனிலிருந்து பாப்பாமோட்டையை நோக்கிய நகர்வு பெரும் பொட்டல் வெளிகளுக்கூடானது. இந்தப் பொட்டல் வெளிகளைத் தாண்டுவதாயின் படையினர் பேரிழப்புகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். மிக நீண்ட தூரத்திலிருந்தே எதிரியை மிகச் சுலபமாக இலக்கு வைக்கக் கூடிய களமுனை இதுவாகும். இதைவிட இப்பகுதி மிக மோசமான வரட்சிக்குரிய பிரதேசமாகும். தண்ணீரை மருந்துக்கும் காணமுடியாத காலநிலை கொண்டது. இதனால் அடம்பனிலிருந்து பாப்பாமோட்டை நோக்கிய நகர்வு சாத்தியமற்றதென்பது படையினருக்கு நன்கு தெரியும்.

இந்தப் பிரதேசத்தில் மழையென்றால் சேறும் சகதியும் நிறைந்து விநியோகப் பிரச்சினை ஏற்படும். கடும் வெயிலென்றால் குடி நீர்ப்பிரச்சினை மிகப்பெரும் பிரச்சினையாகிவிடும். இதனால் தான், பெரும் பரப்பளவு கொண்ட இந்தப் பிரதேசத்தில் காலாகாலமாக வாழும் மக்கள் தொகை வெறும் 3,500 பேராகும். அந்தளவுக்கு மக்கள் வாழ முடியாத வரட்சிமிக்க பிரதேசமாகும்.

ஏற்கனவே 1991 இல் `கிறீன் பெல்ற்' என்ற பெயரில் இங்கு இடம்பெற்ற பாரிய படை நடவடிக்கையில் படையினர், மன்னார், பூநகரி வீதியில் மாந்தைச் சந்தியிலிருந்து கிழக்குப் பக்கமாக அடம்பன், ஆண்டான்குளம், ஆட்காட்டிவெளி, பரப்புக்கடந்தான் வரையான பிரதேசத்தை கைப்பற்றிய போதும் பின்னர் இரு நாட்களில் இந்தப் பகுதிகளைக் கைவிட்டு பழைய இடத்திற்குத் திரும்பி விட்டனர். புலிகளின் பலத்த எதிர்ப்பின்றி இந்தப் பிரதேசத்தை கைப்பற்றிவிட்டு புலிகளின் பலத்த எதிர்த் தாக்குதலின்றியே இரு நாட்களில் இப்பகுதிகளை படையினர் கைவிட்டுச் சென்றனர்.

இதுபோல் 1999 இல் ரணகோச 3 மற்றும் 4 படை நடவடிக்கைகளின் போதும் படையினர் இந்தப் பிரதசேங்களை சிரமமின்றிக் கைப்பற்றிவிட்டு சுமார் இரு மாதங்களின் பின் இப்பகுதிகளிலிருந்து விலகிச் சென்றனர். அந்தளவிற்கு இந்தப் பிரதேசங்களில் மழை, வெயில் காலத்தை தாக்குப் பிடித்து விநியோகங்களை மேற்கொள்வது மிகக் கடினம். அதனையும் மீறி நிலைகொள்ளும் போது யுத்த முனையில் இழப்புகள் அதிகமாகுமென்பதை முன்னர் படையினர் நன்குணர்ந்திருந்தனர். இதனால் தான் அடம்பனிலிருந்து சுமார் நாலரை மைல் தூரத்திலுள்ள பாப்பாமோட்டை நோக்கி படையினர் நகராது அடம்பனிலிருந்து கிழக்கே ஆண்டான்குளம், ஆட்காட்டி வெளிநோக்கிச் சென்று அங்கிருந்து வடக்கே முன்நகர்ந்து, பின்னர் பூநகரி வீதியில் பள்ளமடு சென்று மன்னார் விடத்தல்தீவை கைப்பற்றிவிட படைத்தரப்பு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதேநேரம் உயிலங்குளத்திற்கு வடக்கே கறுக்காய்குளம் ஊடாக உட்புறத்தால் மற்றொரு படைநகர்வு முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது. கறுக்காய்குளம் - வட்டக்கண்டல் - ஆண்டான்குளம் - ஆட்காட்டிவெளிநோக்கி பாரிய படைநகர்வுக்கான முயற்சிகளிலும் படையினர் ஈடுபட்டுள்ளனர். அடம்பனிலிருந்து ஆண்டான்குளம் நோக்கியும் கறுக்காய்குளம் ஊடாக ஆண்டான்குளம் நோக்கியும் ஒரே நேரத்தில் பாரிய படைநகர்வுகளை மேற்கொள்ளும் போது ஒரு கட்டத்தில் இடையில் சிக்கும் புலிகள் பொறிக்குள் சிக்கிவிடுவரென்பதால் தந்திரமாக, கடும் எதிர்ப்பின்றி இரு முனைகளாலும் ஆண்டான் குளத்தை நோக்கிச் சென்றுவிடலாமென படைத்தரப்பு திட்டமிட்டுள்ளது.

மன்னார் களமுனையை பொறுத்தவரை அது பொட்டல்வெளிகளையும் சிறு சிறு பற்றைக் காடுகளையுமே கொண்ட பிரதேசமென்பதால் ஒரேநேரத்தில் ஒரு இலக்கை மையமாக வைத்து இரண்டு அல்லது மூன்று முனைகளில் முன்னேறி புலிகளை பொறிக்குள் சிக்க வைத்து அவர்களால் கடும் சமர் செய்ய முடியாதொரு நிலைமையை உருவாக்கி அவர்களைப் பின்வாங்கச் செய்துவிட்டு நிலங்களைப் பிடித்துச் செல்வதே படையினரின் தந்திரமாகும். மடுக்கோயில் பிரதேசத்தை கைப்பற்றுவதற்கு படையினர் இத்தகையதொரு தந்திரத்தையே கடைப்பிடித்து கடைசி நேரத்தில் பாரிய மோதல்கள் எதுவும் ஏற்படாதவாறு புலிகளைப் பின்நகர்த்தியிருந்தனர்.

எனினும் படையினரின் பொறியை புலிகள் இங்கு தந்திரமாக உடைத்து உடைத்து படையினருக்கு பலத்த இழப்புக்களையும் அலைச்சலையும் மனஉளைச்சலையும் ஏற்படுத்தி வந்ததுடன் மடுத்தேவாலயத்திலிருந்து சுமார் 700 மீற்றர் தூரத்திற்கு படையினர் வந்த பின்பே, அதுவும் தேவாலயத்தின் புனிதத்திற்கு எதுவித பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாதென்பதற்காக புலிகள் அங்கிருந்து விலகியிருந்தனர். இல்லையேல் தேவாலயத்தை கைப்பற்றும் சமரில் படையினர் மேலும் இழப்புகளைச் சந்தித்திருக்க வேண்டிய நிலையேற்பட்டிருக்கும்.

மன்னார் களமுனையை பொறுத்த வரை ஒரே நேரத்தில் ஒரு இலக்கை நோக்கி பல முனைகளைத் திறந்து புலிகளை பொறிகளுக்குள் சிக்க வைத்து அவர்களுக்கு பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி தங்களுக்கான இழப்புகளைக் குறைத்து பெருமளவு நிலப்பிரதேங்களைத் தந்திரமாகக் கைப்பற்றுவதே படையினரின் நோக்கமாகும். எனினும், படையினரின் இந்தத் தந்திரங்களை உணர்ந்து படையினர் விரிக்கும் வலைக்குள் விழாது தந்திரமாக அதிலிருந்து தப்பி அந்த வலைக்குள் படையினரை விழவைத்து அவர்களுக்கு பலத்த இழப்பையும் சலிப்பையும் மனஉளைச்சலையும் ஏற்படுத்தும் தந்திரங்களை மேற்கொள்ள புலிகளும் முயன்று வருகின்றனர்.

விடுதலைப் புலிகளின் பல ஆயுதக் கப்பல்களை அழித்து விட்டதால் அவர்கள் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுக்கு பலத்த தட்டுப்பாட்டை எதிர்கொள்வதாகவும் தற்போது தமிழகத்திலிருந்தே அவர்கள் இவற்றைப் பெற்று வருவதால் மன்னார் - பூநகரிப் பாதையைக் கைப்பற்றி தமிழகத்திற்கும் அவர்களுக்குமிடையிலான விநியோகத்தை முழுமையாக நிறுத்திவிட வேண்டுமென்பதே தங்கள் பிரதான நோக்கமென படைத்தரப்பு கூறுகின்றது. அதேநேரம் இந்தியாவில் அடுத்த வருடம் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதேநேரம் தமிழக சட்ட சபைக்கான தேர்தலும் நடைபெறவுள்ளது.

தமிழக சட்டசபைத் தேர்தலில் மட்டுமன்றி இந்திய பொதுத் தேர்தலிலும் ஈழத் தமிழர் பிரச்சினை முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. இதன் முன்னோடியாகவே, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்காகாந்தி தமிழக சிறையிலிருக்கும் நளினியை சந்தித்துள்ளார். தமிழக மக்கள் மத்தியிலும், ஈழத் தமிழர்களுக்கு சார்பாக தற்போது தமிழகத் தலைவர்கள் பலரும் குரல் கொடுத்து வருவதால் அவர்கள் மத்தியிலும், காங்கிரஸ் கட்சி ஈழத்தமிழருக்கெதிரான கட்சியல்ல. சோனியாவும் பிள்ளைகளும் ராஜீவ் கொலையால் ஏற்பட்ட கசப்புணர்வுகளை மறந்துவிட்டனர். அவர்கள் ஈழத் தமிழர்கள் விடயத்தில் பரிவு காட்டுகிறார்களென்பது போல் ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தி அதன் மூலம் தமிழகத்தில் அடுத்த பொதுத் தேர்தலிலும் தமிழக சட்டசபைத் தேர்தலிலும் தங்களது கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்குகளை அள்ளிக் கொடுக்க முனைவது நன்கு தெரிகிறது. ஈழத் தமிழர் பிரச்சினை இந்தியப் பொதுத் தேர்தலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தப் போவதை இலங்கை அரசும் நன்குணர்ந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்திற்கும் வன்னிக்குமிடையிலான நெருங்கிய தொடர்பு இலங்கை அரசுக்கும் மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தலாமென உணர்வதால் முடிந்தவரை விரைவில் மன்னார் கரையோரத்தை தங்கள் கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்து புலிகளுக்கும் தமிழகத்திற்குமிடையிலான தொடர்பைத் துண்டித்து விடவேண்டுமென இலங்கை அரசு கருதுகிறது. இல்லையேல் தமிழக வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதற்காக அரசுகள் எதனையும் கண்டுகொள்ளாத நிலையேற்பட்டால் புலிகள் தமிழகத்திலிருந்து தாராளமாக அனைத்தையும் கொண்டு வந்து சேர்த்து விடுவார்களென்ற அச்சமும் அரசுக்குள்ளது.

இதைவிட வடபகுதி போர் முனையில் யாழ். குடாநாட்டில் ஏற்பட்ட பாரிய பின்னடைவும் மணலாறில் முன்நகர முடியாத நிலைமையும் தொடர்ந்தும் மன்னார் களத்தில் முன்நகர்வுகளைத் தூண்டி வருகிறது. முகமாலையில் ஏற்பட்ட பின்னடைவும் ஏனைய பகுதிகளில் ஏற்படும் இழப்புகளும் அரசுக்கும் இராணுவத் தலைமைப் பீடத்திற்கும் பெரும் தலைவலியாக உள்ளது. இது குறித்த பல தகவல்கள் ஊடகங்களில் வெளிவருவதால் தென்பகுதி மக்கள் அதிர்ந்து போயுள்ளனர். கடந்த இரண்டரை வருடப் போரில் 1000 இற்கும் குறைவான படையினரே கொல்லப்பட்டுள்ளதாக படைத் தரப்பு உத்தியோக பூர்வ தகவல்களை வெளியிடுகையில் 9000இற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டும் அதைவிட மூன்று மடங்கு படையினர் படுகாயமடைந்துள்ளதாக இராணுவ தரப்பை ஆதாரம் காட்டி ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்ட தகவல்கள் அரசையும் படைத்தரப்பையும் மட்டுமன்றி தென்பகுதி மக்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது.

வன்னிக்குள் படையினரை இழுத்து அலைக்கழித்து புலிகள் தினமும் அவர்களுக்கு பேரிழப்புகளை ஏற்படுத்தி வருவதாகவும் அரசும் படைத்தரப்பும் இதனை முற்றாக மூடி மறைக்க முற்படுவதாகவும் மக்கள் விசனமடையத் தொடங்கியுள்ளனர். கடந்த மாதம் 23 ஆம் திகதி முகமாலையில் மட்டும் 200 படையினர் வரை கொல்லப்பட்டதாக சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளே ஒப்புக் கொண்ட நிலையில் கடந்த மாதம் முழுவதும் 120 படையினர் மட்டுமே கொல்லப்பட்டதாக பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்கா பாராளுமன்றில் கூறியது தென்பகுதி மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது. வடக்கே தினமும் பெருமளவு படையினர் கொல்லப்படுவதும் உண்மையே என்பதை, இப்போது இந்தப் பொய்கள் மூலம் உணரத் தொடங்கியுள்ளனர்.

இதனால் ஊடகங்களுடனும் போர் தொடுக்க அரசும் படைத் தரப்பும் தீர்மானித்துவிட்டன. களமுனைத் தகவல்கள் எதனையும் எந்தவொரு ஊடகத்திற்கும் தெரிவிக்கக் கூடாதென இராணுவத் தளபதி சகல கட்டளைத் தளபதிகள் ஊடாகவும் களமுனைத் தளபதிகளுக்கும் சுற்று நிருபம் மூலம் அறிவித்துள்ளார். இதனை மீறுவோருக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர்கடுமையாக எச்சரித்துள்ளார். களமுனையில் தினமும் கொல்லப்படும் புலிகளின் எண்ணிக்கையின் மர்மம் என்ன என்பதை இப்போதாவது தென்பகுதி மக்கள் உணர்ந்திருப்பர்.

மூழ்கடிக்கப்பட்ட கப்பல்

திருகோணமலைத் துறைமுகத்தில் கடற்படையினரின் வழங்கல் கப்பலொன்றை நேற்று சனிக்கிழமை அதிகாலை தாக்கி மூழ்கடித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலைத் துறைமுகத்திலிருந்து யாழ்.குடாநாட்டிலுள்ள படையினருக்கு ஆயுதங்கள் மற்றும் போர்த் தளபாடங்களை ஏற்றிச் செல்வதற்குத் தயாராக நின்றபோதே அதிகாலை 2.30 மணியளவில் இந்தக் கப்பலை கடற்கரும்புலிகளின் கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு கடற்கரும்புலிகள் தாக்கியழித்து மூழ்கடித்ததாக புலிகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானிலிருந்து அவசர அவசரமாக படையினர் அண்மையில் பெருமளவு ஆயுதங்களையும் போர்த் தளபாடங்களையும் தருவித்திருந்தனர். கடந்த புதன்கிழமை இரவு கொழும்பு துறைமுகத்திலிருந்து பல கொள்கலன்களில் இராணுவத் தளபாடங்கள் கொண்டு செல்லப்பட்ட நிலையிலேயே இந்தக் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட செய்தியை புலிகள் தெரிவித்துள்ளனர்.

`எம்.வி.இன்வின்சிபிள்' (ஏ520) என்ற சரக்குக் கப்பலே திருமலைத் துறைமுகத்தினுள் வைத்து மூழ்கடிக்கப்பட்டதாகவும் எனினும் இதனைப் படையினர் பயன்படுத்துவதில்லையெனவும் கடற்படையினர் கூறியுள்ளனர்.

எனினும், இந்தக் கப்பல் தகர்த்தழிக்கப்பட்டமை படையினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு கடற்பரப்பினூடாக வந்தே கடற்கரும்புலிகள் நீருக்கடியில் இந்தக் கப்பலைத் தாக்கி அழித்துள்ளமை கடற்படையினருக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமலைத் துறைமுகம் அதி உயர் பாதுகாப்பு வலயம் என்பதுடன் துறைமுகத்திற்குள்ளும் வெளியேயும் 24 மணிநேரமும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன. இதைவிட புலிகளின் நீரடி நீச்சல் பிரிவின் தாக்குதலை எதிர்கொள்ளும் விதத்தில் நீரடி பாதுகாப்பு ஏற்பாடுகளும் இங்குள்ளன.

அப்படியிருந்தும் கடற்கரும்புலிகள் மிக நீண்டதூரத்திலிருந்து வந்து எப்படி இவ்வாறானதொரு தாக்குதலை நடத்தினார்களென்ற கேள்வி எழுந்துள்ளது.

குடாநாட்டுக்கு ஆயுதங்களை ஏற்றிச்செல்லத் தயாராயிருந்த 80 மீற்றர் நீளமான ஆயுதக் கப்பலே இதுவென புலிகள் கூறுகின்றனர். எனினும் இது ஆயுதக் கப்பலல்ல, பழுதுபார்ப்பதற்காக அஷ்ரப் இறங்குதுறையில் நிறுத்தப்பட்டிருந்ததென படையினர் கூறுகின்றனர்.

துறைமுகத்தினுள் நுழைந்து கடலடி பாதுகாப்பு பொறிமுறையிலும் சிக்காது எவ்வாறு கடற்கரும்புலிகள் இதனைத் தகர்த்தழித்தனர் என்ற கேள்வி படையினரை உலுக்கியுள்ளதுடன், இனிமேல் இந்தத் துறைமுகத்தினுள் நிற்கும் கப்பல்களின் பாதுகாப்பை எப்படி உறுதிப்படுத்துவது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஏற்கனவே முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் ரோந்து சென்ற அதிவேக டோரா பீரங்கிப் படகு கடற்கரும்புலிகளின் நீருக்கடியிலான தாக்குதல் மூலம் அழிக்கப்பட்டதன் மர்மம் தெரியாது கடற்படையினர் தடுமாறி வந்த நிலையில், தற்போது திருமலை கடற்படைத் தளத்துடன் இணைந்த துறைமுகத்தினுள் நிறுத்தப்பட்டிருந்த கப்பல் நீருக்கடியிலான தாக்குதல் மூலம் அழிக்கப்பட்டுள்ளதால் கடற்புலிகள் தங்கள் நீரடித் தாக்குதல் உத்தியை விரிவுபடுத்தத் தொடங்கிவிட்டார்களென்பதை உணரமுடிகிறது.

இது திருகோணமலைக் கடற்படைத் தளத்தினதும் துறைமுகத்தினதும் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. கடற்புலிகளின் நீரடி நீச்சல் பிரிவின் அல்லது கடற்புலிகளின் புதுவகைத் தாக்குதல் உத்திகளுக்கெதிராக என்ன செய்வதென்ற குழப்பமானதொரு நிலையை படையினர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் ஆயுதக் கப்பலை இலக்கு வைத்ததாயிருந்தால் நிலைமை மிக மோசமடைந்து விட்டதென்பதை படையினர் உணர்ந்திருப்பர். கொழும்பிற்கும் குடாநாட்டுக்கும் அல்லது திருமலைக்கும் குடாநாட்டுக்கும் இடையிலான படையினரின் விநியோகம் கடல் வழியாகவே நடைபெறுவதாலும் திருமலைக்கும் குடாநாட்டுக்கும் இடையே ஆயிரக்கணக்கான படையினர் துருப்புக்காவிக் கப்பல்களிலேயே போக்குவரத்துச் செய்வதாலும் அந்தக் கப்பல்களின் பாதுகாப்புக் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.

இந்தக் கப்பல் மீதான தாக்குதலுக்கு கடற்கரும்புலிகள் முல்லைத்தீவிலிருந்து வந்தார்களா அல்லது வேறு எங்காவது அருகிலிருந்து வந்தார்களா என்ற கேள்விகளும் எழுகிறது. எனினும் இயற்கை அரண் நிறைந்த இந்தத் துறைமுகத்தினுள் இடம்பெற்ற நீரடித் தாக்குதலானது கடற்படையினருக்கு விடப்பட்ட மிகப்பெரும் சவாலாகும். அத்துடன் கடற்புலிகளின் நீரடி நீச்சல் பிரிவின் இவ்வகைத் தாக்குதல், முல்லைத்தீவு மற்றும் திருகோணமலைத் துறைமுகத்துடன் நின்றுவிடுமா அல்லது அனைத்துப் பகுதியிலும் தொடருமா என்ற கேள்வியும் எழுகிறது.

நன்றி - தினக்குரல்

Friday, May 9, 2008

வெறும் கணக்கு வாய்ப்பாடாக மாறியிருக்கும் ஜனநாயகம்

இலங்கை உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் தேசியங்களுக்கு எதிரான இன ஒடுக்குமுறை தலை விரித்தாடுவதற்கு வழியும் வசதியும் செய்துள்ள கட்டமைப்பு முறைமை எது என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில் கடந்த புதனன்று நாடாளுமன்றத்தில் தாம் ஆற்றிய கன்னி உரையில் தெளிவுபடுத்தியிருக்கின்றார்.

உலகம் என்ற புவிப் பந்தில் குடியாட்சிக்கு வழி செய்யும் முக்கிய கட்டமைப்பாக இன்று ஜனநாயகம் மதிக்கப்படுகின்றது. அதுவே உயர்ந்த ஆட்சிமுறை என்றும் போற்றப்படுகின்றது. ஆனால் ஜனநாயகம் என்ற இந்தச் சூத்திரம் வெறும் எண்ணிக்கையில் பெரும்பான்மை கொண்ட ஆள்களின் கூட்டுப் பலத்தை மட்டும் கணக்கில் எடுத்து அதனடிப்படையில் அதிகாரத்தை வழங்கும் ஒரு வெறும் கணித வாய்ப்பாடாகவே இன்று பல நாடுகளிலும் விளங்குகின்றது நடை முறைப்படுத்துகின்றது.

இதுவே, உலகில் பேரினவாதம் தலை தூக்கவும், இன மேலாதிக்கமும், மேலாண்மையும் அதிகாரப் பலத்துடன் விஸ்வரூபம் கொள்ளவும் வழி சமைத்து நிற்கின்றது. இந்த உண்மையையே சொலமன் சிறில் எம்.பி. வெளிப்படையாகச் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
பெரும்பான்மை என்ற எண்ணிக்கையை மட்டும் அடிப்படையாகக் கொண்ட தன்மையில் ஆட்சிமுறையையும், அதிகாரத்தையும் தீர்மானிக்கும் இந்தப் போக்கு, நீதியான வாழ்வியலுக்கு அடிப்படையாக அமையவே மாட்டாது என்பதுதான் உலகப் பட்டறிவாக நமக்கு இப்போது வெளிப் பட்டிருக்கின்றது.

பல நாடுகளில், அந்நாடுகளின் பன்மைத்துவ சமூக அமைப்பில் நீதியான ஆட்சிமுறையையும் இன ஒடுக்கு முறை இல்லாத சமத்துவத்தையும் நிலைநிறுத்துவதில் ஜனநாயகக் கட்டமைப்பு பெரும் தோல்வி கண்டு வந்திருக் கின்றது. அதற்கு நல்லதோர் உதாரணம் இலங்கைத் தீவு.
முடியாட்சி முறையிலிருந்து குடியாட்சி முறைமைக்கு புவிப்பந்தின் அலகுகளாக தேசங்கள் மாறியபோது, அத்தகைய குடியாட்சி நெறிக்கு உயரிய பண்புடைமையாக ஜனநாயகம் மதிக்கப்பட்டது. இன்னும் மதிக்கப்படுகின்றது. அது வேறு விடயம்.

ஆனால் நீதி, நியாயம், சமத்துவம், சமவுரிமை, சமரசம் போன்ற விடயங்களைக் கவனத்தில் எடுக்காமல் அந்த அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் வெறும் பெரும்பான்மை என்ற அடிப்படைக்கு மாத்திரமே ஏகோ பித்த முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஜனநாயகக் கோட்பாடுகள் அர்த்தப்படுத்தப்பட்டபோதே "ஜனநாயகக் கேலிக் கூத்து' அங்கு அரங்கேறியது.

ஒரு தேசத்துக்குரிய அடிப்படைக் கட்டமைப்புகளையும் பண்பியல்புகளையும் கொண்ட ஒரு சிறிய தேசிய இனம், மற்றைய பெரும்பான்மை இனத்தோடு அல்லது இனங்களோடு வல்வந்தமாக ஒன்றிணைக்கப்பட்டு ஒரு தேசமாக உரு வாக்கப்படும்போது, அத்தகைய சிறிய தேசிய இனத்தின் அபிலாஷைகளும், பண்பியல்புகளும் அத்தேசக்கட்டமைப் பில் மதிக்கப்படுவது முக்கிய அம்சமாகின்றது. அத்தகைய சிறிய தேசிய இனத்தை அரவணைத்து, அதன் தனித்துவத் தையும் அரசியல் எதிர்பார்ப்புகளையும் நிறைவு செய்து, தாராளப் போக்கோடு ஒன்றிணைந்து செல்வதை உறுதிப்படுத்தும் கடப்பாடு பெரிய தேசிய இனங்கள் மீது சுமத்தப்படுகின்றது.

ஆனால் இத்தகைய கடப்பாட்டைப் பெரிய அல்லது பெரும்பான்மை மக்களைக் கொண்ட தேசிய இனம் நிறைவு செய்ய மறுதலித்து, பிடிவாதம் பிடிக்கும்போது, சட்ட மற்றும் அதி கார ரீதியாக அத்தகைய பெரும்பான்மை இனத்தை வழிக் குக் கொண்டுவரும் கட்டுப்பாட்டு விதிகளை நமது ஜனநாயக ஆட்சிமுறை கொண்டிருக்கவேயில்லை.
உலகின் பல நாடுகளிலும் மதிப்புக்குரியதாகப் "பீற்றப் படும்' ஜனநாயகக் கட்டமைப்புப் பொறிமுறையின் பிரதான பின்னடைவு அம்சமே இந்தக் குறைபாடுதான்.
இதுவே, இலங்கைத் தீவிலும் தமிழ்,சிங்களத் தேசியங் களுக்கு இடையிலான பெரும் பிளவுக்கும், இன முரண்பாட் டுக்கும், பகையுறவுக்கும், விரோதப் போக்குக்கும் இட மளிக்கும் அடிப்படையாகவும் அமைந்துள்ளது.

எண்ணங்களின் நியாயம் குறித்துக் கவனிக்காமல், எண் ணிக்கையின் அளவு குறித்து மட்டும் கருத்தில் எடுக்கும் "ஜனநாயகக் குருட்டுத்தனம்' இலங்கை போன்ற தோல்வி யுறும் தேசங்களையே இறுதியில் உருவாக்கும் என்ற படிப் பினை இந்த நாட்டின் அரசியல் அனுபவப் பாடமாக உல குக்குப் போதிக்கப்பட்டிருக்கின்றது.

எண்ணிக்கைப் பலத்தை மட்டும் வைத்துக்கொண்டு, எண்ணத்தில் அநீதியாகச் செயற்படும் தென்னிலங்கைச் சிங்களம் போன்ற தரப்புகளுக்கு காப்பரணாகவும், அநீதிகளை மூடிமறைத்து நியாயப்படுத்தும் உருமறைப்புத் திரையாக வும் "ஜனநாயகம்'என்ற பண்பியல்பு விளங்குவதே, அந்தப் பொறிமுறையின் சிறுமைத்தனத்துக்கு நல்லதோர் உரைகல்.
மனித வாழ்வில் முரண்பாடுகள் தவிர்க்க முடியாதவை. தனித்தனி மனிதர்களுக்கிடையேயே கருத்தொருமைப் பாடும் இணக்கமும் இல்லாத நிலையில், இனங்கள் மற்றும் தேசியங்கள் இடையே முரண்பாடுகளும், இணக்க நிலைப் பிறழ்வுகளும், பிணக்குகளும், கருத்து வேறுபாடுகளும் ஏற்படுவது தவிர்க்க முடியாததே.

இந்த முரண் நிலையை நீக்கி அல்லது தணித்து, சமூ கங்கள், இனங்கள், தேசியங்கள் இடையே நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் அடிப்படை நீதியை உறுதி செய் கின்ற உயரிய பண்பியல்பு மட்டுப்படுத்தப்பட்ட இந்த ஜன நாயக முறைகளில் இல்லை.
அதுவே, பல தேசங்களில் ஜனநாயக ஆட்சிக் கட்டமைப்பு தோல்வி நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதற்குக் காரணமாகும்.

இத்தகைய ஜனநாயகக் குருட்டுத்தனத்தை அல்லது ஜனநாயகக் கேலிக்கூத்தை நிவர்த்தி செய்யும் ஒரு புதிய நவீன ஜனநாயகப் பண்பியல்பு அல்லது மாற்று ஆட்சிமுறை நடை முறைக்கு வராதவரை சொலமன் சிறில் எம்.பி. சுட்டிக்காட்டுவதுபோல இலங்கை போன்ற தேசங்களில் ஜனநாயக வரம்பு களுக்குள் தன்னைப் பாதுகாத்தபடி இன ஆதிக்க வெறிப்போக்கும், வெளிப்பாடும் அரசாட்சிப் பீடத்திலிருந்து பீறிடுவதைத் தடுக்கவோ, தவிர்க்கவோ முடியாதுதான்.

நன்றி - உதயன்

Thursday, May 8, 2008

தீவிர யுத்தத்துக்குக் கட்டியமே நாடாளுமன்ற இடைநிறுத்தம்

இலங்கையின் நாடாளுமன்றம் நேற்று முன்தினம் நள்ளிரவுடன் திடீரென ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது.நாடாளுமன்ற அமர்வுகளை ஜூன் 5ஆம் திகதி வரை இடைநிறுத்தும் முடிவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தச் சந்தர்ப்பத்தில் அதுவும் முன்பின் கோடிகூடக் காட்டாமல் திடீரென எடுத்தமை குறித்து அவரது அரசுக்குள்ளேயே மூத்த தலைவர்கள் சிலர் ஆச்சரியம் தெரிவித்திருக்கின்றனர்.

எதற்காக இத்தீர்மானத்தை ஜனாதிபதி அதிரடியாக எடுத்தார்?

நான்கு குருடர்கள் யானையைத் தொட்டுணர்ந்து அதனடிப்படையில் அதன் தோற்றத்தை விமர்சித்தமை போல ஜனாதிபதியின் இந்த திடீர் அரசியல் முடிவுக்கும் பலரும் பலவித காரணங்களைக் கூறுகின்றார்கள்; அர்த்தங்களைக் கற்பிக்கின்றார்கள்.

நாடாளுமன்ற இடைநிறுத்தும் ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு அடிப்படையான காரணங்களாகக் கூறப்படுபவை பல. அவற்றில் சில வருமாறு:

* கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் அரசுத் தரப்பு வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் புலிகளுக்கும் இடை யில் இருந்த உடன்பாடு குறித்து விசாரித்து, உண்மையைக் கண்டறிவதற்கு ஒரு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைக்கும்படி கோரும் எதிரணியின் பிரேரணை ஒன்று நாடாளுமன்றின் முன் நிலுவையில் உள்ளது. மேற்படி நாடாளுமன்ற இடைநிறுத்த முடிவின் விளைவாக அந்தப் பிரேரணை செயலிழக்கச் செய்யப்படுகின்றது.
* அரசுத் தரப்பில் இப்போது உள்ள பல மூத்த அரசியல் தலைவர்களை பலகோடி ரூபா ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுகளில் சிக்க வைத்துள்ள, பொது நிறுவனங்கள் தொடர்பாக ஆராயும் நாடாளுமன்றக் குழு மற்றும் பொதுக் கணக்குகள் தொடர்பான நாடாளுமன்றக் குழு போன்ற நிலையியல் குழுக்கள் இவ்வாறு நாடாளுமன்ற இடைநிறுத்தத்தால் செயலி ழந்து போயுள்ளன. இதனால் மேற்படி ஊழல் பிரமுகர்களுக்கு வரவிருந்த நெருக்கடிகளைத் தணிய வைத்திருக்கிறார் ஜனாதிபதி.
* நடக்கவிருக்கும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசுத் தரப்பு மேற்கொள்ளவுள்ள தில்லுமுல்லுகள் குறித்து பரப்புரை செய்வதற்கான தகுந்த மேடையாக நாடாளுமன்றத்தை எதிரணி பயன்படுத்துவதைத் தடுக்கவே இப்படிச் செய்யப்பட்டது.
* கிழக்கு மாகாணத் தேர்தலில் அரசுக்குக் கிடைக்கக் கூடிய தோல்வியை அடுத்து நாடாளுமன்ற ஆசனங்களின் அட்சரகணித சமன்பாட்டில் தமக்கு ஏற்படப்போகும் சிக்கல்களை எதிர்கொள்ளாமல் தவிர்த்துத் தள்ளிப்போடும் எத்தனமாகவே முன்கூட்டியே இந்த ஏற்பாட்டை அரசுத் தரப்பு செய்து கொள்கின்றது.

இப்படி யானை பார்த்த குருடர்கள்போல எதிரணிப் பக்கத்திலிருந்து பலரும் பலவிதமான விளக்கங்களைத் தந்தபடி இருக்கின்றார்கள்.

ஆனால் அரசுத் தலைமை எடுத்த இந்த முடிவை அதன் தற்போதைய செயற்போக்கின் பின்புலத்தில் வைத்து நோக்குவதுதான் பொருத்தமானதாக இருக்கும்.
அவசரகாலச்சட்ட விதிகளின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள எல்லைகளற்ற எதேச்சாதிகார அதிகாரப்பலத்தை வைத்துக்கொண்டே தனது ஆட்சியைக் கொண்டிழுக்கும் அரசுத் தலைமை, இப்படி நாடாளுமன்றம் இடைநிறுத்தப்படுவதன் மூலம் அந்த அவசரகாலச்சட்டம் காலாவதியாகிவிடாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதில் கண்ணாக இருந்துள்ளது என்பது தெளிவு.

அதன் காரணமாகவே அவசரகாலச் சட்ட நீடிப்புத் தொடர்பாக அரசமைப்பு வலியுறுத்தியுள்ள ஒரு மாத காலக்கெடுவுக்கு மேற்படாமல் நாடாளுமன்றம் இடைநிறுத்தப்பட்டிருக்கின்றது. அத்தோடு அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒருமாத காலத்துக்கு நீடிக்கும் பிரேரணை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட அன்றைய தினமே (நேற்று முன்தினமே) நாடாளுமன்றமும் ஒருமாத காலத்துக்கு இடைநிறுத்தப்பட்டிருக்கின்றது. அதாவது அவசரகாலச் சட்டத்தை மீண்டும் நீடிக்க வேண்டிய இறுதிக்கால எல்லை வரும்போது ஜூன் 6 ஆம் திகதியன்று நாடாளுமன்றம் கூடி, அந்த வேலையை நிறைவேற்றுவதற்கு வசதியளித்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருகின்றது.

அரசுத் தலைமையின் இந்தச் செயற்பாட்டை, அண்மையில் அரசுத் தலைமையிலிருந்து பிரதிபலிக்கப்பட்ட சில தகவல்கள் மற்றும் கருத்துகளோடு இணைத்தே நாம் நோக்கவேண்டும்.

* வடக்கில் புலிகளுக்கு எதிராகப் பெரும் படை நடவடிக்கை விரைவில் முன்னெடுக்கப்படும்.
* தேவையானால் யுத்தச் செய்திகள் தொடர்பாக பத்திரிகைத் தணிக்கையையும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவை இரண்டும் அரசுத் தலைமையால் அண்மையில் கோடி காட்டப்பட்டு வந்த விடயங்கள்.
பெருத்த எடுப்பில் படை நடவடிக்கை ஒன்றை எடுக்கும்போது உயிர், உடைமைகளுக்குப் பேரழிவு ஏற்படும். மனிதப் பேரவலம் உருவாகும். அப்பாவிகளின் உயிர்கள் பல நூற்றுக் கணக்கில் அநியாயமாகக் காவுகொள்ளப்படும். அட்டூழியங் கள் அரங்கேறும். அராஜகம் தலைவிரித்தாடும். அடக்குமுறை கட்டவிழும். அதேவேளை, அரசுப் படைகள் பேரிழப்புகளை யும் நாசங்களையும், மோசமான பின்னடைவுகளையும் எதிர்கொள்ளும் நிலைமை கூடநேரலாம்.

இந்தக் கொடூரங்கள் பற்றிய தகவல்கள் மக்களுக்கு எட்டுவதைத் தணிக்கை மூலமும், ஊடக அடக்குமுறை எத்தனங்கள் மூலமும் கட்டுப்படுத்தலாம். ஆனால் நாடாளுமன்றத்தை மேடையாகப் பயன்படுத்தி உண்மைகளை எதிரணியினர் புட்டுவைப்பதை அம்பலப்படுத்துவதை தணிக்கை விதிகளால் தடுக்கவே முடியாது. நாடாளுமன்ற உரைகள் பற்றிய செய்திகளையோ, நாடாளுமன்ற நடவடிக்கைகளையோ செய்தித் தணிக்கைச் சட்டங்கள் கட்டுப்படுத்த மாட்டா என்பதால், யுத்தத்தை ஒட்டி அரசு எடுக்கப்போகும் அதிதீவிரச் செயற்பாடுகள் பற்றிய உண்மைகள் அம்பலமாவதைத் தடுப்பதற்கு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இடம்பெறாமல் இடைநிறுத்துவதே ஒரே வழி. அதுவே இப்போது முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்றம் ஒரு மாத காலத்துக்கு ஒத்திவைக்கப் பட்டு, அதி தீவிர யுத்த நடவடிக்கைக்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கின்றது. இனி என்ன? செய்தித் தணிக்கையும் அதைத் தொடர்ந்து போர் முனைப்பும் கட்டவிழும் என எதிர்பார்க்கலாம்.


நன்றி - உதயன்

Wednesday, May 7, 2008

போர் வெறியூட்டலால் மயக்க நிலையில் தென்னிலங்கை சிங்கள மக்கள்

அண்மையில் மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையத்தினால் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் பிரகாரம் அதிகப் பெரும்பான்மையான சிங்கள மக்கள் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக யுத்தம் தொடர்ந்து நடத்தப்பட வேண்டுமென விருப்பம் தெரிவித்துள்ளதாக அறியக்கிடக்கிறது. அவ்வாறாயின் வாழ்க்கைச் செலவு விஷம்போல் உயர்ந்துசெல்வதன் காரணமாக திணறிக்கொண்டிருக்கும் பரந்துபட்ட ஏழை எளிய மக்கள் கூட யுத்த வெறியூட்டப்பட்டதன் பயனாக எவ்வளவு தூரம் மயங்கிப்போயுள்ளனர் என்பது நன்கு புலனாகிறது. அதாவது யுத்தத்தில் விரைந்து வெற்றியீட்ட முடியும். அண்மையிலும் அதற்கு முந்திய காலகட்டங்களிலும், உதாரணமாக முகமாலையில் அரச தரப்பில் முகங்கொடுத்திருந்த இழப்புகள் சர்வசாதாரண நிகழ்வுகளே ஒழிய, அவை படுதோல்வியல்ல அது எந்தவொரு சாதாரண போர் வீரனுக்கும் தெரிந்த விடயமாகும் என தீவிரமாகப் பிரசாரம் செய்யப்பட்டு வருவதைக் காணமுடிகிறது.

தனது பதவிக்காலம் முடிய முன்னதாக யுத்தத்திற்கு முடிவு கட்டப்போவதாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா மீண்டும் அடித்துக்கூறியுள்ளார். தம்மிடம் 167,000 படையினர் உள்ளனர் எனவும், அண்மையில் முகமாலை மோதலின் பின்னர் படையினரின் மனோநிலை பாதிக்கப்படவில்லை எனவும் ஜெனரல் பொன்சேகா வழங்கிய பிந்திய செவ்வியொன்றில் குறிப்பிட்டுள்ளார். வடக்கு, கிழக்கில் அன்று ஏறத்தாழ 125,000 இந்திய அமைதிப்படையினர் (IPKF) குவிக்கப்பட்டிருந்த நிகழ்வு ஞாபகத்திற்கு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரை 7 ஆயிரம் புலி இயக்க உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ள படியால் கிளிநொச்சியைக் கைப்பற்றுவது தமக்கு கடினமாயிருக்காது என ஜெனரல் பொன்சேகா கூறியுள்ளார். கிழக்கில் சம்பூர் கைப்பற்றப்பட்ட காலத்திலிருந்து புலிகள் ஓடி ஒளிந்து கொண்டிருக்கின்றனர். எஞ்சியிருப்பவர்களில் 2000 பேரைக் கொன்றுவிட்டால் அவர்களால் எதிர்காலத்தில் தலையெடுக்க முடியாமல் போய்விடும் என அன்று கூறப்பட்டது ஞாபகத்திற்கு வருகிறது.

பாதுகாப்புச் செயலாளரின் புகழாரம்

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அண்மையில் அரச தொலைக்காட்சி சேவையொன்றுக்கு வழங்கிய செவ்வியில், முகமாலையில் சென்ற மாதம் நடந்தது, "பெரிய இழப்பு" என ஒப்புக்கொண்ட அதேவேளை, அது நிச்சயமாக ஒரு படுதோல்வியோ பின்னடைவோ அல்ல என்று கூறியுள்ளார். 23.04.08 முகமாலை இழப்புகள் நீண்டகாலத்திற்குப் பின் இடம்பெற்றுள்ளன. எவ்வாறாயினும் தாம் பொருட்படுத்த வேண்டியது இறுதி இலக்கையே ஒழிய இழப்புகளை அல்ல என பாதுகாப்புச் செயலாளர் சூளுரைத்துள்ளதுடன், விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்துவதே இராணுவத் தளபதியின் மூலோபாயம் எனவும் எடுத்துரைத்துள்ளார். முப்படைத் தளபதிகள் திறமையாகச் செயற்பட்டுள்ளதாகவும் அவர் புகழாரம் தெரிவித்துள்ளார். அவர்களுக்கும் முன்னாள் தளபதிகளுக்கும் வெகு விமரிசையாக விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.

இன்றும் அதே மூலோபாயம்

இராணுவத் தளபதியின் மூலோபாயம் பற்றிப் பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளதைப் பார்க்கும்போது, ஏறத்தாழ 20 வருடங்களுக்கு முன் ஜே.ஆர்.ஜயவர்த்தன அரசாங்கத்தில் தேசிய பாதுகாப்பு அமைச்சராயிருந்தவராகிய காலஞ்சென்ற லலித் அத்துலத் முதலியின் பதவிக்காலம் தெரிகிறது. விடுதலைப் புலிகளை பலவீனமடையச் செய்வதையே தனது குறிக்கோளாகக் கொண்டு அத்துலத் முதலி மிகத் தீவிரமாக உழைத்து வந்தவர். அடிக்கடி இராணுவ முகாம்களுக்கும் களமுனைகளுக்கும் பறந்து பறந்து சென்றவர். அதன்பின்னர் பிரதிப் பாதுகாப்பு அமைச்சராயிருந்தவராகிய ரஞ்சன் விஜேரத்ன, படைகளைக் கண்டால் புலிகள் நடுங்கி காற்சட்டைகளை நனைத்து விடுவார்கள், பிரபாகரன் உயிரோடில்லை அவரைப் போல் ஒருவர் (Look alike) தான் இப்போது காட்சியளித்து வருகிறார் என்றெல்லாம் பிரசாரம் செய்துவந்தவர். அதன்பின்னர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சிக் காலத்தில் பிரதிபாதுகாப்பு அமைச்சர் பதவியேற்றவர். ஏற்கனவே தொண்டர்படையில் பதவி வகித்தவராகிய கேணல் அனுருத்த ரத்வத்த. அவர் இராணுவ சீருடையும் அணிந்து களமுனை களமுனையாகச் சென்று போர்வீரர்களுடன் உடனிருந்து உணவருந்தி உற்சாகமூட்டி வந்தவர். 1995 இல் "றிவிற\u2970?" தாக்குதல்கள் மூலம் யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகள் பிடியிலிருந்து கைப்பற்றுவதற்கு காலாயிருந்தவர். அத்தோடு `ஜெனரல்' எனும் அதிஉயர் பட்டத்தையும் ஜனாதிபதி சந்திரிகாவிடமிருந்து தட்டிக் கொண்டவர். அதன்பின்னர் ஏ9 பாதையைக் கைப்பற்றுவதற்கு `ஜயசிக்குறு" எனும் இராணுவத் தாக்குதல் நடவடிக்கையை ஒரு வருடகாலத்திற்கு மேலாக மேற்கொண்டு படுதோல்விக்கு இட்டுச் சென்றவர்.

இத்தகையதொரு நீண்ட வரலாற்றின் பின், இன்றைய இராணுவத் தளபதி, தனது பதவிக்காலம் முடிய முன்னர் யுத்தத்திற்கும் முடிவு காண்பேன் என்று கூறிவருவது புரியாத புதிராகவே உள்ளது. இவ்வருடத்தில் புலிகளைத் தோற்கடித்து விடமுடியும் என்பது ஆரம்ப இலக்காயிருந்தது. எமக்குத் தெரிந்தவரை இராணுவத்தளபதியின் பதவிக்காலம் இந்த வருட இறுதியில் முடிய விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கான காலக்கெடு பின்னர் 2009 வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் இராணுவத் தளபதியின் சேவைக் காலமும் நீடிக்கப்படவுள்ளதாகக் கொள்ளலாம். அதற்குப் பின்னர் நடைபெறுவதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். முகமாலை சம்பவத்தின்பின்னர் இராணுவத் தளபதி பல்குழல் ரொக்கட்டுகள் அடங்கலான பல்வேறு ஆயுதங்களைப் பெற்றுக் கொள்ளுமுகமாக 6 நாள் விஜயத்தினை மேற்கொண்டு பாகிஸ்தான் சென்றுள்ளார் என்பது தெரிந்த விடயமாகும்.

எவ்வளவு காலம் சென்றாலும் யுத்தத்தில் வெற்றியடைய முடியாது என்கிறார் முன்னாள் மேஜர் ஜெனரல். இதனிடையில் இராணுவ சிறப்புப்படைப் பிரிவின் முன்னாள் தளபதி ஜயவி பெர்னாண்டோ அண்மையில் "லங்காதீப" சிங்கள இதழுக்கு வழங்கிய செவ்வியில் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் இராணுவ முனைப்பு தொடர்பாக சற்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அதாவது குறிப்பாகச் சொன்னால், எவ்வளவு காலம் சென்றாலும் யுத்தத்தில் வெற்றியடைவது இயலாத காரியமென விலாவாரியாக எடுத்துக் கூறியுள்ளார்.

நிலைமைக்கேற்ப மக்களை அதாவது சிங்கள மக்களை, ஏமாற்றுவதற்காகவே ஜனாதிபதியும், இராணுவத் தளபதியும் இவ்வருடத்திற்குள் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரப்போவதாகக் கூறியுள்ளனர் எனவும் மக்கள் அந்த கயிற்றை விழுங்கி விட்டார்கள் எனவும் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். மக்களை முட்டாள்களாக்கி போரின் பக்கம் இழுக்கவே குறுகிய காலக்கெடு விதிக்கப்பட்டு, புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விடுவார்கள் என 90 சதவீதம் எண்ணுமளவுக்கு பொய்பொய்யாகச் சொல்லி வருகின்றனர். ஒருபோதும் போரை முடிக்க முடியாது. அரசு புலிகளுடன் அன்றி தமிழ் மக்களுடனேயே போரிடுகின்றது என்பதை தான் உறுதியாகவும் பொறுப்புடனும் கூறமுடியுமென பெர்னாண்டோ அடித்துக் கூறியுள்ளதைக் காணமுடிகிறது.

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் ஜனநாயகத்தின் பேரிலானதொரு மோசடி, கிழக்கில் அரசாங்கம் தனது பேரினவாத ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு மேற்கொண்டுள்ள பகீரதப் பிரயத்தனம் என ஏற்கனவே சுட்டிக் காட்டியிருந்தோம். வடக்கைப் பொறுத்தவரை அங்கே தற்போது தேர்தல் நாடகம் மேடையேற்ற முடியாத நிலைமையில் ஒரு இடைக்கால சபை நிறுவப்பட வேண்டுமென முன்னர் அரச தரப்பினரால் முடிவு எடுக்கப்பட்டது. ஆயினும், "இடைக்கால சபை" எனும் சொற்பதம் தென்னிலங்கை பேரினவாத சக்திகளுக்கு ஏற்புடையதல்ல என்பதற்காக அங்கே ஜனாதிபதியின் விசேட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ அடங்கலாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான நிர்வாக சபையொன்று அமைக்கப்படவுள்ளது. அத்தோடு, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் காமினி ஜயசுந்தர வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் அரசியல்வாதிகளுக்கிடையே போட்டா போட்டியும் முறுகல் நிலையும் ஏற்பட்டிருந்ததாலேயே சிங்களவர் ஒருவரை ஜனாதிபதி நியமிக்க வேண்டியதாயிற்று என நியாயம் கற்பிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்திற்கு முன்னாள் கடற்படை அதிகாரி மொஹான் விஜேவிக்ரம ஆளுநராயிருந்து வருகிறார். வடக்கு கிழக்கைப் பிரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவை துரிதகதியில் நடைமுறைப்படுத்துவதற்கு முன்னின்று உழைத்தவர் விஜேவிக்ரம, திருகோணமலை அரசாங்க அதிபராயிருப்பவரும், முன்னாள் மேஜர் ஜெனரல் என்பதையும் காணமுடிகிறது. இவ்வாறான சிங்கள மயமும் இராணுவ மயமும் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் மேலோங்கி வருகின்றது. ஒட்டுமொத்தமாகப் பார்க்குமிடத்து வடக்கு, கிழக்கில் ஒரு பொம்மலாட்டமே நிதர்சனமாகியுள்ளது எனலாம்.

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா பின்னர் அவுஸ்திரேலியாவிலும் இந்தோனேசியாவிலும் இலங்கைக்கான தூதுவராகப் பதவி வகித்தவர். வடபகுதியில் தளபதியாயிருந்த காலத்தில் மிகக் கடும் போக்காளராகச் செயற்பட்டவர். அவர் கூட தனது பட்டறிவிலோ என்னவோ ஏனைய மக்களோடு நாம் தமிழ் மக்களின் இதயங்களை வெல்லவேண்டும். அதற்கு மனித கௌரவமும், மனித உரிமையும், இதய சுத்தியாக மதிக்கப்பட வேண்டும். பிரிவினைப் பயங்கரவாதத்திற்கு எதிராக யுத்தத்தில் வெற்றியடைவதற்கு அது அவசியமாகும்" எனக் குறிப்பிட்டுள்ளார். தனது இராணுவ பதவிக்காலத்து அரச பயங்கரவாதம் தான் "பிரிவினைப் பயங்கரவாதம்" என்பதற்கு வித்திட்டது என்பதையும் அவர் மறந்து விடக்கூடாது.

இலங்கையில் யுத்தம் தொடர்வது, அழிவு தொடர்வதற்கே ஒழிய, இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கோ, நாட்டை முன்னேற்றுவதற்கோ ஒருபோதும் உதவப் போவதில்லை. மாறாக தெற்காசியாவின் குணப்படுத்த முடியாத நோயாளி என்ற அபகீர்த்தியே எம்மிடம் எஞ்சிநிற்கும். இதை நாம் ஏற்று உறைந்து கிடக்கப்போகின்றோமா?

நன்றி :- தினக்குரல்

Tuesday, May 6, 2008

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் தமிழக சட்ட மன்றத்தை அவமதிக்கும் மத்திய அரசு

இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்க்க இரு தரப்பினரிடையேயும் பேச்சுவார்த்தையைத் தொடங்க இந்திய அரசு முன்வர வேண்டும் என்று சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அதே காலகட்டத்தில் இலங்கை அரசு ஆயுதங்கள் வாங்குவதற்கு 400 கோடி ரூபாவை இந்திய அரசு வழங்கியிருக்கிறது என்ற செய்தி தமிழ்நாட்டு மக்களைக் கொதிப்படையச் செய்துள்ளது என தமிழர் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
"முதல்வருக்கு வேண்டுகோள்" என்ற தலைப்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சட்ட தீர்மானத்திற்கு முற்றிலும் எதிரான ஒரு நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொண்டிருக்கும்போது அதைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கு உண்டு. இந்திய அரசின் மேற்கண்ட நடவடிக்கை தமிழக முதலமைச்சர் சட்டமன்றத்தில் முன்மொழிந்த தீர்மானத்திற்கு முற்றிலும் எதிரானது மட்டுமல்ல, அத்தீர்மானத்தை கொஞ்சமும் மதிக்க இந்திய அரசு தயாராக இல்லை என்பதை வெளிப்படுத்தியிருக்கும் இந்தச் செயல் தமிழக முதலமைச்சரை மட்டுமல்ல தமிழக சட்ட மன்றத்தையே அலட்சியப்படுத்தி அவமானப்படுத்தும் செயலாகும் எனவும் அவர் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; தமிழக சட்ட மன்றத்தில் இலங்கை இனப்பிரச்சினை குறித்து பா.ம.க., ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் கொண்டுவந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் பேசும்போது முதலமைச்சர் கருணாநிதி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

"போராளிகளுடைய முக்கிய குறிக்கோளே போராளிகளுக்குள் போராடுவது என இந்தப் போராளிகளுக்குள்ளே நடந்த போராட்டம்தான் இன்றைக்கு நாம் இந்த அவையிலேயே அவர்களுக்காகப் பரிந்துரை பேச வேண்டிய ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் தான் இடைக்காலத்திலே நான் விடுதலைப் போராளிகளுக்குச் சொன்ன அறிவுரை சகோதர யுத்தத்தை நிறுத்துங்கள் என்பதுதான்.

அந்தப் போராளிக் குழுக்கள் ஒரே போராளிக் குழுவாக இருந்து ஒற்றுமையோடு இலங்கையிலேயே நடைபெறுகிற அக்கிரமங்களைக் கண்டிக்க வேண்டும். தமிழர்களுக்குள்ள உரிமைகளைப் பெற வேண்டும் என்ற எண்ணத்திலே செயல்பட்டதா என்றால் எதுவும் இல்லை. ஒரு குழுவை இன்னொரு குழு வீழ்த்த வேண்டும். ஒரு குழுவை இன்னொரு குழு மாய்க்க வேண்டும். ஒரு குழுவுக்கு செல்வாக்கு இல்லாமல் செய்ய வேண்டும் என்ற முறையிலேதான் ஒவ்வொரு குழுவின் தலைவர்களும் அங்கே கொல்லப்பட்டார்கள் என்பதையெல்லாம் மறந்துவிடக்கூடாது. இப்படிப்பல போராளிகள் அவர்களுக்குள்ளேயே அடித்துக் கொண்டு சுட்டுக் கொண்டு செத்திருக்கிறார்கள். இவைகள் எல்லாம் தான் இந்தப் போராட்டத்தைப் பலவீனப்படுத்தியது. இத்தகைய விடுதலைப் போராட்டம் எல்லா இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கும்போது இந்த சின்னஞ்சிறு நாடான இலங்கையிலே வலுவிழந்ததற்கு காரணம் நமக்குள்ளே ஒற்றுமை இல்லாததுதான். நாம் வலுவிழந்து போய் பகைவர்களுக்கு இடம்கொடுத்துவிட்டோம். ஆனால், இதிலே இந்திய அரசை குறை கூறிப் பயனில்லை' என்று கூறியுள்ளார்.

சட்டமன்றத்தில் ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து அனைத்துக் கட்சிகளும் இணைந்து நிறைவேற்றியுள்ள தீர்மானம் தமிழர்கள் அனைவராலும் வரவேற்றுப் பாராட்டப்பட வேண்டிய தீர்மானமாகும். ஆனால், இந்தத் தீர்மானத்தில் பேசிய முதலமைச்சர் வெளியிட்டுள்ள கருத்துகள் உண்மையில் வருந்தத்தக்கவையாகும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையிலும் அந்தப் போராட்டத்திற்கு எதிராக இந்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதை மறைத்து நியாயப்படுத்தும் விதத்திலும் அவருடைய கருத்துகள் அமைந்துவிட்டன. வரலாற்றைத் திட்டமிட்டு மறைப்பதற்கு முதலமைச்சர் கருணாநிதி முயலுகிறார். தமிழீழப் போராளிக் குழுக்கள் ஒன்றுபட்டு செயலாற்றாததால்தான் வேண்டாத விளைவுகள் ஏற்பட்டன என முதலமைச்சர் கூறியுள்ள கருத்து சரியானதுதானா? அந்தக் கூற்றில் சிறிதளவேனும் உண்மை உள்ளதா?

1985 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் நாள் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், டெலோ இயக்கத் தலைவர் ஷ்ரீ சபாரத்தினம், ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத் தலைவர் பத்மநாபா, ஈரோஸ் இயக்கத் தலைவர் பாலகுமார் ஆகியோர் ஒன்றுகூடிப் பேசி கீழ்க்கண்ட கூட்டறிக்கையை வெளியிட்டார்கள். "புரட்சிகர ஆயுதப் போராட்டப் பாதையைத் தழுவி களத்தில் போராடும் இந்த நான்கு விடுதலை இயக்கங்கள் மத்தியில் ஒருமைப்பாடு ஏற்பட்டமை எமது விடுதலைப் போராட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாகும். ஈழத் தமிழரின் சுதந்திரப் போரில் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ள இந்நிகழ்ச்சி புரட்சிகர சக்திகளை ஒன்றிணைத்து ஆயுதப் போராட்டத்தை ஒருமுகப்படுத்தி வலுப்படுத்த வழிகோலியுள்ளது. இராணுவ பயங்கரவாத அட்டூழியங்களையும் இனக் கொலையையும் எதிர்நோக்கி தாங்கெணாத் துன்பத்தை அனுபவித்து வரும் மக்களுக்கு எமது விடுதலை அணிகள் ஒன்றுபட்ட செய்தி பெரு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளிப்பதோடு, அவர்களது ஆன்ம உறுதியையும் விடுதலை உணர்வையும் பலப்படுத்தும் என்றே கருதுகிறோம். இந்த நான்கு இயக்கங்களின் கூட்டமைப்பான ஈழ தேசிய விடுதலை முன்னணி கீழ்க்கண்ட அரசியல் ரீதியான அடிப்படை கொள்கைகளில் ஒன்றுபட்டு செயல்பட தீர்மானித்துள்ளது.

1. சிங்கள ஆதிக்கத்திலிருந்தும் அடக்குமுறையிலிருந்தும் எமது தாயகத்தின் சுதந்திரத்தையும் இறைமையையும் வென்றெடுத்தல். 2. இலங்கை வாழ் தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டுகின்ற தனி அரசைத் தவிர்த்த வேறு எந்த குறைந்த பட்ச சமரசத் திட்டத்தையும் அங்கீகரிப்பதில்லை. 3. பரந்துபட்ட மக்களின் பங்களிப்போடு பரிணாமம் பெறும் வெகுஜன ஆயுதப் போராட்டத்தை எமது போராட்டப் பாதையாகக் கொள்ளுதல். 4. தேசிய சுதந்திரப் போராட்டத்தோடு சோசலிசப் புரட்சியையும் முன்னெடுத்து சுதந்திர தாய்நாட்டில் சோசலிச சமுதாயத்தைக் கட்டி எழுப்புதல்.

5. உலக ஏகாதிபத்திய நவ காலனித்துவ பிடியிலிருந்து எமது தேசத்தை பூரணமாக விடுவித்து அணி சேராக் கொள்கையை கடைப்பிடித்தல். தற்போது ஒப்புக்கொள்ளப்பட்ட குறைந்தபட்ச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் முக்கிய அரசியல் பிரச்சினைகள் குறித்து ஒன்றுகூடி கலந்தாலோசித்து முடிவெடுப்பதெனவும் சிங்கள அரச படைகளுக்கு எதிரான எமது ஆயுதப் போராட்ட நடவடிக்கைகளை ஒன்றுபடுத்திச் செயல்படுத்துவது எனவும் தீர்மானித்துள்ளோம். எமது இந்த ஒருமைப்பாடு விரிவுபட்டு வலுப்பெற ஒத்துழைப்பும் ஆதரவும் தருமாறு எமது மக்களின் விடுதலையில் அபிமானம் கொண்ட சகல தமிழ் மக்களையும் வேண்டிக் கொள்கிறோம்.

போராளிக் குழுக்கள் ஒன்றிணைந்து வெளியிட்ட இந்த அறிக்கை கண்டு தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். பல்வேறு பிரச்சினைகளில் போராளிக் குழுக்கள் ஒன்றுபட்டு செயல்பட்டன.

1985 ஆம் ஆண்டு பூட்டான் தலைநகரான திம்புவில் இந்திய அரசின் முயற்சியின் பேரில் கூட்டு மாநாடு ஒன்று நடைபெற்றது. இம்மாநாட்டில் மேற்கண்ட நான்கு இயக்கங்கள் மட்டுமல்ல, மற்றொரு போராளி இயக்கமான புளொட் இயக்கமும் ஜனநாயக அரசியல் இயக்கமான தமிழர் விடுதலைக் கூட்டணியும் இணைந்து நின்று குறைந்தபட்சத் திட்டமொன்றினை திம்பு மாநாட்டில் அளித்தன. சிங்கள அரசு பிரதிநிதிகள் இதை ஏற்க மறுத்தனர். இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கிய இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் ரொமேஷ் பண்டாரி தமிழர் பிரதிநிதிகளை சிங்கள அரசுடன் இணக்கமாகப் போகுமாறு வெளிப்படையாகவே நிர்ப்பந்தித்தார். திம்பு மாநாட்டில் சமரச முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இலங்கைத் தமிழர் பகுதியில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் சிங்கள இராணுவத்தால் கொலை செய்யப்பட்ட செய்தி கிடைத்து தமிழர் பிரதிநிதிகள் மாநாட்டிலிருந்து வெளிநடப்புச் செய்தனர். அனைத்துப் போராளி இயக்கங்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்படுவதைக் கண்டு வெகுண்டெழுந்த இந்திய அரசின் வெளியுறவுத் துறைச் செயலாளர் ரொமேஷ் பண்டாரி அவர்களை மிரட்டி பணிய வைக்க முயற்சி செய்தார். விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம், டெலோ இயக்கத்தைச்சேர்ந்த சத்தியேந்திரா மற்றும் சந்திரகாசன் ஆகிய மூவரை இந்தியாவிலிருந்து நாடு கடத்த இந்திய அரசு ஆணை பிறப்பித்தது. இந்திய அரசின் இந்த செயலை கண்டிக்கும் வகையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் இயங்கிய டெசோ அமைப்பு போராட முடிவு செய்தது. இந்த அமைப்பில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் நண்பர் கி.வீரமணியும் நானும் அங்கம் வகித்தோம். நாங்கள் மூவரும் ஒன்றுகூடித்தான் தமிழகமெங்கும்போராட்டம் நடத்துவதென முடிவு செய்தோம். தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இதன் விளைவாக நாடு கடத்தும் உத்தரவை இந்திய அரசு இரத்துச் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அனைத்துப் போராளிக் குழுக்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் இணைந்து செயல்படுவதற்கு எதிராக இந்திய அரசு மேற்கொண்ட நாடு கடத்தும் உத்தரவிற்கு எதிராகத்தான் அன்றைக்கு டெசோ அமைப்பு போராடியது என்பதை அன்றைய டெசோ அமைப்பின் தலைவரும் இன்றைய முதல்வருமான கருணாநிதி அவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

தமிழகத்தின் ஒன்றுபட்ட போராட்டத்தின் விளைவாக தற்காலிகமாக இந்திய அரசு பின்வாங்கிய போதிலும் தனது திட்டத்தைக் கைவிடவில்லை. போராளிக் குழுக்களை பிளவுபடுத்தும் சதித் திட்டத்தை இந்திய றோ உளவுத்துறை வகுத்தது.

1986 ஆம் ஆண்டு மதுரையில் மே 5 ஆம் திகதி அன்று டெசோ அமைப்பின் சார்பில் தமிழீழ ஆதரவாளர் மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. இம்மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவராக நான் இருந்தேன். இம்மாநாட்டிற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி அவர்கள் தலைமை தாங்கினார். ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவ், பா.ஜ.க. தலைவர் வாஜ்பாய், லோக்தளத் தலைவர் பகுகுணா உட்பட பல தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டிலும் அனைத்துப் போராளிக் குழுக்களின் பிரதிநிதிகளும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். ஆனால், மாநாட்டிற்கு சில நாட்களுக்கு முன்பாக விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவரும் 1985 ஆம் ஆண்டு தமிழீழத்தில் நான் சுற்றுப்பயணம் செய்தபோது எனக்குப் பாதுகாப்பாக வந்த படைக்குத் தலைமை தாங்கியவருமான கப்டன் லிங்கம், ரெலோ இயக்கத்தவர்களால் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி கிடைத்தது. இதைத் தொடர்ந்து ரெலோ இயக்கத்திற்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையே மோதல்கள் நடந்தன. இது குறித்து 1986 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி சென்னையில் பிரபாகரனை சந்தித்து பேசினேன். அப்போது இந்த மோதல்களின் பின்னணி குறித்து எனக்கு விரிவாகக் கூறினார். "லிங்கத்தின் மரணச் செய்தி வந்தபேது நானே கொதிப்படைந்தேன். தளத்திலிருந்த எங்கள் தோழர்கள் எவ்வளவு பெரிய கொதிப்புக்கு ஆளாகியிருப்பார்கள் என்பதை நீங்களே எண்ணிப் பாருங்கள். தங்கள் படையின் கப்டன் லிங்கத்தை படுகொலை செய்ததை கண்டிக்கவும் கைதான இரு வீரர்களை விடுவிக்கவும் அவர்கள் உடனடித் தாக்குதல் தொடங்க வேண்டிய நிலைமைக்கு ஆளானார்கள். எங்கள் தோழர்களுக்கு வேறு வழி எதுவும் இல்லை. ஏனெனில், லிங்கத்தின் படுகொலையும் எங்களின் முக்கியத் தோழர்கள் கைது செய்யப்பட்டிருப்பதும் ஏதோ தற்செயலாக நடந்த நிகழ்ச்சியாக நாங்கள் கருதவில்லை. ஆழமான சதியின் விளைவாக இவை நிகழ்ந்தன என்று கருதுகிறோம். றோ உளவு அமைப்பின் தூண்டுதலின் பேரிலேயே சிறீ சபாரத்தினம் இங்கே வந்து முகாமிட்டு இருக்கிறார் என்பதும் எங்களுடன் மோதி எங்களை ஒழித்துக் கட்டுவதே அவரின் திட்டம் என்பதற்கான சாட்சியங்கள் எங்களுக்கு கிடைத்திருக்கின்றன. எனவே, எங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானோம்.

ரெலோ இயக்கத்தைத் தொடர்ந்து 1986 ஆம் ஆண்டின் இறுதியில் ஈ.பி.ஆர்.எல்.எப்.இயக்கமும் றோவின் வலையில் விழுந்து விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்ட முயற்சி செய்தது. எனவே, வேறு வழியில்லாத நிலையில் ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தினரிடமிருந்த ஆயுதங்கள் விடுதலைப் புலிகளால் களையப்பட்டன . ஒரு சொட்டு இரத்தம் கூட சிந்தாமல் ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தை விடுதலைப் புலிகள் நிராயுதபாணிகளாக்கி அவரவர் வீடுகளுக்குத் திருப்பி அனுப்பினர். ராஜீவ்- ஜெயவர்த்தனா உடன்பாடு கையெழுத்தான பிறகும் கூட தனது சீர்குலைவு வேலைகளை றோ நிறுத்தவில்லை. ஒப்பந்தப்படி ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு விடுதலைப் புலிகள் நிராயுத பாணிகளாகக் காட்சிதரும் வேளையில் அவர்களை ஒழித்துக்கட்ட போட்டி இயக்கங்களைச் சேர்ந்தவர்களை இந்திய இராணுவ விமானங்களின் மூலம் இலங்கை கொண்டு வந்து இறக்கியது.

விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டுவதற்கு பிற போராளி இயக்கங்களை றோ உளவுத்துறை பயன்படுத்தி வருவது குறித்து மனம் வருந்திய பிரபாகரன் அவர்கள் தங்களோடு இணைந்து போராட முன் வருமாறு பிற போராளி இயக்கங்களைச் சேர்ந்தவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் அறிக்கை ஒன்றினை 25.9.1987 அன்று வெளியிட்டார். அன்றும் சரி இன்றும் சரி இயக்க முரண்பாடுகளுக்கும் மோதல்களுக்கும் எந்த சக்தி பின்னணியிலிருந்து இயங்குகிறது என்பதை நான் பகிரங்கமாகவே அம்பலப்படுத்தியுள்ளேன். இந்திய அரசின் அங்கமாக உள்ள றோ உளவுத்துறையின் நாசகார நடவடிக்கைகள் குறித்து தமிழீழ மக்கள் நன்கு அறிவார்கள்.

தமிழீழ இலட்சியத்தில் உறுதிப்பாடும் இயக்கக் கட்டுப்பாடும் உடைய ஒரு தேசிய இயக்கம் தோன்றுவதை இந்த சக்தி அன்றிலிருந்து எதிர்த்து வருகிறது. ஒரு தேசிய விடுதலை இயக்கமாக விடுதலைப் புலிகள் வளர்வது கண்டு அஞ்சிய இந்திய உளவுத்துறை ஏனைய அமைப்புகளை வளர்த்துவிட்டு இயக்க மோதல்களை உருவாக்கி எம்மை அழிக்க முயன்றது. ஆனால், மக்கள் பலம் எமக்கு பக்கபலமாக இருப்பதால் எம்மை அழிக்க முடியவில்லை. தமிழினத்திற்கு ஏற்பட்ட இந்த அளப்பரிய இழப்பிற்கு இந்திய உளவுத்துறை மட்டும் காரணமல்ல.

இந்த உளவுத்துறையின் நயவஞ்சக சூழ்ச்சிக்கு பலியாகிய ஏனைய அமைப்புகளின் தலைமைகளும் இதற்கு காரணமாவர். பதவி வெறிபிடித்த அந்த தலைமைகள் இந்திய உளவுத்துறையின் ஐந்தாம் படையாக இயங்கினார்கள். இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்? என்று கூறிய பிரபாகரன் பிற இயக்கங்களில் உள்ள தோழர்களை இலட்சியப் போராட்டத்தில் இணைய முன்வருமாறு அன்பழைப்பும் விடுத்தார். மேற்கண்டவை எல்லாம் வரலாற்று ரீதியான ஆதார பூர்வமான உண்மைகளாகும்.

போராளிக் குழுக்களிடையே பிளவுகளை ஏற்படுத்த மோதல்களைத் தூண்டிய றோ உளவுத்துறை, தனது முயற்சியில் தோல்வி கண்டது. பிற போராளி இயக்கங்கள் புலிகளிடம் மோதி தோற்ற பிறகு புலிகள் இயக்கத்தையே பிளவு படுத்தவும் றோ உளவுத்துறை முயன்றது. 1992 ஆம் ஆண்டு மாத்தையா 2004 ஆம் ஆண்டில் கருணா ஆகியோர் றோ உளவுத்துறையின் வலையில் வீழ்ந்து புலிகள் இயக்கத்தை பிளவுபடுத்த முயற்சி செய்து அம்முயற்சியில் படுதோல்வி அடைந்தனர்.

ஆகத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தவும் பிளவுபடுத்தி பலவீனப்படுத்தவும் இந்திய அரசின் றோ உளவுத்துறை தொடர்ந்து செயற்பட்டு வருகிறது என்பது எவராலும் மறுக்க முடியாத ஆதாரபூர்வமான உண்மைகளாகும். இந்த சூழ்நிலையிலும் சிங்கள அரசுக்குத் தொடர்ந்து ஆயுத உதவிகளை இந்திய அரசு செய்து வருகிறது என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற உண்மையாகும்.

நன்றி :- தினக்குரல்