Monday, December 31, 2007

யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு நடக்கின்றது இறுதிக் கிரியைகள்

யுத்த தீவிரத்துக்கு வழிசெய்த 2007 ஆம் ஆண்டு இன்றுடன் கழிய நாளை புதுவருடம் 2008 ஆம் ஆண்டு பிறக்கின்றது.
போர் மேகங்கள் சூழ்ந்து, கொ?975;ூர வன்முறைப் புயலாக யுத்தம் வெடிக்கும் சூழலில் புத்தாண்டுக்குள் நுழைகிறோம்.

கடந்த சுமார் ஆறுவருடங்களாகப் பெயரளவுக்கேனும் நின்று தாக்குப்பிடித்த யுத்த நிறுத்த உடன்பாட்டுக்கு இறுதிக் கிரியை செய்யும் காலம் வந்துவிட்டது என்பதை யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருமே திட்டவட்டமாகவும், தெளிவாகவும் கோடி காட்டி விட்டதால், அது பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்புடன் "ஈழ யுத்தம் 4' என்ற அவத்தைக்குள் அவலத்துக்குள் புத்தாண்டில் நாடு பிரவேசிக்கப்போகின்றது.

யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின் இந்த செயற்றிறன் அற்ற நிலைமை குறித்து 2006 இறுதியிலேயே சுமார் ஒரு வருடத்துக்கு முன்னரே பிணக்குக்குரிய தரப்புகளில் ஒன்றான விடுதலைப் புலிகளின் சார்பில் அதன் தலைவர் வே. பிரபாகரன் தெளிவுபடுத்தியிருந்தார்.
""மஹிந்தவின் அரசு படைப்பலத்தை அடிப்படையாகக் கொண்டே தமிழரின் தலைவிதியை நிர்ணயிக்க விரும்புகிறது. தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து, அதன்மூலம் இராணுவ மேலாதிக்க நிலையில் நின்று தான் விரும்பும் அரைகுறைத் தீர்வைத் தமிழர் தலையிற் கட்டிவிட அரசு எண்ணுகின்றது. இந்தப் போர்முனைப்புச் செயற்பாட்டால் போர்நிறுத்த ஒப்பந்தம் செத்துச் செயலிழந்து போய்க் கிடக்கின்றது. ஒப்பந்தம் கிழிக்கப் படாமலேயே உக்கிப்போன தாளாகி உருக்குலைந்து கிடக்கிறது. புலிகளின் இலக்குகளுக்கு எதிராக மும்முனைகளிலும் தாக்குதல் தொடரும் என அறிவித்து, மஹிந்த அரசு ஒப்பந்தத்திற்கு ஈமைக்கிரியைகளையும் நடத்தி முடித்திருக்கின்றது.''
இப்படி 2006 நவம்பர் 27 ஆம் திகதி தமது மாவீரர் தின உரையில் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் கூறியிருந்தார்.

அக்கருத்துக்களை இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இப்போது வெளியிடும் கருத்துக்கள் நிரூபிக்கின்றன.
"" யுத்த நிறுத்த உடன்படிக்கை வெறும் காகிதத்திலேயே உள்ளது. யுத்த நிறுத்தம் நடைமுறையில் இல்லை என்பதை நாம் தெளிவாக நோக்க முடியும். இது கேலிக்கூத்தான விடயம்.

""ஆகவே நாம் இந்த யுத்த நிறுத்த உடன்படிக்கையை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரவேண்டும். அதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும். யுத்த நிறுத்த உடன்படிக்கை இருப்பதாகக் கூறி நாம் ஏன் மக்களை ஏமாற்ற வேண்டும்?
""அத்துடன் பயங்கரவாத அமைப்பான புலிகளை நாம் தடை செய்யவேண்டும். அதனுடன் நாம் போராடிக் கொண்டிருக்கின்றோம்.

""யுத்த நிறுத்த உடன்படிக்கையை முடிவுக்குக் கொண்டுவந்து, புலிகளைத் தடைசெய்த பின்னர், தமிழ் மக்களின் துன்பங்களுக்கு தீர்வு காண்பதற்கான புதிய யோசனைகளை ஜனாதிபதி முன்வைக்க முடியும்.''

இவ்வாறு கடந்த வார இறுதியில் கொழும்பு, ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் கோட்டாபய ராஜபக்ஷ கூறியிருக்கிறார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரான அவர், ஜனாதிபதிக்கு அடுத்து நாட்டின் பாதுகாப்புவிடயங்களில் அதிகாரமும், செல்வாக்கும் கொண்ட உயர் பிரமுகராவார். அவரின் மேற்படி கருத்தை அரசின் நிலைப்பாடாகக் கொள்வதில் தவறில்லை.

ஓராண்டுக்கு முன்னர் புலிகளின் தலைவர் தமது மாவீரர் தின உரையில் கூறிய பல முக்கிய விடயங்களை மேற்படி பேட்டிமூலம் உறுதிப்படுத்தியிருக்கிறார் பாதுகாப்புச் செயலாளர்.
* யுத்தநிறுத்த ஒப்பந்தம் வெறும் காகிதத்தில்தான் உக்கி, உருக்குலைந்து போய்க் கிடக்கின்றது.
* அதற்கு இறுதிக்கிரியை நடத்தி, யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முற்றாக முடிவுக்குக் கொண்டுவர அரசு திட்டமிடுகின்றது.
* அதன் பின் முழு அளவில் போர் நடத்தி, தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து, அதன் மூலம் இராணுவ மேலாதிக்க நிலையில் நின்று தான் விரும்பும் அரைகுறைத் தீர்வைத் தமிழர் தலையில் கட்டிவிட அரசு எண்ணுகின்றது.
இப்படி பிரபாகரன் அப்போது கோடிகாட்டிய விடயங்களே இப்போது மெல்ல மெல்லக் கொழும்பில் கட்டவிழ்கின்றன.

யுத்த நிறுத்த உடன்படிக்கையை உத்தியோகபூர்வமாக முடிவுக்குக் கொண்டுவந்து, புலிகள் இயக்கம் மீது தடை விதித்து, முழுப்போரைக் கட்டவிழ்த்து விட்டு, அதன் மூலமாகப் புலிகளை அடக்கி, ஒடுக்கியபடி இனப்பிரச்சினைக்குத் தமது தீர்வுத் திட்டத்தை ஜனாதிபதி முன்வைக்கலாம் என்று கூறுவது இத்தகைய உள்நோக்கத்தைத்தானே காட்டுகின்றது?
நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் தமது அரசு, கவிழும் சூழ்நிலை நெருங்கி வந்தபோது, தமது சிரேஷ்ட ஆலோசகரும், சகோதரருமான பஸில் ராஜபக்ஷ எம்.பி.மூலம் ஜே.வி.பி. தலைவர்களோடு அவசர அவசரமாக சமரசப் பேரப்பேச்சு நடத்தினார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்றும்
அப்போது ஜே.வி.பிக்கு சில முக்கிய வாக்குறுதிகளை வழங்கி, தனது அரசை கவிழவிடாமல் அக்கட்சியின் (ஜே.வி.பியின்) எம்.பிக்களை வளைத்துப் போட்டு நிலைமையை அவர் சமாளித்தார் என்றும் கூறப்படுகின்றது.

அப்போது பௌத்த சிங்களப் பேரினவாத சக்திகளான ஜே.வி.பியைச் சாந்தப்படுத்தி, தம் வழிக்கு வரப்பண்ணுவதற்காக அரசுத் தலைவர் கொடுத்த சில முக்கிய உறுதிமொழிகளில் புலிகளைத் தடைசெய்தல், யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைக் கிழித்து எறிதல் என்பவையும் அடங்கும்.

அந்த வாக்குறுதிகளைச் செயற்படுத்தி, ஜே.வி.பியைச் சமாளித்துத் தனது அரசைத் தொடர்ந்து தக்கவைக்கவே அரசு முற்படுகின்றது. அச் செயற்பாட்டின் ஆரம்ப அத்தியாயங்களே யுத்த நிறுத்த உடன்பாட்டை ரத்துச் செய்து, புலிகள் மீது தடை விதிக்கும் எத்தனங்கள் பற்றிய அரசின் அறிவிப்பாகும்.


Uthayan.com

Sunday, December 30, 2007

போராண்டு பிறக்கின்றதா?

வடக்கே மோதல்கள் தீவிரமடைந்து வருகிறது. வவுனியா , மன்னார் மற்றும் யாழ்.குடாவில் முன்னரங்க நிலைகளில் மோதல்கள் உக்கிரமடைந்துள்ளன. தினமும் ஒரு முனையில் நான்கிற்கும் மேற்பட்ட தடவைகள் மோதல்கள் நடைபெறுகிறது. வன்னிக்குள் எப்படியாவது புகுந்துவிட வேண்டுமென படையினர் பகீரதப் பிரயத்தனத்திலீடுபட்டு வருகின்றபோதும் அது சாத்தியப்படுவதாகத் தென்படவில்லை.
கிழக்கைக் கைப்பற்றியது போல் வடக்கையும் இலகுவாகக் கைப்பற்றிவிடலாமென நினைத்து வடக்கில் அரசு பாரிய படை நடவடிக்கைகளில் இறங்கியது. ஆனால், வடக்கே கடும் சமர் நடைபெற்று வருகையில் கிழக்கே மட்டுமல்ல தெற்கிலும் ஊடுருவியுள்ள புலிகளால் அரசும் படையினரும் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனர்.

வன்னியில் படையினர் பாரிய படை நடவடிக்கைகளை ஆரம்பித்து பத்துமாதங்கள் கடந்து விட்டன. ஆனால் இன்று வரை எதுவித முன்னேற்றத்தையும் காணவில்லை. ஒரு சில இடங்களில் மட்டும் சிறிது முன்நகர்வுடன் படையினர் தடுமாறுகின்றனர். புதிது புதிதாக படையணிகளை உருவாக்கி விஷேட பயிற்சிகளை வழங்கி பெருமளவு படையினரைக் களமிறக்கிய போதும் விளைவு சாதகமாகவில்லை.

வன்னிக்குள் நுழைய படையினர் மேற்கொள்ளும் தாக்குதலைப் போன்றே யாழ்.குடாநாட்டிலும் முகமாலை, கிளாலி மற்றும் நாகர்கோவில் முன்னரங்குகளிலிருந்து முன்னேற படையினர் இதுவரை மேற்கொண்ட எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. களமுனையில் நடைபெறும் போரை விட ஊடகங்களினூடாக அரசு பெரும் பிரசாரப் போரை நடத்துகின்ற போதும் அதன் உண்மை நிலையை தமிழ் மக்கள் மட்டுமன்றி இன்று சிங்கள மக்களும் நன்கறிவர்.

வடபகுதி யுத்த முனையில் தினமும் கொல்லப்படுவதாகக் கூறப்படும் புலிகளின் எண்ணிக்கை குறித்த செய்திகள் சிங்கள மக்கள் மத்தியில் இன்று நகைச்சுவையாக மாறிவிட்டது. ஆரம்பத்தில் இரண்டு, மூன்று புலிகள் கொல்லப்பட்டதாகக் கூறிய படையினர் பின்னர் ஐந்து பத்துப் புலிகள் கொல்லப்பட்டதாகக் கூறினர். பின்னர் அது அதிகரித்து 15, 20 என மாறி இன்று 25,30 புலிகள் கொல்லப்படுவதாகக் கூறுமளவுக்கு வியாபித்துள்ளது.

களமுனையில் எத்தனை படையினர் கொல்லப்படுகிறார்களோ அவர்களது எண்ணிக்கையின் பத்து மடங்கால் அங்கு புலிகள் கொல்லப்படுவதாகக் கூறப்படுகிறது. இல்லையேல் கடந்த பத்து மாதங்களில் வன்னியில் கொல்லப்பட்ட புலிகளின் எண்ணிக்கையென அரசு கூறிய தொகை தற்போது அங்கிருப்பவர்களின் தொகையின் அரைவாசியைக் கடந்திருக்குமெனக் கூறுபவர்கள் பலர்.

வன்னியில் தினமும் நடைபெறும் மோதல்களில் பல படையினர் கொல்லப்படுகின்றனர். பலர் படுகாயமடைகின்றனர். இந்த மோதல்களில் எதுவித முன்னேற்றமுமின்றி பேரிழப்புகள் ஏற்படுவது படையினரின் உற்சாகத்தை பெருமளவில் குறைத்துள்ளது. இந்த யுத்தம் அவர்களுக்கு பெரும் சலிப்பையும் ஏற்படுத்துகிறது. ஆனால், அவர்களைச் சலிப்படைந்து விட்டு விடக் கூடாதென்பதில் அரசு தீவிர கவனம் செலுத்துகிறது. அதனால்தான் அரசு பெரும் பிரசாரப் போரில் இறங்கியுள்ளது.

வன்னியில் தினமும் படையினர் பெரும் வெற்றிகளைக் குவித்து புலிகள் வசமுள்ள பிரதேசங்களைக் கைப்பற்றுவது போன்றதொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்த அரசு முனைகிறது. இந்த யுத்தத்தில் பெரும் வெற்றி கிட்டி வருவது போல் மேற்கொள்ளப்படும் பெரும் பிரசாரங்கள் மூலம் தென்பகுதியில் நிலைமைகளை சமாளித்து விடலாமென அரசு கருதியது.

கிழக்கை முழுமையாகக் கைப்பற்றியது போல் வடக்கையும் விரைவில் கைப்பற்றிவிட முடியும். தமிழ்ச்செல்வனை விமானப் படையினர் இலக்கு வைத்தது போல் பிரபாகரனையும் விமானப் படையினர் விரைவில் இலக்குவைத்து விடுவார்களென்ற மாயையை தெற்கில் தோற்றுவிக்க அரசு முனைகிறது.

யுத்த பட்ஜெட்டை நிறைவேற்றிய அரசுக்கு நிதிவளம் போதாது. பொருளாதார நிலைமை தினமும் மோசமடைந்து வருகிறது. யுத்தத்திற்காக தினமும் கோடிக்கணக்கான ரூபாவைச் செலவிடும் போது அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மட்டுமல்ல அனைத்துப் பொருட்களதும் விலைகளையும் பெருமளவில் அதிகரிக்க வேண்டியுள்ளது. இல்லையேல் வன்னியில் இடம்பெறும் யுத்தம் தலைநகருக்கு வந்துவிடும்.

நிலைமையைச் சமாளிக்க முடியாது அரசு திணறுகிறது. தினமும் பல கோடி ரூபாக்களைக் கொட்டிக் குவித்து வாங்கிக் குவிக்கும் போர்த் தளபாடங்களால் பலனெதுவும் கிட்டுவது போல் தென்படவில்லை. அமெரிக்கா, ரஷ்யா , இஸ்ரேல் , இந்தியா, பாகிஸ்தான் , உக்ரேன் , செக்குடியரசு, ஈரானென ஆயுத உற்பத்தி செய்யும் அனைத்து நாடுகளிடமிருந்தும் பல பாரிய போர்த் தளபாடங்களைக் கொள்வனவு செய்தும் பலன் கிடைப்பதாகத் தெரியவில்லை.

புலிகளின் ஆயுதக் கப்பல்கள் அழிக்கப்பட்டு விட்டன, அவர்கள் இனி ஆயுதங்களைக் கொண்டு வரக் கப்பல்களில்லை, ஆயுதங்கள் வரும் மார்க்கங்களும் அடைக்கப்பட்டு விட்டன, ஆயுதங்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது, ஆட்களுக்கும் அதுபோல் பற்றாக்குறை நிலவுகிறது, எதுவும் செய்ய முடியாது அவர்கள் திணறுகின்றனர், எவ்வேளையிலும் படையினர் வடக்கைக் கைப்பற்றிவிடும் சூழ்நிலை உருவாகியுள்ளதென்றெல்லாம் அரசும் படைத்தரப்பும் பெரும் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளன.

ஆனால், வட பகுதியில் வவுனியா , மன்னார், மணலாறு, யாழ்.குடா போர்முனையில் தினமும் நடைபெறும் சம்பவங்கள் நேர்மாறாகவேயுள்ளன. வன்னிக்குள் படையினரால் ஒரு அடி கூட வைக்க முடியாத நிலையேற்பட்டுள்ளது. வடக்கில் கடந்த பத்துமாதங்களில் நடைபெற்ற போரின் விளைவு என்னவென்றால் பூச்சியமென்று கூறும் நிலையே ஏற்பட்டுள்ளது. கிழக்கே அகலக் காலை வைத்த படையினரால் வடக்கே ஒரு அடி கூட வைக்க முடியாதுள்ளது.

1997 இல் வவுனியாவிலிருந்து யாழ்.குடாநாட்டுக்கான தரைவழிப் பாதையை திறக்கப் புறப்பட்ட ஜெயசிக்குரு படையினர் எதிர்கொண்ட அனர்த்தங்களை தற்போது வவுனியா, , மன்னார் களமுனைகளில் படையினர் எதிர்நோக்குகின்றனர். புலிகள் தங்கள் மீது பாரிய தாக்குதல்கள் தொடுப்பதைத் தவிர்ப்பதற்காகவும் அவர்களைத் தற்காப்பு நிலையில் வைத்திருப்பதற்காகவும் வன்னியில் படையினர் மேற்கொள்ளும் தாக்குதல்கள் படையினருக்கு பெரும் இழப்புகளையும் பின்னடைவுகளையும் ஏற்படுத்தி வருகிறது. படையினரால் பாரிய நடவடிக்கைகளை நடத்த முடியாதுள்ளது.

மடுவைக் கைப்பற்றுவதற்காக வவுனியா- மன்னார் வீதியிலிருந்து இந்த வருடம் ஆரம்பம் முதல் படையினர் மேற்கொண்ட எந்தத் தாக்குதல் முயற்சியும் வெற்றி பெறவில்லை. மடுவை நோக்கி நேரடியாக முன்னேற 15 இற்கும் மேற்பட்ட தடவைகள் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அவையெல்லாம் பெரும் தோல்வியில் முடிவடையவே மடுவை நோக்கிய பெரும் நகர்வு முயற்சிகள் கைவிடப்பட்டடன.

தற்போது வவுனியாவுக்கு மேற்கே மன்னார் கரையோரமாக புலிகளின் பகுதிகளைக் கைப்பற்ற படையினர் பெரும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். மன்னார் கரையோரமாக முழங்காவிலுக்குச் சென்று அங்கிருந்து பூநகரி ஊடாக யாழ்.குடாநாட்டுக்கு தரைவழிப் பாதையைத் திறப்பதே இவர்களது தற்போதைய நோக்கமாகும்.

`ஏ-9' வீதியூடாக வன்னியை குறுக்கறுத்துச் சென்று யாழ்.குடாவுக்கான தரைவழிப் பாதையைத் திறக்க 1997 இல் படையினர் முயற்சிகளை மேற்கொண்டும் இரு வருடங்களின் பின் அது பெரும் தோல்வியில் முடிந்தது. ஆனால், இன்று மன்னாரிலிருந்து கரையோரமாக முழங்காவில் சென்று அங்கிருந்து பூநகரி ஊடாக குடாநாட்டுக்கு தரைவழிப் பாதையைத் திறப்பதற்கு படையினர் பெரும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

`ஏ-9' வீதியூடாக வவுனியாவிலிருந்து வன்னிக்குள் நுழைவதும் கிளிநொச்சி வரை சென்று குடாநாட்டுக்கான தரைவழிப்பாதையைத் திறப்பதும் ்ஜெயசிக்குறுீ படை நடவடிக்கையின் நோக்கமாகும். இந்தப் படை நகர்வின் மூலம் வன்னியை இரண்டாகப் பிளவுபடுத்தி வன்னிக்குள்ளேயே புலிகளின் பலத்தை, தொடர்பற்ற இரு பகுதிக்குள் முடக்கி, பின் வசதிக்கேற்ப படை நடவடிக்கைகளை மேற்கொண்டு புலிகளை நசுக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், மாங்குளம் வரை சென்ற படையினரால் அப்பால் நகர முடியவில்லை. ஓயாத அலைகளாகப் புலிகள் உருண்டபோது, `ஜெயசிக்குரு' படையினர் தடுமாறி விட்டனர். இரு வருடங்களாக மாங்குளம் வரை சென்றவர்களை புலிகள் இரு வாரங்களில் ஓமந்தை வரை கொண்டு வந்தனர். அடுத்தடுத்து பல பிரதேசங்களைக் கைவிட்ட படையினர் பெருமளவு போர்த்தளபாடங்களையெல்லாம் கைவிட்டு வவுனியா வந்து சேர்ந்தனர்.

2000 ஆம் ஆண்டில் யாழ்.குடாநாட்டுக்குள் புகுந்த புலிகள் அப்போது யாழ் நகரைக் கைப்பற்றி விடுவரென்று எதிர்பார்க்கப்பட்டது போல் ஓமந்தை வரை வந்த புலிகள் வவுனியாவைக் கைப்பற்றி விடலாமென்ற எதிர்பார்ப்பு நிலவியது. அந்தளவிற்கு `ஜெயசிக்குரு' படையினர் பலத்த அடிவாங்கியிருந்தனர். அந்த நிலைமையே இன்று வன்னியில் உருவாகி வருகிறது.

கிழக்கை முழுமையாகக் கைப்பற்றிய படையினருக்கு வடக்கையும் கைப்பற்றுவது கடினமான விடயமல்ல என்றால் மன்னாரிலிருந்து கரையோரத்தால் யாழ்.குடாநாடு நோக்கி நகர்வதை விடுத்து, வன்னியை `ஏ-9' வீதியால் குறுக்கறுத்து அந்தப் பாதையூடாக யாழ்.குடாநாட்டுக்குச் செல்ல படையினர் முயற்சித்திருக்க வேண்டும். ஆனால், அது மட்டுமல்ல எதுவும் சாத்தியப்படுவது கடினமென்பதை படையினர் இன்று உணர்ந்திருப்பர்.

மன்னார் கரையோரம் ஊடான படைநகர்வு படையினருக்கு பல வழிகளிலும் பலன் தரக்கூடியதெனக் கருதப்படுவதால் தான், பலத்த இழப்புகளுக்கு மத்தியிலும் இங்கு முன்னேற படையினர் முயல்கின்றனர். இந்தக் கரையோரத்தால் சென்று பூநகரி ஊடாக யாழ். குடாநாட்டுக்கு தரைவழிப் பாதையைத் திறப்பதென்பது பல்வேறு பலனையும் தருமென படையினர் கருதுகின்றனர். மன்னார் கரையோரமாகத் தரைவழிப் பாதையைத் திறப்பதன் மூலம் மேற்கு கடலை புலிகள் முற்றாக இழந்து விடுவர்.

இந்தக் கடற்பிரதேசத்தினூடாகவே இந்தியாவிலிருந்து புலிகள் பொருட்களைத் தருவிப்பதாலும் மன்னார் வளைகுடாவில் எண்ணெய் வள ஆராய்ச்சி செய்ய வேண்டியிருப்பதாலும் இந்தக் கரையோரத்தை கைப்பற்றி புலிகளின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்திவிட படையினர் முயல்கின்றனர். எனினும், வன்னியில் ஒரு அடி நிலத்தைக் கூட இழந்து விடக்கூடாதென்பதில் மிகவும் கவனமாயிருக்கும் புலிகள், இந்தப் பிரதேசத்தைக் கைப்பற்றும் படையினரின் எண்ணத்தை முழுமையாகச் சிதறடிக்க முனைவர்.

இதேநேரம், மன்னார் கரையோரத்தைக் கைப்பற்றுவதன் மூலம் மன்னார் தீவுக்கான ஆபத்தையும் தடுத்து விட முடியுமென படையினர் கருதுகின்றனர். அண்மைக்காலமாக தங்கள் நீண்ட தூர ஆட்லறிகளை முன்நகர்த்தியுள்ள புலிகள் மன்னார் தீவின் நுழைவாயிலாயிருக்கும் தள்ளாடி முகாமை ஆட்லறி ஷெல் தாக்குதல் மூலம் இலக்கு வைக்கின்றனர். இது படையினருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதுடன் புலிகள் மன்னார் தீவை இலக்கு வைக்கலாமென்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த அச்சம் காரணமாகவே தெற்கே வங்காலை முதல் சிலாவத்துறை வரையான நீண்ட பிரதேசத்தை கடந்த சில மாதங்களுக்கு முன் படையினர் கைப்பற்றியிருந்தனர். மன்னாருக்கு வடக்கே அடம்பனை அண்டிய பகுதிகளிலிருந்து மன்னார் தீவை நோக்கிப் புலிகள் பாரிய தாக்குதலைத் தொடுக்கும் போது, மன்னாரின் தென் பகுதியும் புலிகள் வசமிருக்குமானால் அது புலிகளுக்கு மிகவும் வாய்ப்பாயிருக்குமெனக் கருதியே வங்காலை முதல் சிலாவத்துறை வரையான பகுதிகளை படையினர் கைப்பற்றியிருந்தனர்.

கடந்த வாரம் நெடுந்தீவு கடலில் நடைபெற்ற கடற்சமர் கூட மன்னார் கடலில் கடற்புலிகளின் கை ஓங்கியிருப்பதைக் காட்டியுள்ளது. தலைமன்னாரில் கடற்படை முகாமிருந்தும் இந்தக் கடற் சமரில் கடற்புலிகளுக்கு கடற்படையினரால் பலத்த சேதத்தை ஏற்படுத்த முடியவில்லை. புலிகளுக்கு பலத்த இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக கடற்படையினர் கூறுகின்ற போதும் தங்கள் தரப்பில் ஐந்து கரும்புலிகளே கொல்லப்பட்டதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மன்னார் கரையோரத்திற்கான சமர் மேலும் தீவிரமடையலாமென எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கே மழைகாலம் முடிவடைந்து வருவதால் அடுத்த வருட முற்பகுதியில் வன்னியில் பாரிய படை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு தீவிர முனைப்புக்காட்டும். டாங்கிகள், கவச வாகனங்களை நகர்த்தக் கூடியளவுக்கு கள நிலைமை வந்து விட்டால் அவற்றின் உதவியுடன் பாரிய படை நடவடிக்கைகளைத் தொடுக்க படையினர் முயல்வர்.

புதிய போர் விமானங்களை விரைவில் கொள்வனவு செய்யவுள்ள அரசு விமானப் படையினரின் திறனை பல மடங்காக அதிகரிக்கும் முயற்சியில் தீவிர அக்கறை காட்டுகிறது. அடுத்த ஓரிரு வாரத்தில் விமாப் படையினருக்கான விசேட பயிற்சிகளை வழங்குவதற்காக ரஷ்ய மற்றும் உக்ரேன் விமானப் படையினர் இலங்கை வரவுள்ளனர். பாகிஸ்தான் விமானப் படையும் இலங்கைக்கு இவ்வாறான உதவிகளை வழங்கி வருகிறது.

தரைவழியாக பாரிய படை நகர்வை மேற்கொள்ளும் போது வான் வழியால் தொடர்ச்சியாகவும் கடுமையாகவும் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் புலிகளின் தலைவர்களின் நடமாட்டம், ஒன்றுகூடல், திட்டமிடலைத் தடுத்து விடுமென படையினர் கருதுவதால் விமானத் தாக்குதல்களும் தீவிரமடையப் போகிறது. இதன் மூலம் அடுத்த ஆண்டு போராண்டாகவே பிறக்கப் போகிறது.

நெடுந்தீவுக் கடல் மோதல்

யாழ்.குடாவில் நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற கடற்சமரில் கடற்புலிகளுக்கு பலத்த சேதமேற்பட்டுள்ளதாக கடற்படையினர் கூறுகின்ற போதும் கடற்புலிகள் அதனை மறுத்துள்ளனர். கடற்படையினரே பலத்த இழப்பைச் சந்தித்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

எப்படி இந்தக் கடற்சமர் ஏற்பட்டதென்பது குறித்து இருதரப்பும் சரியான தகவல்களைக் கூறவில்லை. ஆனாலும், இந்தக் கடற்பரப்பில் மிக நீண்ட நேரமோதல் இடம்பெற்றது இதுவே முதல் தடவையாகும்.

ஆயுதக் கடத்தலில் கடற்புலிகள் ஈடுபட்டபோது அதனைத் தடுத்து நிறுத்தி தாங்கள் தாக்குதல் நடத்தியதாக கடற்படையினர் கூறுகின்றனர். எனினும் எங்கிருந்து புலிகள் இந்த ஆயுதக் கடத்தலை மேற்கொண்டார்கள் என்று கடற்படையினர் கூறவில்லை. இந்தியாவிலிருந்து ஆயுதக் கடத்தலை மேற்கொண்டார்களென கடற்புலிகள் மேற்கொள்ளும் சாத்தியமில்லை என்பதுடன் இந்தப் பகுதியில் வேறெங்குமிருந்தும் ஆயுதங்களைக் கொண்டு வரும் வாய்ப்பில்லை என்பதால் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டிருந்த கடற்புலிகள் மீதே கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுவது எந்தளவுக்கு உண்மையானதெனத் தெரியவில்லை.

அதேநேரம் எவ்வாறு இந்தக் கடற்சமர் நடைபெற்றதென கடற்புலிகள் கூறவில்லை. இதனால் இந்தக் கடற்சமரானது இந்தக் கடற்பரப்பில் இருதரப்பு பலத்தையும் பரீட்சிக்குமொரு மோதலாகவே இடம்பெற்றுள்ளது.

கடற்சமர் நடைபெற்ற கடற்பரப்பானது நெடுந்தீவுக்கு தெற்கேயும் மன்னார் நகருக்கு வடக்கேயுமுள்ளது. நெடுந்தீவுக் கடற்பரப்பில் கடற்படையினரின் அதிவேக டோரா பீரங்கிப் படகுகளால் பயணிக்க முடியும். ஆனால், மன்னாரில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டை அண்டிய கடற்பரப்பில் அவற்றால் பயணிக்க முடியாது. அந்தக் கடல் ஆழம் குறைந்ததென்பதால் அதன் நிலைமைக்கேற்ப தற்காப்புடன் இப்பகுதியில் கடற்சமரை மேற்கொள்ளும் வாய்ப்பு கடற்புலிகளுக்குள்ளது.

இவ்வாறானதொரு நிலையிலேயே நெடுந்தீவுக்கு வடக்கே கடந்த புதன்கிழமை கடற்சமர் நடைபெற்றுள்ளது. காலை 7.30 மணியளவில் கடற்புலிகளின் படகுகளை கடற்படையின் அதிவேக டோரா பீரங்கிப் படகுகள் அவதானித்த போதும் உடனடியாக அவற்றால் கடற்புலிப் படகுகள் மீது தாக்குதல் தொடுக்க முடியவில்லை. அவ்வேளையில் அந்தக் கடற்பரப்பில் ஒரு டோரா படகே ரோந்தில் ஈடுபட்டிருந்தது.

இதையடுத்து அந்தப் பீரங்கிப் படகின் கட்டளை அதிகாரி லெப்.கொமாண்டர் லலித் ஏக்கநாயக்கா கொழும்பில் கடற்படைத் தலைமையகத்திற்கு அறிவிக்கவே, கடற்புலிப் படகுகளை நெருங்க வேண்டாமென அவருக்கு அறிவிக்கப்பட்டது. மேலதிக பீரங்கிப் படகுகளை அங்கு செல்லுமாறும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

வடக்கு கடற்பரப்பிலும் மேற்கு கடற்பரப்பிலும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அதிவேக டோரா பீரங்கிப் படகுகள் உடனடியாக அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆறுக்கும் மேற்பட்ட டோரா படகுகள் அவ்விடத்திற்குச் சென்ற பின்பே கடற்புலிகளின் படகுகள் மீது கடற்படையினர் நண்பகல் 12.30 மணியளவில் தாக்குதலை ஆரம்பித்துள்ளனர்.

இந்த மோதல் மூன்று மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்றுள்ளது. விமானப் படையினரும் அங்கு அழைக்கப்பட்டுள்ளனர். எம்.ஐ- 24 ரக தாக்குதல் ஹெலி கொப்டர்கள் இரண்டும் அங்கு வந்து தாக்குதல் நடத்தியுள்ளன. மோதல் முடிவடைந்து கடற்புலி படகுகள் கரை திரும்பிய பின் கிபிர் விமானங்களும் அப்பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ளன.

கடற்படையினரின் 12 படகுகளுடன் கடற்புலிகளின் 16 படகுகள் மோதியுள்ளன. கடற்புலிகளின் 6 படகுகளைத் தாங்கள் அழித்ததாகவும் டோரா பீரங்கிப் படகொன்று பலத்த சேதமடைந்து பின்னர் கடலில் மூழ்கிவிட்டதாகவும் கடற்படையினர் கூறினர். அதிலிருந்த இருவர் மட்டுமே மீட்கப்பட்டனர். ஏனையோர் காணாமல் போய்விட்டனர்.

எனினும் அதிவேக டோரா பீரங்கிப் படகொன்று முற்றாக தகர்த்தழிக்கப்பட்டதாகவும் மற்றொரு டோரா திருத்தியமைக்க முடியாதளவிற்கும் மற்றொன்று பலத்த சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள புலிகள் தங்கள் தரப்பில் ஐந்து கடற் கரும்புலிகள் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

விதுரன்
thinakkural.com

புலிகளால் இந்தியாவிற்கு ஆபத்தா?

-தாரகா-
சமீப காலமாக விடுதலைப் புலிகளால் இந்தியாவிற்கு ஆபத்து என்னும் கருத்து மீண்டும் தலைதூக்கியிருக்கிறது. இந்தியா, தனது மேலாதிக்க நலன்களுக்காக ஈழத்தின் விடுதலை போராட்டத்தை பயன்படுத்திக் கொள்வதில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து நீண்ட காலமாக ஒருவிதமான தலையிடாக் கொள்கையைக் கடைப்பிடித்து வருவதை நாமறிவோம். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் இந்த தலையிடாக் கொள்கை என்பது நேரடி அர்த்தத்திலேயே தவிர மறைமுக அர்த்தத்திலல்ல. கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தும் நோக்கிலும் விடுதலைப் புலிகளை தமிழ் மக்கள் மத்தியிலிருந்து பிரித்தாளும் நோக்கிலும் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை அவ்வப்போது செய்தே வந்திருக்கிறது. ஈழத்தில் விடுதலைப் புலிகள் பலமாக இருக்கும் வரை தங்களது மேலாதிக்க நலன்களை முன்னெடுப்பது ஒருபோதுமே சாத்தியமல்ல என்று இந்திய பார்ப்பனிய கொள்கை வகுப்பு சக்திகள் மிகவும் உறுதியாக நம்புவதன் வெளிப்பாடுதான் இது எனலாம். இந்த பின்புலத்தில்தான் சில மாதங்களாக தமிழக பார்ப்பனிய ஊடகங்களும், புத்திஜீவிகளும் விடுதலைப் புலிகளால் குறிப்பாக விடுதலைப் புலிகளின் விமானப்படை மற்றும் கடற்படையால் இந்தியாவிற்கு பெரியளவில் ஆபத்து இருப்பதாக கதையளந்து வருகின்றன.

சமீப காலமாக தமிழகத்தில் ஈழ விடுதலைப் போராட்டம் தொடர்பான கரிசனை அதிகரித்து வரும் நிலையிலேயே தமிழக பார்ப்பனிய சக்திகள் களத்தில் இறங்கியிருக்கின்றன. கருத்தியல் தளத்தில் எப்போதுமே சிங்கள இனவாதிகளுடன் கைகோர்த்து செல்லும் தமிழக பார்ப்பனிய சக்திகள் விடுதலைப் புலிகளை அழித்தொழிக்க வேண்டுமென்பதில் திடசங்கற்பம் பூண்டிருக்கின்றன. தற்போதைய மகிந்த கூட்டும் விடுதலைப் புலிகளை அழித்தொழிக்க முடியுமென்பதில் உறுதி பூண்டிருக்கும் நிலையில் அதற்கு முண்டு கொடுக்கும் வகையில் இந்திய மத்திய அரசை திருப்பிவிட பார்ப்பனிய சக்திகள் முயன்றுவருகின்றன. சிங்களத்திற்கும் தமிழக பார்ப்பனியத்திற்கும் இடையிலான உறவு நெருக்கத்தை மேலும் நீங்கள் விளங்கிக் கொள்வதற்கு தமிழக பார்ப்பனிய சக்திகளின் தலைமைப் பீடமாக செயற்படும். ்இந்துீ பத்திரிகையின் ஆசிரியர் ராமிற்கு, சிங்களம் தனது தேசத்தின் உயர் விருதான `சிங்கள ரத்தினா' விருது வழங்கி கௌரவித்திருப்பதை நான் சொல்லுவதுடன் இணைத்துப் பாருங்கள் அதன் தார்ப்பரியம் உங்களுக்கு விளங்கும்.

இந்திய கொள்கை வகுப்பில் பெருமளவில் செல்வாக்கைக் கொண்டிருக்கும் தமிழக பார்ப்பனிய சக்திகள் இந்திய மத்திய அரசிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான முரண்பாடுகளை கொதி நிலையில் வைத்திருக்கும் வகையிலான செயற்பாடுகளை திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றனர். விடுதலைப் புலிகளுக்கும் இந்திய மத்திய அரசிற்கும் இடையிலான முரண்பாடுகளை தணிப்பதற்கான, குறிப்பாக இந்தியாவை இலங்கை விவகாரத்தில் நடுநிலைப்படுத்தக் கூடிய தளமாக தமிழகம் இருப்பதை நன்கு அறிந்து வைத்திருக்கும் இந்த சக்திகள் தமிழக ஆதரவுத் தளம் மேலும் வலுவடைவதை தடுக்கும் வகையிலேயே தற்போது திட்டமிட்டு செயலாற்றி வருகின்றன. இந்த பின்புலத்தில்தான் சமீப காலமாக பார்ப்பனியர்களால் வழிநடத்தப்படும் இந்திய வெளியக உளவுத்துறையான `றோ' விடுதலைப் புலிகளால் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதாகவும், தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்காக அலுமினியக் குண்டுகள் தயாரிக்கப்படுவதாகவும் பல கட்டுக் கதைகளை பரப்பி வருகிறது. இதன் மூலம் இந்திய மத்திய அரசிற்கு நிர்ப்பந்தங்களை ஏற்படுத்துவதனூடாக தமிழக அரசின் மீதான மத்திய அரசின் பிடிகளை இறுக்குவதும், இந்தியாவை ஷ்ரீலங்கா அரசிற்கு முழுமையான அளவில் ஆதரவாக செயற்படத் தூண்டுவதுதான் பார்ப்பனிய சக்திகளின் உள்நோக்கம். விடுதலைப் புலிகளுக்கும் அரசிற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தான சில நாட்களிலேயே `இந்து ராம்' புலிகள் ஷ்ரீ லங்கா அரசை தமது போராற்றலால் தோற்கடித்து விட்டனர் என்று தனது அவசரமான அபிப்பிராயத்தை வெளியிட்டிருந்தார்.

உண்மையில் இங்கு ராமின் உள்நோக்கம் ஷ்ரீலங்கா அரசை இராணுவ ரீதியாக பலப்படுத்த வேண்டுமென்பதுதான். கடந்த 2000 ஆம் ஆண்டில் தமிழ்த் தேசிய விடுதலைப்படை பற்றியும் இலங்கையின் வடகிழக்கை உள்ளடக்கிய அகண்ட தமிழ்நாடு பற்றிய இணையத்தளமொன்று இருப்பதாகவும் இந்து பத்திரிகை கதையொன்றை கிளப்பியிருந்தது. இறுதி மாவீரர் தின உரை குறித்த அபிப்பிராயத்திலும் இந்து பத்திரிகை பிரபாகரன் இருக்கும் வரை இலங்கையில் சமாதானம் வரப்போவதில்லை என்ற கருத்துப்பட தனது ஆசிரியர் தலையங்கத்தை எழுதியிருந்தது. விடுதலைப் புலிகளை பூண்டோடு ஒழித்து விட வேண்டுமென்ற அவாவின் வெளிப்பாடுகள்தான் இவை. இதே இந்து ஏடு 1989 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவருக்கு அடுத்த நிலையில் இருந்த மாத்தையாவால் கொல்லப்பட்டதான கட்டுக்கதையொன்றை வெளியிட்டு மகிழ்ந்தது. பின்னர் 2005 இல் கடல்கோள் அனர்த்தத்தால் பிரபாகரன் இறந்துவிட்டதான செய்தியை வெளியிட்டது.

இன்னொரு பார்ப்பனிய புத்திஜீவியும் உளவுத்துறையின் முன்னாள் அதிகாரியுமான பி.இராமன் இன்னுமொரு படி மேல் சென்று விடுதலைப் புலிகள் அமைப்பு கொடூரமானது. பிரபாகரன் உலகிலேயே மிகவும் கொடூரமான பயங்கரவாதி அவருடைய மரணத்திற்கு கூட எவரும் கண்ணீர் வடிக்கக் கூடாது. உண்மையிலேயே அவர் இறந்திருந்தால் இலங்கைத் தமிழருக்கு தேவை பிரபாகரன் இல்லாத விடுதலைப் புலிகள் அமைப்பு. இதேபோன்றே இந்திய பாதுகாப்பு ஆலோசகரும் தற்போது இந்திய உளவுத்துறையை இயக்கும் மறைமுகக் கரமாகவும் தொழிற்படும் பார்ப்பனியரான எம்.கே.நாராயணன் கடந்த 2007 இல் மூனிச்சில் பாதுகாப்பு கொள்கைகளுக்கான மகாநாட்டில் விடுதலைப் புலிகள் போதைப் பொருள் விற்பனையின் மூலம் தமக்கான நிதியை திரட்டிவருவதாக கூறியிருந்ததையும் இந்த இடத்தில் நினைவு கொள்ளலாம்.

தமிழக பார்ப்பனியம் மிகக் கேவலமான முறையில் ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தையும் அதனை முன்னெடுக்கும் புலிகள் அமைப்பையும் சித்திரித்து வருகின்றது என்பதற்கு இவை சில உதாரணங்கள் மட்டுமே. இவ்வாறு மிகவும் இழிவான முறையில் ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை கேவலப்படுத்திவரும் மேற்படி பார்ப்பனிய சக்திகள் தான் தற்போது விடுதலைப் புலிகளின் விமானங்களாலும் கடற்புலிகள் அமைப்பினாலும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக ஒரு பூச்சாண்டியை கிளப்பிவிட்டிருக்கின்றன.

சிங்களம் தமிழர் விடுதலைப் போராட்டத்தை அழித்தொழிக்கும் நோக்கில் இந்தியா உட்பட்ட பல்வேறு நாடுகளின் உதவியுடன் தனது இராணுவ ஆற்றலை பெருக்கிக் கொண்டது. அதற்கு அமையவே விடுதலைப் புலிகள் விடுதலைப் போராட்டத்தை பாகாக்கும் நோக்கில் தமது போரிடும் ஆற்றலை பெருக்கிக் கொண்டனர். புலிகள் கெரில்லா அணியாக, மரபுவழிப்படையாக சிங்களத்தின் இராணுவ வியூகங்களை முறியடித்து முன்னேறிய சந்தர்ப்பத்தில் ஷ்ரீலங்கா அரசு தரைவழியில் ஏற்பட்ட தோல்விகளை விமானப்படை மற்றும் கடற்படையின் தாக்குதல்களால் ஈடு செய்ய முயன்றது. இந்த பின்புலத்திலேயே தமிழர் தேசம் தனக்கான கடற்படை விமானப்படை என்று முன்னேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

எனவே இங்கு விடுதலைப் புலிகளின் இராணுவ வலிமை என்பது சிங்கள மேலாதிக்கத்திலிருந்து தமிழ் மக்களையும், தமிழர் போராட்டத்தையும் பாதுகாத்தல் என்ற அடிப்படையைக் கொண்டதேயன்றி பிராந்திய நலன்களுடன் முரண்பாடுகளை வளர்ப்பதற்கான திட்டத்தைக் கொண்டது அல்ல. இது மிகவும் இலகுவாக விளங்கிக் கொள்ளக் கூடிய உண்மையாகும். ஆனால் இந்திய பார்ப்பனிய ஆளும் வர்க்கமோ இந்த அடிப்படையான உண்மையை மறைத்து, விடுதலைப் புலிகளின் விமானப்படை, கடற்படையால் இந்தியாவிற்கு பெரியளவில் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதான பொய்களை பரப்பி வருகின்றது. விடுதலைப் புலிகளையும் தமிழர் போராட்டத்தையும் அழித்தொழிக்க வேண்டுமென்ற உள்ளடக்கத்தை தவிர வேறு எந்த உள்ளடக்கங்களும் இவ்வான பார்ப்பனிய பிரசாரங்களில் இல்லை. இந்திய கொள்கை வகுப்பை கட்டுப்படுத்தும் இவ்வாறான பார்ப்பனிய சக்திகள் புலிகளின் இராணுவ கட்டமைப்புக்கள் குறித்து அபிப்பிராயங்களை வெளியிடும் முன்னர் அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் இராணுவ மற்றும் தந்திரோபாயங்கள் சார்ந்த ஆய்வு நிறுவனங்கள் சில முடிவுகளை வெளியிடுகின்றன.

2004 இல் இலங்கை அரசியலில் மீளவும் யுத்தம் தீவிரப்படுவதற்கான சாத்தியங்கள் துலாம்பரமாகியதும் இந்திய உளவுத்துறையான ்றோீவிற்கு ஆய்வுகளை செய்யும் சூரியநாராயணன் விடுதலைப் புலிகளின் கடற்புலிகளால் இந்தியாவிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக இந்துவில் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தார். அதற்கு முன்னமே அமெரிக்காவின் அரசியல் கற்கைகளுக்கான வூட்ரோ வில்சன் நிலையம் மற்றும் தந்திரோபாயங்களுக்கான கற்கை நிலையமும் இணைந்து வெளியிட்டிருந்த ஆய்வில் விடுதலைப் புலிகள் இலங்கை கடற்படையின் 50 வீதமான கரையோர பாதுகாப்பு ஆற்றலை அழித்து விட்டதான கருத்தொன்றை வெளியிட்டிருந்தது. இதனை சூரியநாராயணன் தனது ஆய்வுக்கான ஆதாரமாகக் கொண்டிருந்தார். இவ்வாறான ஆய்வுகளின் நீட்சி சமீபத்தில் அமெரிக்க தூதர் இலங்கையின் கரையோர பாதுகாப்பிற்கென நவீனபடகுகள் வழங்கியது வரை நீண்டு செல்கின்றது என்பதை நாம் நினைவில் கொள்வது அவசியம்.

தனது எதிர்பார்ப்பிற்கு ஏற்ப விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்துவதற்காக இலங்கை அரசியலில் எந்த சக்திகளையும் அனுமதிக்குமளவிற்கு இந்திய கொள்கை வகுப்பை புதுடில்லி பார்ப்பனிய சக்திகள் நெகிழ்த்தும். ஒன்றின் நலனின் மற்றையதின் நலன் என்ற அடிப்படையில் இந்த சக்திகள் தொழிற்பட்டு வருகின்றன.

நாம் இந்த இடத்தில் இந்தியாவின் தலையீடு குறித்து தெளிவாக இருப்பது அவசியம். இந்திய மத்திய அரசின் கொள்கை வகுப்பு பார்ப்பனிய சக்திகளின் வசம் இருக்கும் வரை இந்தியா ஒருபோதும் தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கப்போவதில்லை. இதில் தடுமாற்றத்திற்கோ மீள் பரிசீலனைக்கோ இடமிருக்குமென்று நான் நினைக்கவில்லை. மிகவும் ஆச்சரியப்படத்தக்க வகையில் சிங்கள ஆளும் வர்க்கம் கூட தனது கையறு நிலையால் இறங்கி வரலாம். ஆனால் அப்போதும் அதனை குழப்பும் சக்தியாக இந்தியா இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. கடந்த 2000 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகள் பலாலியை நோக்கி முன்னேறிய போது இந்தியா, அதில் குறுக்கிட்டு புலிகளை அச்சுறுத்த முற்பட்டது. பாகிஸ்தான் இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்குவதற்கு அனுசரணையாக தொழிற்பட்டது.

தனது பங்கிற்கு தானும் ஆயுதங்கள் வழங்கி சிங்களத்தை வலுப்படுத்தியது. இது இவ்வாறிருக்க மிகவும் சாதாரணமான விடயமான, தென்னிந்தியாவை பேச்சுவார்த்தைக்கான தளமாகவும் மனிதாபிமான தேவைகளுக்கான களமாகவும் பயன்படுத்திக் கொள்வதற்கான புலிகளின் கோரிக்கையையும் இந்தியா நிராகரித்தது. இவ்வாறான சம்பவங்கள் எல்லாம் இந்தியா தமிழர் விடுதலைப் போராட்டம் குறித்து எத்தகைய மனோபாவத்தைக் கொண்டிருக்கின்றது என்பதற்கான சான்றுகள். மீண்டும் மீண்டும் இந்திய பார்ப்பனிய சக்திகள் பிரபாகரன் இல்லாத விடுதலைப் புலிகள் என்று கூறிவருவதற்குப் பின்னால் இருக்கும் நிகழ்ச்சி நிரலும் இதுதான்.

தமது மேலாதிக்க நலன்களுக்கு ஏற்ப தமிழர் விடுதலைப் போராட்டத்தை பயன்படுத்திக் கொள்வதற்கு பிரபாகரன் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. அவரிடம் ஏலவே தோல்வியடைந்த பார்ப்பனிய சக்திகள் தமது கடந்த கால அனுபவத்திலிருந்து பிரபாகரன் என்ற மனிதரின் திடகாத்திரமான ஆளுமை குறித்து அச்சப்படுகின்றன. இதுதான் பார்ப்பனிய சக்திகள் பிரபாகரன் இல்லாத விடுதலைப் புலிகள் இயக்கம் குறித்து அவாப்படுவதன் உள்ளடக்கம். எனவே இந்த இடத்தில் தமிழ்த் தேசிய சக்திகள் கருத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால் இந்தியா நமது நலன்களை பாதிக்காதவாறான முடிவுகளை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கைகளை நாம் முன்வைப்பது நமது கடமையாக இருக்கலாம். ஆனால் இந்தியா தனது நலன்களில் நின்று எடுக்கும் முடிவுகள் நமது தேசிய நலன்களுடன் எவ்வாறான முரண்பாடுகளை கொண்டிருக்கின்றன என்ற தெளிவு நமக்கு அவசியம். இதுவெறுமனே தந்திரோபாயங்கள் சார்ந்தது மட்டுமன்றி மக்கள் மத்தியில் பிழையான நம்பிக்கைகள் வளர்வதற்கான சூழலையும் தோற்றுவித்துவிடும்.

-தாரகா-

Saturday, December 29, 2007

அடங்காத அதிர்வுகள்

சிறிலங்காவின் அநுராதபுரம் வான்படைத்தளம் மீது கரும்புலி வீரர்கள் நிகழ்த்திய ~எல்லாளன் படை நடவடிக்கை|யின் அதிர்ச்சியிலிருந்து இன்னமும் சிங்கள தேசம் மீள முடியாதவாறு திணறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனது படைவீட்டுக்குள்ளேயே நுழைந்து அதன் முற்றத்தில் நின்ற வானூர்திகளைக் கரும்புலி வீரர்கள் எரித்தழித்த போது சிறிலங்கா அரசு துடித்தபோதும் அங்கு ஏற்பட்ட இழப்பை வெளியில் தெரியாமலேயே மூடி மறைத்துவிடலாம் எனச் பெரும் பிரயத்தனத்தைச் செய்தபோதும் அது முடியாமற் போயிற்று.

ஆரம்பத்தில் தாக்கியழிக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை நான்கென்றும் பின்னர் ஐந்தென்றும் உண்மையை விழுங்கிக்கொண்டிருந்த சிறிலங்கா அரசின் பொய்யுரையை உடைத்தெறிந்து சர்வதேச ஊடகங்களும், கொழும்பு ஊடகங்களும் உண்மை இழப்பைக் கட்டவிழ்த்துவிட்ட போது சிறிலங்கா அரசு வாய்மூடி மௌனித்தது.

புலிகள் அறிவித்த வானூர்திகளின் அழிவு எண்ணிக்கையையும் கடந்து சிறிலங்கா அரசு அறிவித்த விபரங்களையும் தாண்டி கரும்புலி வீரர்கள் அழித்த வானூர்திகளின் எண்ணிக்கை வானில் பறந்து கொண்டிருந்தன.

புலிகள் இயக்கத்தின் சிறப்பு மிகு விசேட கரும்புலிகள் அணியின் தாக்குதல் உக்கிரம் எத்தகையதாக இருக்குமென்பதைச் சிங்கள தேசம் கண்முன்னே கண்டு மனம் புழுங்கி தமக்குள்ளே தாமே வியர்க்க வேண்டிய அளவுக்கு ~எல்லாளன் படை நடவடிக்கை| யில் ஈடுபட்ட கரும்புலி வீரர்கள் சிறப்பாகச் செயற்பட்டிருந்தனர்.

குறைந்தளவிலான வீரர்களை ஈடுபடுத்தி எதிரிக்கு மிகப்பெரும் இழப்பை ஏற்படுத்தும் தேசியத் தலைவர் அவர்களின் இராணுவ ஆற்றலை மீண்டுமொருமுறை சர்வதேசத்தின் முன் பறைசாற்றுகின்ற படை நடவடிக்கையாக ~எல்லாளன் படை நடவடிக்கை| அமைந்திருந்தது.

தாக்குதல் நிறைவுற்று சில வாரங்களில் இந்தத் தாக்குதலில் கரும்புலி வீரர்கள் ஏற்படுத்திய அழிவின் பெறுமதியும் அதன் படைத்துறைச் சரிவும் குறித்த தகவல்களுமே வெளியாகி இருந்தன.

இதன் காரணமாக ~எல்லாளன் படை நடவடிக்கை| யின் நேரடி அழிவுகள் குறித்த தகவல்களே ஊடகங்கள் மத்தியிலும் படை விமர்சகர்கள் மத்தியிலும் முதன்மை பெற்று நின்றது.

ஆனால் இப்போது அந்த படை நடவடிக்கை ஏற்படுத்திய நேரடியற்ற அதிர்ச்சிகளும், அதிர்வுகளும், அழிவுகளும் குறித்த தகவல்கள் வெளி வரத் தொடங்கியிருக்கின்றன.

மெல்ல மெல்ல கொழும்பு ஊடகங்கள் மூலமாகப் படைத்தரப்பின் இத்தகவல்கள் வெளிவருகின்றன.

முதலில் புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து மிக நீண்டதூரத் தொலைவிலிருந்ததும் மிகவும் பாதுகாப்புமிக்கதுமான அநுராதபுரம் வான்படைத் தளத்தின் மையப்பகுதிக்குள் புலிகளால் எவ்வாறு ஊடுருவ முடிந்தது என்ற வியப்பும், மலைப்பும், அச்சமும் தென்னிலங்கையிலேயே காணப்பட்டது.

பின்னர் அநுராதபுரம் வான்படைத் தளம் மீது கரும்புலி வீரர்கள் நிகழ்த்திய தாக்குதலைக் கானொளிப்படமாகப் புலிகள் வெளியிட்டபோது எவ்வாறு தாக்குதலை நிகழ்த்தியது மட்டுமல்லாது தாக்குதலில் ஈடுபட்ட சிலர் மீளவும் தமது தளம் திரும்ப முடிந்தது என்ற அதிர்ச்சியில் சிங்கள தேசம் தனது மூளையைக் குழப்பிக்கொண்டிருந்தது.

ஆனால் இப்போது சிங்களத் தரப்பின் குழப்பங்களுக்குள் பெரும் குழப்பமாக கவணம் திரும்பியிருப்பதோ பின்வரும் விடயங்களாகும்.

அதாவது எல்லாளன் படை நடவடிக்கையின் போது கரும்புலி வீரர்கள் பயன்படுத்திய அதிநவீன இராணுவ உபகரணங்கள் குறித்த குழம்பம் ஒன்று.

இரண்டாவது படை நடவடிக்கையில் ஈடுபட்ட கரும்புலி வீரர்கள் படைத்தரப்பினரிடமிருந்து கைப்பற்றிய படையினரின் கனரக ஆயுதங்களைக் கொண்டு மீண்டும் படையினரையும் படைத்தளத்தையும் தாக்கும் வகையில் அந்த அதிநவீன ஆயுதங்களை கரும்புலி வீரர்கள் எவ்வாறு கையாளுவதற்குரியப் பயிற்சியைப் பெற்றிருந்தனர் என்பது குறித்தும் சிங்களப் படைத்தரப்பும் குழம்பிப்போய்க் கிடக்கிறதாம்.

குறிப்பாக அநுராதபுரம் சிறிலங்கா வான்படைத் தளத்தைப் புலிகள் வானூர்திகளின் தாக்குதலிலிருந்து பாதுகாப்பதற்காக அங்கு படையினரால் நிறுவப்பட்டிருந்த டு-70 - 40 மில்லிமீற்றர் வானூர்தி எதிர்ப்புப் பீரங்கியைக் கையாளும் திறனை எவ்வாறு பெற்றிருந்தனர் என்பது சிங்களப் படைத்தரப்பை பெரும் அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியிருக்கிறதாம்.

அநுராதபுரம் வானூர்திக் கட்டுப்பாட்டு மையத்திற்கு அண்மையாக நிறுவப்பட்டிருந்த இந்த விமான எதிர்ப்புப் பீரங்கியைக் கரும்புலி கப்டன் ஈழப்பிரியாவே இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குழப்பமானது சிறிலங்காப் படையினரிடையே புலிகள் இயக்கத்தின் அதிநவீன ஆயுதங்களைக் கையாளும் ஆற்றல் குறித்தும் பரீட்சையம் குறித்தும் சிந்திக்கத் தூண்டியிருப்பதன் மூலம் நவீன இராணுவ படைக்கலன் குறித்த புலிகளின் மேம்பட்ட வளர்ச்சியை அச்சத்தோடு நோக்கவேண்டியுள்ளது.

இதைவிட கரும்புலி வீரர்கள் பயன்படுத்திப் பின்னர் அவர்கள் வீரச்சாவடைந்த வேளை அவர்களிடமிருந்து விடுபட்ட படைக்கலங்களில் சில வளர்ச்சியடைந்த நாடுகளின் இராணுவம் பயன்படுத்தும் ஆயுதங்களாக இருப்பதாகவும் அங்கிகரிக்கப்பட்ட நாடுகளிடையே மட்டுமே பரிமாறிக்கொள்ளப்படுகின்ற ஆயுதங்களாகவும் காணப்படுவதாகச் சிங்களப் படை மேலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆயுதங்களைப் புலிகள் எங்கிருந்து எவ்வாறு பெற்றனர் என்பதும் இத்தகைய ஆயுதத் தளவாடங்களைப் பயன்படுத்தும் அளவுக்குப் புலிகள் இயக்கத்தின் படைக்கலன் ஆற்றல் குறித்த அச்சமும் சிங்களப் படைத்தரப்பையும், சிறிலங்கா அரசையும் குழப்பி வருகிறது.

இவ்விடயமானது இனிவரும் காலங்களில் படையினருக்கு எதிராகப் புலிகள் மேற்கொள்ளப்போகும் தாக்குதல்களில் பின்னடைவுகளை ஏற்படுத்தலாமெனக் கருதப்படுகிறது.

புலிகள் இயக்கத்தின் இந்த ஆற்றலானது சிறிலங்கா அரசிற்கு எதிராக தொடரும் நீண்ட போரை எதிர்கொள்ளத்தக்க வகையில் புலிகள் இயக்கம் தன்னை தகவமைத்துக் கொண்டுள்ளதையே காட்டுகிறது.

அத்தோடு சமானியர்களைக் கொண்டு ஒரு சரித்திரத்தை எழுதும் ஆற்றலைத் தலைவர் பிரபாகரன் தமிழினத்தின் மத்தியில் எவ்வாறு உருவாக்கினார் என்பதை விளங்கிக் கொள்ளும் பட்சத்தில் மாத்திரமே சிங்களப் படை மேலாளர்களின் இந்தக் குழப்பத்திற்கு விடை கிடைக்கும்.

-வேழினி-

"பயனுறுதிமிக்க சமாதான உருவாக்கத்துக்கு தேவையான சர்வதேசத்தின் அணுகுமுறை மாற்றம்"

* ருவாண்டா விவகாரத்தில் சர்வதேச சமூகம் காலம் தாழ்த்தி கவலைப்பட்டதுபோன்று தமிழர் விவகாரத்திலும் கவலைப்பட வேண்டியேற்படும்
-பத்மினி சிதம்பரநாதன் எம்.பி.-

அண்மையில் இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் டொமினிக் சில்கொட் மறைந்த பிரதமர் டட்லி சேனநாயக்காவின் ஞாபகார்த்த உரையின் போது, `புதிய நூற்றாண்டுக்கான புதிய இராஜதந்திரம்' எனும் தலைப்பில் ஆற்றிய நீண்ட உரை பல விடயங்களை உணர்த்தியுள்ளது. அவரது கருத்துகள் முழுமைக்கும் தமிழ் மக்கள் உடன்பாடு காணாவிட்டாலும் பல சிந்திக்கத்தக்க புதிய கருத்துகளை இனம் காண முடிந்தது.
உலகம் ஒரு கிராமமாகிவிட்டதை குறிப்பிட்டுள்ள தூதுவர் இராஜதந்திரம் என்பது அரசுகளுக்கிடையில் நடப்பதில் அக்கறை செலுத்துவதோடு மட்டுமல்ல, அரசுகளுக்குள் நடப்பவற்றிலும் கூடுதல் அக்கறை செலுத்துவதாக மாறியுள்ளது என குறிப்பிடுகின்றார். அதாவது, அரசுக்குள் வாழும் மக்கள் மத்தியில் நடப்பவை சம்பந்தமாகவும் இராஜதந்திர அணுகுமுறை அக்கறை செலுத்த வேண்டும் என்ற எண்ணம் இவரிடம் மேற்கிளப்புகின்றது. இலங்கை இனப்பிரச்சினையை உண்மையில் தீர்க்க வேண்டுமாயின் ஒரு அரசு மையப்பட்ட (Statist approach) அணுகுமுறையுடன் மட்டும் தம்மை கட்டுப்படுத்திக்கொள்ளாது தமிழ் மக்கள் - சிங்கள மக்கள் மத்தியில் உண்மையில் நடைபெறும் விடயங்கள் என்ன என்பது பற்றி இந்த நாடுகள் அக்கறை செலுத்த முன்வரவேண்டும்.
அந்த வகையில் குறைந்த அளவிலாவது இலங்கைத் தீவின் உள்நாட்டு விவகாரங்கள் பிரித்தானியாவை பாதிக்கின்றது என்று உணர்ந்து கொள்ளும் தூதுவர் பிரித்தானியாவுக்கு இலங்கைத் தீவில் உள்ள தமிழ் - சிங்கள இன முரண்பாட்டை முடிவுக்கு கொண்டு வருவதில் நேரடி அக்கறையும் விருப்பமும் உள்ளது எனக் கூறுவதை நாம் வரவேற்கின்றோம்.
தூதுவர் குறிப்பிட்ட இன்னொரு முக்கியமான விடயம், உலகம் இன்று ஒன்றோடொன்று தொடர்பு பட்டதாகவும் ஒன்றிலொன்று தங்கியிருப்பதாகவும் கூறியுள்ளமை. கடந்த காலங்களில் மேற்குலம் தனிமனித சுதந்திரத்திற்கு அதிகூடிய முக்கியத்துவம் வழங்கிய நிலையில் அங்கு ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு தனித்தீவாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால், ஆசிய நாடுகளில் ஒருவரில் ஒருவர் தங்கியிருக்கின்ற, ஒருவரில் ஒருவர் அக்கறை செலுத்துகின்ற கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறைமை எம்மிடம் ஏற்கனவே இருந்த ஒன்று. தற்போது மேற்குலகம் அதனை உணர்ந்து கொள்ள முயல்கின்றது.
உலகம் ஒரு சமூகம். அது சவால்களை பகிர்ந்து, உலக சட்ட ஒழுங்குகளை மதித்து, வாழ்ந்து, கூட்டுச்செயற்பாடு மூலம் உலகின் புதிய சவால்களை வெல்ல முடியும். இலங்கை இனப்பிரச்சினையை தீர்த்தல் எனும் பெரும் சவாலிலும் தமிழ் மக்கள் ஏனைய சமூகங்களுடன் கரம்கோர்த்தபடி ஒரு சமதையான நிலையில் நின்று செயற்பட விரும்புகின்றனர்.
இன்று ஒரு நாடு இன்னொரு நாட்டில் தங்கியிருப்பது தவிர்க்க முடியாதது எனக் கருதும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், 1994 இல் ருவாண்டாவில் நடந்த இன அழிப்பை சர்வதேசம் கண்டு கொள்ளாது, அது தமது விவகாரம் அல்ல என ஒதுங்கியிருந்து விட்டு இன்று சர்வதேசத்தின் மனச்சாட்சியில் ஒரு கறையாக இன்னும் அது இருக்கின்றது என்று தூதுவர் கவலைப்படுகின்றார்.
நாம் அவருக்குச் சுட்டிக்காட்ட விரும்புவது என்னவென்றால், இன்று இலங்கை இனவாத அரசு -தமிழ் மக்கள் மீது ஒரு இனப்படுகொலையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. ஆனால், சர்வதேசம் இனப்படுகொலையை மேற்கொள்ளும் இலங்கை அரசுடன் மட்டும் தொடர்புகளை பேணிவிட்டு அதற்கப்பால் தமது விவகாரம் அல்ல என ஒதுங்கி விடுகிறார்கள். இனப்படுகொலை எனும் போது ருவாண்டா அளவிற்கு உயிர்ப்படுகொலை நடைபெறவில்லை என்று சர்வதேசம் நினைக்கலாம். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்தவரை தாம் பண்பாட்டு ரீதியாக பெருமளவில் அழிக்கப்பட்டதாகவே அவர்கள் கருதுகின்றார்கள்.
பண்பாடு அழிக்கப்பட்ட ஒரு சமூகம் எதிர்காலத்தில் தானாகவே செயல்பட முடியாத ஒரு சமூகமாக சிதைந்து விடும் என தமிழ் மக்கள் அஞ்சுகிறார்கள். எனவே, பின்னொரு காலத்தில் சர்வதேச சமூகம் ருவாண்டா விவகாரத்தில் கவலைப்பட்டது போல் தமிழ் மக்களது விவகாரத்திலும் கவலைப்படும் வரை பொறுத்திருக்காமல் தமிழ் மக்கள் தம்மைத் தாமே பாதுகாக்கும் ஒரு பெரும் சவாலை தற்போது எதிர்கொண்டு வருகின்றார்கள். இதை சர்வதேச சமூகம் புரிந்து கொள்ள வேண்டுமென்பது எனது எதிர்பார்ப்பு.
தமிழ் மக்கள் தமது பாதுகாப்புக் கருதி தமிழீழமாகிய தமது தாயகத்தை அந்நிய ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க வேண்டும் என்று பெரும் முயற்சி செய்து வருகிறார்கள். இத்தகைய நீண்டகால முயற்சியின் பின்னராவது தமிழ் மக்களின் முயற்சியின் நியாயத்தன்மை பற்றி பிரித்தானிய தூதுவர் உணர்ந்து கொள்ள முன்வந்திருப்பது தமிழ் மக்களுக்கு பெரும் ஆறுதல் அளிக்கும் ஒரு விடயம். அரசியல் அபிலாசையான ஈழம் நியாயமற்றது என நான் சொல்லவில்லை என பிரித்தானிய தூதுவர் கூறியிருப்பது பற்றி தமிழ் மக்கள் பெரும் ஆறுதல் அடைந்திருக்கின்றனர்.
தமிழ் மக்கள் மீது இலங்கை அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடப்பட்டிருப்஼br />?து அனைவரும் அறிந்த விடயம். இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து அரசு இப்பயங்கரவாத நடவடிக்கையை படிப்படியாக முன்னெடுத்து வருகிறது. தமிழ் மக்கள் ஒரு போதும் இலங்கை அரசை தமது அரசாக ஏற்றுக்கொண்டதில்லை. அரசும் தமிழ் மக்களை தமது மக்களாக கருதி, அவர்களை பாதுகாக்கும் பொறுப்பை தான் ஏற்றுக்கொண்டதில்லை. இந்நிலையில் பாதுகாக்கப்பட வேண்டிய கடப்பாடு (Responsibility to protest) என்ற எண்ணக்கரு பற்றி சிந்தித்து வரும் சர்வதேசம் தமிழ் மக்களை பாதுகாப்பது என்ற பொறுப்புணர்வில் தமது பங்கை செலுத்த பின்னடிப்பது ஏன்? சர்வதேச சமூகம் இராணுவ ரீதியாக தலையிட வேண்டும் என்று நாம் கருதவில்லை. ஆனால், அவர்கள் முரண்பாட்டில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் சமதையாக கணிக்க வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பு.

பல்வேறு தடவைகள் இலங்கைப் படைகள் தமிழ் மக்களை பாடசாலைகளிலும் வைத்தியசாலைகளிலும் சந்தைகளிலும் தஞ்சம் புகுந்த கோயில்களிலும் குண்டுவீசி அழித்தன. சர்வதேச நாடுகள் அதனை ஏன் தட்டிக்கேட்கவில்லை? எல்லாவற்றிற்கும் மேலாக சமாதானப் பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்கி வந்தவரை படுகொலை செய்யும் போது குறைந்தது கண்டனத்தையோ கவலையையோ தெரிவிக்காமல் எப்படி பேசாமல் இருக்க முடிந்தது?
தமிழ் மக்கள் மீது நடைபெறும் இன அழிப்புப் பற்றி சர்வதேச சமூகம் போதிய கவனம் செலுத்தாமல் இருக்கும் நிலையில், தமிழ் மக்களை அழிக்கும் அரசின் செயலை தடுத்து நிறுத்திய படி தமிழ் மக்களை பாதுகாக்கும் ஒரு பெரும் முயற்சியை விடுதலைப் புலிகள் செய்து வருகின்றனர். இந்த வரலாற்று பெரும் பொறுப்பை தம் தலை மீது சுமந்திருக்கும் விடுதலைப் புலிகள் தம்மை அதிகாரம் கொண்டவர்களாக ஒழுங்கமைக்காமல் பொறுப்பை சுமந்தவர்களாகவே அதாவது, பொறுப்பாளர்களாகவே தம்மை ஒழுங்கமைத்துள்ளார்கள்.
தூதுவர் இறைமை பற்றி குறிப்பிடும் போது, இறைமை என்பது அதிகாரம் அல்ல பொறுப்பு என்று குறிப்பிடுகின்றார். இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரையில் அது இறைமை என்ற பெயரில் தமிழ் மக்கள் மீதான யுத்தத்தை முன்னெடுத்து வருகின்றது. அதேநேரம், விடுதலைப் புலிகள் அரச பயங்கரவாதத்திடமிருந்து தமிழ் மக்களை பாதுகாக்கும் பொறுப்பை செயற்படுத்தி வருகின்றார்கள். இச் செயற்பாட்டை அவர்கள் தமிழ் மக்களின் இறைமையை நடைமுறைப்படுத்தல் என்று சர்வதேசத்திற்கு விளங்கப்படுத்த முயல்கின்றார்கள். ஆனால், சர்வதேசம் விடுதலைப் புலிகளுடைய இந்த விளக்கத்தை அக்கறையோடு செவிமடுக்காமலிருப்பதும் இன்றைய அவல நிலை தொடர இடமளிக்கின்றது.
ஆனால், தூதுவரின் உரையில், தமிழ் மக்களது அபிலாசையான ஈழம் நியாயமற்றது என தான் கூறவில்லை என குறிப்பிட்டமை ஒரு முன்னேற்றகரமான விடயம். ஆனால், தமிழ் மக்களது அபிலாசையை ஏற்றுக் கொள்ளும் தூதுவர் அந்த அபிலாசையை அடைவதற்காக தவிர்க்க முடியாதபடி புலிகள் ஆயுதப் போராட்டத்தை கையாள்கின்றபோது புலிகளது முறையை ஏற்க முடியாது எனக் கூறுகின்றார்.
பிரித்தானியர்கள் இலங்கையை விட்டு வெளியேறிய போது அரசை சிங்கள இனத்திடம் ஒப்படைத்துச் சென்றார்கள். அன்றிலிருந்து தமிழினம் சிங்கள அரசால் படிப்படியாக ஒடுக்கப்பட்டது. தமிழ்த் தலைவர்கள் சாத்வீக வழியில் தமிழ் மக்களின் உரிமைகளை பெற முயன்றதும் சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு அவர்களது எந்தவொரு கோரிக்கையையும் வழங்காது ஏமாற்ற முயன்றதும் இவையெல்லாவற்றையும் விட தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறையை படிப்படியாக அதிகரித்து ஈற்றில் இராணுவ வன்முறையாக மாற்றியதும் இலங்கை அரசியலில் நாட்டம் கொண்ட அனைவருக்கும் தெரிந்த கதை.
இன்று இலங்கை அரசின் வழிமுறை முழுமையான அரச பயங்கரவாதமாக வெளிப்பட்டு நிற்கின்றது. சர்வதேச அனுசரணையுடன் செய்யப்பட்ட யுத்தநிறுத்தம் அமுலிலிருக்கத் தக்கதாக வெளிப்படையாகவே சர்வதேசத்தின் மனச்சாட்சிக்கு சவால் விட்டபடி தமிழ் மக்கள் மீது யுத்தத்தை அரசு பிரகடனப்படுத்தியுள்ளது. தமிழ் மக்களது பிரதேசங்கள் கைப்பற்றப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் தமிழ் மக்களின் மனித உரிமைகளை மீறுவதும் ஆக்கிரமிக்கப்படாத பகுதிகளில் பாரிய குண்டுவீச்சு விமானங்களை பயன்படுத்தி அழிவுகளை நடத்துவதுமாக அரச பயங்கரவாதம் வெளிப்பட்டு நிற்கின்றது.
அதன் செயற்பாடுகள் பற்றி சர்வதேச மனித உரிமை அமைப்புகள், மனிதாபிமான அமைப்புகள், சர்வதேச ஊடக அமைப்புகள், ஐ.நா. அமைப்புகள் என பலரும் விமர்சித்துள்ளனர்.
உதாரணமாக, அரசின் அனுமதியோடு பணியாற்றிய மனிதாபிமானப் பணியாளர்கள் கடந்த 19 மாதங்களில் 50 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட தேசம் இது.
இதனால் ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதி செயலாளரும் நிவாரண ஒருங்கிணைப்பாளருமான ஜோன் ஹோம்ஸ் உலகிலேயே மனிதாபிமானப் பணியாளர்கள் பணியாற்றுவதற்கு மிகவும் ஆபத்தான இடமாக, மோசமான இடமாக இலங்கைதான் உள்ளது என ராய்ட்டர் நிறுவனத்துக்கு வழங்கிய பேட்டியில் கூறியுள்ளார்.
இவ்வாறே ஊடகவியலாளர்கள் பணிபுரிவதற்கு மிகவும் ஆபத்தான இடமாக இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள யாழ்ப்பாணம் விளங்குகிறது என அனைத்துலக ஊடக அமைப்பான எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பும் அனைத்துலக ஊடக ஆதரவு அமைப்பும் தெரிவித்துள்ளன.
மேலும், ஹொங்கொங்கை தலைமையகமாகக் கொண்டியங்கும் ஆசிய மனித உரிமைகள் மையம் வெளியிட்ட அறிக்கையில், ஆட்கடத்தலுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசுகள் அனுசரணை வழங்கும் ஆசிய நாடுகளில் இலங்கை முதலிடம் வகிக்கின்றது எனக் குறிப்பிடுகின்றது.
மேலும், இலங்கை சிறைகளில் எந்தவித விசாரணையும் இன்றி தமிழ் கைதிகள் பல ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அண்மையில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் வந்தபோது இவர்கள் சிலர் மீதுதாக்குதல் நடைபெற்றது. இத்தகைய தாக்குதல்கள் மிக மோசமாக முன்னரும் நடைபெற்றது. உதாரணமாக, 1983 இல் 54 பேர் சிறையில் கொல்லப்பட்டனர். 1999 இல் மலையகத்தில் பிந்துனுவெவவில் 12 தமிழ்க் கைதிகள் கொல்லப்பட்டனர்.
ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் லூயிஸ் ஆர்பர், "இலங்கையில் மனித உரிமை நிலைமை மிகவும் சீர்குலைந்து போயுள்ளது. இலங்கையில் சட்டத்தின் ஆட்சி மிகவும் பலவீனமாக உள்ளது" எனக் கூறியுள்ளார். இவ்வாறு மிக மோசமான விமர்சனங்களுக்குள்ளான இலங்கை அரசு போர்நிறுத்தத்தை கண்காணிப்பதற்கென தாமும் ஒப்புக்கொண்டு ஏற்படுத்திய கண்காணிப்புக் குழுவையே பல முறை அவமானப்படுத்தியுள்ளது.
ஐ.நா. சபையின் மனித உரிமைகள் மற்றும் துன்புறுத்தல்களுக்கான சிறப்புப்பிரதிநிதி மன்பிரட் நோவாக், "இலங்கையில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் மக்கள் மீதான கொடுமைகள் நாடு முழுவதும் அதிகரித்துள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார். "துன்புறுத்தல்கள் அதிக அளவில் நடைபெறவில்லை என அரசு மறுத்து வருகின்ற போதும் என்னால் அவர்களை நம்ப வைக்க முடியும் என்பதற்கான போதிய ஆதாரங்கள் உண்டு" எனக் கூறியுள்ளார்.
இவ்வாறு குற்றச்செயல்கள் நிறைந்த, மனித உரிமை மீறல்கள் மலிந்த அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடும் தேசமாக, இன அழிப்பை ஒரு தந்திரோபாயமாக கைக்கொள்ளும் இடமாக இலங்கை விளங்குகின்றது.
இந்த நிலையில் சர்வதேச நாடுகள் தமிழ்த் தரப்பின் தலைமையை கிளர்ச்சியாளர்கள், பயங்கரவாதிகள் என்று விமர்சித்துக் கொண்டு அரசின் பயங்கரவாதத்தை பயங்கரவாதமாகப் பார்க்காமல் அவர்களுக்கு ஆயுத உதவிகளையும் நிதி உதவிகளையும் பயிற்சிகளையும் வழங்குகின்றது. இந்த வகையில் சர்வதேச நாடுகள் பக்கச்சார்பாகவே நடக்கின்றன என நாம் கருதுகின்றோம். சர்வதேச சமூகம் இலங்கை அரசின் பயங்கரவாத அணுகுமுறையைத் தூண்டுவதற்குப் பதிலாக நிறுத்த முயற்சிக்க வேண்டும். அதன்மூலம்தான் தமிழ் மக்கள் ஜனநாயக வழிமுறையில் செயற்படுவதற்கு இடம் கிடைக்கும். மாறாக அரசின் பயங்கரவாதம் தொடரும் பட்சத்தில் தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு விடுதலைப் புலிகளுக்கு உண்டு. விடுதலைப் புலிகளின் முறைமை மாறவேண்டும் எனக்கருதும் சர்வதேச சமூகம் அதற்கான வழியை, ஊக்குவிப்பை வழங்காமல் அதைத் தடுக்கும் வகையிலேயே செயற்பட்டு வந்தது.
தெற்கில் ஒவ்வொரு அரசாங்கமும் மாறிமாறி வருகின்ற போது அவை ஒவ்வொன்றும் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வை வழங்கும் என்றும் தமிழ் மக்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும் என்றும் தமிழ் மக்களுக்கு போதித்து வந்தது சர்வதேசம். ஆனால், எந்த சிங்கள அரசாங்கமும் தமிழ் மக்களின் நியாயபூர்வமான அபிலாசையை வழங்க முற்படவில்லை. ஏமாற்றவே முற்பட்டன. இதன் பின்னரும் இப்போது அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழு (APRC) ஒரு தீர்வை வைக்கும் என சர்வதேசம் நம்பிக்கை வெளியிடுவது உள்நோக்கம் உடையதா? என தமிழ் மக்கள் சந்தேகிக்கின்றார்கள்.
தமிழ்மக்கள் மீது ஒரு அரைகுறைத் தீர்வை திணிக்கும் சதியொன்று அரங்கேறப்போகிறது என தமிழ் மக்கள் சந்தேகிக்கிறார்கள். தமிழ் மிதவாதிகள் ஏற்றுக்கொள்ள வழிசெய்யும் ஒரு தீர்வை அககீஇ வைக்க வேண்டுமென சர்வதேச சமூகம் கூறியிருப்பது இந்த சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. தமிழ் மக்களும் சரி விடுதலைப் புலிகளும் சரி இலங்கைத் தீவில் சுதந்திரம் என்ற உயர்ந்த இலட்சியத்தை வரித்து நிற்கிறார்கள். இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் தமது வாழ்வை பாதுகாப்பதற்கும் சிருஷ்டிப்பதற்குமான சுதந்திரத்தை நாடி நிற்கின்றார்கள். இச்சுதந்திரத்தின் அடிப்படையில் இலங்கைத்தீவில் சிங்கள இனத்தோடு சரிநிகர் சமானமாக சக வாழ்வு வாழ்வதற்கு தமிழ் மக்கள் தயாராகவே இருக்கின்றார்கள்.
இது ஒரு தீவிரவாத நிலைப்பாடு அல்ல. தமிழ் மக்களது சுதந்திரம் என்பதில் உறுதியாக நின்று கொண்டு மற்ற இனங்களின் சுதந்திரத்தையும் அங்கீகரிக்கும் ஒரு நிலைப்பாடாகும். உண்மையில் இது ஒரு மிதவாத நிலைப்பாடு என்பதை சர்வதேசம் புரிந்து கொண்டால் இலங்கையின் இன முரண்பாட்டு மாற்றத்தில் காத்திரமான முன்னேற்றம் ஏற்படும்.
எனவே, சர்வதேச சமூகம் இலங்கை இனப்பிரச்சினையில் தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும். அரசுமையப்பட்ட அணுகுமுறையிலிருந்து விடுபட வேண்டும். இலங்கை இனமுரண்பாட்டை ஒரு அரசுக்கும் ஒரு கிளர்ச்சியாளர் குழுவுக்கும் இடையே நடைபெறும் மோதலாக பார்ப்பதை விடுத்து, சிங்கள - தமிழ் இன மோதலாக பார்க்க வேண்டும். அத்தோடு இந்த மோதல் சிங்கள - தமிழ் சகவாழ்வை கொண்டுவர முடியாத அளவிற்கு அழிவுகரமான நிலைக்கு அண்மித்துவிட்டது என்பதையும் உணர்ந்து கொள்ளவேண்டும். எனவே, சர்வதேச சமூகம் பயனுறுதிமிக்க சமாதான நடைமுறையொன்றை உருவாக்குவதற்கு முரண்பாட்டில் ஈடுபட்டுள்ள இரு தரப்பையும் சமத்துவமாகப் பேணுவதன் மூலம் செயலூக்கமான பங்கு ஒன்றை வழங்க உடனடியாக முன்வரவேண்டும்.

வெற்றி மமதைப் போக்கை கைவிடக் கோரும் மகஜர்

இயேசு பாலன் பிறப்பு தினத்துக்கும் புதுவருடத்துக்கும் இடைப்பட்ட பண்டிகைக்காலம் இது.
இலங்கைத் தீவில் அல்லலுற்று, அவலப்பட்டு, அடக்கு முறைக்கும், நெருக்குவாரங்களுக்கும் உள்ளாகி, அனர்த்தங்களை எதிர்நோக்கி வரும் ஈழத் தமிழ் மக்களுக்கு இது பண்டிகைக்கும் கொண்டாட்டங்களுக்கும் உரிய காலம் அல்ல. கடந்து போகும் பண்டிகை நாட்களை அவற்றுக்குரிய மாண்புகளோடு அனுஷ்டிப்பதையே இப்போதைய கால கட்டத்தில் அவர்களால் பின்பற்ற முடியும். இதற்கு அப்பால், மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களில் திளைப்பதற்கான சூழல் அவர்களுக்கு இல்லை.

ஈழத் தமிழர்களுக்கு என்றில்லை, இலங்கைத் தீவில் நீதி கோரும் நியாயம் வேண்டும் அனைத்து மக்களினதும் நிலைமை இதுதான்.
ஆட்கடத்தல்கள், வேண்டுமென்றே கடத்திக் காணாமற் போகச் செய்தல், சட்டவிரோதப் படுகொலைகள், கப்பம் அறவிடுதல், முறையற்ற கைதுகள், தடுத்து வைப்புகள் என இலங்கையில் மனித உரிமை மீறல்கள் வகைதொகையின்றி அதிகரித்து வந்துள்ளன. இக் கொடூரங்களால் பெரும் பாதிப்புக்கும், இழப்புக்கும், வஞ்சனைக்கும் பெரும்பாலும் உள்ளாகியிருப்பவர்கள் தமிழர்களே என்பது கண்கூடு.

இவ்வாறு பெருகிவரும் மனித உரிமை மீறல்களைத் தடுத்துக் கட்டுப்படுத்துவதாயின் அத்தகைய வன்முறைகள் குறித்து இலங்கையில் நேரடியாகப் பிரசன்னமாகியிருந்து, கண்காணித்து, விசாரித்து அறிக்கையிடும் அதிகாரத்தோடு ஐ.நா.மனித உரிமைகள் அலுவலகம் ஒன்று இலங்கையில் நிறுவப்பட வேண்டும் என்ற வற்புறுத்தல் சர்வதேச மட்டத்திலிருந்து கிளம்பியிருக்கின்றது. அந்த நிலைப்பாடு சர்வதேச இராஜதந்திர வட்டாரங்களில் தற்போது தீவிரமடையவும் தொடங்கிவிட்டது.
ஐ.நா. மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்புவதன் மூலம், இப்போது இங்கு மோசமடைந்து வரும் சூழ்நிலையை சீர்செய்வதற்குத் தன்னால் உதவ முடியும் என்பதை, உலக நாடுகளில் மனித உரிமை நிலைமை குறித்து ஐ.நாவுக்கு அறிக்கையிடும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் தூதுவர் லூயிஸ் ஆபர் அம்மையார் கடந்த பத்தாம் திகதி மனித உரிமைகள் தினத்தன்று வெளியிட்டார்.

ஆனால் ஐ.நா. மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவை இலங்கையில் அனுமதித்து, தனது அரச நிர்வாகத்தின் கொடூரப் போக்கு வெட்டவெளிச்சமாவதை விரும்பாத இலங்கையின் தற்போதைய அரசு, ஆபர் அம்மையாரின் நல்யோசனையை நிராகரித்துப் புறம் தள்ளி நிற்கிறது.
இந்நிலையில் மேற்படி திட்டத்தை ஏற்று, அங்கீகரித்து, செயற்படுத்தி, அதன் மூலம் இலங்கைத் தீவின் மக்களுக்கு நியாயம் கிடைக்கவும், மோசமான மனித உரிமை மீறல்களுக்குக் காரணமானவர்களின் முகமூடிகளைக் கிழித்து அவர்களை அம்பலப்படுத்தவும் வழிசெய்யுமாறு இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழுத்தம் தரும் விதத்தில் மகஜர் ஒன்றைத் தயாரித்து, அவருக்கு அனுப்பும் பணியில் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றது.

ஆசியப் பிராந்தியத்தில் மனித உரிமை விவகாரங்களைக் கண்காணித்து அதற்காகக் குரல் எழுப்பி வரும் இந்த அமைப்பு கடந்த 23 ஆண்டுகளாகக் ஹொங்கொங்கிலிருந்து செயற்பட்டு வருகின்றது.

இலங்கையில் ஐ.நா. மனித உரிமைகள் கண்காணிப்புக்குழுவை நிறுத்த அனுமதிக்கும்படி கோரும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் திட்டத்துக்கு இணங்குமாறு இலங்கை ஜனாதிபதியை வற்புறுத்தும் மகஜரைத் தயாரித்து, இணையத்தள வலைப்பின்னல் மூலம் சர்வதேசப் பிரமுகர்கள் மற்றும் சாதாரண மக்களின் ஒப்புதலை அந்த வலைப்பின்னல் மூலமே இந்த அமைப்பு பெற்று வருகின்றது.

""இந்தக் கோரிக்கை மனுவில் உங்கள் ஒப்புதலையும் பதிவதன் மூலம், இலங்கையில் அவலமுறும் மக்களின் வாழ்வைப் பிரகாசப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட அந்நாட்டு அதிபரைத் தூண்டுங்கள்! அந்த ஒப்புதலைப் பதிவதன் மூலம் இலங்கை மக்களுக்கு நத்தார் கொண்டாட்டத்தை ஒட்டிய உங்கள் வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள்!'' என்கிறது ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு.

""நல்லிணக்கம், சமாதானம் ஆகியவற்றின் ஊடாகப் புதிய நம்பிக்கை பிறப்பதையே கிறிஸ்தோதயம் குறியீடாக வெளிப்படுத்துகின்றது.
""வரலாற்றுக் கால ஓட்டத்திலே அனைத்துச் சமூகங்களுமே தத்தமது சமூகங்கள் இடையே பெரும் குழப்பங்களையும் சமூக ஒழுங்குச் சீர்குலைவுகளையும் ஏற்படுத்திய வன்முறைகளை எதிர்கொண்டுதான் வந்துள்ளன. ஆனால் இத்தகைய சமூகங்கள் எல்லாம் அக்கால கட்டத்தில் ஏதோ ஒரு வகையில் சமாதானத்தை நிலைநாட்டின என்பதும் அது நல்லிணக்கம் மூலமே சாத்தியமாயிற்று என்பதும் சரித்திரம்.
""வெற்றி மமதையில் அமைந்த முரண்பாடுகளின் பேறாகவே யுத்தமும், பிணக்கும் பிறப்பெடுக்கின்றன.
""ஆனால் எல்லா வெற்றிகளையும் விடவும் மேலானது மனித உயிர்கள் என்ற உண்மை யதார்த்தம் உணரப்படும்போது சமாதானம் உருவாகின்றது.
""இலங்கையில் பிணக்குடன் தொடர்புபட்ட சகல தரப்புகளும் பரஸ்பரம் மறுதரப்பின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு அவற்றைத் தீர்ப்பதற்கான வழிவகைகளைத் தேடுவதை விடுத்து இன்று இராணுவ வெற்றிகளே மேலானவை என்று நம்புகின்றன. இது மனிதப் பேரவலத்துக்கே வழி செய்துள்ளது.

""பொதுவான பிரச்சினைகளை ஏற்று அங்கீகரிக்க மறுக்கும் அடிப்படைப் பண்பியல்பே இந்த வெற்றி மமதைப் போக்கின் ஊற்றுக்கண்.
""இந்த இராணுவ வெற்றி மமதைப் போக்கில் சிக்கியிருக்கும் தரப்புகள் இடையே அத்தரப்புகளின் பிரச்சினைகளைப் புரிந்து அதன் அடிப்படையில் நல்லிணக்க சமரச உடன்பாட்டை ஏற்படுத்துவதாயின் இடையில் நடுநிலைத்தரப்பு அவசியமாகும்'' இப்படிச் சுட்டிக்காட்டுகின்றது ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு.
சமரசத் தீர்வுக்கு அடிப்படையான இதுபோன்ற பல்வேறு ஆழமான அம்சங்களோடு இந்த மனுவை, இந்தப் பண்டிகைக்காலச் செய்தியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைக்க இருக்கின்றது இந்த ஆணைக்குழு.
இராணுவ வெற்றி மமதையில் அமைந்த போர்த் தீவிரத்தில் துடியாய்த் துடிக்கிறது இலங்கை அரசு.

மறுபுறத்தில், போரின் பேரனர்த்தத்தால் தவியாய்த் தவிக்கும் மக்களின் அவலக்குரலாக சர்வதேசத் தரப்புகளின் ஒப்புதலோடு கூடிய இந்த வேண்டுகோள் வருகிறது.
இந்த மக்களினதும், சர்வதேச ரீதியாக இம்மனுவில் ஒப்பமிடுவோரினதும் இந்தக் கருத்தியல் நியாயம் அரசினதும், அரசுத் தலைமையினதும் காதில் விழுமா? காலம்தான் பதில் தரவேண்டும்.

2007-12-29
Uthayan.com

Friday, December 28, 2007

தன்னினத்தைக் காட்டிக் கொடுப்பவனை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது

விடுதலைப் போராட்டம் என்பது பெரும் விலைகொடுத்து நடத்துவது.

மனிதர்களுக்கு அடிப்படைச் சுதந்திரம் உண்டு. அடிப்படை மனித உரிமைகளை அடையவிடாது தடுப்பதும், இடையூறு விளைவிப்பதும் தவறாகும். இந்த வகையில் சகல நாடுகளிலும் ஒரு விதிவிலக்கு உண்டு. எனினும் எல்லா வகையான உரிமைகளையும் ஒவ்வொரு பிரசையும் அடையவும், ஒவ்வொரு பிரசைக்குமான பாதுகாப்பை வழங்கவும் அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது.

எனினும் உரிமைகள் தொடர்பில் பேசுவோர் மிக அதிகமாகவும், கடமைகள் பற்றிப் பேசுவோர் மிகக் குறைந்தோராக வும் காணப்படுகின்றனர். போகிற போக்கில் பேசுவது போல நாட்டு நடப்புகளைப் பேசுவோர் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி விட்டுப் போகின்றனர். சிலர் தமது சொந்த நலன்களை மட்டும் கருத்திற் கொண்டு பேசுவோராக உள்ளனர்.

நன்மை தீமைகளைப்பற்றி இவர்களுக்கு அக்கறையில்லை. என்ன நடக்கிறது என்ற கவனமும் இல்லை. இவர்களது சொந்த இலாபம் மட்டுமே இவர்கள் குறிக்கோளாகிறது.

கருத்துக் கூறவும் அதைக் கேட்கவும் ஒவ்வொருவருக்கும் சுதந்திரம் உண்டு. என்றாலும், அது அமைதி வழியில் கலவரத்தை உண்டுபண்ணாத வகையில் அரசுக்குத் துரோகமிழைக்காத வகையில் இருத்தல் வேண்டும். இவ்வாறுதான் மனித உரிமைகள் சட்டம் கூறுகிறது. இன்று வன்னிப் பெருநிலப்பரப்பு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இப்பகுதி மட்டுமல்ல தமிழீழம் என வரையறுக்கப்பட்டுள்ள பிரதேசங்களிலும் தமிழர்களுக்கே உரிமையுண்டு. எனினும் இப்பகுதிகளை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதி, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி எனப் பிரிக்கப்பட்டுள்ளது.

சிங்கள இராணுவத்தினர் தாம் ஆக்கிரமித்த பகுதிகளில் உள்ள தமிழர்களைத் தனக்கிணைவானவர்களாக மாற்றப் பல சலுகைகளைச் செய்வான். இதில் மிக முக்கியமானது தடை செய்யப்பட்ட பொருட்களை ஏதோ சலுகையாக வழங்குவதும் கண்டும் காணாதது போல் விடுவதுமாகும்.

உண்மையில் சகல மக்களுக்கும் சகல பொருட்களையும் கொள்வனவு செய்ய உரிமை உண்டு. அவற்றைத் தமிழ் மக்களுக்கு மட்டும் தடைசெய்தது அரசாங்கம் தானே.

பின் ஏன் ஏதோ இரக்கப்பட்டோ அன்பாகவோ ஒரு சிலருக்கு அவற்றைத் தரவேண்டும். அவர்களிடமிருந்து எங்கள் விடுதலைப் போராட்டத்தை உடைக்கக்கூடிய தகவல்களைப் பெறுவதற்காகத்தானன்றி வேறென்ன?

அண்மையில் பேருந்து நிலையத்தில் ஒரு பெண் பெருமையாகக் கூறிய ஒரு கதை இது.

'நெடுக நிற்கிற ஆமிய இண்டைக்குக் காணேல்ல, அவனெண்டா என்ன சாமானெண்டாலும் கிண்டமாட்டான். கொண்டு போங்கோ எண்டு சொல்லிப்போடு வான்" இதற்கு மற்றப் பெண் 'சாமான் கூடக் கொண்டுவர சில ஆமி தூக்கிக்கொண்டு வந்து பொயின்ரடியில விடு வினம்" என்றாள்.

எப்படி..? இப்படி அன்பும் ஆதரவும் உள்ள படைதானே பள்ளிப் பிள்ளைகளையும், பொதுமக்களையும் கும்பல் கும்பலாகக் கொன்றொழிக்கிறது. இருப்பிடங்களை விட்டு ஏதிலிகளாக விரட்டியடிக்கிறது. விரட்டி விட்டு தமிழர் நிலங்களில் சிங்களவரைக் குடியேற்றுகிறது.

அவர்கள் யார்? தமிழர்கள் மட்டுந்தானா? உங்கள் தாய் பிள்ளை உறவுகள் இல்லையா? உரிமைகளைத் தாமாகவே தடுத்து வைத்துக்கொண்டு ஒன்றிரண்டு பொருட்களை உங்களுக்கு மட்டும் தருகிறான். நீங்கள் யார்? உங்கள் மீது அவர் களுக்கென்ன அக்கறை. நீங்கள் அவனுக் கென்ன அக்கா தங்கை உறவா? அண்ணன் தம்பியா?

உங்களுடைய இனத்தை அழிக்க உங்களையே கருவியாக்கி உங்களை ஒரு கோடாரிக்காம்பாக மாற்றுகிறான். இதனால் உங்களுக்கு அவனிடம் நற்பெயர் என்று நினைத்தாலும் ஏமாற்றமே. நீங்கள் செய்யும் பணிக்கு உங்களை எள்ளி நகையாடிக் கேவலமானவராகவே அவன் எண்ணுவான்.

இப்படித்தான் வரலாற்றில் தன்னினத்தையே காட்டிக்கொடுத்த எவரையும் தனது கைவேலை முடிந்த பிறகு எதிரி பராமரித்ததில்லை.

கண்டியரசனை ஆங்கிலேயருக்குக் காட்டிக் கொடுத்த எஹலப்பொல என்றவன், அந்த அரசனுடைய மந்திரியாக இருந்தவன். கண்டியரசனைக் காட்டித்தந்தால், கண்டியின் பிரதானியாக நியமிப்பதாக வாக்குறுதியளித்த வெள்ளையர், அவர்களுடைய கையில் கண்டி வந்ததும், முதற் செய்த வேலை எஹலப் பொலவைக் கொன்றதுதான். காரணம் சொந்த இனத்தையே காட்டிக் கொடுத்தவன் எம்மை விட்டுவைப்பானா என்ற அச்சம்தான்.

காக்கை வன்னியனுக்கும் இதே கதிதான் கிடைத்தது. இதைப்போன்றே கட்டப்பொம்மனைக் காட்டிக்கொடுத்த எட்டப்பனுக்கும் நடந்தது.

தன்னினத்தைக் காட்டிக்கொடுக்க முன்வருபவரை எதிரி ஒருபோதும் நேசிக்க மாட்டான். நாய்களைவிடக் கேவலமாகவே நினைப்பான்.

இன்று எமது மக்களைத் தொடர்ச்சியாக யாழ்ப்பாணத் திறந்தவெளிச் சிறையில் வைத்திருப்பதையும், உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாவோர், அடைக்கப்பட்ட சிறையுள் அடைக்கலம் புகுவதையும் பார்த்தால், அவர்களுக்கு வேடிக்கையான விடயம். ஆனால் அந்தத் தமிழர்களுடைய இந்தநிலை ஏனைய தமிழர்களின் மான உணர்வைக் குத்திக் கிழிக்காது போனால் நாம் ஒரு பண்பாட்டு வளர்ச்சி கண்ட இனமாக எம்மைக் கூறிக்கொள்ள முடியாது.

மேலும் நாளாந்தம் தெருநாய்களைப் பிடிப்பது போன்று தமிழர்கள் பிடிக்கப்படுவதும், வீதிகளில் சுடப்படுவதும் நடைபெறுகிறது. இவையனைத்தும் சிங்களப் படைகளே முன்நின்று நடத்துகின்றன என்பதை உலகறியும். நீங்களும் அறிவீர்கள். இன்னும் உங்களது அந்த அன்புக்குரிய இராணுவத்தினன், உங்கள் மீது காட்டுவது பரிவு, பாசம், அன்பு அல்லது அவனது பண்பு என நீங்கள் கருதி அவர்களைப் பற்றிச் சிலாகித்துப் பேசும்போது அவன் உங்களை ஒரு துரோகியாகவே மதிப்பான் என்பதில் சந்தேகமேயில்லை. எங்கே? நீங்கள் முடிந்தால் அவர்களது செயல்களைப் பற்றி அவர்களுடைய கட்டுப்பாட்டுப் பகுதியுள் நின்று பேசிப்பாருங்கள் எப்படி? எங்கட உரிமையைப் பறிக்கிறியள், உயிர்களைக் கொல்லுறியள், பெண்களைப் பாலியல் வல்லுறவு செய்து கொன்றீர்களே.." என்று பேசிப்பாருங்கள் உண்மைதானே. என்ன நடக்கும் இவை பற்றிப் பேசிய, எழுதிய ஊடகவியலாளர்களுக்கும், அரசியலாளர்களுக்கும் என்ன நடந்தது?

மாறாக எமது பரப்பில் போராளிகளின் செயற்பாடுகளின் சரி பிழை என்பவற்றை நெற்றிக்கு நேரே பேசுகிறீர்கள். மறைவாகவும்... போராடிக் களைத்துத் தோழனின் வித்துடல் தாங்கி வந்தால் உங்கள் வெப்பியாரத்தை அவன் மீது கொட்டி ஏசுவீர் அடிப்பீர்? மறுநாளே பந்தி வைத்து அவனுக்கு அவளுக்கு உணவளிப்பீர். கூடிப்பேசுவீர்? வெட்டுவேன் என்று நீங்கள் கிளர்ந்தெழுந்தாலும் உம்மைக் கட்டியணைத்து ஆறுதல் படுத்துவான்(ள்) போராளி ஏன்?

இவ்வளவுக்கும் அவர்கள் ஒவ்வொருவரும் உங்களுக்காகவும் இந்த மண்ணுக்காகவும் தங்களை அர்ப்பணித்து வந்தவர்கள், உங்கள் பிள்ளைகள் இந்த மண்ணின் பிள்ளைகள், அவர்களது வெற்றி உங்கள் வெற்றி. இந்த மண்ணின் வெற்றி அவர்களுக்கும், இந்தப் போராட்டத்துக்குமான இழிவான காட்டிக் கொடுப்புகளால் பாதிக்கப்படப் போகிறவர்கள் யார்? நீங்களும் உங்கள் உறவுகளும் உங்கள் மண்ணும் தான். எனவே உங்கள் வெற்றிக்கு நீங்கள் உழைப்பதை உறுதி செய்யுங்கள்.

-மாயா-

மகிந்தரின் பெருமிதம்

தென்னிலங்கையில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற் றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமது அரசு அண்மைக் காலத்தில் களமுனைகளில் இராணுவ ரீதியாகவும் சர்வதேச மட்டத்தில் இராஜதந்திர ரீதியாகவும் பெரு வெற்றிகளை ஈட்டி யிருப்பதாகத் தெரிவித்துப் பெருமிதம் கொண்டிருக்கின்றார்.

கிழக்கில் நிலப்பரப்புகளை விடுதலைப் புலிகள் வசம் இருந்து மீட்டமையையும், சர்வதேச மட்டத்தில் தமது யுத்த வரவு செலவுத்திட்டத்துக்கு பெருமளவு நிதியைப் பெற் றுக்கொண்டமையையும் இத்தகைய பெரும் சாதனையாக அவர் வெளிப்படுத்தியிருக்கின்றார்.
முன்னைய அரசுகளால் ஒரு வருடத்துக்கு ஆகக் கூடி யது எண்பது கோடி அமெரிக்க டொலர்களையே நிதி உதவி யாகப் பெற முடிந்தது என்றும், ஆனால் தமது அரசு ஒரு வரு டத்தில் நூற்றியிருபது கோடி அமெரிக்க டொலரை (சுமார் பதின் மூவாயிரத்து ஐந்நூறு கோடி ரூபாவை) உதவியாகப் பெற முடிந்திருக்கின்றது என்றும் அவர் பீற்றியிருக்கின்றார்.
வழமையாக இலங்கைக்கு உதவிவரும் ஜப்பானும் மற் றும் மஹிந்தரின் அரசின் புதிய நட்பு அணிகளான சீனாவும், பாகிஸ்தானும், ஈரானும் சேர்ந்து மஹிந்தர் அரசின் போர் வெறிப் போக்கையும் மிக மோசமான மனித உரிமை மீறல் செயற்பாடுகளையும் கண்டுகொள்ளாமல் ஒதுக்கியபடி கண்ணை மூடிக்கொண்டு உதவ முன்வந்தமையைத் தமது அரசுக்கு சர்வதேச மட்டத்தில் கிடைத்த பெரு வெற்றிகளா கக் கருதி நீட்டோலை படிக்கின்றார் ஜனாதிபதி மஹிந்தர்.

இவ்வாறு தமது போர் முனைப்புப் போக்குக்கு உந்துதல் அளிக்கும் வகையில் இந்த நாடுகளில் இருந்து தமது அர சுக்கு பெருவாரியாக உதவி கிடைப்பதை தனது அரசுக்கான சர்வதேச ஆதரவாகவும் அவர் அர்த்தப்படுத்துகிறார். இந்த நிதி உதவியை சான்றாக முன்னிறுத்தி, தமது அரசுக்கு சர்வதேச ஆதரவு இல்லை என்போரை எள்ளி நகையாடவும் அவர் தவறவில்லை.
தமது அரசின் கொடூரப் போர்முனைப்புப் போக்குக்கும், அமைதி முயற்சிகளை சீரழித்து, நிரந்தர சமாதானத்துக்கான வாய்ப்புகளை நிர்மூலமாக்கி, இனச்சிக்கலை மேலும் மோசமாக்கும் எத்தனத்துக்கும், பாரதூரமான மனித உரிமை மீறல் அராஜகத்துக்கும் எதிராக சர்வதேச சமூகம் குறிப்பாக மேற்குலகம் ஒன்று திரண்டு வருகின்ற யதார்த்தத்தை மறந்து, தமது அரசுக்கு சர்வதேச ஆதரவு அதிகரித்திருப்ப தாக அவர் அர்த்தம் பண்ணுகின்றார். முன்னைய அரசு களுக்கு இல்லாத சர்வதேச ஒத்துழைப்பும் வரவேற்பும் தமது தற்போதைய அரசுக்குக் கிட்டியிருப்பதாக அவர் புளகாங் கிதம் அடைகிறார்.

ஜப்பான் மற்றும் சீனா, பாகிஸ்தான், ஈரான் போன்றவை இலங்கை அரசின் போரியல் தீவிரத்துக்கு எண்ணெய் வார்க்க முன்வந்திருப்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் மஹிந்தரின் அரசின் இந்தச் செயற்போக்குக்குஎதிராக மேற் குலகம் முறுகி வருகையில், அதை மூடி மறைத்து, அதன் விபரீத விளைவுகளைப் பற்றியே சிந்திக்காமல், சர்வதேச மட்டத்தில் தமது அரசு படைத்துள்ள சாதனைகள் ஒப்புயர்வற்றவை என்று அரசுத் தலைவர் தமது அரசுக்குத் தாமே முடி சூடிக்கொள்வது எள்ளளவும் பொருத்தமற்றது.

மேற்குலக நாடுகள் இதுவரை தமிழீழ விடுதலைப் புலி களின் செயற்பாடுகளை "பயங்கரவாதமாக'அர்த்தம் பண்ணி, பல தடைகளை விதித்து, நெருக்குவாரங்களைக் கொடுத்து, கட்டுப்பாடுகளைப் போட்டு, புலிகளை இறுக்கி வந்தன என்பதும் உண்மைதான். ஆனால் அந்த இறுக்கமான செயற் போக்கை அவை மஹிந்தரின் அரசுப் பக்கமும் மெல்லத் திருப்பத் தொடங்கிவிட்டன என்பது மறுக்கமுடியாத உண்மை. இலங்கை ஓர் அங்கீகரிக்கப்பட்ட இறைமையுள்ள சக நாடு என்பதும், மஹிந்தரின் நிர்வாகம் அந்த நாட்டின் சட்டபூர்வ அரசு என்ற அந்தஸ்துடையது என்பதும் இலங்கை தொடர் பான மேற்கு நாடுகளின் செயற்பாடுகள் வெளிப்படையாக அமையாமல் இருப்பதற்கான காரணங்களாக இருக்கலாம். ஆனால் அதைத் தமக்குச் சாதகமாகக் கருதிக்கொண்டு சர்வதேச மட்டத்தில் தமது அரசுக்கு எதிராகத் திரண்டுவரும் அழுத்தமான கருத்தியல் நிலைப்பாட்டை மூடிமறைத்துக்கொண்டு தமது போரியல் போக்குக்கு ஒரு சில நாடுகளில் இருந்து கிடைக்கும் உதவிகளை மட்டும் முன்னிறுத்தி இராஜதந்திர சாதனைகளைப் படைத்து விட்டமைபோல அரசுத் தலைவர் மகிழ்வதில் அர்த்தமில்லை.

அவரது அரசின் யுத்த சந்நதம் தொடர்பாக மேற்குலகு கொண்டுள்ள அதிருப்தியும், விசனமும், எரிச்சலும் இராஜ தந்திரத் தொடர்பாடல்களில் மென்மையான கண்டனங் களைத் தாண்டி, செயல் வடிவ நடவடிக்கைகளாக மாறும் போதுதான் அவற்றின் ஆழத்தை அரசுத் தலைவர் புரிந்து கொள்வார் போலும்.

அது போன்றதுதான் இராணுவ ரீதியான வெற்றிகளும். ""ஈழப்போர் இப்போது நான்காவது கட்டத்தை எட்டிவிட் டது.'' இவற்றுக்கு மத்தியில் இராணுவ வலுச் சமநிலை என்ற ஊஞ்சல் மாறி, மாறி அசைந்ததை யாரும் மறந்துவிட முடியாது.

புலிகளின் பலம் மிக்க யாழ். குடாநாட்டுக் கோட்டையை அவர்களிடமிருந்து கைப்பற்றி, அவர்களை வன்னிக்குத் துரத்தியடித்து, "ஜெயசிக்குறு' படை நடவடிக்கை மூலம் வன்னியையும் கிழக்கு, மேற்காக துண்டுபடுத்தும் பெரும் இராணுவ நகர்வை பெரும்பாலும் பூர்த்தியடையும் அள வுக்கு முன்னெடுத்த நிலையில்தான் ""புலிகளில் தொண் ணூற்று ஆறு வீதமானோரை அழித்துவிட்டோம். எஞ்சிய நான்கு வீதமானோரையும் விரைவில் பூண்டோடு அழிப் போம்!'' எனச் சூளுரைத்தார் அப்போதைய பிரதிப் பாது காப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தை. ஆனால் அதன் பின் னர்தான் "ஜெயசிக்குறு' நிர்மூலமாகி, ஆனையிறவு கூட்டுப் படைத்தளம் தகர்ந்து, "அக்னிகோள' எத்தனம் புஸ்வாணமாகி, இராணுவ வலுச்சமநிலை ஊசல் புலிகள் பக்கம் சாய்ந்தது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இப்போது தமது அரசின தும் படைகளினதும் இராணுவ வெற்றிகள் என மார்தட்டும் சாதனைகள் கூட இத்தகைய ரகத்துக்குள் அமைந்தவைதான். அரசுப் படைகள் இப்போது முழுமையாக விடுவித்த கிழக் கின் வெற்றிகூட, இப்படிப் பல தடவைகள் கைமாறியதும் உண்டு.

எனவே, சர்வதேச ரீதியிலும், களமுனை யுத்தத்திலும் தாம் ஈட்டியுள்ள சாதனைகள் என ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ பெருமிதம் கொள்ளும் பெறுபேறுகள் அவரது தரப் புக்கு சாசுவதமானவையாக என்பதும் அவரது பக்கத்திலேயே நின்று நிலைத்திருக்குமா என்பதும் கேள்விக்குறியே. அதற் குக் காலம்தான் பதில் கூறவேண்டும்.
Uthayan,com

Thursday, December 27, 2007

'நாசூக்கான(?) செயற்திட்டங்கள்!"

மகிந்த ராஜபக்சவின் சிங்கள - பௌத்தப் பேரினவாத அரசு, ஒருபுறம் தமிழின அழிப்பைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதோடு, மறுபுறம் 'சமாதானத் தீர்வ' என்றும் பேசிக்கொண்டு வருகின்றது. மகிந்தவின் முன்னோடிகளான முன்னைய சிங்களத் தலைவர்களும் இதே பாணியைத்தான் கடைப்பிடித்து வந்திருக்கின்றார்கள். சுதந்திரத் தமிழீழம் மலரும் வரைக்கும், சிங்கள-பௌத்தப் பேரினவாதம் தன்னுடைய இந்தப் ப(பா)ணியைக் கைவிடப் போவதில்லை என்பதே உண்மையுமாகும்!

'தமிழீழப் பிரதேசங்கள் யாவற்றையும், இராணுவ நடவடிக்கைகள் மூலம் முழுமையாகக் கைப்பற்றுவோம்' - என்று மகிந்தவின் அரசு, அண்மைக் காலமாகப் பெரிதாக முழங்கி வருகின்றது. அதேவேளை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் மூலம், தமிழ் மக்களின் பிரச்சனைக்கு ஷஅரசியல் தீர்வு| ஒன்றைக் காணப் போகின்றோம் என்றும் மகிந்தவின் அரசு கதையளந்து வருகின்றது. இன்று தமிழீழ விடுதலைப் போராட்டம் சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ள நிலையில், உலக நாடுகளும் ஷஅரசியல் தீர்வு| குறித்துப் பேசி வருகின்றன.

சிறிலங்காவின் எந்தச் சிங்கள அரசும், தமிழீழ மக்களுக்கு ஒரு நீதியான, நியாயமான, நிரந்தரமான, கௌரவமான அரசியல் தீர்வைத் தரப்போவதில்லை என்ற பட்டறிவு தமிழீழ மக்களுக்கு உண்டு. சரியாகச் சொல்லப்போனால், சர்வதேசமும் இதனை நன்குணர்ந்துதான் உள்ளது. ஆனாலும், சிறிலங்கா அரசிற்கு முறையான அழுத்தங்களைச் செயல்வடிவம் மூலம் பிரயோகிக்காமல், வெறுமனே வார்த்தைகளை மட்டும் சர்வதேசம் உதிர்த்து வருகின்றது. சிங்கள-பௌத்தப் பேரினவாத அரசிற்கு எந்தவித அழுத்தங்களையும் பிரயோகிக்காத சர்வதேசம், தமிழீழ மக்களின் பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மட்டும் தேவையற்ற அழுத்தங்களையும், தடைகளையும் பிரயோகித்து வருகின்றது.

இவை யாவற்றிற்கும் அப்பாற்பட்டு, தமிழீழ மக்களின் நியாயமான போராட்டத்தை, 'நாசூக்காக' ஒடுக்குகின்ற முயற்சியிலும், இன்று சர்வதேசம் இறங்கியிருப்பதாக நாம் சந்தேகப்படுகின்றோம்.

இந்த மிக முக்கியமான விடயத்தைச் சற்று ஆழமாகக் கவனித்துச் சில கருத்துக்களை முன் வைக்க விழைகின்றோம்.

தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் கடந்த மாவீரர் தின உரையின்போது பல விடயங்களைச் சுட்டிக் காட்டித் தெளிவுபடுத்தியிருந்தார். கடந்த அறுபது ஆண்டுக் காலத்தில் சிங்களத் தலைமைகள், தமிழர் தரப்புடன் செய்து கொண்ட தீர்வு ஒப்பந்தங்கள் எதுவும், தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்க்;காத ஒப்பந்தங்கள் என்பதையும், அந்த அரைகுறை ஒப்பந்தங்களைக்கூடச் சிங்கள அரசுகள் நிறைவேற்றவில்லை என்பதையும் தேசியத் தலைவர் சுட்டிக்காட்டியிருந்தார். அத்தோடு, இந்தியா தனது தெற்கு நோக்கிய வல்லாதிக்;க விரிவாக்கமாகத் தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சனையில் தலையீடு செய்து, தமிழ் மக்களின் சம்மதமோ, ஒப்புதலோ இன்றிச் சிங்கள அரசுடன் செய்து கொண்ட அரைகுறைத் தீர்வைக் கூடச் செயற்படுத்துவதற்குச் சிங்களப் பேரினவாதம் அனுமதிக்கவில்லை என்பதையும் தேசியத் தலைவர் விளக்கியிருந்தார். இவற்றோடு சேர்த்து இன்னுமொரு முக்கிய விடயத்தையும் தலைவர் சுட்டிக் காட்டித் தெளிவுபடுத்தியிருந்தார். அதாவது, அன்று இந்தியா இழைத்த தவறை, இன்று சர்வதேசமும் இழைத்து நிற்பதை விளக்கிய தேசியத் தலைவர், இதன் காரணமாகச் சர்வதேசத்தின் மீது தமிழ் மக்கள் வைத்திருந்த நம்பிககையும் இன்று தகர்ந்து போயிருக்கின்றது என்பதையும் குறிப்பிட்டிருந்தார்.

அத்தோடு 'சிங்கள தேசத்தின் அரசியல் கட்சிகள் யாவும் அடிப்படையில் தமிழின விரோதப் பேரினவாதக் கட்சிகள் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கையில், இந்த இனவாதக் கட்சிகளிடமிருந்து எவரும் தீர்வை எதிர்பார்த்தால், அது அரசியல் அசட்டுத்தனமேயன்றி வேறொன்றுமன்று!' என்றும் தேசியத் தலைவர் தெரிவித்திருந்தார்.

அதாவது சிங்களப் பேரினவாத அரசுகளோடு, போடப்படுகின்ற ஒன்றுக்கும் உதவாத ஒப்பந்தங்களைக்கூட சிங்களப் பேரினவாதம் தூக்கி எறியும் என்பதையும், அந்த அரைகுறை ஒப்பந்தங்கள் தமிழர் தரப்போடு போடப்பட்டிருந்தாலும் சரி, இந்தியா போன்ற பிராந்திய வல்லரசோடு போடப்பட்டிருந்தாலும் சரி, அவற்றைச் சிங்களப் பேரினவாதம் தூக்கி எறியத் தயங்காது என்பதையும் தமிழீழத் தேசியத் தலைவர் தெளிவுபடுத்தியிருந்தார்.

இதன்மூலம், 'இதய சுத்தியாக, நேர்மையாக நடக்கும் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதற்குத் தமிழர் தரப்புத் தயார். ஆனால் இராணுவ அடக்குமுறை என்ற அணுகுமுறை மூலம், தமிழின அழிப்புப் போரை நடாத்தி வருகின்ற மகிந்த ராஜபக்ச போன்ற அரசுகளுடன் பேசுவதனால் பலனில்லை' என்ற நிலைப்பாட்டைத் தேசியத் தலைவர் வெளிப்படுத்தியிருந்தார்.

தமிழீழத் தேசியத் தலைவரின் தெளிவான நிலைப்பாட்டைத் தெரிவித்திருந்த அவரது மாவீரர் தின உரையை அடுத்து, சிங்கள தேசமும், சில உலக நாடுகளும் திரைமறைவில், சில 'நாசூக்கான செயற் திட்டங்களை' மேற்கொண்டு, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதாக நாம் அறிகின்றோம்.

இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்திய- இலங்கை ஒப்பந்தத்தைத் தூசு தட்டும் வேலையைச் செய்யச் சிலர் ஆரம்பித்துள்ளார்கள். இந்திய-இலங்கை ஒப்பந்தம் என்பதானது, தமிழர்களின் பிரச்சனையைத் தீர்க்கக் கூடிய அரு மருந்து என்றும், அந்த அரிய வாய்ப்பைத் தமிழீழ விடுதலைப் புலிகள் தவறவிட்டு விட்டார்கள் என்றும் ஒரு சாரார் பரப்புரை செய்யத் தொடங்கியுள்ளார்கள். இந்திய-இலங்கை ஒப்பந்தம் இன்று கிடப்பில் போடப்பட்டு, வடக்கு-கிழக்கு மாகாணங்களின் இணைப்பு, சட்ட விரோதமானது என்று சிறிலங்காவின் நீதித்துறை அறிவித்த பின்னரும் கூட, இவர்கள் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தைத் தூக்கிப் பிடிப்பதன் காரணம் என்ன?

'தமிழீழ விடுதலைப் புலிகள், அமைதி வழியில், அரசியல் இலக்குகளை அடையும் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை' என்ற பொய்ப் பரப்புரையைப் பரப்பி, அதன் மூலம், தமிழீழ விடுதலைப் புலிகளைப் போரில் வெற்றி கொள்வதன் மூலமே, இலங்கைத் தீவில் சமாதானத்தைக் கொண்டு வரலாம் என்ற கருத்துருவாக்கத்தைத் திணிப்பதுதான், இவர்களுடைய உள் நோக்கமாக உள்ளது.

இந்தக் கருத்துருவாக்கத்தைப் பாரிய அளவில் பரப்புரை செய்து, அதனூடாக, தமிழ் மக்கள் மீதான போரை நியாயப்படுத்துவதற்காக, ஒன்றுக்கும் உதவாமல் போன ஒப்பந்தங்ளைச் சிலர் தூக்கித் திரிய ஆரம்பித்துள்ளார்கள்.

இது அவர்களுடைய முதல் கட்டத் திட்டமாகும்!

தமிழீழ விடுதலைப் புலிகளைப் போரில் வெல்கின்ற அதேவேளை, இந்தப் போரின் ஊடாகத் தமிழ் மக்களின் வாழ்வை அவல நிலைக்குத் தள்ளி, அவர்களைக் கையறு நிலைக்குக் கொண்டு வருவது, இந்தச் சிலரின் திட்டமாக இருக்கின்றது. தமிழர்களைக் கையறு நிலைக்கு கொண்டு வருவதன் மூலம், அவர்கள் மீது, ஓர் அரைகுறைத் தீர்வுத் திட்டத்தைத் திணிப்பதுதான் இவர்களது எண்ணமாகும்.

இது அவர்களுடைய இரண்டாவது கட்டத் திட்டமாகும்!

இந்த ஒன்றுக்கும் உதவாத அரைகுறைத் திட்டத்தைத் தமிழர்கள் சார்பில் ஏற்றுக் கொள்வதற்கென்று ஒரு கூட்டத்தை உருவாக்கி வைக்க வேண்டும். அதற்காக 'மிதவாதத் தமிழர்கள்' என்ற பெயரில் தமிழ்த் துரோகிகளை ஒன்றிணைத்து, அவர்களிடம் இந்தத் தீர்வுத் திட்டத்தைக் கொடுத்து, அவர்களது ஒப்புதலைப் பெற்று, தமிழர்களின் தேசியப் பிரச்சனை தீர்க்கப்பட்டது என்று அறிவிப்பதாகும்.

இது அவர்களுடைய மூன்றாவது கட்டத் திட்டமாகும்!

இதனடிப்படையில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் மூலம் ஓர் அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கும் முயற்சியானது, மீண்டும் முடுக்கி விடப்பட்டுள்ளது. ஒற்றையாட்சி, சமஷ்டி ஆட்சி, அதிகாரப் பகிர்வு, அதிகாரப் பரவலாக்கல் என்ற எத்தனையோ சொல்லாடல்களுக்கு 'அப்பால்', 'மிதவாதியான' டக்ளஸ் தேவானந்தா, இந்தத் தீர்வுத் திட்டத்தின் மூலம், தான் வட-கிழக்குப் பகுதிகளின் முதல்வராகப் பதவியேற்க வேண்டும் என்று தன் ஆசையையும் வெளியிட்டுள்ளார். கிட்டத்தட்ட 55 தடவைகள் கூடி ஆலோசனைகளை நடாத்தியிருக்கின்ற இந்த அனைத்துக் கட்சிக்குழு, இப்போது ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்து, அந்த நாடுகளின் அரசியல் யாப்புக்களையும் ஆராயப் போவதாக அறியப்படுகின்றது. இவையெல்லாம் வெறும் கண்துடைப்புக்களேயாகும்!

சிங்கள பௌத்தப் பேரினவாதத்தின் மேலாண்மையை நிலைநிறுத்தி, தமிழ் மக்களை ஒடுக்க வேண்டுமென்றால், முதலில் தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும். அல்லது குறைந்த பட்சம் தமிழீழ விடுதலைப் புலிகளை ஓரம் கட்ட வேண்டும். இந்த இரண்டு விடயங்களில் ஒன்றையாவது செய்து விடவேண்டும் என்ற துடிப்பில் சிங்கள தேசம் முனைப்பாக நிற்கின்றது. அதற்குச் சர்வதேசம் தொடர்ந்தும் உதவி வருகின்றது.

இன்று உலகில், எத்தனையோ நாடுகள் விடுதலையடைந்து வருகின்றன. இன்று விடுதலையாகும் நாடுகளுடைய விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகப் பல நாடுகள் செயற்பட்டிருக்க்pன்றன. ஆனால் உலக நாடுகளின் இந்த எதிர்வினைகளுக்கு அப்பால், இன்று இந்த நாடுகள் சுதந்திரம் அடைந்து வருவதைப் பார்க்கின்றோம். ஒப்பீட்டளவில் தமிழினம், இந்த நாட்டு மக்களையும் விடத் தொன்மையான இனமாகும். ஓப்பீட்டளவில், விடுதலைப் போராட்டத்தில் மாபெரும் சாதனைகளைப் படைத்து, புதிய பரிமாணங்களைக் கண்ட இயக்கம், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமாகும். காலத்தின் கொடையாகத் தமிழீழ மக்களுக்குக் கிடைத்திட்ட தலைவன்தான் எங்களுடைய தலைவனாவான்! நாளைய வரலாற்றில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வெற்றி, புதிய பாடமாக வைக்கப்;படும் என்பதில் சந்தேகமில்லை.

வரலாற்று முக்கியத்துவம் மிக்க இந்தக் காலகட்டத்தில் வாழுகின்ற புலம் பெயர் வாழ் தமிழர்களாகிய எம்மிடம், மலையையும் புரட்டக்கூடிய மகத்தான சக்தி உண்டு. எமது தேசியத் தலைவர் கேட்டுக்கொண்டபடி, புலம்பெயர் வாழ் தமிழர்களாகிய நாம் உணர்வெழுச்சியுடன் கிளர்ந்தெழுந்தால், தமிழீழ விடுதலைப் போராட்டம் விரைவிலேயே வெற்றி பெறும். சர்வதேசமும், சிங்களமும் ஷநாசூக்காகவும், வெளிப்படையாகவும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குகின்ற செயற்பாடுகளில் இறங்கியிருக்கின்ற இவ்வேளையில் நாம் மனம் வைத்தால், எமது மக்களின் விடுதலைப் போராட்டம், புதிய பரிமாணங்களை அடைந்து விரைவில் வெற்றி பெறுவது உறுதியாகும். நமக்குள்ளேயே இந்த உலகம் இருப்பதையும் நாம் உணர்வோமாக! தமிழீழ விடுதலைப் பேராட்டத்திற்கு எதிராகத் தீட்டப்படும் பரப்புரைகளையும் திட்டங்களையும் முறியடிப்பதற்குரிய பலமும், அறிவும் புலம்பெயர் வாழ் தமிழர்களுக்கு உண்டு. அவற்றிற்குச் செயலுருவம் கொடுப்பதற்காக, நாம் யாவரும் முழுமையாக ஒருங்கிணைவோம்! செயல்படுவோம்!!.

-சபேசன் (அவுஸ்திரேலியா)-

ஆழிப்பேரலைப் பாதிப்பு நிவாரணத்திலும் பாகுபாடு

தெற்காசிய நாடுகளை ஊழிக்கூத்தாய்ப் போட்டுப் புரட்டி எடுத்து, பெருநாசம் விளைவித்து, பல்லாயிரக் கணக்கானோ ரின் உயிர்களைக் குடித்த ஆழிப்பேரலை அனர்த்தத்தின் மூன் றாவது ஆண்டு நிறைவை நேற்று அனுஷ்டித்தோம்.

இலங்கைத் தீவில் சுமார் நாற்பதாயிரம் பேரின் உயிரைக் காவுகொண்ட இந்தக் கொடூரத்தின் குரூர விளைவுகளிலிருந் தும் நினைவுகளிலிருந்தும் இலங்கை மக்கள் இன்னும் மீளவே யில்லை.
அந்தப் பேரனர்த்தத்தின் நினைவழியா இந்நாள்களில்தான் வெள்ளப் பேரனர்த்தமும் பல்வேறு இடங்களில் தாக்கியிருக்கி ன்றது.

ஆழிப்பேரலை ஏற்படுத்திய அழிவும், நாசமும், கோரமும், அவலமும் ஒருபுறம் என்றால் மறுபுறம் அப் பேரழிவில் பாதிக்கப்பட்டோருக்கு புனர்வாழ்வு, மீள் கட்டமைப்பு என்ற பெயரில் அரங்கேறிய அட்டூழியங்களும் அவலட்சணங்களும் ஏற்படுத் தியிருக்கும் அதிருப்தியும், அவலமும் சொல்லில் அடங்காதவை.

வாழ்வாதார உரிமைகளை வழங்குவதிலாகட்டும் அபிவிருத்தி, புனரமைப்புப் பணிகளிலாகட்டும் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர் தாயகப் பிரதேசத்தைப் புறக்கணித்துப் பாகுபாடு காட்டி, ஒதுக்கும் கொழும்பு அரச நிர்வாகம், ஆழிப்பேரலைப் பாதிப்பு நிவாரண வேலைகளிலும் அந்தக் கைங்கரியத்தைக் கைவிடவேயில்லை என்பதே கவலைக் குரிய விடயமாகும்.
இலங்கைத் தீவைப் பொறுத்தவரை ஆழிப்பேரலை அனர்த்தத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் வடக்கும், கிழக்கும்தான். இலங்கையில் சுமார் எழுபத்தியைந்து வீதமான பாதிப்பு தமிழ் பேசும் மக்களான தமிழர்களுக்கும் முஸ்லிம் களுக்கும்தான். ஆனால் ஆழிப்பேரலைப் பாதிப்பு மீள்கட்ட மைப்புப் பணிகளில் பெரும்பகுதி தென்னிலங்கைச் சிங்களப் பிரதேசங்களுக்குத்தான் கிடைத்திருக்கின்றன.

வடக்கிலும், கிழக்கிலும் ஆழிப்பேரலையால் பாதிக்கப் பட்ட பல்லாயிரம் குடும்பங்கள் இன்னும் மரங்களின் கீழும், தற்காலிகமாக அமைக்கப்பட்ட தகரக் கொட்டகைகளிலும், நலன்புரி மையங்கள் என்ற பெயரில் அமைந்த அகதி முகாம் களிலும் தங்கியிருந்து அல்லல்படுகின்றன. தற்போதைய மழை வெள்ளம் அவர்களது வாழ்க்கையை மேலும் பேர வலத்தில் ஆழ்த்தியிருக்கின்றது.

ஆனால் தென்னிலங்கையிலோ குறிப்பாக இலங்கைத் தீவின் அரசுத் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அம்பாந்தோட்டை மற்றும் காலி, களுத்துறை போன்ற மாவட் டங்களிலோ ஆழிப்பேரலை அனர்த்தத்தால் அழிந்து போன வீடுகளின் எண்ணிக்கையிலும் பார்க்க ஆயிரக்கணக்கில் அதிகமான வீடுகள் ஆழிப்பேரலைப் பாதிப்பு மீள் கட்டமைப்பு என்ற பெயரில் கட்டப்பட்டிருக்கின்றன. தேவைக்கும் அதிக மான வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங் களில் பாதிப்புற்று அழிந்த வீடுகளின் எண்ணிக்கையில் அரைவாசி அளவிற்காவது புதிய வீடுகள் கட்டப்படவில்லை.
ஆக, மொத்தத்தில் ஆழிப்பேரலை அனர்த்த மீள்கட்டமைப்புப் பணிகளில் கூட நிவாரணச் செயற்பாடுகளில் கூட வடக்கும், கிழக்கும் தென்னிலங்கை அரசால் பாகுபாடு காட்டப்பட்டுப் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன.

மக்களின் சகல வாழ்வியல் அம்சங்களிலும் சிறுபான் மையினருக்கு எதிரான இத்தகைய இனப்பாகுபாட்டுப் புறக்க ணிப்பையும் ஒடுக்குமுறையையும் பேரினவாதிகள் காட்டிவரு கின்றமையினாலேயே ஆழிப்பேரலை அனர்த்த நிவாரணப் பணிகளையாவது சமச்சீராக முன்னெடுப்பதை நோக்காகக் கொண்டு சகல தரப்புகளையும் உள்ளடக்கிய ஒரு பொதுக்கட் டமைப்பு ஊடாக அப்பணிகளை மேற்கொள்ளச் செய்வதற் கான முயற்சிகள் அப்போது மேற்பொள்ளப்பட்டன. நீண்ட ஆறுமாத கால இழுபறிக்குப்பின் அதற்கான உடன்பாடு எட்டப் பட்டு, ஒப்பந்தமும் கைச்சாத்தானது.

ஆனால் நிஜங்களின் யதார்த்தங்களை உள்வாங்கி, அதற்கேற்ப வளைந்து கொடுக்கும் திராணி அற்ற வகையில், இரும் புச் சட்டமாக வார்த்தெடுக்கப்பட்டிருக்கும் இலங்கையின் நீதித்துறையும், அதன் முன் இந்த விவகாரத்தை இழுத்துச் சென்ற மேலாண்மைவாத பௌத்த சிங்களப் பேரினவாத சக்திகளும் சேர்ந்து அந்தப் பொதுக்கட்டமைப்பு முயற்சியை ஆழிப்பேரலைக்குள் அமுக்கி அடியோடு அடக்கிவிட்டன.

அதன் விளைவாகவும்
ஆழிப்பேரலை மீள் கட்டுமானத்துக்காகத் தான் வழங்கி வரும் பெருமளவு நிதி உரிய வழிகளில், உரிய நியாயத்துடன் பகிர்ந்தளித்து செலவிடப்படுகின்றதா என்பதை உற்று நோக்கி அவதானிப்பதில் சர்வதேச சமூகம் தவறியதாலும்
இவ்வாறு பிரதேச முரண்பாட்டு நோக்கில் மீள் கட்ட மைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன; தொடர்ந் தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆழிப்பேரலை அனர்த்த நிவாரண மற்றும் மீள் கட்ட மைப்புப் பணிகளில் பெரும் குளறுபடிகளும், ஊழல்களும், மோசடிகளும் இடம்பெற்றிருக்கின்றமை பற்றிய தகவல்களும் கசிந்து வருகின்றன.

ஆழிப்பேரலை அனர்த்த நிவாரணத்துக்காக வந்த பணம் "ஹெல்பிங் அம்பாந்தோட்டை' திட்டம் என்ற பெயரில் தனியாரின் கணக்குக்கு மாறிய விவகாரம் நீதிமன்றத் தீர்ப்பினால் அமுங்கிப் போனாலும் அதில் உள்ள சூக்குமங்கள் மக்கள் மனங்களில் அடங்கிப்போய் விடவில்லை.
அவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சக்திகளின் கைகளில் தான் இன்று நாட்டின் அதிகாரம். அந்த அதிகார ஆட்சியின் கீழ் இடம் பெறும் ஊழல், மோசடி அவலங்கள் குறித்து சந்தி சிரிக்கின்றது.
ஆழிப்பேரலை நிவாரண, மீள்கட்டுமானப் பணிகளில் என்றில்லை, நாட்டின் ஒவ்வொரு செயற்பாட்டிலும் ஊழலும், மோசடியும்,லஞ்சமும் தலைவிரித்தாடுவதால் அது ஆழிப் பேரலை நிவாரண, மீள்கட்டுமானப் பணிகளையும் பற்றிப் பீடித்து ஓர் உலுக்கு உலுக்கி வருகின்றது.
ஆழிப்பேரலையால் பாதிப்புற்றோருக்கு வழங்க சுமார் 98 ஆயிரம் வீடுகள் வரை தேவை என்றும் அதில் சுமார் 97 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு விட்டன என்றும் சில தினங்களுக்கு முன்னர் இலங்கை அரசு வெளியிட்ட புள்ளி விவரம் அப்பட்டமான பொய் என்று "டிரான்ஸ் பரன்ஸி இன்ரநஷனல்' எனப்படும் வெளிப்படையான செயற்பாட்டுக்கான சர்வதேச மையம் சுட்டிக்காட்டியிருக்கின்றது.

ஆழிப்பேரலை நிவாரணப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் சுமார் ஐயாயிரம் கோடி ரூபாவரை மாயமாக மறைந்துவிட்டது அல்லது சுளையாக விழுங்கப்பட்டுவிட்டது என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இவ்வாறு ஆழிப்பேரலை அனர்த்த நிவாரணப் பணிகள் இன, பிரதேச பாகுபாட்டு அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமைக்கும், அப்பணிகளில் பெருமளவு ஊழல் மோசடிகள் இடம்பெறுகின்றமைக்கும் இவ்விவகாரத்தை ஊன்றிக் கவ னித்துக் கண்காணிக்கும் தனது தலையாய பொறுப்பில் சர்வ தேசம் அசிரத்தையாக விட்டேத்தியாக கடமை தவறி செயற்பட்டமையும் பிரதான காரணங்களுள் ஒன்றாகும்.

Uthayan.com

Wednesday, December 26, 2007

உயர்நீதிமன்றத்தின் உத்தரவு தமிழர் தாயகத்தில் செல்லாதா?

""நீதி நிலைநாட்டப்படுவது மாத்திரமின்றி நிலைநாட்டப்படுவது போலக் காட்டப்படவும் வேண்டும்.'' என்பது நீதித்துறையின் உயர் வாசகமாகும்.
ஆனால், இலங்கை நீதித்துறையைப் பொறுத்தவரை இத்தீவின் சிறுபான்மையினரான தமிழருக்கு அதன் நியாயமான அரவணைப்பு எட்டாக்கனியோ என்ற அங்கலாய்ப்புத்தான் அம்மக்களுக்கு உள்ளது.

பெரும்பான்மையினரான சிங்களவர்களின் நலனை மட்டும் முன்னிறுத்தி, அவர்களின் ஏகபோக அரசியல் அதிகாரச் செல்வாக்கை உறுதிப்படுத்தும் விதத்தில் இறுக்கமான இரும்புச்சட்டப் பெட்டகம் போல அமைந்திருக்கின்றது இலங்கை அரசமைப்பும் அதன் சட்டங்களும்.
தமிழர் தரப்பின் இசைவின்றி இணக்கமின்றி பெரும்பான்மைச் சிங்களவர்களின் தன்னிச்சை முடிவாக உருவாக்கப்பட்ட இந்த அரசமைப்பு தமிழ் இனத்தின் மீது அதன் தலைவிதியாகப் பலவந்தமாகத் திணிக்கப்பட்டிருக்கின்றது.

சிறிதும் நெகிழ்த்தவோ, விலத்தவோ, அரக்கவோ இடமளியாமல் நட்ட நெடுமரம் போல இறுகிக் கிடக்கும் இந்த அரசமைப்பு சிறுபான்மையினரான தமிழர்களின் உரிமையை உறுதிப்படுத்துவதற்கான அடிப்படை ஏற்பாடுகளைக் கூடக் கொண்டிருக்கவில்லை.
1972 இற்கு முந்திய அரசமைப்பில் சிறுபான்மையினரின் நலனை உறுதிப்படுத்தும் நோக்கில் வரையப்பட்டிருந்த சட்ட ஏற்பாடுகள், 1972 இலும் பின்னர் 1978 இலும் தனித்துவமாக சிங்கள ஆட்சியாளர்களினால் தமிழர் தரப்பின் சம்மதம் இன்றியே ஒருதலைப்பட்சமாகக் கொண்டுவரப்பட்ட அரசமைப்புகளினால் இல்லாதொழிக்கப்பட, இலங்கைத் தீவில் தமிழர்களின் உயிர் வாழ்க்கை கேள்விக்குள்ளாக்கப்பட்டது. சட்ட உத்தரவாத அங்கீகாரம் பறிக்கப்பட்டது.
சிறுபான்மையினரின் சிறப்புரிமைகளைப் பறித்து, அவர்களை மூன்றாந்தரப் பிரஜைகளாக்கி, அடக்கி, ஒடுக்கும் சட்டங்கள் நாடாளுமன்றத்தினால் யாக்கப்பட்டு வருகின்றன.
ஈழத் தமிழர்களுக்கு எதிரான பௌத்த சிங்கள மேலாண்மைப் போக்கின் அடக்குமுறைக் கரங்கள் சட்ட நீதித்துறை வரை விரிந்தன. தமிழர் தாயகத்தின் புவியியல் நிலப்பரப்பைத் துண்டாடும் ஏற்பாடுகளை நீதிமன்றங்கள் மூலம் செயற்படுத்தும் அளவுக்கு இலங்கைத் தீவின் சட்ட ஏற்பாடுகளும், ஒழுங்கு முறைகளும் இறுக்கமடைவதற்கு அரசமைப்புச் சட்டமும் அதை ஒட்டிய சட்ட முறைமைகளும் வழிகோலின.


இலங்கைத் தீவு முழுவதற்குமாக இலங்கையின் நீதித்துறை வழங்கிய தீர்ப்புகள், வடக்கு கிழக்குத் தமிழர் தாயக விவகாரத்தில் மட்டும் சட்டத்துக்குப் புறம்பான முறையில் புறக்கணிக்கப்பட்டன.
இலங்கையின் மிக உயர்ந்த அதிகாரமும், நியாயாதிக்கமும் கொண்ட நீதிமன்றம் உயர்நீதிமன்ற ஆயமாகும். அந்த நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளும், உத்தரவுகளும் மறு கேள்விக்கு இடமின்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது இத்தீவின் சட்ட ஒழுங்கு முறையாகும்.
ஆனால் தமிழர் தாயகத்தைப் பொறுத்தமட்டில் மட்டும் இத்தகைய தீர்ப்புகள் நடைமுறைப்படுத்தப்படுவது ஓரவஞ்சனையாக ஒதுக்கப்படுகின்றன என்பதே உண்மை நிலைவரமாகும்.
அதற்கு உதாரணமாக உயர்நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பு ஒன்றை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளலாம்.

சிங்களவர் ஒருவர் கொழும்பு சோதனைத் தடை முகாம் ஒன்றில் வைத்து சட்டத்துக்கு முரணான வகையில் தாம் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்து, உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வீதிகளுக்குக் குறுக்கே சோதனைச் சாவடிகள் நிரந்தரமாக அமைக்கப்பட்டு, வாகனங்கள் வழி மறிக்கப்பட்டு, சோதனைக்கு உட்படுத்தப்படுவது மிகத் தவறு எனத் தெரிவித்தது.

இவ்வாறு வீதிகளுக்குக் குறுக்கே சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தால் அவற்றை அகற்றும்படியும் உயர்நீதிமன்ற ஆயம் உத்தரவிட்டது.
உயர்நீதிமன்றத்தின் இறுக்கமான தீர்ப்பை உணர்ந்துகொண்ட அரசுத் தலைமை உயர்நீதிமன்றம் அமைந்துள்ள கொழும்பு வட்டகைக்குள் உள்ள சோதனைச் சாவடிகளை அவசர அவசரமாக அகற்றியது.

ஆனால் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு நிலைமை மாறவில்லை. ஒரு வகையில் முன்னர் இருந்ததை விட மோசமாக போக்குவரத்துக்கு நெருக்கடியான ஏற்பாடுகள் வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்பட்டன. புதிது புதிதாக வீதிகளுக்குக் குறுக்காக சோதனைச் சாவடிகள் எழுந்தன.
தலைநகர் கொழும்பிலும், கொழும்பை அண்டிய பிற இடங்களிலும் வீதிக்குக் குறுக்காகப் போடப்பட்ட தடை நிலைகள் உயர்நீதிமன்றத் தீர்ப்புக் காரணமாக மறைய, மறுபுறத்தில் தமிழர் தாயகத்தில் அவை புதிது புதிதாக எழுந்தன.

இது விடயத்தில் உயர்நீதிமன்ற உத்தரவு சரிவரக் கைக்கொள்ளப்பட்டு, பின்பற்றப்படுகின்றமையை உறுதிப்படுத்த வேண்டிய கருத்துருவாக்கிகள் இதுகுறித்து கவலையுற்றிருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.

யாழ். மாவட்ட நீதிபதி இ.த.விக்கினராஜாவும், வவுனியா மாவட்ட நீதிபதி இளஞ்செழியனும் இந்நிலைமை குறித்து படை மற்றும் பொலிஸ் தரப்பு அதிகாரிகளுக்கு விரிவாக எடுத்துரைத்திருக்கின்றனர்.

அவர்களது உத்தரவுகள் செல்லுபடியாகுமா? கொழும்பில் நடைமுறைப்படுத்தப்பட்ட மேற்படி உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அம்சங்கள் தமிழர் தாயகத்திலும் நடைமுறைப்படுத்தப்படுமா? அதற்கான வாய்ப்புகள் எவை? போன்றவற்றுக்கு விடைகாண நாம் பொறுத்திருந்து பார்க்கவேண்டியிருக்கின்றது.

"சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்படுவது மாத்திரமல்ல, அது நிலைநாட்டப்படுவது போல காட்டப்படவும் வேண்டும்' என்ற தத்துவத்துக்கு அமைய கொழும்பிலும் சுற்றுப் புறங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்ட உயர்நீதிமன்றத் தீர்ப்பு தமிழர் தாயகத்திலும் நடைமுறைப்படுத்தப்படுவது வெளிப்படையாகக் காட்டப்படவும் வேண்டும். செய்யுமா அரசு?

Uthayan.com

Tuesday, December 25, 2007

''தடுமாறும் சர்வதேசமும் தப்பித்த அரசாங்கமும்''

சர்வதேச சமூகம் ஆவலோடு எதிர்பார்த்திருந்த வரவு செலவுத்திட்ட இறுதி வாக்கெடுப்பு நிகழ்ந்து விட்டது. 2008ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டினை மலையகக் கட்சிகள் ஏற்றுக்கொண்டுள்ளன.

யுத்தத்திற்கான வரவு செலவுத்திட்டத்திற்கு ஆறுமுகம் தொண்டமானும் சந்திரசேகரனும் ஆதரவளித்ததை உலகத் தமிழினம் மிகுந்த சோகத்துடன் பார்வையிடுகிறது. இரண்டாவது தடவையாக மறுபடியும் ரணில் குழுவினர் ஆட்சியமைக்கும் வாய்ப்பு கிடைக்குமெனக் காத்திருந்த மேற்குலகம் அது பலனளிக்காமல் இனிப் புதிய அழுத்தங்களை அரசின்மீது செலுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

இந்த கயிறு இழுத்தல் போட்டியில் ஜே.வி.பி.யினரின் பங்கு முக்கிய பாத்திரத்தினை வகுத்துள்ளதென்பதே உண்மையான விடயமாகும். முன்பு சர்வதேச சதிவலையொன்று சு.க. ஐ.தே.க. புரிந்துணர்வு ஒப்பந்த மூலமாக பின்னப்பட்ட வேளையில் ரணிலின் வலது இடது கரங்களை தம்பக்கம் இழுத்தெடுத்து அவ்வலைகளை ஜனாதிபதி மஹிந்த கிழித்தெறிந்திருந்தார்.

தற்போது, ஜே.வி.பி.யின் ஆதரவோடு கவிழும் நிலையிலிருந்த ஆட்சியினையும் காப்பாற்றி புதிய சர்வதேசப் பொறியிலிருந்து தப்பி வெளியே வந்துள்ளது அரசாங்கம்.

ஜே.வி.பி.யானது ஆட்சிபீடமேறும் கனவில் வாழும் வரைக்கும் ஜனாதிபதி மஹிந்த அரசாங்கத்தினை கவிழ்ப்பது மிகவும் கடினமான விடயந்தான்.

இலங்கை அரசியலில் ஐ.தே.கட்சியை மூன்றாவது நிலைக்குத் தள்ளிவிட்டோமென்கிற கற்பிதமே ஜே.வி.பி. யினர் மத்தியில் அதிகம் காணப்படுகிறது.

ஜே.வி.பி.யின் அரசியல் சூத்திரத்தில் இரண்டு விதமான போக்குக் காணப்படுகிறது.

கைவசமுள்ள 38 நாடாளுமன்ற கதிரைகளும், இன்னொரு தேர்தல் நடத்தப்பட்டால் மீண்டும் கிடைக்குமாவென்கிற சந்தேகம் ஒரு புறமும், மேற்குலக ஆசியுடன் ரணில் கட்சி ஆட்சிபீட மேறினால், இடதுசாரிகள் என்று கூறி நசுக்கி விடுவார்களோவென்கிற அச்சமும் இவர்களிடம் மேலோங்கியுள்ளது.

ஜே.வி.பி. யோ அல்லது மஹிந்தவின் பொதுஜன ஐக்கிய முன்னணியோ அதிகம் இனவாதம் பேசுகிறார்களென்று ஒரு கருத்துக் கணிப்பினை நடத்தினால் அதிலும் ஜே.வி.பி. தோற்றுப் போகக்கூடும்.

விமல் வீரவன்சவை பார்க்கிலும் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, கெஹெலிய ரம்புக்வெல போன்றோரின் ஏகாதிபத்திய எதிர்ப்பு அதி உச்ச நிலையை அடைந்துள்ளது.

ஐ.நா. சபையின் உயர் நிலை பிரதிநிதிகளையும் காட்டமாகத் திட்டும் வைராக்கியமும், அசட்டுத்துணிச்சலும் ஜே.வி.பி.யைவிட ஜனாதிபதி மஹிந்தவின் மந்திரிகளிடம் அதிகமாக காணப்படுகிறது.

யுத்த வெற்றிகளை பூதாகரமாக்கி, மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை அரசாங்கம் மூடி மறைக்கின்றதென சோசலிசம் பேசியும் ஒன்றுமே மாற்றமடையவில்லை.

ஒரே உறையில் இரண்டு பௌத்த சிங்கள பேரினவாதக் கத்திகள் இருப்பதை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்களென்றும் ஜே.வி.பி.க்குத் தெரியும்.

ஆகவே, சீரழிந்த பொருளாதாரத்தால் அல்லல்படும் மக்கள் சார்பாக பேசும் ஒரே குழு பேரினவாத சோசலிசச் சக்தியாக தம்மை இனங்காட்டும் புதிய முயற்சியில் ஜே.வி.பி. இறங்கியுள்ளது.

அரசாங்கத்தின் மீது, சர்வதேசம் போல் அதிக அழுத்தம் கொடுத்தால், கட்சியை உடைத்து விடுவார்களென்கிற பயம், வரவு செலவுத் திட்ட காலத்தில் இவர்களுக்குள் உருவாகியுள்ளது.

உபத்திரவம் கொடுப்பவர்களின் ஆட்பலத்தை உடைத்து விடுவதே, இலங்கை அரசியலின் ஜனநாயகப் பாரம்பரியம் என்பதை வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ளலாம்.

பிரித்தாளும் சூத்திரத்தின் பிதாமகர்கள், தமது 150 ஆண்டுகால ஆட்சியில் விட்டுச் சென்ற ஏகாதிபத்திய மனோபாவம், இந்த நிலப்பிரபுத்துவ மேட்டுக்குடியினரின் ஆளுமையிலும் செருகப்பட்டுள்ளது.

கட்சியை உடைக்க முடியாவிட்டால், அதன் உறுப்பினர்களின் உறவினர்களைக் கடத்தி, ஆட்சியதிகாரத்தை தக்க வைக்கும் நவீன அரசியல் பாரம்பரியமும் இலங்கையில் நடைமுறையிலுள்ளது.

அடங்க மறுக்கும் தனிநபர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை நீக்கி, அச்சுறுத்தும் பாணியில் அரசியலும் நடக்கிறது. அமெரிக்க ஜனநாயகத்தின், சுதந்திர பாதுகாவலர் விருது பெற்ற "மக்கள் கண்காணிப்புக்குழு' ஏற்பாட்டாளர் மனோகணேசனிற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பினை விலக்கி, மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப் போராடுபவரின் மனித உரிமையையும் மீறி இருக்கிறது இந்த அரசாங்கம்.

ஆனாலும் தமிழ் மக்களின் பாதுகாப்புக் குறித்து, இந்த சர்வதேச சமூகம் எதுவித உத்தரவாதமும் இதுவரை வழங்கவில்லையென்பதை இத்தருணத்தில் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.

ஐ.நா. மனித உரிமைக் கூட்டத் தொடரில் அறிக்கைகளை வாசித்தாலும் இந்தியா, ஜப்பான் போன்ற தென்னாசிய காந்தியவாதிகள், அரசாங்கத்திற்கெதிராக எவ்வகையான தீர்மானங்களையும் கொண்டுவர அனுமதிக்க வில்லை. அணுஆயுத பொருளாதார வல்லரசுகள் யாவும் உப்புச் சத்தியாக் கிரகப் போராட்டத்தை தொடர்ந்து நடத்துமாறே தமிழ் மக்களை வலியுறுத்துகின்றன.

அதனையும் இராணுவ உயர் பாதுகாப்பு வலயங்கள் அகதி முகாம்களில் இருந்தவாறு மேற்கொள்ளும்படி ஆலோசனை வழங்குகிறார்கள்.

இத்தகைய குசும்புச் சித்தர்களின் அரசாங்கச் சார்பு நிலைப்பாடுகள் எவரையும் நம்ப முடியாததொரு முடிவிற்கே தமிழ் மக்களை நகர்த்திச் செல்கிறது.

இதேவேளை, உலக மயமாக்கல் கோட்பாட்டினை அடியொற்றிய புதியமுறையிலான உளவியல் சமரொன்றையும் சர்வதேச நாடுகள் மேற்கொள்வதை அவதானிக்கலாம்.

முன் நிபந்தனைகள் ஏதுமின்றி நிதி உதவிகள் அரசாங்கத்திற்கு வழங்கப்படுகின்றன. ஐ.நா. மனித உரிமைக் கண்காணிப்பகத்தை இலங்கையில் நிறுவ அனுமதித்தால் நிதி வழங்கப்படுமென சிறியதொரு துருப்புச் சீட்டை முன்வைத்து காலஅவகாசம் வழங்குகிறது அமெரிக்கா.

அதேவேளை ரஷ்யா, இந்திய, பாகிஸ்தான் நாடுகளின் அதியுயர் படைத்தளபதிகள் இலங்கைக்கு விஜயம் செய்து இலங்கை அரசுக்குச் சார்பான அணியில் தாமும் இணைந்துள்ளோமென நவீன அணிசேராக் கொள்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.

திருமண வைபவத்தில் " மொய்' எழுதும் பாணியில், போட்டி போட்டுக்கொண்டு நிதி உதவி வழங்கலும், இராணுவ ஜாம்பவான்களின் அதிரடி விஜயங்களும், தமிழ் மக்களின் போராடும் உளவுரணை சிதைத்து விடுமென சில சர்வதேச நாடுகள் கற்பிதம் கொண்டுள்ளன. இவ்வாறான உளச் சிதைவுச் சித்தாந்தங்களை தமிழ் மக்களின் தலைமை மீது பிரயோகித்தவாறு, புற்றீசல் போன்று புதிய தமிழ் தலைமைகளை உருவாக்கும் முயற்சிகளை ஒரு பக்கம் முடுக்கிவிட்டுள்ளன.

இலங்கையிலிருந்து முக்கூட்டணியினர் இந்திய விஜயத்தை மேற்கொண்டுள்ள வேளையில் மோதிக் கொள்ளும் முன்னை நாள் ஈரோஸ் கொள்கை வகுப்பாளர்கள் நேசன் சங்கர் ராஜு தலைமையில் கனடாவிலும், இந்தியக்கொள்கை கருத்துருவாக்கிகளின் இணையத் தளமூடாக ரவி சுந்தரலிங்கம் என்பவர் தமது குழுவின் சித்தாந்த அரசியல் கோட்பாடுகளை முன்வைத்த வண்ணமுள்ளனர்.

விடுதலைப் புலிகளுடன் இனி ஒரு அரசியல்தீர்விற்கான பேச்சுவார்த்தை சாத்தியப்பாடுகள் இல்லையென்பதால், மிதவாத தமிழ்த் தலைமையொன்றுடன் பேசித் தீர்ப்பது சரியான வழிமுறையென்று பிரித்தானிய தூதுவர் டொமினிக் சில்கொட் கூறியதன் விளைவாகவே புதிய தமிழ்த்தலைமைகள் உருவாக ஆரம்பித்துள்ளன. தேசிய இனப்பிரச்சினைக்கு காத்திரமான ஒருங்கிணைந்த பங்களிப்பினை அளிப்பதை விடுத்து, இடைவெளி நிரப்பும் குறுகிய நோக்கங்களை நிறைவேற்ற, முளைவிடும் சக்திகளை யிட்டு மக்கள் விழிப்பாக இருத்தல் வேண்டும்.

தமிழ் மக்களின் மாற்றுத்தலைமையாக தம்மை உருவகித்துக் கொள்ளும் சகல அணிகளும், தனிநபர்களும் விடுதலைப் புலிகளை ஒருவகையான பயங்கரவாத இயக்கமென்கிற வட்டத்தினுள்ளேயே அடக்க முயற்சிக்கின்றன. புலிகளைத் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டால் தமது பங்கானது அரசியல் தளத்தினுள் கரைந்து போகுமென்கின்ற அச்சமும் மக்களாதரவற்ற நிலையில் படைபலமும் இல்லாமல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவமும் இல்லாமல் தலைமைத்துவத்தை உருவாக்கும் சிக்கலும் இவர்கள் மத்தியில் உண்டு.

இவை ஏதுமற்றவர்களையே தமிழர் தலைமையõக இலங்கையும் சர்வதேச சமூகமும் வெளிக்காட்ட விரும்புகிறது.

ஆயினும் வட்டுக்கோட்டையில் எடுக்கப்பட்ட தனியரசுத் தீர்மானமும் அதற்கு தமிழ் மக்கள் வழங்கிய நாடாளுமன்ற பிரதிநிதித்துவமும் கடந்த தேர்தலில் விடுதலைப் புலிகளே ஏக தலைமையென ஏற்றுக்கொண்ட தமிழ்க் கூட்டமைப்பிற்கு வழங்கிய அமோக ஆதரவும் பல விடயங்களை சர்வதேசத்திற்கு வெளிச்சமாக்கியுள்ளது.

தமிழ் மக்கள் ஏகமனதாக அங்கீகரிக்கும் தலைமையினை பயங்கரவாதிகளாகச் சித்தரிப்போரை மக்கள் ஜனநாயகக் கோட்பாட்டினை மறுதலிப்பவர்களாகவே கருத இடமுண்டு.

அதேவேளை விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்ட முறைமையினை நிராகரிக்கும் இலங்கைக்கான பிரித்தானியத் தூதுவர் டொமினிக் சில்கொட் அவர்கள் தமிழ் மக்களின் ஈழத் தனியரசிற்கான அரசியல் அபிலாசையினை சட்டபூர்வமானதாக ஏற்று பிரித்தானிய ஜனநாயகத்தின் சில நல்ல அம்சங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

வட அயர்லாந்துப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுவிட்டதாகப் பெருமிதம் கொள்ளும் டொமினிக் சில்கொட் போராடிய கத்தோலிக்க ஜரிஸ் மக்கள்மீது விமானத் தாக்குதல்களையும் பொருளாதாரத் தடைகளையும் பிரயோகித்திருந்தால் புலிகளின் போராட்ட வழிமுறையின் நியாயப்பாட்டினை உணர்ந்திருப்பர்.

கொசோவாப் பிரச்சினையில் சகல பேச்சுவார்த்தைகளும் தோல்வியுற்றதாக அறிவித்திருக்கும் ஐரோப்பிய சங்கம் இலங்கையில் மட்டும் மாற்றுத் தமிழர் தலைமையினை தேடியலையும் தாற்பரியம் ஏனென்று புரியவில்லை.

இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு பின்னர் உருவான வல்லரசுகளின் பனிப்போர் காலத்து மிச்ச சொச்சங்கள் கொசோவாவில் இன்னமும் நீண்டு செல்கிறது.

கொசோவாவில் இருமுகாம்களின் மோதலும் இலங்கையில் மூன்று முகாம்களின் காய்நகர்த்தல்களும் வேறுபட்ட பிராந்திய நலன் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன.

கொசோவாப் பிரிவினைக்கு எதிராக சேர்பியாவுடன் கூட்டுச் சேர்ந்துள்ள ரஷ்யா போன்று ஈழப்பிரிவினையை நிராகரித்தவாறு இலங்கையுடன் கை கோர்த்துள்ளது இந்திய அரசு. இலங்கையைப் பொறுத்தவரை மேற்குலகச் சிந்தனையில் சீனாவை மையப்படுத்தியநகர்வுகள் அதிகம் மேலோங்கியுள்ளன.

ஆகவே, இரு முகாம்கள் என்கிற பொதுத்தளம் இலங்கையில் தோற்றமுறும் பொழுதே கொசோவாப் பார்வைகளும், கிழக்குத் தீமோர் கொள்கைகளும் உருவாகலாம்.

அதுவரை "பயாப்ரா (Biafra)] சித்தாந்தமே இலங்கையில் பிரயோகிக்கப்படும்

இதயச்சந்திரன்

போர் இனநெருக்கடியை சர்வதேச மயப்படுத்த உதவியதைத் தவிர, வேறு எந்தப் பயனுமேயில்லை

* மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் சமுதாய அபிவிருத்தி, சமூக அநீதி ஒழிப்பு அமைச்சருமான பெ.சந்திரசேகரன் வரவு - செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு பாராளுமன்றத்தில் B?-? E?

இந்நாட்டின் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இருந்துவரும் இனப்பிரச்சினையை அடுத்தடுத்து வந்த பல அரசுகள் வெவ்வேறு விதமாக அணுக முயற்சித்து வந்திருக்கின்றன. சிறுபான்மை மக்களின் அரசியல் உணர்வுகளை அலட்சியம் செய்தல், புறக்கணித்தல், உதாசீனப்படுத்தல், அக்கறை காட்ட மறுத்தல் போன்ற வழிமுறைகளை ஆரம்பகால அரசுகள் மேற்கொண்டு வந்துள்ளன. ஆனால், இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு தேவை என்ற கட்டாயத்தை இந்த அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஒரு காலகட்டத்தில் உருவாகிற்று. சில அரசுகள் அச்சுறுத்தல் மூலமும், அடக்குமுறை மூலமும் இந்த பிரச்சினையைத் திரைபோட்டு மறைக்க முயற்சித்திருக்கின்றன. ஆனால், அவர்களின் முயற்சிகளையும் மீறி இந்த இனப்பிரச்சினை விஸ்வரூபமெடுத்துள்ளமையை வரலாற்றிருந்து மறைத்துவிட முடியாது.

அண்மைக்கால அரசுகள் யுத்தத்தினால் இந்த பிரச்சினையைத் தீர்த்து விடலாம் என நம்பி யுத்தத்தின் கடுமையை அதிகரிக்கத் தொடங்கின. இதனால், உள்நாட்டுப் பிரச்சினை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து, அப்பிரச்சினை சர்வதேச அந்தஸ்தைப் பெற்றதேயன்றி, இனப்பிரச்சினைத் தீர்வை நோக்கி ஒரு அடிதானும் நகர முடியவில்லை. இப்போதுங்கூட, எப்போதுமில்லாதவாறு யுத்தம் முடுக்கி விடப்பட்டுள்ளபோதும், சமரச தீர்வு ஒன்று தான் இனப்பிரச்சினைக்கு முடிவாகும் என அவ்வப்போது அரசாங்கம் ஆமோதிக்கவேண்டிய நிலையே ஏற்பட்டுள்ளது. எல்லா அழிவுகளுக்கும் பின்னர் பேச்சு வார்த்தையைப்பற்றி சிந்திப்பதை விடுத்து, இப்போதே இந்த அழிவுகளைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் - சமரச நிலைக்கு அரசாங்கம் இறங்கி வரவேண்டும் என்பதே மலையக மக்கள் முன்னணி வலியுறுத்தும் அரசியல் நிலைப்பாடாகும். இந்த இனப்பிரச்சினைக்கு, இடையில் ஆரம்பம் முதலே மிக மோசமாக பாதிப்புக்குள்ளாகி வருபவர்கள் அப்பாவி இந்திய வம்சாவளி மலையகத் தமிழ் மக்களே! ஒவ்வொரு கலவரத்தின்போதும் மோசமான இழப்புக்களையும் சீரழிவுகளையும் சந்தித்து வருபவர்கள் அவர்களே! இனிமேலும் இனப்பிரச்சினை கலவரமாக மாறினால், அதிலே அழியப்போகும் ஆபத்தை எதிர்நோக்கியிருப்பவர்களும் மலையக மக்கள் தான்!

அண்மைக்காலம் முதல் நடைபெற்று வரும் சுற்றிவளைப்புத் தேடுதல், சோதனைச் சாவடிகளில் பயணிகள் கூட்டங் கூட்டமாக கைதாகி தடுத்து வைக்கப்படல் போன்றவற்றில்,பரிதாபகரமாக இன்னல்களுக்கு ஆளாகியுள்ளதும் பெருமளவில் மலையக மக்கள் தாம்! இத்தகைய கைதுகளால் வடக்கு, கிழக்கு மக்களும், மலையக மக்களும் சொல்லில் அடங்கா பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது. இது இந்த அரசின் செயற்பாட்டில் கரும்புள்ளியாக மாறிவிடக் கூடாது என்பதையும், தமிழ் மக்களின் வெறுப்புக்கு இவ்வரசு உள்ளாகிவிடக் கூடாது என்பதை ஜனாதிபதி அவர்களிடம் மலையக மக்கள் முன்னணி மிகத் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கின்றது. சமீபத்தில் சுற்றிவளைப்பில், அடையாள அட்டையின்மையால் மட்டும் கைதானவர்களை விடுவிக்க வேண்டுமென்றும்,கொழும்பிலோ அல்லது ஏனைய பிரதேசங்களிலோ இத்தகைய கைதுகளைத் தவிர்ப்பதற்கு மாற்றுத்திட்டத்தினை ஜனாதிபதியவர்கள் வகுக்கவேண்டுமென்றும் நாம் வலியுறுத்தியுள்ளோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித ஆறுதலும் சொல்லமுடியாத நிலையிலேயே அந்த அரசோடு இணைந்திருக்கவேண்டிய நிர்ப்பந்தம் எமக்குள்ளது என்பதையும், ஜனாதிபதியும் அரசும் புரிந்துகொள்ளவேண்டும் என்றும் இவ்வேளையில் தெரிவிக்க விரும்புகிறேன்.

எனவே, அன்றாடம் நடைபெறும் இந்தப் பிரச்சினையில் சிக்குண்டு திணறுகின்ற மலையக மக்கள், தமது அரசியல் உரிமைகள், சமூக அபிவிருத்தி, அடிப்படை வசதிகள் போன்றவற்றைக்கூட இரண்டாம் பட்ஷமாக்கிவிட்டு தற்போதைய கைதுகளிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதிலேயே அதிகளவு அக்கறை கொள்ளவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளார்கள்! இனப்பிரச்சினை, வடக்கு கிழக்கு மற்றும் மலையக மக்களின் பிரச்சினையாகக் கருதாமல், எமது நாட்டு பொருளாதாரத்தின் ஆணி வேரையே ஆட்டம் காணவைக்கின்ற சாபக்கேடு என்பதை உளமார சிந்திக்கவேண்டிய தேவை அனைவருக்கும் ஏற்பட்டிருக்கிறது. இந்நாட்டின் வளமிக்க பொருளாதாரத்தை எவர் கட்டி எழுப்புகின்றாரோ, அவரை இந்நாட்டின் இலட்சியத் தலைவராக இலங்கை வரலாறு ஏற்றுக்கொள்ளும். அதை விடுத்து, இன அழிவுக்கும் நாட்டின் பொருளாதார சீரழிவுக்கும் களம் அமைக்கின்ற ஆட்சிக் காலங்களை வரலாற்றில் கறைபடிந்த ஏடுகளாகவே எதிர்காலம் கணிக்கும்.

மலையக சமூக அபிவிருத்தி என்பது பேரளவில் அமைச்சுப் பதிவிகளாலோ ஒரு சிறு நிதி ஒதுக்கீட்டாலோ சாத்தியப்படக் கூடியதல்ல. நூற்றாண்டு காலமாக அசட்டை செய்யப்பட்ட இந்த சமூகம் ஏனைய சமூகத்துக்கு நிகரான அந்தஸ்தைப் பெறவேண்டுமென்றால் நீண்ட கால பாரிய செயல்திட்டம் உருவாக்கப்படல் வேண்டும். அதனை செய்து முடிப்பதற்கேற்ப, கால இலக்கும் தீர்மானிக்கப்படல் வேண்டும். இந்த கால அவகாசத்தில் செய்து முடிக்கத் தக்கதான நிதி வழங்கப்படுவதோடு தேவையான மேலதிக நிதியை வெளிநாட்டு உதவிகளோடு பெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். இவற்றைப்பற்றியெல்லாம் தீர்மானிக்காமல், வெறுமனே எனக்கு வழங்கப்பட்டிருக்கின்ற அமைச்சினூடாக மட்டும் சமூக அபிவிருத்தியை சாதிக்க முடியுமென எதிர்பார்ப்பது கயிற்றால் கட்டி மலையை இழுப்பதற்குச் சமனாகும். எனவே, சாதிக்கக் கூடிய இலக்கைச் சென்றடைவதும், தற்காலிக நிவாரணத்தையேனும் ஏற்படுத்தித் தருவதுமே இந்த அமைச்சின் மூலம் செய்யக்கூடிய ஆகக் கூடுதலான செயல்பாடுகளாக இருக்கின்றன. இந்த அடிப்படையில்தான், இந்த அமைச்சுப் பொறுப்பை ஏற்றுள்ளதை பெரிய சாதனையாகக் கருதாமல், கிடைத்த சந்தர்ப்பமாகக் கருதி சில திட்டங்களை செயல்படுத்த முனைந்திருக்கின்றேன்.

நான் வீடமைப்பு அமைச்சிலே 1994 ஆம் ஆண்டு தொடக்கம் "தோட்ட வீடமைப்பு" பிரதி அமைச்சராக இருந்த காலத்தில் 50 ஆயிரம் தனித்தனி வீடுகளை தோட்டத் தொழிலாளர்கள் அமைத்துக் கொள்வதற்கேற்றத் திட்டத்தை வெற்றிகரமாக செய்து முடித்திருந்தேன். அதே விதமான வீடமைப்புத் திட்டங்களை தற்போதைய எனது அமைச்சின் மூலமாக மேற்கொள்ள வேண்டுமென ஜனாதிபதியிடம் கோரியிருக்கின்றேன். இது செயற்படுத்தப்படத் தொடங்கும்போது இவ்வமைச்சின் பணி மிக முக்கியமானதாக மலையக மக்கள் வரலாற்றில் பதியப்படும் என எதிர்பார்க்கின்றேன். மலையக மேம்பாட்டுக்கான நீண்டகால பாரிய திட்டமொன்று கல்விமான்களாலும் மலையக சமூக ஆய்வாளர்களாலும் வரையப்பட்டுள்ளது. இதற்கான அங்கீகாரத்தையும் அமைச்சரவை ஏற்கனவே வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் பல அம்சங்கள் "மகிந்த சிந்தனையாலும்" தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. இதனை நடைமுறைப்படுத்துவதற்கு எனது அமைச்சுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதும் எனது கோரிக்கையாகும். இதற்கான வாய்ப்பையும் ஜனாதிபதி ஏற்படுத்தித் தருவாரென எதிர்பாக்கின்றேன். இதனால் பாரிய முன்னேற்றங்களை மலையகத்தில் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்.

எனது அமைச்சின் வேலைத்திட்டங்களை உருவாக்குவதிலும் அதனை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதிலும் எனக்கு பக்க பலமாக இருந்துள்ள எனது அமைச்சின் செயலாளர் யு.ஏ.செனவிரத்ன அவர்களுக்கு விஷேடமாக எனது நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவிக்க விரும்புகிறேன்.

மேற்படி பணிகளில் உற்சாகமான பங்களிப்பை நல்கிய அமைச்சின் அனைத்து உத்தியோகத்தர்களுக்கும், தனிப்பட்ட உத்தியோகத்தர்களுக்கும் எனது அன்பான பாராட்டுக்கள் உரித்தாகும்! மாவட்டங்கள் தோறும் அமைச்சின் செயல் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு பெரும் துணையாக இருந்து செயல்பட்ட மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைத் தலைவர்கள், உறுப்பினர்கள், மற்றும் சமூக சேவை நிறுவனங்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கின்றேன்.

சமுதாதய அபிவிருத்தி, சமூக அநீதி ஒழிப்பு அமைச்சின் 2007 ஆம் ஆண்டுக்குரிய கடந்த ஒரு வருட காலப்பகுதிக்குள்ளான அமைச்சின் செயலாற்றங்கள், அமுல்படுத்தப்பட்ட திட்டங்கள், நிறைவேற்றிய பணிகள் என்பன தொடர்பாகவும், எதிர்வரும் 2008 ஆம் ஆண்டு நிதியாண்டில் எனது அமைச்சினால் முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் மற்றும் அது தொடர்பாக அரசிடமிருந்து எதிர்பார்க்கப்படும் தேவைகள், உதவிகள் தொடர்பானவற்றை பாராளுமன்றத்தின் கௌரவ உறுப்பினர்களிடம் சமர்பிக்க கிடைத்தமையையிட்டு மிக்க மகிழ்ச்சியடைகிறேன். சமூக ஏற்றத்தாழ்வுகளற்ற தேசத்தை கட்டியெழுப்பும் இலக்கினையும் அபிவிருத்தியில் சமூக நீதியையும் சமத்துவத்தையும் பரவலாக்கும் உயர் எதிர்பார்ப்புடனும் "சமத்துவத்தினைக் கொண்டதொரு சமூகத்தை நோக்கி" என்ற நோக்குடன் 2006 ஆம் ஆண்டு செப்டெம்பர் 14 ஆம் திகதி சமுதாய அபிவிருத்தி மற்றும் சமூக அநீதி ஒழிப்பு அமைச்சு,மஹிந்த சிந்தனையின் இலக்குகளை அடிப்படையாகக் கொண்டு, ஜனாதிபதியால் ஸ்தாபிக்கப்பட்டு, அதன் அமைச்சராக நான் நியமிக்கப்பட்டேன். சமுதாய அபிவிருத்தி செயற்பாட்டின் மூலமான வலுவூட்டலினூடாக குறைந்த வரப்பிரசாதங்களைக் கொண்ட சமூகங்கள் எதிர்நோக்குகின்ற சமூக முரண்பாடுகளை ஒழித்தல் எனும் செயற்பணியை இவ்வமைச்சு மேற்கொண்டுள்ளது.

இச்செயற்பணியின் உப கூறுகளான; சமுதாய அபிவிருத்திக்கான கொள்கைகளைத் தயார் செய்வதும் அமுல்படுத்துவதும், சமுதாய அபிவிருத்தி மற்றும் சமூக முரண்பாடுகளை ஒழிப்பது பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல், சமூக முரண்பாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ள சமுதாயத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான வசதிகளைச் செய்தல், குறைந்த உரிமைகளைக் கொண்ட சமூகத்திற்கு வலுவூட்டல், அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்தல், சமூக அமைப்புக்களின் ஆற்றல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்தல் என்பனவாகும். சமூக முரண்பாடுகளை நீக்கி, சமூகங்களுக்கிடையில் நிலவும் அபிவிருத்தியில் சமத்துவமின்மையை இல்லாதொழிப்பதுடன், பாகுபாடு காட்டல்,மற்றும் இன, கலாசார,சமய அந்தஸ்து ரீதியிலான புறக்கணிப்பு என்பனவற்றின் விளைவாக வறுமை, கல்வி அறிவின்மை, குடியியல் அந்தஸ்து இன்மை, தொழிலின்மை, மனித உரிமை மீறல்கள், போன்ற இன்னோரன்ன சமூக அநீதிகளை ஒழித்து சமூதாய அபிவிருத்தியை ஏற்படுத்துவதனை நோக்காகக் கொண்டதாக இவ்வமைச்சு விளங்குகிறது. மேலும் இவ்வமைச்சு இந்நாட்டின் குறைந்த வரப்பிரசாதங்களைக் கொண்ட மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டு செயற்படுகின்றது.

சுதந்திர இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகள், இந்நாட்டின் வாழும் வேறுபட்ட சமூகப் பிரிவினர்களுக்கு இடையில் பரவலாக்கப்படாமல் சமூகங்களிடையே சமத்துவம் ஏற்படுவதை ஊக்கப்படுத்தவில்லை. அரசியல் நோக்கில், பிரதேசம் மற்றும் இன நலன்களை மையப்படுத்தி, ஐம்பது வருடங்களுக்கு மேலாக கைக்கொள்ளப்பட்டுவரும் செயற்பாடுகளின் விளைவாக மலையக சமூகத்தைப்போன்று பல சமூகங்கள் மிகவும் பின்தங்கிய நிலையிலும், அனைத்து அம்சங்களிலும் பலவீனமடைந்த நிலையிலும், தேசிய நீரோட்டத்திலிருந்து ஓரங்கட்டப்பட்டதாயும் காணப்படுகின்றன

*மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் சமுதாய அபிவிருத்தி, சமூக அநீதி ஒழிப்பு அமைச்சருமான பெ.சந்திரசேகரன் வரவு - செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை

பெருந்தோட்டத்துறை சமூகம்,மீனவர் சமூகம், நகர்ப்புற சேரிகளில் வாழும் சமூகம், நகர்ப்புற சுத்திகரிப்பு தொழிலாளர் சமூகம், பின் தங்கிய கிராமப்புற சமூகம் போன்றவை இவற்றுள் சிலவாகும். இச்சமூகத்தினர் நாட்டின் பல பாகங்களிலும் பரந்து வாழ்கின்றனர். இச்சமூகத்தினரிடையே நிலவும் சமூக சமத்துவமின்மையை இல்லாதொழித்து அவர்களும் தேசிய நீரோட்டத்துடன் ஒன்றிணையும் வகையில் சமூதாய அபிவிருத்தி செயற்பாடுகளையும், வேலைத்திட்டங்களையும் ஒதுக்கப்பட்ட இச்சமூகத்தினரிடையே முன்னெடுப்பதே இவ்வமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள பணியாகும். இந்த அமைச்சும் அதன் செயற்பாடுகளும் புதிதாக ஏற்படுத்தப்பட்டவையாகும். இந்த அமைச்சு ஸ்தாபிக்கப்பட்டபோது அமைச்சிற்கான ஆளணியினரோ, அமைச்சிற்கான கட்டிடமோ, ஏனைய பௌதீக வளங்களோ இருக்கவில்லை, இன்றைய முன்னேற்றமும் வளர்ச்சியும் கடந்த ஒருவருட காலப்பகுதியில் படிப்படியாக ஏற்படுத்தப்பட்டவையாகும்.

வேலைத் திட்டங்களை அமுல்படுத்த போதியளவு உத்தியோகத்தர் இல்லாதிருந்தமையும், அபிவிருத்தி வேலைத் திட்டங்களை அமுலாக்க அமைச்சின் கீழ் நிறுவனமேதும் இன்மையும், அடித்தள மக்களுடன் அமைச்சின் செயற்பாடுகளை ஒன்றிணைப்பதற்கான வலையமைப்பு இல்லாதிருந்தமையும் நாம் எதிர்நோக்கிய தலையாய பிரச்சினைகளாக இருந்தன. இச்சிக்கல்களை எமது அபிவிருத்தி செயற்பாடுகளுக்குத் தடையாகக் கொள்ளாது மாற்று வழிகளைப் பின்பற்றி அமைச்சின் பணிகளை செயற்றிறன் மிக்கதாக முன்னெடுத்துள்ளோம். எனது அமைச்சின் செயலாற்றத்துக்கான பரப்பு, புவியியல் மற்றும் சமூக வரையறைகளைக் கொண்டிராது, நாட்டின் அனைத்து பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்தக்கூடியதும், பின்தங்கிய சமூகங்களின் மேம்பாடு தொடர்பில் அனைத்து சமூகங்களுக்கும் சேவையாற்றக் கூடியதாகும். ஆயினும், கடந்த நிதியாண்டில் எமது அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் அளவு, அமைச்சின் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் நிலவிய ஆளணியினர் பற்றாக்குறை, பௌதிக வளங்களின் பற்றாக்குறை, அமைச்சின் செயற்பாடுகளை புதிதாக கட்டியெழுப்புவதில் நாம் எதிர்நோக்கிய சவால்கள் காரணமாக, 2007 ஆம் ஆண்டில், சமூக அநீதிக்கு ஆட்பட்டு பலவீனமான நிலையிலுள்ள அனைத்து சமூகங்களுக்கும் எனது அமைச்சின் பணிகளை விரிவுபடுத்த இயலாத நிலையேற்பட்டது. எனினும், இந்நாட்டில் வாழும் பின்தங்கிய சமூகங்களில் பிரதானமானதும், முழுவதும் பாதிப்புக்குள்ளானதும் 15 இலட்சம் மக்களையும், தோட்டத் தொழிலாளர்களை பெருமளவில் உள்ளடக்கியதுமான மலையக சமூகத்தினரிடையே சமுதாய அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்தல் மற்றும் சமூக அநீதியை இல்லாதொழித்தல் தொடர்பாக பல்வேறு அபிவிருத்தி செயற்பாடுகளை எனது அமைச்சு சிறப்பாக முன்னெடுத்திருப்பதை இந்த சபையில் அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த ஒன்றரை நூற்றாண்டுக்கும் மேலாக, நாட்டின் மொத்த தேசிய உற்பத்திக்கும், அந்நிய செலாவணி உழைப்பிற்கும், அரசின் அபிவிருத்தித் திட்டங்களுக்கும் வரி வழங்கல் மூலம் நிதியீட்டம் செய்து வருவதன் மூலமும் இலங்கை பொருளாதாரத்தில் முக்கிய கைத்தொழில் ஒன்றாக விளங்கும் பெருந்தோட்டத்துறை சார்ந்த சமூகத்தின் மேம்பாடு தொடர்பில் இவ்வரசாங்கம் அதிக கவனம் செலுத்துவது பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.

பின்னடைவான சமூக, பொருளாதார நிலைமைகளையும் சமூக உட்கட்டமைப்பில் பல்வேறு பலவீனங்களையும் கொண்டுள்ள இந்த சமூகத்தை சமத்துவம்,கௌரவமான வாழ்க்கைச் சூழல், சமூக பாதுகாப்பு ஆகியன நிறைந்த ஒரு சமூகமாக கட்டியெழுப்புவதில் பல சவால்களை எனது அமைச்சு சந்திக்கிறது.

2007 ஆம் ஆண்டில் எமக்கு வழங்கப்பட்ட மூலதன நிதி 150 மில்லியன் ரூபா. இச்சிறுதொகையினை உச்ச அளவிலும் திறனான முறையிலும் பயன்படுத்தும் வகையில் அபிவிருத்தித் திட்டங்கள் தயார் செய்யப்பட்டு, தற்போது அவை முழுமையாக நிறைவேற்றப்பட்ட நிலையில் உள்ளன.

அடுத்துவரும் நிதியாண்டில் எமது அமைச்சு பின்வரும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும்.

குழந்தை பராமரிப்பு மற்றும் பாலர் கல்வி அபிவிருத்தியினை முன்னெடுத்தல்,

சனசமூக நிலையங்களை நிறுவுதல்,

சமூகங்களுக்கிடையே புரிந்துணர்வினையும் நல்லிணக்கத்தினையும் ஏற்படுத்தல்.

விளையாட்டு பயிற்சி முகாமை நடாத்துதல், பொழுதுபோக்கு வசதிகளை விஸ்தரித்தல் மற்றும், விளையாட்டு மைதானங்களை புனரமைத்தலும் ஸ்தாபித்தலும்,

மனித உரிமைகள் பற்றிய வழிப்புணர்வினையும் பயிற்சியையும் வழங்குதல்,

வீதி மற்றும் நடைபாதைகளை புனரமைத்தல்.

தொலைத் தொடர்பு வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல்.

கலாசார நடவடிக்கைகளை மேம்படுத்தலும் கலாசார நிலையங்களை ஸ்தாபித்தலும்.

முதியோர் பராமரிப்பு மற்றும் சமூக பாதுகாப்பினை ஏற்படுத்தல்.

வாழ்க்கைத் தொழில் மற்றும் தொழிற்பயிற்சிகளை வழங்குதல்

மாற்று ஜீவனோபாயத்தினை அபிவிருத்திசெய்தல்.

சமூகத்தில் பெண்கள் மேம்பாட்டுத் திட்டங்களை முன்னெடுத்தல்,

சுயதொழில் பயிற்சிகளை வழங்குதல்

வாசிகசாலையை ஏற்படுத்தலும் வயதுவந்தோருக்கான கல்வியை வழங்கலும்,

இளைஞர் பயிற்சி முகாமினை நடத்தலும் பல்திறன்சார் பயிற்சினை வழங்கலும்.

சுகாதாரம் மற்றும் போசாக்கு வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல்.

மது பாவனை எதிர்ப்புப் பிரசாரம் மேற்கொள்ளல்,

நீர்வழங்கல், வடிகாலமைப்புகள் சீர்செய்தல்,

மின்சாரம் வழங்கல்

ஆளுமை விருத்திக்கான பயிற்சினையும் வழிகாட்டுதலையும் வழங்குதல்

குடியியல் ஆவணங்களைப் பெற்றுக்கொடுத்தல் மூலம் பிரஜைக்கான அந்தஸ்தினை மேம்படுத்தல்.

முறைசார் கல்வியினை விரிவுபடுத்துவதற்கான ஊக்குவிப்புகளை வழங்குதல்.

உயர் கல்விக்கான வாய்ப்புக்களை விருத்திசெய்தல்.

மேற்படி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான உபாய மார்க்கமாக பின்வரும் செயற்பாடுகளை எமது அமைச்சு எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.

தோட்டங்களில் கிராம அபிவிருத்தி சங்கங்களை ஸ்தாபித்தல்.

சமுதாய அபிவிருத்தியினை துரிதப்படுத்துவதற்கு ஏற்றவாறு இளைஞர்களை உள்ளடக்கிய தொண்டர் அபிவிருத்திக் குழுக்களை கட்டியெழுப்புதல்.

மக்கள் அடிப்படை அமைப்புகளை உருவாக்கி பலவீனப்பட்ட மக்கள் குழுக்களை வலுப்படுத்தலுக்கூடாக சுய அபிவிருத்திக்கான உந்துதலை வழங்குதல்.

பெருந்தோட்ட குடியிருப்புகளை தேசிய நீரோட்டத்துடன் ஒன்றிணைப்பதற்கும் பொது நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் கொண்டுவருவதற்கும் ஏற்றவாறு புதிய பிரதேச செயலகங்களை ஸ்தாபிப்பதற்கான வழிமுறைகளையும் மேற்கொள்ளல்,

உயர் கல்வி நிறுவனங்களையும் தொழில்நுட்ப நிலையங்களையும் ஸ்தாபிப்பதற்கும் விரிவுபடுத்துவதற்குமான நடவடிக்கை மேற்கொள்ளல்.

பல்வேறு சர்வதேச உதவியமைப்புகளின் நிதியுதவியுடனும் அரசினது வழிகாட்டலுடனும் புதிய அபிவிருத்தித் திட்டங்களை உருவாக்கி அமுலாக்குதல்.

வேறு அமைச்சுகளுடன் கூட்டிணைந்து பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்தல்.

அரசசார்பற்ற அமைப்புகள், தொண்டர் அமைப்புகள், சமூக தாபனங்கள் என்பவற்றுடனான வலைப்பின்னலொன்றை உருவாக்குதல்.

எனவே எதிர்வரும் நிதியாண்டில் மேற்குறித்த வேலைத்திட்டங்களையும் சீரான நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களினதும் அரசினதும் வழிகாட்டலையும் போதுமான நிதியொதுக்கீட்டையும் ஏனைய உதவிகளையும் ஆதரவினையும் நானும் எனது அமைச்சின் செயலாளரும் ஏனைய உத்தியோகத்தர்களும் எதிர்பார்க்கின்றோம்.