Tuesday, December 25, 2007

போர் இனநெருக்கடியை சர்வதேச மயப்படுத்த உதவியதைத் தவிர, வேறு எந்தப் பயனுமேயில்லை

* மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் சமுதாய அபிவிருத்தி, சமூக அநீதி ஒழிப்பு அமைச்சருமான பெ.சந்திரசேகரன் வரவு - செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு பாராளுமன்றத்தில் B?-? E?

இந்நாட்டின் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இருந்துவரும் இனப்பிரச்சினையை அடுத்தடுத்து வந்த பல அரசுகள் வெவ்வேறு விதமாக அணுக முயற்சித்து வந்திருக்கின்றன. சிறுபான்மை மக்களின் அரசியல் உணர்வுகளை அலட்சியம் செய்தல், புறக்கணித்தல், உதாசீனப்படுத்தல், அக்கறை காட்ட மறுத்தல் போன்ற வழிமுறைகளை ஆரம்பகால அரசுகள் மேற்கொண்டு வந்துள்ளன. ஆனால், இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு தேவை என்ற கட்டாயத்தை இந்த அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஒரு காலகட்டத்தில் உருவாகிற்று. சில அரசுகள் அச்சுறுத்தல் மூலமும், அடக்குமுறை மூலமும் இந்த பிரச்சினையைத் திரைபோட்டு மறைக்க முயற்சித்திருக்கின்றன. ஆனால், அவர்களின் முயற்சிகளையும் மீறி இந்த இனப்பிரச்சினை விஸ்வரூபமெடுத்துள்ளமையை வரலாற்றிருந்து மறைத்துவிட முடியாது.

அண்மைக்கால அரசுகள் யுத்தத்தினால் இந்த பிரச்சினையைத் தீர்த்து விடலாம் என நம்பி யுத்தத்தின் கடுமையை அதிகரிக்கத் தொடங்கின. இதனால், உள்நாட்டுப் பிரச்சினை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து, அப்பிரச்சினை சர்வதேச அந்தஸ்தைப் பெற்றதேயன்றி, இனப்பிரச்சினைத் தீர்வை நோக்கி ஒரு அடிதானும் நகர முடியவில்லை. இப்போதுங்கூட, எப்போதுமில்லாதவாறு யுத்தம் முடுக்கி விடப்பட்டுள்ளபோதும், சமரச தீர்வு ஒன்று தான் இனப்பிரச்சினைக்கு முடிவாகும் என அவ்வப்போது அரசாங்கம் ஆமோதிக்கவேண்டிய நிலையே ஏற்பட்டுள்ளது. எல்லா அழிவுகளுக்கும் பின்னர் பேச்சு வார்த்தையைப்பற்றி சிந்திப்பதை விடுத்து, இப்போதே இந்த அழிவுகளைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் - சமரச நிலைக்கு அரசாங்கம் இறங்கி வரவேண்டும் என்பதே மலையக மக்கள் முன்னணி வலியுறுத்தும் அரசியல் நிலைப்பாடாகும். இந்த இனப்பிரச்சினைக்கு, இடையில் ஆரம்பம் முதலே மிக மோசமாக பாதிப்புக்குள்ளாகி வருபவர்கள் அப்பாவி இந்திய வம்சாவளி மலையகத் தமிழ் மக்களே! ஒவ்வொரு கலவரத்தின்போதும் மோசமான இழப்புக்களையும் சீரழிவுகளையும் சந்தித்து வருபவர்கள் அவர்களே! இனிமேலும் இனப்பிரச்சினை கலவரமாக மாறினால், அதிலே அழியப்போகும் ஆபத்தை எதிர்நோக்கியிருப்பவர்களும் மலையக மக்கள் தான்!

அண்மைக்காலம் முதல் நடைபெற்று வரும் சுற்றிவளைப்புத் தேடுதல், சோதனைச் சாவடிகளில் பயணிகள் கூட்டங் கூட்டமாக கைதாகி தடுத்து வைக்கப்படல் போன்றவற்றில்,பரிதாபகரமாக இன்னல்களுக்கு ஆளாகியுள்ளதும் பெருமளவில் மலையக மக்கள் தாம்! இத்தகைய கைதுகளால் வடக்கு, கிழக்கு மக்களும், மலையக மக்களும் சொல்லில் அடங்கா பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது. இது இந்த அரசின் செயற்பாட்டில் கரும்புள்ளியாக மாறிவிடக் கூடாது என்பதையும், தமிழ் மக்களின் வெறுப்புக்கு இவ்வரசு உள்ளாகிவிடக் கூடாது என்பதை ஜனாதிபதி அவர்களிடம் மலையக மக்கள் முன்னணி மிகத் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கின்றது. சமீபத்தில் சுற்றிவளைப்பில், அடையாள அட்டையின்மையால் மட்டும் கைதானவர்களை விடுவிக்க வேண்டுமென்றும்,கொழும்பிலோ அல்லது ஏனைய பிரதேசங்களிலோ இத்தகைய கைதுகளைத் தவிர்ப்பதற்கு மாற்றுத்திட்டத்தினை ஜனாதிபதியவர்கள் வகுக்கவேண்டுமென்றும் நாம் வலியுறுத்தியுள்ளோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித ஆறுதலும் சொல்லமுடியாத நிலையிலேயே அந்த அரசோடு இணைந்திருக்கவேண்டிய நிர்ப்பந்தம் எமக்குள்ளது என்பதையும், ஜனாதிபதியும் அரசும் புரிந்துகொள்ளவேண்டும் என்றும் இவ்வேளையில் தெரிவிக்க விரும்புகிறேன்.

எனவே, அன்றாடம் நடைபெறும் இந்தப் பிரச்சினையில் சிக்குண்டு திணறுகின்ற மலையக மக்கள், தமது அரசியல் உரிமைகள், சமூக அபிவிருத்தி, அடிப்படை வசதிகள் போன்றவற்றைக்கூட இரண்டாம் பட்ஷமாக்கிவிட்டு தற்போதைய கைதுகளிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதிலேயே அதிகளவு அக்கறை கொள்ளவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளார்கள்! இனப்பிரச்சினை, வடக்கு கிழக்கு மற்றும் மலையக மக்களின் பிரச்சினையாகக் கருதாமல், எமது நாட்டு பொருளாதாரத்தின் ஆணி வேரையே ஆட்டம் காணவைக்கின்ற சாபக்கேடு என்பதை உளமார சிந்திக்கவேண்டிய தேவை அனைவருக்கும் ஏற்பட்டிருக்கிறது. இந்நாட்டின் வளமிக்க பொருளாதாரத்தை எவர் கட்டி எழுப்புகின்றாரோ, அவரை இந்நாட்டின் இலட்சியத் தலைவராக இலங்கை வரலாறு ஏற்றுக்கொள்ளும். அதை விடுத்து, இன அழிவுக்கும் நாட்டின் பொருளாதார சீரழிவுக்கும் களம் அமைக்கின்ற ஆட்சிக் காலங்களை வரலாற்றில் கறைபடிந்த ஏடுகளாகவே எதிர்காலம் கணிக்கும்.

மலையக சமூக அபிவிருத்தி என்பது பேரளவில் அமைச்சுப் பதிவிகளாலோ ஒரு சிறு நிதி ஒதுக்கீட்டாலோ சாத்தியப்படக் கூடியதல்ல. நூற்றாண்டு காலமாக அசட்டை செய்யப்பட்ட இந்த சமூகம் ஏனைய சமூகத்துக்கு நிகரான அந்தஸ்தைப் பெறவேண்டுமென்றால் நீண்ட கால பாரிய செயல்திட்டம் உருவாக்கப்படல் வேண்டும். அதனை செய்து முடிப்பதற்கேற்ப, கால இலக்கும் தீர்மானிக்கப்படல் வேண்டும். இந்த கால அவகாசத்தில் செய்து முடிக்கத் தக்கதான நிதி வழங்கப்படுவதோடு தேவையான மேலதிக நிதியை வெளிநாட்டு உதவிகளோடு பெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். இவற்றைப்பற்றியெல்லாம் தீர்மானிக்காமல், வெறுமனே எனக்கு வழங்கப்பட்டிருக்கின்ற அமைச்சினூடாக மட்டும் சமூக அபிவிருத்தியை சாதிக்க முடியுமென எதிர்பார்ப்பது கயிற்றால் கட்டி மலையை இழுப்பதற்குச் சமனாகும். எனவே, சாதிக்கக் கூடிய இலக்கைச் சென்றடைவதும், தற்காலிக நிவாரணத்தையேனும் ஏற்படுத்தித் தருவதுமே இந்த அமைச்சின் மூலம் செய்யக்கூடிய ஆகக் கூடுதலான செயல்பாடுகளாக இருக்கின்றன. இந்த அடிப்படையில்தான், இந்த அமைச்சுப் பொறுப்பை ஏற்றுள்ளதை பெரிய சாதனையாகக் கருதாமல், கிடைத்த சந்தர்ப்பமாகக் கருதி சில திட்டங்களை செயல்படுத்த முனைந்திருக்கின்றேன்.

நான் வீடமைப்பு அமைச்சிலே 1994 ஆம் ஆண்டு தொடக்கம் "தோட்ட வீடமைப்பு" பிரதி அமைச்சராக இருந்த காலத்தில் 50 ஆயிரம் தனித்தனி வீடுகளை தோட்டத் தொழிலாளர்கள் அமைத்துக் கொள்வதற்கேற்றத் திட்டத்தை வெற்றிகரமாக செய்து முடித்திருந்தேன். அதே விதமான வீடமைப்புத் திட்டங்களை தற்போதைய எனது அமைச்சின் மூலமாக மேற்கொள்ள வேண்டுமென ஜனாதிபதியிடம் கோரியிருக்கின்றேன். இது செயற்படுத்தப்படத் தொடங்கும்போது இவ்வமைச்சின் பணி மிக முக்கியமானதாக மலையக மக்கள் வரலாற்றில் பதியப்படும் என எதிர்பார்க்கின்றேன். மலையக மேம்பாட்டுக்கான நீண்டகால பாரிய திட்டமொன்று கல்விமான்களாலும் மலையக சமூக ஆய்வாளர்களாலும் வரையப்பட்டுள்ளது. இதற்கான அங்கீகாரத்தையும் அமைச்சரவை ஏற்கனவே வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் பல அம்சங்கள் "மகிந்த சிந்தனையாலும்" தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. இதனை நடைமுறைப்படுத்துவதற்கு எனது அமைச்சுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதும் எனது கோரிக்கையாகும். இதற்கான வாய்ப்பையும் ஜனாதிபதி ஏற்படுத்தித் தருவாரென எதிர்பாக்கின்றேன். இதனால் பாரிய முன்னேற்றங்களை மலையகத்தில் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்.

எனது அமைச்சின் வேலைத்திட்டங்களை உருவாக்குவதிலும் அதனை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதிலும் எனக்கு பக்க பலமாக இருந்துள்ள எனது அமைச்சின் செயலாளர் யு.ஏ.செனவிரத்ன அவர்களுக்கு விஷேடமாக எனது நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவிக்க விரும்புகிறேன்.

மேற்படி பணிகளில் உற்சாகமான பங்களிப்பை நல்கிய அமைச்சின் அனைத்து உத்தியோகத்தர்களுக்கும், தனிப்பட்ட உத்தியோகத்தர்களுக்கும் எனது அன்பான பாராட்டுக்கள் உரித்தாகும்! மாவட்டங்கள் தோறும் அமைச்சின் செயல் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு பெரும் துணையாக இருந்து செயல்பட்ட மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைத் தலைவர்கள், உறுப்பினர்கள், மற்றும் சமூக சேவை நிறுவனங்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கின்றேன்.

சமுதாதய அபிவிருத்தி, சமூக அநீதி ஒழிப்பு அமைச்சின் 2007 ஆம் ஆண்டுக்குரிய கடந்த ஒரு வருட காலப்பகுதிக்குள்ளான அமைச்சின் செயலாற்றங்கள், அமுல்படுத்தப்பட்ட திட்டங்கள், நிறைவேற்றிய பணிகள் என்பன தொடர்பாகவும், எதிர்வரும் 2008 ஆம் ஆண்டு நிதியாண்டில் எனது அமைச்சினால் முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் மற்றும் அது தொடர்பாக அரசிடமிருந்து எதிர்பார்க்கப்படும் தேவைகள், உதவிகள் தொடர்பானவற்றை பாராளுமன்றத்தின் கௌரவ உறுப்பினர்களிடம் சமர்பிக்க கிடைத்தமையையிட்டு மிக்க மகிழ்ச்சியடைகிறேன். சமூக ஏற்றத்தாழ்வுகளற்ற தேசத்தை கட்டியெழுப்பும் இலக்கினையும் அபிவிருத்தியில் சமூக நீதியையும் சமத்துவத்தையும் பரவலாக்கும் உயர் எதிர்பார்ப்புடனும் "சமத்துவத்தினைக் கொண்டதொரு சமூகத்தை நோக்கி" என்ற நோக்குடன் 2006 ஆம் ஆண்டு செப்டெம்பர் 14 ஆம் திகதி சமுதாய அபிவிருத்தி மற்றும் சமூக அநீதி ஒழிப்பு அமைச்சு,மஹிந்த சிந்தனையின் இலக்குகளை அடிப்படையாகக் கொண்டு, ஜனாதிபதியால் ஸ்தாபிக்கப்பட்டு, அதன் அமைச்சராக நான் நியமிக்கப்பட்டேன். சமுதாய அபிவிருத்தி செயற்பாட்டின் மூலமான வலுவூட்டலினூடாக குறைந்த வரப்பிரசாதங்களைக் கொண்ட சமூகங்கள் எதிர்நோக்குகின்ற சமூக முரண்பாடுகளை ஒழித்தல் எனும் செயற்பணியை இவ்வமைச்சு மேற்கொண்டுள்ளது.

இச்செயற்பணியின் உப கூறுகளான; சமுதாய அபிவிருத்திக்கான கொள்கைகளைத் தயார் செய்வதும் அமுல்படுத்துவதும், சமுதாய அபிவிருத்தி மற்றும் சமூக முரண்பாடுகளை ஒழிப்பது பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல், சமூக முரண்பாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ள சமுதாயத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான வசதிகளைச் செய்தல், குறைந்த உரிமைகளைக் கொண்ட சமூகத்திற்கு வலுவூட்டல், அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்தல், சமூக அமைப்புக்களின் ஆற்றல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்தல் என்பனவாகும். சமூக முரண்பாடுகளை நீக்கி, சமூகங்களுக்கிடையில் நிலவும் அபிவிருத்தியில் சமத்துவமின்மையை இல்லாதொழிப்பதுடன், பாகுபாடு காட்டல்,மற்றும் இன, கலாசார,சமய அந்தஸ்து ரீதியிலான புறக்கணிப்பு என்பனவற்றின் விளைவாக வறுமை, கல்வி அறிவின்மை, குடியியல் அந்தஸ்து இன்மை, தொழிலின்மை, மனித உரிமை மீறல்கள், போன்ற இன்னோரன்ன சமூக அநீதிகளை ஒழித்து சமூதாய அபிவிருத்தியை ஏற்படுத்துவதனை நோக்காகக் கொண்டதாக இவ்வமைச்சு விளங்குகிறது. மேலும் இவ்வமைச்சு இந்நாட்டின் குறைந்த வரப்பிரசாதங்களைக் கொண்ட மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டு செயற்படுகின்றது.

சுதந்திர இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகள், இந்நாட்டின் வாழும் வேறுபட்ட சமூகப் பிரிவினர்களுக்கு இடையில் பரவலாக்கப்படாமல் சமூகங்களிடையே சமத்துவம் ஏற்படுவதை ஊக்கப்படுத்தவில்லை. அரசியல் நோக்கில், பிரதேசம் மற்றும் இன நலன்களை மையப்படுத்தி, ஐம்பது வருடங்களுக்கு மேலாக கைக்கொள்ளப்பட்டுவரும் செயற்பாடுகளின் விளைவாக மலையக சமூகத்தைப்போன்று பல சமூகங்கள் மிகவும் பின்தங்கிய நிலையிலும், அனைத்து அம்சங்களிலும் பலவீனமடைந்த நிலையிலும், தேசிய நீரோட்டத்திலிருந்து ஓரங்கட்டப்பட்டதாயும் காணப்படுகின்றன

*மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் சமுதாய அபிவிருத்தி, சமூக அநீதி ஒழிப்பு அமைச்சருமான பெ.சந்திரசேகரன் வரவு - செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை

பெருந்தோட்டத்துறை சமூகம்,மீனவர் சமூகம், நகர்ப்புற சேரிகளில் வாழும் சமூகம், நகர்ப்புற சுத்திகரிப்பு தொழிலாளர் சமூகம், பின் தங்கிய கிராமப்புற சமூகம் போன்றவை இவற்றுள் சிலவாகும். இச்சமூகத்தினர் நாட்டின் பல பாகங்களிலும் பரந்து வாழ்கின்றனர். இச்சமூகத்தினரிடையே நிலவும் சமூக சமத்துவமின்மையை இல்லாதொழித்து அவர்களும் தேசிய நீரோட்டத்துடன் ஒன்றிணையும் வகையில் சமூதாய அபிவிருத்தி செயற்பாடுகளையும், வேலைத்திட்டங்களையும் ஒதுக்கப்பட்ட இச்சமூகத்தினரிடையே முன்னெடுப்பதே இவ்வமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள பணியாகும். இந்த அமைச்சும் அதன் செயற்பாடுகளும் புதிதாக ஏற்படுத்தப்பட்டவையாகும். இந்த அமைச்சு ஸ்தாபிக்கப்பட்டபோது அமைச்சிற்கான ஆளணியினரோ, அமைச்சிற்கான கட்டிடமோ, ஏனைய பௌதீக வளங்களோ இருக்கவில்லை, இன்றைய முன்னேற்றமும் வளர்ச்சியும் கடந்த ஒருவருட காலப்பகுதியில் படிப்படியாக ஏற்படுத்தப்பட்டவையாகும்.

வேலைத் திட்டங்களை அமுல்படுத்த போதியளவு உத்தியோகத்தர் இல்லாதிருந்தமையும், அபிவிருத்தி வேலைத் திட்டங்களை அமுலாக்க அமைச்சின் கீழ் நிறுவனமேதும் இன்மையும், அடித்தள மக்களுடன் அமைச்சின் செயற்பாடுகளை ஒன்றிணைப்பதற்கான வலையமைப்பு இல்லாதிருந்தமையும் நாம் எதிர்நோக்கிய தலையாய பிரச்சினைகளாக இருந்தன. இச்சிக்கல்களை எமது அபிவிருத்தி செயற்பாடுகளுக்குத் தடையாகக் கொள்ளாது மாற்று வழிகளைப் பின்பற்றி அமைச்சின் பணிகளை செயற்றிறன் மிக்கதாக முன்னெடுத்துள்ளோம். எனது அமைச்சின் செயலாற்றத்துக்கான பரப்பு, புவியியல் மற்றும் சமூக வரையறைகளைக் கொண்டிராது, நாட்டின் அனைத்து பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்தக்கூடியதும், பின்தங்கிய சமூகங்களின் மேம்பாடு தொடர்பில் அனைத்து சமூகங்களுக்கும் சேவையாற்றக் கூடியதாகும். ஆயினும், கடந்த நிதியாண்டில் எமது அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் அளவு, அமைச்சின் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் நிலவிய ஆளணியினர் பற்றாக்குறை, பௌதிக வளங்களின் பற்றாக்குறை, அமைச்சின் செயற்பாடுகளை புதிதாக கட்டியெழுப்புவதில் நாம் எதிர்நோக்கிய சவால்கள் காரணமாக, 2007 ஆம் ஆண்டில், சமூக அநீதிக்கு ஆட்பட்டு பலவீனமான நிலையிலுள்ள அனைத்து சமூகங்களுக்கும் எனது அமைச்சின் பணிகளை விரிவுபடுத்த இயலாத நிலையேற்பட்டது. எனினும், இந்நாட்டில் வாழும் பின்தங்கிய சமூகங்களில் பிரதானமானதும், முழுவதும் பாதிப்புக்குள்ளானதும் 15 இலட்சம் மக்களையும், தோட்டத் தொழிலாளர்களை பெருமளவில் உள்ளடக்கியதுமான மலையக சமூகத்தினரிடையே சமுதாய அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்தல் மற்றும் சமூக அநீதியை இல்லாதொழித்தல் தொடர்பாக பல்வேறு அபிவிருத்தி செயற்பாடுகளை எனது அமைச்சு சிறப்பாக முன்னெடுத்திருப்பதை இந்த சபையில் அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த ஒன்றரை நூற்றாண்டுக்கும் மேலாக, நாட்டின் மொத்த தேசிய உற்பத்திக்கும், அந்நிய செலாவணி உழைப்பிற்கும், அரசின் அபிவிருத்தித் திட்டங்களுக்கும் வரி வழங்கல் மூலம் நிதியீட்டம் செய்து வருவதன் மூலமும் இலங்கை பொருளாதாரத்தில் முக்கிய கைத்தொழில் ஒன்றாக விளங்கும் பெருந்தோட்டத்துறை சார்ந்த சமூகத்தின் மேம்பாடு தொடர்பில் இவ்வரசாங்கம் அதிக கவனம் செலுத்துவது பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.

பின்னடைவான சமூக, பொருளாதார நிலைமைகளையும் சமூக உட்கட்டமைப்பில் பல்வேறு பலவீனங்களையும் கொண்டுள்ள இந்த சமூகத்தை சமத்துவம்,கௌரவமான வாழ்க்கைச் சூழல், சமூக பாதுகாப்பு ஆகியன நிறைந்த ஒரு சமூகமாக கட்டியெழுப்புவதில் பல சவால்களை எனது அமைச்சு சந்திக்கிறது.

2007 ஆம் ஆண்டில் எமக்கு வழங்கப்பட்ட மூலதன நிதி 150 மில்லியன் ரூபா. இச்சிறுதொகையினை உச்ச அளவிலும் திறனான முறையிலும் பயன்படுத்தும் வகையில் அபிவிருத்தித் திட்டங்கள் தயார் செய்யப்பட்டு, தற்போது அவை முழுமையாக நிறைவேற்றப்பட்ட நிலையில் உள்ளன.

அடுத்துவரும் நிதியாண்டில் எமது அமைச்சு பின்வரும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும்.

குழந்தை பராமரிப்பு மற்றும் பாலர் கல்வி அபிவிருத்தியினை முன்னெடுத்தல்,

சனசமூக நிலையங்களை நிறுவுதல்,

சமூகங்களுக்கிடையே புரிந்துணர்வினையும் நல்லிணக்கத்தினையும் ஏற்படுத்தல்.

விளையாட்டு பயிற்சி முகாமை நடாத்துதல், பொழுதுபோக்கு வசதிகளை விஸ்தரித்தல் மற்றும், விளையாட்டு மைதானங்களை புனரமைத்தலும் ஸ்தாபித்தலும்,

மனித உரிமைகள் பற்றிய வழிப்புணர்வினையும் பயிற்சியையும் வழங்குதல்,

வீதி மற்றும் நடைபாதைகளை புனரமைத்தல்.

தொலைத் தொடர்பு வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல்.

கலாசார நடவடிக்கைகளை மேம்படுத்தலும் கலாசார நிலையங்களை ஸ்தாபித்தலும்.

முதியோர் பராமரிப்பு மற்றும் சமூக பாதுகாப்பினை ஏற்படுத்தல்.

வாழ்க்கைத் தொழில் மற்றும் தொழிற்பயிற்சிகளை வழங்குதல்

மாற்று ஜீவனோபாயத்தினை அபிவிருத்திசெய்தல்.

சமூகத்தில் பெண்கள் மேம்பாட்டுத் திட்டங்களை முன்னெடுத்தல்,

சுயதொழில் பயிற்சிகளை வழங்குதல்

வாசிகசாலையை ஏற்படுத்தலும் வயதுவந்தோருக்கான கல்வியை வழங்கலும்,

இளைஞர் பயிற்சி முகாமினை நடத்தலும் பல்திறன்சார் பயிற்சினை வழங்கலும்.

சுகாதாரம் மற்றும் போசாக்கு வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல்.

மது பாவனை எதிர்ப்புப் பிரசாரம் மேற்கொள்ளல்,

நீர்வழங்கல், வடிகாலமைப்புகள் சீர்செய்தல்,

மின்சாரம் வழங்கல்

ஆளுமை விருத்திக்கான பயிற்சினையும் வழிகாட்டுதலையும் வழங்குதல்

குடியியல் ஆவணங்களைப் பெற்றுக்கொடுத்தல் மூலம் பிரஜைக்கான அந்தஸ்தினை மேம்படுத்தல்.

முறைசார் கல்வியினை விரிவுபடுத்துவதற்கான ஊக்குவிப்புகளை வழங்குதல்.

உயர் கல்விக்கான வாய்ப்புக்களை விருத்திசெய்தல்.

மேற்படி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான உபாய மார்க்கமாக பின்வரும் செயற்பாடுகளை எமது அமைச்சு எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.

தோட்டங்களில் கிராம அபிவிருத்தி சங்கங்களை ஸ்தாபித்தல்.

சமுதாய அபிவிருத்தியினை துரிதப்படுத்துவதற்கு ஏற்றவாறு இளைஞர்களை உள்ளடக்கிய தொண்டர் அபிவிருத்திக் குழுக்களை கட்டியெழுப்புதல்.

மக்கள் அடிப்படை அமைப்புகளை உருவாக்கி பலவீனப்பட்ட மக்கள் குழுக்களை வலுப்படுத்தலுக்கூடாக சுய அபிவிருத்திக்கான உந்துதலை வழங்குதல்.

பெருந்தோட்ட குடியிருப்புகளை தேசிய நீரோட்டத்துடன் ஒன்றிணைப்பதற்கும் பொது நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் கொண்டுவருவதற்கும் ஏற்றவாறு புதிய பிரதேச செயலகங்களை ஸ்தாபிப்பதற்கான வழிமுறைகளையும் மேற்கொள்ளல்,

உயர் கல்வி நிறுவனங்களையும் தொழில்நுட்ப நிலையங்களையும் ஸ்தாபிப்பதற்கும் விரிவுபடுத்துவதற்குமான நடவடிக்கை மேற்கொள்ளல்.

பல்வேறு சர்வதேச உதவியமைப்புகளின் நிதியுதவியுடனும் அரசினது வழிகாட்டலுடனும் புதிய அபிவிருத்தித் திட்டங்களை உருவாக்கி அமுலாக்குதல்.

வேறு அமைச்சுகளுடன் கூட்டிணைந்து பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்தல்.

அரசசார்பற்ற அமைப்புகள், தொண்டர் அமைப்புகள், சமூக தாபனங்கள் என்பவற்றுடனான வலைப்பின்னலொன்றை உருவாக்குதல்.

எனவே எதிர்வரும் நிதியாண்டில் மேற்குறித்த வேலைத்திட்டங்களையும் சீரான நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களினதும் அரசினதும் வழிகாட்டலையும் போதுமான நிதியொதுக்கீட்டையும் ஏனைய உதவிகளையும் ஆதரவினையும் நானும் எனது அமைச்சின் செயலாளரும் ஏனைய உத்தியோகத்தர்களும் எதிர்பார்க்கின்றோம்.

0 Comments: