Friday, August 15, 2008

அதிரும் அம்பாறையின் உண்மை நிலவரம் என்ன?

கிழக்கு மாகாணம் விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டதாக மகிந்த ராஜபக்ச அரசு மேற்கொண்டு வரும் பிரசாரத்தின் பின்னணியில் எத்தகைய உள்நோக்கங்கள் உள்ளன என்பது சிங்கள அரசு காலகாலமாக மேற்கொண்டு வந்த பிரசார தந்திரத்தை அறிந்த யாவருக்கும் நன்கு புரியும்.

விடுதலைப் புலிகளுடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பிரசார பொருளாக முன்வைத்து ரணில் விக்கிரமசிங்கவின் கடந்த அரசு, சர்வதேச சமூகத்திடம் நிதிஉதவிகளை கறந்து தென்னிலங்கையை அபிவிருத்தி செய்ய என்ன வகையான வியூகங்களை வகுத்ததோ அதனையே இன்று மகிந்த அரசு கிழக்கு விடுதலை என்ற மாற்று உபாயத்தினூடாக அணுகி வருகிறது.

மகிந்த படைகளால் விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், வடக்கிற்குத்தான் போர் அரங்கு என்ற இடம்பெயர்க்கப்பட்ட ஒரு போரியல் பார்வையின் பின்னணியில் மறைக்கப்பட்டிருக்கின்றன என்பதுதான் உண்மை.

கிழக்கில் புலிகளை முற்றாக அழித்தொழித்து விட்டு தற்போது வடக்கில் பெரும் படை நடவடிக்கையை மேற்கொண்டு அங்கு புலிகளை அடியோடு ஒழிப்பதாக மகிந்த அரசு குவியப்படுத்தியிருக்கும் ஒருவித மாயத்தோற்றம், சிறிலங்காவின் படைத்துறை தொடர்பாக ஆய்வு செய்பவர்களையும் வடக்கின்பால் ஈர்த்து வைத்திருக்கிறது.

ஆனால், கிழக்கில் புலிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் சிறிலங்கா படைகளுக்கு நாள்தோறும் எவ்வகையான இழப்புக்களை ஏற்படுத்தி வருகின்றன என்பதை விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல்துறை அண்மையில் விடுத்த அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

மகிந்தவின் கிழக்கு விடுதலை என்ற கோசத்திற்கு பிறகு அம்பாறையில் மாத்திரம் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர், இராணுவத்தினர், ஊர்காவல் படையினர், துணை இராணுவக்குழுவினர் என 165 பேர் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர். 208 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த அறிக்கை விடுக்கப்பட்ட நாள்வரை பார்க்கப்போனால், கிழக்கு முற்றுமுழுதாக தம்மால் கைப்பற்றப்பட்டு விட்டதாக சிறிலங்கா அரசு அறிவித்தநாள் முதல் - கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் - இற்றைவரை கடந்த ஒருவருட காலப்பகுதியில் சிறிலங்கா அரசு 165 பேரை இழந்திருக்கிறது.

அதாவது, மாதம் ஒன்றுக்கு சராசரியாக - அண்ணளவாக - 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 17 பேர் காயமடைந்துள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு ஒருவர் கொலை, ஒருவர் காயம் என்ற ரீதியில் தாக்குதலை சந்தித்துவரும் ஒரு படை, தான் கைப்பற்றியிருக்கும் நிலப்பகுதியை எதிரியிடமிருந்து மீட்டுவிட்டதாக கூறுவதில் எவ்வளவு தூரம் உண்மை உள்ளது என்பதை சிறிலங்கவில் உள்ள எந்த இராணுவ ஆய்வாளர்களும் தமது பத்திரிகைகளில் எழுதி இராணுவத்தின் தாக்குதலுக்கு முகம்கொடுக்க தயாராக இல்லை என்பதே யதார்த்தம்.

இதன் பின்னணியில், அம்பாறையில் முற்றுமுழுதான பொறுப்பை எடுத்துள்ள சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் எவ்வாறு புலிகளின் தாக்குதல்களை சந்தித்து வருகின்றனர் என்ற களநிலை நோக்குவது இங்கு அவசியமாகிறது.

அம்பாறையில் விடுதலைப் புலிகளின் முக்கிய இருப்பிடமாக கருதப்படுவது கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியாகும். இந்த விடயம் படையினருக்கும் நன்கு தெரியும். ஆனால், அங்குள்ள புலிகளை தேடியழிக்கும் நோக்குடன் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில்தான் பெரும்பாலான படையினர் கொல்லப்பட்டுள்ளார்கள்.

இவற்றைவிட, அங்குள்ள புலிகள் காட்டை சுற்றி அமைக்கப்பட்டுள்ள உன்னிப்பான பாதுகாப்பு அரண்களை ஊடறுத்து வந்து அம்பாறையின் முக்கிய பகுதிகளில் நிலைகொண்டுள்ள படையினர் மீதும் பல துணிகரத்தாக்குதல்களை மேற்கொண்டு படைத்தரப்புக்கு பாரிய இழப்புக்களை ஏற்படுத்தியுள்ளனர்.

கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியின் உள்ளிருந்து வெளியேயோ வெளியிலிருந்து உள்ளேயோ புலிகளின் ஊடுருவல் இடம்பெறக்கூடாது என்பதற்காக அந்த வனப்பகுதியை சுற்றி சமார் 20 க்கும் மேற்பட்ட பாரிய காவலரண்களை படையினர் அமைத்துள்ளனர்.

அந்த வனப்பகுதியை சுற்றி வடக்கிலிருந்து தெற்காக சாகாமம், காஞ்சிரங்குடா, கஞ்சிகுடிச்சாறு, கோட்டையாறு, சங்கம்சந்தி, தங்கவேலாயுதபுரம், உடும்பன்குளம், கோமாரி, ஊரணி, நொட்டை ஆகிய பகுதிகளிலிலும் -

வனப்பகுதியின் மறுபகுதியில் தெற்கிலிருந்து வடக்காக வக்குமுட்டியாவ, கோயில்கண்ட, பன்னரகம ஆகிய பகுதிகளிலும் -

வனப்பகுதியின் கிழக்கிலிருந்து மேற்காக நொட்டை, செங்காமம், லகுவனை, காணுவ, உலானுவ ஆகிய பகுதிகளிலும் -

வனத்தின் மறுபகுதியில் மேற்கிலிருந்து கிழக்காக மாந்தோட்டம், வம்மியடி, வேட்டேரி, முகமாலகட ஆகிய பகுதிகளிலும் - பாரிய படை முகாம்கள் அமைக்கபட்டுள்ளன.

இவற்றில், வக்குமுட்டடியாவ, கோயில்கண்ட, பன்னரகம, மாந்தோட்டம், ஊரணி, நொட்டை ஆகிய படை முகாம்களில் இராணுவத்தினரும் ஏனைய படை முகாம்களிலும் சிறப்பு அதிரடிப்படையினரும் நிலைகொண்டுள்ளனர்.

இவற்றைவிட கண்ணகிபுரம், திருக்கோவில், அக்கரைப்பற்று, கேரைதீவு உட்பட அம்பாறையின் ஏனைய பகுதிகளில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட முக்கிய முகாம்களிலும் ஏனைய சிறு முகாம்களிலும் நிலைகொண்டுள்ள அதிரடிப்படையினர் அந்தந்த பகுதிகளில் புலிகளை தேடியழிக்கும் நடவடிக்கைகளை தினமும் மேற்கொண்டு வருகின்றனர்.

இவற்றுக்கு எல்லாம் தலைமையகமாக அம்பாறை கொண்டயீட்டுவானில் அதிரடிப்படை தலைமைப்பீடம் அமைந்துள்ளது.

களத்தில் நடவடிக்கைகளை நெறிப்படுத்தும் பிரதான தளமாக அதிரடிப்படையினரின் கஞ்சிகுடிச்சாறு படைமுகாம் செயற்பட்டு வருகிறது.

இவற்றில் மாந்தோட்டம் இராணுவ முகாமில் உள்ள படையினரின் ஆட்லறித்தளத்திலிருந்தும் கோட்டையாறு உட்பட சில முக்கிய அதிரடிப்படை முகாம்களிலிருந்தும் கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியை நோக்கி அடிக்கடி ஆட்லறித்தாக்குதல் மற்றும் மோட்டார் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதுண்டு.

அம்பாறை பூராகவும் பரந்துள்ள ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட இந்த அரச படையினர் கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியில் உள்ள புலிகளை தேடியழிக்கும் நோக்குடன் இதுவரை சுமார் நூறுக்கும் மேற்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு விட்டனர். ஒவ்வொரு நடவடிக்கைக்கும் குறைந்தது 600 முதல் சுமார் 2,000 வரையான படையினர் பயன்படுத்தப்படுகின்றனர்.

காட்டுப்பகுதிகளுக்குள் ஊடுருவி அங்கு புலிகளின் நிலைகளை அழித்து அங்குள்ள புலிகளை ஒழிக்கும் நோக்குடன் கடந்த தடவைகளில் மேற்கொள்ளப்பட்ட படையினரின் பாரிய நடவடிக்கைகள் எவையும் இதுவரை எந்த வெற்றியையும் அவர்களுக்கு பெற்றுக்கொடுக்கவில்லை.

மாறாக, இவ்வாறு ஊடுருவும் படையினர் புலிகளின் பொறிவெடிகள், மிதிவெடிகள் ஆகியவற்றினால் பாரிய இழப்புக்களையே சந்தித்துள்ளனர்.

இக்காட்டுப்பகுதிக்குள் ஊடுருவும் மற்றும் ரோந்து வரும் படையினரின் வருகைக்கு ஏற்றவாறு புலிகள் மேற்கொள்ளும் கச்சிதமான பொறிவெடி தாக்குதல்கள் படையினருக்கு உயிழப்புக்களைவிட களமுனைக்கு மீளதிரும்ப முடியாத படுகாயங்களை ஏற்படுத்தி அவயவங்களை காவு கொண்டுள்ளன.

இவ்வாறு அம்பாறை காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்து புலிகள் மேற்கொள்ளும் தாக்குதல்களில் ஊடகங்களில் பேசப்பட்ட சம்பவங்களாக மகிந்தவின் பாதுகாப்பு அணியிலுள்ள உலங்குவானூர்தி மீதான தாக்குதலும் படையினரின் யால முகாம் தாக்குதலையும் குறிப்பிடலாம்.

ஆனால், இவற்றை விட பல்வேறு வகைகளில் அம்பாறையின் பல்வேறு இடங்களில் புலிகள் மேற்கொண்டுள்ள தாக்குதல்கள் படையினருக்கு புலிகளின் கெரில்லா போர்முறை தொடர்பான தேர்ச்சியை உணர்த்தியிருக்கிறது.

இவற்றில் முக்கியமான சம்பவங்களாக -

அம்பாறை மாவட்டத்தில் வீரச்சாவடைந்த முதலாவது பெண் மாவீரர் நிலாமதியின் முதலாம் மாத நினைவாக கடந்த ஜனவரி மாதம் நான்காம் திகதி பொத்துவில் - மொனராகல வீதியில் மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் சிறிலங்கா விசேட அதிரடிப்படையின் பொத்துவில் பிரதேச உதவி கட்டளைத் தளபதி சிசிரகுமார உட்பட மூவர் கொல்லப்பட்டமை -

அம்பாறையில் தமிழ்மக்கள் கடத்தப்பட்டு படுகொலை மற்றும் சித்திரவதை ஆகியவற்றுக்கு பிரதான சூத்திரதாரியாக காணப்பட்ட சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை உயரதிகாரி கராட்டி என்பவரது அணியை வழிமறித்து விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் அவர் உட்பட 12 பேர் கொல்லப்பட்டமை ஆகியவற்றையும் குறிப்பிடலாம்.

அம்பாறை பகுதிகளில் பல்வேறு இடங்களில் படையினருக்கு எதிராக துணிகரத் தாக்குதல்களை மேற்கொண்ட லெப். கேணல் பவமாறனின் துணிச்சல் அங்குள்ள படையினருக்கு உண்மையிலேயே கலக்கத்தை ஏற்படுத்தியது என்று கூறலாம்.

அவர் உட்பட லெப். கேணல் அயோனி, லெப். கேணல். மிதுலன் ஆகியோர் கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் 15 ஆம் திகதி தவறுதலாக வெடிவிபத்தில் வீரச்சாவை தழுவிக்கொண்டனர்.

இவர்களது ஒரு மாத நினைவு தின தாக்குதலாகவே யால முகாம் மீது புலிகளின் அணிகள் ஊடுருவி தாக்குதல் ஒன்றை அதே ஆண்டு ஒக்டோபர் 15 ஆம் திகதி மேற்கொண்டிருந்தனர்.

தவமாறன் தலைமையில் புலிகளின் இரண்டு மூன்று பேர் கொண்ட அணி அம்பாறையின் பல்வேறு பகுதிகளிலும் அதிரடிப்படையினருக்கு எதிராக மேற்கொண்ட தாக்குதல்கள் படையினருக்கு பெரும் இழப்புக்களை ஏற்படுத்தியிருந்தன.

வக்குமுட்டியாவ அதிரடிப்படை முகாமிலிருந்து வரும் ரோந்து அணிகள் மற்றும் காட்டுக்குள் ஊடுருவும் அணிகள் ஆகியவற்றின் மீது பவமாறனின் தலைமையிலான அணி தொடுத்த தாக்குதல்கள் அதிகம் என்று கூறலாம்.

பவமாறன் உயிரிழப்பதற்கு முதல் நாளும் கஞ்சிகுடிச்சாறு பகுதியில் ரோந்து சென்ற படையினரை பின்தொடர்ந்து சென்ற பவமாறனின் ஐந்து பேர் கொண்ட அணி சரமாரியான தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிவந்தது.

அதேநாள் - காஞ்சிரங்குடா - கோட்டயாறு வீதியில் பவமாறன் மூன்று பேருடன் சென்று கண்ணிவெடித்தாக்குதல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரும் வக்குமுட்டியாவ படைமுகாமுக்கு அண்மையாக உள்ள வீதியில் 18 கிலோகிராம் எடையுள்ள கிளைமோர் ஒன்றை பொருத்திவிட்டு அருகிலிருந்த சிங்கள குடியேற்றத்திட்டத்திலிருந்��
� வாழைத்தோட்டத்திற்குள் பதுங்கியிருந்து படையினர் ரோந்துவந்த போது நடத்திய தாக்குதலில் எட்டுப் படையினர் அந்த இடத்திலேயே பலியானார்கள்.

இவ்வாறாக படையினர் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கும்போதெல்லாம் - 'இறந்த படையினரின் ஆத்மா சாந்தியடையும் முகமாக" - மாந்தோட்டம் மற்றும் இதர பகுதிகளிலிருந்து கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியை நோக்கி படையினர் ஆட்லறி மற்றும் மோட்டார் தாக்குதல்களை மேற்கொள்வது வழக்கம்.

இதேவேளை, படையினருக்கு எதிராக அரச கட்டுப்பாட்டு பகுதியில் தாக்குதல் நடத்த சென்ற விடுதலைப் புலிகளின் போராளிகள் சிலர் காட்டிக்கொடுக்கப்பட்டு உயிரிழந்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

அம்பாறை அட்டாளைச்சேனை பகுதியில் உள்ள முல்லைத்தீவு என்ற இடத்தில் பணிநிர்த்தம் சென்றுகொண்டிருந்த மேஜர் புரட்சிமாறன், லெப். தனோஜன் ஆகியோரை பிற சமூக கடை உரிமையாளர் ஒருவர் தகவல் கொடுத்ததால் அதிரடிப்படையினர் சுற்றிவளைக்க அவர்கள் இருவரும் நஞ்சுண்டு வீரச்சாவடைந்தனர்.

அண்மையில் அம்பாறையில் படுகொலை செய்யப்பட்ட நிமால் லுகோ என்ற படைப்பொறுப்பதிகாரியை படுகொலை செய்யும் நோக்குடன் அரச கட்டுப்பாட்டுபகுதிக்கு கிளைமோருடன் சென்ற மூன்று போராளிகள் காட்டிக்கொடுக்கப்பட்டதால் வீரச்சாவடைந்தார்கள்.

இவ்வாறு, அம்பாறை களம் என்பது செய்தி வெளிவராத மர்மமான மயானமாக அதிரடிப்படையினருக்கு இருந்து வருகிறது என்பதுதான் உண்மை.

வடக்கில் போர் நடத்தும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா - 'தமது நடவடிக்கையின் நோக்கம் இடங்களை பிடிப்பதல்ல. புலிகளை அழிப்பதே" - என்று கூறியுள்ளார்.

ஆனால், அம்மாதிரியாக நடவடிக்கையை விடுதலைப் புலிகளே கிழக்கில் மேற்கொண்டு வருகிறார்கள் என்பதுதான் யதார்த்தம்.

அண்மையில், அம்பாறையில் மேற்கொள்ளப்பட்ட நிமால் லுகே என்ற படைப்பொறுப்பதிகாரி என்பவரின் மீதான புலிகளின் மின்னல் வேக அதிரடி தாக்குதலையும் அரச தரப்பு மூடிமறைத்துள்ளது.

ஆனால், நிமால் லுகே என்ற பெயரின் கீழ் அம்பாறை வைத்தியசாலையில் உடலம் கையேற்கப்பட்டிருக்கின்றமை மற்றும் உடலத்தை சம்பவ இடத்திலிருந்து எடுத்துச் செல்வதற்கு முக்கிய படை அதிகாரிகள் வந்தமை மற்றும் உயிரிழந்தவர் இரண்டு சிவப்பு நட்சத்திர சின்னம் அணிந்திருந்தமை ஆகியவற்றின் மூலம் உயிரிழந்தவர் முக்கிய அதிகாரியே என்ற விடயம் உறுதியாகியிருக்கிறது.

இவ்வாறு, கிழக்கில் இன்னமும் சந்தித்துவரும் இழப்புக்களை மறைக்கும் நோக்குடன் தமது வடபகுதி இராணுவ நடவடிக்கை தொடர்பான செய்திகளை மிகைப்படுத்தும் இராணுவம், தென்னிலங்கை மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் கிழக்கில் அரச கொடி பறப்பதாக பொய்யான பரப்புரையை மேற்கொண்டு வருகிறது.

1992 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிறிலங்கா அரசு தலைவராக டி.பி.விஜயதுங்க பதவி வகித்த காலப்பகுதியிலும் கிழக்கு விடுதலைப் புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு அங்கு தேர்தல் நடத்தி பெரிய பெரிய அரசியல் நாடகங்கள் எல்லாம் அரங்கேற்றப்பட்டன. சர்வதேச சமூகத்துக்கு பல சங்கதிகள் கூறப்பட்டன. ஆனால், அதன் பின்னர் என்ன நடந்தது என்பது சகலருக்கும் தெரியும்.

சிறிலங்காவை பொறுத்தவரை தமிழ் மக்கள் விடயத்தில் நடைபெறும் அரசியல், இராணுவ சம்பவங்கள் எல்லாமே தென்னிலங்கை மக்களுக்கு தாம் இந்த நாட்டின் மகாபிரபுக்கள் என்பதாக காட்டிக்கொள்வதற்காக அவ்வப்போது ஆட்சிபீடம் ஏறுபவர்களால் நடத்தப்படும் போலி நாடகங்கள். அதன் ஒரு காட்சிதான் இன்று மகிந்த தரித்திருக்கும் கிழக்கு விடுதலை என்ற பாத்திரம். அதன் தொடர்ச்சியாக வடக்கில் ஒரு மாயத்தோற்றம்.

இவற்றின் முடிவுகளை அன்று முதல் இன்று வரை தமிழ்மக்களின் உரிமைகளுக்காக போராடிவரும் விடுதலைப்புலிகளே தீர்மானிக்கிறார்கள். இந்த களநிலைமையே என்றைக்கும் தொடரும்.

நன்றி:-

-ப.தெய்வீகன்-

0 Comments: