Friday, September 12, 2008

உண்மையில் புதுடில்லி தூங்குகின்றதா? அல்லது பாசாங்கு பண்ணுகின்றதா?

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறுகின்றமை போல வவுனியாவில் பாதுகாப்புப் படையினரின் தலைமையகம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல், இலங்கை விவகாரத்தில் புதுடில்லித் தரப்பின் இரட்டை வேடத்தை குட்டை ஒரேயடியாக அம்பலப்படுத்திவிட்டது.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் இலங்கை அரசுப் படைகளுக்கு இந்தியா வெறும் ஆயுதத் தளபாட மற்றும் தகவல் வசதிகளை மட்டும் வழங்கி உதவவில்லை, நேரடியாக ஆளணி உதவிகளையும் வழங்குகின்றது என்ற விடயத்தை அத்தாக்குதலில் இந்திய விமானப்படையின் சார்ஜன்ட் தரத் தொழில்நுட்பவியலாளர்கள் இருவர் காயமடைந்தமை நிரூபித்துவிட்டது.
ஏற்கனவே, ஆழ்கடலில் விடுதலைப் புலிகளின் கப்பல் நகர்வுகள் பற்றிய தகவல்களை மிகத் துல்லியமாக இலங்கைக்கு வழங்கி, புலிகளின் கப்பல்களைத் தாக்கி அழிப்பதற்கு இலங்கைக் கடற்படைக்குப் பெரிதும் உதவி வந்த இந்தியா, வான் பரப்பிலும் புலிகளின் விமானப் பறப்புகள் பற்றிய தகவல்களை இலங்கைத் தரப்புக்குக் கனகச்சிதமாக வழங்கி உதவுவதில் அளப்பரிய பங்குபணி ஆற்றி வருகின்றது என்பது இப்போது தெளிவாகியிருக்கின்றது.
இத்தகைய பணியில் இந்தியாவின் சுமார் 250 தொழில்நுட்பவியலாளர்கள் இலங்கைப் பாதுகாப்புத் தரப்புடன் சேர்ந்து இயங்குகின்றார்கள் என்று சில செய்தி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டாலும் கூட, இந்த எண்ணிக்கை நூறுக்கும் சற்றுக் குறைவு என்கின்றன வேறு தகவல்கள்.
இந்தியா வழங்கிய ராடர்களைப் பராமரிப்பதற்கு அவ்வப்போது ஒருசில தொழில்நுட்பவியலாளர்கள் இந்தியாவிலிருந்து வந்து போவதுடன் இந்தியாவின் பங்குபற்றுதல் இதில் முடிந்து விடுகிறது, அதற்கு அப்பால் எதுவும் இல்லை என்று இந்தியத் தரப்பில் சில சமாதானங்கள் இப்போது கூறப்பட்டாலும், இவ்விடயத்தில் இந்தியாவின் ஆழமான பங்களிப்பை வெறும் "ராடர் பராமரிப்புடன்' அடங்கி விட்டதாகக் கருதிவிட முடியாது என்பதுதான் உள்வீட்டுக் கணிப்பாகும்.
சரி. இப்படி நேரடியாக இங்கு விடயங்களில் ஈடுபடும் இந்தியர்களின் எண்ணிக்கை எப்படியாயினும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் இத்தகைய தந்திரோபாய உதவிகளைக் கொழும்புக்கு வழங்குவதில் புதுடில்லிக்கு என்ன நியாயம் காரணம் உண்டு என்பதே ஈழத் தமிழர்கள் தரப்பில் எழுப்பப்படும் ஒரே கேள்வியாகும்.
"இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் இராணுவத் தீர்வு சாத்தியமேயல்ல, பேச்சு மூலமான அமைதித் தீர்வு காண்பதே ஒரே வழி. அதைச் செய்யுங்கள்!' என்று கொழும்பைப் பார்த்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிலிருந்து கொழும்புக்கான இந்தியத் தூதுவர் வரை, இந்தியத் தரப்பின் ஒவ்வொரு அதிகார பீடமும் திரும்பத் திரும்பக் கூறி வருகின்றன.
அந்தக் கருத்து உண்மையானது. யதார்த்தமானது. அதில் தவறு இல்லை.
ஆனாலும் இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை செவிமடுக்காமல்
அல்லது உதாசீனப்படுத்தி, புறந்தள்ளி, நிராகரித்து விட்டு
தன்பாட்டில், தமிழர் தாயகம் மீது கொடூர யுத்தத்தைத் திணித்து, போர் வெறி சந்நதம் கொண்டு, அட்டகாசம் பண்ணுகின்றது கொழும்பு.
கடலில் புலிகளின் கப்பல்களின் நகர்வுகள் பற்றிய உளவுத் தகவல்களில் இருந்து வான் புலிகளின் பறப்புகள் பற்றிய முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வரையான சகல விடயங்களையும் நேரடியாகத் தனது ஆளணிகளை வைத்து இலங்கைப் படைகளுக்கு வழங்கும் அளவுக்கு இந்த யுத்தத்தில் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருக்கும் இந்தியாவுக்கு, அதன் அரசியல் தலைமை கூறுவதுபோல இந்த யுத்த நடவடிக்கைத் திட்டத்தைக் கைவிட்டு, தீர்வுக்கு சாத்தியமான ஒரே வழியான பேச்சு முயற்சிக்கு இலங்கை அரசுத் தலைமையைத் திருப்ப முடியாமல் இருக்கின்றது என்ற நிலைமை நம்பமுடியாததாக உள்ளது.
ஒன்றில் இவ்வளவு உதவிகளையும் கொழும்புக்குச் செய்தும் கூட, அதனடிப்படையில் கூட, கொழும்பை நல்வழிப்படுத்த முடியாத அளவுக்கு, இந்தப் பிராந்திய வல்லாதிக்க சக்தியான இந்தியாவின் இராஜதந்திரம் தோற்றுப்போய்விட்டது.
அல்லது வெளியில் அமைதித் தீர்வே ஒரேவழி என்ற வாய்ப்பேச்சை, ஒரு "பம்மாத்து' நடிப்பாக புதுடில்லி வெளிப்படுத்திக்கொண்டு, மறுபுறத்தில் கொழும்போடு சேர்ந்து புலிகளை அழித்தொழிக்கும் ஓர் இரகசியத் திட்டச் செயற்பாட்டை இலங்கையுடன் சேர்ந்து புதுடில்லி முண்டுகொடுத்து முன்னெடுப்பதாக இருக்கவேண்டும்.
இந்த இரண்டில் ஒன்று அரங்கேறுவதாகவே ஈழத் தமிழர்கள் தரப்புக் கருத வேண்டிய நிலைமை உள்ளது.
இராணுவ ரீதியில் இந்தளவுக்கு கொழும்பு அரசுக்கு உதவி செய்து, அதில் நேரடியாகச் சம்பந்தப்படும் புதுடில்லி, இலங்கை இனப்பிரச்சினைக்கு அமைதிப்பேச்சு மூலமான தீர்வே ஒரே மார்க்கம் என்று வெளிப்படையாகக் கூறிக்கொண்டு, அந்தச் செயன்முறைப் பாதைக்குக் கொழும்பைத் திருப்ப முடியாமல் கையாலாகாத்தனத்தோடு இருப்பதுபோல் காட்டிக் கொள்வதை நோக்கும்போது அப்படித்தான் சந்தேகம் தோன்றுகின்றது.
இலங்கை விடயத்தில் புதுடில்லி தூங்குகின்றதா? அல்லது தூங்குவது போலப் பாசாங்கு பண்ணுகின்றதா? புரியவில்லை.

thanks´- Uthayan

0 Comments: