Sunday, July 13, 2008

இலங்கை விவகாரம் பல முகங்களைக் காட்டும் இந்தியா

இலங்கைத் தமிழர் குறித்தும் அவர்களது இனப்பிரச்சினை குறித்தும் இந்தியாவிற்குப் பல முகங்கள் உண்டு. ஆனால் சிறிலங்காவிற்கோ சிங்கள ஆட்சியாளருக்கோ இந்தியா குறித்து ஒரு முகம்தான் உண்டு.

இலங்கைத் தமிழரின் இனப்பிரச்சினை குறித்துப் பல்வேறு சந்தர்ப்பங்களில் தனது பல்வேறு முகங்களை இந்தியா காட்டியுள்ளது.

இலங்கையில் தமிழர்கள் ஆளும் சிங்கள அரசாங்கங்களினால் அடக்கி ஒடுக்கப்பட்டு உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில் உரிமைப் போராட்டம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இதனைப் பயங்கரவாதப் பிரச்சினையென சிங்கள அரசாங்கங்கள் வெளியுலகிற்குக் காட்ட தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த வரலாற்று நிலைமையை இந்தியா ஏற்கெனவே நன்கு உணர்ந்துள்ளது. சர்வதேச சமூகமும் உணர்ந்துள்ள தற்போதைய நிலையில் சிங்கள அரசாங்கத்தின் தமிழர் மீதான அடக்குமுறை மனித உரிமைகள் மீறல்களுக் கெதிராக ஐக்கிய நாடுகள் சபையிலும் மனித உரிமை அமைப்புக்களிலும் உலக நாடுகள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் குரல் கொடுத்து சிங்கள அரசாங்கத்தின் மீது கண்டனத் தீர்மானங்களைக் கொண்டு வர முற்பட்ட வேளையில் இலங்கையில் மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் தற்போது இல்லை என்று இந்தியா சிறிலங்காவிற்காக வககாலத்து வாங்கியது. இலங்கைத் தமிழர் தொடர்பாக இந்தியா காட்டிய ஒரு முகம்.

இதேவேளை, அண்மையில் கொழும்பிற்கு விஜயம் செய்திருந்த இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விஜேய்சிங், வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன் ஆகியோர் சிறிலங்கா சனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலர்- உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் சந்தித்துக் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர்.

இதன்போது சீனாவிடமோ, பாகிஸ்தானிடமோ ஆயுதங்களைக் கொள்வனவு செய்யவேண்டாம் என்றும் சிறிலங்காவிற்குத் தேவையான ஆயுதங்களை இந்தியா வழங்கத் தயாராய் இருக்கின்றது என்ற பேரம் பேச்சை முடித்துவிட்டுச் சென்றுள்ளனர். தமிழர்களுக்கெதிரான அடக்குமுறை யுத்தத்திற்குத் தேவையான ஆயுதங்களை வழங்கத் தயாராய் இருப்பது என்பது இப்பிரச்சினையில் இந்தியாவின் மற்றைய முகமாகும்.

இதேவேளை இந்தியப் பிரதமரும் உயர் அதிகாரிகளும் புதுடில்லியிலிருந்து இலங்கை இனப்பிரச்சினை பற்றி அறிக்கைகள் வெளியிடும்போது இந்தப் பிரச்சினையை இராணுவ வழிமுறையில் தீர்க்கமுடியாது அரசியல் பேச்சுவார்த்தை மூலமே தீர்த்துவைக்க முடியும் எனக்கூறி வருவதானது இதன் மற்றொரு முகமே.

மேலும் இலங்கை இனப்பிரச்சினை குறித்தும் தமிழர் மீதான சிங்கள இனவாத அடக்குமுறை குறித்தும் தமிழக அரசியல்வாதிகள் இந்திய மத்திய அரசிடம் அழுத்தம் கொடுக்கும் சந்தர்ப்பங்களில் தமிழர் இலங்கையில் ஏனைய இனத்தவர் போன்று சகல உரிமைகளுடனும் வாழக்கூடிய வழிவகைகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று புதுடில்லி கூறியிருக்கிறது. இது அதன் மற்றொரு முகமாகும்.

இந்திய கொள்கை வகுப்பாளர்களின் தவறான எடுகோள்கள் காரணமாக இந்திய அரசின் இலங்கை தொடர்பான அணுகுமுறைகளில் பல சந்தர்ப்பங்களில் பல முகங்களைக் காட்டுகின்றனர். ஆனால் இந்தியா தொடர்பாக இலங்கையில் சிங்கள ஆட்சியாளருக்கு ஒரு முகமே இருக்கின்றது. அவர்கள் அதில் தெளிவான நிலைப்பாட்டையும் கொண்டுள்ளனர்.

இந்தியாவின் பிராந்திய வல்லரசு நலனுக்கு எதிரானதே அந்தக் கொள்கையாகும். இதை அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியிருக்கின்றனர��
�.

திருக்கோணமலை துறைமுகப்பகுதியிலுள்ள எண்ணைக் குதங்களில் இந்தியா தனியுரிமைபெற சிறிலங்கா அனுமதிக்கவில்லை. இது முக்கிய அம்சமாகும். கொழும்பில் இந்திய எண்ணைக் கூட்டுத்தாபனத்துடன் சிறிலங்கா அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் தொடர்ந்து முரண்பட்டு வருகின்றனர். அவர்களின் கூட்டுத்தாபனத்தை தேசவுடமையாக்குவோம் என்றும் சிறிலங்கா அமைச்சர் மிரட்டவும் தவறவில்லை.

மேலும் இந்திய மீனவர்களைத் தொடர்ந்து சிங்களக் கடற்படையினர் கொன்றொழித்து வருகின்றனர். இது குறித்து இரு அரசுகளின் உயர்மட்டத்திலும் பல தரப்பட்ட பேச்சுக்கள் நடைபெற்றிருந்தாலும் சிங்கள மக்களின் மனங்களில் ஆழவேரூன்றிய இந்திய எதிர்ப்புணர்வு சிறிலங்காக் கடற்படையில் பிரதிபலிப்பதைக் காணலாம்.

ஒரு நாட்டின் எல்லைக்குள் இன்னுமொரு நாட்டின் மீனவர்கள் புகுந்துவிட்டால் அவர்களைக் கைது செய்து சட்டத்தின் முன்நிறுத்துவதே வழமை. ஆனால் சிறிலங்காக் கடற்படையினரோ அவர்களைக் கண்டவுடன் சுட்டுக்கொலை செய்துவிடுகின்னர். இது சிறிலங்காக் கடற்படையினரதும் அவர்களுக்குக் கட்டளை இடுபவர்களினதும் இந்திய எதிர்ப்புக் குறித்த மன உணர்வையே வெளிக்காட்டுகிறது.

ஏன் இந்திய உயர்மட்ட அதிகாரிகளின் கொழும்பு விஜயம் குறித்து ஜே.வி.பி.யின் அநுரா குமாரதிஸநாயக்க (மகிந்தவுடன் சேர்ந்து நிற்கும் அணி) மிகக் கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

'இந்தியாவிலிருந்து கொழும்பிற்கு விஜயம் செய்துள்ள இந்தியாவின் வெளியுறவுச் செயலர், பாதுகாப்பு ஆலோசகர், பாதுகாப்புச் செயலர் ஆகியோர் கலதாரி விடுதியில் இரவு விருந்துக்காக வரவில்லை அரசியல் விளையாட்டுக்காகவே வந்துள்ளனர். இந்தியா எமது நாட்டு வளங்களைச் சுரண்டுகிறது. எரிபொருள் விற்பனையில் மூன்றில் ஒரு பங்கை இந்தியா இன்று தன்னகத்தே கொண்டுள்ளது என அவர் இந்திய உயர் அதிகாரிகளின் விஜயத்தைச் சாடியுள்ளார். ஜே.வி.பி. எப்போது உருவாகியதோ அன்று தொட்டு இன்றுவரை இந்திய எதிர்ப்புக் கொள்கையையே கைக்கொண்டு வருகிறது.

சிங்களப்படைகளுக்குச் சார்பாக விடுதலைப் புலிகளுடன் இந்தியப் படையினர் யுத்தம் செய்த காலத்தில் கூட ஜே.வி.பி. இந்தியாவை பலமாக எதிர்த்தே வந்தது. இந்தியப் பொருட்களை சிங்கள மக்கள் நுகரக்கூடாது என்று கூட தெற்கில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது. விற்போரைப் படுகொலையும் செய்தது.

சிறிலங்காவின் கொள்கை தொடர்பில் இந்தியா தலையிடக்கூடாது என்று சிறிலங் காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகிதபோகல்லாகம அண்மையில் 'ரைம்ஸ்நவ்|| என்ற பத்திரிகை ஊடாகக் கேட்டிருந்தார்.

சிறிலங்காவின் முதலாவது பிரதமரான டி.எஸ்.சேனநாயக்க இற்றைக்கு 50 வருடங்களுக்கு முன்பு ஆங்கில இராஜதந்திரிகளுடன் உரையாடும் போது வடக்கு கிழக்குத் தமிழர்கள், வடக்குக் கிழக்குப் பகுதியை இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைத்து விடுவார்களோ என்று தனக்கு ஒரு அச்சம் இருப்பதாகக் கூறியுள்ளனர். இதற்கு அந்த ஆங்கில இராஜதந்திரி கிழக்கைத் துண்டாக உடைத்துச் சிங்களக் குடியேற்றத்தை நிறுவுவதன் மூலம் இந்த அச்சத்தைப் போக்கலாம் என்று கூறியிருந்தார்.

இராணுவ வழி மூலம் இலங்கை இனப்பிரச்சினையைத் தீர்க்க முற்படாது அரசியல் பேச்சுக்கள் மூலம் தீர்க்க வேண்டுமென கொழும்பிற்கு அண்மையில் விஜயம் செய்த இந்திய உயர் அதிகாரிகள் கூறியதற்குச் சிங்கள பௌத்தப் பேரினவாதியும் முக்கியமான அரசியல்வாதியுமான ஒருவர் இந்தியா மீதிருந்த சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதாவது, அன்று விடுதலைப் புலிகளுக்குத் தனது நாட்டில் வைத்து ஆயுதப்பயிற்சி அளித்து அவர்களைப் பயன்படுத்தி சிறிலங்காப் படையினரைக் கொலை செய்வதற்குச் சதிசெய்த இந்தியா இன்று சிறிலங்கா அரசிற்கே வந்து இப்படி ஒரு ஆலோசனை வழங்கியிருக்கிறது.

தற்போதைக்கு இந்தியாவிற்கு உரிய பணி புலிகளுக்கெதிரான சிறிலங்கா அரசின் யுத்தத்திற்கு இராணுவ ரீதியில் சகல வழிகளிலும் உதவியளிப்பதே தவிர இப்படியான மடத்தனமான ஆலோசனைகளை வழங்கு வதல்ல என்று 'டெய்லி மிரர்" பத்திரிகையில் எஸ்.எல்.குணசேகர எழுதியுள்ள பத்தியில் இந்தச் சீற்றம் வெளிப்பட்டுள்ளது.

அதாவது, சிறிலங்காவிற்கு ஆயுத உதவி செய்வதற்கும் புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்குமாக கொழும்பிற்கு வந்த இந்திய அதிகாரிகள் ஏதோ ஒரு இராஜதந்திர மரபுக்கிணங்க (தமிழர் மீதுள்ள தார்மீகக் கடப்பாட்டின் அடிப்படையிலல்ல) கூறிய ஒரு கூற்றுக்காக இனவாதியான எஸ்.எல்.குணசேகர வெளிப்படுத்திய சீற்றம் அவர்களுக்குள்ள இந்திய எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துவதோடு இந்தியாவிடம் இருந்து பெறக்கூடிய உதவிகளைச் சந்தர்ப்ப சூழலுக்கேற்ப பெறுவதோடு இந்தியாவின் பிராந்திய நலன்சார்ந்த விடயங்களில் விட்டுக்கொடுக்காத உணர்வலைகளையே வெளிப்படுத்தி நிற்கிறது.

சிங்கள அரசியல்வாதிகள் மட்டுமல்ல சிங்கள மக்களும் கூட அடிப்படையில் இந்திய எதிர்ப்புணர்வையே ஆழ்மனப் பதிவாகக் கொண்டுள்ளனர். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்குக் கொழும்பில் வைத்துச் சிங்களக் கடற்படைச் சிப்பாய் தாக்கிய சம்பவம் சிங்கள மக்களின் இந்திய எதிர்ப்புணர்வை வெளிக்காட்டும் குறிகாட்டியாகும். அது மட்டுமல்ல அந்தச் சிப்பாய் சிங்கள அரசாங்கத்தால் தேசிய வீரராகக் கௌரவிக்கப்பட்டிருந்தார். இது சிங்கள மக்களிற்கிருந்த இந்திய எதிர்ப்புணர்வைத் தட்டிக்கொடுத்து ஊக்கம் கொடுத்த அரசின் நடவடிக்கையாகும்.

சிறிலங்கா அரசியல்வாதிகள், ஆட்சியாளர், சிங்களப் பொதுமக்கள் அனைவரும் இந்திய எதிர்ப்புணர்வைச் சிறிலங்கா சுதந்திரம் பெற்றத்திலிருந்தே வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தியா - பாகிஸ்தான் யுத்தம் நடைபெற்ற போது பாகிஸ்தானிய யுத்த விமானங்கள் கொழும்பில் எரிபொருள் நிரப்பிச்செல்ல அப்போதைய சிங்கள அரசாங்கம் வழிசெய்து கொடுத்திருந்தது.

இவ்வாறாக இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டை சிங்கள தேசம் வெளிப்படுத்திய வரலாற்றுச் சம்பவங்கள் அன்றில் இருந்து இன்றுவரை காணலாம். தற்போது கூட யாழ்ப்பாணத்தில் சிங்கள இராணுவத்தினர் பொருத்தியுள்ள சக்தி வாய்ந்த சீனாவின் 'ராடர்" மூலம் இந்தியாவின் தென்பிராந்தியங்களைச் சீனா கண்காணிக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வரலாற்றுப் பின்னணியில்தான் 'சார்க்" உச்சிமாநாட்டை ஒட்டி கொழும்பில் நடைபெறப்போகும் இந்தியாவின் படைவலு வெளிப்படுத்துகை அமையப்போகிறது.

அதாவது, 'சார்க்|| மாநாட்டிற்காகக் கொழும்பிற்கு வரும் இந்தியப் பிரதமரின் பாதுகாப்பிற்காக ஒரு தொகுதி தரைப்படை கொழும்பிற்கு வரவுள்ளதோடு கொழும்பில் அவர் தங்கியிருக்கும் காலத்தில் கொழும்பு வான் பாதுகாப்பிற்கு இந்திய விமானப்படையும் கொழும்பின் கடற்பாதுகாப்பிற்கு இந்திய கடற்படையும் வரவுள்ளன. இந்த அணுகுமுறையானது ஒரு வகையில் சிறிலங்கா மீது தனக்கு இருக்கும் மேலாதிக்கத்தை படைவலு மூலம் உணர்த்த முற்பட்டுள்ளதையே காட்டுகிறது. இது ஒருவகையில் சிறிலங்கா விவகாரங்களில் அதிக கரிசனை கொண்டுள்ள சீனா, பாகிஸ்தான் ஆகியவற்றிற்கான ஒரு எச்சரிக்கையாகவும் கொள்ளமுடியும்.

இது போன்ற எச்சரிக்கைகள் சிங்கள ஆட்சியாளர் மற்றும் சிங்கள மக்களின் இந்தியாவிற்கெதிரான ஆழ்மனப் பதிவுகளை மாற்றிவிடாது. மாறாக சினத்தையும் சீற்றத்தையும் ஏற்படுத்தி சிங்களத் தீவிரவாதக் கட்சிகளுக்குத் தீனி போடுபவையாகவே அமையும்.

இந்த எதிர்ப்புணர்வு எதிர்காலத்தில் பிராந்திய நலன் குறித்த விவகாரத்தில் இந்தியாவிற்குச் சாதகமான போக்கைச் சிறிலங்கா கைக்கொள்ள தடையாய் இருக்கும். இதற்கு முன்னுதாரணங்களாக கடந்தகால வரலாற்று நிகழ்வுகளும் தற்போதைய குறிகாட்டிகளாக சீனாவுடனும், பாகிஸ்தானிடம் சிறிலங்கா ஆட்சியாளர் கொண்டுள்ள நெருக்கமான உறவையும் நாம் காணலாம்.

இந்தியா எவ்வளவுதான் சிறிலங்காவிற்கு இராணுவ, பொருளாதார ரீதியாக உதவினாலும் சிறிலங்கா, சீனா, பாகிஸ்தானின் உறவை உயிர்த்துடிப்புடனேயே பேணிக்கொள்கிறது. இதை இதுவரை இந்திய இராஜதந்திரத்தால் நிறுத்திக்கொள்ள முடியவில்லை என்பது முக்கியமானதாகும்.

ஆகவே, சிறிலங்காவிற்கு சீனா, பாகிஸ்தானுடன் மேலும் உறவு பலப்பட்டு அவை இங்கு பலமாக காலூன்றுமாகில் இந்தியாவின் ஐக்கியத்திற்கும் பிராந்திய நலனுக்கும் பெரும் ஆபத்து ஏற்படும்.

ஆகவே, இந்தியாவின் ஐக்கியமும் பிராந்திய நலனும் பாதுகாக்கப்படவேண்டுமாகில் தமிழீழ மக்களின் ஆதரவும் கேந்திர முக்கியத்துவம் மிக்க தமிழீழப் பிரதேசமும் முக்கியமானதாகும். ஆனால் இந்திய கொள்கை வகுப்பாளர்கள், இதைக் குறுகிய வட்டத்திற்குள் நின்று அதாவது சிங்கள மக்களின் மனங்களில் ஆணி அறைந்தால் போலுள்ள இந்திய எதிர்ப்புணர்வைச் சரியாக மதிப்பிடாது தமிழீழ மக்கள் தனி நாட்டை அமைத்தால் அது இந்தியாவின் ஐக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் என்று சிந்திப்பது யதார்த்தத்திற்கு முரணானது.

ஆகவே, இந்தியா தனது கொள்கையைத் தொப்புள்கொடி உறவுள்ள தமிழீழ மக்களின் தனிநாட்டுக்கு ஆதரவாக மாற்றிக்கொள்ளாத வரை சிங்கள ஆட்சியாளருக்கு உதவிகளை வழங்கிக்கொண்டிருக்க நிர்ப்பந்திக்கப்படுவதோடு சீனா, பாகிஸ்தானை வைத்துச் சிறிலங்கா இந்தியாவை ஏமாற்றிக்கொண்டே இருக்கும்.

0 Comments: