Thursday, July 3, 2008

சவால் விடும் சமர் சீமான்களின் சரித்திர பொத்தல்கள்

வடபோர் அரங்கில் தாம் சரித்திர புகழ்பெற்ற சாதனைகளை நிகழ்த்தி வருவதாக சிறிலங்கா அரசு போர்முரசறைந்து வரும் வேளையில் ஈழத்தமிழர்கள் இராணுவ ரீதியான தெளிவுகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய தேவை இக்கால கட்டத்தில் அவசியமாகிறது.

விடுதலைப் புலிகள் தமது போராட்ட வரலாற்றில் ஈட்டிய பாரிய வெற்றிகளுக்கெல்லாம் பட்டாசு கொளுத்திப் பூரித்த தமிழினம், அவர்கள் தாக்குதல்களையே ஆரம்பிக்காத இக்காலப்பகுதியில் புலிகளின் மௌனத்தின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டிய தேவையிருக்கிறது.

கிழக்கு போய்விட்டதாம், மன்னார் போய்விட்டதாம். பால்ராஜ் இல்லாததால் மணலாறும் போகப்போகிறதாம் என்றெல்லாம் அரசியல் அரட்டை பேசும் மக்கள், சிறிலங்கா அரச ஊடகங்களின் போர் தொடர்பான செய்திகளின் அடிப்படையிலேயே தமது முடிவுகளை எடுத்து வைத்திருக்கிறார்கள் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

அடுத்தது, இன்று மன்னாரிலும் வவுனியாவிலும் குடாநாட்டிலும் மணலாறிலும் சாதனைகளைப் புரிந்து வருவதாகக்கூறும் அரசு, அப்பகுதிகளி;லிருந்து இராணுவ ரீதியான செய்திகளை சேகரிக்க சுயாதீன செய்தியாளர்களுக்கு அனுமதி அளித்துள்ளதா என்பதை அடுத்தததாகப் பார்க்கவேண்டும்

இராணுவச் செய்திகளை கொழும்பில் தமக்குச் சார்பாக வெளியிடாத சிங்கள ஊடகவியலாளர்களையே கடத்திச்சென்று தாக்குவதிலும் அரச தலைவரின் சகோதரர் தொலைபேசியில் மிரட்டுவதுமான சம்பவங்கள் இடம்பெறும்போது, மன்னாரிலோ வவுனியாவிலோ இருந்துகொண்டு நடுநிலையான செய்திகளை வெளியிடுவது என்பது நினைத்துப் பார்க்கமுடியாத ஒன்று.

அப்படி மீறி அங்கிருந்து பணியாற்றிய ஓரிரு தமிழ் ஊடகவியலாளர்களும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தொடர்ச்சியான மிரட்டல்களினால், தாம் அடுத்த நடேசனாகவோ இல்லை அடுத்த நிமலாராஜனாகவோ மாறிவிடலாம் என்ற அச்சத்தில் அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.

இந்நிலையில், இராணுவம் தற்போது களத்தில் ஒரு போரையும் களத்துக்கு வெளியே ஊடகங்களுக்கு எதிரான போரையும் நடத்தி தாம் தொடர்ச்சியாக வெற்றிகளை மட்டுமே கண்டு வருவதாக சிங்கள தேசத்துக்கும் அனைத்துலகத்துக்கும் பறைசாற்றி வருகிறது.

இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அண்மையில் நடத்திய ஊடகவியாளர் சந்திப்புக்கூட வெளிநாட்டு நிருபர்களுக்கு உரியதாகவிருந்தது.

உள்ளுர் ஊடகவியலாளர்களுக்கு அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இராணுவ விவகாரங்கள் தொடர்பாக பூசிமெழுகும் இராணுவத் தலைமை, வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு மட்டும் தானே நேரில் வந்து பதிலளித்திருப்பதிலிருந்து அவர் யாரைக் குறிவைத்து நாட்டில் போரை நடத்துகிறார் என்ற விடயத்தைச் சொல்லாமல் சொல்லி நிற்கிறது.

வன்னிப் பெருநிலப்பரப்பை நோக்கி தமது இறுதிப் போரை தொடங்கிவிட்டதாகவும் இன்னும் ஒரு வருடகாலத்தில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவர்கூட எஞ்சியிருக்கமாட்டார் என்றும் அவர் கூறிய விடயங்களின் பின்னணியில் தமிழ்மக்கள் புரிந்துகொள்ள வேண்டிய பல வரலாறுகள் உள்ளன.

கடந்த 20 வருடங்களாக இவ்வாறு புலியை அழிக்கப்போகிறோம் என்று கூறிக்கொண்டு கொழும்பிலிருந்து புறப்பட்ட பல இராணுவத் தளபதிகளின் வெற்றுக்கோசங்கள், களத்தில் எவ்வாறான மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தன என்பதை நோக்குவது, தற்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் கருத்தைச் சீர்தூக்கிப் பார்ப்பதற்குத் தக்க ஆதாரங்களாக அமையும்.

1996 ஆம் ஆண்டில் முல்லைத்தீவுப் படைத்தள வீழ்ச்சியால் மூக்குடைபட்ட இராணுவம் கிளிநொச்சியைக் கைப்பற்றி அங்கே தமது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரசன்னத்தை நிலைநாட்டுவதற்கு, மேற்கொண்ட பாரிய படை நடவடிக்கை 'சத்ஜெய" எனப்படுகிறது.

இதன் முதல் பாகத்தில் ஆனையிறவிலிருந்து பரந்தன் சந்தி வரை வந்த இராணுவம், இரண்டாம் மூன்றாம் பாகங்களை மேற்கொண்டு சுமார் ஒரு மாத காலம் புலிகளுக்கு எதிராக கடும் சமராடியது.

இறுதியில் தனது முயற்சியில் வெற்றி கண்டது.

கிளிநொச்சி சிறிலங்காப் படைகளின் வசம் வீழ்ந்தது. ஆட்களே இல்லாத வெறும் பிரதேசத்தை கைப்பற்றிய இராணுவம் அங்கு தனது இருப்பை உறுதியாக்கிக்கொண்டது. ஆனால் இதற்காக பூநகரியிலிருந்து தனது படையினரை முழுமையாகப் பின்வாங்கிக் கொண்டது.

இந்தகாலப் பகுதியில், ஏ-9 வீதியில் - கிளிநொச்சியில் - நிலைகொண்டிருந்த தமது படையினருடன் கைகோர்ப்பதற்காக - ஏ-9 பாதையை முழுமையாக தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக - வவுனியாவிலிருந்து மேற்கொள்ளப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த படை நடவடிக்கை யாருமே மறக்கமுடியாத 'ஜெயசிக்குறு" எனப்படும் வெற்றி நிச்சயம்.

புலிகளின் பல்வேறு எதிர்த்தாக்குதல்களைச் சமாளித்தவாறே ஏ-9 வீதியிலுள்ள மாங்குளம் வரை வந்த இராணுவத்தை அதற்கு அப்பால் வரவிடாமல் கடுமையான எதிர்த்தாக்குதலில் ஈடுபட்டனர் புலிகள்.

கிளிநொச்சி சந்தியில் நிற்கும் இராணுவத்துக்கும் மாங்குளத்தின் வாயிலில் நின்ற இராணுவத்துக்கும் இடையிலான தூரம் வெறும் 25 கிலோ மீற்றர்கள் தான். இந்த இடைப்பட்ட தூரத்தை கைப்பற்றுவதற்கு இராணுவம் படாதபாடுபட்டது.

அப்போது பிரதி பாதுகாப்பு அமைச்சராகவிருந்த - முன்னாள் அரச தலைவர் சந்திரிகா அம்மையாரின் மாமனார் ரத்வத்த - தற்போது சரத் பொன்சேகா விடும் அறிக்கை போலவே - சிங்கள தேசத்தின் காதில் பூச்சுற்றும் அறிக்கை ஒன்றை விடுத்தார்.

அதாவது, 1998 ஆம் ஆண்டு சிறிலங்கா சுதந்திர தினத்தன்று - பெப்ரவரி நான்காம் நாள் - கிளிநொச்சியிலிருந்து கண்டிக்கு பேருந்து விடப்போவதாக அவர் கூறினார்.

ஆனால் நடந்தது என்ன?

கடும் சமராடி எத்தனையோ தந்திரோபாயங்களை எல்லாம் பயன்படுத்தி, இயலாத கட்டத்தில் ஜெயசிக்குறு நடவடிக்கையையே கைவிடும் நிலைமைக்கு இராணுவம் தள்ளப்பட்டது.

தமது ஓர்மமான முறியடிப்புச் சமரில் வெற்றிகண்ட புலிகள், வன்னிக்குள் கால்பதித்த படைகளுக்கு பாரிய அடி ஒன்றைக் கொடுக்க அப்போது ஆயத்தமாகினர்.

அந்தத் திட்டத்தின்படி 1998 செப்ரெம்பரில் - தியாகி லெப். கேணல் தீலீபன் வீரச்சாவடைந்த நாளில் - தொடங்கப்பட்ட ஓயாத அலைகள் இரண்டின் மூலம் படையினரின் கிளிநொச்சி படைமுகாமுக்கு விழுந்தது அடி. முடிவு, கிளிநொச்சி நகர் புலிகளின் வசம் வீழ்ந்தது.

கிளிநொச்சியை இனிமேல் விட்டுக்கொடுக்கக்கூடாது என்ற நோக்குடன் அதை மேலும் பலப்படுத்தும் வகையில், மாங்குளத்திலிருந்து பின்வாங்கிய புலிகள் கிளிநொச்சியை மையமாக வைத்து வன்னிக்குள் கால்வைத்த படையினருக்கு அடுத்த பாடத்தைப் புகட்ட ஆயத்தமாகினர்.

தற்போது, மன்னாரின் வீழ்ச்சியைப் பார்த்து புலிகள் பலவீனமடைந்து விட்டார்கள் என்று கூக்குரலிடுபவர்கள்; இந்த இடத்தில்தான் புலிகளின் சமச்சீரற்ற இராணுவ உத்தியை நோக்க வேண்டும்.

வவுனியாவிலிருந்து ஜெயசிக்குறு நடவடிக்கையைத் தொடங்க முன்னரும் ரத்வத்த தலைமையிலான இராணுவத் தளபதிகளின் திட்டப்படி - தற்போது நடைபெற்றதைப் போன்று - வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கிய வீதி வழியாக புலிகளுக்கு எதிரான - பெருமெடுப்பிலான - 'எடிபல" என்ற நடவடிக்கை நடத்தப்பட்டது.

ஆனால், படையினரின் அந்த நடவடிக்கைக்கு எதிராக புலிகளின் ஒரு துப்பாக்கி ரவை கூட பயன்படுத்தப்படவில்லை. இப்போது என்ன நடந்ததோ அதனையே புலிகள் அன்றும் மேற்கொண்டிருந்தனர். இது ஒன்று.

அடுத்தது, கிளிநொச்சியை தாம் கைப்பற்றியவுடன் எவ்வளவோ விலை கொடுத்து காத்த மாங்குளத்திலிருந்தே புலிகள்; பின்வாங்கினர்.

ஏனெனில், 1998 பெப்ரவரியில் ஒரு முயற்சி செய்து புலிகளால் முழுமையாக வெற்றிகொள்ளப்படாததாலும் கண்ணிவெடி வயல்கள் மூலம் அதியுச்சப் பாதுகாப்பு வேலியைக் கொண்டிருந்ததாலும் கிளிநொச்சி முகாம் என்று எமக்கான கோட்டையாகவே இருக்கும் என இராணுவம் இறுமாப்புடன் இருந்தது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அந்தத்தளத்தின் வீழ்ச்சி படையினருக்குப் பாரிய அடியாக இருந்தது. அந்த அடியிலிருந்து மீள எழும்ப எத்தனிக்கும் படையினரால் மாங்குளம் சந்தியைக் கைப்பற்றியும் ஒன்றும் செய்ய முடியாது என்று புலிகள் நம்பினர்.

அத்துடன், கிளிநொச்சி படையினரின் வசமிருக்கும் வரைதான் மாங்குளம் தமக்கு கட்டாயம் தக்கவைக்க வேண்டிய பிரதேசம் என்பதையும் கிளிநொச்சி தம்மிடம் விழுந்த பின்னர் மாங்குளத்தைப் படையினர் கைப்பற்றினாலும் அது தம்மை முற்றுகையிடும் அவர்களது திட்டத்துக்கு பலனளிக்காது என்ற களநிலையையும் புலிகள் புரிந்திருந்தனர்.

வாங்கிய அடியில் இனிமேல், கண்டி வீதி சரிவராது என்ற முடிவுடன் புதிய திட்டத்துடன் இன்னோர் நடவடிக்கைக்கு ஆயத்தமானது இராணுவம்.

அதன்படி, 'ரிவிபல" என்ற படை நடவடிக்கையை ஆரம்பித்து எவ்வித எதிர்ப்புமின்றி நெடுங்கேணியிலிருந்து ஒட்டுசுட்டான் வரை - புலிகள் கோட்டையான புதுக்குடியிருப்பிலிருந்து பத்து பதினைந்து கிலோ மீற்றர் தூரம் வரை - வந்து நின்ற படைகள் புலிகளின் இருப்பையே கேள்விக்குறியாக்கின.

கிளிநொச்சி வெற்றியால் மெல்லிதாய் மூச்சுவிட்ட புலிகளுக்கு அடுத்த சவால் விடுக்கப்பட்டது.

அதன்பின்னர், மன்னார் - பூநகரி தரைப்பாதையைத் திறப்பதற்கான பாரிய படை நடவடிக்கையையும் இராணுவம் மேற்கொண்டது.

'ரணகோச" எனப்பெயரிட்டு முதலாம் பாகத்தில் தொடங்கி நான்கு பாகங்களை நடத்தி வன்னியின் மேற்குப் பகுதியிலும் புலிகளுக்குப் பாரிய சிக்கலை ஏற்படுத்தி மன்னார் பள்ளமடு வரை இராணுவம் முன்னேறியது.

பள்ளமடுவிலிருந்து முன்னேற எடுத்த எந்த முயற்சியும் வெற்றியளிக்காத நிலையில் சில மாத கடும் எத்தனங்களின் பின்னர் 'ரணகோச" படை நடவடிக்கையையும் சிறிலங்கா அரசால் கிடப்பில் போடப்பட்டது.

இதன் பின்னர், 'ரிவிபல" நடவடிக்கையின் மூலம் ஏற்கனவே கண்டி வீதிக்கு கிழக்காக வந்து நின்ற இராணுவம் புதிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டது.

ஒட்டுசுட்டான் - அம்பகாமம் பகுதிகளில் இராணுவத் தளபதி வசந்த பெரேரா தலைமையில் மேற்கொண்ட 'வோட்டர் செட்" (நீர் சிந்து) எனும் பேரிலான இருவேறு நடவடிக்கைகள் புலிகளுக்குக் கணிசமான இழப்பை ஏற்படுத்தின.

படையினருக்குப் பெருவெற்றியாக அமைந்த இந்த இரு நடவடிக்கைகளிலும் புலிகளின் பல உடலங்களையும் இராணுவம் கைப்பற்றியது.

இந்த இடத்தில் புலிகள் போட்ட திட்டம்தான் வன்னி நமதே என்று மார்தட்டிய அரச படைகளுக்கு மரண அடியானது. 'வோட்டர் செட் - 2" நடவடிக்கை நடந்து நான்கைந்து நாட்களிலேயே புலிகளின் பாய்ச்சல் தொடங்கியது.

புதுக்குடியிருப்பின் வாசலில் நின்று படையினர் போட்ட சதிராட்டத்துக்குக் கொடுக்கும் அடியாகவும் ஒட்டுமொத்த வன்னிப் படைகளுக்கு கொடுக்க மேற்கொண்ட பதிலடியாகவும் புலிகளின் 'ஓயாத அலைகள் - 3" நடத்தப்பட்டது.

அதுவரை வன்னிக்குள் ஆழ அகல வைத்த படையினரின் கால்கள் புலிகள் கொடுத்த 'ஓயாத அலைகள் - 3" பதிலடியால் எங்கெங்கோ ஓடின.

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் அணியொன்றைத் தலைமை தாங்கி அப்படையணியின் சிறப்புத்தளபதி லெப். கேணல் இராகவன் ஒட்டுசுட்டானில் வரலாற்றுச் சிறப்பு மிக்க 'ஓயாத அலைகள் - 3" படை நடவடிக்கையைத் தொடங்கினார்.

அந்தத் தொடர் நடவடிக்கையின் முதல் வித்தாக லெப். கேணல் இராகவனே வீழ்ந்தார். மிகச் சிறப்பான தளபதியை முதற்களப்பலியாக் கொடுத்துத் தொடங்கப்பட்ட அந்த நடவடிக்கை தமிழர் சேனைக்குத் தொடர் வெற்றிகளைப் பெற்றுத்தந்தது.

'ஜெயசிக்குறு", 'ரிவிபல", 'வோட்டர் செட்" நடவடிக்கைகள் மூலம் படையினரால் கைப்பற்றப்பட்ட பகுதிகள் வெறும் ஐந்தே நாட்களில் புலிகளால் மீளக் கைப்பற்றப்பட்டதோடு பல்லாண்டுகளின் முன்னர் - ஆயுதப் போராட்டத்தின் தொடக்கக் காலத்தில் சிங்களவரால் வன்பறிப்புச் செய்யப்பட்ட தமிழரின் பூர்வீக வாழ்விடங்களான மணலாறு சிலோன் தியேட்டர், கென்ற் பாம், டொலர் பாம் போன்ற பகுதிகளும் மீட்கப்பட்டன. (இந்த இடங்களில்தான் தற்போது புலிகளின் மணலாறு முன்னணி அரண்கள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.)

அதேபோல, 'ரணகோச" படை நடவடிக்கைகள் மூலம் கைப்பற்றப்பட்ட அனைத்துப் பகுதிகளும் மூன்று நாட்களில் மீளக் கைப்பற்றப்பட்டன. (மன்னார் பள்ளமடு வரை வந்த இராணுவத்தையே வெறும் மூன்று நாட்களில் புலிகள் துரத்தியடித்தனர். ஆனால், தற்போது சரியான களத்தகவலின்படி இராணுவம் பள்ளமடு வரை கூட முன்னேறவில்லை என்பது இந்த வேளையில் சுட்டிக்காட்டப்பட வேண்டிய அடுத்த விடயம்)

வன்னி மையத்துக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்டு யாழ். குடநாட்டை நோக்கிப் புலிகள் தமது பார்வையைத் திருப்பினர். 'ஓயாத அலைகள் - 3" யாழ்ப்பாணத்தை நோக்கித் திரும்பியது.

இதில் நடைபெற்ற சம்பவம் ஒன்றும் தற்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் அறிக்கைகளுடன் ஒப்பிடக்கூடியதொன்றே.

கிளிநோச்சியிலிருந்து முன்னேறி குடாநாட்டு இராணுவத்தைப் பின்தள்ளும் 'ஓயாத அலைகள் - 3" நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட சமயம், அதன் ஓர் அங்கமாக கேணல் தீபன் தலைமையிலான படைகள் பரந்தன் இராணுவத்தளம் மீது பாரிய தாக்குதலொன்றை நடத்தினர்.

ஒருநாள் முற்பகல் தாக்குதல் தொடங்குவதற்குச் சற்று முன்பாக கேணல் தீபன் அவர்கள் பரந்தன் இராணுவத்தள தளபதியுடன் தொலைத்தொடர்பு சாதனத்தில் தொடர்புகொண்டு,

'என்ன அடிபடப்போறியளா. அல்லது இப்பவே, ஓடப்போறியளா" - என்று கேட்டதற்கு -

'எங்களை என்ன ஒட்டுசுட்டான் இராணுவம் என்றா நினைத்தீர்கள். வந்து பாருங்கள நடக்கிறதை" - என்று பதிலுக்கு வீரவசனம் பேசினார்.

நண்பகல் சண்டையைத் தொடங்கிய புலிகள் அன்றே பரந்தன் தளத்தைத் கைப்பற்றினர்.

வன்னிக்குள் அகலக்கால் வைத்த அரச படைகளுக்கு புலிகள் வைத்தியம் பார்த்த வரலாறு இதுதான்.

எடிபல என்றும் 'ஜெயசிக்குறு" என்றும் 'ரணகோச" என்றும் 'சத்ஜெய" என்றும் 'ரிவிபல" என்றும் 'வோட்டர் செட்" என்றும் பத்துக்கும் மேற்பட்ட பாகங்களாக பல நடவடிக்கைகளை மேற்கொண்ட படையினர், 'ஓயாத அலைகள் - 3" என்ற ஒரே பதிலடியில் திரும்பிப்பாராமல் ஓடினர்.

வன்னிச்சமரில் அன்று புலிகள் பயன்படுத்திய களநிலை சமன்பாட்டைத்தான் இன்றும் வன்னிக்குள் ஆழக்கால் பதிக்கும் இராணுவத்துக்கு எதிராக பயன்படுத்தி வருகிறார்கள்.

ஆனால், இம்முறை படையினருக்கு எங்கு பொறிவைக்கப்பட்டிருக்கிறது என்பது காற்றுக்கும் கடவுளுக்கும் தெரியாத விடயம்.

ஆகவே, இராணுவச் சீமான்களின் கடந்த கால வரலாற்று ஒப்புமைகளை நோக்கினால், தற்போதைய தளபதி சரத் பொன்சேகாவும் எதிர்காலச் சந்ததிக்கு இன்னுமொரு ரத்வத்த என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

நன்றி:- -ப.தெய்வீகன்-

0 Comments: