Saturday, August 18, 2012

தமிழீழ விடுதலைப் போர் அடைந்த இடைக்காலப் பின்னடைவு.!


தமிழீழ விடுதலைப் போருக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு முக்கிய காரணம் அப்போது நிலவிய உலகச் சூழல் தான்.அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு உலக நாடுகளின் போக்கு முற்றிலும் மாறிவிட்டது. 2001 செப்ரம்பர் 11ம் நாள் நான்கு பயணிகள் விமானங்கள் உலக வரலாற்றை மாற்றிவிட்டன.
அல்-குவெய்தா தீவிரவாதிகள் நான்கு பயணிகள் விமானங்களை அதிரடியாகக் கைப்பற்றி அதே விமானங்களைத் தாமே ஓட்டிச் சென்று விமானங்களைத் தாக்குதல் கருவியாகப் பயன்படுத்திப் பேரழிவை ஏற்படுத்தினார்கள். இரண்டு விமானங்கள் நியூயோர்க் நகரின் மிக உயர்ந்த கட்டிடங்களில் ஒன்றான இரட்டைக் கோபுரத்தில் மோதி 3000 வரையானோரைக் காவு கொண்டது.
இன்னொரு விமானம் அமெரிக்க பாதுகாப்பு படையினரின் தலைமையகம் பென்ரகன் மீது மோதிக் கணிசமான உயிரிழப்பை ஏற்படுத்தியது. நான்காவது விமானம் வெள்ளை மாளிகையை நோக்கிப் பறந்தபோது ஒரு வனப் பிரதேசத்தில் வீழ்ந்து நொருங்கியது.
இந்த நான்கு விமானங்களும் சரியாக 102 நிமிடங்களில் 3000த்திற்கும் கூடுதலான உயிர்களைக் குடித்தன. அடுத்த மாதத்தோடு இந்தப் பேரழிவுச் சம்பவம் நடந்து பதினொரு ஆண்டுகள் முடிகின்றன. கி.மு.கி.பி. என்பதைப் போல் காலத்தை அளவிடும் எல்லைக் கோடாக 9 -11 மனித வரலாற்றில் பதிவாகியுள்ளது.
உலக நாடுகள் அனைத்திலும் இரட்டைக் கோபுரத் தாக்குதலின் தாக்கம் உணரப்படுகிறது. பாதுகாப்பு ஒழுங்குகள் இறுக்கப்பட்டுள்ளன. தாக்குதலின் போது அமெரிக்க அதிபராகப் பதவி வகித்த ஜார்ஜ் டிபிள்யூ புஷ் (George W.Bush) பயங்கரவாதத்திற்கு எதிரான போர் (War Against Terror) என்ற கோசத்தை எழுப்பினார்.
பயங்கரவாதத்தை நசுக்கும் பொறுப்பை உலக நாடுகள் அனைத்தும் வகிக்க வேண்டும் என்று கூறும் தீர்மானத்தை அமெரிக்கா ஜநாவில் உலக நாடுகளின் ஒப்புதலுடன் நிறைவேற்றியது. அத்தோடு ஈராக் ஆப்கானிஸ்தான். ஆகிய நாடுகளுக்கு எதிரான போரையும் அமெரிக்க அரசு நேற்ரோ (Nato) நாடுகளின் உதவியோடு முன்னெடுத்தது.
மேற்கூறிய இரு நாடுகளுக்கு எதிரான போர் இன்று வரை தொடர்கிறது. இரு நாடுகளிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதை அமெரிக்க அரசியல் நிபுணர்கள் ‘றெஷீம் சேஞ்ச்’ (Regime Change) என்று அழைக்கிறார்கள். பயங்கரவாதத்திற்குப் பரிகாரமாக ஆட்சி மாற்றம் என்று பொருள்படும்.
இரட்டைக் கோபுரத் தாக்குதலின் மிக முக்கியமான தாக்கத்தை தேசிய இன விடுதலைப் போராட்டம் நடத்திய அமைப்புக்கள் உணர்கின்றன. முப்பது வருடங்களுக்கு மேலாக ஈழத் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வரும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாகப் பெருமளவு உலக நாடுகளால் பிரகடனஞ் செய்யப்பட்டது. அதே நாடுகள் புலிகள் அமைப்பைத் தடை செய்தன.
புலிகள் அமைப்பிற்கு உதவுதல், நிதி வழங்கல், சார்பாகப் பேசுதல் போன்றவை பாரதூரமான தண்டனைக்குரிய குற்றங்களாகப் பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு அமைவாக இயற்றப்பட்ட சட்டங்கள் கூறித் தண்டித்தன. இன விடுதலைப் போராட்டங்களுக்கும் பயங்கரவாதச் செயல்களுக்கும் இடையிலான வித்தியாசத்தை உலக நாடுகள் பார்க்க மறுத்துவிட்டன.
நீண்ட தூரம் பறக்கக் கூடிய சக்தி வாய்ந்த சிலின் (Zlin) ரக செக் தயாரிப்பு தாக்குதல் விமானங்களைத் தமது விமானப் படையில் வைத்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் மீது உலக நாடுகளின் கண்கள் திரும்பின. விமானப்படை வைத்திருந்த உலகின் ஒரேயொரு விடுதலை அமைப்பாகப் புலிகள் இடம்பெற்றனர்.
புலிகளைப் பயங்கரவாதிகளாகச் சித்திரித்த சிங்களப் பேரினவாத அரசிற்கு உதவ 40 வரையான உலக நாடுகள் முன்வந்தன. சலுகை விலையில் அந்த நாடுகள் இலங்கை அரசிற்கு ஆயுத தளபாடங்களை விற்பனை செய்தன. ஆளணி உதவிகளைச் செய்தன. தமக்கிடையிலான பகையை மறந்து ஒன்றுகூடி அரசுக்கு உதவின.
எதிரும் புதிருமாக நின்ற இந்தியா, பாக்கிஸ்தான், சீனா போன்ற நாடுகள் தமிழீழ மக்களுக்கு விமோசனம் கிடைக்கக் கூடாது என்பதில் ஒற்றைக் கருத்து கொண்டிருந்தன. சமச்சீரற்ற போரில் விடுதலை புலிகள் இறுதி வரை தாக்குப் பிடித்தனர். தீராப் பகை கொண்டிருந்த நாடுகளை ஒன்றிணைத்த சிறப்பு புலிகளுக்கு உண்டு. இதற்காகவே அவர்களுக்குப் பரிசு வழங்க வேண்டும்.
இப்படி ஒன்று சேர்ந்த நாடுகள் ஒவ்வொன்றிற்கும் தனித் தனியான உள்நோக்கங்கள் இருந்தன. 21ம் நூற்றாண்டின் அதியுச்ச கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கடற்பகுதியாக இந்து மாகடல் இடம் பெறுகிறது. உலகின் மொத்த எண்ணைத் தேவையின் 25 விழுக்காடு வளைகுடா நாடுகளில் இருந்து கிழக்கு நோக்கி இந்து மாகடல் ஊடாகச் செல்கின்றன.
மிக முக்கியமான ஆலைத் தயாரிப்புக்கள் இந்து மாகடல் ஊடாக மேற்கு நாடுகளுக்குச் செல்கின்றன. இந்து மாகடலின் மையப் பகுதியில் இலங்கைத் தீவு அமைந்துள்ளது. இந்து மாகடலில் ஆதிக்கம் செய்யத் திட்டமிடும் வல்லரசு கட்டாயமாக இலங்கைத் தீவில் கால்பதிப்பதோடு திருகோணமலைத் துறைமுகத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
1980 களில் தொடங்கி இன்றுவரை இலங்கைத் தீவில் தங்களது மேலாதிக்கத்தை நிலை நாட்டுவதற்கும் இந்து மாகடலின் முக்கிய கடல்,வான் பாதைகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கும் அமெரிக்கா, சீனா இந்தியா நாடுகள் இடையே ஆதிக்கப் போட்டி நடக்கிறது.
நான்காம் ஈழப் போர் 2006 ய+லை 26ம் நாள் தொடங்கியது. இலங்கையில் ஆழமாகக் காலூன்றிய சீனா, இராணுவ, பொருளாதார ரீதியில் உதவ முன்வந்தது. சிங்கள அரசுக்கு உதவுவது மூலம் சீனாவை வெளியேற்ற அழுத்தம் கொடுக்க முடியும் என்ற நப்பாசையில் இந்திய உதவிகள் குவிந்தன.
இலங்கையில் இடம் பிடித்தால் இந்தியாவின் தென் மாநிலங்கள் மீது தேவைப்படும் போது தாக்குதல் நடத்தலாம் என்ற திட்டத்துடன் பாக்கிஸ்தான் இலங்கை அரசின் அணியில் இணைந்தது. பாக்கிஸ்தான் விமானிகள் இலங்கை விமானப்படையின் கிபீர், மிக் விமானங்களில் ஓட்டியாக அமர்ந்து தமிழீழ இலக்குகளைத் தாக்கினர்.
ஏற்கனவே பூமத்திய ரேகைக்குத் தெற்கே இந்து மாகடலின் மத்திய பகுதியில் (Central Indian ocean) டீகோ கார்சியா தீவில் (Diego Garcia) அமெரிக்கா பாரிய குண்டு வீச்சு விமானங்கள் அடங்கிய இராணுவ தளத்தை அமைத்துள்ளது.
ஆப்கானிஸ்தான், ஈராக் போhக் களங்களில் ஈடுபட்ட அமெரிக்காவால் நேரடியாக இலங்கைப் போரில் பங்கு பற்ற முடியவில்லை. 1987ல் இந்திய இராணுவத்திற்கு எதிராகப் போரிட்டது போல் இறுதிப் புலி இருக்கும் வரை அமெரிக்கப் படைகளுக்கு எதிரான போர் நடக்கும் என்ற அச்சத்தில் சிங்கள அரசிற்கு உதவுவது மூலம் புலிகளை அழிக்க முடியும் என்று அது திட்டமிட்டது.
விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதில் அமெரிக்கா, சீனா, இந்தியா, ருஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் முனைப்பாகச் செயற்பட்டன. எத்தனை அப்பாவிகளை அழித்தேனும் விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று அவை உதவிகளை வழங்கின. வன்னியில் மனிதப் படுகொலை நடந்த போது உலக நாடுகளும் ஜநாவும் அதைக் கண்டு கொள்ளாமல் இருந்தன.
சிறி லங்காவின் போர் குற்றங்களில் ஜநாவுக்கும் பங்கு உண்டு. பல்வேறு தருணங்களில் அது போர் குற்றங்களுக்கு இடமளிக்கும் விதத்தில் செயற்பட்டுள்ளது. 2008 செப்ரம்பரில் ஜநா தனது வெளிநாட்டுப் பணியாளர்களை வன்னியில் இருந்து முற்றாக விலக்கிக் கொண்டது. இது மனிதப் பேரழிவுக்கு இடமளித்தது.
தமிழீழத்தில் நடந்தது தாய் மண்ணிற்கான போராட்டம். உலக அரங்கிலே தமிழீழ மக்களின் நீதிக்கான போராட்டம் நடக்கிறது. எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் தமிழீழத்திற்கான இறுதிப் போர் தொடங்கிவிட்டது. தமிழகத்திலும் அது அரங்கேறுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னெடுத்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வீழ்ச்சி என்று சொல்வதை தமிழ் உணர்வு உள்ள ஒருவரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஈழத் தமிழர்களின் பேச்சிலும் சிந்தனையிலும் ஈழப் போராட்டம் உயிர் மூச்சாகத் துடித்துக் கொண்டிருக்கிறது.
தமிழீழம் என்ற உணர்வு இன்னும் மடிந்து போகவில்லை. அதனால் தடங்கல்களை எதிர்கொள்ள முடியும். காலப் போக்கில்  தன்னைப் புதுப்பித்துக் கொள்ள முடியும். அதற்கு ஏற்பட்டிருப்பது பின்னடைவே தவிரத் தோல்வி அல்ல. “ஒரு விடுதலைப் போரட்டம் பல சூறாவளிகளைச் சந்திக்கின்றது. பல நெருக்கடிகளை எதிர்கொள்கின்றது. கொந்தளிப்பான பல சூழ்நிலைகளுக்கு முகங் கொடுக்கின்றது.” என்று தேசியத் தலைவர் கூறியிருக்கிறார்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு நிகரான போராட்டங்களை கொண்டது ஆபிரிக்க கண்டம். தெற்கு ஆபிரிக்காவில் வெள்ளை நிற வெறி அரசிற்கு எதிரான கறுப்பின மக்களின் போர் பல தசாப்தங்களுக்குப் பிறகு வெற்றி பெற்றது. அல்ஜீரியாவில் பிரான்சின் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக 1954ல் தொடங்கிய ஆயுதப் போர் 1962ல் வெற்றிகரமாக முடிவுற்றது.
தெற்கு சூடான் மக்கள் முதலாவதாக ஜனநாயக முறையில் விடுதலைப் போர் நடத்தினார்கள். பிறகு ஆயுதம் தூக்கினார்கள். 25 வருட காலம் விடுதலைப் போராட்டம் வலிமையாக பல இழப்புகளுக்கு மத்தியில் நடைபெற்றது. தெற்கு சூடான் என்ற புதிய நாடு உதயமாகிவிட்டது.
தமிழீழம் நிறைவேறுவதற்கான சாத்தியம் நிறையவே உள்ளது. தளராத மனதுடன் சர்வதேச அரங்கில் ராஜதந்திர முயற்சிகளை நகர்த்தி நாம் விடுதலை பெற முடியும்.

0 Comments: