கடந்த ஏப்ரல்; 23 ஆம் நாள் முகமாலை முன்னரங்கில் பாரிய படுதோல்வியைச் சந்தித்த பின்னர், அதே போரரங்கில் மீண்டும் ஒரு பெருமெடுப்பிலான தாக்குதல் ஒன்றைத் தொடுப்பதற்கான ஆயத்தங்களில் சிறிலங்கா படைத்துறை இறங்கியிருப்பதாகச் செய்திகள் வருகின்றன.
இழப்பு, அவமானம், உளச்சோர்வு என்பவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் படைச் சிப்பாய்களை உற்சாகப்படுத்தும் விதமாக வெற்றியை உறுதிப்படுத்திய தாக்குதல்களைத் திட்டமிடும்படி முப்படைத் தளபதியும் சனாதிபதியுமான மகிந்த ராஜபச்க முப்படைத் தளபதிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.
முப்படையினரும் இணைந்த ஒரு நடவடிக்கையாக அது இருக்கலாம் என்ற எதிர்பார்ப்புக்களும் கொழும்பில் இருக்கும் படைத்துறை வட்டாரங்களில் நிலவுவதாகத் தெரிகிறது. கிழக்குத் தேர்தல் முடிந்த கையோடு அங்கிருந்தும் சில அணிகளைத் தருவிக்கும் வாய்ப்புக்களையும் சிலர் கோடி காட்டுகின்றார்கள்.
உத்தரவுகளும் விருப்பங்களும் எப்படி அமைந்தாலும் கள யதார்த்தத்திற்கு அமைவாக திட்டமொன்றைத் தீட்டுவதில் சிங்களப் படைத் தளபதிகள் சிண்டைப் பிய்த்துக்கொள்ளப் போவது உறுதி.
குறிப்பாக, கிளாலி-முகமாலை-கண்டல்-நாகர்கோவில் என்று கிட்டத்தட்ட 12 கி.மீ. நீளமான அந்த முன்னரங்கு, பட்டாலியுன் கணக்கில் சிறிலங்காப் படையினரைத் தின்று தீர்த்திருக்கிறது என்ற யதார்த்தத்திற்கு வெளியே நின்று திட்டமெதையும் தீட்டிவிட முடியாது.
இலங்கையில் இனப்பிரச்சினை ஆரம்பித்த நாளில் இருந்து இன்றுவரை எந்தவொரு தனியிலக்கிற்குமான சமர்களிலும் சிறிலங்காப் படையினருக்கு ஏற்பட்ட இழப்புக்களை விட, ஆனையிறவிற்காக அதன் உள்ளும் புறமும் நிகழ்ந்த மோதல்களே சிறிலங்காப் படைத்தரப்பிற்கு அதிக இழப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.
அதன் புவியியல் அமைவிடமும், தரைத்தோற்ற இயல்பும் அதற்கு முக்கிய காரணிகளாக இருந்தபோதிலும், அதனால் உண்டாகும் சாதக பாதகங்கள் இருதரப்பினருக்கும் உள்ளவை என்றே கொள்ளல் வேண்டும்.
ஆகாயக் கடல் வெளிச் சமரில் விடுதலைப் புலிகள் குறித்த இலக்கை அடைய முடியாவிட்டாலும், நூற்றுக்கணக்கில் சிங்களப் படைகளைக் கொன்றிருந்தார்கள்.
அதன்பின்னர் ஓயாத அலைகள் நடவடிக்கைத் தொடரில் 2,000 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் புலிகள் ஆனையிறவைக் கைப்பற்றிய போது சிறிலங்காப் படைத்தரப்பிற்கு ஏற்பட்ட இழப்பைப் பற்றிச் நாம் சொல்லவேண்டியதல்லை.
ஓற்றைச் சமரில் ஒரு டிவிசனையே இழுத்து மூடியது சிறிலங்கா தரைப்படை என்ற தகவல் மட்டுமே அச்சமரில் சிறிலங்கா தரப்பினர் அடைந்த இழப்பின் ஏனைய பரிமாணங்களையும் புரிந்துகொள்ளப் போதுமானது.
அதன்பின்னர், ஆனையிறவைக் கைப்பற்றுவதற்காக சிறிலங்காப் படையினர் முன்னெடுத்த 'அக்கினிச் சுவாலை" நடவடிக்கையின் இழப்புக்கள் உலகப் பிரசித்தம் பெற்றன என்றால் மிகையில்லை. இறந்த தொகையைவிட இரு மடங்கானோர் களத்திற்குத் திரும்ப முடியாயாதபடி காயப்பட்டனர்.
அச்சமரில் சிறிலங்காப் படையினர் வாங்கிய அடியின் வேகம் சில காலத்திற்கு பாரிய வலிந்த தாக்குதல் நடவடிக்கை எதையும் நினைத்தும் பார்க்க முடியாது என்ற நிலைக்கு அவர்களை இட்டுச்சென்றது. அதன்பின்னர் ஏற்பட்ட சமாதான ஒப்பந்த காலத்தில் பல மாதங்கள் கழிந்த நிலையிலேயே அந்த டிவிசன்கள் மீண்டும் முழுமையாக்கப்பட்டன.
பின்னர் நாலாம் கட்ட ஈழப்போரில் 2006 ஆம் ஆண்டின் ஓகஸ்ட் மற்றும் ஒக்ரோபர் மாதங்களில் நிகழ்ந்த மோதல்களிலும் நூற்றுக்கணக்கில் படையினர் கொல்லப்பட்டார்கள். ஒக்ரோபர் மாதச் சண்டையில் பலத்த இழப்புக்களைச் சந்தித்த நிலையில் அந்த முன்னரங்கில் கிட்டத்தட்ட ஒன்றரை வருட காலத்திற்கு பெருமெடுப்பிலான படையெடுப்புக்களை ஒத்திப்போட்டிருந்தது சிறிலங்காப் படைத்தரப்பு.
இப்போது, 2008 ஆம் ஆண்டு ஏப்ரலில் மீண்டும் அங்கே படையெடுத்து கையைச்சுட்டுக்கொண்டு நிற்கிறது சிங்களப்படை. இருநூறு சிப்பாய்கள் வரை உயிரிழந்தார்கள், கிட்டத்தட்ட அதே அளவானோர் களத்திற்குத் திரும்ப முடியாதபடி காயப்பட்டிருக்கிறார்.
இந்த நிலையில் ஆனையிறவிற்காக மீண்டும் விலை கொடுப்பதற்குச் சிங்களம் கங்கணங் கட்டி நிற்பதன் மூலகாரணங்களை அலாதியானவை.
இந்தப் படைச் செயற்பாடுகளின் அவசரமும் அதில் ஏற்பட்ட இழப்புக்களை ஒழித்து மறைக்க முயன்ற விதமும் படைய நோக்கங்களை விட அரசியல் உள்நோங்கங்களையே கோடிகாட்டுகின்ற என்று கொழும்பு ஊடகங்களில் பத்திற்கு ஒன்பது விழுக்காடானவை கருத்து வெளியிட்டிருக்கின்றன.
அதை உண்மையாக்குவது போலவே வடபோரரங்கில் மீண்டும் மோதல்களைத் தீவிரப்படுத்துவதற்கான சிறிலங்காப் படைத்தரப்பு நடவடிக்கைகள் காணப்படுகின்றன. ஆயினும் ஆனையிறவின் மீது போர் தொடுப்பதற்கான படைய நோக்கங்களையும் குறைத்து மதிப்பிட முடியாது.
சிறிலங்காவின் படைய வரலாற்றில், இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய சம்பவமாக ஆனையிறவு இழக்கப்பட்டதையே சொல்லவேண்டும். ஆனையிறவு இழக்கப்பட்டதால் குடாநாட்டின் முக்கிய கேந்திர நிலையமான பலாலி வான்தளம் புலிகளின் கணை வீச்செல்லைக்குள் வந்துவிட்டது மட்டுமல்லாது, குடாநாட்டின் மீது புலிகள் படையெடுப்பைச் செய்ய வசதியான பல கரையோர நிலைகளும் புலிகளின் வசம் வந்துவிட்டன.
ஆனையிறவு புலிகளின் கைகளிலே வீழ்வதற்கு முன்பாக அங்கு வருகை புரிந்த பன்னாட்டுப் போர் விற்பன்னர்கள், அந்தத் தளத்தை வீழ்த்துவது புலிகளுக்குச் சாத்தியமில்லை என்று கற்பூரம் கொழுத்தாத குறையாகச் சத்தியம் செய்திருந்தார்கள்.
அவர்கள் மதிப்பீட்டு அறிக்கை வழங்கி ஒரு வருட காலத்திற்கு உள்ளேயே, வரலாறு அவர்களைப் பொய்யர் ஆக்கியது.
அந்தத் தளத்தை வீழ்த்துவதற்காகப் புலிகள் பயன்படுத்திய படைவலு, படைக்கலச் சக்தி மற்றும் உத்திகள் என்பவை பற்றிய முழுமையான ஆய்வொன்றை சிறிலங்கா படைத்தரப்போ அல்லது எந்தவொரு பன்னாட்டு விற்பன்னரோ இதுவரை செய்து முடித்ததாகத் தெரியவில்லை.
இப்போது நடைபெறுவதைப்போல தமக்குள்ளே ஆள் ஆளுக்குக் கரிபூசுதல் மற்றும் அதிகாரிகளுக்குக் காற்றை இறக்கி விடுதல் போன்ற செயற்பாடுளிலேயே சிறிலங்கா படைத்தரப்பு அப்போதும் இறங்கியது. பன்னாட்டு விண்ணர்கள் வாய்களை இறுக மூடிக்கொண்டார்கள்.
இவ்வாறான பின்னணியில்தான், அக்கினிச் சுவாலை, 2006 ஒக்ரோபர் மாத நடவடிக்கை மற்றும் 2008 ஏப்ரல் மாத நடவடிக்கை என்பவற்றைச் செய்துவிட்டு நெட்டுயிர்த்து நிற்கிறது சிறிலங்கா படைத்தரப்பு.
செறிவான காலாட்படை நகர்த்தல், பல கிலோ மீற்றர்கள் அகலமான முனையை ஏக காலத்தில் திறத்தல், வரலாற்றுச் சாதனை படைக்கும் அளவிற்குச் செறிவான கணைவீச்சு, கவசப் படைகளின் செயற்பாடு, இப்போது புதிதாகத் தொடங்கப்பட்ட மக்-இன்பன்றியின் பங்கேற்பு, இரவு நகர்வுகள், வான்படை ஆதரவு என்று ஈரூடக முயற்சி போன்ற ஓரிரு உத்திகளைத் தவிர இன்னோரன்ன எல்லாவற்றையும் செய்து பார்த்துவிட்டது சிறிலங்காப் படைத் தரப்பு.
இதைவிட, நாலாம் கட்ட ஈழப்போரில் சிறிலங்கா தரப்பு பெரிதும் நம்பியிருக்கும் படைக்கலச் சக்திப் பயன்பாட்டில் அடியொற்றிய மூலோபாயத்தில் ஆண்டுக்கணக்கில் தொங்கி நிற்பதற்கான ஆயத்தங்களையும் கொள்வனவுகளையுமே படைத்தரப்பினர் செய்வதாகவும் சொல்லப்படுகிறது.
தமது தரப்புப் படைக்கலச் சக்தி மேம்பாட்டிற்குத் தாரளமாக உதவக்கூடிய கூட்டாளி நாடுகளையே மகிந்தர் தேடித்தேடிப் பிடிப்பதாக தாயகப் படைத்துறை அவதானி ஒருவர் தெரிவித்தார். ஆயினும், முக்கிய படை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களிடையே கொழும்பு நிருவாகம் அமைத்து வரும் கூட்டணிகள் தொடர்பான கருத்து வேற்றுமைகள் இருப்பதாகவும், அவை நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை என்றும் அவர் சொன்னார்.
இயற்கை, வாழ்வு அனுபவம், வரலாறு என்பவற்றில் இருந்து தனது உத்திகளையும் மூலோபாயங்களையும் வகுத்துக்கொள்ளும் விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் அவர்களின் வியூகங்களின் சிறப்பு, ஆனையிறவைக் கைப்பற்றுதல் மற்றும் அதற்கான பாதுகாப்பு வியூகங்களை வனைதல் என்பவற்றில் மிளிர்வதை இலங்கைத் தீவின் படைய நிகழ்வுகளை ஆய்வு செய்வோர் எவரும் மறுப்பதில்லை.
அந்த நுட்பங்களுக்கு முன் வெறும் படைக்கலச் சக்தி எடுபடாது என்பதை ஏப்ரல் மாத இறுதியில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் மீளவும் நிரூபித்திருக்கிறது என்ற கருத்தையே அவர்களும் கொண்டுள்ளார்கள்.
இந்நிலையில் மீண்டும் முகமாலை வட போரரங்கில் ஏற்படக்கூடிய மோதல்கள் இத்தீவின் படைய வரலாற்றில் புதிய சில பரிமாணங்களை வெளிப்படுத்தும் என்ற கருத்தையும் அவர்கள் கொண்டுள்ளார்கள்.
நன்றி: வெள்ளிநாதம் (02.05.08)
-சேனாதி-
Friday, May 2, 2008
'ஆனையிறவிற்கான விலை"
Posted by tamil at 5:53 PM 0 comments
மறுபடியும் கச்சதீவு
தமிழக மீனவர்கள் தாக்கப்படும் போதெல்லாம் கச்சதீவுக்குக் கைகால்கள் முளைத்து விடும். இந்தப் பகுதிக்குள் தமிழக மீனவர்கள் எல்லை கடந்து வரக் கூடாது என்று இலங்கை கடற்படை எச்சரிக்கை செய்துள்ளது. இதுபோதாது என்று இலங்கை மீனவர்களும் எச்சரிக்கை செய்யும் கடிதங்களை அனுப்பியுள்ளனர்.
கச்சதீவைச் சுற்றிய கடற்பகுதிகளே மீன்வளம் மிகுந்த பகுதியாக இருப்பதால் தங்கள் தொழில் உரிமையை இழக்க இவர்கள் தயாராக இல்லை; ஆண்டாண்டு காலமாக பல தலைமுறைகளாக இருந்து வரும் உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பது இங்குள்ள மீனவர் சங்கங்களின் கோரிக்கையாக இருக்கிறது.
இந்த மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் லட்சக்கணக்கான கடலோர மீனவர்களின் கதி என்ன? தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சதீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்ததே இத்தனை துயரங்களுக்கும் காரணம் என்னும் மறுபரிசீலனை மறுபடியும் விவாதத்துக்கு வந்துள்ளது.
இந்திய பாராளுமன்றத்தில் தமிழ்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தப் பிரச்சினையை எழுப்பியுள்ளனர்: தமிழக அரசியல் கட்சிகளும் இப்பிரச்சினை பற்றிய கோரிக்கைகளை எழுப்பத் தொடங்கியுள்ளன.
கி.பி.1480 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு காரணமாக இராமேஸ்வரம் தீவும், அதைச் சுற்றி 11 தீவுகளும் தோன்றியுள்ளன. இத்தீவுகள் தமிழகத்தின் நிலப்பரப்பில் இருந்துதான் துண்டிக்கப்பட்டன என்று இராமநாதபுரம் மாவட்ட அரசு வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது.
இந்தத் தீவுகளில் ஒன்றுதான் கச்சதீவு என்பது, இராமேஸ்வரத்திலிருந்து 12 மைல் தொலைவிலும், இலங்கையிலிருந்து 13 மைல் தொலைவிலும் உள்ளது.
இது கிழக்கு மேற்காக ஒரு மைல் தூரமும், வடக்கு தெற்காக அரை மைல் தூரமும் கொண்டது. இதன் பரப்பளவு 3.75 சதுர மைல், அவ்வளவுதான்.
இந்தத் தீவுகள் எல்லாம் இந்தியாவுக்கும், இராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கும் சொந்தமாக இருந்தன. இராமநாதபுரம் பகுதியை ஆண்ட சேதுபதி மன்னர்களுக்கு வருவாய் தரும் தீவுகளாக இருந்தன.
1947 இல் நாடு விடுதலையடைந்ததும் ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டம் வந்தது. அதனால் மன்னரின் உடைமைகள் மக்கள் உரிமையானது.
சேதுபதி மன்னர்கள் ஆட்சியில் இருந்தவரை இந்தத் தீவு முத்துக்குளிக்கும் இடமாகப் பயன்பட்டு வந்தது. அத்துடன் சித்த மருத்துவத்துக்குப் பயன்படும் மூலிகைகளின் சோலைவனமாகவும் இருந்தது.
இராமநாதபுரம் மக்கள் `உமிரி' என்ற செடிவகையைத் தீராத நோய்களுக்குச் சிறந்த மருந்தாக நம்பினர். அத்துடன் `சாய வேர்' போன்ற வேர் வகைகளும் பயன்பட்டன.
இந்தத் தீவுக்குச் சென்று இந்த மூலிகைகளைக் கொண்டு வருவதையே தொழிலாகச் சோழமண்டல மரக்காயர்கள் கொண்டிருந்தனர்.
இங்கே முத்துக்குளிக்கவும், மூலிகைகளைக் கொண்டு வரவும், மீன் பிடிக்கவும் விரும்பினால் சேதுபதி மன்னரின் அனுமதி பெற வேண்டும். அவர்கள் குத்தகைக்கு விட்டு வருவாய் பெற்றதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.
இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் ஆட்சியில் இருந்து வந்ததற்கு 1822 முதல் ஆவணச் சான்றுகள் உள்ளன. கிழக்கிந்தியக் கம்பெனி, 1822 இல் ஓர் ஒப்பந்தம் மூலம் இராமநாதபுரம் மன்னரிடமிருந்து கச்சதீவைப் பயன்படுத்திக் கொள்ளும் இசைவைப் பெற்றது. 69 கடற்கரை ஊர்களும், 8 தீவுகளும் சேதுபதி மன்னர்களுக்குச் சொந்தமாக இருந்தன. அந்த எட்டுத் தீவுகளில் ஒன்றுதான் கச்சதீவு.
இங்கிலாந்து பேரரசி விக்டோரியாவின் காலத்தில் இலங்கையைப் பற்றி வெளியிடப்பட்ட பொது அறிவிப்பில் இலங்கையின் எல்லைகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, கச்சதீவு குறிக்கப்படவில்லை. இராமநாதபுரம் அரசரைப் பற்றிய குறிப்பில் கச்சதீவு அவருக்கு உரியதென்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னாள் இலங்கை அமைச்சரவைச் செயலாளர் பி.ஈ.பியரிஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
இலங்கையின் பழைய வரலாற்று ஆவணங்களில் இத்தீவைப் பற்றிய விவரம் ஏதுமில்லை. டச்சுக்காரர்கள் மற்றும் போர்த்துக்கீசியர்கள் இலங்கையை ஆண்டபோது அவர்களின் ஆட்சி எல்லைக்குள் கச்சதீவு இடம்பெற்றிருக்கவில்லை. அவர்கள் ஆட்சி ஆவணங்களிலோ, குறிப்பேடுகளிலோ `கச்சதீவு' குறிப்பிடப்படவில்லை.
17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இலங்கை வந்த வரலாற்று ஆய்வாளர் பர்னோஃப். அந்நாட்டின் தேசப்படம் ஒன்றை உருவாக்கினார்.
இலங்கையின் வரலாற்று நூல்களான மகாவம்சம், ராஜாவளி, ராஜரத்னாசரியை இவற்றின் துணையோடு அவர் உருவாக்கிய தேசப்படத்தில் `நெடுந் தீவு' வரைதான் இலங்கையாக காட்டப்படுகிறது. நெடுந் தீவுக்கு அப்பாலுள்ள கச்சதீவு காட்டப்படவில்லை.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே அரேபியர்களும், ஐரோப்பியர்களும் வணிகம் செய்ய இலங்கைக்கு வந்தபடி இருந்தனர். அவர்களைத் தொடர்ந்து வந்த தாலமி, பிளினி ஆகியோர் இலங்கையின் கடற்பகுதி மற்றும் உட்பகுதிகளைத் தேசப்படங்களாக வரைந்தனர். அவர்கள் வரைந்த இலங்கை தேசப்படத்தில் கச்சதீவு குறிப்பிடப்படவில்லை.
இராமநாதபுரம் மன்னருக்கு உரிமையுடைய கச்சதீவு, ஆங்கில இந்திய அரசோடு இராமநாதபுரம் சமஸ்தானம் இணைந்தபோது இந்தியாவோடு சேர்ந்துவிட்டது. இந்தச் செய்தியே அப்போதைய மத்திய அரசுக்குத் தெரியவில்லையா?
1974 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் இந்திரா காந்தி - சிறிமாவோ பண்டார நாயக ஒப்பந்தத்தின்படி கச்சதீவு இலங்கைக்குச் சொந்தமாக ஆக்கப்பட்டது.
அதன் பின்னர் இருநாடுகளின் அதிகாரிகளுக்கு இடையே மீன் பிடிக்கும் உரிமை பற்றி கடிதப் போக்குவரத்து நடந்தது. இந்தக் கடிதங்களே 1976 ஒப்பந்தமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் மூலம் முதல் ஒப்பந்தத்தில் அளிக்கப்பட்ட உரிமைகளும் பறிக்கப்பட்டன.
இலங்கையின் இனக்கலவரம் உள்நாட்டுப் போராக உருவெடுத்ததும், இந்திய - இலங்கை கடல்வழிப் பாதை முக்கியத்துவம் பெற்றது.
இலங்கை தமிழ் அகதிகள் வருகை, போராளிகளுக்கு ஆயுத உதவி எனக் காரணம் காட்டி இலங்கை கடற்படை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதனால் கடுமையாகப் பாதிக்கப்படுபவை தமிழக மீனவர்களின் தொழிலும், வாழ்வும்.
`தமிழக மீனவர்களின் நலனைக் காக்க கச்சதீவை மீட்போம்' என்ற முழக்கத்தை அப்போது ஆட்சியில் இருந்த அ.தி.மு.க.அரசு முன்வைத்தது. 1991 ஆம் ஆண்டு சுதந்திர நாளை முன்னிட்டு கோட்டையில் கொடியேற்றிய அப்போதைய முதல்வர் ஜெயலலிதா `கச்சதீவை மீட்போம்' என்று சூளுரைத்தார்.
1991 அக்டோபர் 4 அன்று சட்டப்பேரவையில் கச்சதீவை இலங்கை அரசிடம் இருந்து மீட்க கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் உரையிலும் அறிவிக்கப்பட்டது.
இப்போது தமிழக முதல்வர், பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். சர்வதேசக் கடல் எல்லையைக் கடந்து செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கப்பட்டு வருகிறது.
எனினும் கச்சதீவுக்கு அருகில் ஏராளமான மீன்கள் கிடைக்கின்றன என்பதால் செல்கிறார்கள். கச்சதீவு நீண்ட காலத்துக்கு முன் தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடி பகுதியாக இருந்து வந்துள்ளது என அதில் குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்றுக் காலம் தொட்டு தமிழக மீனவர்களின் தாய் வீடாக இருந்துவரும் கச்சத்தீவை மீட்க வேண்டும் அல்லது 1974 ஒப்பந்த விதிகளின்படி மீன் பிடிப்பதற்கான உரிமைகளையாவது பெற்றுத் தர வேண்டும்.
தமிழக அரசு இனிமேலும் காலதாமதம் செய்யக் கூடாது. தாமதம் மனித உயிர்களையே மலிவாக்கிவிடும்.
தினமணி ஆசிரிய தலையங்கம் 30 ஏப்ரல் 2008
நன்றி தினக்குரல்
Posted by tamil at 6:26 AM 0 comments
Tuesday, April 29, 2008
அடக்குமுறைக்கு எதிராக மாறிவரும் உலகப் போக்கு
உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் க. விக்னேஸ்வரன் கடந்த சனியன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தந்தை செல்வா நினைவுப் பேருரையில் இலங்கை இனப் பிரச்சினை குறித்துக் கூறிய கருத்துகள் முக்கியமானவை.
இலங்கை இனப்பிணக்கு விவகாரத்தில் இலங்கை அரசு, நோய்க்கு வைத்தியம் செய்வதை விடுத்து நோயின் அடையாளங்களுக்கு குணங்குறிக்கு மருத்துவம் செய்கின்றது. இதை விடுத்து நோயின் மூலத்தைக் கண்டறிந்து, அதற்குத்தான் மருந்து கொடுக்கவேண்டும் என இப்பத்தியில் நாம் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றோம். அதை மீண்டும் ஒரு தடவை சுட்டிக்காட்டியிருக்கின்றார் விக்னேஸ்வரன்.
தமிழர்களின் போராட்டம் என்ற நோயை அடக்குவதற்கு அரசியல் தீர்வே தேவை. விடுதலைப் புலிகளை அழித்துவிட்டால், தான் முன்வைக்கும் எந்தத் தீர்வையும் தமிழர்கள் தாராளமாக ஏற்றுக்கொள்வர், அவர்கள் மீது எத்தகைய திட்டத்தையும் தீர்வாகத் திணித்து அவர்களை அதற்கு இணங்க வைக்கலாம் என்று அரசு கருதுகின்றது. அது தவறு என்ற சாரப்பட விக்னேஸ்வரன் கருத்துக் கூறியிருக்கின்றார்.
2002 டிசம்பரில் ஒஸ்லோவில் அப்போதைய இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற அமைதிப் பேச்சுகளின்போது "உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டிக் கட்டமைப்பின் கீழ் இலங்கை இனப்பிரச்சினைக்கு இணக்கமான தீர்வுத்திட்டம் ஒன்றைக் காண்பது குறித்து ஆராய்வதற்கு இரு தரப்பும் உடன்படுகின்றன' என்ற தீர்மானம் எட்டப்பட்டது. அந்த அமைதிப் பேச்சின் பின்னர் வெளியான அறிக்கையில் இது குறித்து விவரிக்கப்பட்டது.
அதன் பின்னர், இனப்பிரச்சினைக்கு சமஷ்டிமுறைத் தீர்வு காண்பது குறித்து அதிகம் கூறப்பட்டு வந்தது. ஆனால் அமைதி முயற்சிகளில் ஈடுபட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசு கலைக்கப்பட்டு பொதுமக்கள் ஐக்கிய முன்னணி அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் சமஷ்டித் தீர்வு முயற்சி பற்றிய பேச்சுகள் மெல்ல மெல்ல அடங்கின.
இப்போது போர்வெறித் தீவிரம் கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சிக் கட்டமைப்பு பதவிக்கு வந்த பின்னர் கடந்த சுமார் இரண்டரை ஆண்டு காலத்தில் சமஷ்டித் தீர்வு பற்றிய எண்ணக்கருவே கிடப்பில் போட்டு மூடப்பட்டு விட்டது. அதற்கான வாய்ப்புகள் அடியோடு நிராகரிக்கப்பட்டு விட்டன.
சமஷ்டி முறைத் தீர்வு முயற்சியை முற்றாக ஆழக் குழிதோண்டிப் புதைத்துவிட்ட அரசு,போரினால் தமிழ் மக்களை முழுமையாக வழிக்குக் கொண்டுவந்துவிடலாம் எனக் கங்கணம் கட்டிச் செயற்படுகின்றது என்பதை சுட்டிக்காட்டுகின்றார் விக்னேஸ்வரன்.
தமிழ் மக்களையும் அவர்களின் உரிமைகளுக்காகக் குரல் எழுப்பும் போராட்ட சக்தியான விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் வேறுபடுத்திக் காட்ட அரசு முயல்கின்றது. புலிகள் மட்டுமே வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர், அவர்களை அழித்து ஒழித்தால் அரசு முன்வைக்கும் எந்தத் தீர்வையும் தமிழ் மக்கள் தாராளமாக ஏற்றுக்கொள்வர் என்ற எண்ணத்தில் கருத்தில் அரசு செயற்படுகின்றது என்ற நிலைவரத்தை வெளிப்படையாக எடுத்துக் காட்டுகின்றார் விக்னேஸ்வரன்.
தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தொழிக்கும் தனது எத்தனத்தில் இலங்கை அரசு புரியும் மற்றொரு கபடத்தனத்தையும் அவர் அம்பலப்படுத்துகின்றார்.
புலிகளின் போராட்டத்துக்கு பயங்கரவாத முத்திரை குத்துகின்றது அரசு. அங்குதான் சூட்சுமம் உள்ளது.
வன்முறையில் புலிகள் ஈடுபட்டால் அது பயங்கரவாதம். அரசின் அட்டூழியங்களுக்கு எதிராக எவரேனும் கிளர்ந்து எழுந்தால் அது பயங்கரவாதம்.
ஆனால் அதை அடக்கும் பெயரால் அரசு வன்முறைகளை முன்னெடுத்தால் அது நாட்டைக் காக்கும் உன்னதப் பணி.
இதுதான் அரசின் கணிப்பீடும்,பரப்புரையும் என்று வெளிப்படுத்துகின்றார் விக்னேஸ்வரன்.
இவ்வாறு தமிழ் மக்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி அதை அடக்கி ஒடுக்க முற்படுவது பலன் தராது, தீர்வை வழங்கவே வழங்காது.
உரிமைக்கான கௌரவ வாழ்வுக்கான தமிழ் இளைஞர்களின் எழுச்சியையும், கிளர்ச்சியையும், போராட்ட வீறையும் அடக்குவது நோயின் அடையாளங்களை அடக்க முனைவது போன்றது. நோயை போராட்ட நோயை அடக்க வேண்டுமானால் தமிழர்களின் நியாயமான அபிலாஷைகளை நிறைவுசெய்யும் அரசியல் தீர்வே அவசியமானது என்பதையும் வெளிப்படையாகவே சுட்டிக்காட்டுகின்றார் விக்னேஸ்வரன்.
நோயின் மூலத்தை அடக்காமல் நோயின் அடையாளங்களை அல்லது குணங்குறிகளை அடக்க முயன்றால் நோயின் வெளிப்பாடு வேறு குணங்குறியாகத் தோற்றும் என்பதையும் கூட அவர் சுட்டிக்காட்டத் தவறவில்லை.
விடிவை நோக்கிப் போராடும் ஒரு மக்கள் கூட்டத்தின் அயராத முயற்சி, அந்த மக்கள் கூட்டத்தினருடன் அடங்கிவிடும் விவகாரம் அல்ல. இன்று உலகமே அதில் தலையிடும் சாத்தியம் பங்களிப்பு அதிகரித்து வருகின்றது. அடக்கப்பட்ட மக்களுக்காக உலகமே ஒன்றுபட்டு ஓங்கிக் குரல் எழுப்பும் சூழ்நிலை இன்று உருவாகி வருகையில் ஈழத் தமிழ் மக்களும் அவர்களது உரிமைக்கான போராட்டமும் உலகின் எங்கோ ஒரு மூலையில் தனித்து விடப்படவில்லை என்பதையும் ஓய்வுபெற்ற நீதியரசர் விக்னேஸ்வரன் எடுத்துக் காட்டுகின்றார்.
விடிவை நோக்கித் தமிழர்கள் மட்டுமே போராடுகின்றார்கள் என்பது அல்ல. உலகமே அந்த விடிவை நோக்கிய யாத்திரையிலேயே முனைப்பாக ஈடுபட்டுள்ளது. அதனால்தான் "பாதுகாப்பிற்கான உரித்து' (the right to protect) என்ற எண்ணக்கரு உலகில் மேலோங்கி வருகின்றது. இந்தக் கொள்கைப் போக்கின்படி ஒரு நாட்டில் இடம்பெறும் அட்டூழியங்களை இன்னொரு நாடு பார்த்துக்கொண்டு வாளாதிருக்க முடியாது என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. தட்டிக் கேட்கும் உரித்து உண்டு என்கிறது இந்த எண்ணக்கரு. தட்டிக்கேட்பது மட்டுமல்ல பாதிக்கப்பட்டவர்களை உலக நாடுகள் சேர்ந்து பாதுகாக்கும் பிரயத்தனங்களில் ஈடுபட வேண்டும்'' என்றும் வலியுறுத்தப்படுகின்றது.
""உலகின் கண்ணோட்டம் இன்று மாறியிருக்கின்றது. அட்டூழியங்களுக்கும், இம்சைக்கும் ஆளான மனித சமூகம் அல்லது மக்கள் கூட்டம் இன்று தனித்து விடப்படவில்லை. உலகமே அதற்காகக் குரல் எழுப்பும் நிலைமை வந்துவிட்டது.'' என்பதை முன்னாள் நீதியரசர் விளக்கியுள்ளார்.
""கொடூரமான தொடர் மனித உரிமை மீறல்களில் இருந்து ஒவ்வொரு நாடும் அதன் மக்களைப் பாதுகாப்பது அதன் தலையாய கடமை. நாடுகளால் தமது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாவிட்டால் ஐக்கிய நாடுகள் சாசனம் மற்றும் வேறு சர்வதேச ஆவணங்களின் அடிப்படையில் சர்வதேச நாடுகள் சட்டபூர்வமாக இடையில் புகுந்து தலையிட வேண்டும். இவ்வாறு இடைபுகுவதைத் தேவையற்ற குறுக்கீடாகவோ அல்லது நாடுகளின் இறைமையைக் கட்டுப்படுத்துவதாகவோ அர்த்தப்படுத்த முடியாது.'' என்று பரிசுத்த பாப்பரசர் கூறியிருப்பதையும் அவர் ஆதாரம் காட்டியிருக்கின்றார்.
தமிழரை அடக்கி, ஒடுக்கி, அடிமைப்படுத்தி ஆளக் கங்கணம் கட்டி நிற்கும் தென்னிலங்கைக்கு உலகின் மாறி வரும் சிந்தனைப் போக்கு கண்ணோட்டம் புரிந்தால் சரி.
நன்றி - உதயன்
Posted by tamil at 6:12 AM 0 comments
