Saturday, March 21, 2009

போர்க் குற்றவாளி மகிந்தவை கூண்டில் ஏற்றப்போவது யார்?

சூடானிய ஜனாதிபதி ஓமர் அல் பஷீருக்கு எதிராக அண்மையில் சர்வதேச நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது.

சூடானில் நிகழ்ந்த கொலைகள், இனப்படுகொலைகள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள், பலவந்தமாக மக்களை இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றியது போன்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது சர்வதேச நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டிருக்கின்றன.

சர்வதேச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை சூடானிய அரசாங்கம் நிராகரித்திருப்பது வேறு விடயம். ஆனால் இனப்படுகொலைகளை, சித்திரவதைகளை, கட்டாய இடப்பெயர்வுகளுக்கு காரணமான போர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த முடியும் என்பது உறுதியாகியிருக்கிறது.

இந்த விவகாரம் ஈழத்தமிழ் மக்கள் சர்வதேச ரீதியில் செய்யக் கூடிய சில விடயங்களை எடுத்துக் காட்டியிருக்கிறது.

சூடானிய ஜனாதிபதி ஓமர் அல் பஷீர் மீது எத்தகைய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டனவோ- அதேபோன்ற அத்தனை குற்றச்சாட்டுகளுமே இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கும் பொருந்தும்.

2005 ஆம் ஆண்டில் ஜனாதிபதியாகப் பதவியேற்ற காலத்தில் இருந்து அவர் நடத்தும் கோர யுத்தத்தால் பலியான தமிழ்மக்களின் தொகை 5 ஆயிரத்தை விடவும் அதிகம்.

அண்மைய மோதல்களில் காயமுற்ற பொதுமக்கள் 4000 பேர் வரையில் தரைவழியாகவும் கப்பல்கள் மூலமாகவும் திருகோணமலை மற்றும் வவுனியா வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இவர்களை விட வன்னிக்குள் மேலும் ஆயிரக்கணக்கான காயமுற்ற பொதுமக்கள் இருப்பதாக செய்திகள் கூறுகின்றன. இந்த வருடத்தில் மாத்திரம் 2500இற்கும் அதிகமான பொதுமக்கள் மரணத்தைத் தழுவியிருக்கிறார்கள்.

அதைவிட மக்களை தமது சொந்த இடங்களில் இருக்கவிடாமல் துரத்தித் துரத்தி படையினர் நடத்தும் எறிகணைத் தாக்குதல்கள்- அவர்களை ஒரு சிறு பிரதேசத்துக்குள் முடங்கிப் போக வைத்திருக்கின்றது.

இலட்சக்கணக்கான மக்களை இப்படி அலைய விட்டது போதாதென்று அரசாங்கம்- அவர்களை கப்பல் மூலம் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டு வந்து முகாம்களில் அடைத்து வைக்கவும் திட்டமிட்டிருக்கிறது.

இதில் ஆச்சரியம் என்னவெனில் இலங்கை அரசாங்கத்தின் இந்த முயற்சிக்கு சர்வதேசமும் ஆதரவு கொடுப்பதற்கான சமிக்ஞைகள் வெளிப்படுவது தான்.

இனப்படுகொலைகள், கட்டாய இடப்பெயர்வு, சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் என்று சூடானிய ஜனாதிபதி எத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கிறாரோ- அதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு மகிந்த ராஜபக்ஸவும் தகுதியானவர் தான்.

இராணுவத்தினருடனான சண்டைளைப் புலிகள் பார்த்துக் கொள்ளட்டும். ஆனால் அவர்களே அனைத்தையும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.

மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் இன அழிப்பை சர்வதேசத்தின் முன்பாக அம்பலப்படுத்த புலம்பெயர் நாடுகளில் வாழும் மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள்.

இவை சர்வதேச ரீதியில் இலங்கையில் நடத்தப்படும் இன அழிப்புப் போர் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது உண்மை.
ஆனால் இது மட்டும், ஈழத்தமிழினத்தின் விடுதலைக்கோ விடிவுக்கோ போதாது.

சர்வதேச நாடுகள் இலங்கை விவகாரத்துக்குள் தலையிட விரும்பவில்லை என்பது வெளிப்படை.

ஆனாலும் வன்னி மக்களை அங்கிருந்து வெளியேற்றுவது பற்றிய ஆலோசனைகளில் இந்தியா மற்றும் மேற்குலக நாடுகள் பங்கேற்றிருந்தன.
இந்தநிலையில் புலம்பெயர் மக்கள் முன் புதிய பொறுப்புகள் வந்து நிற்கின்றன.

சூடானிய ஜனாதிபதியைப் போன்று மகிந்தவுக்கு எதிராக சட்ட ரீதியாக எதைச் செய்யலாம் என்று ஆராய வேண்டிய தருணம் வந்து விட்டது.
சர்வதேச நீதிமன்றத்தில் மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம்- தமிழினத்துக்கு எதிரான போரில் கையாளும் கீழ்;த்தரமான உத்தி;கள் பற்றிய குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டும்.

இப்போதைய நிலையில் இந்த இனப்படுகொலைகளுக்கும், கட்டாய இடப்பெயர்வுக்கும், மற்றும் போர்க் குற்றங்களுக்கும் நிறையவே சாட்சிகள் உள்ளன.

எனவே இதைவிடப் பொருத்தமான தருணம் வேறு இரக்க முடியாது.

மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பது ஒன்றும் இலகுவான விடயம் அல்ல. அதற்கான தேடல்கள் , வசதிகள் நிறையத் தேவைப்படும்.

குறிப்பட்ட கால அவகாசம் தேவைப்படும். இதற்கு இப்போதிருந்தே தயார்படுத்த வேண்டும். உலகெங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழ் சட்ட வல்லுனர்கள் கூடி ஆராய்ந்து இதுபற்றிய முடிவை எடுக்கலாம்.

இத்தகைய முயற்சிகளில் நாம் எப்போதோ இறங்கியிருக்கலாம். ஆனால் நாம் எப்போதும் போரை நம்பியே வாழ்ந்து பழக்கப்பட்டுப் போனதால் சட்டரீதியாக சாதிக்கக் கூடிய பல விடயங்களை சாதிக்காமல் இழந்திருக்கிறோம்.

இந்தநிலை தொடரக் கூடாது. அதேவேளை மேற்கு நாடுகளின் படைபல ஆதரவுடன் வன்னி மக்களை கட்டாயமாக கொண்டு சென்று முகாம்களில் அடைக்க எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கும் ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

துரதிஷ்டவசமாக அப்படியானதொரு நிகழ்வு நிகழ்ந்து விட்டால்- அடுத்தது என்ன செய்யலாம் என்பது பற்றியும் இப்போதே ஆராய்ந்து சில தயார்படுத்தல்களைச் செய்யலாம்.

ஏனென்னறால் கட்டாய குடிபெயர்ப்பு நிகழ்;ந்தால் அதற்குப் பினனர் நிகழப் போகின்;ற இராணுவ அட்டூழியங்களுக்கு சர்வதேசமே பொறுப்பேற்க வேண்டியிருக்கும்.

பாரம்பரியமாக வாழ்ந்து வந்த மக்களை ஒரு பிரதேசத்தில் இருந்து துரத்தியடிப்பது மிகமோசமான மனித உரமை மீறல்.

இதைச் சர்வதேச சமூகம் செய்தால் அதற்கெதிராக சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து அந்த சர்வதேச தலையீட்டைப் பயன்படுத்தி தமிழ் தேசிய இனத்துக்கான உரிமைகளைப் பெற்றுக் கொள்வது பற்றிய ஆலோசனைகளும் இப்போதே நடத்தபட வேண்டும்.

இவற்றுக்கெல்லாம் காலம் இருக்கிறது. நேரம் கனிந்து வரும் என்று இருந்து விடுவதும் சரி- இழுத்தடிப்பதும் சரி- வன்னியில் துயரமே வாழ்வாக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை மேலும் துயரங்களுக்குள் தள்ளி விடுவதாக அமைந்துவிடும்.

போர் ஒருபுறம் நடக்கட்டும். அதேவேளை இலங்கை அரசாங்கத்தை சர்வதேசத்தின் முன்னிலையில்- குற்றவாளியாகக் கூட்டில் ஏற்றுவதற்கான புதிய போர் ஒன்றை தொடுப்பதற்கான பொறுப்பு புலம்பெயர் நாடுகளில் வாழும் மக்களிடமே உள்ளது. இந்தப் பொறுப்பை புலம்பெயர் தமிழ்ச் சமூகம் நிறைவேற்றுமா?.

நன்றி:
- தொல்காப்பியன் -
நிலவரம்

0 Comments: