Sunday, April 12, 2009

ஆனந்தபுரம் சமர் தோற்றுவித்துள்ள அதிர்வலைகள்

அனைத்துலகத்தின் கவனத்தை தன்பக்கம் திரும்பும் முகமாக பல நகர்வுகளை எதிரும்புதி ருமாக இலங்கை அரசாங்கம் மேற்கொள்வ துண்டு. தற்போது இலங்கை அரசாங்கம் எதிர் கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தேவையான நிதி உதவிகளுக்கு அனைத்துலக நாணய நிதியத்தை நம்பியுள்ள அரசு அவர்கள் விதிக்கும் நிபந்தனைகளினால் பலத்த அதிருப்தி அடைந்துள்ளது.

இலங்கை அரசு தனது கையிருப்பு நிதியை செலவிட்டு தனது நாணயத்தின் பெறுமதியை தக்கவைக்க முற்படுவதை நிறுத்த வேண்டும் என்பதே அனைத்துலக நாணய நிதியத்தின் முதலாவது நிபந்தனை. அதனை விட வன்னியில் நடைபெற்றுவரும் போர் மற்றும் அங்கு தோன்றியுள்ள மனித பேரவலம் தொடர்பாக வும் மேற்குலகத்தின் போக்குகளில் மாற்றம் தென்படுவதும் அரசிற்கு அனுகூலமானதல்ல.

எனவே அவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் காரியங்களை அரசு மேற்கொண்டு வருகின்றது. கடந்த வாரத்தின் நடுப்பகுதியில் லிபியாவுக்கு சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு லிபியாவின் அரச தலைவர் கேணல் கடாபியை சந்தித்துள்ளார்.

அதே சமயம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தனது குழுவினருடன் சீனாவுக்கு பயணத்தை மேற் கொண்டுள்ளார். அங்கு அவர் சீனாவின் பொதுவுடமைக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரான வாங் ஹாங் என்பவரை கடந்த புதன் கிழமை சந்தித்து இரு நாடுகளினதும் உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

இந்த அரசியல் நகர்வுகளுக்கு முன்னர் வன்னி களமுனைகளில் பாரிய மோதல்கள் கடந்த 2 ஆம் திகதியில் இருந்து 5 ஆம் திகதி வரையில் நிகழ்ந்திருந்தது. அதன் பின்னர் அங்கு கடந்த புதன்கிழமை வரையிலும் ஒரு அசாதாரண அமைதி நிலவிய போதும் புதன் கிழமை நகர்வை மேற்கொண்ட இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் மோதல்கள் நடைபெற்றுள்ளதாக வன்னித் தகவல்கள் தெரிவித்துள்ளன.

கடந்த மார்ச் மாத இறுதி வாரப்பகுதியில் புதுக்குடியிருப்பு பகுதியில் உக்கிரமடைந்த தாக்குதல்கள் இந்த மாதத்தின் முற்பகுதியில் அதி தீவிரம் பெற்றுள்ளது. கடந்த முதலாம் திகதி 53 ஆவது படையணி, நடவடிக்கை படையணி8 என்பன தென்முனையில் இருந்து நகர, 58 ஆவது படை யணி வடமுனையில் இருந்து நகர்ந்து பச்சை புல்மோட்டை பகுதியை கைப்பற்றியிருந்ததாக படைத்தரப்பு தெரி வித்திருந்தது.

53 ஆவது படையணியின் 5 ஆவது விஜயபா பற்றலியன், 6 ஆவது கஜபா பற்றலியன் என்பனவும், 58 ஆவது படை யணியின் 14 ஆவது, 8 ஆவது, 20 ஆவது, 12 ஆவது கஜபா பற்றலியன் கள், 4 ஆவது கெமுனு வோச் பற்றலியன் என்பன நடவடிக்கை படையணி8 மற்றும் 53 ஆவது படையணிகளுடன் பச்சைப் புல் மோட்டை ஊடாக ஆனந்த புரம் பகுதியில் கடந்த 2 ஆம் நாள் அன்று இணைப்பை ஏற்படுத்திக் கொண்டன.

படையினரின் இந்த இணைப்புக்கு பின்புற மாக ஏறத்தாழ இரண்டு சதுர கி.மீ. பரப்பளவி னுள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விடுதலைப்புலி கள் நிலைகொண்டிருந்தனர். இதனை படைத் தரப்பு அறிந்திருந்தது. எனவே இந்த இணைப்பின் மூலம் விடுதலைப்புலிகளின் பெருமள வான அணிகளை முற்றுகைக்குள் கொண்டு வந்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்திருந்தது.

ஆனால் படையினரை முற்றுகைக்குள் கொண்டு வருவதே விடுதலைப்புலிகளின் திட்டமாக இருந்துள்ளது. அதாவது படையினரின் பின்னணி நிலைகளுக்குள் ஒரு தொகுதி தமது உறுப்பினர்களை அனுமதிப்பதன் மூலம் இராணுவத்தின் வலிந்த தாக்குதல் படை யினரை பெட்டி வடிவ முற்றுகைக்குள் கொண்டுவந்து இரு முனைகளால் தாக்கி அழிக்கும் உத்திகளை விடுதலைப்புலிகள் வகுத்திருந்தனர்.

எனினும் படைத்தரப்பு தனது பலத்தை அதிகரிப்பதன் மூலம் இந்த முற்றுகையின் நோக்கத்தை மறுதலையாக்க முயன்றது. அதாவது விடுதலைப்புலிகளின் அணிகளை படைத்தரப்பும் பெட்டி வடிவ முற்றுகைக்குள் கொண்டுவர முற்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த 4 ஆம் திகதி சனிக்கிழமை இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத்பொன்சேகா வன்னி படை கட்டளைத் தளத்திற்கு அவசர விஜயம் மேற்கொண்டு புதுக்குடியிருப்பில் நிலைகொண்டுள்ள படையணிகளின் கட்டளைத் தளபதிகளுடன் அவசர சந்திப்பு ஒன்றை மேற்கொண் டிருந்தார்.

சரத்பொன்சேக்காவின் இந்த விஜயத்தின் நோக்கம் புதுக்குடியிருப்பு நோக்கிய
படையினரின் இறுதியான வலிந்த தாக்குதலை தீவிரப் படுத்துவதுடன் படையினரின் பின்னணி நிலைகளுக்குள் நிலைகொண்டுள்ள விடுதலைப்புலிகளின் அணிகளை முற்றாக அழிப்பதுமே என வன்னி தகவல்கள் தெரிவித்திருந்தன. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சமரை ஆரம்பிக்க இராணுவம் திட்டமிட்டிருந்தது. அதற்கேற்ப பெருமளவான படையினரும், ஆயுதங்களும் அங்கு நகர்த்தப்பட்டன. சிறப்புப் படையணிகள், வான்நகர்வு பிரிகேட் என்பன அங்கு கொண்டுவரப்பட்டன.

கேணல் ராப்ல் நுகேரா தலைமையிலான கொமாண்டோ பற்றலியன், கேணல் அதுல கொடிப்பிலி தலைமையில் சிறப்பு படையணி, 5 ஆவது கவசவாகன படைப்பிரிவும் பெரு மளவான டாங்கிகளும் அங்கு நகர்த்தப்பட்டது டன், பிரிகேடியர் சவீந்தர் சில்வா, மேஜர் ஜெனரல் காமால் குணரட்ன, கேணல் ரவிப் பிரிய ஆகியோர் களமுனைகளை வழிநடத் துவதற்கு நியமிக்கப்பட்டதுடன், அவர்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளை மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் மேற்கொண்டிருந்தார்.

எனினும் படையினரின் திட்டத்திற்கு முன்ன ராக 4ஆம் திகதி சனிக்கிழமை நள்ளிரவு விடுதலைப் புலிகளின் அணிகள் தமது தாக்கு தல்களை ஆரம்பித்திருந்தனர். இரு தரப்பும் கடுமையாக மோதிக்கொண்டன. சனிக்கிழமை நள்ளிரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலும் ஏறத்தாழ 100,000 எறிகணைகளை படைத் தரப்பு பயன்படுத்தியதுடன், 15 நிமிடங்களுக்கு ஒரு வான் தாக்குதலையும் நிகழ்த்தி யிருந்தது.

விடுதலைப்புலிகளின் நிலைகளுக்கு அருகாமையில் படைத்தரப்பு நின்றபோதும் அங்கு எறிகணை வீச்சுக்களையும், வான்தாக்குதல்களையும் படையினர் செறிவாக பயன்படுத்தியி ருந்ததாக படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 8 ஆம் திகதி வரையிலும் வன்னி பகுதியில் பெரும் மோதல்கள் நிகழவில்லை. ஆனால் விடுதலைப்புலிகளின் ஆழஊடுரு வும் படையினரின் தாக்குதல் ஒன்று கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் இராமநாதபுரத்தில் நிகழந்துள்ளதாக படைத் தரப்பு தெரிவித்துள்ளது.

இலங்கைப் படையினர் மீது விடுதலைப்புலிகளின் பெண்புலி உறுப்பினர் ஒருவர் தற் கொலைத் தாக்குதலை நிகழ்த்தியதாக படைத் தரப்பு தெரிவித்துள்ளது இராணுவத்தின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் ஊடுருவியுள்ள விடுதலைப்புலிகளின் அணிகளே இந்தத் தாக்குதலை நிகழ்த்தியுள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது. இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை 10 ஆம் திகதி காலை படையினர் பாதுகாப்புப் வலயம் நோக்கிய தமது நகர்வுகளை ஆரம்பித்து விட்டதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால் மக்கள் செறிவாக வாழும் இந்தப் பிரதேசத்தின் மீதான நடவடிக்கை பாரிய மனித பேரழிவுகளை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தை தோற்று வித்துள்ளது.

தற்போதைய களமுனையை பொறுத்தவரையில் இராணுவம் தனது கவசப்படையையும், செறிவான பீரங்கி தாக்குதல்களையும் பயன் படுத்துவதுடன், தரைப்படையினர் 23 மி.மீ, 30 மி.மீ போன்ற இலகுரக பீரங்கிகளையும், 12.7 மி.மீ ரக கனரக துப்பாக்கிகளையும் தரை நடவடிக்கைகளில் அதிகளவில் பயன்படுத்தி யும் வருகின்றனர். எனவே அவ்வாறான ஒரு சூழ்நிலையில் பாதுகாப்பான பிரதேசத்திற்குள் இராணுவம் புகுந்தால் பாரிய மனிதப் பேரழிவு ஒன்று ஏற்படும் என்பதை யாரும் மறுத்து விட முடியாது.

தற்போது புதுக்குடியிருப்பு முழுவதையும் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ள அரசு பாதுகாப்பு வலயத்தை நோக்கி ஐந்து முனைகளில் நகர முற்பட்டு வருகின்றது. இந்தப் பிரதேசத்தில் மோதல்கள் ஆரம்பிக்குமாக இருந்தால் அங்கு குறுகிய நேரத்தில் பாரிய அழிவு ஏற்படலாம் என எதிர்வுகூறப்படுகின்றது. இது இரண்டாவது உலகப் போரின் பின்னர் நிகழப்போகும் மிகப்பெரும் பேரழிவாகும் என்பதும் கவனிக்கத்தக்கது.

இந்த பேரனர்த்தத்தைத் தவிர்க்கும் முகமாக போரை நிறுத்த செய்ய வேண்டிய முக்கிய பொறுப்பு அனைத்துலக சமூகத்திற்கு, குறிப்பாக இந்தியா விற்கும், மேற்குலகத்திற்கும் உண்டு. ஏனெனில் நான் ஏற்கெனவே பல தடவைகள் கூறி யது போல பொஸ்னியாவில் மேற்கொள்ளப் பட்ட அமைதி நடவடிக்கையின் போது இரு தரப்பும் சமவலுவுள்ள நிலையில் இருந்ததால் தான் நியாயமான தீர்வை எட்ட முடியும் என்ற சமன்பாடுகளை வகுத்தி ருந்த மேற்குலகம் தமிழ் மக்களுக்கு மறுதலையான கொள்கைகளை பின்பற்றியிருந்தது. இதன்மூலம் நடை பெற்றுவரும் போரை அவர் களே தூண்டியதாக ஒட்டுமொத்த தமிழினமும் கருதி வருகின்றது. எனவே தான் பல போராட்டங்களை புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி
வேல்ஸிலிருந்து அருஷ்
வீரகேசரி வாரவெளியீடு

0 Comments: