Saturday, October 13, 2007

அமைதிப்படை நாட்கள்... அதிர வைக்கும் குறிப்புகள்!

(விகடன்)

பிரபாகரனைக் கொன்றுவிட கட்டளையிட்டாரா ராஜீவ்?

‘கிணறு வெட்ட பூதம் கிளம்பிய' கதை நமக் கெல்லாம் தெரியும். அதேபோல், டெல்லியில் ‘புத்தகம் எழுத பூதம் கிளம்புவதும்’ அடிக்கடி நடக்கும். அமைச்சர் முதல், ஆண்டி வரை சர்ச்சைக்குரிய கருத்துக்களைச் சொல்லிப் புத்தக பூகம்பம் கிளப்புவார்கள். லேட்டஸ்டாக கிளப்பியிருப்பவர் - ஓய்வு பெற்ற ராணுவ உயர் அதிகாரி!

இந்திய ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக இருந்து ஓய்வு பெற்றவர் ஹர்கிரத்

சிங். இன்று பாகிஸ்தான் லாகூரில் அடங்கிவிட்ட பஞ்சாப் பகுதியில் பிறந்த ஹர்கிரத், எத்தனையோ லட்சம் பேரைப் போல சுதந்திரத்துக்குப் பின் இந்தியாவுக்கு வந்துவிட்டவர். 1956-ல் இந்திய ராணுவத்தில் பணியைத் தொடங்கினார். இந்திய-சீனப் போர், இந்திய-பாகிஸ்தான் போர்களில் பங்கெடுத்தவர். முப்பத்தைந்து வருட அனுபவங்களுக்கு பின்னர் 1991-ல் ஓய்வு பெற்றார்.

சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமாதானத்தை நிலைநாட்ட இந்தியாவால் இலங்கைக்கு 1987-ம் ஆண்டு அனுப்பப்பட்ட ‘இந்திய அமைதிப் படை'க்கு (ஐ.பி.கே.எஃப்.) முதன்முதலில் தலைமை ஏற்றுச் சென்றவர் ஹர்கிரத் சிங்தான்.

இப்போது தன் புத்தகத்தில், ‘விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சுட்டுக் கொல்லவேண்டும் அல்லது கைது செய்யவேண்டும்...' என்று அப்போது இலங்கையின் இந்திய ஹை கமிஷனராக இருந்த ஜே.என்.தீட்சித் தனக்குக் கட்டளையிட்டதாகவும், 'இதெல்லாம் பிரதமரின் (அன்று -ராஜீவ் காந்தி) உத்தரவுப்படிதான் சொல்லப்படுகிறது' என்று தன்னிடம் கூறியதாகவும், தீட்சித்தின் அந்த உத்தரவுக்குத் தான் கீழ்ப்படிய மறுத்து விட்டதாகவும் சொல்லியிருக்கிறார் ஹர்கிரத் சிங்!

‘Intervention in Srilanka: The IPKF Experience Retold’ என்ற தலைப்பில் எழுதியுள்ள இந்தப் புத்தகத்தில்,

‘‘நான் இந்திய ராணுவத்தில் 54-வது தரைப்படை டிவிஷனின் [Infantry] ஜெனரல் கமாண்டிங் ஆபீஸராக இருந்தேன். ராஜீவ் காந்தி பிரதமராக இருக்கும்போது, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் உடன்படிக்கை ஏற்பட்டதையட்டி எங்களுடைய டிவிஷனை யாழ்ப் பாணத்துக்குப் போகும்படி அப்போதைய ராணுவ தளபதி சுந்தர்ஜியிடமிருந்து உத்தரவு வந்தது. 1987 ஜூலை 29-, 30 தேதிகளில் நாங்கள் புறப்பட்டோம். இலங்கை சென்று ஐந்து மாதங்கள் பணியாற்றிய என்னை, 1988 ஜனவரி மாதம் அங்கிருந்து டிரான்ஸ்ஃபர் செய்து விட்டனர். இலங்கையில் நான் இருந்தபோது நடந்த மூன்று விஷயங்கள் மிக முக்கியமானவை..." என்று முன்வரலாறு சொல்லி, பின்வரும் சில அதிர்ச்சிகளை அள்ளிப் போடுகிறார் இவர்&

ஒன்று: ‘‘விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்கக் கோரியும் அவர்களிடமிருந்து ஆயுதங்களை பறிக்கும் முயற்சியிலும் நாங்கள் ஈடுபட்டோம். 1987, ஆகஸ்ட் மாதம் அவர்கள் ஆயுதங்களை ஒப்படைத்தனர். அதேநேரம், நமது உளவு அமைப்பான ‘ரா', மற்ற தமிழ்ப் பேராளிகளுக்கு ஆயுதங்களைக் கொடுத்துக்கொண்டு இருந்தது. இதைப் புலிகள் வீடியோ எடுத்து என்னிடம் காட்டி முறையிட்டனர். இதை நான் நம்முடைய ஹைகமிஷனுக்குக் கொண்டு சென்றேன்."

இரண்டு: "ஜே.என்.தீட்சித், ‘இந்திய அமைதிப்படை மூலம் புலிகளைப் பற்றிய அவதூறுகளை அங்குள்ள தமிழ் மக்கள் மத்தியில் பரப்பச் சொன்னார். அதை நாங்கள் ஏற்க மறுத்தோம். நாங்கள் சொல்வதை நம்ப அங்கு யாரும் தயாராக இல்லை என்பதுதான் யதார்த்தம். அங்குள்ள தமிழ்மக்கள் தனி ஈழத்தை விடுதலைப்புலிகள் மூலமாக மட்டுமே அடைய முடியும் என்று உறுதியாக நம்பினார்கள். இதையெல்லாம் தீட்சித்திடம் நான் சொன்னபோது,

‘ஜெனரல், நான் உங்களுக்குப் போடும் கட்டளைகள் எல்லாம் பிரதமரிடம் கலந்து கொண்டுதான் சொல்கிறேன். இதை நீங்கள் மனதில் வைத்துக்கொள்வது நல்லது’ என்று அழுத்தமாகச் சொன்னார் தீட்சித்."

மூன்று: "1987&ல் செப்டம்பர் 14, 15 தேதிகளில் எனக்கு தீட்சித்திடமிருந்து போன் வந்தது. 'இந்திய அமைதிப்படையிடம் பேச்சுவார்த்தை நடத்த பிரபாகரன் வரும்போது, அவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுங்கள்... இல்லையென்றால் அவரை நீங்கள் கைது செய்தாவது இந்திய அரசிடம் ஒப்படை யுங்கள்' என்றார் தீட்சித். அதிர்ந்துபோன நான், ‘ஓவர் ஆல் ஃபோர்ஸ் கமாண்டரான லெப்டினென்ட் ஜெனரல் டிபேந்தர் சிங்கிடம் பேசிவிட்டு, என் கருத்தை உங்களுக்குத் தெரிவிக்கிறேன்' என்று சொல்லி போனை வைத்துவிட்டேன். டிபேந்தர் சிங்கிடம் பேசியபோது, அவரும் ஆவேசமடைந்து, ‘தீட்சித்திடம் சொல்லுங்கள்... நம்முடைய ராணுவம் ஒருபோதும் முதுகில் சுடுகிற கோழையல்ல. அதிலும் சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைத்து, அதன்படி வெள்ளைக் கொடியின்கீழ் வரும் ஒருவரை சுட்டுக்கொல்வது நமக்கு எந்த வகையிலும் அழகல்ல' என்றார்.

இதை நான் சொன்னதும், ‘நான் உங்களுக்கு இடுகிற கட்டளை என்னுடையதல்ல. அவருடைய (ராஜீவ் காந்தி) உத்தரவின்படிதான். நீங்கள்தான் இந்திய அமைதிப்படைக்கு கமாண்டிங் ஆபீஸர். உங்களுக்கு தான் இதை நிறைவேற்றும் பொறுப்பு இருக்கிறது' என்றார் தீட்சித் கோபமாக.

மறுநாள் காலையில் டெல்லியிலுள்ள தலைமையகத்தில் இருந்த ராணுவ ஆபரேஷன்களுக்கான இயக்குநர் ஜெனரல் லெப்.ஜெனரல் பி.சி. ஜோஷியைத் தொடர்பு கொண்டேன். அவர் என்னுடைய நிலைப்பாட்டுக்கே ஆதரவு தெரிவித்தார். ராணுவத் தளபதி சுந்தர்ஜியும் தீட்சித்மீது கோபத்தை வெளிப்படுத்தினார்.’’ &இவைதான் ஹர்கிரத் சிங் புத்தகத்தில் சர்ச் சைக்குரிய பகுதிகள்.

தற்போது சிங் டெல்லி கிரேட்டர் கைலாஷ் பகுதியில் வசிப்பதை அறிந்து, அவரிடம் இந்தப்புத்தகம் தொடர்பாக சில கேள்விகள் கேட்டோம். முதலில் தயங்கினாலும், பிறகு சரளமாகப் பேசத் தொடங்கினார்&

‘‘பிரபாகரனைக் கொலை செய்யும்படி ராஜீவ் காந்திதான் உத்தரவிட்டார் என்று ஜே.என்.தீட்சித் உங்களிடம் கூறியதற்கு என்ன ஆதாரம்? நீங்கள் குறிப் பிடும் அதிகாரிகளில் சிலர் மட்டுமே இப்போது உள்ளனர். ராஜீவோ, தீட்சித்தோ இல்லை..! அவர்கள் இருந்தபோது இப்படி எந்த தகவலும் எங்கும் வெளியாக வில்லையே..?"

‘‘இந்தப் புத்தகம் எனது இருபது வருட முயற்சியில் வெளியாகியுள்ளது. என் நினைவில் என் மனதில் உள்ளதை அப்படியே ரொம்பவும் விவரமாக எழுதியிருக்கிறேன். புத்தகத்தில் நான் குறிப்பிட்டதைப் போன்ற உத்தரவுகளை தீட்சித் எங்களுக்குப் பிறப்பித்தார் என்பது முற்றிலும் உண்மை. ராணுவம் அந்த உத்தரவுகளுக்கு அடிபணியாது என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்.

பிரபாகரனைச் சுடச் சொன்ன தீட்சித்திடம், ‘உங்களை என் வீட்டுக்கு வரவழைத்து நான் உங்களைத் துப்பாக்கியால் சுட்டால் எப்படியிருக்கும்?' என்றுகூட நான் திருப்பிக் கேட்டேன். அவர் அதிர்ச்சியில் உறைந்து போனார் என்பது எனக்கு நினைவிக்கிறது.

தீட்சித் அடிக்கடி, ‘நான் பிரதமருக்காகப் பேசுகிறேன். இதுவெல்லாம் பிரதமர் போட்ட உத்தரவு' என்பார். அவர் சொல்வதை எங்கள் பிரிகேடியர்கள், காமாண்டர்கள் டேப்பில் ரிக்கார்டு செய்துகொள்வார்கள். இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் சொல்ல ஆசைப்படுகிறேன். புலிகள் ஆயுதங்களை எங்களிடம் ஒப்படைக்க சம்மதம் தெரிவிக்கும் கடிதம் ஒன்றை பிரபாகரனிடமிருந்து நாங்கள் பெற்றோம். ‘1987-ம் ஆண்டு ஆகஸ்ட் 5&ம் தேதி, ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டுப் பொதுக்கூட்டத்திலும் பேசுவதாக' அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் பிரபாகரன். கடிதத்தைப் பார்த்த தீட்சித், அந்த சந்தர்ப்பத்தில்கூட, ‘நான் பிரதமர் சார்பாக இதைப் பாராட்டுகிறேன்' என்று கூறினார்."

‘‘பொறுப்போடு பணியாற்றிய உங்களைப் போன்ற வர்களை மாற்றம் செய்தார்கள் என்றும் புத்த-கத்தில் சொல்லியிருக்கிறீர்கள்... உங்கள் மாற்றத்துக்குக் காரணம், ‘பிரபாகரனை சுட்டுக்கொல்ல சம்மதிக்கவில்லை' என்பதுதானா? மாற்றம் வந்ததுமே நீங்கள் பிரதமர் கவனத்துக்கு ஏன் கொண்டு போக வில்லை?"

‘‘ராஜீவ் காந்தி ஓரிரு முறை பொதுக்கூட்டங்களில் என்னுடைய பெயரை குறிப்பிட்டுப் பேசியிருக் கிறார். ‘ஜெனரல் ஹர்கிரத் சிங் என்னிடமிருந்து உத்தரவுகளைப் பெற்றுத்தான் செயல்படுகிறார், யாருடைய கட்டளையின் பேரிலும் அவர் செயல்பட மாட்டார்' என்று சொல்லியிருக்கிறார். ஜெயவர்த்தனா ஒரு கூட்டத்தில், ‘நான்தான் இலங்கையின் சுப்ரீம் கமாண்டர். ஆனால், ஜெனரல் என்னுடைய உத்தரவுபடி நடந்துகொள்ள மறுக்கிறார்’ என்றார். இதற்கு பதில் சொல்வதற்காகத்தான் ராஜீவ் காந்தி அப்படிப் பேசினார். மற்றபடி, ராணுவத்தில் பிரதமரையெல்லாம் தலைமைத் தளபதிதான் சந்திக்கமுடியும்."


‘‘புலிகளுக்கு எதிரான ஆபரேஷனில் இந்திய அமைதிப்படை பெரும் சேதமும் தோல்வியும் சந்தித்தது என்ற கருத்து அழுத்தமாக இன்றும் நிலவுகிறதே..?"

‘‘போரிட்டால்தானே வெற்றி - தோல்வி என்ற பேச்சு வரும்? நாங்கள் அமைதியை நிலைநாட்டவே சென் றோம். இதற்காக பல்வேறு சமாதான முயற்சிகளை மேற்கொண்டோம். யாழ்ப்பாணத்தில் இருந்த இலங்கை ராணுவத்தினரை பத்திரமாகக் கொழும்புக்கு கொண்டு போனோம். யாழ்ப்பாணத்தில் மூடப்பட்டு இருந்த பெட்ரோல் பம்புகளை திறந்தோம். முடக்கி வைக்கப்பட்டிருந்த ரயில்களை ஓடச் செய்தோம்..."

"ராஜீவ் காந்தி படுகொலைச் சம்பவத்துக்கும் அமைதிப்படை இலங்கை சென்றதற்கும் தொடர்பு இருக்கிறதா, இல்லையா? குறிப்பாக நமது ராணுவத் தினர் மீது கற்பழிப்பு புகார்கள் வந்ததே..?"

‘‘ராஜீவ் கொலை சம்பவம் பற்றி நான் கருத்துச் சொல்ல முடியாது. இலங்கையில் நான் இருந்தபோது ஒரே ஒரு கற்பழிப்பு புகார் வந்தது. அந்த நபருக்கும் கடுமையான தண்டணையைக் கொடுத்து வெளியேற்றினோம். சென்னை ராணுவக் கோர்ட்டில் அவருக்கு தண்டனை கொடுக்கப்பட்டு, பணியிலிருந்தும் நீக்கப்பட்டார். நான் 1987-ம் வருடம் இலங்கை சென்றேன். 88-ம் வருடம் அங்கிருந்து இந்தியா திரும்பிவிட்டேன். ஆனால் இந்திய ராணுவம் 90&ம் வருடம்தான் திரும்பியது!"

0 Comments: