Monday, June 16, 2008

தென்பகுதியின் அச்சம் தணிய புலிகளிடம் மண்டியிட வேண்டிய நிலையில் உள்ள சிங்கள அரசு

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அண்மைக்காலமாக நடைபெற்று வரும் வெடிகுண்டுத் தாக்குதல்களை நிறுத்த முடியாமலும் அவற்றைத் தடுக்கும் வழிறைகள் தெரியாமலும் சிங்கள அரசு திண்டாடுகின்றது.

இதன் விளைவாக செய்வதறியாத அரசு அப்பாவித் தமிழ் மக்களைப் படுகொலை செய்து தனது கோபத்தைத் தணிக்க முயற்சிக்கிறது.

அதன் வெளிப்பாடாக வன்னிப் பெருநிலப்பரப்பெங்கும் கண்மூடித்தனமான விமானத் தாக்குதல்களை நடத்துவதுடன் ஆழ ஊடுருவும் அணியினரைப் பயன்படுத்தி கிளைமோர் தாக்குதல்களையும் நடத்தியும் வருகிறது.

தலைநகரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள தாக்குதல்கள் விடுதலைப் புலிகளாலேயே நடாத்தப்படுகின்றன என்ற அடிப்படையில் வைத்து நோக்கினால், வன்னிப்பகுதியில் நடைபெறும் தாக்குதல்களுக்கான பதிலடியாகவே அவை மேற்கொள்ளப்படுகின்றன எனக் கொள்ளலாம்.

விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் நடைபெறும் கிளைமோர்த் தாக்குதல்களுக்குத் தாம் காரணமல்ல என அரசு கூறிவரும் அதேவேளை தென்பகுதியில் நடைபெற்று வரும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களுக்கும் தமக்கும் சம்பந்தமில்லை என விடுதலைப் புலிகள் தெரிவிக்கின்றனர்.

வெள்ளவத்தையில் கடந்த மாதம் 31 ஆம் திகதி, இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டு, 18 பேர் காயமடைந்தனர்.

இம் மாதம் 3 ஆம் திகதி, முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்துடன் நால்வர் படுகாயமடைந்தனர்.

நான்காம் திகதி, தெஹிவளையில் ரயிலை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 18 பேர் காயமடைந்தனர்.

ஐந்தாம் திகதி, முல்லைத்தீவு மாந்தையில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் பொதுமக்கள் இருவர் உயிரிழந்தனர்.

ஆறாம் திகதி, மொறட்டுவவில் பயணிகள் பேருந்து மீது நடாத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 20 பொதுமக்கள் உயிரிழந்தனர். 80 பேர் காயமடைந்தனர். அன்று மாலை கண்டியில் பேருந்தினுள் குண்டொன்று வெடித்ததில் பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டு 20 பேர் காயமடைந்தனர்.

அந்த வகையில் கடந்த ஏழு நாட்களில் மட்டும் 38 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். 140 பேர் காயமடைந்துள்ளனர். இது தவிர கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் பலர் கடத்தப்பட்டும் உள்ளனர்.

போர்க் களங்களிற்கு வெளியே பொதுமக்கள் இலக்கு வைக்கப்படும் சம்பவங்கள் குறித்து பல்வேறு தரப்புகளும் சுட்டிக்காட்டிய போதும் அத்தகைய சம்பவங்கள் நின்றபாடில்லை. அத்தகைய சம்பவங்கள் சங்கிலித் தொடராக நீண்டு செல்கின்றன.

பொதுமக்களை இலக்கு வைத்து நடாத்தப்படும் தாக்குதல்களின் பின்னால் எத்தத் தரப்பு இருந்தாலும் அத்தகைய தாக்குதல்கள் கண்டிக்கப்பட வேண்டியவையே. ஆனால், தனக்கொரு பாதிப்பு வரும்போது அதனை எதிர்க்கும் உரிமை யாவருக்கும் பொதுவானது.

இந்நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிவநாதன் கிசோர், அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, 'வடக்கில் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படா விட்டால் விளைவுகள் பாரதூரானதாக இருக்கும்" என்ற வகையில் பேசியிருந்தார்.

ஒரு மாதத்துக்கும் மேலாக விவாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் விளங்கிய நாடாளுமன்றம் தமிழர்களை அடக்குவதற்கும் கொடுமைப்படுத்துவதற்கும் என்று ஏற்படுத்தப்பட்ட அவசரகால சட்டப் நீடிப்பிற்காக கடந்த 5 ஆம் திகதி மீண்டும் கூட்டப்பட்டது. இவ்விவாதத்தில் பேசுகையிலேயே சிவநாதன் கிசோர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், 'வடக்கில் இடம்பெறும் தாக்குதல்களின் மாற்றீடாகவே தென்பகுதியில் நடைபெறும் தாக்குதல்களைப் பார்க்க வேண்டியிருக்கிறது. அரசாங்கம் வன்னி மீது கடந்த இரண்டரை வருடங்களாக விமானத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. விமானத் தாக்குதல்கள் மூலம் புலிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டதாக இருந்தால் வன்னியிலுள்ள அனைத்து மக்களும் அவர்களுடன் சேர்ந்து, சிங்கள மக்களில் அரைவாசிப் பேரும் இதுவரை இறந்திருக்க வேண்டும். தெற்கில் நடைபெறும் தாக்குதல்களை நாம் கண்டிக்கிறோம். அதே போல் வன்னியி;ல் பொதுமக்கள் கொல்லப் படுவதையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

வன்னியைப் பொறுத்தவரை, நெடுங்கேணி பகுதியே ஆழ ஊடுருவும் படையினருக்கு இலகுவான தாக்குதல் பிரதேசமாக இருக்கிறது. அங்கேயே அநேகமான தாக்குதல்களை அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

ஆனால், தென்பகுதித் தாக்குதல்கள் யாருமே எதிர்பார்க்க முடியாத, முழுக்க முழுக்க சிங்கள மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் நடாத்தப் படுகின்றன. அவற்றின் முக்கியத்துவம் என்னவெனில் பாதிக்கப்படுபவர்கள் அனைவரும் சிங்களவர்களாக இருப்பதே.

கடந்த வெள்ளிக்கிழமை காலையில் மொறட்டுவை கட்டுபெத்தவில் நடைபெற்ற பயணிகள் பஸ் மீதான தாக்குதலைத் தொடர்ந்து சிங்கள் மக்கள் பெரும் பீதியடைந்தனர்.

இந்தப் பீதியும் அதனால் உருவான பதற்றமும் மீண்டும் ஒரு 83 யூலையைக் கொண்டு வந்து விடுமோ என்ற பயத்தைப் பலரிடையே ஏற்படுத்தியது.

இதனை யாராவது மறுக்க முனைந்தால் அதற்கான பதில் சனிக்கிழமை பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள தேசிய படை வீரர்களின் நினைவுத் தூபிக்கு அருகில் இடம்பெற்ற தேசிய படை வீரர்கள் தின நிகழ்வில் பேசிய சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் 'மீண்டும் ஒரு யூலைக் கலவரம் ஏற்பட நாம் இடமளிக்கப் போவதில்லை" என்ற உரையில் கிடைத்தது.

தென்பகுதியின் கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களில் நடைபெற்று வரும் தாக்குதல்களை இராணுவ இலக்கு, அரசியல் இலக்கு, பொருளாதார இலக்கு மற்றும் பதிலடி இலக்கு என நான்கு வகையான தாக்குதல் திட்டங்களுடன் செயற்படுத்தும் புலிகள், தென்பகுதியில் நினைத்த நேரத்தில் தாக்குதல்களை நடத்தக்கூடிய பலத்துடன் இருக்கிறார்கள் என்பதை நிரூபித்து வருகின்றார்கள்.

இப்போதைய நிலையில் வன்னிப் பகுதியில் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டு மறுநாளோ அல்லது அதற்கு மறுநாளோ தாக்குதல் ஒன்று கொழும்பில் நடைபெறும் என்ற அச்சமும் எதிர்பார்ப்பும் தோன்றிவிட்டது. தாக்குதல்களில் எதிர்பார்ப்பை வைத்துக் கொண்டே தாக்குதல் மேற்கொள்வது புலிகளைப் பொறுத்தவரை மிகவும் பிடித்தமானது.

சிறிலங்காவின் படைத்துறையினருக்கு இராணுவ, அரசியல், பொருளாதார இலக்குகளைப் பாதுகாப்பது அவ்வளவு கடினமானதல்ல. ஆனால், இப்போது நடைபெற்றுவரும் பதிலடித் தாக்குதல்களில் பொதுமக்கள் மீதான பாதிப்புக்களைத் தடுப்பதே முக்கியமான பிரச்சினையாக உள்ளது.

கிழக்குத் தேர்தல் முடிவடைந்து பிள்ளையான் முதலமைச்சாராகப் பதியேற்கவிருந்த தினத்தில் ஜனாதிபதிச் செயலகம் அருகே பொலிஸ் வாகனம் மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல், முகமாலை மோதலில் பெருந்தொகையான படையினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நடந்த பிலியந்தல பஸ் குண்டு வெடிப்பு, தெஹிவளை தொடருந்து நிலையக் குண்டு வெடிப்பு, தெகிவளைக்கும் வெள்ளவத்தைக்கும் இடையில் தொடருந்துப் பாதையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு, மொறட்டுவ கிளைமோர் தாக்குதல், வெள்ளவத்தை கைக்குண்டுத் தாக்குதல் என கடந்த சில வாரங்களுக்குள் கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

இது தவிர, தேடுதல்கள் மற்றும் சோதனைகள் மூலம் வீடுகள், காட்டுப் பகுதிகள், குடியிருப்புகள், வாகனங்கள் என்பவற்றிருந்து மீட்கப்பட்டு வரும் குண்டுகளின் தொகைகளும் அதிகம் என்றே சொல்ல வேண்டும்.

கிழக்கை மீட்டு அதனைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருப்பதாகவும் வன்னியில் பெரும் வெற்றிகள் தமது படைகளுக்குக் கிடைத்து வருவதாகவும் பிரச்சாரம் செய்வதன் ஊடக சிங்கள மக்களைப் போருக்கு ஆதரவாக வைத்துக் கொள்ள நினைக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு தென்பகுதியின் தற்போதைய நிலை உவப்பானதாக இல்லை.

கொழும்பு நகரைப் பாதுகாக்கவென பொலிஸாருடன் இராணுவம், கடற்படை, விமானப்படை என்பவற்றுடன் பொதுமக்கள் பிரதிநிதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட சிவில் பாதுகாப்பு படையினரும் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன��
�். அதைவிட பொலிஸ் புலனாய்வுப் பிரிவு, இராணுவப் புலனாய்வுப் பிரிவு, கடற்படை மற்றும் விமானப்படையின் புலனாய்வுப் பிரிவுகள் என்பனவும் நடவடிக்கைளல் ஈடுபட்டிருக்கின்றன.

எனினும், இவற்றை எல்லாம் மேவியதாக கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.

வலுவான புலனாய்வுப் பிரிவினரைக் கொண்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் தாக்குதல் திட்டங்கள் நன்கு திட்டமிடப் பட்டதாகவும், நோக்கத்திலிருந்து விலகாதாகவும் அமைந்திருக்கும் நிலையில் சிறிலங்கா அரசின் கூலிப்படைகளால் என்ன செய்து விட முடியும் என்பதற்கு தென்பகுதித் தாக்குதல்களே உதாரணங்களாகும்.

இவ் வருடம் ஜனவரி மாதத்தில் மன்னார் பள்ளமடு பிரதேசத்தில் ஆழ ஊடுருவும் அணியினரின் தாக்குதலுக்கு இலக்காகி வீரச்சாவடைந்த விடுதலைப் புலிகளின் இராணுவப் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரான - தென்பகுதி நடவடிக்கைகளை கையாண்டு வந்த - கேணல் சாள்ஸின் மரணத்துடன் தெற்கில் புலிகளின் நடவடிக்கைகள் கணிசமாகக் குறைந்து விடும் என்ற சிறிலங்கா படைத்துறையின் எதிர்பார்ப்பு அண்மையத் தாக்குதல்களால் தவிடு பொடியாகி இருக்கிறது.

குறிப்பிட்ட இலக்குகளை வேவு பார்த்து தகவல்களை ஒருங்கிணைத்தல், வெடிமருந்து மற்றும் விநியோகங்களைச் செய்தல், தாக்குதலை நடத்துதல் என்ற மூன்று கட்டங்களைக் கொண்ட புலிகளின் தாக்குதல் திட்டத்தில் ஒரு சிலரை அழித்து விடுவதன் மூலம் எதனையும் அடைந்து விட முடியாது என்பதற்கு கேணல் சாள்ஸின் மறைவின் பின்பும் தாக்குதல்கள் தொடர்வது ஒரு சிறந்த உதாரணமாகும்.

கடந்த பெப்ரவரிக்குப் பின்னர் தென்பகுதியில் தொடருந்துகளை இலக்கு வைத்து மூன்று குண்டுத் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. அதைவிட பஸ்களிலும் பேருந்து தரிப்பு நிலையங்களிலும் பல குண்டு வெடிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. மிக அதிகமான அழிவை ஏற்படுத்திய பேருந்து மீதான தாக்குதலாக பிலியந்தல தாக்குதலைக் குறிப்பிடலாம். அதே போன்றதொரு தாக்குதலே கடந்த வாரத்தில் இடம்பெற்ற மொறட்டுவ தாக்குதலாகும்.

கொழும்பில் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களைக் கட்டப்படுத்த உள்ளே வரும் மற்றும் வெளிச்செல்லும் வாகனங்களையும் தொடருந்துகளையும் சோதனைக்கு உட்படுத்தினால் போதும் என படைத்தரப்பு நினைக்கிறது. ஆனால் அதற்கான போதுமான ஆளணி அவர்களிடம் இல்லை.

அண்மைய கணக்கெடுப்புக்களின் படி கொழும்பு நகருக்குள் நாளொன்றுக்கு வந்து செல்லும் மக்களின் தொகை சுமார் 9 லட்சம் ஆகும். வீதிகளில் பயணிக்கும் வாகனங்கள் 4 லட்சத்துக்கும் அதிகம்.

சாதாரணமாக, வீதி விபத்துக்களைத் தடுப்பதற்குத் தேவையான ஆளணி வளத்தைக் கூட கொண்டிருக்காத நிலையில், வெளி இடங்களில் இருந்து உள்ளே வரும் வாகனங்களை, மக்களைச் சோதனையிடுவதற்கே முடியாத நிலை இருக்கையில் கொழும்பிலும் அதன் சுற்றுப் புறத்திலும் சேவையில் ஈடுபட்டிருக்கின்ற பேருந்துகள் மற்றும் தொடருந்துகளுக்குப் பாதுகாப்பு வழங்குவது எவ்வாறு எனத் தெரியாமல் சிறிலங்கா அரசு விழிபிதுங்கி நிற்கிறது.

தரைப்படை, விமானப்படை, கடற்படை, பொலிஸ் படை என அனைத்துத் தரப்பினரையும் கொண்டு கொழும்பை மாத்திரம் பாதுகாத்துக் கொள்வதானால் மேலதிக படைகளை அழைத்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இது முடியாத காரியம்.

இதற்காகச் சிவில் பாதுகாப்புப் படை என்ற பெயரில் புதுப் படை ஒன்றை அண்மையில் ஓய்வு பெற்றுச் செல்லவுள்ள பொலிஸ் மா அதிபர் விக்ரர் பெரேரா உருவாக்கி இருக்கின்றார். அதனை விடவும் மக்கள் பிரதி நிதிகளைக் கொண்ட ஒரு அணியும் உருவாக்கப் பட்டிருக்கிறது.

நான்கு இலட்சம் வாகனங்களை தினமும் முழுமையாகச் சோதனையிடுவதோ அனைத்து மார்க்கங்களிலும் பயணிக்கின்ற 9 லட்சம் பேரையும் பரிசோதிப்பதோ சாத்தியமற்ற விடயம்.

எனவேதான் முதலில் கொழும்பின் அனைத்துப் பகுதிகளிலும் தங்கியுள்ள தமிழ் மக்களை அச்ச நிலைக்குள் தள்ளிவிட படைத்தரப்பு முனைகிறது. இதன் மூலம் கணிசமானோரைத் தமது சொந்த இடங்களுக்குத் திருப்பி அனுப்பி வைக்கலாம் அல்லது ஆகக் குறைந்தது விடுதலைப் புலிகளுக்கு அவர்கள் வழங்கும் ஆதரவைத் தடுத்து விடலாம் எனப் படைத்தரப்பு மனப்பால் குடிக்கின்றது. இதன் மூலம் புலிகளின் தாக்குதல்களைக் குறைத்து விடலாம் என்பது ஒரு பக்க நோக்கமாக இருந்தாலும் முக்கியமாக விடுதலைப் புலிகளின் இருப்பை குலைத்து விடுவதே குறிக்கோளாகும்.

வன்னியில் இடம்பெறும் வான் தாக்குதலின் போதும், கிளைமோர் தாக்குதல்களின் போதும் பொதுமக்கள் குறி வைக்கப்படுவதால்தான் தலைநகர் கொழும்பில் மக்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகி உள்ளதாக பலரும் விசனம் தெரிவிக்கும் நிலை உருவாகியுள்ளது.

தமிழர் தாயகப் பகுதியான வடக்கு - கிழக்கில் நடைபெற்று வரும் தாக்குதல்கள் தற்போது நாட்டின் முழுப் பகுதிக்கும் யுத்தத்தைக் கொண்டு வந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பத் தொடங்கி விட்டன.

இதேவேளை, கொழும்பில் இடம்பெற்று வரும் குண்டு வெடிப்புக்கள் காரணமாக பரவி வரும் வதந்திகளும் சிங்கள மக்கள் மத்தியில் பாரிய குழப்பத்தையும் அச்சத்தையும் தோற்றுவித்துள்ளன.

சிங்களப் பகுதிகளிலே இயல்பு வாழ்க்கை முற்றாகச் சீர்குலைந்து உள்ளதோடு தென்னிலங்கை மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேற அஞ்சும் நிலையும் உருவாகி இருக்கிறது.

'தென்னிலங்கையில் அதிலும் குறிப்பாக கொழும்பு நகரையும் அதனைச் சூழவுள்ள பகுதிகளையும் முழுமையான பாதுகாப்பு நடைமுறை ஒழுங்கிற்குள் கொண்டுவந்து விட்டதாகவும் இனிமேல் கொழும்பிலே குண்டுகள் எதுவும் வெடிக்க மாட்டாது" என்றும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச வெறும் அறிக்கைகளை மாத்திரம் விட்டுக் கொள்கிறார். தனக்கு இலக்கு வைக்கப்பட்ட குண்டிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பியிருந்த அவரின் கூற்றைத் தற்போது தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் தாக்குதல்கள் பொய்யாக்கியுள்ளன.

படையினரின் தொகை அதிகரிக்கப்பட்டு இராணுவ முகாம் போன்று இப்போதே காட்சியளிக்கும் கொழும்பு மற்றும் தென்பகுதி நகரங்கள் பாதுகாப்பற்றதாக இருக்கின்றன என்று வைத்துக் கொண்டால் படைத்தரப்பு இப்பகுதிகளின் பாதுகாப்பில் மேலும் கவனம் செலுத்த வேண்டியது கட்டாயமாகின்றது. அவ்வாறு இல்லை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டே உள்ளது என்று வைத்துக் கொண்டால் புலிகளின் பலம் தென்பகுதித் தாக்குதல்களால் வெளிப்படுகிறது என்று ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.

தற்போது சிங்களப் படைகளும் மகிந்த அரசும் சகல பக்கங்களிலும் இழுபடும் நிலைக்கு வந்துவிட்டன. வடக்கில் புலிகள் நடத்திவரும் தாக்குதல்கள், தென்னிலங்கையிலே நடத்தும் தாக்குதல்கள் அனைத்தையும் மறைத்து, சாதாரண இராணுவ நடவடிக்கைகளைப் போரின் வெற்றிகளாக வைத்துச் சூதாட்டம் ஆடும் மகிந்த, அரசினை பாரிய இக்கட்டுக்குள்ளும் நெருக்கடிக்குள்ளும் தள்ளிவிட்டுள்ளார்.

இவ்வாறான இக்கட்டான நிலைமையில் சிறிலங்கா இருப்பது தமிழர்களுக்கு பயன்படக் கூடியதொரு விடயமே. இராணுவ, அரசியல், பொருளாதார இலக்குகளை மாத்திரம் இலக்கு வைத்து இதுவரை தாக்குதல்களில் ஈடுபட்டு வந்த விடுதலைப் புலிகளுக்கு பொதுமக்கள் இலக்குகள் மீது தாக்குதல் நடத்த வேண்டிய தேவையை ஏற்படுத்திய சிங்கள தேசம், தான் ஆரம்பித்து வைத்த ஆட்டத்தைத் தானேயே முடித்து வைக்க வேண்டிய பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளது. 'வினை விதைத்தவர் வினை அறுப்பார்" என்பது எத்துணை தூரம் உண்மை.

நன்றி: நிலவரம் (13.06.08)

1 Comment:

Anonymous said...

confirming piece ganesh nook managed advise mike medicinesdr wests shobhit janak
lolikneri havaqatsu