Sunday, June 1, 2008

குழம்பிப் போயுள்ள மட்டக்களப்பில் கேள்விக்குறியாகியுள்ள அமைதி

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியின் மத்திய பகுதியில் வைத்து கடந்த 22 ஆம் திகதி பிள்ளையான் குழுவின் ஆரையம்பதி பிரதேசப் பொறுப்பாளர் சாந்தன் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து உருவான சூழல் காத்தான்குடியைச் சேர்ந்த மூவர் கொல்லப்படுவதற்கும் மேலும் 6 பேர் படுகாயம் அடைவதற்கும் 4 பேர் கடத்தப்படுவதற்கும் காரணமாக அமைந்துள்ளது.

மட்டக்களப்பு - கல்லடியில் வைத்துப் பிள்ளையான் குழுவால் கடத்தப்பட்ட ஏறாவூரைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம்களையும் விடுவிக்கக்கோரி ஏறாவூரில் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம் பெண்மணி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 24 முஸ்லிம் இளைஞர்கள் கைதாகித் தடுத்தும் வைக்கப்பட்டுள்ளனர். இது ஓயாத பிரச்சினையாக மட்டக்களப்பின் முஸ்லிம் பிரதேசங்களில் தொடர்ந்தும் எரிந்து வருகிறது.

கொல்லப்பட்ட சாந்தன் அம்பாறை சவளக்கடையைப் பிறப்பிடமாகக் கொண்டவர் ராசிக் குழுவின் முக்கிய உறுப்பினராக இருந்து விடுதலைப் புலகளுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த இவர், கருணா விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் அவருடன் இணைந்து கொண்டார்.

கருணாவி;ற்கும் பிள்ளையானுக்கும் இடையில் ஏற்பட்ட பிளவின் போது பிள்ளையானை ஆதரித்த இவர், தமிழ் - முஸ்லிம் எல்லைக் கிராமமான ஆரையம்பதி பிரதேசப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

முஸ்லிம்களுக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள இவர் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அதனைப் பயன்படுத்தி முஸ்லிம்களைக் கொடுமைப்படுத்துவதில் முன் நின்றார். இவரது செயற்பாடுகள் தமிழ் - முஸ்லிம் நல்லுறவில் பாரிய விரிசலுக்கு வித்திட்டதுடன் இப்பிரதேசத்தில் தொடர்ச்சியான பதட்ட நிலைக்கும் காரணமானது.

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்திலே தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் இணைந்து செயற்பட்ட இரு இனங்களான தமிழ், முஸ்லிம் மக்கள் சிங்களப் பேரினவாதத்தின் பிரித்தாழும் சூழ்ச்சிக்குப் பலியாகியதில் சகோதர இனங்கள் இரண்டுமே ஒன்றையொன்று பரஸ்பரம் சந்தேகப்பட வேண்டிய சூழல் தோற்;றுவிக்கப்பட்டு விட்டது. இரண்டு தரப்பிலும் உள்ள கடும் போக்காளர்கள் இந்த இரு இனங்களுக்கும் இடையே உருவாகக்கூடிய நல்லுறவைச் சிதைத்து விடத் தொடர்ந்து முயற்சி செய்து வரும் நிலையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவு பெற்ற ஆயுதக்குழுவான ஜிகாத் தனியாகவும், ஊர்காவல் படை என்ற போர்வையில் இராணுவத்துடன் இணைந்து கூட்டாகவும் தமிழ் மக்களைக் கொலை செய்தும் துன்புறுத்தியும் வருகின்றது. இக்குழுவினருக்கு சிறிலங்கா அரசு மட்டுமன்றி பாகிஸ்தான் உள்ளிட்டு இஸ்லாமிய நாடுகள் ஆயுத பொருளாதார உதவிகளையும் வழங்கி வருகின்றன.

தமிழ்த் தரப்பைப் பொறுத்த வரை இராணுவத்துடன் ஒட்டி உறவாடும் ஒட்டுக்குழு உறுப்பினர்கள் கூட தமிழ் மக்கள் மத்தியில் தமது செல்வாக்கை உயர்த்திக் கொள்ளவும், தமது பழைய பகைமைகளைத் தீர்த்துக்கொள்ளவும் அப்பாவி முஸ்லிம்களைப் பழிவாங்கி வருகின்றனர்.

இதேவேளை, முஸ்லிம் மக்களிடையே தமது செல்வாக்கை உயர்த்திக்கொள்ளவும், தமது எஜமானர்களின் நிகழ்ச்சித் திட்டத்தை நிறைவேற்றவும் அப்பாவித் தமிழ் மக்களையும், வாய்ப்புக் கிடைக்கும் போது போராளிகளையும், ஒருசில வேளைகளில் தமக்கு இடைஞ்சலாக உள்ள ஒட்டுக்குழு உறுப்பினர்களையும் ஜிகாத் குழுவினர் கொலை செய்து வருகின்றனர்.

இவர்களைத் தவிர, கருணா 2004 ஏப்ரலில் அடைக்கலம் தேடிக் கொழும்புக்குச் சென்ற போது அவரது சகாக்களால் ஐநூறு, ஆயிரம் ரூபாய்க்கென விற்கப்பட்ட ஆயுதங்களும் கூட முஸ்லிம்களிடம நிறையவே உள்ளன.

இந்நிலையில், சாந்தனை விடுதலைப் புலிகளே சுட்டுக்கொண்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள விரும்பாத பிள்ளையான் குழு, பழியை முஸ்லிம்கள் மீது போட்டுவிட்டு துப்பாக்கிப் பிரயோகம், கடத்தல் என வீர விளையாட்டுக்களில் ஈடுபட்டுள்ளது. தனது பேச்சாளராக முஸ்லிம் ஒருவரைக் கொண்டுள்ள பிள்ளையான் குழுவால் முஸ்லிம்களுக்கு எதிராக எவ்வாறு செயற்பட முடியும்? தனது அமைச்சரவையில் முஸ்லிம் அமைச்சரை வைத்துக்கொண்டு தமிழர்களை முஸ்லிம்களிடம் இருந்து அவரால் எவ்வாறு காப்பாற்ற முடியும்?

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்த வரை முஸ்லிம்களின் முதன்மைப் பிரதேசமாக காத்தான்குடியே விளங்கி வருகின்றது. முஸ்லிம்களின் கருத்துருவாக்கம் இங்கிருந்து வருவதை விரும்பாத ஏறாவூர், ஓட்டமாவடி ஆகியவை எப்போதுமே காத்தான்குடியின் தலைமைத்துவத்தை நிராகரிப்பவர்களாக இருந்து வருகின்றன. இந்த முரண்பாடு தேர்தல் சமயங்களின் போது துலாம்பரமாக வெளிப்படுபதைக் காணலாம்.

சனத்தொகை நிறைந்த பிரதேசமான காத்தான்குடி தனது இரு மருங்கிலுமுள்ள தமிழ்ப் பிரதேசங்களில் ஆக்கிரமிப்புச் செய்வதும், இதனால் தமிழ் மக்களோடு அடிக்கடி உரசல்கள் ஏற்படுவதும் வழக்கமானது. சனத்தொகைப் பெருக்கத்திற்கேற்ப இடவசதி மற்றும் ஏனைய வசதிகள் இல்லை என்பதனால் ஆரையம்பதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளைக் கையகப்படுத்துவதில் 1978 ஆம் ஆண்டு முதல் முஸ்லிம் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

வரையறுக்கப்பட்ட ஆரையம்பதி எல்லைக்குள் காத்தான்குடி நகர சபை மூக்கை நுழைப்பது முக்கிய பிரச்சினையாக உள்ளது. இதனால் ஆரையம்பதியினுடைய பல நிலப்பரப்புக்கள் பறிபோய் விட்டன. இப்போது ஆரையம்பதி மக்கள் சுற்றியுள்ள 46 இந்துக்கோயில் திருவிழாக்களுக்காக தீர்த்தமாடுவதற்காகக் கூட கடற்கரைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. (இதே போன்ற நிலை காத்தான்குடியின் வடக்கு எல்லையான கல்லடி - மஞ்சந்தொடுவாய் பகுதியிலும் உள்ளது.)

1978 ஆம் ஆண்டில் ஆரையம்பதி கிழக்குப் பகுதியில் உள்ள தரிசு நிலங்களில் அரசும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் இணைந்து செயற்படுத்திய திட்டத்தினால் கர்பலா என்ற கிராமம் உருவாக்கப்பட்டது.

தற்போதைய நிலையில் ஆரையம்பதியைச் சுற்றி காங்கேயனோடை, ஒல்லிக்குளம், கிச்சான் பள்ளம், சிகரம், பாலமுனை எனப் பல முஸ்லிம் கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இத்தகைய செயற்பாடுகளால், தமிழ் - முஸ்லிம் உறவு என்பது எப்போதும் வெடிக்கக்கூடிய ஒரு கொதி நிலையிலேயே இருந்து வருகின்றது.

சாதாரண முஸ்லிம் மக்களைப் பொறுத்த வரை அவர்கள் தமிழ் மக்களுடன் இணைந்து வாழ விரும்பினாலும், பல்வேறு காரணங்களால் முஸ்லிம் மக்கள் என்ற வட்டத்துக்குள் நின்றே செயற்படுகிறார்கள். இது அரசியல்வாதிகள் அவர்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகின்றது.

1990 இல் இடம்பெற்ற காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை வருடா வருடம் பாரிய நினைவு கூரலாக அனுட்டிக்கப்பட்டு வருவதன் ஊடாக பழைய விடயங்கள் மக்கள் மனதில் இருந்து மறக்கப்பட்டு விடாமல் பார்த்துக்கொள்ளப்படுகின்றத��
�.

இதேவேளை, காத்தான்குடியில் கொல்லப்படும் தமிழர்கள் யாவரும் முஸ்லிம்களால் கொல்லப்பட்டிருப்பார்களோ என்ற சந்தேகம் எழுப்பப்படுவது வழமையாகி விட்டது. இந்தப் பின்னணியிலேயே சாந்தனின் கொலையும் ஜிகாத்தினால் செய்யப்பட்டது என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

இதற்கு முன்னர் விடுதலைப் புலிகளின் வரதன் மற்றும் ரெலோ அமைப்பின் அன்வர் ஆகியோரை சாந்தன் சுட்டுக்கொல்லப்பட்ட அதே இடத்திலேயே சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் முஸ்லிம் தீவரவாதத்துக்கு எதிரான கடும் நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவர்களாகக் கருதப்படுகின்றனர். அதனால் இவர்கள் முஸ்லிம்களாலேயே சுட்டுக்கொல்லப்பட்டிருக்கல��
�ம் என்ற பேச்சுக்கள் அடிபட்டன.

இவை தவிர, ஆரையம்பதி எல்லை விவகாரத்தில்; தமிழர்களுக்குச் சார்பாக இருந்த விடுதலைப் புலிகளின் லக்ஸ்மன் என்றழைக்கப்பட்ட வரதன், ஆனைக்குட்டி, நீலன் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் ரெலோவின் மத்திய குழு உறுப்பினராகவும் ஆரையம்பதி பிரதேச சபைத் தவிசாளராக இருந்தவருமான க.நவரத்தினராசா (ரொபர்ட்) அவர்களும் சுட்டுக்கொல்லபட்டார். இவர்களின் கொலைகளிலும் முஸ்லிம்களே சம்பந்தப்பட்டடிருந்ததாக அப்போது கதைகள் அடிபட்டன.

சாந்தன் முஸ்லிம் ஆயுதக்குழுவான ஜிகாத்தால் சுட்டுக்கொல்ப்பட்டிருக்கலா��
�் என்று கூறுவதற்கு வேறொரு காரணமும் முன்வைக்கப்படுகின்றது. கிழக்கு மாகாண சபைத் தேர்தல் சமயத்தில் கிழப்பி விடப்பட்ட இனவாதம், தேர்தல் முடிவடைந்த பின்னர் முதலமைச்சர் நியமனத்தில் காத்தன்குடியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவிற்கும் பிள்ளையானுக்கும் ஏற்பட்ட இழுபறி, இதனையொட்டி காத்தான்குடியில் நடாத்தப்பட்ட கதவடைப்பு என்பவை இக்கொலைக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.

காரணம் எதுவானாலும், மட்டக்களப்பைப் பொறுத்த வரை தமிழ்-முஸ்லிம் உறவு என்பது மிக மோசமான கட்டத்திலேயே இருப்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் இனவாதத்தைக் கிளப்பி விட்டவர் யாராக இருந்தாலும் முஸ்லிம்களின் செயற்பாடுகள் கட்டுப்படுத்த முடியாத நிலையை எட்டியுள்ளதை அண்மைய நாட்களில் உணர்ந்திருப்பர்.

கடத்தப்பட்ட ஏறாவூரைச் சேர்ந்த முஸ்லிம்கள் இருவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அமைதியான முறையில் ஏறாவூரில் நடைபெற்ற ஹர்த்தால், ஏறாவூரின் எல்லைக் கிராமமான ஐயங்கேணியில் வைத்து மிராகேணியைச் சேர்ந்த இரு முஸ்லிம் வர்த்தகர்கள் பிள்ளையான் தரப்பினரால் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து வன்முறை நிறைந்ததாக மாறியது. அதனால், வீதியில் திரண்ட முஸ்லிம் இளைஞர்கள் வாகனங்களுக்கு கல் எறிந்து வன்முறையில் ஈடுபட்டனர்.

இதன்போது, விசேட அதிரடிப்படையினரும் பொலிசாரும் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒரு வயோதிப் பெண் கொல்லப்பட்டதுடன் முஸ்லிம் இளைஞர்கள் இருவர் காயமடைந்து வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த வன்முறையினை அடக்க படையினர் மேற்கொண்ட கடுமையான நடவடிக்கையில் 1,500-க்கும் அதிகமான ஈருருளிகளும் பத்திற்கும் மேற்பட்ட உந்துருளிகளும்; காவல்துறையினரால் சேதப்படுத்தப்பட்டதுடன் கைப்பற்றவும்பட்டன. 24 இளைஞர்கள் கைதாகித் தடுத்து வைக்கப்பட்டும் உள்ளனர்.

ஏறாவூரில் அமுலுக்குக்குக் கொண்டு வரப்பட்ட ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் மாறி மாறி அமுல்படுத்தப்படுவதாகவே இருக்கிறது. மட்டக்களப்பில் அமைதி நிலவுவதாகவும் வழமை நிலை தோன்றியுள்ளதாகவும் அரச தரப்பினர் வெளிப்படுத்த நினைத்தாலும் அது சாத்தியமற்றதாகவே இருக்கிறது.

கடும் போக்காளர்களான சிங்களப் பேரினவாதிகள் தமது செயற்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்தியதாக இதுவரைக்கும் எந்தவிதமான வரலாறுகளும் இல்லை. 40.1 வீதமான முஸ்லிம்களும் 39.9 வீதமான தமிழர்களும் சுமார் 20 வீதமான சிங்களவர்களும் வாழும் பிரதேசமாக கிழக்கு மாகாணம் உள்ளது. ஆரம்ப கால சிங்களக் குடியேற்றங்களுக்கு முன்னர் இருந்த தமிழர்களது தொகை மிகவும் குறைவடைந்துள்ளது. இது கிழக்குத் தேர்தலின் முடிவிலிருந்தும் புலப்படுவதாக இருந்தது.

வடக்கு - கிழக்கில் சிறுபான்மையாக இருந்த முஸ்லிம் சமூகம் மேலும் சிறுமைப்படுத்தப்பட்டதையடுத��
�து காலம் சென்ற முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் கட்சியைத் தோற்றுவித்து இணைந்த வடக்கு - கிழக்கு மாகாணத்தில் சம அந்தஸ்தினை கோரியிருந்தார்.

கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் தன்மானத்தோடும் சுய பாதுகாப்போடும் கிழக்கு மகாணத்தில் வாழவேண்டும் என்பதற்காகவே அவர் இணைந்த வடக்கு - கிழக்கில் முஸ்லிம்களுக்கென்று சம அந்தஸ்தினைக் கோரியிருந்தார். இந்த அடிப்படையில் செயற்படும் முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பில் நடந்து கொண்டிருக்கும் கலவரங்களுக்குக் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் இப்போது தோன்றியிருக்கின்றது.

எது எவ்வாறானாலும் கிழக்கில் அதுவும் மட்டக்களப்பில் ஏற்பட்டிருக்கின்ற தமிழ் முஸ்லிம் முறுகலானது சாதாரணமான மக்களிடையே ஏற்பட்டதல்ல. கிழக்கில் பலத்துடன் செயற்பட்டு வரும் பிள்ளையான் தரப்பினருடன் ஏற்பட்டிருக்கிறது. இப்பொழுது ஏற்பட்டுள்ள பிரச்சினை இன்னும் சில தினங்களில் முடிவுக்குக் கொண்டு வரப்படுவதாக அமைந்தாலும் நீண்ட காலத்தில் முஸ்லிம் ஆயுதக்குழுவிற்கு பெரும் கெடுபிடியை ஏற்படுத்தும் என்பதில் இரண்டுபட்ட கருத்துக்கு இடமில்லை. ஏனெனில், இன்றைய காலகட்டத்தில் சிங்கள ஆட்சியாளர்களுக்கு மிகத் தேவைப்படுபவர்களாக இருப்பது பிள்ளையான் குழுவே.

இதேவேளை, நடைபெற்று வரும் சம்பவங்கள் ~கிழக்கில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டது. அங்கு ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டு விட்டது| எனப் பறைசாற்றிக் கொண்டிருந்த அரசுக்கு தலையிடிக்கு மேல் தலையிடியைத் தந்த வண்ணம் இருக்கிறது.

தமிழர்களுக்கு தீர்வொன்றை முன்வைத்து விட்டதாக உலகிற்குக் காட்டுவதற்கும், கிழக்கை முழுமையான சிங்கள மயமாக்குவதற்குமே கிழக்குத் தேர்தல் நடத்தப்பட்டது. அத்துடன் தமிழ் - முஸ்லிம் உறவினுள் விரிசலை உருவாக்கி இலாபமடைய பேரினவாதம் திட்டமிட்டிருக்கிறது. இத்திட்டம் பலித்து வருவதாக அவதானிக்க முடிகிறது.

'தனது மேலாதிக்கப்போக்கை மேலும் பலமுடையதாக வைத்திருக்க வேண்டிய தேவையை உணர்ந்திருக்கும் அரசு ஆயுத பலத்துடனுள்ள பிள்ளையானை முதலமைச்சாராக்க ஹிஸ்புல்லாவுக்கு கைவிரிக்கும் நிலை ஏற்பட்டால் கிழக்கில் தமது ஆயுதப் பலத்தை முஸ்லிம் தரப்பு பயன்படுத்த முனையலாம் என்ற அச்சம் இப்போது தோன்றியிருக்கிறது. தம்மிடமுள்ள ஆயுதங்களை குழப்பங்களை ஏற்படுத்துவதற்காக மட்டும் பயன்படுத்தி வரும் ஒருதரப்பு தமது பலத்தைக் காட்டுவதற்காக பயன்படுத்த முனைந்தால் அதன் விளைவு பெரும் சிக்கலை தமிழர் தரப்புக்குத் தரலாம்" என சென்ற இதழில் குறிப்பிட்டிருந்தேன்.

ஹிஸ்புல்லா தனது பிரதேசமான காத்தான்குடியில் வன்முறைகள் இடம்பெறுவதைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறார். அரசின் கீழ் அமைச்சராக இருக்கும் அமீர் அலி தனது பிரதேசமான ஓட்டமாவடியையும் வன்முறைகள் இன்றி வைத்திருக்கிறார். ஆனால், ஏறாவூர் பிரதேசம் இவை இரண்டிற்கும் இடையில் உள்ள பிரதேசமாகும். ஏறாவூர் பிரதேசத்தில் இன்றுள்ள தலைவராகக் கருதப்படும் பசீர் சேகுதாவூத் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான அணியைச் சேர்ந்தவர் என்பதால் வன்முறைகளின் பின்னணியில் அவர் இருக்கக்கூடும் என்ற சந்தேகமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடியில் தொடங்கி ஏறாவூரில் மையம் கொண்டிருக்கும் இப்போதைய வன்முறைக்கு விரைந்த தீர்வு எட்டப்படாவிட்டால் முஸ்லிம் சமூகம் நீண்டகால நோக்கில் அவர்களுடைய வியாபாரம் சம்பந்தப்பட்ட இழப்பினைப் பெருமளவில் சந்திக்க வேண்டி ஏற்படலாம்.

தற்போதைய நிலையில் தமிழர்களை மாத்திரம் கடத்தி வரும் பிள்ளையான் குழு முஸ்லிம்களையும் மையப்படுத்தி இனச் சுத்திகரிப்பில் ஈடுபட முனைந்தால் கிழக்கில் முஸ்லிம்களுடைய இருப்பு நிச்சயமாக சஞ்சலத்துக்குள் தள்ளப்படும்.

'கிழக்கு மாகாணம் முஸ்லிம்களது தாயகம் வடக்கு மாகாணமே தமிழர்களது தாயகம். எனவே கிழக்கு மாகாணத்தின் அரசு முஸ்லிம் சமூகத்தினால் நிர்வகிக்கப்பட வேண்டும்" என்ற சிந்தைனையுடன் செயற்படும் முஸ்லிம் தலைமைகள் சில கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சாராக நியமிக்கப்படாதமைக்கான எதிர்ப்பை இன்னமும் காட்டிய வண்ணமேயே இருக்கின்றனர்.

தமிழர் தாயகத்தைத் துண்டாடுதல், சர்வதேசத்திடமிருந்தான நிதியுதவிகளைப் பெற்றுக் கொள்ளுதல், சிங்கள மக்களை திருப்திப்படுத்துதல் போன்ற நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக நடத்தப்பட்ட கிழக்கு தேர்தல் இப்போது தமிழ் பேசும் இனங்களுக்;கு இடையே முறுகலுக்கு வழிவகுத்து நிற்பது அரசுக்குப் பெரும் தர்மசங்கடத்தைத் தோற்றுவித்துள்ளது.

நீண்ட இன மோதலை ஏற்படுத்துவது அரசின் நோக்கமாக இருந்தால் பிள்ளையான் குழுவினரைப் பயன்படுத்தி அரசு முஸ்லிம் ஆயுதக்குழுக்களை அழிக்க முனையலாம்;.

அத்தகைய நோக்கம் இல்லாவிட்டால், குழம்பிப் போயுள்ள மட்டக்களப்பில் கேள்வியாகியுள்ள அமைதி நிலையைக்கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அரசு முஸ்லிம் தலைமைகளுடன் கடுமையாக உழைக்க வேண்டும்.

நன்றி: நிலவரம் (30.05.08)

0 Comments: