Friday, June 6, 2008

தற்காப்பு போர்- வலிந்த போர்- தீர்க்ககரமான வெற்றி

-எரிமலை-


விளக்கில் ஊற்றப்பட்டுள்ள மண்ணெய்யின் அளவு குறைவடையும்போது மெதுமெதுவாக மங்கிக்கொண்டு செல்லும் சுவாலையானது இறுதியில் எவ்வாறு முற்றாக அணைந்து விடுகின்றதோ அதேபோன்றே, போதியளவு பலமோ வல்லமையையோ இல்லாத நிலையில் படைகளை பாரியளவிற்கு நீட்டி அகட்டியிருக்கும் ஆக்கிரமிப்புப் படைகளும் பாரிய தோல்வியினை இறுதியில் சந்திப்பார்கள் - போரியல் மேதை கால் வொன் குளோஸ்விச்

அண்மைக்காலங்களாக விடுதலைப் புலிகள் புதிய தாக்குதல் தந்திரோபாயங்களை பயன்படுத்தி எதிரியைத் திகைக்க வைக்கும் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு எதிரிகளுக்கு பாரிய இழப்புக்களை ஏற்படுத்தி வருகின்றார்கள்.

அத்துடன் இவ்வாறான வெற்றிகரமான தாக்குதல் நடவடிக்கைகளில் படையினரின் ஆயுதத் தளபாடங்களையும் ஏனைய நவீன போரியல் உபகரணங்களையும் கைப்பற்றியும் வருகின்றார்கள்.

இதற்கு சிறந்த உதாரணமாக கடந்த வாரம் யாழ். நகருக்கு அண்மையில் உள்ள சிறுத்தீவில் கடற்புலிகளின் சிறப்பு அணியினர் நடத்திய தாக்குதலைக் குறிப்பிடலாம்.

இத்தாக்குதலானது உண்மையிலேயே சிறிலங்கா படைத்தரப்பினரையும் மகிந்த அரசாங்கத்தினையும் திகைப்பிலும் வியப்பிலும் ஆழ்த்தியுள்ளதுடன் எதிர்காலத்தில் விடுதலைப் புலிகளின்; தந்திரோபாய தாக்குதல் நடவடிக்கைகள் எந்த வடிவத்திலே வரப்போகின்றதோ என்ற பயப்பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில், விடுதலைப் புலிகள் வன்னிப் போரங்கில் யாழ். குடாநாடு, மன்னார் மற்றும் மணலாறு ஆகிய பிரதேசங்களிலே சிறிலங்கா படையினரின் முன்னேற்ற முயற்சிகளை வெற்றிகரமாக முறியடித்து, படையினருக்கு பாரிய இழப்புக்களை ஏற்படுத்துகின்ற வகையில் தற்காப்புத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்ற அதேவேளையில் இவ்வாறான சிறப்பு நடவடிக்கைகளையும் வலிந்த தாக்குதல்களையும் மேற்கொண்டு வருகின்றார்கள் என்பதுதான்.

அதாவது, சிறிலங்கா இராணுவத்தினரிடம் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் தற்பாதுகாப்பு நடவடிக்கைக்கான 61 ஆவது படைப்பிரிவுடன் சேர்த்து, தற்போது மொத்தமாக 13 டிவிசன் படைகள் இருக்கின்றன.

அதாவது 11, 21, 22, 23, 51, 52, 56, 61 ஆகிய படைப்பிரிவுகள் முழுமையாக தற்காப்பு நடவடிக்கை படைப்பிரிவுகளாக அல்லது அரை தாக்குதல் படைப்பிரிவுகளாக காணப்படுகின்றன.

அதேசமயம் 53, 55, 57, 58, 59 ஆகிய படைப்பிரிவுகள் தாக்குதல் நடவடிக்கைகளுக்கான படைப்பிரிவுகளாக சிறிலங்காப் படையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் 51, 52, 53, 55 ஆகிய டிவிசன்கள் யாழ். குடாநாட்டில் முன்னரங்கப் பகுதிகளிலும் ஏனைய பகுதிகளிலும் நிலைகொண்டுள்ளன.

அதேபோன்று மன்னாரில் 57, 58 மற்றும் தற்போது உருவாக்கப்பட்டுள்ள 61 ஆகிய டிவிசன்கள் சிறிலங்காப் படையினரின் முன்னேற்ற முயற்சி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

வவுனியா ஓமந்தைப் பகுதியில் 56 ஆவது டிவிசன் படையணி நிலைப்படுத்தப்பட்டுள்ளது.

மணலாறு பகுதியில் 22 ஆவது டிவிசன் படையணி தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இவற்றினைத் தவிர சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் ஏனைய சிறப்பு படையணிகளையும் படையினருக்கு பாரிய இழப்புக்கள் ஏற்படும்போதும், பரந்த பிரதேசங்களை பாதுகாத்துக்கொண்டு படை நகர்வுகளை மேற்கொள்ளும் போதும், சிறிலங்கா இராணுவம் பயன்படுத்துவது வழக்கமாகும்.

சிறிலங்கா படைப்பிரிவுகளில் பெரும்பாலானவற்றினை களமுனைகளில் இறக்கி பல்வேறு முனைகளில் தாக்குதல்களை நடத்தியபோதிலும் குறிப்பிடக்கூடிய வெற்றிகளையோ பெறுபேறுகளையோ அடைய முடியவில்லை என்பது தொடர்பாக இப்போது சிறிலங்காப் படைத்தரப்பு உயர்மட்டத்திலும் சிறிலங்கா அரச அதிகார மையத்திலும்; கடுமையான அதிருப்தியும் விசனமும் நிலவி வருகின்றது.

அத்துடன் விடுதலைப் புலிகளோ அண்மைக்காலங்களாக சிறிலங்காப் படையினரின் முன்னேற்ற முயற்சிகள் அனைத்தையும் வெற்றிகரமாக முறியடித்து அவர்களுக்குப் பாரிய இழப்புக்களை ஏற்படுத்தி வருகின்ற அதேவேளை சமர்களங்களில் படையினரின் உடலங்களைக் கைப்பற்றி அதனை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக தென்னிலங்கைக்கு அனுப்பி வருவதும் சிறிலங்காப் படையினரின் போரிடும் உளவுரணில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் தென்னிலங்கைக்கும் மற்றும் உலகத்திற்கும், விடுதலைப் புலிகளைப் பெரும் எண்ணிக்கையில் கொன்றொழித்து சமர்க்களங்களில் பெரும் வெற்றிகளைப் பெற்று வருவதாக செய்கின்ற சிறிலங்கா அரசாங்கத்தின் பொய்ப்பரப்புரைகளையும் முறியடித்து, களமுனைகளில் எவ்வாறு சிறிலங்காப் படையினர் பாரிய நெருக்கடிகளையும் பின்னடைவுகளையும் எதிர்கொள்கின்றார்கள் என்பதனை அனைத்துலகத்திற்கு விடுதலைப் புலிகள் தமது படைத்துறை செயற்பாடுகள் மூலம் தெரியப்படுத்தி வருகின்றார்கள்.

வெற்றிக்கான உச்சநிலைப் புள்ளி (வுhந ஊரடஅiயெவiபெ Pழiவெ ழக ஏiஉவழசல)

ஒரு போரில் எதிரிகளை முற்றுமுழுதாக அழித்த பின்னரே போரிடும் தரப்பானது வெற்றியைப் பெறமுடியும் என்று கருதுவது தவறானது.

ஒரு தரப்பு போரில் வெல்வதற்கு உரிய ~வெற்றிக்கான உச்சப்புள்ளியினை| அடையும்போதுதான் அத்தரப்பு வெற்றிபெறுவதற்கான உகந்த சூழ்நிலைகள் உருவாகியுள்ளதாகக் கருதப்படும்.

போரியலில் இதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தே வலிந்த மற்றும் தற்காப்பு தந்திரோபாய நடவடிக்கைகளும் மற்றும் மூலோபாயங்களும் வகுக்கப்படுகின்றன.

போரில் வெற்றி பெறுவது தொடர்பாக பிரெஸ்ய (ஜேர்மானிய) போரியல் மேதையான கால் வொன் குளோஸ்விச் பின்வருமாறு கூறுகின்றார். போர் நடவடிக்கைகளில் ஒரு தரப்பு எதிர்த்தரப்பினை விட தனது வல்லமையும் ஆற்றலையும் கூடியளவு வெளிப்படுத்தி உயர்நிலையினை அடையும்போதே அதனால் வெற்றியினைப் பெறக்கூடியதாக இருக்கும்.

அதாவது, அதியுயர் பௌதீக மற்றும் உளவுரணை அடையும் தரப்பே வெற்றியினை எதிரிக்கு எதிராக அறுவடை செய்யும்.

போரானது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போது, எப்போதும் போரிடும் தரப்பினர் பல்வேறு காரணிகளின் செல்வாக்கிற்கும் ஆதிக்கத்திற்கும் உட்படுவார்கள். இதில் ஆக்கிரமிப்பில் ஈடுபடும் தரப்பினர் கீழே குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களினால் தமது பலத்தினை இழப்பார்கள் என்று குளோஸ்விச் தெரிவிக்கின்றார்.

- ஆக்கிரமிப்பில் ஈடுபடும் தரப்பினர் தற்காப்பில் ஈடுபடும் தரப்பினரின் நன்கு பாதுகாக்கப்பட்ட வலுவான நிலைகளையும் தளங்களையும் முற்றுகையிடவோ தாக்கியழிக்கவோ வேண்டியிருக்கும்.

- ஆக்கிரமிப்பாளர் தற்பாதுகாப்பாளரின் பிரதேசத்திற்குள் நுழைந்தவுடனேயே போரரங்கின் தன்மையே மாறிவிடும். அதாவது எதிரியின் பிரதேசமானது எப்போதும் பகைமை நிறைந்ததாகவே இருக்கும். இதனைப் பாதுகாப்பதற்கு பாரியளவு படைத்துறை இயந்திரத்தினை ஆக்கிரமிப்பாளர்கள் பயன்படுத்த வேண்டியிருக்கும். விளைவு ஆக்கிரமிப்பாளரின் தாக்குதல் வல்லமையில் பலவீனம் ஏற்படும்.

- ஆக்கிரமிப்பாளர் எப்போதும் தனது ஆளணி மற்றும் விநியோகத்தளங்களில் இருந்து தூரச் செல்கின்ற அதேவேளை தற்காப்பாளர் தனது ஆளணி மற்றும் விநியோக நிலையங்களுக்கு அருகில் இருப்பார்.

- தற்காப்பாளர் தனது பிரதேசத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக உணருவாரானால் தனது அனைத்து வல்லமையையும் வழங்கல்களையும் பாரியளவில் போர் நடவடிக்கைக்காக திருப்புவார். இதன் மூலம் எதிரிக்கு வெற்றியினைக் கிடைக்க விடாது தடுத்து விடுவார்.

இவற்றினை இன்னமும் சற்று விரிவாகப் பார்ப்பதானால், ஆக்கிரமிப்பாளர்கள் தமது முன்னேற்ற நடவடிக்கைகளை எதிரிகளின் பிரதேசங்களினுள் மேற்கொள்ளும்போது பல்வேறு முற்றுகைத் தாக்குதல்கள், பதுங்கித்தாக்குதல்கள் மற்றும் முன்னேற்றத்திற்கு எதிரான முறியடிப்புத் தாக்குதல்கள் என்பனவற்றினை எதிர்கொள்வதற்காக அதிகளவு படையினரை ஆக்கிரமிப்பாளர்கள் பயன்படுத்த வேண்டியிருக்கும்.

ஆக்கிரமிப்பாளர்களுக்கு போதியளவு தாக்குதல் படைகளோ அல்லது ஒதுக்குப் படைகளோ இல்லாது விடின் முன்னேற்ற நடவடிக்கைகளின் போது பெறப்பட்ட அனைத்து அனுகூலங்களையும் ஆக்கிரமிப்பாளர்கள் இழக்க வேண்டியிருக்கும்.

இதேசமயம், முன்னேறும் படையினர் எதிர்கொள்ளும் இழப்புக்கள் அதிகமாக காணப்பட்டால் இதனை சமாளிப்பதற்கு மேலதிக படையினரை ஆக்கிரமிப்பாளர்கள் அனுப்ப வேண்டியிருக்கும்.

அத்துடன் எப்போதும் ஆக்கிரமிப்பில் ஈடுபடும் படையினர் தமது வழங்கல் மற்றும் ஆளணி நிலையங்களில் இருந்து வெகுதூரத்தில் இருப்பதும் உடனடியாகவே இழப்புக்களை ஈடுசெய்வதும் கடினமாக இருக்கும்.

அதாவது, தனது தகுதிக்கு மிஞ்சி பாரியளவு பிரதேசங்களை கைப்பற்றி நிலைகொண்டுள்ளதன் காரணமாக, பெருமளவு ஆளணி மற்றும் ஆயுதத்தளபாட இழப்புக்களைச் சந்தித்து பலவீனமடைந்து காணப்படுகின்ற ஆக்கிரமிப்புப் படையினை குளோஸ்விச் மண்ணெய் விளக்கிற்கு ஒப்பிடுகின்றார்.

அதாவது, விளக்கில் ஊற்றப்பட்டுள்ள மண்ணெய்யின் அளவு குறைவடையும் போது மெதுமெதுவாக மங்கிக்கொண்டு செல்லும் சுவாலையானது இறுதியில் முற்றாக அணைந்து விடுவது போன்றே, போதியளவு பலமோ வல்லமையையோ இல்லாத நிலையில் படைகளை பாரியளவிற்கு நீட்டி அகட்டியிருக்கும் ஆக்கிரமிப்புப் படைகளும் பாரிய தோல்வியினை இறுதியில் சந்திப்பார்கள் என்று குளோஸ்விச் தெரிவிக்கின்றார்.

அதாவது, போரரங்கு இடம்பெறும் பிரதேசத்தின் பூகோள சாதக பாதகங்களை நன்கு பயன்படுத்தி, மக்கள் படைக்கட்டுமானங்களின் ஆதரவுடன் தற்காப்புப் போரில் ஈடுபடும் தரப்பானது, எதிரியின் போரிடும் முன்னணி படையணிகளை அழித்து அவனது போரிடும் ஆற்றலை இல்லாமல் செய்வதன் மூலமும் உளவியல் போரில் எதிரியினை வெல்வதன் மூலமும் தீர்க்ககரமான வெற்றி பெறுவதற்கான சாதகங்களை உருவாக்க முடியும்.

இறுதியில் எதிரிக்கு எதிரான பாரிய நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட வலிந்த தாக்குதலினை செய்வதன் மூலம் ஒட்டுமொத்தமான போரில் இலகுவாக வெல்லமுடியும் என்பதே போரியல் மேதை குளோஸ்விச்சின் கருத்தாகும்.

நன்றி: வெள்ளிநாதம் (06.06.08)

0 Comments: