Tuesday, February 5, 2008

தெற்கின் முடிவு வெட்டவெளிச்சம்

பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தின் காலனித்துவ ஆட்சியிலி ருந்து விடுபட்டு அறுபதாவது ஆண்டு நிறைவை அனுஷ் டிக்கும் இலங்கைத் தீவு இந்தக் காலகட்டத்துக்குள் புரை யோடிப் புண்ணாகிப் போயிருக்கும் தேசிய இனப்பிரச் சினைக்கு இன்னும் தீர்வு ஒன்றைக் காணவேயில்லை. கடந்த மூன்று தசாப்த காலமாகக் கொடூரப் போராக வெடித் திருக்கும் இந்தப் பிணக்கை, அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுத் தலைவர்கள் குரங்கின் கைப்புண்ணாக்கி மேலும் மேலும் அதனைப் புரையோட வைத்ததைத் தவிர வேறு எதனையும் செய்யவில்லை.
அதற்குத் தாமும் விதிவிலக்கல்லர் என்பதைத் தற் போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் நிரூபித்து வருகின்றார். அவரது நேற்றைய சுதந்திர தின உரை அதையே உறுதிப்படுத்தி நிற்கின்றது.

புலிகளைப் "பயங்கரவாதிகள்', "கொடூரவாதிகள்' என்று சித்திரித்து அவர்களை வென்றுவிட்டோம் என்று மார்தட்டு வதும் அவர்களைக் கூண்டோடு அழிக்கப்போகின்றோம் என்று சூளுரைப்பதும் இதற்கு முன்னரும் இதே பதவியில் அமர்ந்திருந்து, இதேபோன்று சுதந்திரதின உரையை நாட்டு மக்களுக்கு ஆற்றியபோது முன்பிருந்த அரசியல் தலைவர்கள் கூறியவைதாம். தமிழ்ப் பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வந்துவிட்டது என்று கூறி, அதற்குக் காலக்கெடு விதிப்பதும் புதிய விடயமல்ல. ஜனாதிபதியைச் சூழ நின்று போர் முழக்கம் செய்யும் அதிகார வர்க்கம் திரும்பத் திரும்ப கூறிவருவது அதைத்தான். அதன் சாத்தியப் பாடுகள் முடிவுகள் எப்படி அமையும் என்பதைப் பொறுத் திருந்து பார்ப்போம். காலம் பதில் கூறட்டும்.
ஆனால் அதைவிட முக்கியமான விடயம் ஒன்று ஜனா திபதியின் நேற்றைய உரையின் ஊடாக வெளிப்பட்டிருக்கின்றது. இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சியில் சராசரி சிங் களத் தலைமையின் குத்துக்கரணப் போக்கை அப்படியே அச்சொட்டாகத் தாமும் நிரூபிக்கின்றார் என்பதை இந்த உரை ஊடாக அவர் காட்ட முயன்றிருக்கின்றார்.
தாம் ஆட்சிக்கு வந்தால் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்துத் தென்னிலங்கையில் ஓர் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவார் என்றும்
இந்த இணக்கப்பாடு குறித்துத் தமிழர் தரப்புடன் பேசித் தீர்வுத்திட்டம் ஒன்றை உருவாக்குவார் என்றும்
தமது "மஹிந்த சிந்தனை' மூலம் வாக்குறுதி அளித்தே ஆட்சி அதிகாரத்துக்கு வந்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

ஆட்சிக்கு வந்து நீண்ட காலத்துக்குப் பின்னர் இதுபற்றி ஆராய அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு ஒன்றை நியமித் தார். இனப்பிரச்சினைத் தீர்வுக்கான தென்னிலங்கையின் நிலைப்பாட்டை அறிவதற்கான அமைப்பு இது என்பதால் இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைக்கவில்லை என்றார். இந்த அமைப்பின் யோசனைத்திட்டம் வெளிவந் ததும் அதனடிப்படையில் தமிழர் தரப்புடன் பேசலாம் என்றார்.

அந்த சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவும் சுமார் ஒன்றரை வருடங்கள் 62 அமர்வுகளை பல நூறு மணித்தியாலங்கள் நடத்தி சற்று முன்நகர்ந்தபோது ஜனாதிபதி அதற்கு முட் டுக்கட்டை போட்டார். இடைக்கால ஏற்பாடாக, அரசமைப் பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துங்கள் என்ற யோசனையை உங்கள் திட்டமாக எனக்குச் சமர்ப் பியுங்கள் என அதற்கு அழுத்தம் போட்டார் அவர். அப் படியே நடந்தது அந்தக் குழு.
"இறுதித் தீர்வு யோசனை பிறகு வரும். இப்போது இடைக்கால ஏற்பாடாக 13 ஆவது திருத்தத்தை, மாகாணசபைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள்' என்று ஜனாதிபதி காட்டிய ஆலோசனையையே, பெருமாள் மாடுபோல தலையாட்டி அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவும் தனது யோசனையாகச் சமர்ப்பித்தது.
இந்த நிலையில்தான், அந்த இடைக்காலத் திட்டமே, இனப்பிரச்சினைக்கான நிரந்தரத்தீர்வு என்று ஒரேயடியாகத் தமது நேற்றைய பேச்சில் அதிரடி அறிவிப்புக் கொடுத் திருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

""நாம் வழங்குகின்ற தீர்வு இந்த நாட்டிலே செயற் படுத்தக் கூடியதொரு தீர்வாக இருக்க வேண்டும். பரீட்சார்த் தமாகத் தீர்வுகளை நாம் வழங்க முடியாது. இரத்தம் சிந்தி, ஆயிரக்கணக்கானோரை இழந்திருக்கும்போது தீர்வுகளைப் பரீட்சார்த்தமாகப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அதனால் தான் இந்த நாட்டில் செயற்படுத்தக்கூடிய எமக்கு அனுபவங்க ளைத் தந்த தீர்வொன்றை நாம் தெரிவுசெய்தோம். எமது அரசமைப் புக்கு ஊடாக மாகாண நிர்வாகத்தை மக்களிடம் நெருங்க வைப்பதே அந்த நடைமுறைச் சாத்திய மான தீர்வாகும்.'' என்று நேற்று நாட்டு மக்களுக்கு தாம் ஆற்றிய சுதந்திர தினச் செய்தியில் பிரகடனப்படுத்தியிருக்கிறார் ஜனாதிபதி.
இதுவே தீர்வுக்கான தமது முடிவு என்ற அவரின் இந்த அறிவிப்பின்படி
அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை மாகாணசபை அதிகாரப் பகிர்வை இடைக்கால நடவடிக்கையாக நடை முறைப்படுத்தும்படி கோரி சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு முன்வைத்த திட்டமே

* இனப்பிரச்சினைத் தீர்வுக்கான ஜனாதிபதியின் இறு தித் தீர்வாகும்.
* இறுதித் தீர்வுத் திட்டம் குறித்து இனித் தமிழர் தரப் புடன் பேசி முடிவெடுக்க அவருக்கு எதுவுமில்லை.
* சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு இனியும் கூடி, இறுதித் தீர்வு ஒன்று குறித்துப் பேசுவதில் அர்த்தமில்லை.
* அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தக் கோரும் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் யோசனை "முதல் காலடி' என்று வர்ணித்த இந்தியாவுக்கு "அவ்வளவு தான். இதற்கு அப்பால் எந்தக் காலடியும் இல்லை' என்பது உணர்த்தப்பட்டுள்ளது.
* "நம்பகத்தன்மையான அதிகாரப் பரவலாக்கல் திட்டம் ஒன்றை சமர்ப்பியுங்கள்' என்று கோரும் சர்வதேச சமூகத் துக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிரும் அரச மைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்து வதே அந்த அதிகாரப்பகிர்வு என்பது தெளிவாகக் காட்டப்பட்டிருக்கின்றது.
* தற்போதைய அரசமைப்புக்கு வெளியே வரத் தாம் தயார் இல்லை என்பதையும், அரசமைப்பின் 13 ஆவது திருத் தத்தில் கூறப்பட்டவற்றையும் நீர்த்துப்போக வைத்து, நலிந்த ஓர் அதிகாரப் பகிர்வையே தாம் வழங்கத் தயார் என்பதை யும் தெளிவு படுத்திவிட்டார் அரசுத் தலைவர்.

தமிழர் தரப்பின் கருத்தை உள்வாங்காமலேயே இனப்பிரச் சினைத் தீர்வுக்கான தமது இறுதி முடிவைத் தெளிவுபடுத்திவிட்டார் இலங்கை அரசுத் தலைவர். இனி சர்வதேச சமூகம் என்ன செய்யப்போகிறது? அதன் பிரதிபலிப்பைப் பார்த்திருப்போம்!


thanks - Uthyan.com

0 Comments: