Wednesday, November 21, 2007

முறையிட இடமில்லை.

20.11.2007


.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு - குறிப்பாக மட்டு - அம்பாறை மாவட்ட உறுப்பினர்களுக்கு மகிந்த ராஜபக்சவின் வரவு - செலவுத்திட்டத்திற்கு ஆதரவு அளிக்கவேண்டும் அன்றேல் நீங்கள் அல்லது உங்கள் உறவினர்கள் படுகொலை செய்யப்படுவீர்கள் என ஒட்டுக்குழுவினரால் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கிழக்கில் வழங்கப்பட்டிருந்த காவல்துறைப் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டமையும் அவர்களுக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தலும் அதற்கான காரணம் வரவு - செலவுத் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கவேண்டும் என்று வலியுறுத்தலும் இதன் பின்னணியில் மகிந்த ராஜபக்சதரப்பு இருப்பதை உறுதிசெய்யப்போதுமானதாகும்.

உறுதிசெய்யப்போதுமானதாகும்.

ஏனெனில் ஒட்டுக்குழுவினருக்கு வரவு - செலவுத் திட்டத்தில் அக்கறை செலுத்துவதற்கு என எதுவும் இல்லை. மகிந்த அரசைக் காப்பாற்றினால்தான் தமது இருப்பு நிலைக்கும் என அவர்கள் கருதி இவ்வாறு நடந்து கொள்வதற்காக சிலர் விளக்கம் அளிக்க முற்பட்டால் அது சிறுபிள்ளைத்தனமானதாகவே இருக்கும்.

ஏனெனில் சிறிலங்காவில் யார் ஆட்சிக்கு வரினும் ஒட்டுக்குழுக்களின் இருப்பு தொடரவே செய்யும்.
ஆகையினால் இவ் அச்சுறுத்தல்கள் காரணமாக தமழ்த்தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எங்கு பாதுகாப்புத் தேடுவதென்பதே இன்றுள்ள கேள்வி ஆகும். ஏனெனில் ஒட்டுக்குழுக்கள் என்பவை சிறிலங்கா அரசால் வழிநடத்தப்படுபவை. இதனால் சிறிலங்கா அரசின் கட்டுப்பாட்டிலுள்ள எப்பகுதியிலும் இவர்கள் பாதுகாப்புத் தேடிக்கொள்வவதுகடினமே. ஏனெனில் இது கொலைகாரன் வீட்டில் ஒழிவதற்கு இடம்தேடுவதற்கு ஒப்பானதாகும்.

இதேவேளை இக்கொலை அச்சுறுத்தலானது சனநாயகத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல், மனிதஉரிமைகளை மீறும் செயல் எனக்கூச்சல் போடுவதினாலோ அன்றி முறையிடுவதினாலோ பயன் ஏதும் கிட்டப்போவதில்லை.

மனித உரிமை அமைப்புக்களும் சரி ஐ.நா போன்ற சர்வதேச அமைப்புக்களும் சரி பெரும்பாலும் வல்லாதிக்க சக்தியின் செல்வாக்கிற்குட்பட்டே செயற்படுகின்றன. அன்றி வல்லாதிக்க சக்திகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் அற்றவையாக அவை உள்ளன. ஆகையினால் அவற்றிடம் இக்கொலை அச்சுறுத்தல்கள் சனநாயகத்திற்கான அச்சுறுத்தல் என்றோ, மனித உரிமைகளுக்கு விடுக்கப்பட்ட சவால் என்றோ கூறுவதினால் பயன்எதுவும் ஏற்பட்டு விடப்போவதில்லை. உயர்ந்த பட்சமாக அவ்வமைப்புக்களினால் ஒரு கண்டன அறிக்கை மட்டுமே வெளியிட முடியும்.

அடுத்ததாக உலகை வழிநடாத்த முனையும் வல்லாதிக்கச் சக்திகளிடம் இது குறித்து முறையிடுவதினாலும் பயன் எதுவும் கிட்டிவிடப்போவதில்லை. ஏனெனில் இவ்வல்லாதிக்க சக்திகள் இது குறித்துக் கவனத்திற் கொள்ளும் என எதிர்பார்ப்பதற்கில்லை. ஏனெனில் வல்லாதிக்க சக்திகளின் அனுசரணையே இத்தகைய நிலைக்குக் காரணம் என்றும் கூறலாம்.

சிறிலங்கா அரசின் சனநாயக விரோதப்போக்கு, மனிதஉரிமை மீறல்கள் என்பன இன்று இரகசியமான விடயமோ அன்றி உலகம் அறியப்படாத விடயமோ அல்ல. இன்று சிறிலங்கா அரசின் இனவிரோத நடவடிக்கையும் உலகால் அறியப்பட்டதொன்றே, இதனை மறுப்பவர்கள், ஏற்றுக்கொள்ளாதவர்கள். சிறிலங்கா ஆட்சியாளர்களை விட மோசமானவர்களாகவே இருக்கமுடியும்.

ஆனால் இவையாவும் அறியப்பட்ட நிலையிலேயே அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் சிறிலங்கா அரசிற்குப் போதிய இராணுவ உதவிகளையும், பாகிஸ்தான் போன்ற நாடுகளும் ஆயுதஉதவிகளை வழங்குகின்றன என்பது உண்மைதான். ஆனால் அவை சனநாயகம் பற்றியோ, மனிதஉரிமைகள் பற்றியோ அன்றி இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு பற்றியோ பேசுவதில்லை. ஆகையினால் அரசுகளிடம் சனநாயகம் பற்றியோ மனிதஉரிமகள் குறித்துப் பேச எவரும் முற்படுவதில்லை.

இந்நிலையில், தம்மை சனநாயக அரசுகள் என்றும் மனிதஉரிமைகளின் காவலர்கள் எனவும் கூறிக்கொள்ளும் அரசுகளே சனநாயக விரோத அரசிற்கு உதவியும் பாதுகாப்பும் அளிக்க முற்படுகையில் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாவோர் உலகில் முறையீடுசெய்வதற்கு ஓரிடமும் இல்லை என்பதே நிதர்சனமாகும். ஆகையினால் ஒடுக்கப்படுவோரின் பாதுகாப்பு என்பது அவர்கள் போரிடும் வரையில் மட்டுமே சாத்தியப்பாடானதாக இருக்கமுடியும்.

சங்கதி : நிருபர் எல்லாளன்

0 Comments: