Sunday, November 25, 2007

பாரதம் கவனிக்க வேண்டிய பாக். இலங்கை உறவுநிலை

Posted on : 2007-11-25


"இனம் இனத்தைச் சேரும்' என்பார்கள்.
பொது நல நாடுகள் அமைப்பு, பாகிஸ்தானை இடைநிறுத்தி எடுத்த முடிவு தொடர்பில் இலங்கை நடந்து கொண்ட விதம் இனம் இனத்தைச் சேரும் என்பதை உறுதிப்படுத்துவதாக அமைந்தது.

பாகிஸ்தானை இடைநிறுத்தும் முடிவு முதலில் பொதுநல நாடுகள் அமைப்பின் வெளிவிவகார அமைச்சர்கள் மட்ட செயற்குழுக் கூட்டத்தில் ஏகமனதாக எடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மலேசியா, இலங்கை, பிரிட்டன், நியூகினி, லெஸோதோ, கனடா, தன்ஸானியா ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச் சர்கள் பங்குபற்றினர். அங்கு பாகிஸ்தான் அரசின் போக்குக்கு எதிரான கருத்து நிலைப்பாடு சூடாக நிலவியது. அதனால் சர்வதேச சமூகத்தின் கருத்தியல் நிலைப்பாட்டுக்கு ஒத்துப் போக வேண்டிய கட்டாயத்தின் அடிப்படையில், அந்தக் கூட்டத்தின் தீர்மானத்துக்கு இசைவு தெரிவிக்க வேண்டியவரானார் இலங்கை வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம. அது மட்டுமல்ல அத்தகைய ஒரு முடிவுக்கு அவர் இணங்கிய பின்னர் இலங்கை அரசுத் தலைமையின் சீற்றத்துக்கும் கடுப்புக்கும் கூட அவர் ஆளானார். அந்தப் பின்ன ணியில் கொழும்பு அரசின் அரசியல் நிர்வாக முறைமை பற்றிய ஆழமான ஓர் உண்மை புதைந்து கிடப் பதும் வெளிவெளியாகியிருக்கின்றது.

பாகிஸ்தான் விடயத்தில் இலங்கை அரசுத் தலைமையின் உள்ளக்கிடக்கையை கருத்து நிலைப்பாட்டை உண்மை யிலேயே புரியாத நபராகவே இலங்கை வெளிவிவகார அமைச்சர் விளங்கினாரா என்ற கேள்வி இவ்விடயத்தின் நிகழ்வுப் போக்கை ஊன்றிக் கவனிப்பவர்களின் மனதில் எழுவது தவிர்க்க முடியாததே.

சார்க் பிரதேச நாடு ஒன்று தொடர்பாக அரசுத் தலைமையின் கருத்தைப் புரிந்து கொள்ள இயலாத முடியாத ஒருவரைத்தான் இலங்கை அரசு தனது வெளிவிவகார அமைச்சராக வைத் திருக்கின்றதா?

இந்தக் கேள்விக்கு விடையைத் தேடுவதற்கு முதலில் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான தற்போதைய நட்புறவு இறுக்கத்தின் பின்னணியையும் கொழும்பு அரசுக் கட்டமைப்பின் செயற்பாட்டுப் போக்கையும் நாம் அவதானிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
கொழும்பு அரசு 109 அமைச்சர்களுடன் பெரும் ஆரவாரப் பரிவாரங்களோடு ஆட்சியைத் தொடர்ந்தாலும், அதிகார மையம் ஏதோ ஒரு குறுகிய வட்டத்துக்குள் தான் புதைந்து கிடக்கின்றது என்பதையும், வெறும் கொடி, குடை, ஆலவட்டத்துடன் "பந்தா' பண்ணுவதோடு அமைச்சர்களின் அதிகாரம் அடங்கி விட்டது என்பதையும் இப்பந்தியில் ஏற்கனவே தெளிவாக எடுத்து விளக்கியிருக்கின்றோம்.

இன்னும் குறிப்பாகச் சொல்வதானால் இலங்கை அரச அதிகாரத்தின் நாணயக் கயிறு, "ராஜபக்ஷ சகோதரர்கள் அண்ட் கம் பனி' யின் கையிலேயே முற்றாக வீழ்ந்து விட்டது என்பதும் தெளிவு.
இதே சமயம், பாகிஸ்தானுடனான தற்போதைய நல்லுறவு இலங்கை இன யுத்தத்துடன் சம்பந்தப்பட்டே தற்போது இறுக்கமடைந்திருக்கின்றது. புலிகளுக்கு எதிரான இலங்கைப் படைகளின் யுத்தத்தில் இலங்கைத் தரப்புக்கு உதவும் பெரும் பின்னணிச் சக்தியாக பாகிஸ்தான் விளங்குகின்றது எனப் பொதுவாகக் கருதப்பட்டாலும் அது பற்றிய விடயங்கள் எல்லாம் பெரும் மூடு மந்திரமாகவே பேணப்படுகின்றன. "ராஜபக்ஷ சகோதரர் அண்ட் கம்பனி'யால் நேரடியாகக் கையாளப்படும் இந்த இரகசிய செயற்பாடுகள் அனைத்தும் அரசும் கட்டமைப்பின் ஏனைய அங்கங்களுக்குத் தெரியாமல் அந்தரங்கமாகவே முன்னெடுக்கப்படுபவை.
பாகிஸ்தான் தொடர்பாக இலங்கை அரசுத் தலைமைக்கு இருக்கும் இந்த முக்கியத்துவம் நெருக்கம் இலங்கை அரசின் வெளிவிவக?992; அமைச்சருக்கோ கூட அறிய வராத பல ஆழமான விவகாரங்களையும் கொண்டது.

அதனால்தான் விவகாரம் தெரியாத அப்பாவித் தனத்தில் செயற்பட்டு அரசுத் தலைமையின் கடும் சீற்றத்தையும் ஏச்சையும் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார் ரோஹித போகொல்லாகம
பொதுநல நாடுகள் அமைப்பு பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை தொடர்பில் கொழும்பு துள்ளிக் குதித்துச் சீறிச் செயற்பட்ட போக்கை முதலில் கவனிக்க வேண்டிய தரப்பு எது தெரியுமா? இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பரந்து விரிந்து கிடக்கும் இந்திய உபகண்டமேயாகும். இந்த இறுக்கமான நட்புறவின் ஆழத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான விடயத்தில் இந்தியா எடுக்கும் நிலைப்பாடு சம்பந்தமாக விசனம் தெரிவித்துவரும் ஈழத் தமிழ், ஆதரவு சக்திகள், ஓர் அம்சத்தை இந்தியாவுக்கும் திரும்பத் திரும்ப சுட்டிக்காட்டுவது வழமை. அவையே இப்போது நாமும் தொட்டுச் செல்ல வேண் டியவர்களாக இருக்கிறோம்.

இந்தப் பிராந்தியத்தில் குறிப்பாக இலங்கையில் தனது நேசசக்தி எது என்பதை அடையாளம் காண்பதில் இந்தியா தவ றக்கூடாது என்பதே அது. அயல் நாடான இந்தியாவுக்கு உள் ளார்ந்தமாக நேச சக்தியாக இலங்கையில் விளங்கக் கூடியது சிங்களவர் தேசமா? அல்லது தமிழர் தேசியமா?

இக்கேள்விக்கு சரியான விடைகண்டு அந்த நேச சக்தியுடன் தனது உறவைப் பலப்படுத்தி அந்த நேச சக்தியை ஸ்திரப்படுத்துவதே இந்தியாவுக்கும் நல்லது இப்பிராந்தியத்துக்கும் நல்லது என்பது வெளிப்படை.

இந்து சமுத்திரப் பிராந்திய விவகாரத்தில் கொழும்பின் கடந்த காலப் போக்கை புதுடில்லி சரியான விமர்சனக் கண்ணோடு உற்று நோக்கி ஆராய்ந்து எடை போடுமாயின் இலங்கையில் தனது நேச சக்தி எது, நாசசக்தி எது என்பதை அது இலகு வில் உணர்ந்து கொள்ள முடியும்.
1971 ஆம் ஆண்டில் வங்கப்பிரச்சினை எழுந்த போது, மேற்குப் பாகிஸ்தானிலிருந்து விமானங்கள் இந்தியாவைக் கடந்து கிழக்குப் பாகிஸ்தானுக்குச் செல்வதற்கு இந்தியா தடைபோட்டது. தடையை மீறி, பாரதத்தைச் சுற்றி வட்டமிட்டு மேற்குப் பாகிஸ்தானிலிருந்து விமானங்கள் கிழக்குப் பாகிஸ்தானுக்குப் பறந்தன. அப்படி அவை பறக்கும் போது கொழும்பில் தரித்து எரிபொருள் நிரப்பிக் கொள்ள இலங்கை அனுமதித்து ஒத்துழைத்தது. வங்கதேச விடுதலையை ஒட்டி இந்திய பாகிஸ்தான் யுத்தம் வெடித்த சமயத்தில்அயல்நாடான இலங்கை இவ் வாறு பாகிஸ்தான் பக்கம் சாய்ந்து ஒத்துழைத்து உதவியது முதல் கொண்டு இப்போது பாகிஸ்தானுக்காக பொதுநல நாடு கள் அமைப்பில் அளவுக்கு மீறி குரல் எழுப்பியது வரை இஸ்லாமாபாத்துக்கும் கொழும்புக்கும் இடையில் உள்ள நட்புறவுப் பின்னலின் இறுக்கத்தையும் வலிமையையும் புதுடில்லி புரிந்து கொள்ள வேண்டும்.

அந்தப் புரிதல் ஏற்படுமானால் இப்பிராந்தியத்தில் தனது நேசசக்திகளை அடையாளம் காண்பதில் அவற்றுடன் இணைந்து செயற்படத் தீர்மானிப்பதிலும் இந்தியாவுக்கு சிக்கல் இருக்காது.
இனிமேலாவது புதுடில்லி தன்னை தனது நிலைப்பாட்டை சுய ஆய்வு செய்து நேர்சீர் செய்து கொள்ளுமா?
uthayan.com

0 Comments: