Monday, January 28, 2008

குடியரசு ஆட்சியில் இரண்டுபட்ட இந்தியா

1947, ஆகஸ்ட் 15 - இந்தியாவுக்கு விடுதலை கிடைத்த நன்னாள் ஆகும். அதன் பிறகு நாட்டின் ஆட்சிமுறையைத் தீர்மானிக்க அரசியல் நிர்ணயசபை கூட்டப்பட்டது.

1946 டிசம்பர் 9 ஆம் திகதி தொடங்கி 1950 ஜனவரி 25 ஆம் திகதிவரை பணியாற்றி உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டம் 1950 ஜனவரி 26 ஆம் நாள் அன்று அமுலுக்கு வந்தது. அதனையொட்டி ஆண்டுதோறும் ஜனவரி 26 குடியரசு நாளாகக் கொண்டாடப்படுகிறது.

அரசமைப்புச் சட்டத்தின் குறிக்கோள் பற்றி பிரதமர் ஜவஹர்லால் நேரு 1946, டிசம்பர் 13 ஆம் நாளன்று அரசியல் நிர்ணயசபையில் விளக்கம் தந்தபொழுது `இந்தியா ஒரு விடுதலை பெற்ற, இறையாண்மையுடைய குடியரசு' என்று கூறப்பட்டிருந்தது.

ஆயினும், பின்பு தரப்பட்ட அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் இந்தியா ஓர் `இறையாண்மையுடைய மக்களாட்சியின் குடியரசு' என்று கூறப்பட்டது.

ஆயினும், 1975 - 77 நெருக்கடிக் காலத்தில், இந்திரா காந்தி அரசாங்கம் செய்த அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் முகப்புரையில், இந்தியா ஓர் `இறையாண்மையுடைய, சமதர்ம, மதச்சார்பற்ற, மக்களாட்சி முறையின் குடியரசு' என்று கூறப்பட்டது.

ஒரு நாட்டுக்குப் பல்வேறு பண்பாடுகளை அடுக்கி வைப்பதால் மட்டுமே அந்த நாட்டை வளப்படுத்திவிட முடியாது.

`சமதர்ம நாடு' என்ற கோரிக்கை அரசியல் நிர்ணய சபையில் வைக்கப்பட்டது. அதைக் குறிப்பிட்டு பிரதமர் நேரு பேசியதாவது;

"இந்தத் தீர்மானத்தில் சிலர் சமதர்ம நாடாக இந்தியா குறிப்பிடப்பட வேண்டும் என்று கூறினார்கள். நான் ஒரு சமதர்மவாதி. சரியான மக்களாட்சி முறையில் இயங்குகிற ஒரு நாடு சதமர்ம நாடாக ஆகிவிடும் என்று நான் நம்புகிறேன். இந்தத் தீர்மானம் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும் வகையில் அமைய வேண்டும் என்பதால், சமதர்மக் குறிக்கோளை இப்பொழுது வலியுறுத்த வேண்டாம்".

பெயர் வைக்காமல் நடைமுறையில் சமதர்ம முறையில் திட்டங்களைப் பிரதமர் நேரு நிறைவேற்றினார். 1948 இல் அரசாங்கத் தொழில் கொள்கையை வகுத்தபொழுது, "to be interpreted in terms of the socialistic objective' அதாவது, `சமதர்மக் குறிக்கோளை வலியுறுத்தும் வகையிலான திட்டம்' என்று அவர் அறிவித்தார்.

1955 ஜனவரி 21 ஆம் நாள் ஆவடியில் காங்கிரஸ் மாநாட்டில் " Socialistic Pattern of Society' அதாவது `சமுதாயத்துக்குச் சமதர்ம முன்மாதிரியான குறிக்கோள்' பற்றிய தீர்மானத்தை ஜவாஹர்லால் நேரு முன்மொழிந்து பேசினார். அதனைக் காமராஜர் வழிமொழிந்தார். தீர்மானம் முழுமனதாக மாநாட்டில் நிறைவேறியது.

அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் சமதர்மம் பற்றிய குறிப்பு இல்லை என்றாலும் அரசாங்கக் கொள்கையிலும், திட்டங்களிலும், சமதர்ம முறையை ஏற்று ஜவாஹர்லால் நேரு செயல்பட்டார். ஆனால், `சமதர்ம நாடு' என்று அழைக்கப்பட்டால் தான் இந்தியாவில் சமதர்மம் நிலைபெறும் என்று அவருக்கு அடுத்து வந்த தலைமுறையினர் நினைத்தார்கள் போலும்!

அரசமைப்புச் சட்ட முகப்புரையில் சமதர்மம் எனும் சொல் சேர்க்கப்பட்டதாலேயே, அதன்பிறகு சமதர்ம அடிப்படையில் இந்திய அரசாங்கம் செயல்பட்டதாகக் கூற முடியாது.

நேரு காலத்தில் முதல் மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களும் சமதர்ம முன்மாதிரியில் தீட்டப்பட்டன. ஆனால், நான்காவது ஐந்தாண்டுத் திட்டம் (1974-79) சந்தைப் பொருளாதாரத்தைப் பின்பற்றியதாக இருந்தது.

1980 இல் அறிவிக்கப்பட்ட தொழிற்றுறை கொள்கையின் கீழ், பொதுத்துறைக்கு ஒதுக்கப்பட்ட பல தொழில்கள் தனியார் துறைக்கு மாற்றப்பட்டதுடன், அவற்றுக்கு விதிக்கப்பட்ட வரம்புகளும் உயர்த்தப்பட்டன.

இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பு வைப்பதாக 1991 இல் நரசிம்மராவ் - மன்மோகன் சிங் அரசாங்கம் தனியார் துறைக்கும் வெளிநாட்டு மூலதனத்துக்கும் இருந்த கட்டுப்பாடுகளை நீக்கி, சந்தைப் பொருளாதாரத்துக்கு முழு ஆதரவு தந்து உலகமயமான பொருளாதாரம் இந்தியாவுக்குள் ஏற்றம்பெற அடிகோலியது. சமதர்மக் குடியரசு என்பது வெறும் அர்த்தமற்ற சொல்லாகிவிட்டது.

உலகமயமானதில், சில துறைகளில் இந்தியாவில் வளர்ச்சி காணப்பட்டது. இந்தியாவின் மொத்த உற்பத்தியின் மதிப்பு 1950 - 51 இல் ரூ. 1,40,466 கோடி என இருந்தது.

2004 - 05 இல் ரூ. 22,22,591 கோடி என உயர்ந்தது. 2003 முதல் 2007 வரையுள்ள நான்காண்டுகளில் நாட்டின் உற்பத்தி வளர்ச்சி, 7.5 சதவிகிதத்திலிருந்து 9.2 சதவிகிதம் என வளர்ந்தது.

இது 2007 -08 இல் 10 சதவிகிதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2001 இல் 39 பில்லியன் டொலர் ஆக இருந்த வெளிநாட்டு மூலதன வரவு 2007 ஆம் ஆண்டில் 200 பில்லியன் டொலரைத் தாண்டிவிட்டது.

வெளிநாட்டுத் தொடர்பு கணினித்துறையில் இந்தியா முதலிடத்தைப் பெற்று 50 பில்லியன் டொலர் வருமானத்தைச் சென்ற ஆண்டு அடைந்தது.

உலக அளவில் செல்வம் மிக்க சீமான்கள் -பில்லியன் டொலர் (ரூபாய் மதிப்பில் 4000 கோடி) உடையவர்களின் பட்டியலில் இந்தியாவில் உள்ள பில்லியனர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

2006 இல் 36 என்ற அவர்களின் எண்ணிக்கை 2007 இல் 40 ஆக உயர்ந்தது. ஜப்பான் (24) சீனா (17) பிரான்ஸ் (14) இத்தாலி (14) ஆகிய பல நாடுகளை இந்தியா முந்திவிட்டது.

இந்தியாவின் மொத்த உற்பத்தி வேகமாகப் பெருகி வந்தாலும், உலகச் செல்வந்தர்கள் பட்டியலில் இந்தியர்களின் எண்ணிக்கை வளர்ந்துவிட்டாலும், சாதாரண மக்களின் வாழ்க்கைத்தரம் எந்த நிலையில் மாறியது என்பதைக் கவனிக்க வேண்டும்.

ஒரு நாடு வளர்ந்திருக்கிறது என்றால், அந்த நாட்டு மக்களின் வாழ்க்கை வளம் பெற்றதாக, உடல் நலம், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற அடிப்படைத் தேவைகள் உரிய அளவில் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.

பொதுவான சுகாதார நிலைமையை எடுத்துக்கொண்டால் உலக அளவில் 16 கோடி குழந்தைகள் குறைவான உடல் எடையுடன் பிறக்கின்றன. அதில் ஐந்தரை கோடி (அதாவது மூன்றில் ஒரு பகுதி) இந்தியாவில் பிறக்கின்றன.

இன்னும் மோசமான நிலைமை, பிறந்த 20 நாட்களுக்குள் உலகெங்கும் இறந்துபோகும் குழந்தைகளின் எண்ணிக்கையில் நான்கில் ஒரு பகுதி இந்தியக் குழந்தைகளாகும்.

பிறக்கும் குழந்தைகள் இறக்கின்றன என்றால், இந்தியாவில் பெண் குழந்தைகள் பிறந்த உடனேயே சாகடிக்கப்படுவது அடங்கும். அத்துடன், குழந்தைப் பேறில் தக்க பாதுகாப்பின்றித் தாய்மார்களும் இறந்து விடுகிறார்கள்.

இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், பெண்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. மக்கள் தொகையில் 1000 ஆண்களுடன் ஒப்பிடும்பொழுது, பெண்களின் எண்ணிக்கை, 1901 இல் 972, 1951 இல் 946, 2001 இல் 933 எனக் குறைந்துகொண்டே வருகிறது. மண்ணடிமை தீர்ந்த நாட்டில் பெண்ணடிமை தீரவில்லை.

குடியரசுமுறை திறம்பட நடைபெறுவதற்குக் குடிமக்களுக்குக் கல்வி வளர்ச்சி மிக முக்கியமானது. பத்து ஆண்டு காலத்திற்குள் 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கெல்லாம் கட்டாய இலவசக் கல்வியை அரசாங்கம் தர வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எழுதப்பட்டது.

ஆனால், பல பத்தாண்டுகள் உருண்டோடியும் இந்தக் குறிக்கோள் நிறைவேறவில்லை. ஆண்டுதோறும் நாட்டின் மொத்த உற்பத்தி அளவில் 6 சதவிகிதம் கல்விக்காக ஒதுக்க வேண்டும் என்று 1965 இல் கோத்தாரி கல்விக்குழு பரிந்துரை செய்தது. ஆனால், இதுவரை நாட்டு உற்பத்தி அளவில் 4 சதவிகிதத்திற்கும் குறைவாகத்தான் அரசாங்கத்தின் கல்விக்கான செலவு இருந்து வருகிறது.

மேலும், ஆரம்பப் பள்ளியில் முதல் வகுப்பில் சேர்க்கப்படும் 100 மாணவர்களில் ஐந்தாம் வகுப்புக்கு 40 மாணவர்களும், எட்டாம் வகுப்புக்கு 23 மாணவர்களும், பத்தாம் வகுப்புக்கு 14 மாணவர்களும் தற்பொழுது செல்கிறார்கள். 17 - 24 வயதினரில் 6 சதவிகிதம் மாணவர்களால் தான் கல்லூரிப் படிப்புக்குச் செல்ல முடிகிறது.

இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் கிராமப்புறம், விவசாயம் ஆகியவை மிகவும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. பஞ்சாயத்து முறைக்குத் தக்க கவனம் அரசியல் நிர்ணயசபையால் தரப்படவில்லை என்று மகாத்மா காந்தி கருதினார்.

1946, ஜூன் 22 ஆம் திகதியிட்ட `ஹரிஜன்' பத்திரிகையில் காந்தி பின்வருமாறு எழுதினார். "இந்தியாவின் சுதந்திரம் அடிப்படையான கிராமங்களிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு கிராமமும், ஒரு குடியரசாக விளங்க வேண்டும்".

1951 இல் விவசாயத்தை நம்பி 72 சதவிகிதம் மக்கள் இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 59 சதவிகிதம் பங்கைப் பெற்றிருந்தனர். ஆனால், 2006 - 2007 நிலைமைப்படி மொத்த மக்கள் தொகையில் 60 சதவிகிதம் உள்ள விவசாயிகள் நாட்டின் மொத்த உற்பத்தியில் 22 சதவிகிதம் அளவைத் தான் பெறுகிறார்கள்.

உலகளாவிய பொருளாதாரத்தின் மூலம் இந்தியாவின் வருமானம் பெருமளவில் பெருகியிருக்கிறது என்றாலும், 1994 - 2004 காலகட்டத்தில் இந்தியாவில் ஒரு இலட்சம் விவசாயிகள் வருமானம் இல்லாமல் வறுமையில் தள்ளப்பட்டு, கடன் தொல்லை தாங்காமல் கடைசியாகத் தற்கொலை செய்துகொள்ளும் நிலைமை ஏற்பட்டது. இறந்தவர்கள் மட்டுமல்ல. அவர்களால் விட்டுச்செல்லப்பட்ட ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு நாடாண்ட ஆளவந்தார்கள் எத்தகைய உதவியையும் செய்ததாகத் தெரியவில்லை.

உலகமயமான பொருளாதாரத்தில் கிராமப்புறங்கள் புறக்கணிக்கப்பட்டு நகர்ப்புறங்கள் வளர்க்கப்படுகின்றன. பெரிய நகரங்கள்கூட செம்மைப்பட வளரவில்லை.

மும்பை நகரத்தின் மக்கள் தொகை 1 கோடி 60 இலட்சத்துக்கும் மேல் வளர்ந்துவிட்ட நிலைமையிலும், அங்கு சாக்கடை ஓரத்தில், சேற்றில் முடங்கிக்கிடக்கும் ஏழைகளின் அளவு 54 சதவிகிதத்துக்கு மேல் இருக்கிறது.

1 கோடி 40 இலட்சம் மக்களையுடைய டில்லியில் 45 சதவிகிதம் மக்கள் சேரிகளில் அடங்கிக் கிடக்கிறார்கள். இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரும் அரசியல் தலைநகரும் சேரிகள் சூழ்ந்த நகரங்களாக விளங்குகின்றன.

1947 இல் இந்தியத் துணைக்கண்டம் இரண்டாகப் பிளவுபட்டு இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகள் விடுதலை பெற்றன. 1970 இல் பாகிஸ்தான் இரண்டாக உடைந்து கிழக்கில் வங்கதேசம் தனி நாடாக ஆனது.

இந்தியா என்பது ஒரே நாடாக இருந்தபோதிலும் நடைமுறையில் இந்தியாவிற்குள் இரண்டு இந்தியர்கள், ஏழை இந்தியா - பணக்கார இந்தியா, கிராம இந்தியா - நகர இந்தியா என பிளவுபட்டு இருக்கின்றன. இரண்டு பிரிவுகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் ஆண்டுதோறும் வளர்ந்துகொண்டே போகின்றன.

இந்திய நாட்டில் மண்வளம் நிரம்ப இருக்கிறது. இந்தியக் குடியரசின் ஆட்சிவளமும் மக்களின் மனவளமும் இன்னமும் செம்மைப்படவில்லை!

குடியரசு நாளைக் கொண்டாடும் நேரத்தில், உலகம் பார்த்துப் பாராட்டக்கூடிய, நாம் பார்த்துப் பெருமைப்படத்தக்கவகையில் குடியரசு நாடாக இந்தியாவை மாற்றிட இந்தியக் குடிமக்கள் பாடுபட வேண்டும்.

-இரா. செழியன்-
தினமணி

0 Comments: